முன்னுரை
காலம் காலமாக இலக்கியங்கள் பல மாற்றங்களைக் கண்டுள்ளது. அவ்வகையில் தமிழ் கவிதை இலக்கியமும் மரபுக்கவிதைகள் என்னும் வடிவத்தை கடந்து, புதுக்கவிதை என்னும் வடிவத்தினை 19 - ஆம் நூறாண்டின் துவக்கத்தில் அடைந்தது. இதற்கு மேற்க்கத்திய மொழிகளின் இலக்கிய தாக்கம் முக்கியமான காரணமாகும். பழந்தமிழர்கள், யாபிலக்கண கவிதைகளின் வகைகளான வெண்பா, ஆசிரியம், வஞ்சி, கலி, பரி என பல பாவடிவங்களைக் கையாண்டனர். அவை தற்போது புதுக்கவிதையாக வளர்ந்துள்ளது. இக்கட்டுரையில் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி ஆய்வு செய்யப்படுகிறது.
புதுக்கவிதைக்கான இலக்கணம்
புதுக்கவிதையின் இலக்கணத்தை புதுக்கவிதையாளர்கள் பலர் வகுத்துள்ளார்கள். அவர்களில்,
“சுவை புதிது, பொருள் புதிது,
வளம் புதிது, சொல் புதித
சோதி மிக்க நவகவிதை” -
என பாரதியார் புதுக்கவிதைக்கு விளக்கம் தருகிறார். மேலும், கவிஞர் மு.மேத்தா அவர்கள்,
இலக்கணச் செங்கோல்யாப்புச் சிம்மாசனம்எதுகைப் பல்லக்குதனிமொழிச் சேனைபண்டித பவனிஇவை எதுவுமில்லாதகருத்துக்கள் தம்மைத் தாமேஆளக் கற்றுக்கொண்ட புதியமக்களாட்சி முறையே புதுக்கவிதை!
எனப் புதுக்கவிதைக்கான இலக்கணத்தை எடுத்துரைக்கிறார்.
புதுக்கவிதையின் தோற்றம்
புதுக்கவிதையின் தோற்றத்துக்கு உரைநடையின் செல்வாக்கு, மரபுக்கவிதையின் செறிவின்மை, அச்சு இயந்திரம் தோன்றியமை, மக்களின் மொழிநடையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியன அடிப்படைக் காரணங்களாகும்.
ஆரம்பகாலத்தில் Free Verse, New Poetry என்ற கவிதை அமைப்பு ஆங்கிலத்தில் இருந்தது. அமெரிக்காவின் வால்ட் விட்மன், இங்கிலாந்தின் எஸ்ரா பவுண்டு, T.S. எலியட் போன்றோரின் முயற்சிகளால் புதுக்கவிதை பிறந்தது. தமிழில் இம்முயற்சிகள் தொடங்கப்பட்ட போது முதலில் ‘வசன கவிதை’ என்றும், பின்னர் ‘சுயேச்சா கவிதை’, ‘லகு கவிதை’, ‘விடுநிலைப்பா’ என்றும், “கட்டிலடங்காக் கவிதை“ என்றும் அதன் பின்னர்ப் புதுக்கவிதை என்றும் வழங்கப்பட்டன.
புதுக்கவிதையின் வளர்ச்சி
1892 இல் வால்ட் விட்மனின் “புல்லின் இதழ்கள்” என்ற கவிதை தொகுப்பு யாப்பு மரபைப் புறக்கணித்து Free Verse என்ற வசனகவிதையாக அமைந்தது. அதனைப் படித்திருந்த பாரதி அதைப் போலத் தமிழிலும் புதுமை படைக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் ''காட்சிகள்'' என்ற தலைப்பில் புதுக்கவிதை எழுதினார். அதற்கு அவர் இட்ட பெயர் “வசன கவிதை“ என்பதாகும். எனவே பாரதியார் புதுக்கவிதைகளின் முன்னோடி என அழைக்கப்படுகிறார். தமிழில் பாரதியார் வழியில் ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராசகோபலன், வல்லிக்கண்ணன், புதுமைப்பித்தன், போன்றோர் புதுக்கவிதைகளைப் படைத்து தமிழ்ப் புதுக்கவிதைகளை வளர்த்தார்கள்.
புதுக்கவிதை வளர்ந்த மூன்று கால கட்டங்கள்
ஆரம்ப காலத்தில் புதுக்கவிதைகளை பல இதழ்கள் வெளியிட்டு புதுக்கவிதை வளர்ச்சிக்கு துணை நின்றன. அவ்விதழ்கள் தோன்றிய காலத்தினை மூன்றாகப் பிரிக்கலாம். அவை,
1. மணிக்கொடிக்காலம்2. எழுத்துக்காலம்3. வானம்பாடிக் காலம்
என்பனவாகும். இக்கால கட்டங்களில் புதுக்கவிதை இலக்கியம் வளர்ச்சி நிலையினை எட்டியது.
1.மணிக்கொடிக் காலம் (1930 – 1945 )
மணிக் கொடிக் காலத்தில் மணிக்கொடி என்ற இதழ் மட்டுமன்றி, சூறாவளி, காலமோகினி, கிராமஊழியன், சிவாஜிமலர், நவசக்தி, ஜெயபாரதி ஆகிய இதழ்கள் புதுக்கவிதைகளை வெளியிட்டுவந்தன. இவற்றுள் மணிக்கொடி இதழ் முதலில் தோன்றியதால் இக்காலத்தை மணிக்கொடிக் காலம என்று அழைத்தனர். இக்காலத்தில், புதுக்கவிதை முன்னோடிகளான ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராசகோபாலன், க.நாசுப்பிரமணியன், புதுமைப்பித்தன் போன்றோர் அக்கால இதழ்களில் புதுக்கவிதைகளை எழுதி வெளியிட்டனர்.
2. எழுத்துக் காலம் (1950 – 1970 )
எழுத்து, சரஸ்வதி, இலக்கிய வட்டம், நடை, தாமரை, கசடதபற, போன்ற இதழ்கள் இக்காலகட்டத்தில் புதுக்கவிதையை வளர்த்தன. ந.பிச்சமூர்த்தி ஆரம்பித்துவைத்த புதுக்கவிதை இயக்கம், எழுத்து இதழில் தொடர்ந்தது. மயன், சிட்டி, வல்லிக்கண்ணன், ஆகியோர் ஒன்று சேர்ந்து சி.சு.செல்லப்பா, க.நாசுப்பிரமணியன் போன்றோர் இக்காலத்தில் புதுக்கவிதைக்கு சிறப்பு சேர்த்தனர்.
3.வானம்பாடிக் காலம் ( 1970 க்கு பிறகு )
வானம்பாடி, தீபம், கணையாழி, சதங்கை முதலிய இதழ்கள் இக்காலத்தில் புதுக்கவிதைக்கு முன்னுரிமை தந்து வெளியிட்டன. புவியரசு, ஞானி, முல்லைஆதவன், அக்கினிபுத்திரன், சிற்பி, கங்கை கொங்காண்டான், தமிழ்நாடன், சக்தி கனல், மு.மேத்தா, தமிழன்பன், ரவீந்திரன் முதலியோர் வானம்பாடிக் கவிஞர்களாவர்.
தற்கால புதுக்கவிதையாளர்கள்
தற்கால புதுக்கவிதையாளர்களில் குறிப்பிடத்தக்கவர்கள், நா. பிச்சை மூர்த்தி, புதுமைப்பித்தன், வல்லிக்கண்ணன், நா. காமராசன், அப்துல் ரகுமான், மு. மேத்தா, சிற்பி பாலசுப்பிரமணியன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்கள்.
நா. பிச்ச மூர்த்தி
தமிழ் புதுக்கவிதையின் தந்தை என அழைக்கப்படும் இவர், வேங்கட மகாலிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்டவர். மணிக்கொடிக் கால எழுத்தாளரான இவர் காட்டு வாத்து, வழித்துணை, குயிலின் சுருதி போன்ற புதுக்கவிதை தொகுப்புக்களை எழுதியுள்ளார்.
புதுமைப்பித்தன்
விருத்தாச்சலம் என்னும் இயற்பெயரைக் கொண்ட இவர் மணிக்கொடி இதழின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவர் காதல் பாட்டு, இணையற்ற இந்தியா, தொழில் போன்ற புதுக்கவிதை தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.
வல்லிக்கண்ணன்
கிருஷ்ணசாமி என்னும் இயற்பெயரைக் கொண்ட இவர், எழுத்து என்னும் இதழில் புதுக்கவிதைகள் பல எழுதியுள்ளார். இவர் எழுதிய அமர வேதனை என்னும் கவிதை தொகுப்பு குறிப்பிடத்தக்கதாகும். மேலும், புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற இவரின் நூல் சாகித்திய அகடாமி விருது பெற்றுள்ளது.
நா. காமராசன்
உருவகக் கவிஞர் என அழைக்கப்படும் நா. காமராசர், கருப்பு மலர்கள், சூரியகாந்தி, மகாகாவியம், கிறுக்கல்கள், பட்டத்து யானை போன்ற புதுக்கவிதை தொகுதிகளை வெளியிட்டுள்ளார். இவர் புதுக்கவிதை ஆசான் எனவும் அழைக்கப்படுகிறார்.
அப்துல் ரகுமான்
வானம்பாடி இயக்க கவிஞரான இவர், பால்வீதி, நேயர் விருப்பம் போன்ற புதுக்கவிதை தொகுதிகளை வெளியிட்டுள்ளார். இவர் எழுதிய ஆலாபனை என்னும் கவிதை தொகுப்பு சாகித்திய அகடாமி விருது பெற்றது.
மு.மேத்தா
தமிழ் பேராசிரியராக விளங்கிய இவர், தேசப்பிதாவுக்கு ஒரு தெருப்பாடகனின் அஞ்சலி என்ற கவிதையின் மூலம் உயர்வடைந்தார். இவர் எழுதிய ஊர்வலம், சோழர் நிலா போன்ற புதுக்கவிதை தொகுப்புகள் குறிப்பிடத்தக்கவை. ஆகாயத்திற்கு அடுத்த வீடு என்ற இவரின் புதுக்கவிதை தொகுப்புக்கு சாகித்திய அகடாமி விருது கிடைத்தது.
சிற்பி பாலசுப்பிரமணியன்
2022-ல் பத்மஸ்ரீ விருது பெற்ற இவர், புன்னகைக்கும் பூக்கள் என்ற கவிதை தொகுப்பும், சாகித்திய அகடாமி விருது பெற்ற ஒரு கிராமத்து நதி என்ற கவிதை தொகுப்பையும் எழுதியுள்ளார்.
புதுக்கவிதைகளின் பொருள் நயம்
புதுக்கவிதைகளின் பாடுபொருள் இது என்று இல்லை. சமுதாயத்தில் காணப்படும் நிகழ்வுகள் அனைத்தும் புதுக்கவிதையின் பாடுபொருள்களாகும். குறிப்பாக சமுதாயதில் காணப்படும் மத வேறுபாடுகளைக் களைய புதுக்கவிதை ஆசிரியர் ஒருவர்,
பைபிள்லே நீகிறிஸ்தவனை படைப்பதைநிறுத்து!குரானே நீஇஸ்லாமியரை படைப்பதைநிறுத்து!கீதையே நீஇந்துக்களைப் படைப்பதைநிறுத்து!நீங்கள் மூவரும் சேர்ந்துநல்ல மனிதரை படையுங்கள்...
- எனக் கூறுகின்றனர்.
ஏழைகளுக்கு சேராத அரசின் நலத்திட்டங்களைக் கண்ட கவிஞ்ர் மு. மேத்தா அவர்கள்,
அணகட்டுகளில் திறக்கப்படும்தண்ணீர்பள்ளங்களை ஏமாத்திவிட்டுமேட்டை நோக்கியேபாய்கிறது.
- என ஆதங்கப்படுகிறார்.
மகன் ஒருவன் தனது பெற்றோரை முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டு வந்த நிலையில் அந்த தாய் தன் மகனைப் பார்த்து,
மகனே நீஇருக்க என்கருவறை இருந்தது,நானிருக்க ஒருஅறைகூடவா இல்லைஉன் வீட்டில்.....
என்று கேட்பது குடும்ப சிக்கல்களை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.
முடிவுரை
''பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே'' என்று நன்னூல் கூறுகிறது. அதற்கு இணங்க கவிதை இலக்கியமும் காலம் தோறும் பல வளர்ச்சியை கண்டுள்ளது. தமிழில் பாரதியாரால் தொடங்கி வைக்கப்பட்ட புதுக்கவிதை மரபு இன்று பல நிலைகளில் வளாச்சியடைந்து காணப்படுகிறது என்பதை இக்கட்டுரையில் காணலாம்.
......இராஜாலி......