எனது வலைப்பதிவு பட்டியல்

செவ்வாய், 5 செப்டம்பர், 2023

இயேசு காவியம் - ஊதாரி மைந்தன் கதை

 நூல் குறிப்பு

  1981.ஆம் ஆண்டு வெளிவந்த இயேசு காவியம், கவிஞர் கண்ணதாசனால் இயற்றப்பட்டதாகும். இயேசு கிறிஸ்துவின் வரலாற்றை கதை வடிவில் கூறும், இக்காவியம் கண்ணதாசனின் 'இறவாக் காவியம்' என அழைக்கப்படுகிறது. 149 தலைப்புகளில், 5 பாகங்களாக இக்காப்பியம் காணப்படுகிறது.

ஊதாரி மைந்தன் கதை

 இயேசு கிறிஸ்து பாவிகளை நேசித்து, அவர்களோடு விருந்துண்டு மகிழ்வதைக் கண்ட சீடர்கள், இயேசு நாதரிடம் அதற்கான காரணம் கேட்க, அதற்கு இயேசுநாதர் இறைவன் எனும் அன்புத் தந்தையின் இதயம் எத்தகையது என்பதை அவர்களுக்கு எடுத்துக் கூற 'ஊதாரி மைந்தன் கதையினை' பின்வருமாறு கூறுகிறார்.

தந்தைக்கு இரு மைந்தர்கள்

    ஒரு தந்தைக்கு இரண்டு மைந்தர்கள் இருந்தார்கள். அதில் மூத்தவன் தந்தை சொல் கேட்டு நடப்பவன்.  இளையவன் ஊதாரியாக திரிந்தவன். ஒருநாள், இளையவன் தந்தையிடம் வந்து 'தன்பாக சொத்துகளை பிரித்து தர வேண்டும்'  எனக் கேட்டான். வருந்திய தந்தை வேறு வழியில்லாது சரிபாதி சொத்தை பகிர்ந்து அளித்தார். தன் மகன் விருப்பப்படி வாழட்டும் என தந்தை கொடுத்ததை பார்த்து அண்ணன் வருந்தினான்.

இளைய மகன் செல்வத்தை இழத்தல்

     தனது பாகத்தைப் பெற்ற இளைய மகன், அவற்றைக் குறைந்த விலைக்கு விற்று வெளி நாட்டிற்குச் சென்று நண்பர்களோடு சேர்ந்து மதுவோடும் மாதுவோடும் இணைந்து மனம் போன போக்கில் செலவுகளை செய்து சிறிது நாளிலே செல்வத்தை இழந்து தெருவில் நின்றான்.

பன்றிகளின் உணவை உண்ணுதல்

     அப்பொழுது அந்நாட்டில் பெரும் பஞ்சம் சூழ்ந்தது. வாழ வழி தெரியாமல் இளைய மகன் அங்குமிங்கும் அலைந்தான். ஒரு செல்வந்தரின் பன்றிகளை மேய்க்கும் வேலையினைப் பார்த்தான். பன்றிக்கும் அவனுக்கும் ஒரே உணவு கொடுக்கப்பட்டது. வேறு வழி இன்றி அதனை உண்டு காலத்தைக் கழித்தான்.

இளைய மகன் சிந்தை தெளிதல்

   தந்தையை விட்டு வந்து பல துன்பங்களை அனுபவித்த இளைய மகன் சிந்தை தெளிந்தான். தன் தந்தையை நாடிச் செல்ல வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான். தன் வீட்டை நோக்கிச் சென்றான். இவனுக்காகவே காத்திருந்த தந்தையை கண்டான். அவர் காலில் விழுந்து, 

 உன் வீட்டுக் கூலிகளில் ஒருவனென ஏற்பாய் 
 உன் பிள்ளை என்று சொலத் தகுதியில்லை காப்பாய் 

 எனக் கண்ணீர் விட்டு அழுதான்.

தந்தையின் செயல்

      தந்தையும் உடனே 'அப்பா என் மகனே' என அன்போடு தழுவி வீட்டு பணியாளர்களை அழைத்து

 யாரங்கே பணியாள்வா பட்டாடை நகைகள்
 அத்தனையும் அணியுங்கள் அலங்கார வகைகள்
 பேர் சொல்லும் மகனுக்குப் பெருங்கன்றின் கறிகள்
 பிழையாமல் செய்யுங்கள் விரைவில்

 எனக் கட்டளையிட்டார்.

மூத்த மகனின் செயல்

     மாலையில் மூத்த மகன் வீட்டிற்கு வந்தான். வீட்டில் ஆடல் பாடல் கொண்டாட்டம் நிகழ்வதைக் கண்டான். வீதியில் நின்றபடியே 'என்ன சத்தம்?' எனக் கேட்டான். பணியாளர் ஒருவர்' உங்கள் தம்பி வந்துள்ளார்.' எனக் கூறவே ஆத்திரத்தில் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தான்.

   இதனைக் கண்ட தந்தை அவனை வீட்டிற்குள் அழைத்துச் செல்ல வந்தான். மூத்த மகன் ஆத்திரத்தில் தந்தையிடம்

 உங்களுடன் இருந்தவரை நானென்ன கண்டேன்
 ஒரு நாளும் எனக்கென்று விருந்து வகை உண்டா? 

என வருத்தத்தோடு கேட்டான்.

 தந்தையின் ஆறுதல் வார்த்தைகள்

    மூத்த மகனின் வருத்தமான வார்த்தைகளைக் கேட்ட தந்தை,

 என்னோடு என்றும் நீ இருப்பவனே யன்றோ!
 என் செல்வம் எந்நாளும் உன்னுடைய தன்றோ!
 உன் தம்பி இறந்தபின் உயிர்பெற்று வந்தான்!
 உண்மையிலே மறுபிறவி அதற்காகச் செய்தேன்!

எனக்கனிவுடன் கூறினார். அதனைக் கேட்டு மூத்த மகன் சமாதானமடைந்து வீட்டுக்குள் சென்றான்.

 முடிவுரை

       என்ற கதையினை இயேசு நாதர் சீடர்களுக்கு கூறி பாவிகளை நேசிக்க வேண்டும் என அறிவுரை கூறியதாக இயேசு காவியத்தில் கண்ணதாசன் கூறியுள்ளார்.

**** இராஜாலி****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யுனிக்கோட் - பயன்பாடு

அறிமுகம்    ஆங்கில மொழியைத் தவிர பிறமொழிகளிலும் பலரும் பல்வேறு குறியேற்றங்களையும் எழுத்துருக்களையும் பயன்படுத்தி வந்தனர். இந்த முறையில் ஒரே ...