எனது வலைப்பதிவு பட்டியல்

ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

குறுந்தொகை - நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று

நூல் குறிப்பு

    'நல்ல குறுந்தொகை' என சிறப்பித்துக் கூறப்படும் குறுந்தொகை எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. இந்நூலில், ஐந்திணைகளுக்கும் உரிய 400 பாடல்கள் காணப்படுகின்றன. 4 முதல் 8 அடி வரையிலான பாடல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இந்நூலை தொகுத்தவர் பூரிக்கோ என்பவர் ஆவார். தொகுப்பித்தவர் யாரென தெரியாது. 

நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று


திணை – குறிஞ்சி

பாடியவர் – தேவகுலத்தார்

துறை - தலைமகன் சிறைப்புறமாக, அவன் வரைந்து கொள்வது வேண்டி, தோழி இயற்பழித்தவழி, தலைமகள் இயற்பட மொழிந்தது.

துறை விளக்கம் – தலைவன் தலைவி வீட்டின் அருகே வந்து நின்றான்.  தலைவியை அவன் மணந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவன் இயல்புகளை இகழ்ந்து கூறுகின்றாள் தோழி. அதைக் கேட்ட தலைவி, தலைவனின் இயல்புகளைப் புகழ்ந்து கூறுகின்றாள்.

பாடல்

         நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று;

         நீரினும் ஆர் அளவின்றே- சாரல்

         கருங் கோல் குறிஞ்சிப்பூக் கொண்டு,

         பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.

பாடல் விளக்கம்

    இயற்பழித்துக் கூறிய தோழியை பார்த்து தலைவி  “எம் தோழியே! கரிய கொம்புகளில்  பூத்துக் குலுங்குகின்ற குறிஞ்சிப் பூக்களில் உள்ள தேனை எடுத்து, மலையில் உள்ள உயர்ந்த மரங்களில் தேனடைகளைச் சேகரித்து வைக்கின்ற  மலைநாட்டில் வாழ்கின்றவன் எம் தலைவன்.  அவனோடு நான் கொண்ட நட்பு, நிலத்தை விடப் பெரியது, வானத்தை விட உயர்ந்தது. கடலைவிட ஆழமானது” என்று தோழிக்குத் தலைவி கூறுவதாக தேவ குலத்தார் பாடியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யுனிக்கோட் - பயன்பாடு

அறிமுகம்    ஆங்கில மொழியைத் தவிர பிறமொழிகளிலும் பலரும் பல்வேறு குறியேற்றங்களையும் எழுத்துருக்களையும் பயன்படுத்தி வந்தனர். இந்த முறையில் ஒரே ...