நூல் குறிப்பு
எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான நற்றிணை ஐந்திணைகளுக்கும் உரிய அகக்கருத்துகளைக் கூறும் 400 பாடல்களைக் கொண்டதாகும். இந்நூலில் 9 அடி முதல் 12 அடி வரையிலான பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இந்நூலை தொகுத்தவர் யார் என தெரியவில்லை. தொகுப்பித்தவர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி என்பவராவார். இந்நூலை நற்றிணை நானூறு எனவும் வழங்குவர்.
நின்ற சொல்லர்; நீடுதோன்று இனியர்
திணை - குறிஞ்சி
பாடியவர் – கபிலர்
கூற்று - பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைவி சொல்லியது.
கூற்று விளக்கம் – பொருள் ஈட்டுதற் கரணமாகத் தலைவன் தலைவியை விட்டுப் பிரிய எண்ணியதைத் தோழி அறிந்து, தலைவியிடம் கூற, தலைவி “தலைவ ன் அங்ஙனம் என்னை விட்டுப் பிரிய மாட்டார்” எனத் தலைவனைப் புகழ்ந்து கூறுகின்றார்.
பாடலின் விளக்கம்
தலைவனின் பிரிவை உணர்த்திய தோழியை பார்த்து தலைவி, “தோழி என் காதலர் சொன்ன சொல்லைத் தவறாமல் காப்பாற்றக் கூடிய வாய்மையுடையவர். நீண்ட காலம் பழகுவதற்கு மிக இனிமையானவர். எப்போதும் என் தோள்களைப் பிரியும் எண்ணம் இல்லாதவர். அத்தகையவருடைய நட்பு, தேனீக்கள் தாமரையின் குளிர்ந்த மகரந்தங்களை ஊதி, உயர்ந்து நிற்கும் சந்தன மரத்தின் தாதினையும் ஊதி, சந்தன மரத்தின் உச்சியில் கொண்டு சென்று சேர்த்து வைத்த தேனைப் போல உறுதியாக உயர்ந்தது. தண்ணீர் இல்லாமல் இவ்வுலகம் இயங்காதது போல, அவர் இல்லாமல் நான் வாழ மாட்டேன் என்பதை நன்கு உணர்ந்தவர். என் மீது மிகுந்த விருப்பம் கொண்டவர். என்னைப் பிரிந்து சென்றால் என் நெற்றியில் பசலை நோய் படரும் என்று அஞ்சி தடுமாற்றம் அடைந்து என்னை விட்டு நீங்கிச் செல்ல மாட்டார்” என்று தலைவி கூறுவதாக கபிலர் பாடியுள்ளார்.
**** இராஜாலி****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக