நூல் குறிப்பு
சங்க இலக்கிய நூல் தொகுதிகளில் ஒன்றான பத்துப்பாட்டில், அகப்பொருள் நூலாக விளங்குவது முல்லைப்பாட்டு. பத்துப்பாட்டு நூல்களில் மிகவும் சிறியதாக,103 அடிகளைக் கொண்டதாக முல்லைப்பாட்டு காணப்படுகிறது. இதனைப் பாடியவர், காவிரிப்பூபட்டிணத்து பொன் வணிகர் மகன் நப்பூதனார் ஆவார். முல்லை நிலத்திற்குரிய ஒழுக்கமான, "இருத்தலும் இருத்தல் நிமித்தமும்" என்ற ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இந்நூல் பாடப்பட்டுள்ளது.
கார்கால மாலைப் பொழுது
முல்லைப்பாட்டில் துவக்கமாக நப்பூதனார் கார்கால வரவையும், தலைவியின்மாலைப் பொழுதில் நிலையினையும் பற்றி பின்வருமாறு விவரித்துள்ளார்.சங்கு சக்கரத்தை கையில் ஏந்திய திருமால், வாமன அவதாரம் எடுத்த போது மகாபலிச் சக்கரவர்த்தி நீர் வார்த்துக் கொடுக்க, நெடிய உருவம் எடுத்து, இவ்வுலகத்தை அளந்தது போல, மலையில் இருந்து வந்த மேகக்கூட்டங்கள், குளிர்ந்த கடல் நீரைப் பருகி, வலப்பக்கமாக எழுந்து, மலையில் மோதி, மழையாகப் பொழிந்த மாலைப் பொழுது வந்தது.
நல்லோர் விரிச்சி கேட்டல்
மழைபெய்த அம் மாலைப்பொழுதில், தலைவியின் துயரைக் கண்டு வருந்திய பெருமுது பெண்டி, காவல் நிறைந்த அவ்வூர் எல்லையைக் கடந்து, நாழியில் கொண்டு சென்ற நெல்லையும், புத்தம் புது முல்லைப் பூவையும் இறைவனுக்குத் தூவி, விரிச்சிக்காகக் காத்திருந்தனர். அப்பொழுது சிறு கயிறால் கட்டப்பட்ட பசுக்கன்று ஒன்று தன் தாய் பசுவைத் தேடி தவித்துக்கொண்டிருந்தது. அப்போது,ஆயர்குலப் பெண் ஒருத்தி குளிரில் நடுங்கியவாறு வெளியே வந்து, கோவலர் ஆடுகள், மாடுகள் ஒட்டி வரும் சத்தத்தைக் கேட்டு "இன்னே வருகுவர் தாயர்”எனக் கூறினாள். இதனைக் கேட்ட முது பெண்கள் 'நல்ல வார்த்தையைக் கேட்டோம் அதனால் தலைவன் விரைவாக வினைமுடித்து விரைந்து வந்து சேருவான். எனவே,நீ கவலையை விடுவாயாக' எனத் தலைவியிடம் சென்று ஆறுதல் மொழி கூறினார்கள். ஆனால், தலைவியோ மனம் வருந்திய படி கண்களில் நீர் வடிந்த நிலையில் காணப்பட்டாள். என மாலைப்பொழுதில் தலைவியின் துன்பத்தை முல்லைப்பாட்டு கூறுகிறது.
பாசறையின் இயல்பு
'கார்காலம் வந்ததும் வருவேன்' எனத் தலைவியிடம் கூறிவிட்டு, தலைவியை பிரிந்து போருக்குச் சென்ற தலைவன், போர்க்களத்தில், காட்டாறுகள் பாயும் பரந்துவிரிந்த மணற்பரப்பில், காணப்பட்ட பிடவம் போன்ற செடி, கொடிகளை வெட்டி சுத்தம் செய்து, அங்கே கடல் அலைகளை போன்று பரந்து விரிந்த பாடி வீடுகளை அமைத்து அதில், மன்னனும் படைவீரர்களும் தங்கியிருந்தார்கள்.
யானைப்பாகன் செயல்
வரிசை வரிசையாக அமைக்கப்பட்டிருந்த பாடி வீடுகளின் முற்றத்தில், சிறு கண்களை உடைய யானைகள் காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்தது. அந்த யானைகள் உண்பதற்காக, ஓங்கி வளர்ந்த கரும்புகளையும், நெற்கதிர்களையும், இன்குளகு எனப்படும் அதிமதுரத் தளைகளையும் போடப்பட்டிருந்தது. யானைகள் அவற்றை உண்ணாது தனது தும்பிக்கையில் அதிமதுரத் தளைகளை எடுத்து தனது நெற்றியை துடைத்தவாறு நின்று கொண்டிருந்தது. அப்போது அங்குசம் எனப்படும் கருவியை கையில் கொண்ட, கல்வி அறிவு அற்ற யானைப் பாகர்கள், வடமொழியில் சில வார்த்தைகளை கூறி யானைக்கு கவளம், கவளமாக உணவுகளை ஊட்டிக் கொண்டிருந்தார்கள்.
வீரர்கள் தங்கும் படைவீடுகள்
படை வீரர்கள் தங்குவதற்காக தனியாக வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன. முனிவர்கள் கையில் வைத்திருக்கும் முக்கோல் போன்ற கம்புகளை நாட்டி, அவற்றில் கயிறுகளை இறுகக் கட்டி, துணியினால் கூரை அமைத்து, கிடுகு எனப்படும் கேடயங்களை பக்கச் சுவற்றுக்கு பதிலாக நாட்டி, வரிசை, வரிசையாக படைவீடுகளை அமைத்திருந்தார்கள்.
அரசனுக்கு அமைத்த பாசறை
அரசன் ஓய்வெடுப்பதற்காக தனியாக பாசறைகள் அமைக்கப்பட்டிருந்தது. அப்பாசறையில் மாலை நேரத்தில் அழகிய வளையல் அணிந்து, ஒளிவீசும் வாளேந்திய பெண்கள், சுரைக் குடுவையில் நெய்யைக் கொண்டு வந்து பாசறையில் இருக்கும் விளக்குகளில் நெய்யையும், திரியையும் வைத்து விளக்குகளை ஏற்றி விட்டு சென்றனர்.
மெய்க்காப்பாளர்கள் காவல் புரிதல்
இந்நிலையில், இரவு மணி அடித்து ஓய்ந்து பின்னர், அதிரல் பூத்துக்குலுங்கும் நேரத்தில், குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருக்கும் போது, நேரத்தை கணக்கிட்டு சொல்லும் நாளிகை கணக்கர்கள் மன்னனைப் பார்த்து "பரந்து விரிந்த கடலை கடந்து சென்று வெற்றிவாகை சூடும் மன்னனே!இப்பொழுது நேரம் இன்னது" என வாழ்த்தி, கூறிச் சென்றனர்.
அரசன் படுக்கையில் தூங்காமல் சிந்தித்து இருத்தல்
அந்த இரவுப் பொழுதில் மன்னன், தூக்கம் கொள்ளாதவனாக காணப்பட்டான். மன்னனுடைய பள்ளியறை இரண்டு அறைகளாக காணப்பட்டது. அங்கு அழகான விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன. வலிமையான உடலை உடைய யவனர்களும், வாய் பேச முடியாத ஊமை மிலேச்சர்களும் அங்கு காவல் புரிந்து கொண்டிருந்தார்கள். அப்போது மன்னன் ஒரு கையை படுக்கையில் ஊன்றியவாறு, மற்றொரு கையை தலையில் வைத்தவாறு, தூக்கம் இல்லாதவனாய் இன்றைய நாள் நடந்த போரைப் பற்றி சிந்தித்துக் கொண்டு படுக்கையில் படுத்திருந்தான்.மறுநாள் பகைவர்களை வென்ற வெற்றி ஆரவாரமும், வெற்றி முரசு முழங்கும் ஒலியும் பாசறையில் கேட்டுக்கொண்டிருந்தது.
தலைவனது பிரிவினால் தலைவி பெற்ற துயரம்
தலைவனைப் பிரிந்த தலைவி கார்காலம் வந்த பின்பும் தலைவன் திரும்பாததால், துயரம் அடைந்து, நீண்ட நேரம் தூக்கம் இல்லாதவராக காணப்பட்டாள். பசலை நோயால் உடல் நலிவுற்று கையிலிருந்த வளையல்கள் கழன்று விழுந்த நிலையில் காணப்பட்டாள். பெருமூச்சு விட்டவளாய், பாவை விளக்கு எரியும் ஏழு அடுக்கு மாளிகையில் தலைவி தூங்காமல் விழித்திருந்தாள் அப்பொழுது மழை நீர் அருவி போல் பாயும் ஓசை காதில் கேட்டது. மறுநாள் காலை அரசனும், படைகளும் எதிரியை வென்றுbஅவருடைய நிலத்தை கைப்பற்றிக்கொண்டு, வெற்றிக் கொடியை ஏந்தியவாறு ஊருக்குள் வந்து கொண்டிருந்தனர்.
மழையில் செழித்த முல்லை நிலம்
வெற்றி பெற்று வரும் மன்னன், இரண்டு குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் வந்து கொண்டிருந்தான், அப்பொழுது, முல்லை நிலத்தில் காயா மலர்கள் பூத்துக் காணப்பட்டன. பொன் போன்ற கொன்றை மலர்கள் பூத்துக் குலுங்கின, முல்லை அரும்புகள் மலர்ந்து காணப்பட்டன. செல்லும் வழி எங்கும் தோன்றி மலர்கள் சிவப்பு நிறத்தில் காணப்பட்டது. அங்கு வளர்ந்திருந்த வரகு செடியில் கதிர்களை பெண் மானும், ஆண் மானும் இணைந்து மகிழ்ச்சியுடன் மேய்ந்து கொண்டிருந்தன. மன்னனை வரவேற்கும் நிலையில் சிறுதூறல் பெய்து கொண்டே இருந்தது.
என முல்லைப்பாட்டில் தலைவனைப் பிரிந்த தலைவியின் நிலையையும், கார்கால சூழலையும், மன்னன் அமைத்திருந்த பாசறையின் தன்மையினையும், மழையால் முல்லை நிலம் செழித்த காட்சியையும் முல்லைப்பாட்டில் நப்பூதனார் அழகாக விவரித்துள்ளார்.
******* இராஜாலி******
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக