எனது வலைப்பதிவு பட்டியல்

திங்கள், 29 ஜனவரி, 2024

என் கொணர்ந்தாய் பாணா நீ - வீரராகவ முதலியார்

      வீரராகவ முதலியார் செங்கல்பட்டுக்கு அருகிலுள்ள பூதூரில் வேளாண் குலத்தில் வடுகநாதர் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். பிறவியிலேயே பார்வையற்றவர். அந்தகக்கவி என அழைக்கப்பட்டார். சிலேடைச் சுவை நிறைந்த தனிப்பாடல்களுக்காகப் புகழ் பெற்றவர். சந்திரவாணன் கோவை, திருவாரூருலா, சேயூர்க்கலம்பகம், சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ் போன்ற நூல்களை இயற்றியுள்ளார். அவர் பாடிய தனி பாடல்களில் ஒன்று ' என் கொணர்ந்தாய் பாணா நீ' என்ற பாடலில் யானையின் பல்வேறு பெயர்களை நயம்பட எடுத்துக் கூறியுள்ளார். 

என் கொணர்ந்தாய் பாணா நீ

       இராமன் என்பவன் மழை போலக் கொடை வழங்கும் வள்ளல். புலவர்    ஒருவர் அவனைக் கண்டு பாடினார். அவன் புலவருக்கு யானை ஒன்றைப் பரிசாகத் தந்தான். புலவர் யானையுடன் வீடு திரும்பினார். அவரது மனைவி பாணி 'என்ன கொண்டுவந்தாய்' என வினவினாள். புலவர் யானையைக் குறிக்கும் சொற்களை ஒவ்வொன்றாகச் சொல்ல மனைவி அதனை வேறு வகையாகப் புரிந்துகொண்டு பேசுகிறாள். புலவர் களபம் (யானை, சந்தனம்) என்றார். மனைவி சந்தனம் என எண்ணி பூசிக்கொள் என்றாள். புலவர் மாதங்கம் (யானை, மா தங்கம்) என்றார். மனைவி பெரும் பொருள் எனக் கருதி, இனி நமக்குக் குறைவு ஒன்றும் இல்லை, வாழ்ந்தோம் என்றாள். புலவர் வேழம் (யானை, கரும்பு) என்றார். மனைவி கரும்பு எனக் கருதி,  தின்னும் என்றாள். புலவர் பகடு (யானை, எருது) என்றார். மனைவி மாடு என எண்ணி, ஏரில் பூட்டி உழவு செய்க என்றாள். புலவர், கம்பமா (யானை, கம்பு மாவு) என்றார். மனைவி கம்பு மாவு எனக் கருதி, களி கிண்டி உண்ண உதவும் என்றாள். புலவர் கைம்மா  என்றார். மனைவி நீண்ட தும்பிக்கையை உடைய  யானை என்பதை புரிந்துகொண்டு, நமக்கே உணவு இல்லாதபோது யானைக்கு உணவு வழங்குவது எப்படி என்று எண்ணிக் கலங்கினாள். என்பதை,

இம்பர்வான் எல்லை இராமனையே பாடி

என்கொணர்ந்தாய் பாணா நீ என்றாள் பாணி

வம்பதாம் களபமென்றேன் பூசுமென்றாள்

மாதங்க மென்றேன் யாம் வாழ்ந்தே மென்றாள்

பம்புசீர் வேழமென்றேன் தின்னும் என்றாள்

பகடென்றேன் உழும்என்றாள் பழனம் தன்னை

கம்பமா என்றேன் நல் களியாம் என்றாள்

கைம்மா என்றேன் சும்மா கலங்கினாளே.

   என்ற தனிப்பாடலில், களபம், மாதங்கம், வேழம், பகடு, கம்பமா, கைம்மா போன்ற பெயர்களில் யானை அழைக்கப்படுகிறது என்பதனை இப்பாடலில் எடுத்துக் கூறியுள்ளார்.

**** இராஜாலி****

சனி, 27 ஜனவரி, 2024

அவ்வையாரின் தனிப்பாடல் - எல்லாருக்கும் ஒவ்வொன்று எளிது

     தமிழ் புலவர்களில் அவ்வையார் என்ற பெயரில் பல புலவர்கள் காலம் காலமாக வாழ்ந்து வந்துள்ளார்கள். குறிப்பாக சங்ககாலத்து அவ்வையார், பிற்காலத்து அவ்வையார் என்பவர்கள் காலத்தால் அறியப்படக்கூடியவர்கள். அவர்களில் ஒருவர் பாடிய தனிப்பாடல் திரட்டில் இடம்பெற்றுள்ள பல பாடல்களில் எல்லாருக்கும் ஒவ்வொன்று எளிது என்னும் பாடல் குறிப்பிடத்தக்கதாகும்.

பாடலின் விளக்கம்

       இவ்வுலகத்தில் பிறந்த உயிர்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனித்திறமையைப் பெற்று காணப்படுகின்றன. திறமை உள்ளவர்கள் திறமையற்றவர்கள் என்று யாரையும் பழித்து பேச முடியாது குறிப்பாக, வான் குருவி எனப்படும் தூக்கணாங்குருவியின் கூட்டை போல் யாராலும் அமைக்க முடியாது. அரக்கு எனப்படும் பசையைக் கொண்டு கரையான் கட்டும் புற்றைப் போல் எந்த வல்லுனராலும் கட்ட முடியாது. தேனீக்கள் கட்டும் தேன் கூட்டினை எவராலும் உருவாக்க முடியாது. சிலந்தியின் வலையினை யாராலும் பின்ன முடியாது. எனவே இவ்வுலகில் நான்தான் அறிவு மிக்கவன் திறமையானவன் என்ற ஆணவம் கூடாது. உலகில் பிறந்த ஒவ்வொரு உயிர்களுக்கும் ஒவ்வொரு சிறப்பு பண்பு இருக்கிறது என்பதினை,

 வான்குருவியின் கூடு வல் அரக்கு தோல்கரையான் 

 தேன் சிலம்பி யாவருக்கும் செய் அரிதால்.... யாம் பெரிதும்

 வல்லோமே என்று வலிமை சொல வேண்டாம் காண்!

 யாவர்க்கும் ஒவ்வொன்று எளிது!

என அவ்வையார் பாடியுள்ளார். இப்பாடல், கவிச்சக்கரவர்த்தி கம்பனின்  கவித்துவ ஆணவத்தை போக்குவதற்காக அவ்வையாரால் பாடப்பட்டது எனக் கூறுவர்.

****இராஜாலி ****

ஊழின் பெருவலி யாவுள? - வள்ளுவர்

முன்னுரை இலக்கியங்கள் பழக்கவழக்கங்களையும், நம்பிக்கைகளையும் மனிதனின் பண்பாட்டையும்,பிரதிபலிக்கும் களங்களாக விளங்குகின்றன. பேரிலக்கியங்கள் அற...