எனது வலைப்பதிவு பட்டியல்

வியாழன், 9 ஜனவரி, 2025

மரபுக் கவிதையின் - தோற்றமும் வளர்ச்சியும்

      நமக்கு கிடைத்துள்ள நூல்களில் மிகவும் தொன்மையானதாக விளங்குவது தொல்காப்பியரால் பாடப்பட்ட தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலாகும். தொல்காப்பியம் கூறும் ஐந்து இலக்கணங்களில் ஒன்று யாப்பிலக்கணம் அது செய்யுள் இலக்கணம் அல்லது கவிதை இலக்கணம் என அழைக்கப்படுகிறது. அவ் யாப்பிலக்கண முறைப்படி வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, பரிபாடல் என்ற வகைமையில் பாடப்படுவது மரபுக் கவிதைகளாகும். இக்கவிதைகள் என்று பிறந்தது என்று உணர முடியாத இயல்பினைக் கொண்டதாக விளங்குகிறது. சங்க கால முதலாக இக்காலம் வரையில் மரபுக் கவிதைகள் பாடப்பட்டு வருகின்றன. இக்கட்டுரையில் இக்கால மரபுக்கவிதை முன்னோர்கள் சிலர் பற்றி காணலாம்.

இக்கால மரபுக் கவிதை முன்னோடிகள் 

   பதினெட்டாம் நூற்றாண்டு முதல் இக்காலம் வரை வாழ்ந்த கவிஞர்கள் பலர் மரபுக் கவிதைகளை எழுதியுள்ளார்கள் அவர்களில்,பாரதியார், கவிமணி, பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், சுரதா, முடியரசன், வாணிதாசன், கண்ணதாசன் - போன்றோர்களை குறிப்பிடலாம்.

பாரதியார்


   இருபதாம் நூற்றாண்டில் இணையற்ற கவிஞராக விளங்கியவர் மகாகவி பாரதியார். 1882 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 11 ஆம் நாள் நெல்லையில் உள்ள எட்டையாபுரத்தில் சின்னசாமி - இலக்குமி அம்மையாருக்கு மகனாகத் தோன்றினார். சுப்பிரமணியன் என்னும் இயற்பெயரைக் கொண்ட இவர், இளம் வயது முதலாக கவி பாடும் புலமை பெற்றிருந்ததால் எட்டையாபுரத்து மன்னர் இவரை 'பாரதி' என அழைத்தார்.

 தேச விடுதலை, சமூக விடுதலை, பெண் விடுதலைப் போன்றவற்றை வேண்டி நின்றார்.

"எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓரினம் 

எல்லோரும் இந்திய மக்கள் 

எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் ஓர் விலை, 

எல்லாரும் இந்நாட்டு மன்னர் "

 என சமூக ஒருமைப்பாட்டு உணர்வினை ஊட்டினார்.

    பாரதியார், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் போன்ற முப்பெரும் இலக்கியங்களைப் படைத்துள்ளார். மேலும் ஞானப் பாடல்கள், தேசிய கீதங்கள், வசன கவிதைகள் போன்ற தலைப்புகளில் இலக்கியங்களைப் படைத்துள்ளார். தமிழ் புதுக்கவிதையின் முன்னோடியாக விளங்கிய இவர், இந்தியா,சுதேசமித்திரன் ஆகிய பத்திரிகைகளில் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். 39 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த இவர் 1921 செப்டம்பர் மாதம் 11 ஆம் நாள் மறைந்தார்.

பாரதிதாசன்


    கனகசுப்புரத்தினம் என்னும் இயற்பெயரைக் கொண்ட இவர் 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 29 ஆம் நாள் கனகசபை லட்சுமி அம்மாள் ஆகியோருக்கு மகனாக புதுச்சேரியில் பிறந்தார். பாரதியார் மீது கொண்ட பற்றின் காரணமாக தனது பெயரை பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார்.

" எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் 

மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு " 

எனது தாய்மொழி பற்றினை வெளிப்படுத்தினார். பாரதியைப் போல தேச விடுதலையையும், பெண் விடுதலையும், மொழிப் பற்றியும் தனது பாடு பொருளாகக் கொண்டு, பாண்டியன் பரிசு, குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு, இருண்ட வீடு போன்ற இலக்கியங்களைப் படைத்துள்ளார்.

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை


    கவிமணி என அழைக்கப்படும் தேசிய விநாயகம் பிள்ளை அவர்கள், குமரி மாவட்டத்தில் உள்ள தேரூரில் சிவதான பிள்ளைக்கும் ஆதிலட்சுமி அம்மையாருக்கும் மகனாக 1876 ஆம் ஆண்டு பிறந்தார். எளிய நடையில் கவி பாடும் வல்லமை பெற்ற இவர், மலரும் மாலையும், ஆசிய ஜோதி போன்ற இலக்கியங்களைப் படைத்துள்ளார். இவரின் கவிதைகளின் சிறப்பு உணர்ந்த சென்னை மாநிலத் தமிழ்ச் சங்கம் 1940 இல் கவிமணி என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது.

நாமக்கல் கவிஞர்


    காந்தியக் கவிஞர் என அன்போடு அழைக்கப்படும் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை அவர்கள், 1888 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ஆம் தேதி மோகனூரில் உள்ள வேங்கட ராமருக்கும் அம்மணி அம்மையாருக்கு மகனாகப் பிறந்தார். 1930 ஆம் ஆண்டு காந்தியடிகளின் உப்பு சத்தியா கிரகத்தில் பங்கு கொண்டு,

    " கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது " 

என்ற பாடலை பாடி காந்தியக் கவிஞர் ஆனார். இவர் அவனும் அவளும், சங்கொலி, தமிழ் மனம் போன்ற கவிதைகளை எழுதியுள்ளார்.

சுரதா


      உவமைக் கவிஞர் என அழைக்கப்படும் கவிஞர் சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன் என்பதாகும். இவர் 1921 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் நாள் தஞ்சை மாவட்டம் பழையனூரில் திருவேங்கடம், செண்பகம் அம்மையாருக்கு மகனாகப் பிறந்தார். பாரதிதாசன் மீது கொண்ட பற்றின் காரணமாக தனது பெயரை சுப்புரத்தினதாசன் என மாற்றிக் கொண்டார். அதுவே சுரதா என ஆனது. கவிஞர் திலகம், கவி மன்னர் என அழைக்கப்படும் இவர் தேன் மழை, துறைமுகம், சிரிப்பின் நிழல் போன்ற கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

முடியரசன்


     துரைராசு என்னும் இயற்பெயரைக் கொண்ட இவர், மதுரையை அடுத்துள்ள பெரிய குளத்தில் 1920 அக்டோபர் 7ஆம் நாள் சுப்புராயலு, சீதா லட்சுமி அம்மையாருக்கு மகனாகப் பிறந்தார். திராவிட சித்தாந்த கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு பூங்கொடி, பாடும் பறவை, வீரகாவியம் போன்ற இலக்கியங்களைப் படைத்துள்ளார். இவர் வீறு கவியரசர் எனப் புகழப்பட்டார்.

வாணிதாசன்


   தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த் என அழைக்கப்படும் வாணிதாசன் அவர்கள், பாண்டிச்சேரி அருகே உள்ள வில்லியனூரில் 1915 ஜூலை 22 ஆம் நாள் அரங்க. திருக்காமு - துளசி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். அரங்கசாமி என்னும் இயற்பெயரைக் கொண்ட இவர், பிற்காலத்தில் வாணிதாசன் எனப் பெயரை மாற்றிக்கொண்டு தமிழச்சி, கொடி முல்லை, தொடு வானம் போன்ற கவிதை இலக்கியங்களைப் படைத்துள்ளார்.

கண்ணதாசன்


  கவியரசர் என போற்றப்படும் கண்ணதாசன் சாந்தப்பன் விசாலாட்சியின் மகனாக 1927 ஜூன் மாதம் 24 ஆம் நாள் பிறந்தார். முத்தையா என்னும் இயற்பெயரைக் கொண்ட இவர் சிறுவயது முதலாக கவி பாடும் வல்லமை பெற்றிருந்தார். கண்ணதாசன் என்ற சிறப்பு பெயரில் 5000-க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார். மேலும் இவர் மாங்கனி, ஆதிமந்தி, இயேசு காவியம் போன்ற இலக்கியங்களைப் படைத்ததோடு அர்த்தமுள்ள இந்து மதம் தத்துவ விளக்க நூலையும் படைத்துள்ளார்.

      இவர்களைப் போன்று 19 ஆம் 20 ஆம் நூற்றாண்டுகளில் தமிழ் மரபுக் கவிஞர்கள் பலர் தோன்றி மரபுக் கவிதை இலக்கியங்கள் பலவற்றைப் படைத்து தமிழ் மொழிக்கு சிறப்பு செய்து உள்ளார்கள்.

***** இராஜாலி *****

வியாழன், 3 அக்டோபர், 2024

பதினெண் சித்தர்கள் - ஓர் அறிமுகம்

'சித்தர்’ என்ற  சொல்லுக்கு       சித்தி  பெற்றவர் என்பது பொருள்.  சிவத்தை நினைத்து   அகக்கண்ணால் கண்டு, தியானித்து தரிசனம் செய்து, எண்    பெருஞ் சித்திகளை பெற்றவர்கள் ஆவர்.

சித் - அறிவு, சித்தை உடையவர்கள் சித்தர்கள். அறிவு படைத்தவர்கள் சித்தர்கள். சித்தம் என்றால் அறிவு; சித்து என்றால் என்றும் நிலைத்திருக்கும் பேரறிவு; சித்தர்கள் என்றால் நிறைமொழி மாந்தர் என்னும் அறிஞர்கள் என்றும் பொருள்படுவதாக பழந்தமிழ் நூல்கள் கூறுகின்றன.

இப்படி பெருமைமிகு சித்தர்களில், பதினெட்டு சித்தர்கள் தலையாய சித்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அவர்களை பதினெண் சித்தர்கள் என்றும் அழைக்கின்றோம். 

1. அகத்தியர்:

சித்தர்-சித்த வைத்தியம் என்றாலே உடனே நம் நினைவுக்கு வருபவர் அகத்திய மாமுனி தான். பல சித்த மருத்துவ முறைகளை வழங்கியவர். அகத்தியர் சித்தர்கெல்லாம் சித்தராக அருள்பாலித்தவர். தமிழ் முனி, கும்ப முனி என்று பல பெயர்களில் அழைக்கப்பட்டார். அகத்தியர் வெண்பா, அகத்தியர் வைத்திய ரத்னாகரம், போன்ற நூல்களை இயற்றியுள்ளார். கடுந்தவமியற்றி பல சித்திகளை பெற்றார். தமிழ் இலக்கிய விதிமுறையான அகத்தியம் எனும் நூலை எழுதினார். அகத்தியர் மார்கழி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தார். அகத்தியர் அனந்தசயனம் என்ற திருவனந்தபுரத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு சிலர் அவர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர்.

2. திருமூலர்:

இவர் வாழ்ந்த காலம் கி.மு. 5000 வருடங்களுக்கு முந்தையது. இவரால் அருளப்பட்ட திருமந்திரம் தமிழ் ஆகம நூல் என்று அழைக்கப்படுகிறது. இந்நூலுக்கு இவர் திருமந்திர மாலை என்ற பெயர். இதனை தமிழ் மூவாயிரம் என்றும் அழைக்கின்றனர். “ஒன்றே குலம் ஒருவனே தேவன்,” என்றருளிய மகா ஞானி ஆவார். திருமூலர் புரட்டாசி மாதம் அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தார். சிதம்பரம் நடராஜ பெருமான் கோவிலில் ஜீவசமாதி அடைந்தார்.

3. போகர்:

பழனி மலையில் அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின் மூலவரை நவபாஷானங்களை கொண்டு செய்து வைத்தவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.இவர், போகர் நிகண்டு, போகர் ஏழாயிரம், போகர் கற்பம், போகர் வாசியோகம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார். இரசவாதியாகவும், தத்துவ ஞானியாகவும் அனைவராலும் போற்றபடுகின்றார்.போகர் வைகாசி மாதம் பரணி நட்சத்திரத்தில் பிறந்தார். இவர் பழனி மலையில் சமாதி அடைந்தார்.

4. இடைக்காடர்:

இவர் திருமாலின் அவதாரமாக கருதப்படுகிறார். இவர் இடைக்காடு எனும் ஊரில் வாழ்ந்தவர். இவர் வருடாதி மருத்துவம், தத்துவப் பாடல்கள், ஞானசூத்திரம் எழுபது ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இவரது பாடல்கள் உலக இயல்பினை, நிலையாமையை, உணர்ந்து இறைவன் அருளை நாடும் என்ற பொது அடிப்படைக் கருத்தைக் கொண்டது. இவர் தன் “வருடாதி வெண்பா” என்னும் நூலில், இந்த 60 வருடங்களுக்கும் மழை, வெய்யில் மற்றும் காலநிலை எப்படி இருக்கும் என்பதை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே எழுதியிருக்கிறார்.இடைக்காடர் புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தார்.இவர் திருவண்ணாமலையில் சமாதியடைந்தார்.

5. கமலமுனி:

இவருக்கு பிரம்மனே எல்லா வகைச் சித்துகளையும் நேரில் வந்து உபதேசித்தார் என்று கூறுவர். “கமலமுனி முந்நூறு” என்னும் மருத்துவ நூல், ரேகை சாஸ்திரம் முதலிய நூல்களை இவர் எழுதியதாக கூறப்படுகிறது. இவர் யோக ஞானத்தால் அஷ்டமா சித்திகளை பெற்றவர். சித்தர்களில் மிகவும் ஆற்றல் வாய்ந்தவர். கமலமுனி வைகாசி மாதம் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தார். இவர் திருவாரூரில் சமாதியடைந்ததாக சொல்லப்படுகிறது.

6. கருவூரார்:

தஞ்சை பெரிய கோவில் உருவாகியதில் இவருக்கு பெரும்பங்கு உண்டு. நெல்லையப்பரும், காந்திமதியம்மையாரும் இவருக்கு நடனக்காட்சி காட்டியருளியுள்ளனர். கருவூரார் வாத இலக்கியம், வைத்தியம் ஐநூறு, யோக ஞானம் ஐநூறு, கருவூரார் பலதிரட்டு, பூஜா விதி, குருநூல் சூத்திரம், பூரண ஞானம், கற்ப விதி, மெய்ச் சுருக்கம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார். கருவூரார் சித்திரை மாதம் ஹஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தார். இவரது சமாதி கருவூரில் (தற்போதைய கரூர்) உள்ளது.

7. கோரக்கர்:

கோரக்கர் இறப்பில்லா மகாயோகி என்றும் அவர் ஆதிநாதனான ஈசனிடம் பாடம் கேட்டு நாத சைவத்தைத் தோற்றுவித்ததாக புராணங்கள் கூறுகின்றன. வட நாட்டில் “நவநாத சித்தர்” என்ற சித்தர்கள் தொகுதியின் தலைமை சித்தராக இவரை போற்றுகின்றனர்.vசந்திரரேகை இருநூறு, கோரக்கர் கண்ணசூத்திரம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார். கோரக்கர் கார்த்திகை மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தார். நாகை அருகே உள்ள வடக்கு பொய்கைநல்லூர் என்ற ஊரில் அவரது ஜீவசமாதி ஆலயம் அமைந்துள்ளது.

8. குதம்பை:

இவர் ஞான மார்க்கத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர். இவரது பாடலில் “குதம்பாய்” என்று பலமுறை வரும். “குதம்பை” என்று விளித்துப்பாடல் இசைத்ததாலேயே இவருக்கு இந்த பெயர் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இவர் காதில் குதம்பை என்ற ஆபரணத்தை அணிந்திருந்ததால் ‘குதம்பை சித்தர்’ என்ற சிறப்புப் பெயராலேயே அழைக்கப்பட்டார். இவர் தம் அனுபவங்களை 32 பாடல்களாக பாடியுள்ளார். அந்தப் பாடல்கள் தான் குதம்பைச் சித்தர் பாடல்களாக உள்ளன. குதம்பை சித்தர் ஆடி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தார். . இவர் மாயவரத்தில் சமாதியடைந்தார். 

9. பாம்பாட்டி:

இவர் தன் தவவலிமையால் சிவபெருமானின் ஆட்டத்தைக் காண்பவர் என்பதால் இவர் கூறும் பாடல் யாவற்றிலும் “ஆடு பாம்பே” என பாம்பை முன்னிறுத்தி பாடல்கள் இயற்றியுள்ளதால் இவர் பாம்பாட்டி சித்தர் என அழைக்கபடுகிறார். பாம்புகளை கையாளுவதில் திறன் கொண்டவர் என்பதால் பாம்பாட்டிச் சித்தர் என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர். யோக நெறியில் குண்டலினி என்பதை பாம்பு என்ற குறியீட்டினால் குறிப்பிடுவதால், குண்டலினி யோகத்தில் சிறந்தவர் ஆதலால் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்ற மாற்று கருத்தும் இருக்கின்றது. வாழ்வின் நிலையாமை, உடலின் தன்மை, உறவின் தன்மை, உலகமாயை, நிலையானவை எவை, நிலையற்றவை எவை என்று பல்வேறு பாடல்களைப் பாடியுள்ளார். பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள், சித்தராரூடம், பாம்பாட்டி சித்தர் வைத்திய சாத்திரம் ஆகியன இவர் எழுதிய பாடல்களாகும். பாம்பாட்டி சித்தர் கார்த்திகை மாதம் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தார். இவர் சங்கரன்கோயிலில் சமாதியடைந்தார். 

10. சட்டைமுனி:

இவர் ஈழ நாட்டில் பிறந்ததாக கூறப்படுகிறது. போகரின் சீடரான இவர் வேதியியலில் சிறந்து விளங்கினார். வேதியியல் குறித்து வாத காவியம் எனும் நூலை இயற்றினார். எப்போதும் கம்பளத்தில் மேலாடை அணிந்ததால் சட்டைமுனி எனப்பட்டார். இவர் சட்டைமுனி நிகண்டு 1200, வாதகாவியம் 1000, சரக்குவைப்பு 500, நவரத்தின வைப்பு 500, வாக்டம் 200, முன்ஞானம் பின் ஞானம் 200, கற்பம் 100, உண்மை விளக்கம் 51 உள்ளிட்ட 14 நூல்கள் இயற்றியுள்ளார். சட்டைமுனி சித்தர் ஆவணி மாதம் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தார். இவர் திருவரங்கத்தில் சமாதியடைந்தார். 

11. சிவவாக்கியர்:

“சிவ சிவ” என்று சொல்லியபடி இவர் பிறந்ததால் சிவவாக்கியர் என அழைக்கப்படுகிறார். வைத்தியம், வாதம், யோகம், ஞானம் பற்றி பாடல் இயற்றியுள்ளார். இவர் தன் அனுபவங்களைப் பாடல்களாக எழுதினார். இவரால் இயற்றப்பட்ட பாடல் ‘சிவவாக்கியம்’ என்று அழைக்கப்படுகிறது. நாடிப் பரீட்சை என்னும் நூலும் சிவவாக்கியாரல் எழுதப்பட்டது என்று சொல்லப் படுகிறது. இவர் வாழ்ந்த காலமும் தெளிவாய்த் தெரியவில்லை. இவரது காலம், கி.பி.9ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என கருதப்படுகிறது. போகர் தனது சப்த காண்டத்தில் சிவவாக்கியார் தை மாத மக நட்சத்திரத்தில் பிறந்ததாகச் சொல்லியிருக்கிறார். சிவவாக்கியருக்கு கும்பகோணத்தில் கும்பேஸ்வரர் திருக்கோவிலில் ஜீவசமாதி உள்ளது.

12. சுந்தரானந்தர்:

இவர் அழகான தோற்றத்தைக் கொண்டிருந்ததால் சுந்தரானந்தர் என்று அழைக்கப்பட்டார். இவருக்கு வல்லப சித்தர் என்கிற பெயரும் உண்டு. அகத்தியர் பூஜித்த லிங்கத்தை சதுரகிரியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டவர். ஜோதிடத்தில் மற்றும் வைத்தியத்தில் சிறந்து விளங்கிய இவர், அது சம்பந்தமான பல நூல்களை இயற்றியுள்ளார். வைத்திய திரட்டு, காவியம், விஷ நிவாரணி, வாக்கிய சூத்திரம், கேசரி, சுத்த ஞானம், தீட்சா விதி, அதிசய காரணம், சிவயோக ஞானம், மூப்பு, தாண்டகம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.bசுந்தரானந்தர் ஆவணி மாதம் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தார். இவர் மதுரையில் சமாதியடைந்ததாக சொல்லப் படுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இவருக்கு தனி சந்நிதி அமைந்திருக்கிறது. 

13. கொங்கணர்:

கொங்கணர் சிறந்த அம்பிகை பக்தர். அம்பிகையை வழிபடும் முறையையும் மந்திரங்களையும் போகர் கொங்கணருக்கு உபதேசித்துள்ளார். கொங்கணர் வாதகாவியம் 3000, முக்காண்டங்கள் 1500, தனிக்குணம் 200, வாதசூத்திரம் 200, தண்டகம் 120, ஞான சைதன்னியம் 109, சரக்கு வைப்பு 111, கற்ப சூத்திரம் 100, வாலைக்கும்பி 100, ஞானமுக்காண்ட சூத்திரம் 80, ஞான வெண்பா சூத்திரம் 49, ஆதியந்த சூத்திரம் 45, முப்பு சூத்திரம் 40, உற்பத்தி ஞானம் 21, சுத்த ஞானம் 16 ஆகிய நூல்களை எழுதியுள்ளார். கொங்கணர் சித்திரை மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தார். இவர் திருப்பதியில் ஜீவசமாதியடைந்தார்.

14.வான்மீகர்:

வடமொழியில் இராமாயணம் பாடிய வால்மீகி முனிவர் தான் தென்னகத்தில் வான்மீகர் என அழைக்கப்படுகின்றார். போகர் 7000 -எனும் நூலில் பாடல் 5834 ல் வான்மீகர் எழு நூறு ஆண்டுகள் மேற்பட்ட காலம் வாழ்ந்ததாகவும். உலகிற்கு இராமாயணத்தை தந்ததாகவும், தமிழ் புலமை மிக்கவர் என்றும், காய சித்திகொண்டு அகத்தூய்மையோடு வாழ்ந்தவர் என்றும் கூறுகின்றார். வான்மீகர் புரட்டாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தார். வான்மிக சித்தர் தமிழ் நாட்டில் திருவாரூர் மாவட்டம் எட்டுக்குடியில் உள்ள முருகன் கோவிலில் ஜீவசமாதியடைந்தார். மேலும் இவரது மற்றொரு ஜீவசமாதி திருவான்மியூர் மருந்தீஸ்வரர் சன்னதியில் தீர்த்தகுளத்தின் அருகே சமாதி கொண்டுள்ளார்.

15. மச்சமுனி:

இவர் பிறக்கும் போதே சிவபெருமானின் உபதேசத்தோடு பிறந்தவர். நெடுங்காலம் யோக வழியில் தவம் மேற்கொண்டு அஷ்டமாசித்துக்கள் அனைத்தும் கைவரப் பெற்றார். மச்சமுனி சூத்திரம், மச்சமுனி தூல சூக்கும காரண ஞானம் 30, மச்சமுனி பெரு நூல் காவியம் 800, மச்சமுனி வைத்தியம் 800 , மச்சமுனி கடைக் காண்டம் 800, மச்சமுனி சரக்கு வைப்பு 800, மச்சமுனி திராவகம் 800, மச்சமுனி ஞான தீட்சை 50, மச்சமுனி தண்டகம் 100, மச்சமுனி தீட்சா விதி 100, மச்சமுனி முப்பு தீட்சை 80, மச்சமுனி குறு நூல் 800, மச்சமுனி ஞானம் 800, மச்சமுனி வேதாந்தம் 800, மச்சமுனி திருமந்திரம் 800, மச்சமுனி யோகம் 800, மச்சமுனி வகாரம் 800, மச்சமுனி நிகண்டு 400, மச்சமுனி கலை ஞானம் 800, மாயாஜால காண்டம் போன்ற பல நூல்களை இயற்றியுள்ளார்.மச்சமுனி ஆடி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தார். இவருடைய ஜீவசமாதி திருப்பரங்குன்றத்தில் உள்ளது. 

16. பதஞ்சலி:

இவர் பிரம்மதேவரின் கண்ணிலிருந்து தோன்றியவர் என்று கூறப்படுகிறது. இவர் ஆதி சேஷனின் அம்சமாக அவதரித்தார். வியாக்ர பாத்ருடன் தில்லையில் இருந்து சிவ தாண்டவம் கண்டவர். பதஞ்சலி யோக சூத்திரம் எனும் உயரிய நூலை இயற்றினார். இவர் பங்குனி மாதம் மூலம் நட்சத்திரத்தில் பிறந்தார். இவர் இராமேஸ்வரத்தில் ஜீவசமாதியடைந்ததாக சொல்லப் படுகிறது. 

17. இராமதேவர்:

பதினெட்டு சித்தர்களுள் ஒருவராக சிறப்பிக்கப்படும் இராமதேவர் நாகப்பட்டினத்தில் வாழ்ந்து வந்தார். அவரது உள்ளமெல்லாம் இறையுணர்வு எப்போதும் நிறைந்திருந்தது. வாசியோகம் பயின்ற ராமதேவர் அஷ்டமாசித்திகளை பெற்று வெளியிடங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் வெளி உலகங்களுக்கும் செல்லக் கூடிய சித்தியைப் பயின்றவர். அரபு நாடுகளில் ஏராளமான கற்ப மூலிகைகள் கிடைக்கும் என்றெண்ணி அடிக்கடி அரபு நாடுகளுக்குச் சென்று வந்தார். தமது ஞான சித்தியால் நபிகள் நாயகத்தின் ஆன்ம தரிசனம் பெற்றார். அதன் பின் பல நூல்களை அரபு மொழியிலேயே எழுதியதாக கூறப்படுகிறது. ஒரு சமயம் அங்கு வந்த போகர், இவருக்கு தரிசனம் அளித்தார். போகரின் ஆணைப்படி மெக்காவை விட்டு நீங்கி நாகை வந்து சட்டநாத பெருமானை வணங்கி, தாம் அரபு நாடுகளில் அறிந்தவற்றை தமிழில் நூலாக இயற்றினார். இராமதேவர் மாசி மாதம் பூரம் நட்சத்திரத்தில் பிறந்தார். இராமதேவர் சித்தர் தமிழ் நாட்டில் மதுரை மாவட்டம் அழகர்மலையில் ஜீவசமாதியடைந்தார்.

18. தன்வந்திரி:

தன்வந்தரி இந்திய மருத்துவ விஞ்ஞானத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். இவர் திருமாலின் அம்சமாக போற்றப்படுவதுடன் பதினெட்டு சித்தர்களில் ஒருவராக கருதப்படுகிறார். முதல் சித்தரான நந்தீசரிடம் மருத்துவம் முதலான கலைகள் கற்றவர். சில காலம் வைத்தீஸ்வரன் கோயில் என்னுமிடத்தில் தமது சீடர்களுடன் வாழ்ந்து தவம் புரிந்தவர். இவருடைய நூல்கள் வைத்திய சிந்தாமணி, நாலுகண்ட ஜாலம், கலை, ஞானம், தைலம், கருக்கிடை, நிகண்டு முதலியவையாம். இவர் ஐப்பசி மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தார். இவர் வைத்தீஸ்வரன் கோவிலில் ஜீவ சமாதியடைந்ததாக  சொல்லப்படுகிறது.

மேலும் பல சித்தர்கள் தமிழகத்தில் வாழ்ந்து வந்ததற்கான குறிப்புகள் சித்தர் இலக்கியங்களில் காணப்படுகின்றன.

***** இராஜாலி *****

ஊழின் பெருவலி யாவுள? - வள்ளுவர்

முன்னுரை இலக்கியங்கள் பழக்கவழக்கங்களையும், நம்பிக்கைகளையும் மனிதனின் பண்பாட்டையும்,பிரதிபலிக்கும் களங்களாக விளங்குகின்றன. பேரிலக்கியங்கள் அற...