எனது வலைப்பதிவு பட்டியல்

வியாழன், 14 ஜூலை, 2022

ஐம்பெருங்காப்பியங்கள் - ஐஞ்சிறுங்காப்பியங்கள்

 


“தமிழில் காப்பிய இலக்கியங்கள்”


காப்பிய இலக்கணத்தைத் ‘தண்டியலங்காரம்’ விரிவாக எடுத்துரைக்கின்றது. காப்பியத்தைப் பெருங்காப்பியம், சிறுகாப்பியம் என்று இரு வகைப்படுத்தி, அவற்றின் இலக்கணத்தைத் தனித்தனியே எடுத்துச் சொல்கிறது.

பெருங்காப்பியம்

·         பெருங்காப்பியமாவது வாழ்த்துதல், தெய்வத்தை வணங்குதல், வருபொருள் உரைத்தல் என்ற மூன்றில் ஒன்றினைத் தொடக்கத்தில் பெற்று வரும்.

·         அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நாற்பொருளைப் பயனாகத் தருவதாக அமையும்.

·         தன்னிகர் இல்லாத தன்மை உடையவனைக் காப்பியத் தலைவனாகக் கொண்டிருத்தல் வேண்டும்.

·         மலை, கடல், நாடு, நகர், ஆறு பருவங்கள், கதிரவன் தோற்றம், சந்திரனின் தோற்றம் ஆகியவற்றைப் பற்றிய வருணனைகளைக் கொண்டிருக்க வேண்டும்.

·         திருமணம் புரிதல், முடிசூடல், சோலையில் இன்புறுதல், நீர் விளையாடல், மதுவுண்டு களித்தல், மக்களைப் பெற்றெடுத்தல், ஊடல் கொள்ளுதல், புணர்ச்சியில் மகிழ்தல் முதலிய நிகழ்வுகளைக் கொண்டிருக்க வேண்டும்.

·         அமைச்சர்களுடன் ஆலோசனை செய்தல், தூது செல்லல், போர் மேற்கொண்டு செல்லுதல், போர் நிகழ்ச்சி, வெற்றி பெறுதல் போன்ற நிகழ்வுகளும் இடம் பெறுதல் வேண்டும்.

·         அமைப்பு முறையில் பெருங்காப்பியம் உள் பிரிவுகளுக்குச் சருக்கம், இலம்பகம், பரிச்சேதம் என்ற பெயர்களில் ஒன்றைப் பெற்றிருத்தல் வேண்டும்.

·         எண்வகைச் சுவையும், மெய்ப்பாட்டுக் குறிப்புகளும் கேட்போர் விரும்பும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

மேற்கண்ட, பொதுப் பண்புகளை பெற்றுவரும் காப்பியங்கள், 'ஐம்பெருங் காப்பியங்கள்' என அழைக்கப்படுகின்றன.



ஐம்பெருங் காப்பியங்கள்

முன்னுரை

தண்டியலங்காரம் கூறும் காப்பிய பண்புகளை, முழுமையாகக் கொண்ட

·         சிலப்பதிகாரம்,

·         மணிமேகலை,

·         சீவக சிந்தாமணி,

·         வளையாபதி,

·         குண்டலகேசி

ஆகிய ஐந்தினையும் தமிழில் தோன்றிய ஐம்பெருங் காப்பியங்கள் என்பர்.

இவ் ஐந்தனுள் சிறப்புத் தகுதி வாய்ந்தவை சிலப்பதிகாரமும், மணிமேகலையும் ஆகும். இவை இரண்டையும் இரட்டைக் காப்பியங்கள் என்று குறிப்பிடுவார்கள். இவ்விரண்டும் கதை நிகழ்ச்சியில் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. மேலும் சமகாலத்தில் தோன்றியவை. ஏனையவை சோழர் காலத்தில் தோன்றியவையாகும்.

1. சிலப்பதிகாரம்

சிலம்பு +அதிகாரம் = சிலப்பதிகாரம், கண்ணகியின் சிலம்பால் விளைந்த கதையை முதன்மையாகக் கொண்டது. ஆதலின் சிலப்பதிகாரமாயிற்று. சிலப்பதிகாரம் எனும் செந்தமிழ்க் காப்பியம் புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் எனும் முப்பெருங்கண்டங்களையும், முப்பது காதைகளையும் உடையது. புகார்க்காண்டம் பத்து காதைகளையும், மதுரைக்  காண்டம் பதின்மூன்று காதைகளையும் வஞ்சிக் காண்டம் ஏழு காதைகளையும் கொண்டுள்ளது. “இது உரையிடப்பட்ட பாட்டுடைச் செய்யுள்” எனவும் வழங்கப்பெறும்.

தமிழிலுள்ள ஐம்பெருங்காப்பியங்களில் முதன்மை பெறுவது சிலப்பதிகாரம். நமக்குக் கிடைத்திருக்கும் காப்பியங்களில் பழமையானது இதுவே. காவிரிப்பூம்பட்டினத்தில் பெருங்குடி வணிகர் மரபில் உதித்த கண்ணகி, கோவலன் என்பவர்களுடைய வரலாற்றைக் கூறுவது. முத்தமிழ்ப் புலமையுடைய வித்தகப் பெருமானாகிய இளங்கோவடிகளால் இயற்றப்பட்ட இக்காப்பியம் ‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்று பாராட்டப்படுகிறது. சோழ, பாண்டிய, சேர மன்னர்களின் நாட்டில் கதையை நடத்திச் செல்கிறார் இளங்கோவடிகள். சிலப்பதிகாரத்தில்,

·         அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.

·         ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்.

·         உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்.

என்னும் முப்பெரும் உண்மைகள் பேசப்படுகின்றன.

இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழும் விரவப் பெற்றிருப்பதால் இது முத்தமிழ்க் காப்பியம் என்றும் வழங்கப்படுகிறது. உலகத்தின் பிறமொழிக் காப்பியங்களைப் போலவோ, வடமொழிக் காப்பியங்கள் போலவோ தெய்வங்களையோ மன்னர்களையோ காப்பியத்தலைவனாகக் கொள்ளாமல் மக்களையே கொண்டதால் இதைக் குடிமக்கள் காப்பியம் குறிப்பிடுவார். இத்தகைய சிறப்பு மிகுந்த காப்பியத்தை இயற்றிய இளங்கோவடிகள் சமண சமயத்தவர். இக்காப்பியத்தில் சமண சமயக் கருத்துக்கள் மிகுதியாக காணப்படுவதால், இது ஒரு சமண சமயக் காப்பியம் ஆகும்.

கோவலன் கண்ணகியுடன் பூம்புகார் நகரில் சிறப்போடு வாழ்ந்து வந்தார். செல்வ வளமிக்க கோவலனுக்கு மாதவி என்ற நாட்டிய மங்கையோடு காதல் தொடர்பு ஏற்படுகிறது. இதன்காரணமாக கோவலன், கண்ணகியை மறந்து மாதவியே கதி என இருக்கின்றார். இதன் விளைவாக தனது பெரும் செல்வத்தை எல்லாம் இழக்க நேரிடுகிறது. நாட்கள் செல்ல, ஒருநாள் இந்திர விழாவின்போது கோவலனும் மாதவியும் கடற்கரையில் மகிழ்ந்துகழித்துக் கொண்டிருக்கும்போது, கருத்து வேறுபாடு ஏற்பட்டு மாதவியை விட்டுப் பிரிந்து மீண்டும் கண்ணகியிடம் செல்கின்றான் கோவலன். செல்வம் இல்லாத ஏழையாக வரும் கோவலனை அன்போடு வரவேற்றார்கள் கண்ணகி இழந்த செல்வங்களை மீண்டும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பூம்புகாரை விட்டு மதுரைக்கு சென்று வணிகம் செய்ய கோவலனும் கண்ணகியும் முடிவு செய்து மதுரைக்கு செல்கிறார்கள். கோவலன் மதுரையில் கண்ணகியின் காற்சிலம்பை விற்க சென்ற நிலையில் அரண்மனைப் பொற்கொல்லன் ஒருவனின் சூழ்ச்சியால் கோவலன் கொலை செய்யப்படுகிறார். கோவலன், கொலை செய்யப்பட்ட செய்தியை கேள்விப்பட்ட கண்ணகி, பாண்டிய மன்னனிடம் சென்று தன் கணவன் குற்றமற்றவன் என்பதை மற்றொரு கால் சிலம்பை காட்டி நிறுவுகிறார். தவறை உணர்ந்த மன்னன் அரியணையில் இருந்து விழுந்து இறக்கிறான். மேலும், கண்ணகி தன் கோபம் தணியாத நிலையில், மதுரை மாநகரை தீக்கிரையாக்கி விட்டு, வஞ்சி நகரத்திற்குச் சென்று தன் கணவனோடு வானுலகம்  சென்றதாக, இளங்கோவடிகள் இக்காப்பியத்தில்  கூறுகிறார்.

2.மணிமேகலை

`           மணிமேகலையின் ஆசிரியர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இவர் தண்டமிழ்ச் சாத்தன், தண்டமிழ்ப் புலவன் எனவும் அழைக்கப்படுகிறார். காலம் 2 ஆம் நூற்றாண்டு. இந்நூலுக்கு மணிமேகலைத் துறவு என்ற பெயரும் உண்டு, மணிமேகலை ஒரு பௌத்த சமயக் காப்பியம் ஆகும். கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மணிமேகலை என்ற பெண்ணின் வரலாற்றைக் கூறுவதாக மணிமேகலை காணப்படுகிறது.

காப்பியத் தலைவி மணிமேகலை பெயரால் இக்காப்பியத் தலைப்பு அமைகின்றது. இந்த மணிமேகலை என்ற பெயர் கோவலனின் குல தெய்வமான மணிமேகலா தெய்வத்தின் பெயர் என்பது சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படுகிறது.

மணிமேகலைக் காப்பியத்தை இயற்றிய சீத்தலைச் சாத்தனார், சிலப்பதிகாரம் பாடிய இளங்கோவடிகள் காலத்தில் வாழ்ந்தவர். என்பது இவ்விரு காப்பியங்களின் பதிகம் வழி அறிய முடிகிறது. ‘‘இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் இயற்றச் சாத்தனார் கேட்டார்’’ என்றும், ‘‘சாத்தனார் மணிமேகலை பாட அடிகள் கேட்டார்’’ என்றும் இப்பதிகங்கள் குறிப்பிடுகின்றன. இக்காப்பியம் முப்பது காதைகளைக் கொண்டது.

கோவலன் கொலை செய்யப்பட்ட பின்னர், மாதவியும் அவள் மகள் மணிமேகலையும் துறவு  பூண்டனர். ஒருநாள், மணிமேகலை  புத்தபிரானை  வழிபட, மலர் பறிக்க  சென்றாள். அப்பொழுது, சோழ நாட்டு இளவரசன் உதயகுமரன்  மணிமேகலையை கண்டான். காதல் கொண்டான். இந்த நேரத்தில் மணிமேகலா தெய்வம் மணிமேகலையை மணிபல்லவத்தில் கொண்டுவிட்டது. அங்கு, அவள் ஆபுத்திரன்  அமுத சுரபியை பெற்றாள். பின்னர், புகார் நகரத்திற்கு  வந்தாள். உதயகுமார், வித்தியாதரன் என்பவரால் கொல்லப்பட்டார். அவரது இறப்பிற்கு காரணம் மணிமேகலை தானென எண்ணிய சோழ நாட்டு அரசி மணிமேகலையை சிறையில் வைத்தாள். பின் மனம் திருந்தி அவளை  விடுவித்தாள். மணிமேகலை, அறவண அடிகளிடம்  ஆசி பெற்று காஞ்சி நகர்  சென்றாள். இதுவே மணிமேகலையின் கதை.

இக்காப்பியத்தில், பெண் துறவு, தவம் இரண்டும் வலியுறுத்தப்படுகிறது. பசியின் கொடுமை  பேசப் படுவதோடு, "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என்ற உயர்ந்த கோட்பாட்டை வலியுறுத்துவதாக இக்காப்பியம் காணப்படுகிறது.

3.சீவக சிந்தாமணி

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணியை எழுதியவர் திருத்தக்கதேவர் ஆவார்.இக்காப்பியம், தமிழில் உள்ள காப்பியங்களில் முதல் முதலாக விருத்தப்பாவால் பாடப்பட்டது,  இக்காப்பியத்தின் தலைவனான சீவகன் எட்டு பேரை மணப்பதாக காட்டப்படுவதால் இதற்கு 'மணநூல்' என்ற பெயரும் உண்டு.இக்காப்பியம், நாமகள் இலம்பகம் முதல் முத்தி இலம்பகம் முடிய 13 இலம்பகங்களையும், 3145 பாடல்களையும் கொண்டது. இக்காப்பியம் கிபி 10ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. சமண கருத்துக்களை மிகுதியாக கூறுவதால் இக்காப்பியம் ஒரு சமண காப்பியமாக கருதப்படுகிறது.

ஏமாங்கத நாட்டு அரசன் சச்சந்தன், தன் மனைவி விசையையிடம் பெரும் காதல் கொண்டிருந்தார். இதை பயன்படுத்தி  சச்சந்தனை  வென்று நாட்டை கைப்பற்றினான் அமைச்சன் கட்டியங்காரன். கருவுற்றிருந்த விசையை மயில் பொறி வழியாக, தப்பிச் சென்று காட்டில் ஒரு குழந்தையை பெற்றெடுத்தார்.  அவனே கதையின் தலைவனான சீவகன், சீவகனை கந்துக்கடன் என்பவர் வளர்த்து வருகிறார். வாலிப பருவத்தை அடைந்த பிறகு தனது தாய் விசையை சந்தித்து, தனது நிலையை உணர்ந்துகொண்ட சீவகன், மாமன் கோவிந்தனின் உதவியோடு கட்டியங்காரன் வென்று நாட்டை கைப்பற்றுகிறார். சீவகன் எட்டு பெண்களை திருமணம் செய்கிறார், பின்னர், இந்த வாழ்க்கை  நிலையில்லாதது என்பதை உணர்ந்து துறவு மேற்கொள்கிறார் என்பதை இக்காப்பியம் கூறுகிறது.

4. வளையாபதி

ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றாக எண்ணப்படுவது வளையாபதி. 19ஆம் நூற்றாண்டு வரை வாழ்ந்த இவ்விலக்கியம் பின்னர் எப்படியோ அழிந்துவிட்டது. வளையாபதி காப்பிய ஆசிரியர் யார்? எப்போது இந்நூல் இயற்றப்பட்டது? காவியத் தலைவன் பெயர் என்ன? காவியத்தின் கதைதான் என்ன? இந்த வினாக்களுக்கு யாதொரு விடையும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. இக்காப்பியத்தின் 72 செய்யுள்கள் மட்டும் கிடைத்துள்ளன. கிடைத்துள்ள பாடல்களைக் கொண்டு நோக்குகிறபோது, இது ஒரு சமண சமய நூல் என்பது மட்டும் உறுதியாகிறது.

வளையாபதி கதை இன்னதுதான் என்பது அறியப்படாத ஒன்று. கிடைத்துள்ள பாடல்களைக் கொண்டும் கூட இதன் கதையை அறிய முடியவில்லை. வளையாபதி கதை என ஒரு கதை வழக்கில் உள்ளது. அக்கதை வருமாறு,

நவகோடி நாராயணன் ஒரு வைர வாணிகன். அவன் தன் குலத்தில் ஒரு பெண்ணையும், வேறு குலத்துப் பெண்ணையும் திருமணம் செய்ததால், அவனைக் குலத்தை விட்டுத் தள்ளி வைத்து விடுகின்றனர். இதனால் துன்பமுற்ற நாராயணன், வேறு வழியின்றி வேறு குலத்துப் பெண்ணைத் தள்ளி வைத்து விடுகிறான். அவளோ, தனக்கு மறுவாழ்வு அளிக்கும்படி காளியை வேண்டுகிறாள். காளியின் அருளால் அவளுக்கு ஓர் ஆண் குழந்தை பிறக்கிறது. அக்குழந்தை வளர்ந்து பெரியவனாகிப் புகார் நகர் வணிகர் அவையில் ‘தன் தந்தை நாராயணனேஎன்று நிறுவுகிறான். காளிதேவியும் சாட்சி கூறி அதனை மெய்ப்பிக்கிறது. இதனால் குடும்பம் ஒன்றுசேர, அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர், என்பதை இக்காப்பியம் கூறுகிறது.

 5.குண்டலகேசி

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான, குண்டலகேசி ஒரு பௌத்த சமய நூல். குண்டலகேசி விருத்தம் எனவும் இந்நூல் குறிப்பிடப்படுகிறது. குண்டலகேசி காவியத்தை இயற்றியவர் நாதகுத்தனார். இக்காப்பியம் கிபி 10ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. குண்டலகேசியின் பாடல்கள் முழுவதும் கிடைக்கவில்லை, புறத்திரட்டு, யாப்பருங்கல விருத்தி உரை, அடியார்க்கு நல்லார் உரை ஆகியவற்றில் மேற்கோள்களாக வரும் 25 பாடல்களை குண்டலகேசியின் பாடல்களாக தொகுத்துள்ளார்கள்.

இராச கிருக நாட்டு அமைச்சன் மகள் பத்திரை. அவள் தனது மாளிகையில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அரச சேவகர்கள் கள்வன் ஒருவனைக் கொலைக்களத்திற்கு அழைத்துச் சென்றதைக் கண்டாள். அவனுடைய இளமையும் அழகும் அவள் மனதைக் கவர்ந்தன. அவன்மேல் அவள் காதல் கொண்டாள். இதை அறிந்த தந்தை, கள்வனை விடுவித்துத் தன் மகளை அவனுக்குத் திருமணம் செய்து வைக்கிறான். இருவரின் அன்பு வாழ்க்கை, காதல் வாழ்க்கை இனிதே நடக்கிறது. ஒரு நாள் ஊடல் கொண்ட பத்திரை, ‘நீ கள்வன் மகன் அல்லனோஎன விளையாட்டாகச் சொல்ல, அது அவன் உள்ளத்தைப் பாதிக்கிறது. அவளைக் கொல்லக் கருதிய அவன், அவளை மலை உச்சிக்கு அழைத்துச் சென்று, அவளைக் கீழே தள்ளிக் கொல்லப் போவதாகக் கூறுகிறான். நிலைமையை உணர்ந்த பத்திரை, அவனுக்கு உடன்பட்டவள் போல் நடித்து, “நான் இறப்பதற்குமுன் உம்மை வலம் வரவேண்டும்என்கிறாள். பின் அவனை வலம் வருபவளைப் போல, பின் சென்று அவனைக் கீழே தள்ளிக் கொன்று விடுகிறாள்.

பிறகு, பத்திரை, வாழ்க்கையை வெறுத்தவளாய், பல இடங்களில் அலைந்து திரிந்து, சாரிபுத்தர் ஆணைப்படி பௌத்தத் துறவியாகிறாள். சாரிபுத்தர் குண்டலகேசியைப் (பத்திரை) பகவான் புத்தரிடம் அழைத்துச் செல்ல, அவர் முன்னிலையில் அவள் பௌத்தத் துறவியாகிறாள்.

முடிவுரை

கதை  பொதிந்த நீண்ட செய்யுள்களாக காணப்படும் காப்பியங்கள், அக்கால மக்களின் வாழ்வியல் கூறுகளை, வாழ்வியல் நெறிகளை எடுத்துக் கூறும் இலக்கியங்களாக விளங்குகின்றன. தமிழில், காணப்படும் ஐம்பெரும் காப்பியங்களில் சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, வளையாபதி ஆகிய மூன்றும் சமண சமய காப்பியங்கள்.  மணிமேகலை மற்றும் குண்டலகேசி ஆகிய இரண்டும் பௌத்த சமய காப்பியங்கள். மேலும் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என வழங்கப்படுகின்றது.

                            ***********************



ஐஞ்சிறு காப்பியங்கள்

முன்னுரை

தண்டியலங்காரம் என்ற இலக்கண நூல், காப்பியப் பாடுபொருளான அறம், பொருள், இன்பம், வீடுபேறு ஆகியவற்றில் ஒன்று குறைபடினும் அது சிறுகாப்பியம் என்று குறிப்பிடுகிறது. தமிழில் ஐஞ்சிறு காப்பியங்களாகச்  

·         சூளாமணி,

·         யசோதர காவியம்,

·         நீலகேசி,

·         உதயண குமார காவியம்,

·         நாக குமார காவியம்

ஆகிய ஐந்தினையும் தமிழில் தோன்றிய ஐஞ்சிறு காப்பியங்கள் என்பர். அந்த, சிறு காப்பியங்களை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

1.சூளாமணி

ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றான,சூளாமணி என்பது மகுடத்தின் முடிமணி. இதனைச் சூடாமணி என்றும் அழைப்பர். இதன் ஆசிரியர் தோலாமொழித் தேவர். இவர், ‘செங்கண் நெடியான் சரிதம்’ என்றுதான் தம் நூலைக் குறிப்பிடுகிறார்.  சூளாமணிக் காப்பியம், பாயிரமும், 12 சருக்கங்களும், 2131 விருத்தப் பாக்களும் கொண்டது. பாயிரப் பகுதி 6 பாடல்களைக் கொண்டது.

பரத கண்டத்தில் சுரமை நாட்டின் தலைநகர் போதன மாநகர். அதன் அரசன் பயாபதி. அவனுக்கு மிகாபதி, சசி என இரு மனைவியர். அவர்களுக்கு வெண்ணிறமான விசயன், கருநிறமான திவிட்டன்  ஆகிய இருவரும் பிறந்தனர். வித்தியாதரர் (வானவர்) உலகிலுள்ள இரத நூபுரம் என்ற நகரில் ஆட்சி புரியும் சுவலனசடி தன் மகளுக்குச் சுயம்வரம் நடத்த எண்ணுகிறான். சுவலனசடியின் மகள் சுயம்பிரபை. அவளைப் பூலோகத்தில் உள்ள திவிட்டனே மணப்பான் என்று நிமித்திகன் கூறுகிறான். தன் சோதிடக் குறிப்பிற்குச் சான்றாக, திவிட்டன் ஒரு மாதத்திற்குள் ஒரு சிங்கத்தை அடக்குவான் என்கிறான். சுவலனசடி திவிட்டனுக்குப் பெண் கொடுக்க இருப்பதை அறிந்த மற்றொரு வித்தியாதர அரசன் அச்சுவ கண்டன் பயாபதியைத் தனக்குத் திறை செலுத்த ஆணையிட்டுத் தூதனுப்புகிறான். அத்தூதுவனைத் திவிட்டன் விரட்டியடித்து விடுகிறான். விரட்டியடிக்கப்பட்ட தூதுவன், அச்சுவ கண்டனிடத்தே செல்வதற்கு அஞ்சி, அவனுடைய அமைச்சனாகிய அரிமஞ்சு என்பவனிடம் சென்று திவிட்டன் செயலைக் கூறினான். அதுகேட்ட அவ்வமைச்சன் மாயவித்தையில் வல்ல அரிகேது என்பவனை மாயச் சிங்க உருவில் பயாபதி நாட்டுக்கு அனுப்பி அச்சுறுத்துகிறான். வீரன் திவிட்டன் விட்டுவிடுவானா? அம்மாயச் சிங்கத்தைக் கொல்லும் பொருட்டுத் துரத்திச் செல்கிறான். மாயச்சிங்கமாகிய அரிகேதுவோ உயிருக்குப் பயந்து, உண்மைச் சிங்கம் உறங்கும் ஒரு குகைக்குள் புகுந்து மறைந்து விடுகிறான். உண்மையான சிங்கம் குகையை விட்டு வெளிவர, திவிட்டன் அதனோடு எதிர்த்துப் போரிட்டு, அதன் வாயைப் பிளந்து கொன்று விடுகிறான்.

நிமித்திகன் கூற்று மெய்யாகி விட்டதல்லவா? சுவலனசடிக்கு மிகுந்த மகிழ்ச்சி. தன் மகளைத் திவிட்டனுக்கு மணம் செய்து மகிழ்கிறான். திவிட்டன், விசயன் நாட்டை நன்முறையில் ஆளுகின்றனர். இத்துடன் இக்காப்பியக் கதை முற்றுப் பெறுகிறது.

சமயம், சமூகம், அரசியல் சார்பான உயர்ந்த கருத்துகளை வெளியிடுவதில் இக்காப்பியம் சிறந்து ஓங்குகிறது. மனித வாழ்க்கை என்பது என்ன? அது துன்பமா? இன்பமா? இரண்டும் கலந்ததே. அது ஒரு திரிசங்கு சொர்க்கம் போன்றது என்பதை ஓர் அருமையான பாடலால் விளக்கி விடுகிறார் ஆசிரியர். பாடல் இதோ:

யானை துரப்ப அரவுஉறை ஆழ்குழி

நால்நவிர் பற்றுபு நாலும் ஒருவன்ஓர்

தேனின் அழிதுளி நக்கும் திறத்தது

மானுடர் இன்பம் மதித்தனை கொள்நீ

மதயானை ஒருவனை விரட்டுகிறது; அதினின்று தப்பிக்க ஓடும்போது ஆழமான ஒரு குழியில் விழுகிறான். உள்ளே விழுந்துவிடாமல் இருக்க, அங்குத் தொங்கும் மெல்லிய கொடியைப் பற்றிக் கொண்டு தொங்குகிறான்; கீழே ஒரு பாம்பு படமெடுத்து ஆடுகிறது; கொடியை விட்டுக் கீழே விழுந்தால் பாம்பு கடித்து இறந்துவிடுவான்; மேலே சென்றால் யானை மிதித்துக் கொன்றுவிடும்; இவ்வாறு உயிருக்குப் போராடும் நிலையில் தேன் கூட்டிலிருந்து தேன் சொட்டுகிறது. அதனை நக்கிச் சுவைக்கிறான். மனிதர் துய்க்கும் இன்பம் இத்தகையதுதான்.

வாழ்க்கை துன்பங்களே நிறைந்தது. இதில் இடையிடையே கிடைக்கும் இன்பம் சிறிய அளவுடையதுதான். ஆயினும் அதைத் துய்க்க விரும்புவதே மனித இயற்கை. இந்த அரிய உண்மையை எவ்வளவு எளிமையாக, சுவையாகக் காட்டி விட்டார் தோலாமொழித் தேவர்.

2.யசோதர காவியம்

          ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றான யசோதர காவியம்.இந்நூல் யசோதரன் என்ற மன்னனின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கிறது. யசோதர காவியம்படைத்த ஆசிரியர் யார் என்பதில் கருத்து வேறுபாடு நிலவுகிறது.இக்காப்பியம் ஐந்து சருக்கங்களைக் கொண்டது. பாடல்கள் 330 மட்டுமே காணப்படுகின்றன. அபயருசி என்பான் ஔதய நாட்டு மன்னன் மாரி தத்தனுக்குத் தன் பழம்பிறப்பு வரலாறு உணர்த்திச் சைன நெறிப்படுத்தி நற்கதி பெறச் செய்ததே காப்பியக் கதை.

            மக்களுக்குத் தீவினை தொடரும் வழி இன்னதென உணர்த்தி, அவ்வழியில் செல்லாது தடுத்து, நல்வினை செய்யச் செய்து, அதனால் வரும் புண்ணியத்தையும் போகத்தையும் அடையச் செய்வதே சமணக் காப்பியங்களின் அடிப்படை நோக்கமாகும். வினைப்பயன் தொடரும் என்பதே இக்காப்பியம் நமக்குத் தரும் செய்தி. உயிர்க்கொலை பெரும்பாவம்; அது கீழான விலங்குப் பிறவிக்கு இட்டுச் செல்லும். மீளாத நரகத்தில் புகச் செய்யும். பலியிடுதலும், பாவனையால் பலியிடுதலும் கொலையே. அறியாமல் செய்தாலும் கொலை கொலையே. புலால் உண்ணுதல் கொடிய பாவம். இசை உலக இன்பத்தை மிகுவிக்கும். கூடா ஒழுக்கம் பஞ்சமா பாதகத்தைச் செய்யத் தூண்டும். பாவங்களைப் போக்கும் வழி அறவோர் அறவுரை கேட்டலே. இதுவே இக்காப்பியத் தத்துவம், சிந்தனை, நோக்கம்.

கொலை, பொய், களவு, பிறன்மனை நயத்தல், புலால் உண்ணல், கள் உண்ணல், தேன் உண்ணல் முதலான பாவச் செயல்களைச் செய்யாமையே அறம் ஆகும். அந்த அறங்களை இந்நூல் சொல்கிறது.

3.நீலகேசி

தமிழில் தோன்றிய முதல் தருக்க நூல் இதுவெனக் கூறலாம். இது குண்டலகேசிக்கு மறுப்பாக எழுந்த நூலாகும். நீலகேசி, குண்டலகேசியை வாதில் வென்று சமணமே உயர்ந்த சமயம் என நிறுவுகிறது நீலகேசிக் காவியம்.நீலகேசி 894 பாடல்களைக் கொண்டது; இவை விருத்தப்பாக்களில் அமைந்தவை. தரும உரைச் சருக்கம், குண்டலகேசி வாதச் சருக்கம், அருக்க சந்திர வாதச் சருக்கம், மொக்கல வாதச் சருக்கம், புத்தவாதச் சருக்கம், ஆசீவக வாதச் சருக்கம், சாங்கியவாதச் சருக்கம், வைசேடிக வாதச் சருக்கம், வேதவாதச் சருக்கம், பூதவாதச் சருக்கம் எனப் பத்துச் சருக்கங்களைக் கொண்டது. இந்நூல் நீலம், நீலகேசித் தெருட்டு, நீலகேசித்திரட்டு என்னும் வேறு பெயர்களாலும் வழங்கி வருகின்றது.நீலகேசிக் காப்பியம் முழுக்க முழுக்கப் பல சமயத் தத்துவங்களின் உண்மைத் தன்மையை விவாதிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது.  இதன் தத்துவம் பலருக்கும் விளங்காத ஒன்று என்பதாலே இக்காப்பியம் போற்றப்படவில்லை. ஆனால் இந்தியத் தத்துவம் படித்தோர் இதனைப் போற்றுவர். ஆசிரியர் தம் காலத்தில் நிலவியிருந்த அனைத்துச் சமயச் சிந்தனைகளையும் எடுத்துரைப்பதில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளார்.

தெய்வங்களுக்கு உயிர்ப்பலி இடுதல் தீமையே என்பதை எடுத்துரைக்கிறது. இறைவன் அருளிய அறநெறியில் ஐயுறல் கூடாது; பேராசை தவிர்க்க வேண்டும்; மெய்த்துறவோரை மதித்தல் வேண்டும்; நட்பு, புகழ் இவற்றால் மயங்குதல் கூடாது; பிறர் குற்றங்களை அகற்ற வேண்டும்; முறை தவறி நடப்பாரைத் திருத்த வேண்டும்; யாவரிடமும் மெய்யான அன்பு செலுத்த வேண்டும்; மாந்தர்தம் அறியாமை போக்க வேண்டும் என்று பல உலக நீதிகளை இந்த நூல் எடுத்துரைக்கிறது.

4.உதயண குமார காவியம்

கொங்குவேளிரின் பெருங்கதைக் காப்பியத்திற்குச் சுருக்க நூலாகப் பாடப்பட்டதே உதயணகுமார காவியம். இது சமண சமயப் பெண்பால் துறவியரில் ஒருவரான கந்தியர் என்பவரால் பாடப்பட்டிருக்க வேண்டும் எனக் கருதுவர். 369 பாடல்களைக் கொண்டது. பெருங்கதை அமைப்பையே கொண்டு இந்நூலும் உஞ்சை காண்டம், மகத காண்டம், இலாவண காண்டம், வத்தவ காண்டம், நரவாண காண்டம் என ஐந்து காண்டங்களுடன் அமைகிறது. கூடுதலாகத் துறவுக் காண்டம் ஒன்றும் இதில் இடம் பெறுகின்றது. உதயணகுமார காவியம் வத்தநாட்டு மன்னன் உதயணன் கதையைக் கூறுவதாக காணப்படுகிறது.

5.நாக குமார காவியம்

ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றான, நாககுமார காவியம் கி .பி 16 ஆம் நூற்றாண்டில் ஏற்றப்பட்டது. இதன் ஆசிரியர் யார் எனத் தெரியவில்லை. 170 விருத்தப்பாக்கள் கொண்ட இந்நூல், 5 சருக்கங்களை கொண்டதாகும். மகத நாட்டு மன்னன்  சயந்தனின் இரண்டாவது மகன் பிரதாபந்தன் இவனே நாககுமாரன் என அழைக்கப்படுகிறார். நாககுமாரன் மேற்கொண்ட பஞ்சமி  நோன்பின் சிறப்புகளையும், நாககுமாரனின் வீரச் செயல்களையும், முடி சூட்டு விழாவையும், துறவு பூணுதல் போன்ற கருத்துக்களையும் இந்நூல் பேசுவதாக உள்ளது.

முடிவுரை

காப்பிய பண்புகளில் ஒன்றான அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப் பொருட்களில், ஏதேனும் ஒன்று குறைந்து வந்தால் அது சிறு காப்பியம் ஆகும். அவ்வகையில், தமிழ்மொழியில் ஐந்து சிறு காப்பியங்கள் காணப்படுகின்றன.  சிறு காப்பியங்கள் ஐந்தும், சமண சமயக் கருத்துக்களை வலியுறுத்தும் சமண காப்பியங்கள் ஆக காணப்படுகின்றன. என்பதனை இக்கட்டுரையின் மூலம் அறிய முடிகிறது.

********* இராஜாலி  ********

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யுனிக்கோட் - பயன்பாடு

அறிமுகம்    ஆங்கில மொழியைத் தவிர பிறமொழிகளிலும் பலரும் பல்வேறு குறியேற்றங்களையும் எழுத்துருக்களையும் பயன்படுத்தி வந்தனர். இந்த முறையில் ஒரே ...