எனது வலைப்பதிவு பட்டியல்

வியாழன், 13 அக்டோபர், 2022

சீறாப்புராணம் - நுபுவத்துக் காண்டம்

புத்து பேசிய படலம்

முன்னுரை

          இஸ்லாமிய இலக்கியங்களில் சிறந்த இலக்கியமாக கருதப்படுவது சீறாப்புராணம் ஆகும். கிபி பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் என்பவரால்  எழுதப்பட்ட இக்காப்பியம் இறைதூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றைக் கூறுவதாக அமைந்துள்ளது.

சீறாப்புராணம், விலாதத்து காண்டம், நுபுவ்வத்து காண்டம், ஹிஜ்ரத்து காண்டம் என மூன்று காண்டங்களையும் 92 படலங்களையும் 5027 பாடல்களையும் கொண்டதாகும்.

புத்து பேசிய படலம்

 சீறாப்புராணத்தில் காணப்படும் இரண்டாவது காண்டமான, நுபுவ்வத்து காண்டத்தில் உள்ள  புத்து பேசிய படலம்; முகமது நபி அவர்கள்,குசைன் என்ற அறபிக்கு  புறுக்கான் என்னும் வேத நெறியின் சிறப்பை உணர வைத்து, 65 ஆண்டுகளாக பேசாமல் இருந்த புத்தை  பேச வைத்து அற்புதம் நிகழ்த்திய செய்தியினை கூறுவதாக அமைந்துள்ளது.

மக்காவில் முகமது நபிகள் வீற்றிருத்தல்

நிலம்மாகிய அரசனின்  தலையில் சூடப்பட்டிருக்கும் கிரீடத்தைப் போன்ற சிறப்பு வாய்ந்த மக்கா நகரத்தில், எட்டு திசைகளிலும் கலிமா ஒலிக்கும் அந்நகரத்தில் வில்லை கையில் ஏந்திய பல மன்னர்கள் சூழ்ந்திருக்க அவர்களில் நடு நாயகமாக முகமது நபி அவர்கள் வீற்றிருந்தார்கள். அப்போது, மலை போன்ற உறுதியான தோள்களை உடைய குசைன் என்னும் அறபி  மகிழ்வோடு முகமது நபிகளை காண வந்தான்.

குசைனை கண்ட முகமது நபி அவர்கள் அன்பு உள்ளத்தோடு அவனைப் பார்த்து புன்னகைத்து தனது கைகளை அசைத்து அவனை அருகில் வரவழைத்து தன் அருகில் அமர வைத்தார். மூன்று வேதங்களையும் கற்றுணர்ந்த முகமது நபி அவர்கள் குசைனிடம் "அனுதினமும் நற்கதி தரும் புறுக்கான் என்னும் வேத மார்க்கத்தை பின்பற்றி நடவாமல் இருப்பதற்கு காரணம் என்ன? " எனக் கேட்டார்.

குசைனின் மறுமொழி

முகமது நபி அவர்கள் கேட்டதற்கு மறுமொழியாக" தீன் மார்க்கத்தின் சிறப்பை உணர்ந்த  ஹபீபு என்னும் அரசனின் அவயங்கள் அற்ற மாமிசத்தடியை அழகிய பெண் உருவமாக ஆக்கிய முகமது நபி அவர்களே! உங்களிடம் மான் வந்து பேசியதையும், உடும்பு வந்து பேசியதையும், அம்மாவாசை நாளில் முழு நிலவு வந்து பேசியதையும் நான் அறிவேன். உங்களது வழியைப் பின்பற்றுபவர்கள் கூறும் கருத்துக்களையும் நான் அறிவேன். ஆயினும் உங்கள் கலிமாவைக் கூறுவதற்கு எனது மனம் இசையவில்லை " எனக் குசைன் கூறினான்.

அதற்கு முகமது நபி அவர்கள் குசைனைப் பார்த்து "நீ கலிமாவை கூறாமல் இருப்பதற்கு இது காரணம் அல்ல. உனது வீட்டில் வைத்து நீ வழிபடும் சொரூபமான புத்துதான் காரணம். இதுவரைக்கும் பேசாமல் இருக்கும் அப்புத்து தனது வாயை திறந்து வார்த்தைக்கு வார்த்தை உறுதியாக பேசுமானால் நீ கலிமாவை ஓதுவாயா? " எனக் கேட்டார்.

நபிகள் நாயகத்தின் வார்த்தையை கேட்ட குசைன் மெல்ல புன்னகைத்து "என்னிடம் 65 ஆண்டுகளாக இருக்கும் அப்புத்து இதுவரைக்கும் தனது வாயை திறந்து பேசியதே இல்லை. உம்முடைய ஒரு வார்த்தையால் அது பேசும் என்பதை என்னால் உறுதியாக ஏற்றுக்கொள்ள  முடியாது " என மறுத்துக் கூறினான்.

மேலும் குசைன் முகமது நபியை பார்த்து " பொன் ஆபரணங்களாலும் அழகிய வஸ்திரங்களாலும் பரிமள தைலத்தாலும் வாசனை வீசும் மலர்களால் பூசை செய்யும் என்னிடம் பேசாத தெய்வத்தன்மை பொருந்திய அப்புற்று  உம்முடைய வார்த்தையால் பேசும் என்றால் நீங்கள் கூறுகின்ற புறுக்கானுல் அலீம்  என்னும் வேத மார்க்கத்தை ஏற்றுக் கொண்டு, பூமியை தொடாத தாமரைப் போன்ற உன் திருவடிகளை தொழுது தீன் என்னும்  இஸ்லாம் மார்க்கம் நிலைத்து நிற்கும்படி செய்வேன் " என உறுதியாகக் கூறினான்.

குசைன் புத்தை முகமது நபியிடம் கொண்டு வருதல்

எட்டு திசைகளையும் ஆட்சி செய்யும் இறைவனின் ஆசியோடு முகமது நபி அவர்கள் குசைன் கூறிய வார்த்தையை கேட்டு மகிழ்ந்து " அப்புற்றை இவ்விடத்தில் கொண்டு வரும்படி கூறினார். உடனே குசைன், நபிகளை வணங்கி வீட்டிற்குச் சென்று அப்புத்துக்கானுக்கு  ரத்தின ஆபரணங்களையும், அழகிய வஸ்திரங்களையும் தரித்து அலங்காரம் செய்தான். மேலும் மலர்களை சூட்டி, நறும்புகைகளை காட்டி அப்புத்தை தனது கைகளில் சுமந்தவாறு மூன்று வேதங்களையும் அறிந்த முகமது நபிக்கு முன் கொண்டு வைத்தான்.

புத்து பேசியது

          மேன்மை தாங்கிய சிறப்புமிக்க நபிகள் நாயகம் தனது அமுத மலர் போன்ற வாயினை திறந்து புத்தத்தை பார்த்து "குசைனின் மன இருள் நீங்கும் படி, விண்ணும் மண்ணும் உணரும்படி மெய் வேதத்தின் சிறப்புகளையும், தீன்  மார்க்கத்தின் பெருமையினையும் கூறுவாயாக" என ஓதினார்.

இதனைக் கேட்ட புத்து, வெண்ணிலவு போன்று ஒளி வீசும் முகமது நபியின் திருமுகத்தை பார்த்து, "பெரியவரான அல்லாவின் அருளால் தெய்வீகத் தன்மையுடன் வந்த அரசனே! இரக்கத்தைக் கூறும் அரு மறையான தீன்  மார்க்கத்தின்  முகமது நபியே! தேவர்கள் அனைவரும் மலர் கொண்டு பூஜிக்கும் பொன் போன்ற திருவடிகளை பெற்று பூமிக்கு வந்த தலைவரே! நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு சூரியனைப் போன்று  பிரகாசமாக ஒளிவிடும்  ராஜாவே! உங்களது தெய்வீக புறுக்கானுல் வேத நெறியினை மனதில் ஏற்றுக் கொள்ளாதவர்கள் பொல்லாத நரகத்தில் சேர்வார்கள். உங்களது பாதங்களைப் பணிந்து  கலிமாவை ஓதுபவர்கள் சொர்க்கத்தில் நிலைத்திருப்பார்கள் " என எல்லோரும் அறியும்படி கூறியது. இந்த வார்த்தையினை கேட்டு உள்ளம் மகிழ்ந்த குசைன் முகமது நபியை போற்றி வணங்கினான்.

முடிவுரை

சீறாப்புராணத்தில், முகமது நபி அவர்கள்,குசைன் என்ற அறபிக்கு  புறுக்கான் என்னும் வேத நெறியின் சிறப்பை உணர வைத்து, 65 ஆண்டுகளாக பேசாமல் இருந்த புத்தை  பேச வைத்து அற்புதம் நிகழ்த்திய செய்தியினை கூறுவதாக, உமறுப்புலவர் பாடியுள்ளார்.

********* இராஜாலி *********

 

தேம்பாவணி - வேதக் கெழுமைப் படலம

நபூக்கன் நலிவு

முன்னுரை

          கிறிஸ்தவ பேரிலக்கியங்களில் மிகவும் போற்றுதலுக்கு உரியது  தேம்பாவணி ஆகும். இந்நூல் 1726 ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் வீரமாமுனிவரால் அரங்கேற்றப்பட்டது. தேன் + பா + அணி எனப் பிரித்துத் “தேன் போன்ற இனிய பாடல்களின் மாலை” எனக் கூறுவர். இயேசு நாதரின் வளர்ப்பு தந்தையான ‘புனித சூசையப்பரின்’ சிறப்புகளை கூறுவதாக இந்நூல் அமைந்துள்ளது.

தேம்பாவணி மூன்று காண்டங்களைக் கொண்டது. ஒவ்வொரு காண்டங்களுக்கும் 12 படலங்கள் வீதம் 36 படலங்களைக் கொண்டுள்ளது. இதில் 3615 பாடல்கள் காணப்படுகின்றன.

வேதக் கெழுமைப் படலம்

தேம்பாவணியில் மூன்றாவது காண்டத்தில் 29-வது படலமாக விளங்குவது வேதக் கெழுமைப் படலம் ஆகும். இதில் சபை மூத்தோர்,  வேதத்தின் சிறப்புகளையும், நபூக்கன் மற்றும்  எல்லியோதூரனின் செயல்களை இளைஞர்களுக்கு எடுத்துக் கூறுவதாக வீரமாமுனிவர் பாடியுள்ளார்.

அசீரியா நாட்டின் சிறப்பும் - நாபூக்கனின் ஆணவமும்

மேகங்கள் தவழும் மலையினின்று இறங்கிய தெளிந்த நீர் எங்கும் கிடைக்கும் அசீரிய நாட்டில், பிற்காலத்தில், நஞ்சு தவழும் சினத்தால் காய்ந்து கொண்டிருந்த நபூக்கன் என்னும் அரசன் ஆண்டான். அவன் தன் நெஞ்சில் தவழ்ந்த அகந்தையினால் தன் செங்கோல் கொடுங்கோலாய் வளையுமாறு, பரந்து கிடந்த தன் நாட்டில் எங்குமுள்ள யூதர்கள் ஆண்டவனைத் தொழும் செயலை கண்டு மிகவும் கோபப்பட்டு, அவர்கள் இறைவனை வணங்குவதை தடுத்தான்.

          அவன்; அகந்தையினாலும், ஆணவத்தாலும் தன்னைப் போன்ற ஓர் உருவத்தைப் பொன்னால் செய்து. உயர்ந்த சிறப்போடு அணிகலன்களால் அழகு செய்தான்; அந்நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் அவ்வுருவத்தையே வணங்க வேண்டும் என கட்டளையிட்டான்.

     அங்கு இருந்த மூன்று யூதர்கள் "சிறப்புப் பொருந்திய எம் ஆண்டவனை அல்லாமல், அழகு பொருந்திய உருவமாய்ச் செய்த யாரையும் யாம் வணங்கமாட்டோம்" என்றனர். அதனைக் கேட்டு, கருமேகத்தில் தங்கும் இடி போலச் சினந்த நபூக்கன், "இந்த யூதர்களை நெருப்புச் சூளையில் தள்ளுங்கள்!" எனக் கட்டளையிட்டான்.

யூதர்களை அக்கினி சூளையில் தள்ளுதல்

அரசனின் கட்டளைக்கு கீழ்படிந்த சேவகர்கள், யூதர்கள் மூவரையும் அழைத்துக் கொண்டு அக்கினி சூளைக்குள் தள்ளினார்கள். அப்பொழுது நெருப்பானது சேவர்களை அழித்தது. நெருப்புக்குள் தள்ளப்பட்ட மூன்று பேரும் மகிழ்ச்சியோடு காணப்பட்டார்கள். அவர்களை நெருப்பு ஒன்றும் செய்யவில்லை. அவர்களின் கைகளில்  கட்டப்பட்டிருந்த கயிறு மட்டும் எரிந்தது. அவர்கள் பசுமையான பூஞ்சோலையில் அமர்ந்திருப்பது போல அச்சு சூளைக்குள் அமர்ந்திருந்தார்கள். இதனைப் பார்த்து மற்ற சேவகர்கள் மன்னனிடம் விரைந்து சென்று தாம் கண்ட செய்தியினை கூறினார்கள்.

அந்நிலைமையைக் கேட்டறிந்த மன்னன் வியந்து அருகில் வந்து உள்ளே பார்த்தான்; வெப்பமான சூளையில் நாலுபேர் மகிழ்ந்திருக்கக் கண்டான்; இந்நிலைமையால் மேலும் வியப்பு மிக "இப்பொழுதே இங்கு வாருங்கள்!" என்றான். மூவர் மட்டுமே குளிர்ந்த முகத்தோடு அவன் பக்கம் வந்து நின்றனர். அவர்களைப் பார்த்து நபூக்கன், "நாலு பேரை அங்குக் கண்டேனே; மற்றும் அந்தப் புதியவன் எங்கே?" என்றான். அவர்கள், "எவரினும் மேம்பட்ட வல்லமையுள்ள எம் ஆண்டவன் அனுப்பி வைத்த வானவன்தான் அவன்" என்றனர். அதனைக் கேட்ட பிறகும் நபூக்கன் ஆணவம் குறையாதவனாக, தானே கடவுள் என்ற ஆணவம் மிக்கவனாக காணப்பட்டான். இதன் காரணமாக இறைவன் அவன் மீது கடும் கோபம் கொண்டார்.

நபூக்கன் விலங்காக மாறுதல்

நபூக்கன், தானே தெய்வமென்று கருதிய தன்மையால்,  ஆண்டவன் தன் பெருஞ்சினத்தால்,  அவனது உயிர் நீங்காமல், விலங்கு உருவம் கொள்ளச் செய்தான். அதனால், நபூக்கன் நாட்டினின்று தள்ளப்பட்டு, தன் வீணான திறமையில் குறைந்து, காட்டில் குனிந்து புல் மேய்த்து நின்றான். நபூக்கன் ஏழு வருட காலமாய் இவ்வாறு இழிவு பட்டான்; பின்னர் தன் தவறை உணர்ந்து இறைவனிடம் பாவ மன்னிப்பு கேட்டு மீண்டும் மனித உரு பெற்று மனிதர்களுக்கு முன்மாதிரியாக விளங்கினான்.

எல்லியோதுரன் இன்னல்

அவ்யூதர் வணங்கும் கோவிலில் அரிய செல்வம் மிகுதியாக உண்டு என்று அந்நாட்டு அரசன் கேள்விப்பட்டு, எல்லியோதுரன் என்பவனை ஏவினான். எல்லியோதுரன் அந்நாட்டு மக்கள் அஞ்சி வருந்துமாறு, கொல்லும் வேங்கைக் கூட்டம் போன்று எண்ணில்லாத வீரர் புடைசூழ விரைந்து கோவிலுக்குள் புகுந்தான்.

எல்லியோதுரன் கோவிலுக்குள் புகுந்த அளவில், வானத்தில் பொற்கவசம் அணிந்த ஒருவன் ஏறி வந்த குதிரை, எல்லியோதுரனது பரந்த மார்பில் உதைத்து அவனை வீழ்த்தியது. அது கண்டு கூட்டமாய் வந்த வீரர் யாவரும் ஓடிப்போயினர். அப்பொழுது இரண்டு வானவர் அவனை அணுகி, குதிரையை அடிக்கும் மத்திகை  என்னும் சவுக்கால் அவனை பலமாக அடித்தார்கள்.

ஆபத்தில் இருக்கும் எல்லியோதூரனை கண்ட அச்சபை மூப்பர் அவனைக் காப்பாற்றும் பொருட்டு இறைவனிடம் மனம் வருந்தி வேண்டினார். அப்பொழுது இரண்டு இறைத்தூதர்கள் வந்து எல்லியோதூரனை தேற்றி, " இங்கு நடந்தவற்றைத் திசையெல்லாம் அறியச் செய்வாய்" என்றனர். அவனும், தன் உயிருக்கு வந்த ஆபத்தினின்று தப்பி, தன் வாழ்நாள் உள்ள அளவும் இறைவனைப் போற்றினான்.

முடிவுரை

இவ்வாறு சபை மூத்தோர், நபூக்கன் மற்றும்  எல்லியோதூரனின் செயல்களை இளைஞர்களுக்கு எடுத்துக் கூறுவதாக வேதக் கெழுமைப் படலம் அமைந்துள்ளது.

********** இராஜாலி *******

 

    

 

 

ஞாயிறு, 2 அக்டோபர், 2022

பெரிய புராணம் - கலிய நாயனார் புராணம்

 முன்னுரை

          சைவத் திருமுறைகளில் பன்னிரண்டாவது திருமுறையாக விளங்குவது சேக்கிழார் பாடிய  பெரிய புராணமாகும். "திருத்தொண்டர் மாக்கதை" என்று வழங்கப்படும் பெரிய புராணம், சுந்தரர் பாடிய "திருத்தொண்டத் தொகை" என்னும் நூலின் வழி நூலாகக் கருதப்படுகிறது. பெரியபுராணம் 2 காண்டங்களையும், 13 சருக்கங்களையும், 4286 பாடல்களையும் கொண்டதாகும். இந்நூல், அறுபத்திமூன்று நாயன்மார்களின் வரலாற்றையும், 9 தொகையடியார்களின் வரலாற்றையும் தொகுத்துக் கூறும்  நூலாகக் காணப்படுகிறது.

 கலிய நாயனார் புராணம்

          பெரியபுராணத்தில் இரண்டாவது காண்டத்தில் காணப்படும் 'பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம்' என்னும் சருக்கத்தில் 52 வது புராணமாக காணப்படுவது கலிய நாயனார் புராணம் ஆகும். இப்புராணத்தில் 'தனது உதிரத்தைக் கொண்டு திருக்கோயில் விளக்கெரிக்க முற்பட்ட மெய்யடியாரான கலிய நாயனாரின் ' வரலாறு கூறப்பட்டுள்ளது.

திருவொற்றியூரின் சிறப்புகள்

          இவ்வுலகத்தில் புகழ்மிக்க தொண்டை நாட்டில், அழகிய சோலைகளால் சூழப்பட்ட, தேரோடும் அழகிய வீதியை கொண்ட திருவெற்றியூரில் கங்கையை தலையில் சூடிய, சடை முடியை உடைய  கூத்தப் பெருமான் எழுந்தருளியுள்ளான். அங்கு சமணர்களும் பௌத்தர்களும் கூறுவதைப் போன்று வான வளியே இல்லை என்று சொல்லும் அளவிற்கு வானுயர்ந்த மாளிகைகள் காணப்பட்டன.  கொடிகள் காற்றில் அசையும் போது கமுக மரச்சோலை போல் காணப்பட்டது. அத்தகைய நகரத்தை அடுத்து பரந்து விரிந்த கடல் காணப்பட்டது.

          எப்பொழுதும், இசைப் பாடல்கள் ஒலிக்கும் மண்டபங்களும், மக்கள் நிறைந்திருக்கும் வீதிகளும் அவற்றிலிருந்து எழும் ஒலியும், முறையாக நிகழும் திருவிழாக்களில் தோன்றும் ஒலியும் கலந்து காணப்பட்டது. அங்குள்ள திருமடங்களில், செந்நெல் அரிசியால் சமைக்கப்பட்ட உணவு நிரம்பி வழிந்தன.

          அங்குள்ள சோலைகளில்  மாதவி மலரும், புன்னை மலரும், குங்கும மரங்களின் மலரும், செண்பக மலர்களும், செருந்தி மலர்களும், தாழை மலர்களும் மலர்ந்து மணம் வீசின. நிலவைப் போன்று வெண்மை ஒளிவீசும் மணல் பரப்பும் காணப்பட்டது.

          மேகங்களின் முழக்கமும், கடல் அலையின் ஓசையும், இசை பழகும் இசைக்கருவிகளின் ஓசையும் இவை என பிரித்துக் கூற முடியாத அளவிற்கு அந்நகரில்  ஒலித்துக்கொண்டே இருந்தன. அந்த நகரத்தில் எண்ணெய் ஆட்டும் செக்குத் தொழிலை செய்யும் மக்கள் வாழ்கின்ற 'சக்கர பாடித் தெரு' என்னும் சிறந்த தெரு காணப்பட்டது.

 கலிய நாயனாரின் பிறப்பு

          சக்கர பாடித் தெருவில், எண்ணெய்  ஆட்டும் செக்கு தொழில் செய்யும் மரபில்  கலியநாயனார்  தோன்றினார். சைவ சமயம் சிறப்படைய, முக்கண்ணை உடைய சிவபெருமானுக்கு திருத் தொண்டு செய்வதில் சிறந்து விளங்கினார்.

 கலிய நாயனாரின் திருத்தொண்டு

          கலிய நாயனார்,  பலகோடி செல்வத்திற்கு தலைவனாக விளங்கியதால் திருவெற்றியூரில் வீற்றிருக்கும், காளை  வாகனத்தை உடைய சிவபெருமானின் ஆலயத்தில் உள்ளேயும் வெளியேயும் இரவும் பகலும் விளக்கேற்றி திருத்தொண்டு செய்தார்.

          பல ஆண்டு காலமாக எண்ணற்ற திருவிளக்குகளுக்கு நெய் ஊற்றப்பட்டு, ஏற்றப்பட்டு வழிபட்டு வந்த, கலிய நாயனாரின் இத்திரு தொண்டின் சிறப்பினை உலகறிய செய்ய விரும்பினார் இறைவன்.

 கலிய நாயனாரின் செல்வம் தேய்ந்து போதல்

          கலிய நாயனாரின் திரு தொண்டை உலகறிய செய்ய விரும்பிய இறைவனின் செயலால், கலியநாயனாரின் செல்வம் அனைத்தும் தேய்ந்து கரைந்தது. என்றாலும், தன் கொள்கையில் மாறுபடாதவராக காணப்பட்டார். செல்வம் உள்ளவர்களிடம் சென்று எண்ணெய் ஆட்டும் தொழிலை செய்து அவர் கொடுக்கும் கூலியைக் கொண்டு எண்ணெய் வாங்கி விளக்கேற்றி திருத்தொண்டு செய்தார்.

அத் தொழில் செய்வோர் பலர் இருப்பதால், அதனால் கிடைக்கும் கூலியும் தடைபட்டது. அதனால் மனம் வருந்தியவர் தனது உடமைகளை விற்று  கோயில் விளக்கேற்றினார். செல்வமும் கரைந்து போக, தனது வீட்டையும் விற்று அச் செல்வத்தைக் கொண்டு  திரு விளக்கேற்றினார்.

 மனைவியை விற்பதற்கு முயலுதல்

          வீட்டை விட்டு விளக்கேற்றிய கலியநாயனாருக்கு அச்செல்வமும் கரைந்து போனதால் மனம் வருந்தி தனது மனைவியை விற்று பொருள் சேர்த்து திருவிளக்கு ஏற்ற எண்ணினார். அந்நகரில் கலியநாயனாரின் மனைவியை பொருள் கொடுத்து வாங்குவார் இல்லாததால் மனம் வருந்தினார்.

கலியநாயனார் எண்ணைக்கு பதிலாக தன் உதிரத்தை கொடுக்க முயலுதல்

 கலியநாயனார்,

 'மணி வண்ணச் சுடர் விளக்கு மாளில்  யான் மாள்வன்' 

என படம் பக்கநாதரின் கோயிலில் விளக்கேற்றும் திருப்பணிக்கு தடை  வந்தால் தான் மாண்டு போவதாக உறுதியாகக் கூறினார்.

          கோயிலுக்குச் சென்ற கலியநாயனார், விளக்குகளை எல்லாம் முறையாக அடுக்கி வைத்தார், அவற்றிற்கு திரியினையிட்டார். அதற்கு எண்ணையாக  இரத்தத்தை கொடுப்பதற்காக தனது கழுத்தினை அரிவதற்கு முற்பட்டபோது, சிவபெருமான் நேரில் அங்கு தோன்றி அவர் கையைப் பிடித்து தடுத்தார். என்பதை,

"ஒருவிய எண்ணைக்கு ஈடா உடல் உதிரம் 

                                                   கொடு நிறைக்கக்

கருவியினால் மிடறு அரிய அக்கையைக் கண் நுதலார்

பெருகு திருக் கருணையுடன்  நேர் வந்து பிடித் தருளி "

எனப் பெரிய புராணம் கூறுகிறது.

மேலும், சிவபெருமானின் அருளால், கலியநாயனார் பொன் போல் ஒளி வீசும் சிவபுரியாகிய சிவலோகத்தில் விளக்கேற்றும் அருளினைப் பெற்றார்.

 முடிவுரை

          இவ்வாறு, சேக்கிழார் பெரிய புராணத்தில் 'தனது உதிரத்தை கொடுத்து இறைவனுக்கு விளக்கேற்ற துணிந்த' கலிய நாயனாரின் வரலாற்றைக் கூறி உள்ளார்.

********** இராஜாலி *******

யுனிக்கோட் - பயன்பாடு

அறிமுகம்    ஆங்கில மொழியைத் தவிர பிறமொழிகளிலும் பலரும் பல்வேறு குறியேற்றங்களையும் எழுத்துருக்களையும் பயன்படுத்தி வந்தனர். இந்த முறையில் ஒரே ...