புத்து பேசிய படலம்
முன்னுரை
இஸ்லாமிய
இலக்கியங்களில் சிறந்த இலக்கியமாக கருதப்படுவது சீறாப்புராணம் ஆகும். கிபி பதினெட்டாம்
நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் என்பவரால்
எழுதப்பட்ட இக்காப்பியம் இறைதூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றைக் கூறுவதாக
அமைந்துள்ளது.
சீறாப்புராணம்,
விலாதத்து காண்டம், நுபுவ்வத்து காண்டம், ஹிஜ்ரத்து காண்டம் என மூன்று காண்டங்களையும்
92 படலங்களையும் 5027 பாடல்களையும் கொண்டதாகும்.
புத்து
பேசிய படலம்
சீறாப்புராணத்தில் காணப்படும் இரண்டாவது காண்டமான,
நுபுவ்வத்து காண்டத்தில் உள்ள புத்து பேசிய
படலம்; முகமது நபி அவர்கள்,குசைன் என்ற அறபிக்கு
புறுக்கான் என்னும் வேத நெறியின் சிறப்பை உணர வைத்து, 65 ஆண்டுகளாக பேசாமல்
இருந்த புத்தை பேச வைத்து அற்புதம் நிகழ்த்திய
செய்தியினை கூறுவதாக அமைந்துள்ளது.
மக்காவில்
முகமது நபிகள் வீற்றிருத்தல்
நிலம்மாகிய
அரசனின் தலையில் சூடப்பட்டிருக்கும் கிரீடத்தைப்
போன்ற சிறப்பு வாய்ந்த மக்கா நகரத்தில், எட்டு திசைகளிலும் கலிமா ஒலிக்கும் அந்நகரத்தில்
வில்லை கையில் ஏந்திய பல மன்னர்கள் சூழ்ந்திருக்க அவர்களில் நடு நாயகமாக முகமது நபி
அவர்கள் வீற்றிருந்தார்கள். அப்போது, மலை போன்ற உறுதியான தோள்களை உடைய குசைன் என்னும்
அறபி மகிழ்வோடு முகமது நபிகளை காண வந்தான்.
குசைனை
கண்ட முகமது நபி அவர்கள் அன்பு உள்ளத்தோடு அவனைப் பார்த்து புன்னகைத்து தனது கைகளை
அசைத்து அவனை அருகில் வரவழைத்து தன் அருகில் அமர வைத்தார். மூன்று வேதங்களையும் கற்றுணர்ந்த
முகமது நபி அவர்கள் குசைனிடம் "அனுதினமும் நற்கதி தரும் புறுக்கான் என்னும் வேத
மார்க்கத்தை பின்பற்றி நடவாமல் இருப்பதற்கு காரணம் என்ன? " எனக் கேட்டார்.
குசைனின்
மறுமொழி
முகமது
நபி அவர்கள் கேட்டதற்கு மறுமொழியாக" தீன் மார்க்கத்தின் சிறப்பை உணர்ந்த ஹபீபு என்னும் அரசனின் அவயங்கள் அற்ற மாமிசத்தடியை
அழகிய பெண் உருவமாக ஆக்கிய முகமது நபி அவர்களே! உங்களிடம் மான் வந்து பேசியதையும்,
உடும்பு வந்து பேசியதையும், அம்மாவாசை நாளில் முழு நிலவு வந்து பேசியதையும் நான் அறிவேன்.
உங்களது வழியைப் பின்பற்றுபவர்கள் கூறும் கருத்துக்களையும் நான் அறிவேன். ஆயினும் உங்கள்
கலிமாவைக் கூறுவதற்கு எனது மனம் இசையவில்லை " எனக் குசைன் கூறினான்.
அதற்கு
முகமது நபி அவர்கள் குசைனைப் பார்த்து "நீ கலிமாவை கூறாமல் இருப்பதற்கு இது காரணம்
அல்ல. உனது வீட்டில் வைத்து நீ வழிபடும் சொரூபமான புத்துதான் காரணம். இதுவரைக்கும்
பேசாமல் இருக்கும் அப்புத்து தனது வாயை திறந்து வார்த்தைக்கு வார்த்தை உறுதியாக பேசுமானால்
நீ கலிமாவை ஓதுவாயா? " எனக் கேட்டார்.
நபிகள்
நாயகத்தின் வார்த்தையை கேட்ட குசைன் மெல்ல புன்னகைத்து "என்னிடம் 65 ஆண்டுகளாக
இருக்கும் அப்புத்து இதுவரைக்கும் தனது வாயை திறந்து பேசியதே இல்லை. உம்முடைய ஒரு வார்த்தையால்
அது பேசும் என்பதை என்னால் உறுதியாக ஏற்றுக்கொள்ள
முடியாது " என மறுத்துக் கூறினான்.
மேலும்
குசைன் முகமது நபியை பார்த்து " பொன் ஆபரணங்களாலும் அழகிய வஸ்திரங்களாலும் பரிமள
தைலத்தாலும் வாசனை வீசும் மலர்களால் பூசை செய்யும் என்னிடம் பேசாத தெய்வத்தன்மை பொருந்திய
அப்புற்று உம்முடைய வார்த்தையால் பேசும் என்றால்
நீங்கள் கூறுகின்ற புறுக்கானுல் அலீம் என்னும்
வேத மார்க்கத்தை ஏற்றுக் கொண்டு, பூமியை தொடாத தாமரைப் போன்ற உன் திருவடிகளை தொழுது
தீன் என்னும் இஸ்லாம் மார்க்கம் நிலைத்து நிற்கும்படி
செய்வேன் " என உறுதியாகக் கூறினான்.
குசைன்
புத்தை முகமது நபியிடம் கொண்டு வருதல்
எட்டு
திசைகளையும் ஆட்சி செய்யும் இறைவனின் ஆசியோடு முகமது நபி அவர்கள் குசைன் கூறிய வார்த்தையை
கேட்டு மகிழ்ந்து " அப்புற்றை இவ்விடத்தில் கொண்டு வரும்படி கூறினார். உடனே குசைன்,
நபிகளை வணங்கி வீட்டிற்குச் சென்று அப்புத்துக்கானுக்கு ரத்தின ஆபரணங்களையும், அழகிய வஸ்திரங்களையும் தரித்து
அலங்காரம் செய்தான். மேலும் மலர்களை சூட்டி, நறும்புகைகளை காட்டி அப்புத்தை தனது கைகளில்
சுமந்தவாறு மூன்று வேதங்களையும் அறிந்த முகமது நபிக்கு முன் கொண்டு வைத்தான்.
புத்து
பேசியது
மேன்மை
தாங்கிய சிறப்புமிக்க நபிகள் நாயகம் தனது அமுத மலர் போன்ற வாயினை திறந்து புத்தத்தை
பார்த்து "குசைனின் மன இருள் நீங்கும் படி, விண்ணும் மண்ணும் உணரும்படி மெய் வேதத்தின்
சிறப்புகளையும், தீன் மார்க்கத்தின் பெருமையினையும்
கூறுவாயாக" என ஓதினார்.
இதனைக்
கேட்ட புத்து, வெண்ணிலவு போன்று ஒளி வீசும் முகமது நபியின் திருமுகத்தை பார்த்து,
"பெரியவரான அல்லாவின் அருளால் தெய்வீகத் தன்மையுடன் வந்த அரசனே! இரக்கத்தைக் கூறும்
அரு மறையான தீன் மார்க்கத்தின் முகமது நபியே! தேவர்கள் அனைவரும் மலர் கொண்டு பூஜிக்கும்
பொன் போன்ற திருவடிகளை பெற்று பூமிக்கு வந்த தலைவரே! நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு
சூரியனைப் போன்று பிரகாசமாக ஒளிவிடும் ராஜாவே! உங்களது தெய்வீக புறுக்கானுல் வேத நெறியினை
மனதில் ஏற்றுக் கொள்ளாதவர்கள் பொல்லாத நரகத்தில் சேர்வார்கள். உங்களது பாதங்களைப் பணிந்து கலிமாவை ஓதுபவர்கள் சொர்க்கத்தில் நிலைத்திருப்பார்கள்
" என எல்லோரும் அறியும்படி கூறியது. இந்த வார்த்தையினை கேட்டு உள்ளம் மகிழ்ந்த
குசைன் முகமது நபியை போற்றி வணங்கினான்.
முடிவுரை
சீறாப்புராணத்தில்,
முகமது நபி அவர்கள்,குசைன் என்ற அறபிக்கு புறுக்கான்
என்னும் வேத நெறியின் சிறப்பை உணர வைத்து, 65 ஆண்டுகளாக பேசாமல் இருந்த புத்தை பேச வைத்து அற்புதம் நிகழ்த்திய செய்தியினை கூறுவதாக,
உமறுப்புலவர் பாடியுள்ளார்.
*********
இராஜாலி *********
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக