எனது வலைப்பதிவு பட்டியல்

வெள்ளி, 23 பிப்ரவரி, 2024

ஜல்லிக்கட்டு காளை மல்லுக்கட்டும் காளையர்

கலித்தொகையில் ஏறுதழுவுதல்...

        சங்க காலத்தில் ஏறுதழுவுதல் என்பது ஆண்மகனின் வீரத்தை வெளிப்படுத்தும் வீர விளையாட்டாகக் கருதப்பட்டது. ஆண்களின் வீரத்தை விரும்பிய பெண்கள் தங்களோடு வளர்ந்த காளையை அடக்கும் வீரனையே கரம் பிடிப்பதாக உறுதியேற்று இருந்து, அவ் வீரன் வந்து காளையை  அடக்கி கைத்தலம் பற்றும் நிகழ்வு சங்க கால மக்களின் வாழ்வியலில் காணப்பட்டுள்ளது என்பதற்கு கலித்தொகை பாடல் 102 சான்றாக அமைகிறது.

     கலித்தொகையில், முல்லைக் கலி பாடல்களைப் பாடியவர் சோழன் நல்லுருத்திரன் என்ற மன்னர் ஆவார். அவர் சங்க கால தலைவியை தலைவன் ஏறு தழுவி மணமுடித்த செய்தியை பின்வருமாறு காட்சிப்படுத்துகிறார்.

     மழை பொழிந்து ஓய்ந்த அழகிய கார்கால  மாலைப் பொழுதில் தலைவன் தோழனோடு இயற்கை காட்சிகளை கண்ணுற்றவனாக அக்காட்டுப் பாதை வழியாக வந்து கொண்டிருக்கிறான். அவ்விடத்தில் துள்ளி விளையாடும் மான்களைப் போல தலைவி தன் தோழிகளோடு சேர்ந்து பிடவம், தளவம், தோன்றி, கொன்றை போன்ற பல வகையான மலர்களைப் பறித்து அவற்றை மாலையாகத் தொடுத்து கழுத்திலும், தலையிலும் அணிந்து மகிழ்ச்சி ததும்ப, தன் தோழிகளோடு விளையாடிக் கொண்டிருக்கிறாள். துள்ளி விளையாடும் தலைவியின் அழகில் மயங்கிய தலைவன் தோழனைப் பார்த்து,

"இவள் யார் உடம்போடு என் உயிர் புக்கவள்"

எனக் கேட்கிறான். தலைவன் காட்டிய தலைவியைப் பார்த்த தோழன், 'ஓஒ.. இவளா? தான் வளர்க்கும் காளையை  யார் அடக்குகிறார்களோ அவரே, என் மெய் தீண்ட  தகுதியானவர்கள். என்ற உறுதியோடு இருப்பவள்' எனக் கூறுகிறான். எத்தனைக் கேட்டு புன்முறுவல் செய்த தலைவன்,  " உடனே சென்று, அவள் சுற்றத்தாரை கண்டு, 'ஏறு தழுவும் விழாவிற்குப் பறை அறைக!' மேலும், திருமண நிகழ்வுக்கு ஆயத்தம் செய்ய சொல்" எனத் தோழனைப் பார்த்துக் கூறினான்.

  தலைவியின் பெற்றோரிடம் தலைவனின் கருத்தைக் கூறினான் தோழன். தலைவியின் பெற்றோர்களும், சுற்றத்தாரும் இணைந்து ஏறுதழுவதற்கு  தேவையான ஏற்பாடுகளை செய்தார்கள். அதன்படி, ஏறுதழுவும் இடத்தில்  பரண் அமைக்கப்பட்டது. ஏறு தழுவுதல் தொடங்கியது. தலைவி தனது சுற்றத்தாருடன் அதில் அமர்ந்து ஏறு தழுவுதலைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சீறிவரும் காளையினை காளையர்கள் பலர் எதிர்கொண்டு அடக்க முயன்றனர். அப்பொழுது,

எழுந்தது துகள்; ஏற்றனர் மார்பு

கவிழ்ந்தன மருப்பு; கலங்கினர் பலர்

அவர்களுள் தலைவன் மலர் மாலை அணிந்த மார்புடன் காளையின் முன் தோன்றி, சீறி வரும் காளையின் இமிலை  பிடித்து வளைத்து காளையினை அடக்கினான்.  இதனைப் பார்த்த தலைவியின் சுற்றத்தார் மகிழ்ந்து அதிசயத்து, " நேற்று நடந்த ஏறுதழுவுதலில் இந்தக் காளை ஒரு வீரனின் மார்பை குத்திப் பிளந்தது. அதனைத் தெரிந்திருந்தும் இக்காளையை அடக்கிய  இவனே உண்மையான வீரன்". என வீரனின் செயலை பாராட்டிக் கொண்டிருந்தார்கள். அதனைக் கண்டு,கேட்ட தலைவி நாணம் கலந்த புன்னகை  புரிந்தாள். தலைவனின் கண்ணில் நிறைந்தாள் தலைவி. அங்கு திருமண விழாவுக்கான  தண்ணுமை முரசு முழங்கியது.

     என ஏறு தழுவி தலைவியை தலைவன் அடைந்த செய்தியினை கலித்தொகையில்  சோழன் நல்லூருத்திரன் காட்சிப்படுத்தியுள்ளார்.

!!!! இராஜாலி!!!!


சனி, 10 பிப்ரவரி, 2024

சங்க இலக்கியங்கள் காட்டும் சமூகம்

 முன்னுரை

 சங்க காலத்தைத் தமிழகத்தின் பொற்காலமென இலக்கிய வரலாற்றாசிரியர்கள் இயம்புகின்றனர். தமிழ் மொழியும் தமிழர் வாழ்வும் அக்காலத்தில் மேலோங்கி இருந்தமையைச் சங்க நூல்கள் கொண்டு அறிகின்றோம். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய சங்க இலக்கியங்கள் தமிழ்ச் சமுதாயத்தை எவ்வாறு படம்பிடித்துக் காட்டுகின்றன என்பது குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

செல்வத்துப் பயனே ஈதல்


 ஒரு நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் வசதி படைத்தவர்களானவும்  எல்லாத் தேவைகளையும் எளிதில் நிறைவு செய்துகொள்ளும் ஆற்றல் பெற்றவர்களாகவும் இருந்தால், அந்நாட்டை முன்னேறிய நாடு என்று நாம் கூறலாம். சங்க காலத்தில் அத்தகையதொரு மேம்பட்ட வாழ்வை மக்கள் பெற்றிருந்தார்கள். பதிற்றுப்பத்து, புறநானூறு, பட்டினப்பாலை போன்ற நூல்கள் மக்களின் செல்வவளம் பற்றிப் பேசுகின்றன. பதிற்றுப்பத்து பாடிய புலவர்களுக்கு அரசர்கள் கொடுத்துள்ள பரிசுப் பொருட்களைப் பற்றி அறியும் போது ஆச்சரியம்அடைய வைக்கிறது. செல்வம் பெற்றவர்கள் அச்செல்வத்தைப் பிறருக்குப் பகிர்ந்தளித்தலை'அறம்' எனக் கருதினர்.

செல்வத்துப் பயனே ஈதல்

துய்ப்பே மெனினே தப்புந பலவே.

எனப் புறநானூறு குறிப்பிடுகின்றது. வள்ளலிடம் சென்று வளம் பெற்றவன் பெறாதானுக்கு அத்தகு வளம்பெறும் வழிமுறைகள் கூறிய பண்பாட்டிலக்கியங்களாக ஆற்றுப்படை இலக்கியங்கள் இலங்குகின்றன. சங்க காலத்தில் வறுமையாளர்களும் இருந்திருக்கிறார்கள்.ஆனால் தற்காலம் போலச் செல்வர்களால் அவர்கள் சுரண்டப்படவில்லை; மாறாகப் பழுமரம் தேடும் பறவைகள்போல வள்ளல்களை நாடி, புகழ்ந்து பாடி பெருவளம் பெற்றிருக்கிறார்கள்.

நாகரிக முதிர்ச்சி

    ஒருவருக்கு செல்வம் மட்டும் வாழ்வை நிறைவுடையதாக்கி விடாது. எல்லா வளமும் பெற்றுச் சீரோடும் சிறப்போடும் வாழும் வாழ்வைக் காட்டிலும் அறவழி மாறாத வாழ்வே விழுமிய வாழ்வாகச் சங்கஇலக்கியங்கள் சுட்டுகின்றன.

"கடுஞ்சினத்த கொல்களிறுங் கதழ்பரிய கலிமாவும்

நெடுங்கொடிய நிமிர்தேரும் நெஞ்சுடைய

புகல்மறவருமென

நான்குடன் மாண்ட தாயினும் மாண்ட

அறநெறி முதற்றே அரசின் கொற்றம்".

என அரசனுக்குரிய அறம் பேசப்பெறுகின்றது. நாடுகளுக்கிடையே இன்று போர் மூளுகின்றபோது ஈவு இரக்கமின்றி ஒன்றுமறியாத அப்பாவிகளும் கொல்லப்படுகின்றனர். ஆனால் இது அறத்தின் பாற்பட்டதன்று எனப் போர் மூளுவதற்கு முன்பாகப் பசுக்களையும் மனிதருள் சிலரையும் அப்புறப்படுத்தும் பணியை அன்றைய அரசர்கள் செய்திருக்கிறார்கள்!

"ஆவும் ஆனியல் பார்ப்பன மாக்களும்

பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்

தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்

பொன்போல் புதல்வர் பெறாஅ தீரும்

எம் அம்பு கடிவிடுதும் நும்அரண் சேர்மின்"            (புறம்.9)

எனப் போருக்கு முன் அரசன் பேசுவதாகப் புறம் எடுத்துரைக்கின்றது. இதையே நாகரிகச் சிறப்பாக மதுரையை எரிப்பதற்குமுன் கண்ணகி கூறும் உரையின் வாயிலாகச் சிலம்பும் சுட்டுகின்றது. உயிரைவிட மானம் பெரிதாகக் கருதப் பெற்றிருக்கின்றது.

       "இந்திரனின் அமிழ்தமே கிடைத்தாலும் அதனைப் பிறருக்குப் பகிர்ந்தளித்து உண்ணுபவர்களும், புகழுக்காக உயிரையும் கொடுக்கக் கூடியவர்களும் இந்த உலகமே பரிசாகக் கிடைக்கின்றதென்றாலும் பழியை உண்டாக்கும் செயல்களைச் செய்யாதவரும் இவ்வுலகில் வாழ்வதனால்தான் இவ்வுலகம் அழியாமல் உள்ளது" என்று கூறும் கடலுள் மாய்ந்த இளம்பெரும் வழுதியின் புறப்பாடல் சங்க காலத் தமிழர் நாகரிகத்திற்குக் கட்டியம் கூறி நிற்கின்றது.

"யாதும் ஊரே யாவரும் கேளிர்"

என்ற கணியன் பூங்குன்றனாரின் இந்த ஒரு வரியே போதும் தமிழரின் உலகளாவிய நாகரிகச் சிறப்பை எடுத்துரைக்க.

பெண்கள் முன்னேற்றம்

   இருபதாம் நூற்றாண்டில் பெண்கள் முன்னேற்றம் பற்றித் தனிப்படப் பேசவேண்டிய நிலையுள்ளது. ஏதோ ஒரு காலக்கட்டத்தில் அடிமையாக்கப்பட்டார்கள். ஆடவர்களின் போகப் பொருளாக்கப்பட்டார்கள். அந்த அடிச்சுவடு இன்றும் இருப்பதால்தான் பெண்ணடிமை தீர, பலர் இன்று பேசியும் எழுதியும் வருகின்றனர்.

செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும்

அறிவும் அருமையும் பெண்பா லான

எனப் பெண்மையை உயர்த்திக் காட்டுகிறார் தொல்காப்பியர்.

‘கிழவனும் கிழத்தியும்

சிறந்தது பயிறல் இறந்ததன் பயனே'

என்று அவர் குறிப்பிடுவதால் வீடுபேறு அடைவதற்குப் பெண்ணின் பங்கு சமபங்காகின்றது.

   தனக்கு நரை உண்டாகாமைக்குக் காரணம் கூறும் பிசிராந்தையார் தம் மனைவியும் மக்களும் அறிவு நிரம்பி இருந்தமையையும் ஒரு காரணமாகக் கூறுகின்றார். இத்தகைய பெண்களுக்கு இடைக்காலத்தில் ஏனோ "அடுப்பதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு" எனக் கல்வி மறுக்கப்பட்டிருக்கிறது. கல்வி நலம் சான்ற முப்பத்தோரு பெண்பாற் புலவர்களை "நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்" என்னும் நூலில் ரா. ராகவையங்கார் அவர்கள் சுட்டுகின்றார்கள். அகநானூறு காட்டும் தமிழர் திருமணத்தில், முன்னின்று திருமணத்தை நடத்தக்கூடியவர்கள் முதுமை நிறைந்த சுமங்கலிப் பெண்களே. அரசனுக்கும் அறிவுரை வழங்கிய ஒளவை என்னும் பெருமாட்டியைத் தாய்க்குலத்தின் பிரதிநிதியாகச் சங்க இலக்கியத்தில் கண்டு மகிழ்கிறோம்.

உழைப்பில் நாட்டம்


   'உழைத்து வாழவேண்டும்' என்னும் உயரிய உளப்பாங்கு கொண்டவராகச் சங்க காலத் தமிழர் திகழ்ந்தனர் என்பதை அறிந்து மகிழ்கிறோம். குறுக்கு வழியில் பெரிய மனிதராகிவிட வேண்டும் என எண்ணுகிற இக்காலத்தில், சங்க இலக்கியக் கருத்து புதுமையாகக்கூட தோன்றும். முன்னோர் தேடிவைத்த பொருளை நம்பி வாழாமல் தாமாக முயற்சி செய்து பொருள் தேடவேண்டும். 'உள்ளது சிதைப்போர் உளர் எனப் படாஅர்' என்னும் குறுந்தொகைக் கருத்தும்,'தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால்' என்னும் திருவள்ளு கருத்தும் ஈண்டு ஒப்பு நோக்கி மகிழத்தக்கன. தானே முயற்சி செய்து கட்டிய வீட்டில் தன் உழைப்பினால் வந்த உணவை உண்ணும் இன்பம் போன்றது தலைவியின் முயக்கம் எனத் தலைவன் பேசுவதாக இக்கருத்து திருக்குறளில் இடம் பெறுகின்றது.

வினையே ஆடவர்க்கு உயிரே வாணுதல்

மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்

என வரும் குறுந்தொகை, ஆடவர்களின் முயற்சியையும், பெண்டிரின் அன்பினையும் வெளிப்படுத்தி நிற்கின்றது. கால மாற்றத்தால் ஆடவர்க்குக் கூறப்பெற்ற பொருள் தேடும் முயற்சி இன்று பெண்களும் மேற்கொள்வதாயிற்று.

“இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு'

என்று முயலாதார் வாழ்வு எள்ளப்பட்டது.

உடல் உரமும், உள்ள உரமும்

  வீரமும், காதலும் இரு கண்களெனப் போற்றப் பெற்றிருக்கின்றன. அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும் என்பதால் கல்வி போற்றப் பெற்றது. வீரமும், புகழும், கொடையும் இன்ன பிறவும்'புறம்' என்று சங்க இலக்கியம் போற்றுகின்றது. அழகு. அறிவு, இளமை ஆகியவற்றால் ஒன்றுபட்ட ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் 'களவு', 'கற்பு' ஆகிய நிலைகள் 'அகம்' என்று பேசப்பட்டன. அகவாழ்வுக்கு இலக்கணம் கண்ட ஒரே மொழி நம் தமிழ்மொழிதான் என்று நாம் பெருமை அடையலாம். பிறர் அறிய முடியாத அதே வேளையில் உணரக்கூடிய நுண்ணிய உணர்வாகக் காதல் இருப்பதால் தான் சங்க இலக்கியங்களுள் அக இலக்கியங்களை மிகுதியும் காணுகின்றோம். மனிதனின் உள்ளத்தையும் உடலையும் உற்று நோக்குவது போல இந்த அகப்புறப் பாகுபாடு அமைந்து நலம் பயக்கின்றது எனலாம்.

பழக்க வழக்கங்கள்

   உப்புக்கு விலையாக நெல்லை வாங்குதலும், நடுகல் வழி பாடும், நடுவு நிலைமை தவறாமல் வாணிபம் செய்தலும், புலியின் பல்லைச் சிறுவர்களுக்குக் கழுத்தில் தாலியைப் போல் அணிவித்தலும், ஏறுதழுவுதலும், குரவைக் கூத்தாடுதலும், நெல்லையும், மலர்களையும் தூவி இறைவனை வழிபடுதலும், தன்மானத்திற்கு இழுக்கு வந்தால் வடக்கிருத்தலும், பிணத்தைத் தாழியில் இட்டு புதைத்தலும், தழையாடை அணிந்து கொள்ளலும், நற்சொல் கேட்டலும் ஏதேனும் ஒரு பயன் கருதிச் சகுனம் பார்த்தலும், கொற்றவையை வழிபடுதலும், காதலித்த பெண்ணை பெற்றோர் திருமணம் செய்து தர மறுக்கும் போது காதலன் எருக்கம்பூ மாலையணிந்து மடலூர்தலும் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் தமிழர்களின் எண்ணற்ற பழக்க வழக்கங்களுள் ஒரு சிலவாம்.  ஆலமரத்தடியில் 'நாலூர் கோசர் என்பவர்களால் நீதிவழங்கப்பெற்றது. (குறுந்தொகை 15 ஒளவையார்) கல்வி கற்கும் மாணவர்கள் ஊர் மக்களிடத்தில் உணவைப் பெற்றுக் கல்வியில் நாட்டம் செலுத்தினர் படிப்பவர்களுக்கு முடிந்த உதவியைச் செய்யும் பண்பு அன்றே இருந்தமையை இது காட்டுகின்றது. விருந்தோம்புதல் ஓர் உயரியபண்பாக மதிக்கப் பட்டது.

அரசியல் சிறப்பு

    சங்க காலத்தில் மன்னராட்சி நடைபெற்றதென்றாலும், அதனுள், தற்கால மக்களாட்சிக் கூறுபாடுகளும் இருந்தமையை அறிகின்றோம்.'ஐம்பெருங்குழு', 'எண்பேராயம்' என்னும் குழுக்களை மதுரைக்காஞ்சி முதலான நூல்கள் பேசுகின்றன. இவைகள் மன்னர்கள் விரும்பியபோது அவர்களுக்கு அறிவுரை வழங்க அமைக்கப்பட்டவை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஐம்பெருங் குழுவில் அமைச்சர்,புரோகிதர், தானைத் தலைவர், தூதுவர், ஒற்றர் போன்றோரும், எண்பேராயத்தில் கரணத் தலைவர், கருமகாரர், கனகச் சுற்றம், கடைகாப்பாளர், நகர மாந்தர், படைத்தலைவர், யானைவீரர், இவுளிமறவர் போன்றோரும் இடம்பெற்றனர். அரசியலை விரிவாகப் பேசும் திருக்குறளில் இத்தகைய குழுக்கள் பற்றிய செய்திகள் இல்லை. படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு அரண் ஆகிய ஆறும் அரசர்களுக்கு இன்றியமையாதன என்னும் கருத்து இடம் பெறுகிறது. மக்களுக்கு நீதி வழங்குவதற்காக அறங்கூறு அவையம்' இருந்தது. உறையூரில் இருந்த அறங்கூறு அவையத்தைப் புறநானூறும் (39), நற்றிணையும் (400) குறிப்பிடுகின்றன.

  அரசர்களுக்கு இன்றியமையாத வருவாயாக நிலவரி, உல்கு(சுங்கவரி) சிற்றரசர்கள் தரும் திறைப்பணம் ஆகியவை பேசப்படுகின்றது.'காசு,' 'காணம்', 'பொன்' ஆகிய சொற்கள் தற்காலத்தில் நாம் வழங்கும் 'பணம்' என்னும் சொல்லுக்கு மாற்றாக வழங்கியிருக்கின்றன. ஆங்கிலத்தில் 'cash' என்று கூறுவது 'காசு' என்று கூறுவதிலிருந்து வந்திருக்கலாம். மதுரையிலும், புகாரிலும் பல மொழிகள் பேசும் பன்னாட்டு மக்களும் கலந்து இனிதிருக்க வாணிபம் நடைபெற்றதாக பட்டினப்பாலையிலும், மதுரைக்காஞ்சியிலும், வருவதால் அமைதியான அரசியல் அன்று நிலவியமை கண்கூடு, ஆயினும் மன்னர்களுக்கிடையே மூண்ட போர்களைப் பற்றியும் அறிகின்றோமென்றாலும், மக்களைப் போர்காலத் துன்பத்தினின்றும் விடுவிப்பதற்காக 'இடித்துரைக்கும்' கோவூர்கிழார் போன்றோரை அறியும்போது அமைதி பெறுகிறோம்.

முடிவுரை

     சங்க இலக்கியம் ஆழங்காண முடியாத கருத்துக் கடல். சங்க இலக்கியம் தமிழர் தம் சொத்து. நமது ஒளி படைத்த வாழ்வை உலகுக்கு உணர்த்திக் கொண்டே இருக்கும் கருத்துப் பேழை. என்பதை சங்க இலக்கியம் கற்ற சான்றோர்கள் உணர்த்துகின்றனர்.

**** நன்றி! - சமூகவியல் நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு ****


பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

 முன்னுரை

    தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க இலக்கியங்களுக்குப் பின்னர் இடம்பெறுவது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களாகும். இவற்றை சங்கமருவிய கால இலக்கியங்கள் எனவும்  வழங்குவர். கி.பி 470 இல் வச்சிர நந்தி என்னும் சமண முனிவர்    'திராவிட சங்கம்' என்ற ஒன்றை நிறுவினார். இச்சங்கத்து நூற்களே பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அவ்விலக்கியங்கள் எவை என்பதை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்


 கணக்கு என்பது நூலைக் குறிக்கும் சொல்லாகும். அடிவரையறையை கருதி மேற்கணக்கு எனவும் கீழ்க்கணக்கு எனவும் வகைப்படுத்தினர். மேற்கணக்கு என்பது  சங்க இலக்கியங்களையும், கீழ்க்கணக்கு என்பது சங்கம் மருவிய காலத்து இலக்கியங்களையும் குறிப்பதாகும்.

    சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் 18.அவை பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகிறது. அவ்விலக்கியங்கள் எவை என்பதை,

 "நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப்

 பால்கடுகம் கோவை பழமொழி -  மாமூலம்

 இன்னிலைசொல் காஞ்சியோடு ஏலாதி என்பவே

 கைநிலைய வாம்கீழ்க் கணக்கு"

என பழைய வெண்பா கூறுகின்றது. குறிப்பாக, திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி, ஆசாரக்கோவை, முதுமொழிக்காஞ்சி, பழமொழி, கார் நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, தினை மாலை நூற்றைம்பது, திணைமொழி ஐம்பது, கைநிலை, களவழி நாற்பது ஆகிய 18 நூல்களும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களாகும்.

     இவற்றில் அறம் சார்ந்த நூல்கள் பதினொன்றும், அகம் சார்ந்த நூல்கள் ஆறும், புறம் சார்ந்த நூல் ஒன்றும் காணப்படுகின்றது.

அறம் சார்ந்த நூல்கள் - அற இலக்கியங்கள்

 பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அறக்கருத்துகளை கூறும் நூல்களாக பதினோரு நூல்கள் காணப்படுகின்றன. அவை,

1. திருக்குறள்,            2. நாலடியார்,       3. நான்மணிக்கடிகை

4. இன்னா நாற்பது,  5. இனியவை நாற்பது, 6. திரிகடுகம்

7. சிறுபஞ்சமூலம்,     8. ஏலாதி,            9. ஆசாரக்கோவை,

10. முதுமொழிக்காஞ்சி, 11. பழமொழி

 என்பனவாகும்.

1.  திருக்குறள்

     முப்பால், உத்தர வேதம், தெய்வ நூல், பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ்மறை, பொதுமறை என்றெல்லாம் சான்றோர்களால் புகழப்படும் திருக்குறள், தெய்வப்புலவர் திருவள்ளுவரால் இயற்றப்பட்டதாகும்.

   அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று பால்களும்,133 அதிகாரங்களும், அதிகாரங்களுக்கு பத்து பாடல்கள் வீதம் 1330 குறட்பாக்களைக் கொண்டது. அறத்துப்பாலில் 38 அதிகாரங்களும், பொருட்பாலில் 70 அதிகாரங்களும், இன்பத்துப்பாலில் 25 அதிகாரங்களும் காணப்படுகின்றன.

   திருவள்ளுவர், கி.மு முதல் நூற்றாண்டினர் எனவும், கிறிஸ்துவுக்கு முப்பது வருடங்களுக்கு முற்பட்டவர் எனவும்  ஆய்வாளர்கள் கருதுகின்றனர். உலக மொழிகளில்  பைபிளுக்கு அடுத்தபடியாக அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள் ஆகும். இந்நூல், எச்சமயத்தார்க்கும், எந்நாட்டவர்க்கும், எக்காலத்தவர்க்கும்  பொதுவான பொது மறையாகும். அற வாழ்வியல் இன்பத்தை பொருள்படக் கூறும் இந்நூல் தமிழர்களின் அறக்கடலாக விளங்குகிறது.    

   திருக்குறளின் சிறப்பை எடுத்தோத "திருவள்ளுவ மாலை" எனும் தனிநூலே எழுந்தது போல் வேறு எந்த நூலுக்கும் எழுந்தது இல்லை. பத்துக்கும் மேற்பட்டோர் உரை எழுதிய சிறப்பு திருக்குறளைத் தவிர்த்து  வேறு எந்த நூலுக்கும் இல்லை. திருக்குறளின் சிறப்பினை மனோன்மணியம் சுந்தரனார்,

 "வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்

 உள்ளுவாரோ மனுவாதி  ஒரு குலத்துக்கு ஒரு நீதி "

 எனக் கூறுவதில் இருந்து திருக்குறள் சமுதாய நலனில் அக்கறை கொண்ட தமிழ்மறை என வரையறுத்துக் கூறலாம்.

2.  நாலடியார்

   திருக்குறளைப் போன்றே நாலடியாரும் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பகுப்புகளைக் கொண்டது. 400 பாடல்கள் கொண்ட இந்நூல் 'நாலடி நானூறு' எனவும் வழங்கப்படுகிறது. நானூறு சமண முனிவர்கள் பாடிய பாடலின் தொகுப்பாக இந்நூல் காணப்படுகிறது. இந்நூலைத் தொகுத்தவர் பதுமனார் என்னும் சமணத் துறவி ஆவார். இது கி. பி எட்டாம் நூற்றாண்டு இலக்கியம் என அறிஞர்கள் கருதுகின்றார்கள்.

    'வேளாண் வேதம்' எனச் சான்றோர்களால் அழைக்கப்படும் இந்நூலில் பெருமையை உணர்ந்து ஜி. யு. போப் அவர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். 'நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி' எனத் திருக்குறளோடு இணைத்துக் கூறுவதன் மூலம் திருக்குறளுக்கு இணையான சிறப்புக் கொண்டதாக நாலடியார் விளங்குகிறது என்பதனை அறியலாம்.

3. நான்மணிக் கடிகை

    நான்மணிக்கடிகையை இயற்றியவர் விளம்பி நாகனார்  ஆவார். 101  வெண்பாக்களைக் கொண்ட இந்நூல், ஒவ்வொரு பாடலிலும் மணி போன்ற நான்கு நீதி கருத்துக்கள் காணப்படுவதால் இப்பெயர் பெற்றது.

4. இன்னா நாற்பது

      இவ்வுலகில் துன்பம் தருவன இவை இவை என ஒவ்வொரு பாடலுக்கும் நான்கு இன்னாதவைகளை கூறுவதாக 40 பாடல்களைக் கொண்டது இன்னா நாற்பதாகும். இதனை இயற்றியவர் கபிலர் ஆவார்.

5. இனியவை நாற்பது

   பூதஞ்சேந்தனார் என்பவரால் பாடப்பட்ட இந்நூலில் 41 பாடல்கள் காணப்படுகின்றன. இவ்வுலகில் இன்பம் தருவன  எவை என்பதை பற்றி எடுத்துக் கூறியுள்ளார்.

6. திரிகடுகம்

      சுக்கு,மிளகு,திப்பிலி என்னும் மூன்று மருந்துகளால் ஆனது திரிகடுகம் எனப்படும். அதுபோல்  ஒவ்வொரு பாடலிலும் மூன்று உறுதிப் பொருட்களைக் கொண்டுள்ளதால் இந்நூல் திரிகடுகம் என அழைக்கப்படுகிறது.101 பாடல்களைக் கொண்ட இன்நூலை நல்லாதனார் பாடியுள்ளார்.

7. சிறுபஞ்சமூலம்

    கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறு மல்லி, பெருமல்லி, நெருஞ்சில் ஆகிய ஐந்து வேர்கள் சிறுபஞ்சமூலம் எனப்படும். இது நோய்க்கு மருந்தாவது போல மனிதர்களின் அக நோயினைப் போக்கும் ஐந்து ஐந்து கருத்துகளைக் கூறுவதாக ஒவ்வொரு பாடலும் காணப்படுவதால் சிறுபஞ்சமூலம் எனப்பட்டது. இதன் ஆசிரியர் காரியாசான் என்பவர் ஆவார். இதில் 102 பாடல்கள் காணப்படுகின்றன.

8. ஏலாதி

  கணிமேதாவியார் என்பவரால் எழுதப்பட்ட ஏலாதி 80 பாடல்களைக் கொண்டதாகும். ஏலம், இலவங்கப்பட்டை, சிறு நாவற்பூ, மிளகு, சுக்கு, திப்பிலி ஆகிய ஆறும் கலந்த மருந்து ஏலாதி  எனப்படும். இது நோய்க்கு மருந்தாவது போல மனிதர்களின் அக நோயினைப் போக்கும் ஆறு ஆறு  கருத்துகளைக் கூறுவதாக ஒவ்வொரு பாடலும் காணப்படுவதால் இது ஏலாதி எனப்பட்டது.

9. ஆசாரக்கோவை

    ஆசாரம் என்றால் நல்ல முறையில் நடத்தல் என்று பொருள். உள்ளும் புறமும் தூய்மையுடமையே  ஆசாரமாகும். அவ்வகை ஆசாரத்தைப் பற்றி கூறுவது ஆசாரக்கோவை ஆகும்.100 பாடல்களைக் கொண்ட இந்நூலை பெருவாயின் முள்ளியார் பாடியுள்ளார்.

10. முதுமொழிக்காஞ்சி

    முதுமொழிக்காஞ்சியின் ஆசிரியர் மதுரைக் கூடலூர்கிழார் ஆவார். இந்நூல், பத்துப்பாக்களால் ஆகிய 10 அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரமும் 'ஆர்கலியுலகத்து' எனத் தொடங்கும். நீதி நூல்களில் இஃதொன்றே சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் தன்மை கொண்டதாக காணப்படுகிறது.

11.  பழமொழி

      தொல்காப்பியர் கூறும் 'முதுசொல்' என்பது பழமொழியைக் குறிக்கும். 400 பாடல்களைக் கொண்ட பழமொழி நானூறு எனவும் கூறுவர். முன்றுரை அரையனாரால் பாடப்பட்ட ஒவ்வொரு பாடலிலும் ஒரு பழமொழி பயின்று வருகிறது. இந்நூல், திருக்குறள்  நாலடியார் போன்று அறம் கூறும் நூலாக விளங்குகிறது.

      மேற்கண்ட பதினோரு நூல்களும்  அறக்கருத்துக்களைக் கூறும் நூல்களாக பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில்  காணப்படுகின்றது. 

அகம் சார்ந்த நூல்கள் - அக நூல்கள்

     பதினெண் கீழ்க்கணக்கு நூற்களில் அகக்  கருத்துக்களைக் கூறும் நூல்களாக ஆறு நூல்கள் காணப்படுகின்றன. அவை,

1. கார் நாற்பது,  2. ஐந்திணை ஐம்பது,  3. ஐந்திணை எழுபது,

4.திணைமாலை 150, 5. திணைமொழி ஐம்பது, 6. கைந்நிலை

 என்பனவாகும்.

12. கார் நாற்பது

    மதுரை கண்ணன் கூத்தனார் என்பவரால் பாடப்பட்ட, கார் நாற்பது என்னும் இந்நூல், முல்லைத் திணையின் பெரும்பொழுதான கார்காலத்தில், முல்லை நிலத் தலைவியின் ஒழுக்கத்தினை கூறுவதாக அமைந்துள்ளது. இதில் அகக்கருத்துக்களைக் கூறும் 40 பாடல்கள் காணப்படுகின்றன.

13. ஐந்திணை ஐம்பது

 மாறன் பொறையனார் என்பவரால் பாடப்பட்ட ஐந்திணை ஐம்பது, ஐந்து திணைகளுக்கும் திணைகளுக்கு பத்து பாடல்கள் வீதம் 50 பாடல்களைக் கொண்டதாகும்.

14. ஐந்திணை எழுபது

   மூவாதியார் என்னும் புலவரால் பாடப்பட்ட ஐந்திணை எழுபது, ஐந்து திணைகளுக்கும் திணைகளுக்கு 14 பாடல்கள் வீதம் 70 பாடல்களைக் கொண்டதாகும்.

15. திணை மாலை 150

 திணை மாலை நூற்றிறைம்பதை பாடியவர் கணிமேதாவியா ராவார். ஐந்து திணைகளுக்கும் உரிய 153 பாடல்கள் இதில் காணப்படுகின்றன.

16. திணைமொழி ஐம்பது

 கண்ணன் சேந்தனார் என்பவரால் பாடப்பட்ட திணைமொழி ஐம்பதில் 50 அகப்பொருள் பாடல்கள் காணப்படுகின்றன.

17. கைந்நிலை

 புல்லங்காடனார் என்பவரால் பாடப்பட்டது கைந்நிலையாகும். இதில் ஐந்து திணைகளுக்கும் பாடல்கள் காணப்படுகின்றன. திணைக்கு 12 பாடல்கள் வீதம் 60 பாடல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

 மேற்கண்ட ஆறு நூல்களும் அகத்திணை சார்ந்த  நூல்களாக பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் இடம்பெற்றுள்ளது.

புறம் சார்ந்த நூல்

  பதினெண்கீழ்க்கணக்கு நூற்களில் புறப்பொருளைக் கூறும் புறம் சார்ந்த நூலாக களவழி நாற்பது என்ற நூல் மட்டும் காணப்படுகின்றது.

18. களவழி நாற்பது

   களவழி நாற்பதில்    புறக்கருத்துகளை கூறும் 40 பாடல்கள் காணப்படுகின்றன. இதன் ஆசிரியர் பொய்கையார் ஆவார். இந்நூல் சோழன் செங்கணான்  என்னும் மன்னன், கழுமலம் என்னும் இடத்தில் சேரமான் கணைக்கால் இரும்பொறை என்னும் மன்னனை போரிட்டு வென்ற செய்தியைக் கூறுவதாக அமைந்துள்ளது.

முடிவுரை

    சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் 11 அற நூல்களும், 6 அகநூல்களும், ஒரு புறநூலும் காணப்படுகின்றது. இவை அனைத்தும் அக்கால மக்களின் வாழ்வியல் அற அக ஒழுக்கங்களை எடுத்துக் கூறுவனவாக விளங்குகின்றன.

!!!! இராஜாலி!!!!

யுனிக்கோட் - பயன்பாடு

அறிமுகம்    ஆங்கில மொழியைத் தவிர பிறமொழிகளிலும் பலரும் பல்வேறு குறியேற்றங்களையும் எழுத்துருக்களையும் பயன்படுத்தி வந்தனர். இந்த முறையில் ஒரே ...