எனது வலைப்பதிவு பட்டியல்

சனி, 10 பிப்ரவரி, 2024

சங்க இலக்கியங்கள் காட்டும் சமூகம்

 முன்னுரை

 சங்க காலத்தைத் தமிழகத்தின் பொற்காலமென இலக்கிய வரலாற்றாசிரியர்கள் இயம்புகின்றனர். தமிழ் மொழியும் தமிழர் வாழ்வும் அக்காலத்தில் மேலோங்கி இருந்தமையைச் சங்க நூல்கள் கொண்டு அறிகின்றோம். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய சங்க இலக்கியங்கள் தமிழ்ச் சமுதாயத்தை எவ்வாறு படம்பிடித்துக் காட்டுகின்றன என்பது குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

செல்வத்துப் பயனே ஈதல்


 ஒரு நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் வசதி படைத்தவர்களானவும்  எல்லாத் தேவைகளையும் எளிதில் நிறைவு செய்துகொள்ளும் ஆற்றல் பெற்றவர்களாகவும் இருந்தால், அந்நாட்டை முன்னேறிய நாடு என்று நாம் கூறலாம். சங்க காலத்தில் அத்தகையதொரு மேம்பட்ட வாழ்வை மக்கள் பெற்றிருந்தார்கள். பதிற்றுப்பத்து, புறநானூறு, பட்டினப்பாலை போன்ற நூல்கள் மக்களின் செல்வவளம் பற்றிப் பேசுகின்றன. பதிற்றுப்பத்து பாடிய புலவர்களுக்கு அரசர்கள் கொடுத்துள்ள பரிசுப் பொருட்களைப் பற்றி அறியும் போது ஆச்சரியம்அடைய வைக்கிறது. செல்வம் பெற்றவர்கள் அச்செல்வத்தைப் பிறருக்குப் பகிர்ந்தளித்தலை'அறம்' எனக் கருதினர்.

செல்வத்துப் பயனே ஈதல்

துய்ப்பே மெனினே தப்புந பலவே.

எனப் புறநானூறு குறிப்பிடுகின்றது. வள்ளலிடம் சென்று வளம் பெற்றவன் பெறாதானுக்கு அத்தகு வளம்பெறும் வழிமுறைகள் கூறிய பண்பாட்டிலக்கியங்களாக ஆற்றுப்படை இலக்கியங்கள் இலங்குகின்றன. சங்க காலத்தில் வறுமையாளர்களும் இருந்திருக்கிறார்கள்.ஆனால் தற்காலம் போலச் செல்வர்களால் அவர்கள் சுரண்டப்படவில்லை; மாறாகப் பழுமரம் தேடும் பறவைகள்போல வள்ளல்களை நாடி, புகழ்ந்து பாடி பெருவளம் பெற்றிருக்கிறார்கள்.

நாகரிக முதிர்ச்சி

    ஒருவருக்கு செல்வம் மட்டும் வாழ்வை நிறைவுடையதாக்கி விடாது. எல்லா வளமும் பெற்றுச் சீரோடும் சிறப்போடும் வாழும் வாழ்வைக் காட்டிலும் அறவழி மாறாத வாழ்வே விழுமிய வாழ்வாகச் சங்கஇலக்கியங்கள் சுட்டுகின்றன.

"கடுஞ்சினத்த கொல்களிறுங் கதழ்பரிய கலிமாவும்

நெடுங்கொடிய நிமிர்தேரும் நெஞ்சுடைய

புகல்மறவருமென

நான்குடன் மாண்ட தாயினும் மாண்ட

அறநெறி முதற்றே அரசின் கொற்றம்".

என அரசனுக்குரிய அறம் பேசப்பெறுகின்றது. நாடுகளுக்கிடையே இன்று போர் மூளுகின்றபோது ஈவு இரக்கமின்றி ஒன்றுமறியாத அப்பாவிகளும் கொல்லப்படுகின்றனர். ஆனால் இது அறத்தின் பாற்பட்டதன்று எனப் போர் மூளுவதற்கு முன்பாகப் பசுக்களையும் மனிதருள் சிலரையும் அப்புறப்படுத்தும் பணியை அன்றைய அரசர்கள் செய்திருக்கிறார்கள்!

"ஆவும் ஆனியல் பார்ப்பன மாக்களும்

பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்

தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்

பொன்போல் புதல்வர் பெறாஅ தீரும்

எம் அம்பு கடிவிடுதும் நும்அரண் சேர்மின்"            (புறம்.9)

எனப் போருக்கு முன் அரசன் பேசுவதாகப் புறம் எடுத்துரைக்கின்றது. இதையே நாகரிகச் சிறப்பாக மதுரையை எரிப்பதற்குமுன் கண்ணகி கூறும் உரையின் வாயிலாகச் சிலம்பும் சுட்டுகின்றது. உயிரைவிட மானம் பெரிதாகக் கருதப் பெற்றிருக்கின்றது.

       "இந்திரனின் அமிழ்தமே கிடைத்தாலும் அதனைப் பிறருக்குப் பகிர்ந்தளித்து உண்ணுபவர்களும், புகழுக்காக உயிரையும் கொடுக்கக் கூடியவர்களும் இந்த உலகமே பரிசாகக் கிடைக்கின்றதென்றாலும் பழியை உண்டாக்கும் செயல்களைச் செய்யாதவரும் இவ்வுலகில் வாழ்வதனால்தான் இவ்வுலகம் அழியாமல் உள்ளது" என்று கூறும் கடலுள் மாய்ந்த இளம்பெரும் வழுதியின் புறப்பாடல் சங்க காலத் தமிழர் நாகரிகத்திற்குக் கட்டியம் கூறி நிற்கின்றது.

"யாதும் ஊரே யாவரும் கேளிர்"

என்ற கணியன் பூங்குன்றனாரின் இந்த ஒரு வரியே போதும் தமிழரின் உலகளாவிய நாகரிகச் சிறப்பை எடுத்துரைக்க.

பெண்கள் முன்னேற்றம்

   இருபதாம் நூற்றாண்டில் பெண்கள் முன்னேற்றம் பற்றித் தனிப்படப் பேசவேண்டிய நிலையுள்ளது. ஏதோ ஒரு காலக்கட்டத்தில் அடிமையாக்கப்பட்டார்கள். ஆடவர்களின் போகப் பொருளாக்கப்பட்டார்கள். அந்த அடிச்சுவடு இன்றும் இருப்பதால்தான் பெண்ணடிமை தீர, பலர் இன்று பேசியும் எழுதியும் வருகின்றனர்.

செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும்

அறிவும் அருமையும் பெண்பா லான

எனப் பெண்மையை உயர்த்திக் காட்டுகிறார் தொல்காப்பியர்.

‘கிழவனும் கிழத்தியும்

சிறந்தது பயிறல் இறந்ததன் பயனே'

என்று அவர் குறிப்பிடுவதால் வீடுபேறு அடைவதற்குப் பெண்ணின் பங்கு சமபங்காகின்றது.

   தனக்கு நரை உண்டாகாமைக்குக் காரணம் கூறும் பிசிராந்தையார் தம் மனைவியும் மக்களும் அறிவு நிரம்பி இருந்தமையையும் ஒரு காரணமாகக் கூறுகின்றார். இத்தகைய பெண்களுக்கு இடைக்காலத்தில் ஏனோ "அடுப்பதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு" எனக் கல்வி மறுக்கப்பட்டிருக்கிறது. கல்வி நலம் சான்ற முப்பத்தோரு பெண்பாற் புலவர்களை "நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்" என்னும் நூலில் ரா. ராகவையங்கார் அவர்கள் சுட்டுகின்றார்கள். அகநானூறு காட்டும் தமிழர் திருமணத்தில், முன்னின்று திருமணத்தை நடத்தக்கூடியவர்கள் முதுமை நிறைந்த சுமங்கலிப் பெண்களே. அரசனுக்கும் அறிவுரை வழங்கிய ஒளவை என்னும் பெருமாட்டியைத் தாய்க்குலத்தின் பிரதிநிதியாகச் சங்க இலக்கியத்தில் கண்டு மகிழ்கிறோம்.

உழைப்பில் நாட்டம்


   'உழைத்து வாழவேண்டும்' என்னும் உயரிய உளப்பாங்கு கொண்டவராகச் சங்க காலத் தமிழர் திகழ்ந்தனர் என்பதை அறிந்து மகிழ்கிறோம். குறுக்கு வழியில் பெரிய மனிதராகிவிட வேண்டும் என எண்ணுகிற இக்காலத்தில், சங்க இலக்கியக் கருத்து புதுமையாகக்கூட தோன்றும். முன்னோர் தேடிவைத்த பொருளை நம்பி வாழாமல் தாமாக முயற்சி செய்து பொருள் தேடவேண்டும். 'உள்ளது சிதைப்போர் உளர் எனப் படாஅர்' என்னும் குறுந்தொகைக் கருத்தும்,'தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால்' என்னும் திருவள்ளு கருத்தும் ஈண்டு ஒப்பு நோக்கி மகிழத்தக்கன. தானே முயற்சி செய்து கட்டிய வீட்டில் தன் உழைப்பினால் வந்த உணவை உண்ணும் இன்பம் போன்றது தலைவியின் முயக்கம் எனத் தலைவன் பேசுவதாக இக்கருத்து திருக்குறளில் இடம் பெறுகின்றது.

வினையே ஆடவர்க்கு உயிரே வாணுதல்

மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்

என வரும் குறுந்தொகை, ஆடவர்களின் முயற்சியையும், பெண்டிரின் அன்பினையும் வெளிப்படுத்தி நிற்கின்றது. கால மாற்றத்தால் ஆடவர்க்குக் கூறப்பெற்ற பொருள் தேடும் முயற்சி இன்று பெண்களும் மேற்கொள்வதாயிற்று.

“இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு'

என்று முயலாதார் வாழ்வு எள்ளப்பட்டது.

உடல் உரமும், உள்ள உரமும்

  வீரமும், காதலும் இரு கண்களெனப் போற்றப் பெற்றிருக்கின்றன. அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும் என்பதால் கல்வி போற்றப் பெற்றது. வீரமும், புகழும், கொடையும் இன்ன பிறவும்'புறம்' என்று சங்க இலக்கியம் போற்றுகின்றது. அழகு. அறிவு, இளமை ஆகியவற்றால் ஒன்றுபட்ட ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் 'களவு', 'கற்பு' ஆகிய நிலைகள் 'அகம்' என்று பேசப்பட்டன. அகவாழ்வுக்கு இலக்கணம் கண்ட ஒரே மொழி நம் தமிழ்மொழிதான் என்று நாம் பெருமை அடையலாம். பிறர் அறிய முடியாத அதே வேளையில் உணரக்கூடிய நுண்ணிய உணர்வாகக் காதல் இருப்பதால் தான் சங்க இலக்கியங்களுள் அக இலக்கியங்களை மிகுதியும் காணுகின்றோம். மனிதனின் உள்ளத்தையும் உடலையும் உற்று நோக்குவது போல இந்த அகப்புறப் பாகுபாடு அமைந்து நலம் பயக்கின்றது எனலாம்.

பழக்க வழக்கங்கள்

   உப்புக்கு விலையாக நெல்லை வாங்குதலும், நடுகல் வழி பாடும், நடுவு நிலைமை தவறாமல் வாணிபம் செய்தலும், புலியின் பல்லைச் சிறுவர்களுக்குக் கழுத்தில் தாலியைப் போல் அணிவித்தலும், ஏறுதழுவுதலும், குரவைக் கூத்தாடுதலும், நெல்லையும், மலர்களையும் தூவி இறைவனை வழிபடுதலும், தன்மானத்திற்கு இழுக்கு வந்தால் வடக்கிருத்தலும், பிணத்தைத் தாழியில் இட்டு புதைத்தலும், தழையாடை அணிந்து கொள்ளலும், நற்சொல் கேட்டலும் ஏதேனும் ஒரு பயன் கருதிச் சகுனம் பார்த்தலும், கொற்றவையை வழிபடுதலும், காதலித்த பெண்ணை பெற்றோர் திருமணம் செய்து தர மறுக்கும் போது காதலன் எருக்கம்பூ மாலையணிந்து மடலூர்தலும் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் தமிழர்களின் எண்ணற்ற பழக்க வழக்கங்களுள் ஒரு சிலவாம்.  ஆலமரத்தடியில் 'நாலூர் கோசர் என்பவர்களால் நீதிவழங்கப்பெற்றது. (குறுந்தொகை 15 ஒளவையார்) கல்வி கற்கும் மாணவர்கள் ஊர் மக்களிடத்தில் உணவைப் பெற்றுக் கல்வியில் நாட்டம் செலுத்தினர் படிப்பவர்களுக்கு முடிந்த உதவியைச் செய்யும் பண்பு அன்றே இருந்தமையை இது காட்டுகின்றது. விருந்தோம்புதல் ஓர் உயரியபண்பாக மதிக்கப் பட்டது.

அரசியல் சிறப்பு

    சங்க காலத்தில் மன்னராட்சி நடைபெற்றதென்றாலும், அதனுள், தற்கால மக்களாட்சிக் கூறுபாடுகளும் இருந்தமையை அறிகின்றோம்.'ஐம்பெருங்குழு', 'எண்பேராயம்' என்னும் குழுக்களை மதுரைக்காஞ்சி முதலான நூல்கள் பேசுகின்றன. இவைகள் மன்னர்கள் விரும்பியபோது அவர்களுக்கு அறிவுரை வழங்க அமைக்கப்பட்டவை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஐம்பெருங் குழுவில் அமைச்சர்,புரோகிதர், தானைத் தலைவர், தூதுவர், ஒற்றர் போன்றோரும், எண்பேராயத்தில் கரணத் தலைவர், கருமகாரர், கனகச் சுற்றம், கடைகாப்பாளர், நகர மாந்தர், படைத்தலைவர், யானைவீரர், இவுளிமறவர் போன்றோரும் இடம்பெற்றனர். அரசியலை விரிவாகப் பேசும் திருக்குறளில் இத்தகைய குழுக்கள் பற்றிய செய்திகள் இல்லை. படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு அரண் ஆகிய ஆறும் அரசர்களுக்கு இன்றியமையாதன என்னும் கருத்து இடம் பெறுகிறது. மக்களுக்கு நீதி வழங்குவதற்காக அறங்கூறு அவையம்' இருந்தது. உறையூரில் இருந்த அறங்கூறு அவையத்தைப் புறநானூறும் (39), நற்றிணையும் (400) குறிப்பிடுகின்றன.

  அரசர்களுக்கு இன்றியமையாத வருவாயாக நிலவரி, உல்கு(சுங்கவரி) சிற்றரசர்கள் தரும் திறைப்பணம் ஆகியவை பேசப்படுகின்றது.'காசு,' 'காணம்', 'பொன்' ஆகிய சொற்கள் தற்காலத்தில் நாம் வழங்கும் 'பணம்' என்னும் சொல்லுக்கு மாற்றாக வழங்கியிருக்கின்றன. ஆங்கிலத்தில் 'cash' என்று கூறுவது 'காசு' என்று கூறுவதிலிருந்து வந்திருக்கலாம். மதுரையிலும், புகாரிலும் பல மொழிகள் பேசும் பன்னாட்டு மக்களும் கலந்து இனிதிருக்க வாணிபம் நடைபெற்றதாக பட்டினப்பாலையிலும், மதுரைக்காஞ்சியிலும், வருவதால் அமைதியான அரசியல் அன்று நிலவியமை கண்கூடு, ஆயினும் மன்னர்களுக்கிடையே மூண்ட போர்களைப் பற்றியும் அறிகின்றோமென்றாலும், மக்களைப் போர்காலத் துன்பத்தினின்றும் விடுவிப்பதற்காக 'இடித்துரைக்கும்' கோவூர்கிழார் போன்றோரை அறியும்போது அமைதி பெறுகிறோம்.

முடிவுரை

     சங்க இலக்கியம் ஆழங்காண முடியாத கருத்துக் கடல். சங்க இலக்கியம் தமிழர் தம் சொத்து. நமது ஒளி படைத்த வாழ்வை உலகுக்கு உணர்த்திக் கொண்டே இருக்கும் கருத்துப் பேழை. என்பதை சங்க இலக்கியம் கற்ற சான்றோர்கள் உணர்த்துகின்றனர்.

**** நன்றி! - சமூகவியல் நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு ****


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யுனிக்கோட் - பயன்பாடு

அறிமுகம்    ஆங்கில மொழியைத் தவிர பிறமொழிகளிலும் பலரும் பல்வேறு குறியேற்றங்களையும் எழுத்துருக்களையும் பயன்படுத்தி வந்தனர். இந்த முறையில் ஒரே ...