எனது வலைப்பதிவு பட்டியல்

திங்கள், 20 ஜனவரி, 2025

யுனிக்கோட் - பயன்பாடு

அறிமுகம்


   ஆங்கில மொழியைத் தவிர பிறமொழிகளிலும் பலரும் பல்வேறு குறியேற்றங்களையும் எழுத்துருக்களையும் பயன்படுத்தி வந்தனர். இந்த முறையில் ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளை மட்டுமே கையாள முடிந்தது. இத்தகைய சிக்கலைத் தீர்த்து, பல மொழிகளை ஒரே நேரத்தில் கையாளத் தேவையான ஒரு குறியேற்ற முறையை அமைக்க உலக அளவில் மென்பொருள் உருவாக்கும் நிறுவனங்கள் ஒன்றிணைந்து உலகின் அனைத்து மொழிகளையும் கணினியில் பயன்படுத்தும் வகையில் ஒரு குறியேற்றத்தை உருவாக்க முடிவுசெய்தது. இம்முடிவின் விளைவாக 1991இல் ஒருங்குறிச் சேர்த்தியம் (Unicode Consortium) என்ற கூட்டமைப்பிளை உருவாக்கினர். இதன்வழி உருவாக்கப்பட்டது தான் Universal Code எனப்படும் யுனிக்கோட் ஒருங்குறி ஆகும்.

யுனிக்கோட் - செயல்பாடு 

          இந்த ஒருங்குறிச் சேர்த்தியம் 16 பிட்டு அமைப்பு கொண்ட யுனிகோடு (Unicode) என்னும் குறியேற்றத்தை வடிவமைத்தது. இந்தக் குறியேற்ற அமைப்பில் 65,536 இடங்கள் உள்ளன. இம்முறை உலக மொழிகள் அத்தனைக்கும் தேவையான  இடங்களைக்  கொண்டிருந்தது.  ஒருங்குறிச் சேர்த்தியம் இந்திய மொழிகள் ஒவ்வொன்றுக்கும் 128 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்த பட்டியலைக் கொடுத்தது. அதில் தமிழுக்கும் 128 இடங்களே ஒருங்குறியில் ஒதுக்கப்பட்டு  இருந்தது.

       குறிப்பாக, 16Bit குறியேற்றத்தில் உள்ள 65,536 இடங்களில் தமிழ் எழுத்துகள் 2944 முதல் 3071 வரை உள்ளன.  இந்த 128 இடங்களிலும் 50 இடங்கள் காலியாக உள்ளன.

          இதில் உயிர் எழுத்துகள் 12, அகரம் ஏறிய மெய்யெழுத்துகள் 18 ஆகிய 30 எழுத்துகள் உள்ளன. இவற்றைக் கொண்டு உயிர்மெய் எழுத்துகளை உருவாக்கிக்கொள்ளவேண்டும். தமிழில் உள்ள எல்லா எழுத்துகளுக்கும் தனித்தனி இடங்கள் இல்லாததால் இரண்டு எழுத்துகளைக் கொண்டு மூன்றாவது எழுத்தை உருவாக்க வேண்டியுள்ளது. இதற்குத்தான் இடையூக்கி மென்பொருள்கள் உதவுகின்றன. 

    2000ஆம் ஆண்டு Microsoft நிறுவனம் தான் வெளியிட்ட Windows 2000 என்ற இயங்குதளத்தில் தமிழைப் பயன்படுத்துவதற்கு ஒருங்குறியில் உருவாக்கப்பட்ட Latha என்ற எழுத்துருவைச் சேர்த்து வழங்கியது. இன்றளவும் விண்டோஸ் இயங்குதளங்களில் யுனிகோடு குறியேற்றத்தில் தட்டச்சு செய்ய இயல்பிருப்பாக (Default) லதா எழுத்துருதான் பயன்படுத்தப்படுகிறது. இணையதளங்கள் முழுமையும் இந்த யுனிக்கோடு முறையில் லதா எழுத்துருவில் இருக்கிறது.

   யுனிக்கோடு தமிழ்க் குறியேற்றத்தில் உயிர் எழுத்துகள்(12), அகரமேறிய மெய் எழுத்துகள்(18), ஆய்தம்(1) ஆக 31 எழுத்துகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. எனவே பிற உயிர்மெய் எழுத்துகளை உள்ளிடுவதற்குத் தனியொரு மென்பொருள் தேவைப்படுகிறது. இதனைத் தவிர்க்கத் தமிழில் உள்ள 247 எழுத்துகளையும் தமிழ் எண்களையும் கிரந்த எழுத்துகளையும் சேர்த்து 313 இடங்களைக் கொண்டதாகத் தமிழ் அனைத்து எழுத்துக் குறியேற்றம் (Tamil All Character Encoding-TACE) என்ற ஒன்றினை 16பிட் குறியேற்றத்தில் கொண்டுவருவதற்காக உருவாக்கப்பட்டது. இதன் காரணமாக  தற்போது  தமிழுக்கான அனைத்து எழுத்துகளுக்கும் யுனிக்கோடு குறியேற்றத்தில் இடம் கிடைத்துள்ளது.

யுனிக்கோட் - பயன்கள் 

   யுனிக்கோட் வருகையால் இணைய செயல்பாடுகள் புதிய வளர்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக,

#.உலக மொழிகளுக்கான பொதுவான எழுத்துக்கள் கிடைத்துள்ளன.

#. எடுத்துருக்களின் சிக்கலின்றிப் பயன்படும் பொது மொழியாக யுனிக்கோட் காணப்படுகிறது.

#.எல்லா இயங்கு தளங்களிலும் இயங்கக் கூடியதாக விளங்குகிறது.

#. முழுவதும் தமிழ் மொழியில் வடிவமைக்கப்பட்ட தமிழ் இயங்கு தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இவை போன்ற பயன்பாடுகள் யுனிக்கோட் வருகையால் தமிழ் இணையங்களில் ஏற்பட்டுள்ளது. 

தமிழ் யுனிக்கோட் - சிக்கல்கள் 

     தமிழ் மொழியில் யுனிக்கோடு எழுத்துக்களைப் பயன்படுத்தும் பொழுது சில சிக்கல்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக, விண்டோஸ் 98 போன்ற பழைய இயங்கு தளங்களில் பயன்படுத்துவதில் சிக்கல்கள் காணப்படுகின்றன. மேலும் சில அச்சு மென்பொருள்களிலும் யுனிக்கோட் பயன்பாடு ஏற்படுத்தப்படாமல் இருக்கிறது.

    இத்தகைய சிக்கல்களைத் தீர்ப்பதற்காக தமிழ் இணையப் பல்கலைக்கழகம், கணினித்தமிழ்ச் சங்கம், இன்ஃபிட் ஆகிய தொழில் நுட்ப உறுப்பினர்களை ஒன்றிணைத்துப் புதிய தமிழ்க் குறியீட்டு முறைக்கான பரிந்துரைகளையும், அதன் முறையில் உருவாக்கப்பட்ட சில எழுத்துருக்களையும் வெளியிட்டன. புதிய யூனிக்கோட் முறையில் சீர்திருத்தம் காண அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் மு.அனந்த கிருஷ்ணன் தலைமையில் பன்னாட்டு வல்லுநர்களைக் கொண்ட தரக்குழு அமைத்து அதற்கான அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டது.

    இக்குழுவின் முயற்சியால் புதிய யுனிக்கோட் எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், யுனிக்கோடி சர்வதேசக் கூட்டமைப்பான கன்சார்டியம் இக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று குறியீட்டு முறையில் சீர்திருத்தம் கொண்டு வர தயக்கம் காட்டுகிறது. எனினும் இத்தகைய சிக்கல்களைப் பொருட்படுத்தாமல் தமிழ் யுனிக் கோர்ட் பயன்பாடு சிறந்த நிலையில் காணப்படுகின்றது.

@ உதவி -கணினித் தமிழ் 

**** இராஜாலி****


சனி, 11 ஜனவரி, 2025

இணையதள மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள்

 அறிமுகம் 

    எந்தவொரு அமைப்பும் தோன்றுவதற்கு முன்னர் மாநாடுகளும் கருத்தரங்கங்களும் அவசியமாகின்றன. தமிழில் இணையத்தளங்கள் செம்மையுற அமைவதற்கு பல கருத்தரங்குகளும், மாநாடுகளும் நடத்தப்பட்டன. இவை அரசாலும், சில தனியார் அமைப்புகளாலும் நடத்தப்பட்டன.

முதல் தமிழ்க் கணினி கருத்தரங்கு

   'தமிழும் கணிப்பொறியும்' என்ற தலைப்பில் முதன் முதலில் கணினித்தமிழ் கருத்தரங்கு 1994-ஆம் ஆண்டு டிசம்பர் 5,6 தேதிகளில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கணிப்பொறித்துறைப் பேராசிரியர் வெ. கிருஷ்ணமூர்த்தியின் அவர்களின் முன் முயற்சியால் நடத்தப்பட்டது. இக்கருத்தரங்கில் முப்பதிற்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் படைக்கப்பட்டன.

   தமிழ் எழுத்துருக்கள், சொற் செயலிகள், கணினி கலைச் சொற்கள், மற்றும் விசைப்பலகையைத் தரப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இக்கருத்தரங்கு நடத்தப்பட்டன. இணையத்தமிழ் வரலாற்றில் இக்கருத்தரங்கம் ஒரு திருப்பமாக அமைந்தது.

முதல் உலகத் தமிழ் இணைய மாநாடு

   சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கை அடுத்து மூன்று ஆண்டுகள் கழித்து சிங்கப்பூரில் 'தமிழ் இணையம் 97' என்னும் பொருளில் முதல் தமிழ் இணைய மாநாடு 1997ஆம் ஆண்டு மே 17,18 தேதிகளில் நடைபெற்றது. சிங்கப்பூர் நாங்யாங் பல்கலைக்கழகப் பேராசிரியர் நா. கோவிந்தசாமியின் முன் முயற்சியால் இம்மாநாடு நடத்தப்பட்டது.

   இம்மாநாட்டில் தமிழகம், மலேசியா, இலங்கை, சிங்கப்பூர், ஐரோப்பா, அமெரிக்கா போன்ற பல நாடுகளிலிருந்து தமிழ் மென்பொருள் வல்லுநர்களும், கணினித்தமிழ் அறிஞர்களும் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில் இணையத்தளங்களில் தமிழ்ப் பொருண்மைகளை மிகைப்படுத்துதல், விசைப்பலகையைத் தரப்படுத்துதல், தமிழ் எழுத்துருக் குறியீட்டைத் தரப்படுத்துதல். போன்றவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இரண்டாவது உலகத் தமிழ் இணைய மாநாடு

      இரண்டாவது உலகத் தமிழ் இணைய மாநாடு தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் தலைமையில்  1999-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7,8 தேதிகளில் 'தமிழ்' இணையம் 99' (Tamil Net 99) என்னும் தலைப்பில் நடத்தப்பட்டது.

   இம்மாநாட்டில் விசைப்பலகைத் தரப்பாடு தொடர்பாகவும், எழுத்துரு தொடர்பாகவும் வழங்கப்பட்ட கருத்தாய்வுகளைத் தொகுத்து ஒருங்கிணைப்பு செய்ய இரு குழுக்கள் அமைக்கப்பட்டன.

   உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து அறிஞர்கள் கலந்துகொண்ட இம்மாநாட்டில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது.

1. இம்மாநாட்டின் மூலமாக ஒரே தமிழ் எழுத்துமுறையாக 'டாம்' (TAM) வகையும், ஆங்கில தமிழ் கலப்பு எழுத்துரு முறையாக ‘டாப்' (TAB) வகையும் அறிமுகப்படுத்தப்பட்டன.

2. தமிழ் மென்பொருள் ஆராய்ச்சி மானியக்குழு ஒன்று அமைப்பதற்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

3 உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களுக்காக இணையம் வாயிலாக உலகத் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் (Tamil Virtual University) ஒன்றை நிருவுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இன்று இப்பல்கலைக்கழகம் 'tamilvu.org' என்ற பெயரில் பல்வேறு வளர்ச்சி பெற்று இயங்கிவருகிறது.

    இம்மாநாடு தமிழ் இணைய வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்தது.மூன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாடு -2000

மூன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாடு 

  மூன்றாவது உலக தமிழ் இணைய மாநாடு  சிங்கப்பூரில் நடைபெற்றது. சிங்கப்புர் தேசயப் பல்கலைக்கழகப் பேராசிரியர் அருண் மகிழ்நன் ஒருங்கிணைப்பில் இம்மாநாடு 2000- ஆம் ஆண்டு ஜீலை மாதம் 22,23,24- ஆகிய நாட்களில் 'தமிழ் இணையம் 2000' எனும் தலைப்பில் நடைபெற்றது. இம்மாநாட்டில் 'உத்தமம்' உலகத்தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் என்று தமிழிலும் INFIT International Firum for Information Technology in Tamil என்று ஆங்கிலத்திலும் குழுவொன்று உருவாக்கப்பட்டது. -

   உத்தமம் குழு உருவான பின்னர் பல்வேறு ஆய்வுப் பணிக்குழுக்கள் உருவாக்கப்பட்டன. அவை, தமிழ் கலைச்சொல் தொகுப்பு, யூனிகோடு தமிழ் ஆய்வு, இணையத்தள தமிழ் முகவரி வடிவமைத்தல், தமிழ் வரிவடிவக் குறியீட்டுத் தரப்பாடு, ஆங்கில வரிவடிவத் தமிழ்த் தரப்பாடு, தமிழ் எழுத்துரு படித்தறிதல் (Tamil OCR), லீக்னஸில் தமிழ் (Tamil in Linux), தமிழ் அனைத்து எழுதுதுரு 16-பிட்டு தரம் போன்ற ஆய்வுகளை நடத்தி வருகின்றன.

    இக்குழுவில் உலகம் முழுவதிலும் வாழும் பல்வேறு தமிழ் கணினி வல்லுநர்கள் ஒன்றிணைந்தனர். இக்குழு மூலமே இனிவரும் காலங்களில் உலக இணையத் தமிழ் மாநாடுகள் நடத்தப்படும் என்று முடிவெடுக்கப்பட்டன.

நான்காவது உலகத் தமிழ் இணைய மாநாடு

    நான்காம் உலகத் தமிழ் இணைய மாநாடு 2001-ஆம் ஆண் ஆகஸ்டு மாதம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள் உலக வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இம்மாந 'வளர்ச்சிக்கான வழிகள்' எனும் கருப்பொருளை மையமா கொண்டு நடத்தப்பட்டது.

    இம்மாநாட்டில் 'தமிழ் மரபு அறக்கட்டளை' (Tamil Heritage Foundation) என்னும் அமைப்பு ஜெர்மனி பேராசிரியர் நா. கண்ணன் தலைமையில் துவக்கப்பட்டது. இவ்வமைப்பிற்கு அந்நாட்டு பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோ சாமுவேல் அவர்கள் 10000 அமெரிக்கா டாலர் நிதியை வழங்கினார். சர்வதேச அளவில் நூற்றுக்கணக்கான அறிஞர்கள் கலந்துகொண்ட இம்மாநாட்டில் சுமார் ஐம்பது ஆராய்ச்சிக் கட்டுரைகள் படைக்கப்பட்டன.

ஐந்தாம் உலகத் தமிழ் இணைய மாநாடு 

    ஐந்தாம் உலகத் தமிழ் இணைய மாநாடு அமெரிக்காவில் கலிபோர்னியாவில் 2002-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27,28,29ஆகிய தேதிகளில் நடைபெற்றது. 'மின் இணையப் பயன்பாட்டில் மக்களிடையே நிலவும் இடைவெளியை குறைத்தல்' - ‘Briging the Digital divide' என்னும் கருப்பொருளை மையமாகக் கொண்டு இம்மாநாடு நடைபெற்றது.

   இம்மாநாட்டில் தமிழ்த்தகவல் தொழில்நுட்பக் கண்காட்சி உள்ளிட்ட பல பணித்திட்டங்கள் ஆய்வ செய்யப்பட்டதுடன், தமிழ் யூனிகோடு குழும உறுப்பினர்களோடு கலந்தாய்வு, உலக அளவில் நடத்தப்பட்ட இணையதள வடிவமைப்புப் போட்டி ஆகியன இடம் பெற்றன.

   இம்மாநாட்டில் தான் திரு. மணி மணிவண்ணன் முயற்சியால் ‘உத்தமம்' அமெரிக்காவில் ஒரு பதிவுபெற்ற அமைப்பாக பதிவு செய்யப்பட்டது. மேலும் இம்மாநாட்டில் மின்னஞ்சல் இணையத்தளங்கள் வழி தகவல் பரிமாற்றம், பல்லூடக அடிப்படையில் இணையவழிக் கல்வி, இணையவழி நூலகம், மின்-ஆளுமை போன்ற தலைப்புகளில் விவாதங்கள் நடைபெற்றன.

ஆறாவது உலகத் தமிழ் இணைய மாநாடு

    ஆறாவது உலகத் தமிழ் இணைய மாநாடு 2003-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22,23,24- ஆம் தேதகளில் 'தமிழ்க் கல்விக்குத் தகவல் தொழில்நுட்பம்' என்னும் தலைப்பில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

ஏழாவது உலகத் தமிழ் இணைய மாநாடு 

     ஏழாவது உலகத் தமிழ் இணைய மாநாடு சிங்கப்பூரில் 2004-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11,12-ஆம் தேதிகளில் நடைபெற்றது. 'நாளைய தமிழ்த் தகவல் தொழில்நுட்பம் -Tamil IT for Tomorrow' என்னும் கருப்பொருளில் நடைபெற்றது.

எட்டாம் உலகத் தமிழ் இணைய மாநாடு

     2009-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23,24,25 ஆகிய தேதிகளில் எட்டாம் உலகத் தமிழ் இணைய மாநாடு ஜெர்மனியில் உள்ள கொலோன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இம்மாநாடு 'கணினிவழிக் காண்போம் தமிழ்' என்னும் மையப்பொருளில் நடைபெற்றது. இணையவழிக் கல்வி மொழிப் பகுப்பாய்வு, தமிழ்த்தரவுகள், மின்னகராதிகள் ஆகிய பொருண்மையில் கட்டுரைகள் படிக்கப்பட்டன.

ஒன்பதாவது உலகத் தமிழ் இணைய மாநாடு

 தமிழ்மொழி செம்மொழியென மத்திய அரசால்  அறிவிக்கப்பட்டதைக் கொண்டாடும் விழாவாக உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோயம்புத்தூரில் 2010- ஆம் ஆண்டு ஜீன் மாதம் 23-27 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட்டது. உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு நாட்டு தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்ட இம்மாநாட்டோடு இணைந்து ஒன்பதாவது உலகத் தமிழ் இணைய மாநாடு 'இணையம் வளர்க்கும் தமிழ்' என்னும் கருப்பொருளில் நடத்தப்பட்டது.

  இம்மாநாட்டில் இணையவழித் தமிழ்க் கற்றல்-கற்பித்தல், கணினிவழி மொழியியல் ஆய்வுகள், சொற்திருத்திகள், பேச்சு மற்றும் சொற்பகுப்பு ஆய்வுகள், எழுத்து உணரி செயற்பாடுகள், கையடக்க கருவிகளில் தமிழ், தமிழ் ஒருங்குறி போன்ற தலைப்பினை ஒட்டி பல்வேறு கட்டுரைகள் படிக்கப்பட்டன. இம்மாநாட்டில் தமிழ் ஒருங்குறி (Unicode)யே இனி அரசின் அதிகாரப்பூர்வமான எழுத்துருவாக பயன்படுத்தப்படும் என் அறிவிக்கப்பட்டது.

பத்தாவது உலகத் தமிழ் இணைய மாநாடு

   உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி ஒன்பதாவது உலகத் தமிழ் இணைய மாநாடு நடைபெற்றது. அதற்கு அடுத்து பத்தாவது உலகத் தமிழ் இணைய மாநாட்டினை உத்தமம் அமைப்பு 2011 ஜீன் மாதம் 17முதல்19-ஆம் தேதிவரை அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியாப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஹெராய்டு ஷிஃப்மேன் மற்றும் முனைவர் அரங்கநாதன் முன்னின்று நடத்தினர்.

பதினொன்றாம் உலகத் தமிழ் இணைய மாநாடு

  2012 ஆம் ஆண்டு, தமிழகத்தின் சிறப்புமிக்க நகரமான சிதம்பரத்தில் பதினொன்றாம் உலகத் தமிழ் இணைய மாநாடு நடைபெற்றது. 

பன்னிரண்டாவது உலகத் தமிழ் கணினி மாநாடு

       2013 ஆம் ஆண்டு, மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் பன்னிரண்டாவது உலகத் தமிழ் கணினி மாநாடு  நடைபெற்றது. 

 பதிமூன்றாவது  தமிழ் இணைய மாநாடு

   2014 ஆம் ஆண்டு, புதுச்சேரியில் 13வது தமிழ் இணைய மாநாடு நடைபெற்றது. 

 பதினான்காவது  தமிழ் இணைய மாநாடு

    2015 ஆம் ஆண்டு, சிங்கப்பூரில்  14ஆவது தமிழ் இணைய மாநாடு நடைபெற்றது. 

பதினைந்தாவது தமிழ் இணைய மாநாடு

   2016 ஆம் ஆண்டு, தமிழ்நாட்டின் திண்டுக்கல்லில் காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில்  பதினைந்தாவது தமிழ் இணைய மாநாடு நடைபெற்றது. 

பதினாறாவது தமிழ் இணைய மாநாடு

    2017 ஆம் ஆண்டு, கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள ரொரண்டோ பல்கலைக்கழகத்தில் பதினாறாவது தமிழ் இணைய மாநாடு  நடைபெற்றது. இந்த மாநாடு, தமிழ் இணைய உலகில் ஆழக்கற்றல் (Deep Learning) தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது.

 பதினேழாவது  தமிழ் இணைய மாநாடு

     2018 ஆம் ஆண்டு, தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 17 ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு  நடைபெற்றது. இந்த மாநாடு, தமிழ் இணைய உலகில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் தொழில்நுட்பங்களின் பயன்பாடுகளை மையமாகக் கொண்டது.

பதினெட்டாவது உலகத் தமிழ் இணைய மாநாடு

    2019 ஆம் ஆண்டு, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் 18-வது உலகத் தமிழ் இணைய மாநாடு  நடைபெற்றது. இந்த மாநாடு, தமிழ் இணைய உலகில் தானியங்கிக் கருவிகளில் தமிழ் மொழிப் பயன்பாடு (Tamil Robotics and Language Processing) என்ற மையக் கருத்தை மையமாகக் கொண்டது.

 பத்தொன்பதாவது தமிழ் இணைய மாநாடு 

     2020 ஆம் ஆண்டு, கொரோனா பெருந்தொற்று காரணமாக  முதல் முறையாக முழுமையாக இணைய வழியாகவே 19-வது உலகத் தமிழ் இணைய மாநாடு நடைபெற்றது.

 இருபதாவது தமிழ் இணைய மாநாடு

    2021 ஆம் ஆண்டு, கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையின் போதும் இணைய வழியாகவே 20-வது உலகத் தமிழ் இணைய மாநாடு நடைபெற்றது.

 இருபத்தி ஒன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாடு

   2022 ஆம் ஆண்டு, தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் இணைந்து 21-வது உலகத் தமிழ் இணைய மாநாட்டை நடத்தியது. 

   ஒவ்வொரு நாளும் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும் அறிவியல் துறைகளில் ஒன்று இணையதள அறிவியலாகும். எனவே, அறிஞர்கள் இவை போன்ற மாநாடுகளையும் கருத்தரங்குகளையும் நடத்தி இணைய வளர்ச்சியின் அடுத்த கட்ட பயன்பாட்டை நோக்கி ஆய்வு செய்து கொண்டே இருக்கிறார்கள்.

****** இராஜாலி ******

ஊழின் பெருவலி யாவுள? - வள்ளுவர்

முன்னுரை இலக்கியங்கள் பழக்கவழக்கங்களையும், நம்பிக்கைகளையும் மனிதனின் பண்பாட்டையும்,பிரதிபலிக்கும் களங்களாக விளங்குகின்றன. பேரிலக்கியங்கள் அற...