எனது வலைப்பதிவு பட்டியல்

திங்கள், 11 செப்டம்பர், 2023

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்

முன்னுரை

       விஷ்ணுவை (திருமால்) முழுமுதல் கடவுளாகக் கொண்ட சமய நெறி வைஷ்ணவம். இதனைத் தமிழில் வைணவம் என்பர். முழுமையாக வைஷ்ணவத்தை வளர்த்துத் தமிழையும் வளர்த்தவர்கள் பன்னிரு ஆழ்வார்களே ஆவர். இவர்கள் இயற்றிய நூல்களின் தொகுப்பு நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் ஆகும். திவ்வியப் பிரபந்தம் என்பதற்குத் தெய்வீக எழில் நிறைந்த சிற்றிலக்கியம் என்பது பொருள். திவ்வியப் பிரபந்தம் ஆழ்வார்களின் இனிய பாசுரங்களின் தொகுப்பு. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தைத் தொகுத்தவர் நாதமுனிகள் என்பவர் ஆவார். அத்தகைய நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தினை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

 நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் பாடல் வைப்பு முறை 


நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்   பாடிய ஆழ்வார்கள்

    நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தைப் பாடியவர்கள் பன்னிரு ஆழ்வார்கள் ஆவார்கள்.

முதல் ஆழ்வார்கள் 

  பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவரும் முதலாழ்வார்கள் எனப்படுகின்றனர்.

1. பொய்கையாழ்வார்

  காஞ்சிபுரத்தில், தாமரைப் பொய்கையில் தோன்றியதால் பொய்கையாழ்வார் எனும் பெயர் பெற்றார். இவரது பாடல்கள் முதல் திருவந்தாதி எனப்படுகின்றன. இதில் 100 பாடல்கள் காணப்படுகின்றன.இப்பாடல்கள் அந்தாதித் தொடையிலும் நேரிசை வெண்பா யாப்பிலும் அமைந்தவை. இவை மூன்றாவது ஆயிரத்தில் இடம்பெற்றுள்ளன. 

2. பூதத்தாழ்வார்

   மாமல்லபுரத்தில் பிறந்தவர். பூதம் என்னும் சொல்லைக் கையாண்டு கவிபாடியதால் பூதத்தாழ்வார் எனும் பெயர் பெற்றார். இவரது பாடல்கள் 2ஆம்திருவந்தாதி ஆகும். இதில் 100 பாடல்கள் காணப்படுகின்றன. இவை ஞானத்தமிழ்ப் பாடல்கள். அந்தாதித் தொடையிலும் வெண்பா யாப்பிலும் அமைந்தவை. இது மூன்றாவது ஆயிரத்தில் இடம் பெற்றுள்ளது.  

3. பேயாழ்வார்

  இவர் மயிலாப்பூரில் பிறந்தவர். இறைவன்மீது பேய் கொண்டாற் போல அன்பு பூண்டு பாடல்களைப் பாடியதால், பேயாழ்வார் என்று பெயர் பெற்றவர். இவரது பாடல்கள் மூன்றாம் திருவந்தாதி எனப்படுகின்றன. இதில் 100 பாடல்கள் காணப்படுகின்றன. இது மூன்றாவது ஆயிரத்தில் இடம் பெற்றுள்ளது. 

 இம்மூவரும் முதல் ஆழ்வார்கள் என்று வைணவ சமயத்தவர்களால் அழைக்கப்படுகின்றனர். இவர்களின் காலம் கி.பி ஆறாம் நூற்றாண்டு ஆகும்.

4. திருமழிசை ஆழ்வார்

 இவர் திருமழிசைப் பிரான். பக்திசாரர் என்றும் அழைக்கப்படுகிறார். திருமழிசையில் பிறந்தவர். திருமாலின் சுதர்சன சக்கர அம்சமாகப் பிறந்தவர் என்பர். இவர் பாடிய திருச்சந்த விருத்தம் முதல் ஆயிரத்தில் இடம் பெற்றுள்ளது. மேலும் இவர் பாடிய, திரு விருத்தம், திருவாசியகம், நான்முகன் திருவந்தாதி போன்றவை மூன்றாவது ஆயிரத்தில் இடம் பெற்றுள்ளது. சைவத்திற்குத் திருமூலர் போன்று வைணவத்திற்குத் திருமழிசையாழ்வார் திகழ்ந்தார். இவரது காலம் கி.பி. 7ஆம் நூற்றாண்டு ஆகும்.

5.பெரியாழ்வார்

 திருவில்லிபுத்தூரில் தோன்றிய அந்தண மரபினர். கருடனின்அம்சமாகப் பிறந்தவர். விஷ்ணுசித்தன் என்பது இயற்பெயர். பட்டர்பிரான் என்று வைணவர்கள் போற்றுவர். ஆண்டாளின் வளர்ப்புத் தந்தை. ஆழ்வார்களுள் பெரியவர் என்னும் கருத்தில் பெரியாழ்வார் எனப்படுகிறார். இவரது காலம் கி.பி. 9ஆம் நூற்றாண்டு ஆகும். இவர் பாடிய திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி ஆகிய இரண்டும் முதலாவது ஆயிரத்தில் இடம் பெற்றுள்ளது. பிற்காலத்திய பிள்ளைத்தமிழ் இலக்கிய வகைக்கு முன்மாதிரியாக இவருடைய பாடல்கள் அமைந்துள்ளன.

6.ஆண்டாள்

 இவரது காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு திருவில்லிபுத்தூரில் துளசிச்செடியின் அடியில் கண்டெடுக்கப்பட்டவர். பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள். நிலமகளின் அம்சம். சூடிக்கொடுத்த சுடர்க்கொடி, சூடிக்கொடுத்த நாச்சியார், ஆண்டாள் என அழைக்கப்படுகிறார். தந்தை பெரியாழ்வார் திருமாலுக்குத் தொடுத்து வைத்த மாலையைத் தம் சூடி மகிழ்ந்தவர், ஆண்டவனையே கணவனாகப் பெற்று ஆண்டாள் ஆனார் ஆண்டாளின் பாசுரங்கள் திருப்பாவை, நாச்சியார் திருமொழி எனப்படுகின்றன. இவை முதலாம் ஆயிரத்தில் இடம் பெற்றுள்ளன. திருப்பாவை 30 பாசுரங்களை உடையது.

7.திருமங்கையாழ்வார்

    இவர் சோழநாட்டுத் திருக்குறையூரில் திருமாலின் வில்லின் அம்சமாகப் பிறந்தவர். இயற்பெயர் நீலன். சோழனின் தளபதியாக. பல வெற்றி கண்டு. பரகாலன் என்னும் பட்டம் பெற்றவர். சோழன் இவரைத் 'திருமங்கை' என்னும் நாட்டுக்கு அரசனாக்கினான். அதனால் இவர் மங்கை வேந்தன் என்றும் கலியன் என்றும் அழைக்கப்படுகிறார். இவரது காலம் கி.பி. 9ஆம் நூற்றாண்டு ஆகும். இவர் 1253 பாசுரங்களைப் பாடியுள்ளார். அவை பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழு கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல் எனப்படுகின்றன. இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் இரண்டாம் ஆயிரத்தில் இடம் பெற்றுள்ளது.

8.குலசேகராழ்வார்

   இவர் சேர மன்னர். திருவஞ்சைக்களத்தில் பிறந்தவர். திருமாலின் கௌத்துவ மணியின் அம்சமாகப் போற்றப்படுகிறார். இவரது காலம் கி.பி.9-ஆம் நூற்றாண்டு. குலசேகரர் இராம பக்தியில் திளைத்தவர். குலசேகராழ்வார் தமிழிலும் வடமொழியிலும் தேர்ந்த புலமை வாய்ந்தவர். இவரது 105 தமிழ்ப் பாசுரங்களும் 'பெருமாள் திருமொழி' என்று கூறப்படுகின்றன. இது முதல் ஆயிரத்தில் இடம்பெற்றுள்ளது.

9.தொண்டரடிப்பொடியாழ்வார்

   இவர் கி.பி.9-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். திருமாலின் வனமாலை அம்சமாகத் தோன்றியவர். இவரது இயற்பெயர் விப்ரநாராயணன். தொண்டரடிப் பொடி ஆழ்வார் என்று போற்றப்படுகிறார். இவர் 55 பாசுரங்களைப் பாடியுள்ளார். அவை திருமாலை, திருப்பள்ளி எழுச்சி என்னும் இரு சிற்றிலக்கியங்களாக உள்ளன. இவை முதல் ஆயிரத்தில் இடம்பெற்றுள்ளது.

10.திருப்பாணாழ்வார்

      இவர் உறையூரில் பிறந்தவர். திருமாலின் ஸ்ரீவத்சம் என்னும் மச்சத்தின் அம்சமாகப் பிறந்தவர். தாழ்ந்த இனத்தில் பிறந்தமையால் திருவரங்கக் கோயிலுள் செல்லாது, காவிரி ஆற்றின் தென்கரையில் நின்று பெருமானைப் புகழ்ந்து பாடிவழிபட்டார். திருப்பாணாழ்வாரைத் தோளில் சுமந்து தம் சந்நிதிக்கு அழைத்து வருமாறு பணித்தார். பெருமான் மீது 'அமலாதிபிரான்' எனத் தொடங்கும் 10 பாசுரங்களைப் பாடினார். இது முதல் ஆயிரத்தில் இடம் பெற்றுள்ளது.

11.நம்மாழ்வார்

  திருவரங்கப்பெருமானால் 'நம் சடகோபன்' என்று அழைக்கப்பட்டவர்.எனவே வைணவர்கள் இவரை நம்மாழ்வார் என்று உரிமையுடன் போற்றுகின்றனர். இவர் மாறன், பராங்குசன், காரிமாறன், தமிழ்மாறன்,வகுளாபரணன் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறார். இவர் கி.பி.9ஆம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டிலுள்ள ஆழ்வார்திருநகரி என்னும் திருக்குருகூரில் பிறந்தவர். இவர் திருமாலின் அம்சமாகக் கருதப்படுகிறார். ஆழ்வார்களுள் இவரே முதன்மையானவர். நம்மாழ்வாரை 'வேதம் தமிழ் செய்த மாறன்' என்று போற்றுகின்றனர். நம்மாழ்வார் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்னும் 4 பிரபந்தங்களைப் பாடியுள்ளார். இவற்றில் 1298 பாசுரங்கள் உள்ளன. ஆழ்வார்களுள் இவரே மிகுதியான பாசுரங்களைப் பாடியுள்ளார். நான்காம் ஆயிரத்தில் இடம்பெற்றுள்ளது.

12. மதுரகவியாழ்வார்

  இவர் கி.பி.9-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். ஆழ்வார் திருநகரியை அடுத்த திருக்கோளூரில் கருடன் அம்சமாகப் பிறந்தவர். செவிக்கு இனிமையாக. மதுரமாகப் பாட வல்லவர் என்பதால் மதுரகவி ஆழ்வார் எனப்பட்டார். நம்மாழ்வாரின் மாணவர். இவர் நம்மாழ்வாரைத் தெய்வமாகக் கருதிப் போற்றியவர். அவரைப் புகழ்ந்து 14 பாசுரங்களைப் பாடினார். அவை 'கண்ணி நுண் சிறுத்தாம்பு' என்று கூறப்படுகின்றன. இது முதலாம் ஆயிரத்தில் இடம்பெற்றுள்ளது. 

முடிவுரை 

  இவ்வாறு பன்னிரு ஆழ்வார்கள் திருமால் மீது பக்தி பாசுரங்களை பாடி பரவசப்படுத்தியதோடு, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பேருதவிபுரிந்தனர். என்பதை இக்கட்டுரையின் மூலம் அறியலாம்.

***** இராஜாலி *****

செவ்வாய், 5 செப்டம்பர், 2023

திருக்குறள் - அறன் வலியுறுத்தல்

 நூல் குறிப்பு

       உலகப் பொதுமறை எனப் போற்றப்படும் திருக்குறள் முதலாம் நூற்றாண்டில் தெய்வப்புலவர் திருவள்ளுவரால் இயற்றப்பட்டதாகும். அறத்துப்பால் பொருட்பால் இன்பத்துப்பால் என்ற மூன்று பிரிவுகளைக் கொண்ட இந்நூல் 133 அதிகாரங்களையும் அதிகாரங்களுக்கு பத்து பாடல் வீதம் 1330 பாடல்களையும் கொண்டதாகும். முப்பால், உத்தர வேதம், தெய்வ நூல், பொய்யா மொழி  என பலவாறு அழைக்கப்படும் திருக்குறள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

அறன் வலியுறுத்துதல்

    அறத்துப்பாலில் நான்காவது அதிகாரமாக விளங்குவது அறன் வலியுறுத்துதல் என்னும் அதிகாரமாகும். இதில் வாழ்வியல் அறங்கள் எவை என்பதையும் அவற்றின் பயன்களையும் வள்ளுவர் வகைப்படுத்தி பின்வருமாறு  கூறியுள்ளார்.
  • அறம் என்னும் நற்பண்பு ஒருவருக்கு சிறப்பையும் கொடுக்கும். செல்வத்தையும் கொடுக்கும். அத்தகைய உயர்ந்த அறத்தை விட நன்மை தருவது இவ்வுலகத்தில் வேறு ஒன்றும் கிடையாது.
  • ஒருவருடைய வாழ்க்கைக்கு அறத்தை போன்று நன்மை விளைவிக்கும் செயல்கள் வேறு இல்லை. அத்தகைய அறத்தை போற்றி காக்காமல் மறந்து போவதை போல தீமையான செயல் வேறொன்றும் இல்லை.
  • ஒருவர் தம்மால் முடிந்தவரை இடைவிடாமல் எல்லா இடங்களிலும் அறச்செயல்களை செய்வதற்கு முற்பட வேண்டும்.
  • ஒருவர் மனதளவில் குற்றமற்றவராக இருந்தால் அதுவே அறமாகக் கருதப்படும். மற்றவை எல்லாம் வெற்று ஆரவாரமாக கொள்ளப்படும்.என்பதை,
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற. - என வள்ளுவர் கூறுகிறார்.
  • பொதுவாக, பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொற்கள் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடம் கொடுக்காமல் வாழ்வதே உயர்ந்த அறமாகக் கருதப்படும்.என்பதை,
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். 
- என அறம் என்பது எது என விவரித்துக் கூறியுள்ளார்.
  • அறச்செயல்களை செய்வதற்கு நாட்களைக் கடத்த கூடாது. முதுமையில் அறங்களை செய்யலாம் என  எண்ணாமல் இப்பொழுது அறத்தை மேற்கொள்ள வேண்டும். அதுவே முதுமையில் நமக்கு துணையாக நிற்கும்.
  • அறச்செயலை மேற்கொள்பவர்கள் பல்லாக்கின் மேலிருந்து பயணிப்பவர்கள் போன்றவர்கள். மற்றவர்கள் பல்லாக்கை தூக்கிச் செல்பவர்கள்  போன்றவர்கள். அறச்செயலை செய்பவர்கள் எப்பொழுதும் அமைதியான நிலையில் காணப்படுவார்கள். மற்றவர்கள் மன அமைதியற்ற நிலையில் இருப்பார்கள்.
  • ஒருவன் நாள் தவறாமல் நற்செயல்களைப் புரிவான் எனில் அச்செயல்கள் அவனுக்கு மறுபிறவி கொடுக்கும் பாதையை அடைக்கும் கல்லாக இருந்து மறுபிறவி இல்லாமல் காக்கும்.
  • அறத்தின் வழியில் வாழ்வதால் கிடைப்பது இன்பமாகும். மற்றவை இன்பமாகாது.என்பதை,
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல. - என உறுதியாகக் கூறுகிறார்.
  • ஒருவன் தன் வாழ்நாளில் முயற்சி செய்து செய்ய வேண்டியது அறச்செயல்களே ஆகும். விட்டுவிட வேண்டியது தீய செயல்களே.

என அறன்வலியுறுத்துதல் என்னும் அதிகாரத்தில் அறத்தின் மேன்மைகளை  திருவள்ளுவர் எடுத்துக்கூறியுள்ளார்.

**** இராஜாலி****

ஊழின் பெருவலி யாவுள? - வள்ளுவர்

முன்னுரை இலக்கியங்கள் பழக்கவழக்கங்களையும், நம்பிக்கைகளையும் மனிதனின் பண்பாட்டையும்,பிரதிபலிக்கும் களங்களாக விளங்குகின்றன. பேரிலக்கியங்கள் அற...