எனது வலைப்பதிவு பட்டியல்

ஞாயிறு, 13 ஜூலை, 2025

திணை வாழ்வியல்

  

 ஐந்திணைகள்

 சங்க கால மக்கள் இயற்கையோடு இணைந்த வாழ்வியல் முறைகளை அமைத்துக் கொண்டார்கள். அவர்கள் வாழ்ந்த இயற்கை சூழ்நிலைக்கு ஏற்ப நிலங்களைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்தாக வகுத்துக் கொண்டார்கள். காலத்தை பெரும்பொழுது, சிறுபொழுது என இரண்டாகப் பகுத்துக் கொண்டனர். இவ் ஐந்து நிலங்களில் காணப்படும் இயற்கைச் சூழல், உயிரியல் நிலைப்பாடுகள், பயன்பாட்டுப் பொருட்கள் இவற்றை அடிப்படையாகக் கொண்டு கருப்பொருட்களை வகுத்துக் கொண்டனர்.

     குறிஞ்சி என்பது மலையும் மலை சார்ந்த இடமும் ஆகும். இங்கு வாழ்ந்த மக்கள் குறவர், குறத்தியர். இவர்களின் தொழில் தேனெடுத்தல். தெய்வம் முருகன். புணர்தலும், புணர்தல் நிமித்தமும் இவர்களின் உரிப்பொருளாகும். குறிஞ்சி நிலத்தின் பெரும் பொழுதாகக் கூதிர் காலம் மற்றும் முன்பனிக் காலத்தைக் கொள்வர். சிறு பொழுதாக யாமம் காணப்படுகிறது.

     முல்லை என்பது காடும், காடு சார்ந்த இடமும் ஆகும். இங்கு வாழ்ந்த மக்கள் ஆயர், ஆட்சியர் என அழைக்கப்பட்டனர். இவர்களின் தொழில் ஆடு, மாடு மேய்த்தல், தெய்வம் திருமால். இருத்தலும், இருத்தல் நிமித்தமும் இவர்களின் உரிப்பொருளாகும். முல்லை நிலத்தின் பெரும்பொழுது கார்காலம், சிறுபொழுது மாலை ஆகும்.

     மருதம் என்பது வயலும் வயல் சார்ந்த இடமும் ஆகும். இங்கு வாழ்ந்த மக்கள் உழவர், உழத்தியர். இவர்கள் உழவுத் தொழில் செய்து வந்தனர். தெய்வம் இந்திரன். ஊடலும், ஊடல் நிமித்தமும் இவர்களின் உரிப்பொருள். ஆறு பெரும் பொழுதுகளும் இந்நிலத்திற்கு உரியது. சிறுபொழுது வைகறை ஆகும்.

   நெய்தல் என்பது கடலும், கடல் சார்ந்த இடமும் ஆகும். இங்கு வாழ்ந்த மக்கள் பரவர், பரத்தியர். தொழில் மீன் பிடித்தல். தெய்வம் வருணன். இரங்கலும் இரங்கல் நிமித்தமும் இவர்களின் உரிப்பொருள் ஆகும். ஆறு பெரும்பொழுதுகளும் இந்நிலத்திற்கு உரியது. ஏற்பாடு இவர்களின் சிறு பொழுதாகும். 

   பாலை என்பது மணலும், மணல் சார்ந்த இடமும். இங்கு வாழ்ந்த மக்கள் எயினர்கள். இவர்கள் வழிப்பறி செய்வதை தொழிலாகக் கொண்டிருந்தனர். இவர்களின் தெய்வம் கொற்றவை. உரிப்பொருள் பிரிதலும், பிரிதல் நிமித்தமும் ஆகும். பாலை நிலத்திற்கு வேனில் மற்றும் பின் பனி பெரும்பொழுதுகள் ஆகும். நண்பகல் சிறுபொழுதாகும்.    

     மேற்கண்ட நிலையில் முதல், கரு, உரிப்பொருளின் அடிப்படையில் வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டு ஐந்து நிலத்தில் வாழ்ந்த மக்களும் தங்கள் வாழ்க்கை கூறுகளைக் களவு நிலை, நின்ற கற்பு வாழ்வினை 'அகம் 'என்றும், வீரம், ஈகைப் போன்ற சிறப்பு வாழ்வினை 'புறம்' என்றும் இரண்டாகப் பகுத்து வாழ்ந்தனர்.

----------------------

அக வாழ்வியல்

        பண்டையத் தமிழர்கள் தங்களின் அகம் சார்ந்த வாழ்வியலைக் களவு, கற்பு என இரண்டு நிலைகளாக வகுத்தனர். 

   திருமணத்திற்கு முன்பு தலைவனும் தலைவியும் சந்தித்து, காதல் கொண்டு ஒழுகுவது களவு ஒழுக்கம் எனப்பட்டது.

  திருமணத்திற்கு பின்பு கணவனும் மனைவியும் இணைந்து நடத்தும் இல்லறச் சிறப்பு கற்பொழுக்கம் ஆகும். 

   களவு, கற்பு ஆகிய இரண்டும் சில ஒழுக்க நிலைகளை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளன.

களவு ஒழுக்க நிலைகள் 

களவு ஒழுக்கம் பின்வரும் நான்கு நிலைகளில் அமைகின்றது. அவை,

1. இயற்கைப் புணர்ச்சி,

2. இடந்தலைப்பாடு,

3.பாங்க்ற் கூட்டம்,

4. பாங்கியிற் கூட்டம்.

 என்பனவாகும்.

1. இயற்கைப் புணர்ச்சி  

        தலைவனும் தலைவியும் விதி வயத்தால் சந்திக்க நேரும். சந்தித்த இருவரும் ஒருவருக்கு ஒருவர் குறிப்பறிந்து உள்ளப் புணர்ச்சிக் கொள்வார்கள். இது இயற்கைப் புணர்ச்சி எனப்படும். 

2. இடந்தலைப்பாடு 

    இயற்கைப் புணர்ச்சியில் முதல் நாள் தலைவியைச் சந்தித்த தலைவன், மறுநாளும் அவ்விடத்திற்குச் சென்று தலைவியைச் சந்திக்கலாம் எனக் கருதி அவ்விடத்திற்குச் செல்ல, தலைவியும் அதே எண்ணத்தோடு அங்கு வந்து இருவருக்கிடையே சந்திப்பு நிகழும் இது இடந்தலைப்பாடாகும். 

3. பாங்கற் கூட்டம் 

      பாங்கன் என்பவன் தோழன். இடந்தலைப்பாட்டிற்குப் பின் தலைவியைச் சந்திக்க முடியாத தலைவன், தோழரின் உதவியை நாடுவான். தோழனும் அவர்கள் காதலுக்கு துணை நிற்பான். இது பாங்கற் கூட்டமாகும்.

4. பாங்கியிற் கூட்டம் 

        பாங்கி என்பவள் தலைவியின் தோழி. தோழனின் உதவியால் தலைவியைச் சந்திக்க முடியாதபோது, தலைவன் தலைவியைச் சந்திக்க தலைவியின் தோழியின் உதவியை நாடுவான். இதற்கு பாங்கியிற் கூட்டம் என்று பெயர். இது,

1. பாங்கி மதி உடன்பாடு,

2. சேட்படை 

3. பகற்குறி,

4. இரவுக்குறி,

5. வரைவு கடாதல்,

6. ஒருவழித் தணத்தல், 

7. அறத்தோடு நிற்றல்,

8. உடன்போக்கு,

போன்ற பல நிலைகளில் பாங்கியிற் கூட்டம் அமையும்.

1. பாங்கி மதி உடன்பாடு

     தலைவன் தலைவி மீது கொண்ட காதலை தோழியிடம் கூறி அவள் உதவியை நாடி நிற்பான். இது பாங்கி மதி உடன்பாடு எனப்படும்.

2. சேட்படை

     உதவி கேட்டு நிற்கும் தலைவனுக்கு உடன்படாமல் தோழி அவனை அவ்விடத்தை விட்டு நீங்குமாறு சொல்வது சேட்படை என்பதாகும்.

3. பகற்குறி

 தோழியின் உதவியுடன் தலைவனும் தலைவியும் மீண்டும் மீண்டும் பகற்பொழுதில் ஓர் இடத்தில் சந்தித்து அன்புக் கொள்வது பகற்குறியாகும்.  

4. இரவுக்குறி

   இரவு நேரத்தில், இல்ல வளாகத்திற்குள் தலைவனும் தலைவியும் சந்தித்து மகிழ்வது இரவுக்குறியாகும்.

 5. வரைவு கடாதல்

     பகற்குறியிலும் இரவுக்குறியிலும் தலைவியைச் சந்தித்து மகிழ்ந்த தலைவன் திருமணத்தில் நாட்டமின்றி இருப்பான். அப்பொழுது தோழி தலைவியை திருமணம் செய்து கொள்ளும்படித் தலைவனை வற்புறுத்துவது வரைவு கடாதல் ஆகும்.

6.ஒருவழித் தணத்தல்

      தலைவனும் தலைவியும் இரவுக்குறியிலும் பகல் குறியிலும் பலமுறை சந்தித்து அன்புக் கொண்ட நிகழ்வினை பலரும் அறிந்து பலவாறு பேசுவர். அது அலர் எனப்படும். அந்த அலர் அடங்குவதற்காக தலைவன் சிறிது காலம் தலைவியைச் சந்திக்க வருவதைத் தவிர்ப்பான். இது ஒருவழித் தணத்தல் எனப்படும்.

7. அறத்தோடு நிற்றல்,

      அறத்தோடு நிற்றல் என்பது, தலைவன், தலைவியின் காதலை தலைவியின் பெற்றோருக்கு தெரிவிக்க முயல்வதாகும். தோழி செவிலி தாயிடமும், செவிலித்தாய் நற்றாயிடமும், நற்றாய் தந்தையிடமும் கூறுவதாக அறத்தோடு நிற்றல் அமையும். மேலும் அறத்தோடு நிற்றல் இரண்டு சூழ்நிலைகளில் நிகழும். தலைவி வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டு, உடல் மெலிந்து, வெறியாட்டு நிகழ்த்தும் போதும், அல்லது தலைவிக்கு வேறொருவருடன் திருமணம் நிகழ்த்த முயலும் போதும் அறத்தோடு நிற்றல் நிகழும்.

8. உடன்போக்கு

    களவு வாழ்க்கை மேற்கொண்டிருந்த தலைவன் அலர் போன்ற காரணங்களாலும், தலைவியின் அறிவுறுத்தலாலும் தலைவியைத் தன்னுடன் அழைத்துச் செல்ல முற்படுவான். இதற்கு உடன் போக்கு என்று பெயர். இதற்குரிய ஏற்பாடுகளைத் தோழியே செய்வாள். 

 மேற்கண்ட நிலைகளில் களவு ஒழுக்கங்கள் அமையும்.

------------------

கற்பொழுக்க நிலைகள் 

   கற்பு வாழ்க்கை என்பது பொதுநிலையில் திருமணத்திற்குப் பின்பு அமையும் கணவன் மனைவி ஆகியோரின் குடும்ப வாழ்க்கை ஆகும்.

    கற்பு என்பதை, திருமணத்திற்குப் பின் ஏற்படும் மகிழ்ச்சி, ஊடல், கூடல், ஊடல் உணர்த்தும் பிரிவு முதலானவை அமைந்த நிலை என நற்கவிராச நம்பி, நம்பியகப் பொருளில் கூறுகிறார்.

 இல்லற மகிழ்ச்சி

    இல்லற வாழ்க்கையில் தலைவன் தலைவியின் சிறப்பான செயல்பாடுகளைக் கண்டு தலைவன் மகிழ்ச்சி கொள்வதோடு, தலைவனின் அன்பை கண்டு தலைவியும் மகிழ்ச்சி கொள்வாள். தலைவன் தலைவியின் சிறப்பான வாழ்வைக் கண்டு தோழியும் மகிழ்ச்சி கொள்வாள். தலைவியின் பொறுப்பான இல்லற வாழ்க்கையைப் பார்த்து செவிலி தாயும் மகிழ்ச்சிக் கொள்வாள்.

பிரிவின் வகைகள்

 இல்லறத்தில் பிரிவு என்பதும் நிகழும் குறிப்பாக,

  சில நேரங்களில் தலைவன் பரத்தையர் பால் பற்றுக்கொண்டு தலைவி விட்டுப் பிரிந்து செல்வான். இது பரத்தையர் பிரிவாகும்.

    சில நேரங்களில்  தலைவியை விட்டுத் தலைவன் கல்விக்காக பிரிந்து செல்வான் இது ஓதல் பிரிவு ஆகும்.

  போர் செய்வதற்காகத் தலைவியை விட்டு தலைவன் பிரிந்து செல்வான் இது காவல் பிரிவு ஆகும்.

     பக்கத்து நாட்டு மன்னனுக்கு தூது செல்லும் நிலையில் தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்து செல்வான் இது தூதுப் பிரிவாகும்.

   நண்பனுக்காகத் தலைவன் தலைவியை விட்டு சில நேரம் பிரிந்து செல்வான் இது துணைவையின் பிரிவு ஆகும்.  

  இல்லறம் இனிது நடத்த பொருளீட்ட வேண்டி தலைவியை விட்டுத் தலைவன் பிரிந்து செல்வான் இது பொருள்வயின் பிரிவு ஆகும்.

 இவ்வாறு கற்பியலில் இல்லற மகிழ்ச்சியும், பிரிவு துன்பமும் இருக்கும்.

***** இராஜாலி *****

திங்கள், 20 ஜனவரி, 2025

யுனிக்கோட் - பயன்பாடு

அறிமுகம்


   ஆங்கில மொழியைத் தவிர பிறமொழிகளிலும் பலரும் பல்வேறு குறியேற்றங்களையும் எழுத்துருக்களையும் பயன்படுத்தி வந்தனர். இந்த முறையில் ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளை மட்டுமே கையாள முடிந்தது. இத்தகைய சிக்கலைத் தீர்த்து, பல மொழிகளை ஒரே நேரத்தில் கையாளத் தேவையான ஒரு குறியேற்ற முறையை அமைக்க உலக அளவில் மென்பொருள் உருவாக்கும் நிறுவனங்கள் ஒன்றிணைந்து உலகின் அனைத்து மொழிகளையும் கணினியில் பயன்படுத்தும் வகையில் ஒரு குறியேற்றத்தை உருவாக்க முடிவுசெய்தது. இம்முடிவின் விளைவாக 1991இல் ஒருங்குறிச் சேர்த்தியம் (Unicode Consortium) என்ற கூட்டமைப்பிளை உருவாக்கினர். இதன்வழி உருவாக்கப்பட்டது தான் Universal Code எனப்படும் யுனிக்கோட் ஒருங்குறி ஆகும்.

யுனிக்கோட் - செயல்பாடு 

          இந்த ஒருங்குறிச் சேர்த்தியம் 16 பிட்டு அமைப்பு கொண்ட யுனிகோடு (Unicode) என்னும் குறியேற்றத்தை வடிவமைத்தது. இந்தக் குறியேற்ற அமைப்பில் 65,536 இடங்கள் உள்ளன. இம்முறை உலக மொழிகள் அத்தனைக்கும் தேவையான  இடங்களைக்  கொண்டிருந்தது.  ஒருங்குறிச் சேர்த்தியம் இந்திய மொழிகள் ஒவ்வொன்றுக்கும் 128 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்த பட்டியலைக் கொடுத்தது. அதில் தமிழுக்கும் 128 இடங்களே ஒருங்குறியில் ஒதுக்கப்பட்டு  இருந்தது.

       குறிப்பாக, 16Bit குறியேற்றத்தில் உள்ள 65,536 இடங்களில் தமிழ் எழுத்துகள் 2944 முதல் 3071 வரை உள்ளன.  இந்த 128 இடங்களிலும் 50 இடங்கள் காலியாக உள்ளன.

          இதில் உயிர் எழுத்துகள் 12, அகரம் ஏறிய மெய்யெழுத்துகள் 18 ஆகிய 30 எழுத்துகள் உள்ளன. இவற்றைக் கொண்டு உயிர்மெய் எழுத்துகளை உருவாக்கிக்கொள்ளவேண்டும். தமிழில் உள்ள எல்லா எழுத்துகளுக்கும் தனித்தனி இடங்கள் இல்லாததால் இரண்டு எழுத்துகளைக் கொண்டு மூன்றாவது எழுத்தை உருவாக்க வேண்டியுள்ளது. இதற்குத்தான் இடையூக்கி மென்பொருள்கள் உதவுகின்றன. 

    2000ஆம் ஆண்டு Microsoft நிறுவனம் தான் வெளியிட்ட Windows 2000 என்ற இயங்குதளத்தில் தமிழைப் பயன்படுத்துவதற்கு ஒருங்குறியில் உருவாக்கப்பட்ட Latha என்ற எழுத்துருவைச் சேர்த்து வழங்கியது. இன்றளவும் விண்டோஸ் இயங்குதளங்களில் யுனிகோடு குறியேற்றத்தில் தட்டச்சு செய்ய இயல்பிருப்பாக (Default) லதா எழுத்துருதான் பயன்படுத்தப்படுகிறது. இணையதளங்கள் முழுமையும் இந்த யுனிக்கோடு முறையில் லதா எழுத்துருவில் இருக்கிறது.

   யுனிக்கோடு தமிழ்க் குறியேற்றத்தில் உயிர் எழுத்துகள்(12), அகரமேறிய மெய் எழுத்துகள்(18), ஆய்தம்(1) ஆக 31 எழுத்துகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. எனவே பிற உயிர்மெய் எழுத்துகளை உள்ளிடுவதற்குத் தனியொரு மென்பொருள் தேவைப்படுகிறது. இதனைத் தவிர்க்கத் தமிழில் உள்ள 247 எழுத்துகளையும் தமிழ் எண்களையும் கிரந்த எழுத்துகளையும் சேர்த்து 313 இடங்களைக் கொண்டதாகத் தமிழ் அனைத்து எழுத்துக் குறியேற்றம் (Tamil All Character Encoding-TACE) என்ற ஒன்றினை 16பிட் குறியேற்றத்தில் கொண்டுவருவதற்காக உருவாக்கப்பட்டது. இதன் காரணமாக  தற்போது  தமிழுக்கான அனைத்து எழுத்துகளுக்கும் யுனிக்கோடு குறியேற்றத்தில் இடம் கிடைத்துள்ளது.

யுனிக்கோட் - பயன்கள் 

   யுனிக்கோட் வருகையால் இணைய செயல்பாடுகள் புதிய வளர்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக,

#.உலக மொழிகளுக்கான பொதுவான எழுத்துக்கள் கிடைத்துள்ளன.

#. எடுத்துருக்களின் சிக்கலின்றிப் பயன்படும் பொது மொழியாக யுனிக்கோட் காணப்படுகிறது.

#.எல்லா இயங்கு தளங்களிலும் இயங்கக் கூடியதாக விளங்குகிறது.

#. முழுவதும் தமிழ் மொழியில் வடிவமைக்கப்பட்ட தமிழ் இயங்கு தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இவை போன்ற பயன்பாடுகள் யுனிக்கோட் வருகையால் தமிழ் இணையங்களில் ஏற்பட்டுள்ளது. 

தமிழ் யுனிக்கோட் - சிக்கல்கள் 

     தமிழ் மொழியில் யுனிக்கோடு எழுத்துக்களைப் பயன்படுத்தும் பொழுது சில சிக்கல்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக, விண்டோஸ் 98 போன்ற பழைய இயங்கு தளங்களில் பயன்படுத்துவதில் சிக்கல்கள் காணப்படுகின்றன. மேலும் சில அச்சு மென்பொருள்களிலும் யுனிக்கோட் பயன்பாடு ஏற்படுத்தப்படாமல் இருக்கிறது.

    இத்தகைய சிக்கல்களைத் தீர்ப்பதற்காக தமிழ் இணையப் பல்கலைக்கழகம், கணினித்தமிழ்ச் சங்கம், இன்ஃபிட் ஆகிய தொழில் நுட்ப உறுப்பினர்களை ஒன்றிணைத்துப் புதிய தமிழ்க் குறியீட்டு முறைக்கான பரிந்துரைகளையும், அதன் முறையில் உருவாக்கப்பட்ட சில எழுத்துருக்களையும் வெளியிட்டன. புதிய யூனிக்கோட் முறையில் சீர்திருத்தம் காண அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் மு.அனந்த கிருஷ்ணன் தலைமையில் பன்னாட்டு வல்லுநர்களைக் கொண்ட தரக்குழு அமைத்து அதற்கான அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டது.

    இக்குழுவின் முயற்சியால் புதிய யுனிக்கோட் எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், யுனிக்கோடி சர்வதேசக் கூட்டமைப்பான கன்சார்டியம் இக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று குறியீட்டு முறையில் சீர்திருத்தம் கொண்டு வர தயக்கம் காட்டுகிறது. எனினும் இத்தகைய சிக்கல்களைப் பொருட்படுத்தாமல் தமிழ் யுனிக் கோர்ட் பயன்பாடு சிறந்த நிலையில் காணப்படுகின்றது.

@ உதவி -கணினித் தமிழ் 

**** இராஜாலி****


ஊழின் பெருவலி யாவுள? - வள்ளுவர்

முன்னுரை இலக்கியங்கள் பழக்கவழக்கங்களையும், நம்பிக்கைகளையும் மனிதனின் பண்பாட்டையும்,பிரதிபலிக்கும் களங்களாக விளங்குகின்றன. பேரிலக்கியங்கள் அற...