எனது வலைப்பதிவு பட்டியல்

வியாழன், 13 அக்டோபர், 2022

சீறாப்புராணம் - நுபுவத்துக் காண்டம்

புத்து பேசிய படலம்

முன்னுரை

          இஸ்லாமிய இலக்கியங்களில் சிறந்த இலக்கியமாக கருதப்படுவது சீறாப்புராணம் ஆகும். கிபி பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் என்பவரால்  எழுதப்பட்ட இக்காப்பியம் இறைதூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றைக் கூறுவதாக அமைந்துள்ளது.

சீறாப்புராணம், விலாதத்து காண்டம், நுபுவ்வத்து காண்டம், ஹிஜ்ரத்து காண்டம் என மூன்று காண்டங்களையும் 92 படலங்களையும் 5027 பாடல்களையும் கொண்டதாகும்.

புத்து பேசிய படலம்

 சீறாப்புராணத்தில் காணப்படும் இரண்டாவது காண்டமான, நுபுவ்வத்து காண்டத்தில் உள்ள  புத்து பேசிய படலம்; முகமது நபி அவர்கள்,குசைன் என்ற அறபிக்கு  புறுக்கான் என்னும் வேத நெறியின் சிறப்பை உணர வைத்து, 65 ஆண்டுகளாக பேசாமல் இருந்த புத்தை  பேச வைத்து அற்புதம் நிகழ்த்திய செய்தியினை கூறுவதாக அமைந்துள்ளது.

மக்காவில் முகமது நபிகள் வீற்றிருத்தல்

நிலம்மாகிய அரசனின்  தலையில் சூடப்பட்டிருக்கும் கிரீடத்தைப் போன்ற சிறப்பு வாய்ந்த மக்கா நகரத்தில், எட்டு திசைகளிலும் கலிமா ஒலிக்கும் அந்நகரத்தில் வில்லை கையில் ஏந்திய பல மன்னர்கள் சூழ்ந்திருக்க அவர்களில் நடு நாயகமாக முகமது நபி அவர்கள் வீற்றிருந்தார்கள். அப்போது, மலை போன்ற உறுதியான தோள்களை உடைய குசைன் என்னும் அறபி  மகிழ்வோடு முகமது நபிகளை காண வந்தான்.

குசைனை கண்ட முகமது நபி அவர்கள் அன்பு உள்ளத்தோடு அவனைப் பார்த்து புன்னகைத்து தனது கைகளை அசைத்து அவனை அருகில் வரவழைத்து தன் அருகில் அமர வைத்தார். மூன்று வேதங்களையும் கற்றுணர்ந்த முகமது நபி அவர்கள் குசைனிடம் "அனுதினமும் நற்கதி தரும் புறுக்கான் என்னும் வேத மார்க்கத்தை பின்பற்றி நடவாமல் இருப்பதற்கு காரணம் என்ன? " எனக் கேட்டார்.

குசைனின் மறுமொழி

முகமது நபி அவர்கள் கேட்டதற்கு மறுமொழியாக" தீன் மார்க்கத்தின் சிறப்பை உணர்ந்த  ஹபீபு என்னும் அரசனின் அவயங்கள் அற்ற மாமிசத்தடியை அழகிய பெண் உருவமாக ஆக்கிய முகமது நபி அவர்களே! உங்களிடம் மான் வந்து பேசியதையும், உடும்பு வந்து பேசியதையும், அம்மாவாசை நாளில் முழு நிலவு வந்து பேசியதையும் நான் அறிவேன். உங்களது வழியைப் பின்பற்றுபவர்கள் கூறும் கருத்துக்களையும் நான் அறிவேன். ஆயினும் உங்கள் கலிமாவைக் கூறுவதற்கு எனது மனம் இசையவில்லை " எனக் குசைன் கூறினான்.

அதற்கு முகமது நபி அவர்கள் குசைனைப் பார்த்து "நீ கலிமாவை கூறாமல் இருப்பதற்கு இது காரணம் அல்ல. உனது வீட்டில் வைத்து நீ வழிபடும் சொரூபமான புத்துதான் காரணம். இதுவரைக்கும் பேசாமல் இருக்கும் அப்புத்து தனது வாயை திறந்து வார்த்தைக்கு வார்த்தை உறுதியாக பேசுமானால் நீ கலிமாவை ஓதுவாயா? " எனக் கேட்டார்.

நபிகள் நாயகத்தின் வார்த்தையை கேட்ட குசைன் மெல்ல புன்னகைத்து "என்னிடம் 65 ஆண்டுகளாக இருக்கும் அப்புத்து இதுவரைக்கும் தனது வாயை திறந்து பேசியதே இல்லை. உம்முடைய ஒரு வார்த்தையால் அது பேசும் என்பதை என்னால் உறுதியாக ஏற்றுக்கொள்ள  முடியாது " என மறுத்துக் கூறினான்.

மேலும் குசைன் முகமது நபியை பார்த்து " பொன் ஆபரணங்களாலும் அழகிய வஸ்திரங்களாலும் பரிமள தைலத்தாலும் வாசனை வீசும் மலர்களால் பூசை செய்யும் என்னிடம் பேசாத தெய்வத்தன்மை பொருந்திய அப்புற்று  உம்முடைய வார்த்தையால் பேசும் என்றால் நீங்கள் கூறுகின்ற புறுக்கானுல் அலீம்  என்னும் வேத மார்க்கத்தை ஏற்றுக் கொண்டு, பூமியை தொடாத தாமரைப் போன்ற உன் திருவடிகளை தொழுது தீன் என்னும்  இஸ்லாம் மார்க்கம் நிலைத்து நிற்கும்படி செய்வேன் " என உறுதியாகக் கூறினான்.

குசைன் புத்தை முகமது நபியிடம் கொண்டு வருதல்

எட்டு திசைகளையும் ஆட்சி செய்யும் இறைவனின் ஆசியோடு முகமது நபி அவர்கள் குசைன் கூறிய வார்த்தையை கேட்டு மகிழ்ந்து " அப்புற்றை இவ்விடத்தில் கொண்டு வரும்படி கூறினார். உடனே குசைன், நபிகளை வணங்கி வீட்டிற்குச் சென்று அப்புத்துக்கானுக்கு  ரத்தின ஆபரணங்களையும், அழகிய வஸ்திரங்களையும் தரித்து அலங்காரம் செய்தான். மேலும் மலர்களை சூட்டி, நறும்புகைகளை காட்டி அப்புத்தை தனது கைகளில் சுமந்தவாறு மூன்று வேதங்களையும் அறிந்த முகமது நபிக்கு முன் கொண்டு வைத்தான்.

புத்து பேசியது

          மேன்மை தாங்கிய சிறப்புமிக்க நபிகள் நாயகம் தனது அமுத மலர் போன்ற வாயினை திறந்து புத்தத்தை பார்த்து "குசைனின் மன இருள் நீங்கும் படி, விண்ணும் மண்ணும் உணரும்படி மெய் வேதத்தின் சிறப்புகளையும், தீன்  மார்க்கத்தின் பெருமையினையும் கூறுவாயாக" என ஓதினார்.

இதனைக் கேட்ட புத்து, வெண்ணிலவு போன்று ஒளி வீசும் முகமது நபியின் திருமுகத்தை பார்த்து, "பெரியவரான அல்லாவின் அருளால் தெய்வீகத் தன்மையுடன் வந்த அரசனே! இரக்கத்தைக் கூறும் அரு மறையான தீன்  மார்க்கத்தின்  முகமது நபியே! தேவர்கள் அனைவரும் மலர் கொண்டு பூஜிக்கும் பொன் போன்ற திருவடிகளை பெற்று பூமிக்கு வந்த தலைவரே! நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு சூரியனைப் போன்று  பிரகாசமாக ஒளிவிடும்  ராஜாவே! உங்களது தெய்வீக புறுக்கானுல் வேத நெறியினை மனதில் ஏற்றுக் கொள்ளாதவர்கள் பொல்லாத நரகத்தில் சேர்வார்கள். உங்களது பாதங்களைப் பணிந்து  கலிமாவை ஓதுபவர்கள் சொர்க்கத்தில் நிலைத்திருப்பார்கள் " என எல்லோரும் அறியும்படி கூறியது. இந்த வார்த்தையினை கேட்டு உள்ளம் மகிழ்ந்த குசைன் முகமது நபியை போற்றி வணங்கினான்.

முடிவுரை

சீறாப்புராணத்தில், முகமது நபி அவர்கள்,குசைன் என்ற அறபிக்கு  புறுக்கான் என்னும் வேத நெறியின் சிறப்பை உணர வைத்து, 65 ஆண்டுகளாக பேசாமல் இருந்த புத்தை  பேச வைத்து அற்புதம் நிகழ்த்திய செய்தியினை கூறுவதாக, உமறுப்புலவர் பாடியுள்ளார்.

********* இராஜாலி *********

 

தேம்பாவணி - வேதக் கெழுமைப் படலம

நபூக்கன் நலிவு

முன்னுரை

          கிறிஸ்தவ பேரிலக்கியங்களில் மிகவும் போற்றுதலுக்கு உரியது  தேம்பாவணி ஆகும். இந்நூல் 1726 ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் வீரமாமுனிவரால் அரங்கேற்றப்பட்டது. தேன் + பா + அணி எனப் பிரித்துத் “தேன் போன்ற இனிய பாடல்களின் மாலை” எனக் கூறுவர். இயேசு நாதரின் வளர்ப்பு தந்தையான ‘புனித சூசையப்பரின்’ சிறப்புகளை கூறுவதாக இந்நூல் அமைந்துள்ளது.

தேம்பாவணி மூன்று காண்டங்களைக் கொண்டது. ஒவ்வொரு காண்டங்களுக்கும் 12 படலங்கள் வீதம் 36 படலங்களைக் கொண்டுள்ளது. இதில் 3615 பாடல்கள் காணப்படுகின்றன.

வேதக் கெழுமைப் படலம்

தேம்பாவணியில் மூன்றாவது காண்டத்தில் 29-வது படலமாக விளங்குவது வேதக் கெழுமைப் படலம் ஆகும். இதில் சபை மூத்தோர்,  வேதத்தின் சிறப்புகளையும், நபூக்கன் மற்றும்  எல்லியோதூரனின் செயல்களை இளைஞர்களுக்கு எடுத்துக் கூறுவதாக வீரமாமுனிவர் பாடியுள்ளார்.

அசீரியா நாட்டின் சிறப்பும் - நாபூக்கனின் ஆணவமும்

மேகங்கள் தவழும் மலையினின்று இறங்கிய தெளிந்த நீர் எங்கும் கிடைக்கும் அசீரிய நாட்டில், பிற்காலத்தில், நஞ்சு தவழும் சினத்தால் காய்ந்து கொண்டிருந்த நபூக்கன் என்னும் அரசன் ஆண்டான். அவன் தன் நெஞ்சில் தவழ்ந்த அகந்தையினால் தன் செங்கோல் கொடுங்கோலாய் வளையுமாறு, பரந்து கிடந்த தன் நாட்டில் எங்குமுள்ள யூதர்கள் ஆண்டவனைத் தொழும் செயலை கண்டு மிகவும் கோபப்பட்டு, அவர்கள் இறைவனை வணங்குவதை தடுத்தான்.

          அவன்; அகந்தையினாலும், ஆணவத்தாலும் தன்னைப் போன்ற ஓர் உருவத்தைப் பொன்னால் செய்து. உயர்ந்த சிறப்போடு அணிகலன்களால் அழகு செய்தான்; அந்நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் அவ்வுருவத்தையே வணங்க வேண்டும் என கட்டளையிட்டான்.

     அங்கு இருந்த மூன்று யூதர்கள் "சிறப்புப் பொருந்திய எம் ஆண்டவனை அல்லாமல், அழகு பொருந்திய உருவமாய்ச் செய்த யாரையும் யாம் வணங்கமாட்டோம்" என்றனர். அதனைக் கேட்டு, கருமேகத்தில் தங்கும் இடி போலச் சினந்த நபூக்கன், "இந்த யூதர்களை நெருப்புச் சூளையில் தள்ளுங்கள்!" எனக் கட்டளையிட்டான்.

யூதர்களை அக்கினி சூளையில் தள்ளுதல்

அரசனின் கட்டளைக்கு கீழ்படிந்த சேவகர்கள், யூதர்கள் மூவரையும் அழைத்துக் கொண்டு அக்கினி சூளைக்குள் தள்ளினார்கள். அப்பொழுது நெருப்பானது சேவர்களை அழித்தது. நெருப்புக்குள் தள்ளப்பட்ட மூன்று பேரும் மகிழ்ச்சியோடு காணப்பட்டார்கள். அவர்களை நெருப்பு ஒன்றும் செய்யவில்லை. அவர்களின் கைகளில்  கட்டப்பட்டிருந்த கயிறு மட்டும் எரிந்தது. அவர்கள் பசுமையான பூஞ்சோலையில் அமர்ந்திருப்பது போல அச்சு சூளைக்குள் அமர்ந்திருந்தார்கள். இதனைப் பார்த்து மற்ற சேவகர்கள் மன்னனிடம் விரைந்து சென்று தாம் கண்ட செய்தியினை கூறினார்கள்.

அந்நிலைமையைக் கேட்டறிந்த மன்னன் வியந்து அருகில் வந்து உள்ளே பார்த்தான்; வெப்பமான சூளையில் நாலுபேர் மகிழ்ந்திருக்கக் கண்டான்; இந்நிலைமையால் மேலும் வியப்பு மிக "இப்பொழுதே இங்கு வாருங்கள்!" என்றான். மூவர் மட்டுமே குளிர்ந்த முகத்தோடு அவன் பக்கம் வந்து நின்றனர். அவர்களைப் பார்த்து நபூக்கன், "நாலு பேரை அங்குக் கண்டேனே; மற்றும் அந்தப் புதியவன் எங்கே?" என்றான். அவர்கள், "எவரினும் மேம்பட்ட வல்லமையுள்ள எம் ஆண்டவன் அனுப்பி வைத்த வானவன்தான் அவன்" என்றனர். அதனைக் கேட்ட பிறகும் நபூக்கன் ஆணவம் குறையாதவனாக, தானே கடவுள் என்ற ஆணவம் மிக்கவனாக காணப்பட்டான். இதன் காரணமாக இறைவன் அவன் மீது கடும் கோபம் கொண்டார்.

நபூக்கன் விலங்காக மாறுதல்

நபூக்கன், தானே தெய்வமென்று கருதிய தன்மையால்,  ஆண்டவன் தன் பெருஞ்சினத்தால்,  அவனது உயிர் நீங்காமல், விலங்கு உருவம் கொள்ளச் செய்தான். அதனால், நபூக்கன் நாட்டினின்று தள்ளப்பட்டு, தன் வீணான திறமையில் குறைந்து, காட்டில் குனிந்து புல் மேய்த்து நின்றான். நபூக்கன் ஏழு வருட காலமாய் இவ்வாறு இழிவு பட்டான்; பின்னர் தன் தவறை உணர்ந்து இறைவனிடம் பாவ மன்னிப்பு கேட்டு மீண்டும் மனித உரு பெற்று மனிதர்களுக்கு முன்மாதிரியாக விளங்கினான்.

எல்லியோதுரன் இன்னல்

அவ்யூதர் வணங்கும் கோவிலில் அரிய செல்வம் மிகுதியாக உண்டு என்று அந்நாட்டு அரசன் கேள்விப்பட்டு, எல்லியோதுரன் என்பவனை ஏவினான். எல்லியோதுரன் அந்நாட்டு மக்கள் அஞ்சி வருந்துமாறு, கொல்லும் வேங்கைக் கூட்டம் போன்று எண்ணில்லாத வீரர் புடைசூழ விரைந்து கோவிலுக்குள் புகுந்தான்.

எல்லியோதுரன் கோவிலுக்குள் புகுந்த அளவில், வானத்தில் பொற்கவசம் அணிந்த ஒருவன் ஏறி வந்த குதிரை, எல்லியோதுரனது பரந்த மார்பில் உதைத்து அவனை வீழ்த்தியது. அது கண்டு கூட்டமாய் வந்த வீரர் யாவரும் ஓடிப்போயினர். அப்பொழுது இரண்டு வானவர் அவனை அணுகி, குதிரையை அடிக்கும் மத்திகை  என்னும் சவுக்கால் அவனை பலமாக அடித்தார்கள்.

ஆபத்தில் இருக்கும் எல்லியோதூரனை கண்ட அச்சபை மூப்பர் அவனைக் காப்பாற்றும் பொருட்டு இறைவனிடம் மனம் வருந்தி வேண்டினார். அப்பொழுது இரண்டு இறைத்தூதர்கள் வந்து எல்லியோதூரனை தேற்றி, " இங்கு நடந்தவற்றைத் திசையெல்லாம் அறியச் செய்வாய்" என்றனர். அவனும், தன் உயிருக்கு வந்த ஆபத்தினின்று தப்பி, தன் வாழ்நாள் உள்ள அளவும் இறைவனைப் போற்றினான்.

முடிவுரை

இவ்வாறு சபை மூத்தோர், நபூக்கன் மற்றும்  எல்லியோதூரனின் செயல்களை இளைஞர்களுக்கு எடுத்துக் கூறுவதாக வேதக் கெழுமைப் படலம் அமைந்துள்ளது.

********** இராஜாலி *******

 

    

 

 

ஞாயிறு, 2 அக்டோபர், 2022

பெரிய புராணம் - கலிய நாயனார் புராணம்

 முன்னுரை

          சைவத் திருமுறைகளில் பன்னிரண்டாவது திருமுறையாக விளங்குவது சேக்கிழார் பாடிய  பெரிய புராணமாகும். "திருத்தொண்டர் மாக்கதை" என்று வழங்கப்படும் பெரிய புராணம், சுந்தரர் பாடிய "திருத்தொண்டத் தொகை" என்னும் நூலின் வழி நூலாகக் கருதப்படுகிறது. பெரியபுராணம் 2 காண்டங்களையும், 13 சருக்கங்களையும், 4286 பாடல்களையும் கொண்டதாகும். இந்நூல், அறுபத்திமூன்று நாயன்மார்களின் வரலாற்றையும், 9 தொகையடியார்களின் வரலாற்றையும் தொகுத்துக் கூறும்  நூலாகக் காணப்படுகிறது.

 கலிய நாயனார் புராணம்

          பெரியபுராணத்தில் இரண்டாவது காண்டத்தில் காணப்படும் 'பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம்' என்னும் சருக்கத்தில் 52 வது புராணமாக காணப்படுவது கலிய நாயனார் புராணம் ஆகும். இப்புராணத்தில் 'தனது உதிரத்தைக் கொண்டு திருக்கோயில் விளக்கெரிக்க முற்பட்ட மெய்யடியாரான கலிய நாயனாரின் ' வரலாறு கூறப்பட்டுள்ளது.

திருவொற்றியூரின் சிறப்புகள்

          இவ்வுலகத்தில் புகழ்மிக்க தொண்டை நாட்டில், அழகிய சோலைகளால் சூழப்பட்ட, தேரோடும் அழகிய வீதியை கொண்ட திருவெற்றியூரில் கங்கையை தலையில் சூடிய, சடை முடியை உடைய  கூத்தப் பெருமான் எழுந்தருளியுள்ளான். அங்கு சமணர்களும் பௌத்தர்களும் கூறுவதைப் போன்று வான வளியே இல்லை என்று சொல்லும் அளவிற்கு வானுயர்ந்த மாளிகைகள் காணப்பட்டன.  கொடிகள் காற்றில் அசையும் போது கமுக மரச்சோலை போல் காணப்பட்டது. அத்தகைய நகரத்தை அடுத்து பரந்து விரிந்த கடல் காணப்பட்டது.

          எப்பொழுதும், இசைப் பாடல்கள் ஒலிக்கும் மண்டபங்களும், மக்கள் நிறைந்திருக்கும் வீதிகளும் அவற்றிலிருந்து எழும் ஒலியும், முறையாக நிகழும் திருவிழாக்களில் தோன்றும் ஒலியும் கலந்து காணப்பட்டது. அங்குள்ள திருமடங்களில், செந்நெல் அரிசியால் சமைக்கப்பட்ட உணவு நிரம்பி வழிந்தன.

          அங்குள்ள சோலைகளில்  மாதவி மலரும், புன்னை மலரும், குங்கும மரங்களின் மலரும், செண்பக மலர்களும், செருந்தி மலர்களும், தாழை மலர்களும் மலர்ந்து மணம் வீசின. நிலவைப் போன்று வெண்மை ஒளிவீசும் மணல் பரப்பும் காணப்பட்டது.

          மேகங்களின் முழக்கமும், கடல் அலையின் ஓசையும், இசை பழகும் இசைக்கருவிகளின் ஓசையும் இவை என பிரித்துக் கூற முடியாத அளவிற்கு அந்நகரில்  ஒலித்துக்கொண்டே இருந்தன. அந்த நகரத்தில் எண்ணெய் ஆட்டும் செக்குத் தொழிலை செய்யும் மக்கள் வாழ்கின்ற 'சக்கர பாடித் தெரு' என்னும் சிறந்த தெரு காணப்பட்டது.

 கலிய நாயனாரின் பிறப்பு

          சக்கர பாடித் தெருவில், எண்ணெய்  ஆட்டும் செக்கு தொழில் செய்யும் மரபில்  கலியநாயனார்  தோன்றினார். சைவ சமயம் சிறப்படைய, முக்கண்ணை உடைய சிவபெருமானுக்கு திருத் தொண்டு செய்வதில் சிறந்து விளங்கினார்.

 கலிய நாயனாரின் திருத்தொண்டு

          கலிய நாயனார்,  பலகோடி செல்வத்திற்கு தலைவனாக விளங்கியதால் திருவெற்றியூரில் வீற்றிருக்கும், காளை  வாகனத்தை உடைய சிவபெருமானின் ஆலயத்தில் உள்ளேயும் வெளியேயும் இரவும் பகலும் விளக்கேற்றி திருத்தொண்டு செய்தார்.

          பல ஆண்டு காலமாக எண்ணற்ற திருவிளக்குகளுக்கு நெய் ஊற்றப்பட்டு, ஏற்றப்பட்டு வழிபட்டு வந்த, கலிய நாயனாரின் இத்திரு தொண்டின் சிறப்பினை உலகறிய செய்ய விரும்பினார் இறைவன்.

 கலிய நாயனாரின் செல்வம் தேய்ந்து போதல்

          கலிய நாயனாரின் திரு தொண்டை உலகறிய செய்ய விரும்பிய இறைவனின் செயலால், கலியநாயனாரின் செல்வம் அனைத்தும் தேய்ந்து கரைந்தது. என்றாலும், தன் கொள்கையில் மாறுபடாதவராக காணப்பட்டார். செல்வம் உள்ளவர்களிடம் சென்று எண்ணெய் ஆட்டும் தொழிலை செய்து அவர் கொடுக்கும் கூலியைக் கொண்டு எண்ணெய் வாங்கி விளக்கேற்றி திருத்தொண்டு செய்தார்.

அத் தொழில் செய்வோர் பலர் இருப்பதால், அதனால் கிடைக்கும் கூலியும் தடைபட்டது. அதனால் மனம் வருந்தியவர் தனது உடமைகளை விற்று  கோயில் விளக்கேற்றினார். செல்வமும் கரைந்து போக, தனது வீட்டையும் விற்று அச் செல்வத்தைக் கொண்டு  திரு விளக்கேற்றினார்.

 மனைவியை விற்பதற்கு முயலுதல்

          வீட்டை விட்டு விளக்கேற்றிய கலியநாயனாருக்கு அச்செல்வமும் கரைந்து போனதால் மனம் வருந்தி தனது மனைவியை விற்று பொருள் சேர்த்து திருவிளக்கு ஏற்ற எண்ணினார். அந்நகரில் கலியநாயனாரின் மனைவியை பொருள் கொடுத்து வாங்குவார் இல்லாததால் மனம் வருந்தினார்.

கலியநாயனார் எண்ணைக்கு பதிலாக தன் உதிரத்தை கொடுக்க முயலுதல்

 கலியநாயனார்,

 'மணி வண்ணச் சுடர் விளக்கு மாளில்  யான் மாள்வன்' 

என படம் பக்கநாதரின் கோயிலில் விளக்கேற்றும் திருப்பணிக்கு தடை  வந்தால் தான் மாண்டு போவதாக உறுதியாகக் கூறினார்.

          கோயிலுக்குச் சென்ற கலியநாயனார், விளக்குகளை எல்லாம் முறையாக அடுக்கி வைத்தார், அவற்றிற்கு திரியினையிட்டார். அதற்கு எண்ணையாக  இரத்தத்தை கொடுப்பதற்காக தனது கழுத்தினை அரிவதற்கு முற்பட்டபோது, சிவபெருமான் நேரில் அங்கு தோன்றி அவர் கையைப் பிடித்து தடுத்தார். என்பதை,

"ஒருவிய எண்ணைக்கு ஈடா உடல் உதிரம் 

                                                   கொடு நிறைக்கக்

கருவியினால் மிடறு அரிய அக்கையைக் கண் நுதலார்

பெருகு திருக் கருணையுடன்  நேர் வந்து பிடித் தருளி "

எனப் பெரிய புராணம் கூறுகிறது.

மேலும், சிவபெருமானின் அருளால், கலியநாயனார் பொன் போல் ஒளி வீசும் சிவபுரியாகிய சிவலோகத்தில் விளக்கேற்றும் அருளினைப் பெற்றார்.

 முடிவுரை

          இவ்வாறு, சேக்கிழார் பெரிய புராணத்தில் 'தனது உதிரத்தை கொடுத்து இறைவனுக்கு விளக்கேற்ற துணிந்த' கலிய நாயனாரின் வரலாற்றைக் கூறி உள்ளார்.

********** இராஜாலி *******

ஞாயிறு, 18 செப்டம்பர், 2022

கம்பராமாயணம் நாட்டுப் படலம்

 

பால காண்டம் - நாட்டுப் படலம்

கவிச்சக்கரவர்த்தி - கம்பர்

முன்னுரை

          கவிச்சக்கரவர்த்தி கம்பரால் பாடப்பட்ட இராமகாதை, பின்னாளில்  கம்பராமாயணம் என அழைக்கப்பட்டது. 9 -ஆம் நூற்றாண்டில் பாடப்பட்ட இக்காவியம்; பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என்னும் ஆறு காண்டங்களையும், 113 படலங்களையும், 10569 பாடல்களையும் கொண்டதாகும். இராமாவதாரத்தின்  சிறப்புகளை இக்காவியம் கூறுவதாக அமைந்துள்ளது.

பால காண்டம்

          உலக மகாகாப்பியங்களுள் தலைசிறந்து விளங்கும்  கம்பராமாயணத்தில், முதல் காண்டமாக காணப்படுவது பாலகாண்டம் ஆகும். இக்காண்டத்தில், ஆற்றுப் படலம் தொடங்கிப் பரசுராமப் படலம் ஈறாக 23 படலங்கள் காணப்படுகின்றன.

நாட்டுப் படலம்

          பாலகாண்டத்தில் இரண்டாவது படலமாக காணப்படுவது நாட்டுப் படலம் ஆகும். இப்படலத்தில் கோசலை நாட்டின் வளத்தையும், அந்நாட்டு மக்களின், வணிகம் மற்றும் வாழ்வியல் ஒழுக்கங்கள் விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

கோசலை நாட்டு வளம்

          கோசல நாட்டு வளத்தினை பற்றி கம்பன் கூறும் போது "அங்கு காணப்பட்ட வயல் வரப்புகளில் முத்துக்கள் விரவி கிடந்தன, தண்ணீர் பாயும் மடைகளில்  சங்குகள் காணப்பட்டன. மிகுந்த நீர்ப்பெருக்கு உடைய ஆற்றங்கரைகளில் எல்லாம் செம்பொன்கள் குவிந்து கிடந்தன. எருமை மாடுகள் குளிக்கும் நீர் குட்டைகளில் செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து காணப்பட்டன. நீர்நிலைகளில் பாசி படிந்த இடத்தில் எல்லாம் பவளங்கள் சிதறிக் கிடந்தன. நெல் பயிர்கள் நிறைந்த வயல் பரப்புகளில் அன்னப்பறவைகள் கூடிக்கிடந்தன. வயல்களின் பக்கத்தில் செந்தேன் போன்று சுவைமிக்க கரும்புகள் நிறைந்திருந்தன.  சந்தன மரங்கள் நிறைந்த சோலைகளில், மது உண்டு மகிழும் வண்டுகளின் கூட்டம் காணப்பட்டது"  எனக் கோசலை நாட்டின் வளத்தினை கூறுகிறார்.

கோசலை நாட்டு - மருத நில வளம்

          கோசல நாட்டில் உள்ள மருதநிலத்தின் வளத்தினைப் பற்றி கம்பன் கூறும் போது, "பெருமைக்குரிய கோசல நாட்டின் மருத நிலத்து எல்லைக்குள்; ஆற்றுநீர் பாய்வதால் எழும் ஓசையும், உழவர்கள் கரும்பாலையில் கரும்பு ஆட்டுவதால் எழும் ஓசையும், கரும்பாலையில் கருப்பஞ்சாறு பாய்வதால் எழுகின்ற ஓசையும், ஆற்றங்கரைகளில் காணப்படும் சங்குகளில் இருந்து எழும் ஓசையும், நீர்நிலைகளில் எருதுகள் தம்முள் மோதி பாயும்போது எழும் ஓசையும், வெவ்வேறாக இருந்தாலும், அவை ஒன்றோடு ஒன்று கலந்து ஒலித்தது  " எனக் கூறுகிறார். மேலும்,

        "தண்டலை மயில்கள் ஆட, தாமரை விளக்கம் தாங்க,

         கொண்டல்கள் முழவின் ஏங்க, குவளைக்கண் விழித்து 

                                                                              நோக்க,

        தென் திரை எழினி  காட்ட, தேம் பிழி மகர யாழின்,

        வண்டுகள் இனிது பாட, மருதம் வீற்றிருக்கும் மாதோ" 

எனச் சோலையில் மயில்கள் ஆடும் அழகையும், தாமரை மலர்கள் மலர்ந்திருக்கும் காட்சியையும், மேகத்தின் இடி முழக்கத்தையும், வண்டுகளின் இசையையும் கேட்டு மகிழ்ந்தவாறு மருத நாயகி அமர்ந்திருந்த நிலையினை சிறப்பித்துக் கூறியுள்ளார்.

கோசலை நாட்டின்  -  கடல் வாணிகம்

          கோசலை நாட்டின் கடல் வளத்தை பற்றி கம்பன் கூறும் போது, "மன்னன் ஆளும் முறையை அறிந்து, ஆசையை போக்கி, கோபப்படும் இடத்தில் கோபப்பட்டு, தன் குடிமக்களின் துன்பங்களை அறிந்து அவர்கள் மனம் வருந்தாமல் வரிகளை விதித்து, மக்களை நல்ல நிலையில் பாதுகாத்து வரும் மன்னனைப் பார்த்து பூமாதேவி சுமை நீங்கியதாக எண்ணி இளைப்பாறு வாள். அதுபோல, பொன் பொருள்களை ஏற்றி வந்த கப்பல் நெய்தல் நிலத்தில் அப்பொருள்களை இறக்கி வைத்துவிட்டு தனது நீண்ட முதுகு இளைப்பாறுவது போல கடற்கரையில் ஓய்வெடுத்து நிற்கும் " எனக் கூறுவதன் மூலம், அங்கு கடல் வாணிகம் சிறந்து இருந்ததை அறிய முடிகிறது.

கோசலை நாட்டின்  - செல்வச் செழிப்பு

          கோசல நாட்டின் செல்வச் செழிப்பினை பற்றி கம்பர் கூறும்போது "ஆண் வண்டுகள்,கோசல நாட்டில் உள்ள இளம் பெண்கள் தங்களின் கண்களில் அணிந்திருந்த கருமை நிறமையினை கண்டு, பெண் வண்டுகள்  என எண்ணி காதல் கொண்டு மருதநிலத்திலேயே தங்கி இருந்தன. மேலும், கோசலை நாட்டில் உள்ள சமையல் அறையில் அரிசி கழுவி வடிக்கப்பட்ட நீரானது, பாக்கு மரங்கள் நிறைந்த சோலைக்குள் சென்று அவற்றை வளப்படுத்தி விட்டு, செந்நெல் நடப்பட்ட வயலை விளைவித்தது. அங்கு காணப்பட்ட குப்பை மேட்டினை, சேவல் கோழிகள் தன் காலால் கிளறும் போது சிறப்புமிக்க மாணிக்கக் கற்கள் வெளிப்பட்டன. அம்மாணிக்கக் கற்களை மின்மினிப்பூச்சிகள் என எண்ணி குருவிகள் அவற்றை எடுத்து தனது கூட்டில் கொண்டுபோய் வைத்தன."எனக் கூறுகிறார். மேலும், அங்குள்ள ஆயர்குலப் பெண்கள் தயிர் கடையும் அழகினை,

" தோயும் வெண் தயிர் மத்து ஒலி துள்ளவும்,

 ஆய வெள் வளை  வாய் விட்டு  அரற்றவும்,

 தேயும் நுண் இடை சென்று வணங்கவும்,

 ஆயர் மங்கையர் அங்கை வருந்துவார். "

 

எனத் தயிர் கடையும் போது ஆயர்குல பெண்களின் கையில் அணிந்திருந்த வளையல் எழுப்பும் ஓசையினை குறிப்பிடுகிறார்.

மேலும், கோசலை நாட்டில், "தினைப் புனங்களில் கிளிகளின் பாட்டும், மலர்கள் நிறைந்த சோலைகளில் வண்டுகளின் பாட்டும், நீர்நிலைகளில் பறவைகளின் பாட்டும், வள்ளல் தன்மை கொண்ட சான்றோர்களின் வீட்டில் உலக்கைப் பாட்டும் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டே இருந்தன.” பெரிய அகலமான கண்களையும், பிறையைப் போன்ற நெற்றியை உடைய பெண்கள் எல்லோரும் சிறந்த செல்வத்தையும், உயர்ந்த கல்வியையும் பெற்றிருந்தார்கள். அவர்கள், வறுமையால் வருந்தி உதவி நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வதும், விருந்தினருக்கு உணவளிப்பதும், அல்லாமல் வேறு வேலைகள் எதுவும் இல்லாதவர்களாக காணப்பட்டார்கள்." எனக் கோசலை நாட்டின் செல்வச் செழிப்பினை கம்பர் கூறுகின்றார்.

கோசலை நாட்டின் மக்கள் அனைவரும் நல்லவரே!

          கோசல நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் நல்ல பண்புகளைக் கொண்டவர்கள். அங்கு, "எவரிடமும் குற்றம் இல்லாததால் கூற்றுவனின் கொடுமை அந்நாட்டில் இல்லை. நாட்டு மக்களின் மனம் செம்மையானால், சினம் அந்நாட்டில் இல்லை. அவர்கள் நல்ல அறச்செயல்களை தவிர வேறு எச்செயலும் செய்யாததால், மேன்மையை தவிர இழிவான கீழ்மை அந்நாட்டில் இல்லை " எனக் கம்பர் கூறுகிறார்.

கோசலை நாட்டில் வறுமை இல்லை

 கோசல நாட்டில் வறுமை இல்லை என்பதனை கம்பன் கூறும்போது,

“வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்;

 திண்மை இல்லை, ஓர் செறுநர் இன்மையால் ;

 உண்மை இல்லை, பொய் உரை இலாமையால்;

 வெண்மை இல்லை, பல் கேள்வி மேவலால்.”

எனக் கூறுவதோடு, கோசல நாட்டிற்கு 'எள்ளும், திணையும், சோளமும், சாமையும், கொள்ளும் மிகுதியாகக் கொண்டு வரும் வண்டிகளும், சேறு நிறைந்த உப்பு வயலில் இருந்து உப்பை கொண்டுவரும் வண்டிகளும்  பாரம் மிகுதியால், மனிதர்கள் தள்ளிக் கொண்டே செல்லும் நிலையில் காணப்பட்டது. மேலும், தாம் செய்த செய்வினையின் காரணமாக பல பிறவிகளை எடுத்து மண்ணில் பிறக்கும் உயிர்களைப் போல, சர்க்கரையும், தேனும், தயிரும், கள்ளும் அங்குள்ள  ஆயர்குடியில் மிகுதியாகக் காணப்பட்டன." எனக் கூறுகிறார்.

மக்களின் ஒழுக்கத்தால் அறம் பெருகுதல்

          “கோசல நாட்டில் உள்ள மக்கள், அக அழகு, புற அழகு பெற்று காணப்பட்டனர். அவர்கள் பொய் பேசாததால்  நீதி நிலைத்து நின்றது. அந்நாட்டுப் பெண்களின் அன்பால் அறங்கள் நிலைபெற்றன. பெண்களது கற்பினால் பருவமழை  பொய்க்காது பெய்தது. சோலைகள் சூழ்ந்த கோசல நாட்டை சரயு நதி பாய்ந்து வளப்படுத்தியது. அந்நாட்டின் எல்லையை யாரும் காண முடியாது." எனக் கம்பர் குறிப்பிடுகிறார்.

முடிவுரை

 கம்பராமாயணத்தில் உள்ள பாலகாண்டத்தில் காணப்படும், நாட்டுப் படலத்தில் கோசலை நாட்டின் வளமும், மருத நிலத்தின் சிறப்பும், கடல் வணிகம் மற்றும் செல்வ செழிப்பும், மக்களின் ஒழுக்க நிலையையும் கம்பர் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார்.

----------- இராஜாலி -----------

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2022

சீவக சிந்தாமணி - விமலையார் இலம்பகம்

 


 திருத்தக்க தேவர்

முன்னுரை

          ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவரால் கிபி 9 ஆம் நூற்றாண்டில் பாடப்பட்டதாகும். சமண கருத்துக்களை கூறும் சமண காப்பியமாக இக்காப்பியம் விளங்குகிறது. சீவகசிந்தாமணி; நாமகள் இலம்பகம், முதலாக முத்தி இலம்பகம் ஈராக 13 இலம்பகங்களை  கொண்டுள்ளது. மணநூல் எனவும் அழைக்கபடும் இக்காப்பியத்தில் 3145 விருத்தப் பாடல்கள் காணப்படுகின்றன.

விமலையார் இலம்பகம்

          சீவகசிந்தாமணியில் எட்டாவது இலம்பகமாக காணப்படுவது, விமலையார் இலம்பகம் ஆகும். இதில் 106 பாடல்கள் காணப்படுகின்றன. இவ்இலம்பகத்தில் சீவகன், சோலையில் தங்கியிருந்த தனது தாயாகிய  விசயை சந்திக்கச் செல்கிறான். அவனைக் கண்ட விசயை, அரச நீதியையும் ஆட்சி முறையையும் அறிவுரையாக கூறுகிறாள். மேலும், தனது நாட்டைக் கைப்பற்றிய கட்டியங்காரனைக் கொல்ல தாய்மாமன் கோவிந்தனைத் துணையாக கொள்ளும்படி சீவகனுக்கு அறிவுரைகளை கூறுகிறாள். சீவகனும் தாய்க்கு ஆறுதல் கூறிக்கொண்டு கோவிந்தனைத் தேடி நண்பர்களோடு புறப்படுவதாக இவ்இலம்பகம் கூறுகிறது.

 

விசயை சீவகனுக்கு அறிவுரைகள் கூறுதல்

          விசயை; மரவ மரம், நாகமரம், மணம் வீசும் செண்பக மரமும், குரவ மரமும், கோங்க மரமும், குடம் போன்று காய்காய்க்கும் சுரபுன்னை மரமும் கலந்து காணப்பட்ட சோலையில் தனது மகனாகிய சீவகனை பார்த்து பின்வரும் நீதிக் கருத்துக்களை கூறினாள்.

"சீவகனே! அழிக்கமுடியாத மலையிலும் காட்டிலும் பெரும் செல்வத்தோடு வாழ்கின்ற குறுநில மன்னர்களின் மகளை மணமுடித்து கொள்ளுவதும், நாட்டை ஆளும் வலிமைமிக்க அரசர்களின் மகளை திருமணம் செய்து கொள்வதும் காலங்காலமாக மன்னர்களின் வழக்கமாக இருந்து வருகின்றது என்பதினை நூல்களைக் கற்றறிந்த சான்றோர்கள்  அறிந்துள்ளார்கள். என்பதை அறிவாயாக!"

"அரசியல் முறையால், ஆறில் ஒரு பகுதியை வரியாகப் பெற்று செல்வத்தை சேர்க்கவேண்டும், பழமையான பகையினை தன் மனதில் நிலையாக வைத்திருக்க வேண்டும். முள்ளைக் கொண்டு முள்ளை எடுப்பதுபோல  பகைவரின், பகைவரை நண்பராக்கி அவரைக் கொண்டு பகைவனை அழிக்க வேண்டும். இது அரச நீதி ஆகும்!"

"ஒற்றர்களை, ஒற்றர்களை கொண்டு ஆராய்ந்து அறிதல் வேண்டும். அற நூல்களைக் கற்றறிந்த அமைச்சர்களை கண்ணை போல் காப்பாற்ற வேண்டும். மந்திரிகளின் சுற்றத்தையும் தந்திரிகள் சுற்றத்தையும் சிறந்த வகையில் ஆராய்ந்து பெருக்க வேண்டும். இவை தான் வெற்றி பெறுவதற்கான அரச சூழ்ச்சியாகும்."

"பொன்னாபரணங்களால் அழகு செய்யும் மார்பை உடைய சீவகனே! பல வெற்றிகளைப் பெறுவதும், நாட்டை மேம்பாடு அடையச் செய்வதும், மட்டும் போதாது. கல்வி அழகை அனைவருக்கும் கொடுத்து, பொருளில் குன்றியவரை மலை போன்ற செல்வந்தராக மாற்றுவதும் அரச கடமையாகும் "

"பொன்  பொருளைச் செலவு செய்து நாட்டை காவல் செய்யும் பெரும் படையை உருவாக்கலாம், அப்படையால் பல நாடுகளை வெற்றி கொள்ளலாம். வெற்றிகள் மூலம் பெரும் செல்வத்தை குவிக்கலாம். செல்வத்தால் அடையமுடியாது பெரு வீடு கிடைக்கும்."

"காளை போன்ற வீரமிக்க சீவகனே! இப்பொழுது நாம் நிலத்தை இழந்து, செல்வத்தில் குறைந்து, நல்ல குலத்திலும் தாழ்ந்த நிலையில் காணப்படுகிறோம். மேலும், இப்பொழுது நம்மிடம் கலைக்கணாளரும், நல்ல அமைச்சர்களும் இல்லை. இந்த நிலையில் கட்டியங்காரன் அழிக்க நீ எவ்வாறு துணிந்தாய்?" என விசயை சீவகனைப் பார்த்து கேட்டாள்.

சீவகன் விசயைக்கு ஆறுதல் கூறுதல்

          விசயை கூறியதைக் கேட்ட சீவகன் தாயை பார்த்து " அன்னையே! தீயைப் போன்ற ஆற்றல் உடையவன் நான். இடியைப் போன்ற குரலை உடைய சிங்கம் ஒரு நரியுடன் போர் புரிவது என்றால், அதற்கு சூழ்ச்சிகள் எதுவும் தேவை இல்லை. என்னை எண்ணி நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். கட்டியங்காரன் பாம்பு என்றால், அழகிய மாலைகளை அணிந்த நந்தட்டன் கருடன் ஆவான். " எனக் கூறினான்.

 விசயை மேலும் அறிவுரை கூறுதல்

          அதனைக் கேட்ட விசயை மகிழ்ந்து, ஒளி பொருந்திய அழகுடைய நந்தட்டனைப் பார்த்து மனம் மகிழ்ந்து அவனை தன் கையால் தீண்டி, அன்பினால் கனிந்து பார்த்து அவனுடைய வயிரத் தூணைப் போன்ற தோள்களை பார்த்து  " கட்டியங்காரன், கவர்ந்த நிலத்தை இத்தோள்கள் மீட்காமல் போகுமோ? " எனக் கூறினாள்.

          மேலும், விசயை சீவகனை பார்த்து "பகல் பொழுதில், காட்டிலுள்ள ஒரு காக்கை, ஆயிரம் கூகைகள் குடியிருக்கும் இடத்திற்கு சென்று அவற்றைக் கொல்லும். அதுபோல, இடத்தையும் காலத்தையும் கருத்தில் கொண்டு எந்த செயலையும் செய்தால் அவர்களால் முடியாதது ஒன்றுமில்லை. சில நேரங்களில், குகையில் வாழும் சிங்கம் இடம் அறியாமல் நரிகள் வாழும் மூங்கில் காட்டில் சென்று நரி இடம் மாட்டிக் கொள்வதை போல ‘யாம் வீரம் உடையோம்’ என நினைத்து, காலம், இடம் உணராமல் எச் செயலையும் செய்யக்கூடாது  " என அறிவுரைகளைக் கூறினாள்.

முடிவுரை

இவ்வாறு விசயை, சீவகனிடம்  கட்டியங்காரனை வெல்வதற்கு வேண்டிய வழிகளையும், அரச நீதிகளையும் அறிவுரையாக கூறுவதாக விமலையார் இலம்பகம் கூறுகிறது.

......இராஜாலி......

வியாழன், 18 ஆகஸ்ட், 2022

மணிமேகலை - பாத்திர மரபு கூறிய காதை


 முன்னுரை

          ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை கி.பி இரண்டாம் நூற்றாண்டில், சீத்தலைசாத்தனாரால் இயற்றப்பட்டதாகும். சிலப்பதிகாரத்தின்  தொடர்கதையாக அமையும் இக்காப்பியம் இரட்டைக் காப்பியங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. பௌத்த சமயக் கருத்துக்களைக் கூறும் இக்காப்பியம், முப்பது காதைகளையும் 4755 அடிகளையும் கொண்டதாகும். ‘மணிமேகலை துறவு’ எனவும் இக்காப்பியம் அழைக்கப்படுகிறது.

 பாத்திர மரபு கூறிய காதை

          மணிமேகலையில், பதினான்காவது காதையாக காணப்படுவது ‘பாத்திர மரபு கூறிய காதை’ ஆகும். இதில் அறவண அடிகள்; மணிமேகலை, மாதவி மற்றும்  சுதமதி  ஆகியோரிடம், ஆபுத்திரனுக்கு அமுதசுரபி கிடைத்த செய்தியையும், அமுதசுரபியின் தன்மையையும் கூறுவதாக இக்காதை அமைந்துள்ளது.

அறவண அடிகள் அமுதசுரபியின் தன்மையை கூறுதல்

தனக்கு முன்னால் அமர்ந்திருந்த மணிமேகலையை பார்த்து அறவண அடிகள், "பூங்கொடியை போன்ற அழகு பொருந்திய மணிமேகலையே கேட்பாயாக!" என ஆபுத்திரன் அமுதசுரபி பெற்ற செய்தியை பின்வருமாறு கூறினார்.

வழிப்போக்கர்கள் ஆபுத்திரன் இடம் உணவு வேண்டுதல்

மழை பெய்து கொண்டிருந்த ஒருநாள் இரவில் ஆபுத்திரன் தூங்கிக் கொண்டிருந்த சிந்தாதேவி ஆலயத்திற்குள் வந்த வழிப்போக்கர்கள், ஆபுத்திரனை எழுப்பி " வயிறு காய் பெரும் பசி மலைக்கும் "என தாங்கள் பசியால் வாடுவதைக் கூறினார்கள். அவர்களின் பசியைப் போக்க உணவு எதுவும் இல்லாத நிலையில் வருந்திய ஆபுத்திரன், சிந்தா தேவியின் முன் உள்ளம் உருகி வேண்டினான்.

சிந்தாதேவி அமுதசுரபியை கொடுத்தல்

          பிறர் துன்பம் கண்டு வருந்திய ஆபுத்திரன் முன்பு சிந்தாதேவி தோன்றி,

"நாடு வறம் கூறினும் இவ்   ஓடு வறம் கூறாது

 வாங்குநர் கைஅகம் வருத்துதல் அல்லது

 தான் தொலைவு இல்லாத் தகைமையது "

எனக்கூறி, தனது கையில் இருந்த அமுத சுரபியை ஆபுத்திரனிடம்  கொடுத்து மறைந்தது.

 சிந்தா தேவியைப் போற்றுதல்

          அமுத சுரபியை பெற்ற ஆபுத்திரன்,"சிந்தா தேவியே! அழகு பொருந்திய இக்கோயிலில் நந்தா விளக்காக விளங்குபவளே! புலவர்களின் நாவில் இசையாக இருப்பவளே! தேவர்களுக்குத் தலைவியாகவும் மண்ணில் உள்ளோருக்கு மூத்தவளாகவும்   இருந்து துன்பப்படுபவர்களின் துயரத்தை போக்குபவளே!" என தேவியை வணங்கி அப்பாத்திரத்தை கொண்டு அவர்களின் பசியைப் போக்கினான். வாங்குவோரின் கை வருந்தும் படியாக மன்னுயிர் அனைத்திற்கும் உணவளித்தான். பழுத்த மரத்தை நாடி பறவைகள் வருவதுபோல ஆபுத்திரனை நாடி வந்து பசியாறி சென்றனர் பலர். ஆபுத்திரனின் புகழ் இந்திரலோகம் வரை சென்றது.

ஆபுத்திரனை காண இந்திரன் வருதல்

          ஆபுத்திரனின் செயலைக் கேள்விப்பட்டு வியந்த இந்திரன் அதனை காண்பதற்காக,  மறையவன் போல கம்பு ஊன்றி தளர்ந்த நடையுடன் ஆபுத்திரன் முன்பு வந்து "உன் பெரும் தானத்து உறுபயன் கொள்க" எனக் கூறினான். அதனைக் கேட்ட ஆபுத்திரன்  "பசி நோயினால் வருந்தியவர்களுடைய பசியினை தீர்த்து அவர்களுடைய இனிய முகத்தை நான் காணும்படி செய்கின்ற எனது தெய்வத்தன்மை பொருந்திய பாத்திரம் ஒன்றே எனக்குப் போதும். வேறு ஒன்றும் எனக்கு வேண்டாம்" எனக்கூறி, இந்திரனை அவமதித்தான். இதனால் ஆத்திரமடைந்த இந்திரன், கோபப்பட்டு, ஆபுத்திரனின் செருக்கினை போக்க எண்ணி 'பசிப்பிணியால் வருந்துவோர் இல்லாத நிலையை உருவாக்க விரும்பி  மழையினை பெய்வித்து, வறுமையைப் போக்கி’ அனைவருக்கும் வளத்தை கொடுத்தான். இதன் காரணமாக பசியினால் வருந்துவோர் இல்லாத நிலை அவ்வூரில் ஏற்பட்டது. பாண்டியநாட்டில் பெருமழை பொழிந்து, வயல் வளம் பெருகியதால் மக்கள் பசியில் வருத்தம் தெரியாமல் வாழ்ந்தனர். உணவு வேண்டி யாரும் ஆபுத்திரன் இடம் செல்லும் நிலை ஏற்படவில்லை. எனவே, ஆபுத்திரன் அமுதசுரபியை கையில் எடுத்துக்கொண்டு, சிந்தாதேவியின் ஆலயத்தை விட்டு வெளியேறி  “ஊரூர்  தோறும் உண்போர் உண்டோ” என வினவ, அதுகேட்டு  செல்வத்தில் களித்த மக்கள் ‘யார் இவன்?’ என இகழ்ந்து பேசினர். இதனால் மனம் வருந்திய ஆபுத்திரன் அங்கிருந்து சென்றான்.

சாவக நாட்டை நோக்கி ஆபுத்திரன் செல்லுதல்

          உணவு வாங்குவதற்கு யாரும் இல்லாத நிலையை கண்டு வருந்திய ஆபுத்திரனை, கப்பலில் வந்து இறங்கிய வணிகர்கள் சிலர் கண்டு  வணங்கி,

 " சாவக நல் நாட்டு தன் பெயல் மறுத்தலின்

 உன் உயிர் மடிந்தது உரவோய் "

எனக் கூறினார்கள். அதனைக் கேட்ட ஆபுத்திரன், அமுத சுரபியை கையில் எடுத்துக்கொண்டு, சாவக நாட்டிற்கு செல்வது இறைவனின் சித்தம் என எண்ணி சாவகம் செல்லும் கப்பலில் ஏறிப் பயணித்தான். கப்பல் மணிபல்லவத்தீவில் அருகே செல்லும்போது, பெருங் காற்று வீசியதால் மணிபல்லவத்தீவில் ஒரு நாள் பயணிகள் அனைவரும் தங்கும் நிலை ஏற்பட்டது. மறுநாள், கப்பலில் இருந்து இறங்கியவர்கள் எல்லோரும் ஏறி விட்டார்கள் என எண்ணி மாலுமி கப்பலை ஓட்டிச் சென்றுவிட்டார். மனிதர்களில் யாரும் இல்லாத தீவில் தானும் அப்பாத்திரமும் தனித்து இருப்பதை எண்ணி வருந்தினான் ஆபுத்திரன்.

கோமுகிப் பொய்கையில் அமுதசுரபியை வீசுதல்

 மணிபல்லவத் தீவில் தனித்திருந்த ஆபுத்திரன்,

" மன் உயிர் ஓம்பும் இம் மா பெரும் பாத்திரம்

 என் உயிர் ஓம்புதல் யானோ பொறே என்

 தவம் தீர் மருங்கின் தனித் துயர் உழந்தேன்

 சுமந்து என் பாத்திரம்?"

என பாத்திரத்தை  தொழுது, எதிரே இருந்த கோமுகி என்னும் பொய்கையில்,

 " ஓர் ஆண்டு ஒருநாள் தோன்று"

எனக்கூறி வீசியது மட்டுமல்லாமல்,

" அருள் அறம் பூண்டு ஆங்கு ஆருயிர் ஓம்புநர்

 உளர் எனில் அவர் கைப் புகுவாய் "

என வேண்டியவாறு ஆபுத்திரன் உண்ணாநோன்பு இருந்தான்.

பசுவின் வயிற்றில் மீண்டும் பிறத்தல்

          அப்பொழுது, மணிபல்லவத்தீவுக்கு வந்த அறவணஅடிகள் ஆபுத்திரனிடம் 'என்ன நடந்தது?' என கேட்க, அவன் மேற்கண்ட செய்திகளைக் கூறிவிட்டு, கிழக்கில் தோன்றிய சூரியன் மேற்கே மறைவது போல மணிபல்லவத்தீவில் தன் உடம்பை விட்டுவிட்டு, உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தையும் காக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, சாவக நாட்டில் உள்ள ஒரு பசுவின் வயிற்றில் மீண்டும் பிறந்தான். என அறவண அடிகள் தானறிந்த செய்தியை மணிமேகலையிடம்  கூறினார்.

முடிவுரை

          மணிமேகலையில், பதினான்காவது காதையாக காணப்படும் ‘பாத்திர மரபு கூறிய காதையில்’, அறவணஅடிகள், மணிமேகலையிடம் ஆபுத்திரன் பெற்ற அமுதசுரபியின் தன்மையையும், பசித்தவர்களுக்கு உணவளித்த ஆபுத்திரனின் செயலையும் எடுத்துக்கூறுவதாக காணப்படுகிறது. என்பதனை இக்கட்டுரையின் மூலம் அறிய முடிகிறது.

                                                   ...........இராஜாலி............

சனி, 23 ஜூலை, 2022

தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்

முன்னுரை

      தமிழர்கள் காலந்தோறும், இராமாயணம், மகாபாரதம், புராணக் கதைகள், கிராமியக் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், மரியாதைராமன் கதைகள், தெனாலிராமன் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள் என பல்வேறு கதைகளைக் கேட்டு வருகின்றனர். கதைகளின் வழியாக ஒழுக்கநெறிகள், வாழ்வியல் கூறுகள் அறிவுறுத்தப்படுகின்றன. மேலும், தமிழ் இலக்கிய வடிவத்தில் சிறுகதை இலக்கியம் பல தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளது. அத்தகைய தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும், வளர்ச்சியும் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

தொல்காப்பியர் கூறும் கதை மரபு

      கதை சொல்லும் மரபு தொன்றுதொட்டு இருந்து வந்த வழக்கம் என்பதைத் தொல்காப்பியர்,

'பொருள் மரபில்லாப் பொய்ம்மொழி யானும்

பொருளோடு புணர்ந்த நகைமொழியானும்' 

என்று உரைப்பார்.

சிறுகதைக்கான இலக்கணம்

   அரைமணி முதல் இரண்டு மணிநேரத்துக்குள் படித்து முடிக்கக்கூடியது சிறுகதை என்பார் எட்கர் ஆலன்போ. சுருங்கச் சொல்லுதலும், சுருக்கெனச் சொல்லுதலும் இதன் உத்திகளாகும். அதனால் நீண்ட வருணனைகளுக்கு இங்கு இடமில்லை. குதிரைப் பந்தையம் போலத் தொடக்கமும் முடிவும் இருத்தல் வேண்டும். சுவைமிக்கனவாக இருத்தல் வேண்டும் என்பர், செட்ஜ்விக். புதினம் புளியமரம் என்றால், சிறுகதை தென்னைமரம் என்பார் இராசாசி, செகாவிவ் என்பவர் தரமிக்க சிறுகதைகளைத் தந்து சிறுகதைப் படைப்புக்கான நோபல் பரிசைப் பெற்றார். இவரைச் சிறுகதை உலகின் தந்தை என அழைப்பர்.

சிறுகதை தோன்றிய சூழல்

   19ம் நூற்றாண்டில்  இலக்கியத்தின் மாற்றங்கள் ஏற்பட்டு இலக்கியப்  பரப்பிலும் வடிவத்திலும் பல்வேறு மாற்றங்கள் வந்துள்ளன. அச்சுப்பொறியின் வருகையால் தமிழ்ச் சிறுகதை வழக்கில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டது. வாய்மொழியாக வழங்கி வந்த கதைகள் பல நூல் வடிவில் அச்சுப் பெற்று வெளியிடப்பட்டன. இவ்வகையில் முதன்முதலில் அச்சில் வந்தது வீரமாமுனிவரின் 'பரமார்த்த குருவின் கதை' அதைத் தொடர்ந்து ஈசாப்பின் நீதிக்கதைகள், திராவிடபூர்வகாலக்கதைகள், தெனாலிராமன் கதைகள் போன்றவைத் தமிழில் அச்சாயின. இதனால் தமிழ்நாட்டில் கதை கேட்பது மட்டுமல்ல படிக்கும் வழக்கமும் அதிகமானது.

தமிழ்ச்சிறுகதையின் முன்னோடிகள்

· வீராசாமி செட்டியார் (1855) தாம் எழுதிய உரைநடைக் கட்டுரைகளைத் தொகுத்து 'வினோத ரசமஞ்சரி'என்று வெளியிட்டார்.

· வ. வே. சு.ஐயரின் 'குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதையை முதன்முதலில் அறிமுகப் படுத்தியது விவேக விவேக போதினி ஆகும். இவரே தமிழ்ச் சிறுகதையின் தந்தை என அழைக்கப்பட்டார். 'குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதை, மங்கையர்கரசியின் காதல் போன்ற கதைகளில் நிகழ்வு ஒருமை, கால ஒருமை, பாத்திர ஒருமை, உணர்வு ஒருமை சிறுகதைக்குரிய இலக்கணங்கள் அனைத்தும் ஒருங்கே அமைந்திருப்பதைக் காணலாம்.

· செல்வகேசவராய முதலியாரின் அபிநவக் கதைகள் என்ற  கதைகள்  தொகுப்பு பெரிதும் பாராட்டப் பட்டது.

· ஆரம்ப காலச் சிறுகதை ஆசிரியர்களுள் மாதவைய்யா குறிப்பிடத்தக்கவர். இவரது 'குசிகர் குட்டிக்கதைகள்' ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியானது. இவர் பிராமணச் சமூகத்தில் காணப்பட்ட குழந்தைத் திருமணம், விதவைகள் பட்ட துயர், வரதட்சனைக் கொடுமை முதலிய சீர்கேடுகளைப் பற்றித் தமது கதைகளின் மூலம் மிக வன்மையாகக் கண்டித்தவர்.

· மகாகவி சுப்பிரமணிய பாரதியார் வங்காள எழுத்தாளர் இரவீந்திரநாத்தாகூரின் 11 சிறுகதைகளை மொழிபெயர்த்து வெளியிட்டார்.

· கல்கி அவர்கள் சிறுகதைத் துறையில் கால்வைத்து, புதினங்களால் புகழடைந்து கல்கி இதழைத் தொடங்கினார். இவரது கதைகளில் கணையாழியின் கனவு, திருடன் மகன் திருடன், வீணை பவானி ஆகிய கதைகள் குறிப்பித்தக்கன.

· சொ.விருத்தாச்சலம் என்று அழைக்கப்பட்ட புதுமைப்பித்தன் அவர்கள் சிறுகதை மன்னன் என அழைக்கப்பட்டார். கேலியும்,கிண்டலும் கலந்த சமூகச் சாடல் இவரைத் தமிழுலகிற்கு அடையாளம் காட்டியது. சிறுகதைச் செல்வர் என்றும், தமிழ்நாட்டின் மாப்பசான் எனப் போற்றப்பட்டார். இவரது கதைகளில் கயிற்றரவு, சாபவிமோசனம், பொன்னகரம் ஆகியன காலத்தை வென்ற கதைகளாகும்.

· மௌனி என்ற புனைப் பெயரில் எழுதிய மணி அவர்களைப் புதுமைப்பித்தன் சிறுகதை உலகின் திருமூலர் என்று அழைப்பார்.

இதழ்களால் வளர்ந்த சிறுகதை

   தமிழ்ச்சிறுகதையில் மலர்ச்சிக்கு களம் அமைத்தது மணிக்கொடி சிற்றிதழாகும். இது டி. எஸ். சொக்கலிங்கம்,  சீனிவாசன் ஆகியோரால் நடத்தப்பட்டது. பின்னர் இதை முழுக்கமுழுக்க சிறுகதை இதழாக பி. எஸ். ராமையா வெளியிட்டார். இதில் புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், மௌனி போன்றவர்கள் சிறந்த சிறுகதைகளை எழுதினார்கள். இவர்கள் மணிக்கொடி தலைமுறை என்று சொல்லப்படுகிறார்கள். மேலும், மணிக்கொடி இதழில், சிறந்த சிறுகதைகளை எழுதியவர்களாக க.நா.சுப்ரமணியம், சி.சு.செல்லப்பா, ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், லா.ச.ராமாமிருதம், சுந்தரராமசாமி, கு.அகிரிசாமி, ந.பிச்சமூர்த்தி, கி.ராஜநாராயணன், மு.வ, அகிலன் போன்றவர்கள் குறிப்பிடப்படுகிறார்கள்.

சிறுகதை வளர்ச்சியில் பிற காரணிகள்

     இதழ்கள் பல்வேறு வகையான சிறுகதைப் போட்டிகளை உருவாக்கி சிறுகதை எழுத்தாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தின. அதைப் போலவே சிறுகதை தொகுப்பு முயற்சிகளாலும் அமைப்புகளின் பரிசுத் திட்டங்களாலும் சிறுகதை சிறப்பாக வளர்ச்சியடைந்து வந்துள்ளது.

அயல்நாடுகளில் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சி

    தமிழ்ச் சிறுகதை வளர்ச்சி என்பது தமிழக எல்லையோடு நின்றுவிடவில்லை. தமிழ் பேசும் பிற நாடுகளிலும் அதன் வளர்ச்சியைக் காண இயலும். தமிழர்கள் அதிகம் வாழும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர்களும் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிக்கு வளம் சேர்த்துள்ளனர்.

தொழில்நுட்பத்தில் சிறுகதை

   இதழ்களால் வளர்ந்த சிறுகதை, இணையத்தாலும் வளர்ச்சியினைப் பெற்றது. சிறுகதைக்கென பல இணையதளங்களும் வலைப்பூக்களும் காணப்படுகின்றன. மேலும், அலைபேசியிலும், பிரதிலிபி போன்ற செயலிகளும் சிறுகதைகளைப் பதிப்பித்து சிறுகதை தேயாது வளம் பெறும் பங்கினைச் செவ்வனே செய்கின்றன.

 முடிவுரை 

       காலத்துக்கு ஏற்ப வளர்ந்து வந்ததமிழ்ச்சிறுகதை இன்றைய அவரசகாலத்துக்கு ஏற்ப ஒருபக்கக் கதை, அரைப்பக்கக் கதை, கால்பக்கக் கதை, மைக்ரோக்கதை என தன் வடிவத்தை மாற்றிக் கொண்டுள்ளது. உலக சிறுகதைகளுக்கு இணையாக தமிழ்ச்சிறுகதை வளர்ச்சி அடைந்துள்ளது.

......இராஜாலி......

வியாழன், 14 ஜூலை, 2022

சிலப்பதிகாரம் - ஊர்காண் காதை

 

“சிலப்பதிகாரம்  -   ஊர்காண் காதை”

  

முன்னுரை

          ஐம்பெருங்காப்பியங்களில் முதன்மையானதாக கருதப்படும் சிலப்பதிகாரம் கி.பி இரண்டாம் நூற்றாண்டில் இளங்கோவடிகளால் எழுதப்பட்டதாகும். முதன்மைக் காப்பியம், முத்தமிழ் காப்பியம், குடிமக்கள் காப்பியம், புரட்சிக் காப்பியம் என அழைக்கப்படும், சிலப்பதிகாரம் கோவலன், கண்ணகி,மாதவி இவர்களில் வரலாற்றைக் கூறுவதாகும். இக்காப்பியம், புகார் காண்டம் , மதுரைக்காண்டம், வஞ்சிக் காண்டம் என்ற மூன்று காண்டங்களையும் முப்பது காதைகளையும்  கொண்டதாகும். தொடர்நிலைச் செய்யுளாக அமைந்த இக்காப்பியத்தில், 5001 பாடல்கள் காணப்படுகின்றன.

ஊர்காண் காதை

          மதுரைக் காண்டத்தில், நான்காவது காதையாக விளங்குவது ‘ஊர்காண் காதை’ ஆகும். இதில், மதுரையை நோக்கி வந்த, கோவலனும் கண்ணகியும் கவுந்திஅடிகளுடன் புறஞ்சேரியில் தங்கி இருந்தார்கள். பொழுது விடிந்ததும், கோவலன்  கவுந்திஅடிகளைத் தொழுது, தனது மனத் துயரங்களை எடுத்துக் கூறியதோடு, தன்னால் கண்ணகிக்கும் நேர்ந்த துன்பங்களை கூறி  வருந்தினான். கவுந்திஅடிகள்  கோவலனுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் கோவலன் கண்ணகியை கவுந்தியடிகளின் பாதுகாப்பில் விட்டுவிட்டு,  மதுரை நகருக்குள் சென்று பல்வேறு காட்சிகளைக் கண்டான். பல்வேறு கடைகளையும், தெருக்களையும் கண்டு மீண்டும் புறஞ்சேரிக்கு திரும்பி வந்தான். என்ற செய்தியை கூறுவதாக 'ஊர் காண் காதை' அமைந்துள்ளது.

பொழுது புலர்ந்தது

        புறஞ்சேரியில் காணப்பட்ட சோலைகளிலும், நீர் நிறைந்த பண்ணைகளிலும், கதிர் முற்றி வளைந்த வயல்களிலும் பறவைகள் துயிலெழுந்து ஒலி எழுப்பின. சூரியன் உதயம் ஆனதால் குளங்களில் உள்ள தாமரைகள் மலர்ந்தன. பகை அரசர்களுக்கு தலை நடுக்கத்தை கொடுக்கும் பாண்டிய மன்னனின் வாளில் இருந்து எழும் ஒளியைப் போல மதுரை முழுவதும் சூரிய ஒளி பரவி மக்களை துயில் எழுப்பியது.

சங்கும் முரசும் ஒலித்தன

        புறஞ்சேரியில், நெற்றிக் கண்களையுடைய சிவபெருமான் கோயிலும், கருடக் கொடியை உடைய திருமாலின் கோயிலும், வெற்றிதரும் கலப்பை படையினை ஏந்திய பலராமன் கோயிலும், சேவல் கொடியை உடைய முருகப் பெருமான் கோயிலும், அறத்தை போதிக்கும் அறவோன் பள்ளியும், வீரம் விளைந்த மன்னனின் கோயிலும் காணப்பட்டன. அங்கு,தூய வெண் சங்கும், காலை முரசும் முழங்கி காலைப் பொழுதை அறிவித்தன.

கோவலன் கவுந்தி அடிகளை வணங்கி தன் நிலையை கூறுதல்

        அப்பொழுது கோவலன், தியானத்தில் இருந்த கவுந்தி அடிகளைக் கண்டு கையால் தொழுது வணங்கி போற்றினான்.

 "நறுமலர் மேனி நடுங்குதுயர் எழுத

 அறியாத் தேயத்து ஆரிடை உழந்து

 சிறுமை உற்றேன் செய்தவத் தீர்யான்"

 

என கண்ணகிக்கு தான் இழைத்த தவறினை கூறினான். மேலும், சிறப்புமிக்க இம்மதுரையிலுள்ள பெரு வணிகர்களிடம் எனது நிலையினை கூறி திரும்ப வரும் வரைக்கும் கண்ணகியை கவுந்தியடிகளின்  பாதுகாப்பில் வைத்துக் கொள்ளும்படி  வேண்டிக் கேட்டுக் கொண்டான்.

கவுந்தியடிகளின் அறிவுரைகள்

கோவலனின் துயர மொழி கேட்ட கவுந்தியடிகள் அவனைப்பார்த்து "முற்பிறவியில் செய்த தீவினையின் காரணமாக காதலியுடன் பெரும் துயரம் அடைந்த கோவலனே! மனிதர்கள்,  'தீமையை விட்டு விலகுங்கள். விலக வில்லை எனில் தீய செயல் தன் பயனாகிய துன்பத்தை தருவிக்கும்' என அற நூல்களை கற்றறிந்த சான்றோர்கள் கூறிய கருத்துக்களை பொருட்படுத்தாமல்  செயல்பட்டு துன்பப்படுகிறார்கள். அவ்வாறு, அவர்கள் படும் துன்பத்தை கண்டு  ஞானிகள் யாரும் வருத்தப்பட மாட்டார்கள். பெண்களைப் பிரிந்தால் ஏற்படும் துன்பமும், பெண்களோடு புணர்ந்தால் ஏற்படும் துன்பமும் இல்லறத்தாருக்கு எப்பொழுதும் உண்டு. ஆனால் ஒப்பற்ற தவ வாழ்க்கை மேற்கொள்ளும் ஞானிகளுக்கு அத்துன்பம் கிடையாது. இவ்வுலகில், பெண்டிரும் உணவுமே இன்பம் தரும் பொருட்கள்  எனக் கருதி வாழ்வோர் முடிவில் அளவற்ற துன்பத்தை அடைவார்கள் என்பதைத் துறவிகள் உணர்ந்து, காமத்தை விலக்கினார்கள். அவ்வாறு ஞானிகள் விலக்கிய காமத்தின் மீது பற்றுக் கொண்டு பலர் துன்பத்தையே அனுபவித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

இவ்வாறு  காதல் துன்பத்தில் விழுந்தவர்கள் காலங்காலமாக இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். தந்தையின் ஏவலால் தன் மனைவியுடன் கானகம் சென்று,அவளைப் பிரிந்து கடும் துயருற்ற வேதத்தின் நாயகனாகிய இராமனின் துன்பத்தை நீ அறிவாயா? அது இராமனின் வினைப்பயன் அன்றோ?. சூதாட்டத்தில் தோற்று,மனைவி தமயந்தியுடன் காட்டிற்குச் சென்று அவளைப் பிரிந்த நளனின் கதையை அறிவாயோ? அதுவும் வினைப் பயனே!

 நீ அவர்களைப்போல துன்பம் அடையவில்லை. மனைவியை பிரியாத வாழ்க்கையை பெற்றிருக்கிறாய். எனவே, வருத்தம் கொள்ளாமல் மதுரைக்குச் சென்று தங்குவதற்கு ஏற்ற இடம் ஒன்றை அறிந்து வருவாயாக" எனக் கோவலனுக்கு அறிவுரை கூறி அனுப்பினார்.

கோவலன் மதுரை நகரை அடைதல்

          கோவலன் மதுரையை நோக்கி சென்றான். கடுமையான காவல் நிறைந்த கோட்டை மதிலைச் சுற்றி  அகழி எனப்படும் நீர்ப்பரப்பு காணப்பட்டது. அதில் யானைகள் செல்வதற்காக  குறுகிய பாதை ஒன்று காணப்பட்டது. அப்பாதையில் பகைவர்களுக்கு அச்சத்தைக் கொடுக்கும் வகையில் ஒளி பொருந்திய வாள்களை கையில் ஏந்திய யவனர்கள் காவல் புரிந்து கொண்டிருந்தார்கள்.  அவர்களுக்கு ஐயம் தோன்றாத வகையில் கோட்டைக்குள் புகுந்த கோவலன், ஆயிரம் கண்களையுடைய தேவேந்திரனின் அணிகலன்கள் சேர்த்து வைத்திருக்கும் அணிகலப் பெட்டியின் வாயைத் திறந்தது வைத்திருந்தது போல காணப்பட்ட கோட்டை வாயிலைக் கடந்து  நகருக்குள் சென்றான்.

அங்காடி வீதி

          மதுரை நகருக்குள் புகுந்த கோவலன் அங்காடி வீதியை கண்டான்.  அங்கு விற்கப்பட்ட பண்டங்களில் குறிப்பாக,

மூடாக்கு வண்டியும், பல்லாக்கும், தேரில் வைக்கப்படும்  கொடுஞ்சி  என்னும் இருக்கையும், மார்புக் கவசமும், மணி பதித்தத்  தோலாலான உடம்புக் கவசமும், தவம் புரிய உதவும் புலியின்  தோலும், வளைந்திருக்கும் குழியம் என்னும் படைக்கருவியும்,  விசிறும் வெண் கவரியும், அன்னப் பறவை போன்ற  துணிப் பொம்மையும், கேடயங்கள் போன்ற பொம்மைகளும், காடுகள் போன்று ஓவியம் வரையப்பட்ட  திரைத்துணிகளும், வயிர மாலையும், செம்பில் செய்த பொருள்களும்,  வெண்கலத்தில் செய்த பொருட்களும்,  முடிச்சுப் போட்டுச் செய்யப்பட்ட பொருள்களும், மாலையில் செய்யப்பட்ட பொருள்களும், பவளத்தால் கோக்கப்பட்ட பொருள்களும், சங்கினைக் கடைந்து செய்யப்பட்ட பொருள்களும், நறுமணப் புகைகளும், சந்தனப் பொருள்களும், பூ வேலைப்பாடுகள்  நிறைந்த பொருட்களும், அங்கு குவிந்து கிடந்தன. அரசனும் விரும்பும் கடைத்தெரு வாக அது காணப்பட்டது.  கோவலன் அந்தக் கடைத்தெரு வழியாகச் சென்றான்.

நகைக்கடையும், துணிக்கடையும்

          அங்கு, நகைக்கடைகள் மிகுதியாகக் காணப்பட்டன அவற்றில், சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூநதம்  என்ற நான்கு வகையான பொன் நகைகளை பகுத்து அறியும் வணிகர்களும், வாங்குபவர்களும் நிரம்ப காணப்பட்டார்கள். 'இது எங்கே இருக்கிறது' என அறிவிப்பதற்காக கொடிகள் கட்டப்பட்டிருந்த பொன் கடை வீதிகளை கடந்து கோவலன் சென்றான்.

 மேலும், பருத்தி, மயிர், பட்டுப்போன்ற நூல் இழைகளைக் கொண்டு மிகவும் நேர்த்தியாக நெய்யப்பட்ட புடவைகள், பலநூறு அடுக்குகளாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த துணிக்கடை வீதிகளையும் கோவலன் கடந்து சென்றான்.

கூல வீதிகள்

          மதுரை நகரில் கோவலன் கூல வீதியை கண்டான் அங்கு நிறுக்கும் துலாக்கோலை கையில் வைத்திருக்கும் வணிகர்களும், பறை என்னும் அளவு கருவியை கையில் வைத்திருக்கும் வணிகர்களும், நெல் அளக்கும் கருவியான மரக்காலை கையில் வைத்திருக்கும் வணிகர்களும், தரகு செய்யும் தரகர்களும் நிரம்ப காணப்பட்டார்கள். மேலும் அங்கு பெரிய மிளகு மூட்டைகளுடன் பல வகையான தானியங்களும் குவித்து வைத்திருப்பதை கோவலன் பார்த்துச் சென்றான்.

 கோவலன் மதிற்புறம் திரும்புதல்

அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் நான்கு வகையினர் வாழும் தெருக்களையும், முச்சந்தியிலும்,நாற்சந்தியிலும், குறுக்கு தெருக்களிலும் சூரிய ஒளியே நுழையாதவாறு சிறிய, பெரிய கொடிகள் நெருக்கமாக கட்டப்பட்டிருந்தது. கொடிகளின் நிழலிலேயே நடந்து சென்று மதுரை நகர் வளத்தைக் கண்டு மகிழ்ந்த கோவலன், கொடிகள் பறக்கும் மதில் புறத்தே வந்து சேர்ந்தான்.

 முடிவுரை

 மதுரைக் காண்டத்தில், காணப்படும், ஊர்காண் காதையில் மதுரை நகருக்குள் சென்ற கோவலன்; அங்காடி வீதியின் அழகையும், துணிக்கடைகளின் சிறப்பையும், கூல வீதியின் அழகையும் கண்டு களித்த வனாக மீண்டும் புறஞ்சேரி அடைந்த செய்தியை கூறுவதாக  இக்காதை காணப்படுகின்றது.

********* இராஜாலி  **********

யுனிக்கோட் - பயன்பாடு

அறிமுகம்    ஆங்கில மொழியைத் தவிர பிறமொழிகளிலும் பலரும் பல்வேறு குறியேற்றங்களையும் எழுத்துருக்களையும் பயன்படுத்தி வந்தனர். இந்த முறையில் ஒரே ...