எனது வலைப்பதிவு பட்டியல்

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2022

சீவக சிந்தாமணி - விமலையார் இலம்பகம்

 


 திருத்தக்க தேவர்

முன்னுரை

          ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவரால் கிபி 9 ஆம் நூற்றாண்டில் பாடப்பட்டதாகும். சமண கருத்துக்களை கூறும் சமண காப்பியமாக இக்காப்பியம் விளங்குகிறது. சீவகசிந்தாமணி; நாமகள் இலம்பகம், முதலாக முத்தி இலம்பகம் ஈராக 13 இலம்பகங்களை  கொண்டுள்ளது. மணநூல் எனவும் அழைக்கபடும் இக்காப்பியத்தில் 3145 விருத்தப் பாடல்கள் காணப்படுகின்றன.

விமலையார் இலம்பகம்

          சீவகசிந்தாமணியில் எட்டாவது இலம்பகமாக காணப்படுவது, விமலையார் இலம்பகம் ஆகும். இதில் 106 பாடல்கள் காணப்படுகின்றன. இவ்இலம்பகத்தில் சீவகன், சோலையில் தங்கியிருந்த தனது தாயாகிய  விசயை சந்திக்கச் செல்கிறான். அவனைக் கண்ட விசயை, அரச நீதியையும் ஆட்சி முறையையும் அறிவுரையாக கூறுகிறாள். மேலும், தனது நாட்டைக் கைப்பற்றிய கட்டியங்காரனைக் கொல்ல தாய்மாமன் கோவிந்தனைத் துணையாக கொள்ளும்படி சீவகனுக்கு அறிவுரைகளை கூறுகிறாள். சீவகனும் தாய்க்கு ஆறுதல் கூறிக்கொண்டு கோவிந்தனைத் தேடி நண்பர்களோடு புறப்படுவதாக இவ்இலம்பகம் கூறுகிறது.

 

விசயை சீவகனுக்கு அறிவுரைகள் கூறுதல்

          விசயை; மரவ மரம், நாகமரம், மணம் வீசும் செண்பக மரமும், குரவ மரமும், கோங்க மரமும், குடம் போன்று காய்காய்க்கும் சுரபுன்னை மரமும் கலந்து காணப்பட்ட சோலையில் தனது மகனாகிய சீவகனை பார்த்து பின்வரும் நீதிக் கருத்துக்களை கூறினாள்.

"சீவகனே! அழிக்கமுடியாத மலையிலும் காட்டிலும் பெரும் செல்வத்தோடு வாழ்கின்ற குறுநில மன்னர்களின் மகளை மணமுடித்து கொள்ளுவதும், நாட்டை ஆளும் வலிமைமிக்க அரசர்களின் மகளை திருமணம் செய்து கொள்வதும் காலங்காலமாக மன்னர்களின் வழக்கமாக இருந்து வருகின்றது என்பதினை நூல்களைக் கற்றறிந்த சான்றோர்கள்  அறிந்துள்ளார்கள். என்பதை அறிவாயாக!"

"அரசியல் முறையால், ஆறில் ஒரு பகுதியை வரியாகப் பெற்று செல்வத்தை சேர்க்கவேண்டும், பழமையான பகையினை தன் மனதில் நிலையாக வைத்திருக்க வேண்டும். முள்ளைக் கொண்டு முள்ளை எடுப்பதுபோல  பகைவரின், பகைவரை நண்பராக்கி அவரைக் கொண்டு பகைவனை அழிக்க வேண்டும். இது அரச நீதி ஆகும்!"

"ஒற்றர்களை, ஒற்றர்களை கொண்டு ஆராய்ந்து அறிதல் வேண்டும். அற நூல்களைக் கற்றறிந்த அமைச்சர்களை கண்ணை போல் காப்பாற்ற வேண்டும். மந்திரிகளின் சுற்றத்தையும் தந்திரிகள் சுற்றத்தையும் சிறந்த வகையில் ஆராய்ந்து பெருக்க வேண்டும். இவை தான் வெற்றி பெறுவதற்கான அரச சூழ்ச்சியாகும்."

"பொன்னாபரணங்களால் அழகு செய்யும் மார்பை உடைய சீவகனே! பல வெற்றிகளைப் பெறுவதும், நாட்டை மேம்பாடு அடையச் செய்வதும், மட்டும் போதாது. கல்வி அழகை அனைவருக்கும் கொடுத்து, பொருளில் குன்றியவரை மலை போன்ற செல்வந்தராக மாற்றுவதும் அரச கடமையாகும் "

"பொன்  பொருளைச் செலவு செய்து நாட்டை காவல் செய்யும் பெரும் படையை உருவாக்கலாம், அப்படையால் பல நாடுகளை வெற்றி கொள்ளலாம். வெற்றிகள் மூலம் பெரும் செல்வத்தை குவிக்கலாம். செல்வத்தால் அடையமுடியாது பெரு வீடு கிடைக்கும்."

"காளை போன்ற வீரமிக்க சீவகனே! இப்பொழுது நாம் நிலத்தை இழந்து, செல்வத்தில் குறைந்து, நல்ல குலத்திலும் தாழ்ந்த நிலையில் காணப்படுகிறோம். மேலும், இப்பொழுது நம்மிடம் கலைக்கணாளரும், நல்ல அமைச்சர்களும் இல்லை. இந்த நிலையில் கட்டியங்காரன் அழிக்க நீ எவ்வாறு துணிந்தாய்?" என விசயை சீவகனைப் பார்த்து கேட்டாள்.

சீவகன் விசயைக்கு ஆறுதல் கூறுதல்

          விசயை கூறியதைக் கேட்ட சீவகன் தாயை பார்த்து " அன்னையே! தீயைப் போன்ற ஆற்றல் உடையவன் நான். இடியைப் போன்ற குரலை உடைய சிங்கம் ஒரு நரியுடன் போர் புரிவது என்றால், அதற்கு சூழ்ச்சிகள் எதுவும் தேவை இல்லை. என்னை எண்ணி நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். கட்டியங்காரன் பாம்பு என்றால், அழகிய மாலைகளை அணிந்த நந்தட்டன் கருடன் ஆவான். " எனக் கூறினான்.

 விசயை மேலும் அறிவுரை கூறுதல்

          அதனைக் கேட்ட விசயை மகிழ்ந்து, ஒளி பொருந்திய அழகுடைய நந்தட்டனைப் பார்த்து மனம் மகிழ்ந்து அவனை தன் கையால் தீண்டி, அன்பினால் கனிந்து பார்த்து அவனுடைய வயிரத் தூணைப் போன்ற தோள்களை பார்த்து  " கட்டியங்காரன், கவர்ந்த நிலத்தை இத்தோள்கள் மீட்காமல் போகுமோ? " எனக் கூறினாள்.

          மேலும், விசயை சீவகனை பார்த்து "பகல் பொழுதில், காட்டிலுள்ள ஒரு காக்கை, ஆயிரம் கூகைகள் குடியிருக்கும் இடத்திற்கு சென்று அவற்றைக் கொல்லும். அதுபோல, இடத்தையும் காலத்தையும் கருத்தில் கொண்டு எந்த செயலையும் செய்தால் அவர்களால் முடியாதது ஒன்றுமில்லை. சில நேரங்களில், குகையில் வாழும் சிங்கம் இடம் அறியாமல் நரிகள் வாழும் மூங்கில் காட்டில் சென்று நரி இடம் மாட்டிக் கொள்வதை போல ‘யாம் வீரம் உடையோம்’ என நினைத்து, காலம், இடம் உணராமல் எச் செயலையும் செய்யக்கூடாது  " என அறிவுரைகளைக் கூறினாள்.

முடிவுரை

இவ்வாறு விசயை, சீவகனிடம்  கட்டியங்காரனை வெல்வதற்கு வேண்டிய வழிகளையும், அரச நீதிகளையும் அறிவுரையாக கூறுவதாக விமலையார் இலம்பகம் கூறுகிறது.

......இராஜாலி......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யுனிக்கோட் - பயன்பாடு

அறிமுகம்    ஆங்கில மொழியைத் தவிர பிறமொழிகளிலும் பலரும் பல்வேறு குறியேற்றங்களையும் எழுத்துருக்களையும் பயன்படுத்தி வந்தனர். இந்த முறையில் ஒரே ...