எனது வலைப்பதிவு பட்டியல்

வெள்ளி, 20 அக்டோபர், 2023

இராவண காவியம் - தாய்மொழிப் படலம்

நூல் குறிப்பு


   புலவர் குழந்தை அவர்களால் எழுதப்பட்ட இராவண காவியம் திராவிட இயக்கத்தின் பகுத்தறிவு சிந்தனைகளை மக்களிடம் பரப்பும் நோக்கத்தில் படைக்கப்பட்டதாகும். இதில் 5 காண்டங்களும், 57 படலங்களும், 3100 பாடல்களும் காணப்படுகின்றன. இக்காப்பியம் இராமாயண காவியத்திற்கு எதிர்மறையான சிந்தனை கொண்டதாகும்.

தாய்மொழிப் படலம்

   இராவண காவியத்தில் முதல் காண்டமான தமிழ்க் காண்டத்தில் இடம்பெற்றுள்ளது தாய்மொழிப் படலம் ஆகும். இதில் தமிழ் மொழியின் சிறப்புகளும், தமிழ் மொழி வளர்ச்சியின் அவசியங்களும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

நாடெல்லாம் புலவர் கூட்டம் நகரம் எல்லாம் பள்ளி ஈட்டம்

  புலவர் குழந்தை அவர்கள் இராவண காவியத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சியையும் தமிழ் பற்றாளர்களின் சீரிய முயற்சியின் காரணமாக தமிழ் மொழி வளர்ச்சி அடைந்துள்ள நிலையினை பற்றி கூறும்போது,  "நற்றமிழாகிய தமிழ் மொழி வளர்ச்சி அடைந்துள்ளதால், இங்குள்ள மக்களின் கைகளில் ஏடுகள் ஆகிய புத்தகங்கள் இல்லாமல் இல்லை. இங்கு இயல் இசை கல்லாதவர்கள் இல்லை. பாடும் புலமைப் பெறாதவர்கள் இல்லை. பள்ளிக்குச் சென்று நல்லறிவு பெறாதவர்கள் இல்லை" எனக் கூறுகிறார்.

  மேலும் தமிழ் மொழியை வளர்த்த சான்றோர்கள், தமிழ் மொழியைத் தங்கள் இருவிழிகளாகப் போற்றினர். அவர்கள் பார்வைக்குத் தெரிந்தது அனைத்தும் தமிழ் உருவங்களாக விளங்கின. அவர்களுக்கு தமிழ் மொழியே காப்பாக அமைந்தது. அவர்கள் தமிழ் மொழியை தனது உரிமையாக கருதி வாழ்ந்தார்கள். அதன் காரணமாக,

நாடெல்லாம் புலவர் கூட்டம்
நகரெல்லாம் பள்ளி ஈட்டம்
வீடெல்லாம் தமிழ்த்தாய்க் கோட்டம்
விழாவெல்லாம் தமிழ் கொண்டாட்டம்

என்ற நிலையில் தமிழ் மக்களின் வாழ்வோடு தமிழ் மொழி இணைந்து சிறப்படைந்தது.

தமிழ் மொழி பயிலாக்காலே

  தமிழகத்தில் வாழ்ந்த மக்கள் தமிழ் மொழி மீது மிகுந்த பற்று கொண்டவர்கள். அவர்களுக்கு தமிழ் மொழியை கற்கும் நிலை கிடைக்கவில்லை என்றால் அவர்கள் " உணவினைப் பெரிதாக எண்ண மாட்டார்கள். பொன்னாளாகிய பட்டாடைகளை விரும்ப மாட்டார்கள். பொன் நகைகளை விரும்பி அணிய மாட்டார்கள். மலர் மாலைகளைச் சூட மாட்டார்கள். இனிமையான இசையினை கொடுக்கும் யாழை மீட்ட மாட்டார்கள். " என புலவர் குழந்தை கூறுகிறார்.

  மேலும், தமிழறிந்த சான்றோர்கள் பலர், பாடல்கள் ஏற்றியும் சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் உரைகளை எழுதியும் தமிழ் மொழியினை வளர்த்தார்கள். அவ்வாறு வளர்க்கப்பட்ட செந்தமிழே நம் தாய்மொழி. எனப் புலவர் குழந்தை அவர்கள் தாய்மொழிப் படலத்தில் தமிழ் மொழியின் சிறப்புகளைக் கூறியுள்ளார்.

****இராnஜாலி ****

வெள்ளி, 13 அக்டோபர், 2023

எட்டுத்தொகை நூல்கள்

முன்னுரை

 தமிழ் இலக்கியங்களில் பழமை வாய்ந்தது, சங்க இலக்கியங்கள் ஆகும். ஏறத்தாழ கி.மு 200 முதல் கி.பி 200 வரையில் வாழ்ந்த சங்கப் புலவர்களால் ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடப்பட்டன. அப்பாடல்கள் முழுவதும் கிடைக்கவில்லை. பல பாடல்கள் அழிந்துபோயின, நல்லறிஞரகள் எஞ்சியிருந்த பாடல்களைத் திரட்டி, சிறந்த பாடல்களை மட்டும் பொருள் அடிப்படையிலும், செய்யுள் அடிப்படையிலும், அடி வரை அடிப்படையிலும், வகுத்து அவற்றை எட்டுத்தொகை நூல்களாக தொகுத்தனர். இத்தொகுப்பை பழைய உரையாசிரியர்கள் 'தொகை' என்றும், 'எண் பெரும் தொகை' என்றும் குறிப்பிடுகின்றனர். இத்தகைய பழமை வாய்ந்த எட்டுத்தொகை நூல்களைப் பற்றி, இக்கட்டுரையில் காணலாம்.

எட்டுத்தொகை நூல்கள்

  நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு, என்ற எட்டு நூல்களும் எட்டுத்தொகை நூல்கள் ஆகும். இதனை,

            நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
            ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
            கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
            இத்திறத்த எட்டுத்தொகை

எனப் பழைய வெண்பா குறிப்பிடுகிறது.இவ்வெட்டு நூல்களுள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு, ஆகிய ஐந்து நூல்களும் அகப்பொருள் பற்றியன. பதிற்றுப்பத்தும், புறநானூறும் புறப்பொருள் பற்றியன. பரிபாடல் என்பது அகப்பொருள் புறப்பொருள் இரண்டும் கலந்து வரும் நூலாகும். எட்டுத்தொகை நூல்களில் காணப்படும் பாடல்கள், 400க்கும் மேற்பட்ட புலவர்கள் பாடியுள்ளனர். பெண்பாற் புலவர்களும், அரச குடும்பத்தவரும் பல பாடல்களை இயற்றியுள்ளனர்.

எட்டுத்தொகையில் அகநூல்கள்

  எட்டுத்தொகை நூல்களுள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு, ஆகிய ஐந்து நூல்களும் அகப்பொருள் பற்றியன.

நற்றிணை

     இந்நூலில் 9 முதல் 12 அடி வரையில் உள்ள 400 பாடல்களின் தொகுப்பு ஆகும். நற்றிணை என்பது நல்ல திணை எனப் பொருள்படும். இந்நூல் ஐந்து திணைகளுக்கும் உரிய நானூறு பாடல்களைக் கொண்டமையால் இதனை, நற்றிணை நானூறு எனவும் வழங்குவர். இந்நூல் 193 புலவர்களால் பாடப்பெற்ற, இந்நூல் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி என்பவரால் தொகுப்பிக்கப்பட்டது. இந்நூலை, தொகுத்தவர் யார் என தெரியவில்லை. 
     தமிழ் மக்களின் அகவாழ்வு, அறவாழ்வு, மன்னர்களின் ஆட்சிச் சிறப்பு, ஒருமைப்பாட்டு நற்றிணையில், சங்கத் தமிழ் மக்களின் உணர்வு,பழந்தமிழ் மக்களின் பழக்க வழக்கங்கள் போன்றவை சிறப்பித்து கூறப்பட்டுள்ளன. திருக்குறளின் கருத்துக்கள் பல இந்நூலில் ஆங்காங்கே எடுத்தாளப்பட்டுள்ளது.

குறுந்தொகை

     நல்ல குறுந்தொகை என்ற அடைமொழியோடு அழைக்கப்படும் அதன் மூலம் இந்நூலின் சிறப்பை உணரலாம். இந்நூல் 4 முதல் 8 அடி வரையில் உள்ள ஐந்து திணைகளுக்கும் உரிய 400 பாடல்களின் தொகுப்பு ஆகும். 206  புலவர்களால் பாடப்பட்ட இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ என்பவராவார். இந்நூலைத்  தொகுப்பித்தவர் யார் என தெரியாது.

   முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூல் குறுந்தொகை. உரையாசிரியர்களும், ஆய்வாளர்களும் இந்நூலை மிகுதியாக மேற்கோள் காட்டியுள்ளது மூலம் இந்நூலின் சிறப்பை உணர முடிகிறது. குறுந்தொகையில் பரணர் பாடிய பாடல்கள் பல வரலாற்றுக் குறிப்புகளை தெரிவிக்கின்றன. சங்கத் தமிழ் மக்களின் அகவாழ்வு, அறவாழ்வு, மன்னர்களின் ஆட்சிச் சிறப்பு, ஒருமைப்பாட்டு உணர்வு, பழந்தமிழ் மக்களின் பழக்க வழக்கங்கள் போன்றவை சிறப்பித்து கூறப்பட்டுள்ளன.  

ஐங்குறுநூறு

    ஐந்து திணைகளுக்கும், திணைக்கு 100 பாடல்கள் வீதம் 500 பாடல்கள் கொண்டது ஐங்குறுநூறாகும். இந்நூலில் 3 அடி முதல் 5 அடிவரையுள்ள பாடல்கள் காணப்படுகின்றன. இந்நூலைத் தொகுத்தவர் கூடலூர்கிழார்.  தொகுப்பித்தவர் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்னும் மன்னர். இந்நூலில் காணப்படும் குறிஞ்சித்திணை பாடல்களைப் பாடியவர் கபிலர். முல்லைத் திணைப் பாடல்களைப் பாடியவர் பேயனார். மருதத்திணைப் பாடல்களைப் பாடியவர் ஓரம்போகியார். நெய்தல் திணைப் பாடல்களைப் பாடியவர் அம்மூவனார். பாலைத் திணைப் பாடல்களைப் பாடியவர் ஓதலாந்தையார் ஆவார்.

கலித்தொகை

எட்டுத்தொகை நூல்களில் கலிவெண்பாவால் பாடப்பட்ட நூல் கலித்தொகை ஆகும் 'கற்றறிந்தார் ஏத்தும் கலி' என சிறப்பித்துக் கூறுவதன் மூலம் கலித்தொகையின் சிறப்பினை உணரலாம். 150 பாடல்களைக் கொண்ட இந்நூல், 11 அடி முதல் 80 அடி வரையிலான பாடல்களைக் கொண்டது. இதனை தொகுத்தவர் நல்லந்துவனார். Jjதொகுப்பித்தவர் யார் என தெரியாது. கலித்தொகையில் 29 பாடல்களை கொண்ட குறிஞ்சித் திணைப் பாடல்களை கபிலரும், 17 பாடல்களைக் கொண்ட முல்லைத் திணைப் பாடல்களை சோழன் நல்லுருத்திரனரும், 35 பாடல்களைக் கொண்ட மருதத்திணைப் பாடல்களை மருதனிளநாகனாரும், 33 பாடல்களைக் கொண்ட நெய்தல் திணைப் பாடல்களை நல்லந்துவனாரும், 36 பாடல்களை கொண்ட பாலைத்திணை பாடல்களை பாலை பாடிய பெருங்கடுங்கோவும் பாடியுள்ளார்கள்.

   கலித்தொகை பாடல்கள் பெரும்பாலும் நாடகப் பாங்கினை கொண்டதாக காணப்படுகின்றன. மேலும், சங்கத் தமிழர்களின் வாழ்க்கை முறையினையும், பழக்கவழக்கங்களையும் இந்நூல் விரிவாக எடுத்துக் கூறுவதாக காணப்படுகிறது

அகநானூறு

    அகநானூறு, இது ஓர் அகத்திணை சார்ந்த நூல். இதனை, 'நெடுந்தொகை' என்றும் கூறுவர். இந்நூலில் அடங்கியுள்ள பாடல்கள் மிகக் குறைந்த அளவாகப் 13 அடிகளையும், கூடிய அளவு 31 அடிகளையும் கொண்டு அமைந்துள்ளன. கடவுள் வாழ்த்துச் செய்யுளைத் தவிர்த்து இந்நூலில் 400 பாடல்கள் உள்ளன. இவை களிற்றியானை நிரை(1-120), மணி மிடை பவளம் (121-300), நித்திலக் கோவை (301-400) என மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

1,3.5,7,9,11 ஒற்றைப்பட எண்ணாலான பாடல்கள் 200-ம் பாலைத் திணையைச் சேர்ந்தவை.

2,8,12,18..என்ற எண்ணாலான பாடல்கள் 80-ம் குறிஞ்சித் திணையைச் சேர்ந்தவை.

4,14,24.. என்ற எனப்படுபவை 40-ம் முல்லைத் திணையைச் சேர்ந்தவை. 

6,16.26.. என்ற எனப்படுபவை 40-ம் மருதத் திணையைச் சேர்ந்தவை.

10,20,30.. என்ற எனப்படுபவை 40-ம் நெய்தல் திணையைச் சேர்ந்தவை.

 இந்நூலைத்  தொகையைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடி கிழார் மகனார் உருத்திரசன்மர். இதனைத் தொகுப்பித்த மன்னன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியார். அகநானூற்றுப் புலவர்கள் 146 பேர். மூன்று பாடல்களின் (114, 117, 165) ஆசிரியர் பெயர் காணப் பெறவில்லை.

● களிற்றியானைநிரை

1 முதல் 120 வரையில் உள்ள 120 பாடல்கள் இத் தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் யானைக்களிறு யானைக்களிறு போல் பெருமித நடை கொண்டவை. யானைகளின் அணிவகுப்பைப் போன்று ஓரினப் பாடல்களின் அணிவகுப்பாக அவை அமைந்துள்ளன.

● மணிமிடை பவளம் 

121 முதல் 300 வரை உள்ள 180 பாடல்கள் இத் தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் நீலநிற மணிகள் போலவும், செந்நிறப் பவளம் போலவும் பெருமதிப்பு உடையனவாகஅமைந்து ஈரினப் பாடல்களின் தொகுப்பாக அமைந்துள்ளன. மணியும் பவளமும் கோத்த ஆரம் போன்று இத்தொகுப்பு அமைந்துள்ளது.
  • நித்திலக் கோவை
301 முதல் 400 வரை உள்ள 100 பாடல்கள் இத் தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் நித்தில முத்துக்கள் போலப் பெருமதிப்பு கொண்டவையாக அமைந்து ஒரினக் கோவை போல அமைந்துள்ளன. இத்தொகுப்பு முத்தாரம் போல் அமைந்துள்ளது.

எட்டுத்தொகை நூல்களில் நற்றினை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு ஆகிய ஐந்து நூல்களில் அகம் சார்ந்த நூல்கள் ஆகும். இவை, பண்டையகால மக்களின் அகம் கருத்துக்களையும், வாழ்வியல் சார்ந்த ஒழுக்கங்களையும் எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது.

எட்டுத்தொகை நூல்களில் புறம் சார்ந்த நூல்கள்

  எட்டுத்தொகையில் புறக்கருத்துக்களை கூறும் நூல்களாக பதிற்றுப்பத்தும், புறநானூறும் காணப்படுகின்றது. 

பதிற்றுப்பத்து

     (பத்து + பத்து = பதிற்றுப்பத்து) இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். சேர மன்னர்களைப் பற்றி பத்துப் புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பே பதிற்றுப்பத்தாகும். இந்த நூலில் முதற் பத்தும், இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை. ஏனைய எட்டுப் பத்துகளே கிடைத்துள்ளன. கிடைத்துள்ள 80 பாடல்கள் எட்டுச் சேர மன்னர்களின் வரலாற்றை எடுத்துரைக்கின்றன.  இது சேரமன்னர்களின் மனத் திண்மை, புகழ் நோக்கு, ஈகைத் திறம் ஆகிய பண்புகளையும் படை வன்மை,போர்த்திறம், குடியோம்பல் முறை ஆகிய ஆட்சித் திறன்களையும் எடுத்துக்கூறுவதாகக் காணப்படுகின்றது. இந்நூலின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு எனக் கருதப்படுகின்றது.

பாடல் தொகுதிகளின் பட்டியல்
  • முதல் பத்து - கிடைக்கவில்லை.
  • இரண்டாம் பத்து - பாடியவர் குமட்டூர் கண்ணனார், பாடப்பெற்ற மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஆவார்.
  • மூன்றாம் பத்து - பாடியவர் பாலைக் கௌதமனார், பாடப்பெற்ற மன்னன் பல்யானைச் செல்கெழு குட்டுவன்  ஆவார்.
  • நான்காம் பத்து - பாடியவர் காப்பியாற்றுக் காப்பியனார், பாடப்பெற்ற மன்னன் களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் ஆவார்.
  • ஐந்தாம் பத்து - பாடியவர்  பரணர், பாடப்பெற்ற மன்னன் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் ஆவார்.
  • ஆறாம் பத்து  - பாடியவர் காக்கைபாடினியார் (நச்செள்ளையார்), பாடப்பெற்ற மன்னன் ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் ஆவார்.
  • ஏழாம் பத்து  - பாடியவர்  கபிலர், பாடப்பெற்ற மன்னன் செல்வக் கடுங்கோ வாழியாதன் ஆவார்.
  • எட்டாம் பத்து  - பாடியவர்  அரிசில் கிழார், பாடப்பெற்ற மன்னன் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை ஆவார்.
  • ஒன்பதாம் பத்து - பாடியவர்  பெருங்குன்றூர் கிழார், பாடப்பெற்ற மன்னன் இளஞ் சேரல் இரும்பொறை ஆவார்.
  • பத்தாம் பத்து - கிடைக்கவில்லை.
 பதிற்றுப்பத்தை தொகுத்தவர் தொகுப்பித்தவர் யார் எனத் தெரியவில்லை.

புறநானூறு

   புறத்திணை பற்றிப் பேசும் 400 பாடல்களின் தொகுப்பே புறநானூறு ஆகும். பண்டைய தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்கள், சிற்றரசர்கள், கடையெழு வள்ளல்கள், புலவர்கள், மற்றும் பண்டைய தமிழர்களின்  வாழ்க்கை முறை, பழக்கவழக்கப் பண்பாடுகள் போன்றவற்றை எடுத்துக் கூறும் நூலாக  புறநானூறு காணப்படுகிறது.
      165 புலவர்களால் பாடப்பட்டதாகும். புறநானூறில் 4 அடி முதல் 40 அடி வரையிலான பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இந்நூலை தொகுத்தவர் தொகுப்பித்தவர் யார் என தெரியவில்லை. ஜி.யு. போப் அவர்கள் இந்நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
போன்ற உயர்ந்த கருத்துக்களை கூறுவதாக இந்நூல் காணப்படுகிறது.

எட்டுத்தொகையில் அகம் புறம் சார்ந்த நூல்

 எட்டுத்தொகை நூற்களில் அகக்கருத்துக்களையும் புற கருத்துக்களையும் ஒருங்கே கூறும் நூலாக பரிபாடல் காணப்படுகிறது.

பரிபாடல்

     பா வகையால் பெயர் பெற்ற பரிபாடலில் 25 அடி முதல் 400 இடம் பெற்றுள்ளது.  22 பாடல்கள் மட்டுமே இந்நூலில்  இருந்து கிடைத்துள்ளது. அவற்றில் குறிப்பாக, திருமாலை பற்றி ஆறு பாடல்களும், வைகை ஆற்றைப் பற்றி எட்டுப் பாடல்களும், செவ்வேள் எனப்படும் முருகனைப் பற்றி எட்டுப் பாடல்களும் இடம்பெற்றுள்ளது. இந்நூலைத் தொகுத்தவர், தொகுப்பித்தவர் யார் எனத் தெரியவில்லை. வைகை ஆற்றின் வளம், மதுரை நகரின் சிறப்பு போன்றவை இந்நூலில் இடம்பெற்றுள்ளது.

முடிவுரை

     சங்க இலக்கியப் பிரிவுகளில் ஒன்றான எட்டுத் தொகையில், 8 தொகுக்கப்பட்ட நூல்கள் காணப்படுகின்றன. அவற்றில் 5 நூல்கள் அகம் சார்ந்தவையாகவும், இரண்டு நூல்கள் புறம் சார்ந்தவையாகவும், ஒரு நூல் அகம் புறம் சார்ந்த நூலாகவும் காணப்படுகின்றது. இவை எட்டும் பண்பட்ட பண்டையத் தமிழர்களின் வாழ்வியலை எடுத்துக்காட்டும் களஞ்சியங்களாக விளங்குகின்றது.

††††இராஜாலி††††

சனி, 7 அக்டோபர், 2023

கடுவெளிச் சித்தரின் - ஆனந்தக் களிப்பு

முன்னுரை

தமிழகத்தில் சித்தர்கள் பலர் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வாழ்ந்திருந்தாலும், கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமூலரே தமிழ் சித்தர் பரம்பரையின் முன்னவராக விளங்குகிறார். தமிழ் மரபில் பதினெண் சித்தர்கள் காணப்படுகின்றார்கள். அவர்களில் ஒருவர் கடுவெளிச் சித்தர் ஆவார். 'கடுவெளி என்பது வாக்கும் மனமும் கடந்த நிலையில் உள்ள பரவெளி'- இதனைப் பற்றி அதிகமாக இவர் பாடியுள்ளதால் கடுவெளிச் சித்தர் என அழைக்கப்பட்டார். இவர் பாடிய ஆனந்தக் களிப்பு 34 கண்ணிகளைக் கொண்டதாகும். இதில் மனிதர்கள் செய்யக்கூடாதவை எவை என்றும், செய்யக்கூடியவை எவை என்றும் விளக்கமாகக் கூறியுள்ளார்.

மனிதர்கள் செய்யக்கூடாதவை எவை?

கடுவெளிச் சித்தர் மனிதர்கள்  செய்யக்கூடாதவை எவை எனப் பின் வருவனவற்றைக் கூறுகின்றார். 

கோபத்தைக் கட்டுப்படுத்து!

பாபம் செய்யாதே! மனிதனே உன்னுடைய வாழ்வில் யாருக்கும் சாபம் கொடுத்துவிடாதே; நடக்கும் ஒவ்வொரு செயலும் விதிப்படிதான் நடக்கும். விதியை நம்மால் எந்த வகையிலும் தடுத்து நிறுத்திவிட முடியுமா?. எமன் வந்து நம்மை எந்த நேரத்தில் கொண்டு செல்வான் என்று தெரியாது. எனவே கோபப்பட்டு பிறருக்கு சாபம் கொடுத்து பாவத்திற்கு மேல் பாவம் செய்யக்கூடாது எனக் கூறுகிறார்.

சூதுசெய்யாதே!

சூது என்பது தன்னையும் அழித்துப் பிறரையும் அழிப்பதாகும். எனவே சூது என்ற வஞ்சகச் செயலை நீ செய்யாதே! அப்படி நீ சூது செய்தால் அது உன்னை மட்டுமல்ல உன்னைச் சுற்றியுள்ள சுற்றத்தாரையும் முழுமையாக நாசப்படுத்திவிடும். இதனை,

"சொல்லருஞ் சூதுபொய் மோசம் - செய்தால்
சுற்றத்தை முற்றாய்த் துடைத்திடும் நாசம்

என்று பாடியுள்ளார்.

நல்லவர்களைத் தள்ளாதே!

உன்னோடு கூடவே இருக்கும் நல்லவர்களையெல்லாம் உன்னைவிட்டு ஒதுக்கித் தள்ளாதே! பொல்லாங்கு ஒன்றும் கொள்ளாதே. கெட்ட நடத்தையாகிய தீமையைத் தரக்கூடிய பொய்மை மொழி பேசி கோள்கள் பொருந்துமாறு நீ நடந்து கொள்ளாதே என்றும் கடுவெளிச்சித்தர் அறிவுரை கூறுகிறார்.

பெண்ணாசை கொள்ளாதே!

நீ பிறரிடத்தில் எதையும் யாசித்துப் பெற வேண்டும் என்று நினைக்காதே! மிகவும் அழகாக பெண்கள் இருக்கின்றார்கள் என்று பெண்கள்மீது ஆசைகொண்டு  மகிழ்ந்து திரியாதே! இத்தகைய சிற்றின்பங்கள் உன்னை வாழ வைக்காது! என்பதை, 

பிச்சை யென்றொன்றும் கேளாதே - எழில்
பெண்ணாசை கொண்டு பெருக்க மாளாதே!

 என அறிவுறுத்துகிறார்.

திட்டியவரைக்கூடத் திருப்பித் திட்டாதே!

உன்னைத் தவறாக பேசிய வரை கூட, நீ தவறாகப் பேசாதே! உலகத்தில் உள்ள அனைவரும் பொய் பேசி திரிந்தாலும் நீ பொய் பேசாதே! கொடிய பாவ வினைகளைச் செய்யாதே! பறவைகள் மீது கல்லெறியாதே! என்பதை,

வைதோரைக் கூட வையாதே! - இந்த
வையம் முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே!

எனக் கூறுகிறார்.

கஞ்சாப் புகை பிடியாதே!

உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் கஞ்சாப் புகையிலையினைப் பிடிக்காதே! வெறியூட்டும் மனிதனை மயக்கும் கள்ளையும் குடிக்காதே! யாருக்கும் கிடைக்காத பெரும் பேறாகக் கிடைத்துள்ள இந்த உயிரை வீணாக மாய்த்துக் கொள்ளாதே! பக்தியில்லாத அஞ்ஞானத்தையுடைய நூல்களைப் படிக்காதே! என அறிவுறுத்துகிறார்.

கள்ளவேடம் புனையாதே!

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் கள்ளவேடம் புனைந்து திரியாதே! வெளியே பல தவறுகளைச் செய்துவிட்டு வெளிவேசத்தால் போல் நடிக்காதே! நீ செய்த பாவத்தைப் போக்க  கங்கையிலே உன்னுடைய உடம்பை நனைத்துத் திரியாதே! பிறர் பொருளை அபகரிக்க நினைக்காதே! பிறரிடம் நட்பு பாராட்டி இருந்துவிட்டு அந்த நட்புக்குக் களங்கம் ஏற்படும் வகையில் பிரிந்து செல்ல எண்ணாதே எனக் கூறுகிறார். 

மேலும் செய்யக்கூடாதவை...

1. சிவமன்று வேறு வேண்டாதே!

2. யாருக்கும் தீங்கான சண்டையைச் சிறக்கத் தூண்டாதே!

3. தவநிலை விட்டுத் தாண்டாதே!

4. நல்ல சன்மார்க்க மில்லாத நூலை வேண்டாதே!

5. தேவையற்ற சடங்குமுறைகளைச் செய்யாதே!

6. உன்னைப் புகழ்ந்து பலரிடம் கூற வேண்டும் என்று எண்ணாதே!

7. பிறர் வெறுக்கும்படியான  தாழ்ந்த நிலையை நீ உருவாக்காதே!

8. மெய்யான குருவின் சொல் தட்டாதே! 

9. நன்மை மேன்மேலும் செய்வதை நிறுத்தாதே!

10.போலியான வாழ்க்கை வாழாதே!

11. நல்ல நல்ல அறிவை பொய்யான வழியில் செலுத்தாதே!

இவ்வாறு, கடுவெளிச் சித்தர் ஒரு மனிதனுக்குத் தீங்கு தருபவை எவை எனப் பட்டியலிட்டுக் கூறியுள்ளார். அந்த வகைத் தீங்குகளினால் ஏற்படும் தீமை பற்றியும்  எச்சரித்துள்ளார்.

மனிதன் செய்யக்கூடியவை எவை? 

உலக வாழ்க்கையைப் பாடியவர் கடுவெளிச்சித்தர். அவர்தம் ஆனந்தக் களிப்புப் பகுதியில்,  மனிதன் எவையெல்லாம் செய்ய வேண்டும் என்பதை பின் வருமாறு கூறுகிறார். 

நல்லவழிதணை நாடு!

மனிதனாகப் பிறந்தவன் தனக்கென ஒரு நல்ல வழியைப் பின்பற்ற வேண்டும். அது பிறருக்குத் தீங்கு செய்வதாக இருக்கக்கூடாது.  எல்லா நாளும் பரமன் ஒருவனையே விரும்பித் தேட வேண்டும். என்பதை,

நல்ல வழிதனை நாடு - எந்த
நாளும் பரமனை நத்தியே தேடு

எனக்  கூறுகிறார். மேலும்,  வல்லவர்களாகிய நல்லவர்கள் கூட்டத்திலேயே சேர வேண்டும். தீயவர்ளோடு சேருவதை விடுக்க வேண்டும். அள்ளி அருளைத் தருகின்ற வள்ளலாகிய பரமனை மட்டுமே நெஞ்சில் நிறுத்தி வாழ்த்திக் கொண்டாட வேண்டும்" என்று கடுவெளிச் சித்தர் அறிவுறுத்துகிறார்.

வேதவிதிப்படி நில்லு!

வேதம் என்ன சொல்கின்றதோ அந்த விதிகளை நன்கு அறிந்து அவற்றையே ஏற்றுக்கொள்ள வேண்டும். நல்லவர்கள் நன்மை புரிபவர்கள் பின்பற்றுகின்ற வழியையே நீயும் வேண்டிச் சென்று பின்பற்ற வேண்டும். மனித குலத்திற்கு நன்மை செய்கின்ற சாதகமான நிலைமையை மட்டுமே நீயும் பின்பற்றி அதனையே பிறரையும் பின்பற்றும்படி சொல்லு எனக் கூறுகிறார.

மெய்ஞான  மார்க்கத்தைக் கூறு!

நீ உண்மையான தவஅறிவு என்ன என்பதைப் புரிந்து தெரிந்து கொள். அந்தத் தவத்தின் ஞான அறிவைப் பெற்று அதன் வழியிலே செல்வதற்கு முயற்சிசெய். இந்த உலகில் வேதாந்த பிரமம் என்கிற இந்தப் பிரபஞ்சத்தின் வெளியாகக் கண்டு அந்த வெட்ட வெளியைத் தேடி அறிந்துகொள். அறிவற்ற அஞ்ஞான மார்க்கத்தை நீ அறவே விரட்டி ஒழித்துவிடு. அதுவே உனக்கும் உன்னைச் சார்ந்தவர்கள் அனைவருக்கும் ஆனந்த  வழியாகும்.  அந்த மெய்ஞான மார்க்கத்தை அடையும் வழியை உன்னைச் சார்ந்தவர்களுக்கும் கூறு" எனக் கூறுகிறார்.

சாதியாவும் ஒன்றே எனப் போதி!

இவ்வுலகத்தில் சாதி என்பது கிடையாது. அனைவரும் ஒன்றே! அனைவருக்கும் சமமானதே நீதி என்று உணர்ந்து கொள்ள வேண்டும் எனக் கூறுவதோடு, நல்ல நீதிகள், நல்ல செயல்கள், நற்குணங்கள் எந்த வகை உருவில் இருந்தாலும் அவற்றை நீ நன்கு அறிந்து கற்று, அவற்றின் வழி நடந்து, பிறருக்கும் எடுத்துக் கூற வேண்டும் எனக் கூறுகிறார்.

மேலும் செய்ய வேண்டியவை  சில...

1. நல்ல புத்தி விசுவாசம் வைக்க வேண்டும்.

2.உள்ளத்தில் எழும் நான்கு வகையான பகையினை நீக்கிவிட்டால் நாட்டை ஆளலாம்.

3. ஐம்புலங்களால் வரும் கள்ளத்தனத்தை எரித்துவிட்டால் சொர்க்கம் அடையலாம்.

4. அன்பு மலர்தூவி  ஆனந்த பரம்பொருளின் திருவடிகளை வணங்கினால் உடலும் உயிரும் மகிழ்வடைய நல்ல இன்பம் கிடைக்கும்.   
5. அடியவர்களைத் துதித்தால், ஏழைகளுக்கு இறங்கினால் அருளுவான் ஈசன்.
என ஒவ்வொரு மனிதனும் செய்ய வேண்டிய நற்செயல்கள்  எவை என்பதை பற்றி கடுவெளிச் சித்தர் கூறியுள்ளார்.

முடிவுரை

மனித வாழ்க்கை நிலையற்றது. எப்போது வேண்டுமானாலும் எமன் நம்மை எடுத்துக் கொள்வான். எனவே இவ்வுலகியலின் உண்மை உணர்ந்து நல்லநெறிப்படி மனிதன் வாழ வேண்டும் என்றும் அப்படிப்பட்ட இந்த உலக வாழ்க்கையில் எவற்றையெல்லாம் மனிதன் விட்டொழிக்க வேண்டும், எவற்றையெல்லாம் மனிதன் பின்பற்ற வேண்டும் என்பதை கடுவெளிச்சித்தர் வலியுறுத்தியுள்ளார்.

**** இராஜாலி ****


யுனிக்கோட் - பயன்பாடு

அறிமுகம்    ஆங்கில மொழியைத் தவிர பிறமொழிகளிலும் பலரும் பல்வேறு குறியேற்றங்களையும் எழுத்துருக்களையும் பயன்படுத்தி வந்தனர். இந்த முறையில் ஒரே ...