எனது வலைப்பதிவு பட்டியல்

ஞாயிறு, 15 அக்டோபர், 2023

பன்னிரு திருமுறைகள்

முன்னுரை

பன்னிரு திருமுறைகள் என்பவை, சைவத்தின் தலைவனான சிவபெருமானைப் போற்றி பாடிய பன்னிரெண்டு நூல்களின் தொகுப்பாகும். திரு என்பதை 'தெய்வீகம் பொருந்திய' எனக் கொள்ளலாம். எனவே திருமுறை என்பதற்கு தெய்வீக நூல் என்பது பொருள் ஆகும். இத்திருமுறைகள் மொத்தம் 27 சிவனடியார்களால் வெவ்வேறு காலகட்டத்தில் சிவபெருமானின் மீது பாடப்பெற்றவை ஆகும். கி.பி 10 ஆம் நூற்றாண்டில் இராஜராஜ சோழன் தன்  ஆட்சியின் போது, கோவில்களில் வாய்மொழியாகப் பாடப்பெற்ற தேவாரப்பாடல்களைக் கேட்டு அப்பாடல்களைத் தொகுக்க எண்ணினார். அரசனின்  வேண்டுகோளுக்கு இணங்க நம்பியாண்டார்நம்பி என்னும் அடியவர்  பன்னிரு திருமுறைகளை தொகுத்து அளித்தார்.


பன்னிரு திருமுறைகளின் பட்டியல்

  • 1,2,3 - ஆம் திருமுறைகள் - திருஞானசம்பந்தர் பாடியது - தேவாரம் -  திருக்கடைக்காப்பு - மொத்தம் 4146 பாடல்கள்.
    • 1- ஆம் திருமுறையில் - 1469 பாடல்கள்.
    • 2- ஆம் திருமுறையில் - 1331 பாடல்கள்.
    • 3- ஆம் திருமுறையில் - 1346 பாடல்கள்.
  • 4,5,6 - ஆம் திருமுறைகள் - திருநாவுக்கரசர் பாடியது - தேவாரம் - மொத்தம் 3066 பாடல்கள்.
    • 4 - ஆம் திருமுறையில்  - 1070 பாடல்கள்.
    • 5 - ஆம் திருமுறையில்  - 1015 பாடல்கள்.
    • 6 - ஆம் திருமுறையில் - 981 பாடல்கள்.
  • 7 - ஆம் திருமுறை - சுந்தரர் பாடியது - தேவாரம் - திருப்பாட்டு - மொத்தம் 1026 பாடல்கள்.
  • 8 - ஆம் திருமுறை - மாணிக்கவாசகர் பாடியது - மொத்தம் 1056 பாடல்கள்.
    •  திருவாசகம் - 656 பாடல்கள்.
    •  திருக்கோவையார் - 400 பாடல்கள்.
  • 9 - ஆம் திருமுறை -  9 பேர் பாடிய பாடல்களின் தொகுப்பு - திருவிசைப்பா - திருப்பல்லாண்டு - மொத்தம் 301 பாடல்கள். 1.திரு மாளிகைத் தேவர், 2. சேந்தனார், 3. கரூர்த் தேவர்,  4.பூந்துருத்தி நம்பிகாட நம்பி, 5. கண்டராதித்தர், 6.வெணாட்டடிகள்,  7. திருவாலி அமுதனார், 8. சேதிராயர், 9.புருஷோத்தம நம்பி.
  • 10 - ஆம் திருமுறை - திருமூலர் பாடியது - திருமந்திரம் - மொத்தம் 3047 பாடல்கள்.
  • 11 - ஆம் திருமுறை - 12 பேர் பாடிய பாடல்களின் தொகுப்பு - பிரபந்தம் - மொத்தம்  1401 பாடல்கள்..1. திரு ஆலவாய் உடையார், 2. காரைக்கால் அம்மையார், 3. ஐயடிகள் காடவர் கோன்,  4. சேரமான் பெருமான், 5. நக்கீரர், 6. கல்லாடர், 7. கபிலர், 8. பரணர், 9. இளம்பெருமான் அடிகள்,10. அதிரா அடிகள், 11. பட்டினத்தார். 12. நம்பியாண்டார் நம்பி.
  • 12 - ஆம் திருமுறை - சேக்கிழார் பாடியது - பெரிய புராணம் - மொத்தம்  4286 பாடல்கள்.
பன்னிருதிருமுறை; 27 நாயன்மார்கள் பாடிய, 76 நூல்களை உள்ளடக்கிய, 18326 திருப்பாடல்களைக் கொண்ட தொகுப்பாகும்.

திருமுறை பாடிய நாயன்மார்கள்

சைவ சமயத்தை 63 நாயன்மார்கள் வளர்த்தெடுத்தார்கள். அவர்களில் 27 நாயன்மார்கள் சிவ திருத்தலம் சென்று சிவனைப் பாடி சிறப்புச் செய்தனர். அவர்கள் பாடிய பாடலின் தொகுப்பே பன்னிரு திருமுறைகள் என வழங்கப்படுகின்றது.

திருஞானசம்பந்தர்

சீர்காழியில் சிவபாத இருதயாருக்கும், பகவதி அம்மையாருக்கும்  மகனாக 7 - ஆம் நூற்றாண்டில் தோன்றியவர். ஆளுடைய பிள்ளை என்னும் இயற்பெயரைக் கொண்ட இவரை இறைவன் பாலைக் கொடுத்து ஆட்கொண்டான்.  இவர், மூன்று uவயதில் உமையவளிடம் ஞானப்பால் உண்டு இறைவனைப் பாடும் அருள் பெற்றதால் 'ஞானசம்பந்தன்' என அழைக்கப்பட்டார். மதுரையில் சமணர்களோடு அனல்வாதம், புனல்வாதம் புரிந்து வெற்றி பெற்று கூன் பாண்டியன் என்னும் மன்னனின் கூனை நிமிரச் செய்து அற்புதங்கள் பல புரிந்தார். இவர், 226 சிவத்தலங்களின் சிறப்புகளை, சிவபெருமானின் பெருமைகளையும் பாடியுள்ளார். இவர் பாடிய 16000 பதிகங்களில் 4146 பாடல்கள் மட்டுமே தற்பொழுது கிடைத்துள்ளன. இப்பாடல்கள் 'திருக்கடைக்காப்பு' என்றும், திருஞானசம்பந்தர் தேவாரம் என்றும் அழைக்கப்படுகின்றது. இவை முதல் மூன்று திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளது.

திருநாவுக்கரசர் 

'தாண்டகவேந்தர்' எனச் சிறப்பித்து அழைக்கப்படும் திருநாவுக்கரசரின் இயற்பெயர் 'மருள்நீக்கியார்' என்பதாகும். இவர் திருமுனைப் பாடி நாட்டில் உள்ள திருவாமூரில் புகழனாருக்கும், மாதினியாருக்கும் மகனாகப் பிறந்தார். இவரின் சகோதரி திலகவதியார் ஆவார். சிறுவயதில் பெற்றோர்களை இழந்ததால் சமண மதத்தை தழுவினார். அங்கு அவர் 'தருமசேனன்' என அழைக்கப்பட்டார். இவருக்கு சூலைக் கொடுத்து இறைவன் ஆட்கொண்டான்.   சூலை நோய்க்கு ஆட்பட்ட இவர் மீண்டும் சைவ சமயத்தை ஏற்றுக்கொண்டு சிவனைப் புகழ்ந்து பாடினார். நோயை நீக்கிய இறைவன் 'திருநாவுக்கரசன்' என அழைத்தார். திருஞானசம்பந்தர் இவரை 'அப்பர்' என அழைத்தார். இவர் 126 சிவ தலங்களுக்குச் சென்று சிவபெருமானை சிறப்பித்துப் பாடியுள்ளார். இவர் பாடிய 49000 பாடல்களில் 3066 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. அவை திருநாவுக்கரசர் தேவாரம் என அழைக்கப்படுகிறது. இப்பாடல்கள் 4,5,6 -ஆம் திருமுறைகளாகத்  தொகுக்கப்பட்டுள்ளது.

 சுந்தரர் 

'தம்பிரான் தோழன்' எனவும் 'வன்தொண்டர்' எனவும் அழைக்கப்படும் சுந்தரர், திருமுனைப்பாடியில்  நாவலூர் என்னும் இடத்தில் சடையனாருக்கும் இசைஞானி யாருக்கும் மகனாகத் தோன்றியவர். நம்பியாரூரார் என்னும் இயற்பெயரைக் கொண்ட இவர், இறைவனால் ஓலைக் கொடுத்து ஆட்கொள்ளப்பட்டவர். பித்தா பிறைசூடி  என இறைவனை அழைத்த இவர் 100 சிவ ஆலயங்களுக்குச் சென்று சிவபெருமானை பாடியுள்ளார். இவர் பாடிய 1026 பாடல்கள் திருப்பாட்டு என்ற பெயரிலும், சுந்தரர் தேவாரம் என்ற பெயரிலும்  வழங்கப்படுகிறது. இவை ஏழாம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளது. 

மாணிக்கவாசகர்

பாண்டிய நாட்டில் உள்ள திருவாத ஊரில் சம்பு பாதாசிரியருக்கும் சிவஞானவதியாருக்கும் மகனாகத் தோன்றியவர். திருவாத ஊரார் என அழைக்கப்பட்ட இவர், அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராக விளங்கியவர். அரசனுக்காக குதிரை வாங்க சென்ற இடத்தில்   குருந்த மரத்தடியில் ஞானம் பெற்று ஆலயத் திருப்பணிகளை மேற்கொண்டார். இதன் காரணமாக அரச தண்டனைக்கு ஆட்பட்ட இவருக்காக இறைவன் 'பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படிப் பட்டார்' என்பது வரலாறு. இவர் பாடிய திருவாசகம் 656 பாடல்களைக் கொண்டது. திருக்கோவையார் 400 பாடல்களைக் கொண்டது. இவ்விரண்டு நூல்களும் எட்டாம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளது.

ஒன்பதாம் திருமுறையைப் பாடியவர்கள்

ஒன்பது பேர் பாடிய பாடலின் தொகுப்பாக ஒன்பதாம் திருமுறை காணப்படுகிறது. இதனைத் திருவிசைப்பா  என்றும் திருவிசைப் பாமாலை என்றும் வழங்குவார்கள்.

  • திரு மாளிகைத் தேவர்
இவர் போகர் என்னும் சித்தரின் மாணவர். திருவாடுதுறையில் வாழ்ந்தவர். கி.பி பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் நான்கு பதிகங்களை பாடியுள்ளார். இதில் 45 பாடல்கள் காணப்படுகின்றன.

  •  சேந்தனார்
பட்டினத்தடிகளின் அடியவராக விளங்கிய இவர், திருவீழிமிழலையில்  வாழ்ந்தவர். கி.பி பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் மூன்று திருப்பதிகங்களை பாடியுள்ளார். இதில்  47 பாடல்கள் காணப்படுகின்றன.

  •  கருவூர்த் தேவர்

கருவூர் சித்தர் என அழைக்கப்படும் இவர், போகரின் மாணவர் ஆவார். கி.பி பத்தாம் நூற்றாண்டில், கருவூரில்  வாழ்ந்த இவர் 10 பதிகங்களை பாடியுள்ளார். இதில் 105 பாடல்கள் காணப்படுகின்றன.

  •  பூந்துருத்தி நம்பி காடநம்பி 

கி.பி பத்தாம் நூற்றாண்டில் திருப்பூந்துருத்தியில்  காட நம்பி இரண்டு பதிகங்களை பாடியுள்ளார்.  இதில் 12 பாடல்கள் காணப்படுகின்றன.

  •  கண்டராதித்தர் 

கி. பி பத்தாம் நூற்றாண்டை சார்ந்த இவர், சோழ மன்னன் தில்லைச் சிற்றம்பலத்திற்குப் பொன்னோடு வேய்ந்ததைப் பாடியுள்ளார். இவர் ஒரு பதிகம் மட்டுமே பாடியுள்ளார் அதில் பத்துப் பாடல்கள் காணப்படுகின்றன.

  •  வேணாட்டடிகள்
வேணாடு என்பது இன்றைய தென் திருவிதாங்கூர் ஆகும். இங்கு கி.பி பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் ஒரு பதிகம் மட்டுமே பாடியுள்ளார் அதில் பத்துப் பாடல்கள் காணப்படுகின்றன.

  •  திருவாலி அமுதனார் 

கி.பி பத்தாம் நூற்றாண்டில், திருவாலி என்னும் திருத்தலத்தில் பிறந்த இவர், இரண்டு திருப்பதிகங்களைப் பாடியுள்ளார். அதில் 42 பாடல்கள் காணப்படுகின்றன.

  •  புருஷோத்தம நம்பி 

கி.பி பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர், இரண்டு திருப்பதிகங்களை பாடியுள்ளார். அதில் 22 பாடல்கள் காணப்படுகின்றன.

  •  சேதிராயர் 

கி.பி பத்தாம் நூற்றாண்டில் சேதி நாட்டைச் சார்ந்த இவர் ஒரு பதிகம் மட்டுமே பாடியுள்ளார். அதில் பத்துப் பாடல்கள் காணப்படுகின்றன.

 திருமூலர்

கைலாய மலையில்  நந்தியம்பெருமானிடம் உபதேசம் பெற்று வந்த சிவயோகி ஒருவர் சாத்தனூர் வந்தார். இறந்து கிடந்த மூலன் என்னும் இடையனின் உடலில் புகுந்து பசுக்களின் துன்பங்களைப் போக்கினார். பின்னர் தனது உடலில் புக முடியாத நிலையில் திருவாடுதுறைக்கு வந்து அரச மரத்தடியில் தங்கி தவம் ஏற்றி திருமந்திரத்தினை பாடினார். 3000 பாடல்களைக் கொண்ட திருமந்திரம் 9 தந்திரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இது பத்தாம் திருமுறையாக போற்றப்படுகிறது.

பதினோராம் திருமுறைப் பாடிய பன்னிருவர்

பதினொன்றாம் திருமுறையில் 12 அடியவர்கள் பாடியுள்ள 40 நூல்கள் இடம் பெற்றுள்ளன. இதில் மொத்தம் 1401 பாடல்கள் காணப்படுகின்றன.

  •  திரு ஆலவாய் உடையார்

பதினொன்றாம் திருமுறையின் திருமுகப்சுரமாக காணப்படுவது மதுரையில் எழுந்தருளி இருக்கும் சொக்கநாதப் பெருமாளாகிய திரு ஆலவாய் உடையார் பாடியதாகும்.  இதில் ஒரு பாடல் காணப்படுகின்றது.

  •  காரைக்கால் அம்மையார்

புனித வாதியார் என்னும் இயற்பெயரைக் கொண்ட இவர் காரைக்காலில் பிறந்தவர். இறைவனால் மாங்கனி கொடுத்து ஆட்கொள்ளப்பட்ட இவர் பேய் வடிவம் பெற்று திருக்கைலாயம் அடைந்ததாக கூறுவர். கி.பி ஐந்தாம் நூற்றாண்டை சார்ந்த இவர்,  திருவாலங்காட்டு மூத்தத் திருப்பதிகங்கள் இரண்டு, திரு இரட்டை மணிமாலை, அற்புதத் திருவந்தாதி ஆகிய மூன்று நூல்களைப் பாடியுள்ளார். அவற்றில் மொத்தம் 143 பாடல்கள் காணப்படுகின்றன.

  •  ஐயடிகள் காடவர்கோன்

கிபி 9ஆம் நூற்றாண்டில் காஞ்சியை தலைநகரமாகக் கொண்டு தொண்டை நாட்டை ஆண்ட அரசர். இவர் பாடியது திருக்கோயில் திருவெண்பா எனப்படும் சேத்திரத் திருவெண்பா  என்பதாகும். இதில் 24 வெண்பாக்கள் காணப்படுகின்றன.

  •  சேரமான் பெருமாள் நாயனார்

இவர் கி.பி எட்டாம் நூற்றாண்டில் சேர நாட்டின் அரசனாக விளங்கியவர். பெருமாக் கோதையார் என்பது இவருடைய இயற்பெயர். இவர் அருளிய பொன் வண்ணத் தந்தாதியில் 100 பாடல்களும், திருவாரூர் மும்மணிக் கோவையில் 30 பாடல்களும்,  திருக்கைலாய ஞான உலாவில் 394 அடிகளும் காணப்படுகின்றன.

  •  நக்கீர தேவ நாயனார் 

இவர் அருளியது 10 நூல்கள்  அவை, கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி(100 பாடல்கள்), திருஈங்கோய் மலை எழுபது (70 பாடல்கள்), திரு வலஞ்சுழி மும்மணிக் கோவை (15 பாடல்கள்), திருஎழு கூற்றிருக்கை (55 அடிகள்), பெருந்தேவ பாணி(67 அடிகள்), கோபப்பிரசாதம்  (99 அடிகள்), கார் எட்டு(8 பாடல்கள்), போற்றித் திருக்கலிவெண்பா (90அடிகள்), திருமுருகாற்றுப்படை  (317 அடிகள்),  திருக்கண்ணப்ப தேவர் திருமறம் (158 அடிகள்). என்பவை ஆகும். இவை பதினொன்றாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளன.

  •  கல்லாட தேவ நாயனார்

இவரது காலம் கி.பி ஆறாம் நூற்றாண்டு என்பர்.இவர் பாடிய திருக்கண்ணப்ப தேவர் திருமறம் 38 அடிகளைக் கொண்டது. இது பதினொன்றாம் திருமுறையில் காணப்படுகிறது.

  •  கபில தேவ  நாயனார்

இவர் சங்க காலத்தவர் அல்ல. இவர் அருளிய மூத்த நாயனார் திரு இரட்டை மணிமாலை (20 பாடல்கள்), சிவபெருமான் திரு இரட்டை மணிமாலை(37 பாடல்கள்), சிவபெருமான் திருவந்தாதி  (100 பாடல்கள்) ஆகிய மூன்றும் பதினொன்றாம் திருமுறையில் காணப்படுகின்றது.

  •  பரண தேவ நாயனார்

இவர் சங்க காலத்திற்குப் பிந்தியவர், இவர் அருளிய  சிவபெருமான் திருவந்தாதி 101 பாடல்களைக் கொண்டதாகும் இது பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

  •  இளம்பெருமாள் அடிகள்

இவர் பாடிய சிவபெருமான் திரு மும்மணிக் கோவை 30 பாடல்களைக் கொண்டதாகும்.

  •   அதிரா அடிகள்

இவர் அருளிய மூத்த பிள்ளையார் திரு மும்மணிக் கோவை 23 பாடல்களைக் கொண்டது.

  •  திருவெண்காட்டு அடிகள் ( பட்டினத்தடிகள்)

இவர் காவிரிப் பூம்பட்டினத்தில் தோன்றியவர். பட்டினத்துப் பிள்ளையார் எனவும் அழைக்கப்பட்டார். இவர் அருளிய  கோயில் நான்மணிமாலை (40 பாடல்கள்), திருக்கழுமல மும்மணிக் கோவை  (12 பாடல்கள்), திருவிடைமருதூர் மும்மணிக் கோவை (30 பாடல்கள்) திரு ஏகம்பமுடையார் திருவந்தாதி (100 பாடல்கள்), திரு ஒற்றியூர் ஒருபா ஒரு பஃது (10 பாடல்கள்) ஆகிய ஐந்தும் பதினொன்றாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

  •  நம்பியாண்டார் நம்பி

கி.பி பத்தாம் நூற்றாண்டில் சோழநாட்டில் உள்ள திருநாரையூரில் இறந்த இவர் பன்னிரு திருமுறைகளைத் தொகுத்தருளினார். இவர் பாடிய திருநாரையூர் விநாயகர் திருவிரட்டை மணிமாலை (20 பாடல்கள்), கோயில் திருப்பண்ணியர்  விருத்தம் (70 பாடல்கள்), திருத்தொண்டர் திருவந்தாதி  (89 பாடல்கள்), ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி  (101 பாடல்கள்), ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம்  (11 பாடல்கள்), ஆளுடைய பிள்ளையார் திரு மும்மணிக் கோவை (30 பாடல்கள்), ஆளுடைய பிள்ளையார் திரு உலாமாலை (143 கண்ணிகள்), ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்  (49 பாடல்கள்), ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை(65 அடிகள்), திருநாவுக்கரசு தேவர் திரு ஏகாசதமாலை  (11 பாடல்கள்) ஆகிய பத்தும் பதினொன்றாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. 

சேக்கிழார்

இவர் தொண்டை நாட்டிலுள்ள குன்றத்தூரில் வேளாளர் குடியில் பிறந்தவர். அருண்மொழித் தேவர் என்னும் இயற்பெயரைக் கொண்ட இவர், தொண்டர்சீர்பரவுவார் எனவும் அழைக்கப்படுகிறார். இவர் பாடிய திருத்தொண்டர் புராணம் எனப்படும் பெரியபுராணம் 13 சருக்கங்களும் 4286 பாடல்களும் கொண்டதாகும். இதில் 63 நாயன்மார்களின் வரலாறும் 9 தொகை அடியார்களின் வரலாறும் கூறப்பட்டுள்ளது. இன்னொரு பன்னிரண்டாம் திருமுறையாக விளங்குகிறது.

 முடிவுரை

சைவ சமயம் வரலாற்றுக்கு முந்திய சமயம். உலகில் முதற் தோன்றிய சமயம் இதுவேயாம். வேதங்களும், புராணங்களும் சைவத்தின் தொன்மைக்கு சான்றாகும். அத்தகைய பழமை வாய்ந்த சைவ சமயத்தில் சிவன் அருள் பெற்று சிவதோண்டு செய்த அடியவர்கள் 63 நாயன்மார்கள். அவர்களில் 27 பேர் அருளி செய்த 76 நூல்களில் காணப்படும் 18326 திருப்பாடல்களின் தொகுப்பாக பன்னிரு திருமுறை விளங்குகிறது.

†††† இராஜாலி ††††

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யுனிக்கோட் - பயன்பாடு

அறிமுகம்    ஆங்கில மொழியைத் தவிர பிறமொழிகளிலும் பலரும் பல்வேறு குறியேற்றங்களையும் எழுத்துருக்களையும் பயன்படுத்தி வந்தனர். இந்த முறையில் ஒரே ...