முன்னுரை
தமிழ் இலக்கியங்களில் பழமை வாய்ந்தது, சங்க இலக்கியங்கள் ஆகும். ஏறத்தாழ கி.மு 200 முதல் கி.பி 200 வரையில் வாழ்ந்த சங்கப் புலவர்களால் ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடப்பட்டன. அப்பாடல்கள் முழுவதும் கிடைக்கவில்லை. பல பாடல்கள் அழிந்துபோயின, நல்லறிஞரகள் எஞ்சியிருந்த பாடல்களைத் திரட்டி, சிறந்த பாடல்களை மட்டும் பொருள் அடிப்படையிலும், செய்யுள் அடிப்படையிலும், அடி வரை அடிப்படையிலும், வகுத்து அவற்றை எட்டுத்தொகை நூல்களாக தொகுத்தனர். இத்தொகுப்பை பழைய உரையாசிரியர்கள் 'தொகை' என்றும், 'எண் பெரும் தொகை' என்றும் குறிப்பிடுகின்றனர். இத்தகைய பழமை வாய்ந்த எட்டுத்தொகை நூல்களைப் பற்றி, இக்கட்டுரையில் காணலாம்.
எட்டுத்தொகை நூல்கள்
நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு, என்ற எட்டு நூல்களும் எட்டுத்தொகை நூல்கள் ஆகும். இதனை,
நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத்தொகை
எனப் பழைய வெண்பா குறிப்பிடுகிறது.இவ்வெட்டு நூல்களுள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு, ஆகிய ஐந்து நூல்களும் அகப்பொருள் பற்றியன. பதிற்றுப்பத்தும், புறநானூறும் புறப்பொருள் பற்றியன. பரிபாடல் என்பது அகப்பொருள் புறப்பொருள் இரண்டும் கலந்து வரும் நூலாகும். எட்டுத்தொகை நூல்களில் காணப்படும் பாடல்கள், 400க்கும் மேற்பட்ட புலவர்கள் பாடியுள்ளனர். பெண்பாற் புலவர்களும், அரச குடும்பத்தவரும் பல பாடல்களை இயற்றியுள்ளனர்.
எட்டுத்தொகையில் அகநூல்கள்
எட்டுத்தொகை நூல்களுள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு, ஆகிய ஐந்து நூல்களும் அகப்பொருள் பற்றியன.
நற்றிணை
இந்நூலில் 9 முதல் 12 அடி வரையில் உள்ள 400 பாடல்களின் தொகுப்பு ஆகும். நற்றிணை என்பது நல்ல திணை எனப் பொருள்படும். இந்நூல் ஐந்து திணைகளுக்கும் உரிய நானூறு பாடல்களைக் கொண்டமையால் இதனை, நற்றிணை நானூறு எனவும் வழங்குவர். இந்நூல் 193 புலவர்களால் பாடப்பெற்ற, இந்நூல் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி என்பவரால் தொகுப்பிக்கப்பட்டது. இந்நூலை, தொகுத்தவர் யார் என தெரியவில்லை.
தமிழ் மக்களின் அகவாழ்வு, அறவாழ்வு, மன்னர்களின் ஆட்சிச் சிறப்பு, ஒருமைப்பாட்டு நற்றிணையில், சங்கத் தமிழ் மக்களின் உணர்வு,பழந்தமிழ் மக்களின் பழக்க வழக்கங்கள் போன்றவை சிறப்பித்து கூறப்பட்டுள்ளன. திருக்குறளின் கருத்துக்கள் பல இந்நூலில் ஆங்காங்கே எடுத்தாளப்பட்டுள்ளது.
குறுந்தொகை
நல்ல குறுந்தொகை என்ற அடைமொழியோடு அழைக்கப்படும் அதன் மூலம் இந்நூலின் சிறப்பை உணரலாம். இந்நூல் 4 முதல் 8 அடி வரையில் உள்ள ஐந்து திணைகளுக்கும் உரிய 400 பாடல்களின் தொகுப்பு ஆகும். 206 புலவர்களால் பாடப்பட்ட இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ என்பவராவார். இந்நூலைத் தொகுப்பித்தவர் யார் என தெரியாது.
முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூல் குறுந்தொகை. உரையாசிரியர்களும், ஆய்வாளர்களும் இந்நூலை மிகுதியாக மேற்கோள் காட்டியுள்ளது மூலம் இந்நூலின் சிறப்பை உணர முடிகிறது. குறுந்தொகையில் பரணர் பாடிய பாடல்கள் பல வரலாற்றுக் குறிப்புகளை தெரிவிக்கின்றன. சங்கத் தமிழ் மக்களின் அகவாழ்வு, அறவாழ்வு, மன்னர்களின் ஆட்சிச் சிறப்பு, ஒருமைப்பாட்டு உணர்வு, பழந்தமிழ் மக்களின் பழக்க வழக்கங்கள் போன்றவை சிறப்பித்து கூறப்பட்டுள்ளன.
ஐங்குறுநூறு
ஐந்து திணைகளுக்கும், திணைக்கு 100 பாடல்கள் வீதம் 500 பாடல்கள் கொண்டது ஐங்குறுநூறாகும். இந்நூலில் 3 அடி முதல் 5 அடிவரையுள்ள பாடல்கள் காணப்படுகின்றன. இந்நூலைத் தொகுத்தவர் கூடலூர்கிழார். தொகுப்பித்தவர் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்னும் மன்னர். இந்நூலில் காணப்படும் குறிஞ்சித்திணை பாடல்களைப் பாடியவர் கபிலர். முல்லைத் திணைப் பாடல்களைப் பாடியவர் பேயனார். மருதத்திணைப் பாடல்களைப் பாடியவர் ஓரம்போகியார். நெய்தல் திணைப் பாடல்களைப் பாடியவர் அம்மூவனார். பாலைத் திணைப் பாடல்களைப் பாடியவர் ஓதலாந்தையார் ஆவார்.
கலித்தொகை
எட்டுத்தொகை நூல்களில் கலிவெண்பாவால் பாடப்பட்ட நூல் கலித்தொகை ஆகும் 'கற்றறிந்தார் ஏத்தும் கலி' என சிறப்பித்துக் கூறுவதன் மூலம் கலித்தொகையின் சிறப்பினை உணரலாம். 150 பாடல்களைக் கொண்ட இந்நூல், 11 அடி முதல் 80 அடி வரையிலான பாடல்களைக் கொண்டது. இதனை தொகுத்தவர் நல்லந்துவனார். Jjதொகுப்பித்தவர் யார் என தெரியாது. கலித்தொகையில் 29 பாடல்களை கொண்ட குறிஞ்சித் திணைப் பாடல்களை கபிலரும், 17 பாடல்களைக் கொண்ட முல்லைத் திணைப் பாடல்களை சோழன் நல்லுருத்திரனரும், 35 பாடல்களைக் கொண்ட மருதத்திணைப் பாடல்களை மருதனிளநாகனாரும், 33 பாடல்களைக் கொண்ட நெய்தல் திணைப் பாடல்களை நல்லந்துவனாரும், 36 பாடல்களை கொண்ட பாலைத்திணை பாடல்களை பாலை பாடிய பெருங்கடுங்கோவும் பாடியுள்ளார்கள்.
கலித்தொகை பாடல்கள் பெரும்பாலும் நாடகப் பாங்கினை கொண்டதாக காணப்படுகின்றன. மேலும், சங்கத் தமிழர்களின் வாழ்க்கை முறையினையும், பழக்கவழக்கங்களையும் இந்நூல் விரிவாக எடுத்துக் கூறுவதாக காணப்படுகிறது
அகநானூறு
அகநானூறு, இது ஓர் அகத்திணை சார்ந்த நூல். இதனை, 'நெடுந்தொகை' என்றும் கூறுவர். இந்நூலில் அடங்கியுள்ள பாடல்கள் மிகக் குறைந்த அளவாகப் 13 அடிகளையும், கூடிய அளவு 31 அடிகளையும் கொண்டு அமைந்துள்ளன. கடவுள் வாழ்த்துச் செய்யுளைத் தவிர்த்து இந்நூலில் 400 பாடல்கள் உள்ளன. இவை களிற்றியானை நிரை(1-120), மணி மிடை பவளம் (121-300), நித்திலக் கோவை (301-400) என மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
1,3.5,7,9,11 ஒற்றைப்பட எண்ணாலான பாடல்கள் 200-ம் பாலைத் திணையைச் சேர்ந்தவை.
2,8,12,18..என்ற எண்ணாலான பாடல்கள் 80-ம் குறிஞ்சித் திணையைச் சேர்ந்தவை.
4,14,24.. என்ற எனப்படுபவை 40-ம் முல்லைத் திணையைச் சேர்ந்தவை.
6,16.26.. என்ற எனப்படுபவை 40-ம் மருதத் திணையைச் சேர்ந்தவை.
10,20,30.. என்ற எனப்படுபவை 40-ம் நெய்தல் திணையைச் சேர்ந்தவை.
இந்நூலைத் தொகையைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடி கிழார் மகனார் உருத்திரசன்மர். இதனைத் தொகுப்பித்த மன்னன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியார். அகநானூற்றுப் புலவர்கள் 146 பேர். மூன்று பாடல்களின் (114, 117, 165) ஆசிரியர் பெயர் காணப் பெறவில்லை.
● களிற்றியானைநிரை
1 முதல் 120 வரையில் உள்ள 120 பாடல்கள் இத் தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் யானைக்களிறு யானைக்களிறு போல் பெருமித நடை கொண்டவை. யானைகளின் அணிவகுப்பைப் போன்று ஓரினப் பாடல்களின் அணிவகுப்பாக அவை அமைந்துள்ளன.
● மணிமிடை பவளம்
121 முதல் 300 வரை உள்ள 180 பாடல்கள் இத் தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் நீலநிற மணிகள் போலவும், செந்நிறப் பவளம் போலவும் பெருமதிப்பு உடையனவாகஅமைந்து ஈரினப் பாடல்களின் தொகுப்பாக அமைந்துள்ளன. மணியும் பவளமும் கோத்த ஆரம் போன்று இத்தொகுப்பு அமைந்துள்ளது.
- நித்திலக் கோவை
301 முதல் 400 வரை உள்ள 100 பாடல்கள் இத் தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் நித்தில முத்துக்கள் போலப் பெருமதிப்பு கொண்டவையாக அமைந்து ஒரினக் கோவை போல அமைந்துள்ளன. இத்தொகுப்பு முத்தாரம் போல் அமைந்துள்ளது.
எட்டுத்தொகை நூல்களில் நற்றினை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு ஆகிய ஐந்து நூல்களில் அகம் சார்ந்த நூல்கள் ஆகும். இவை, பண்டையகால மக்களின் அகம் கருத்துக்களையும், வாழ்வியல் சார்ந்த ஒழுக்கங்களையும் எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது.
எட்டுத்தொகை நூல்களில் புறம் சார்ந்த நூல்கள்
எட்டுத்தொகையில் புறக்கருத்துக்களை கூறும் நூல்களாக பதிற்றுப்பத்தும், புறநானூறும் காணப்படுகின்றது.
பதிற்றுப்பத்து
(பத்து + பத்து = பதிற்றுப்பத்து) இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். சேர மன்னர்களைப் பற்றி பத்துப் புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பே பதிற்றுப்பத்தாகும். இந்த நூலில் முதற் பத்தும், இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை. ஏனைய எட்டுப் பத்துகளே கிடைத்துள்ளன. கிடைத்துள்ள 80 பாடல்கள் எட்டுச் சேர மன்னர்களின் வரலாற்றை எடுத்துரைக்கின்றன. இது சேரமன்னர்களின் மனத் திண்மை, புகழ் நோக்கு, ஈகைத் திறம் ஆகிய பண்புகளையும் படை வன்மை,போர்த்திறம், குடியோம்பல் முறை ஆகிய ஆட்சித் திறன்களையும் எடுத்துக்கூறுவதாகக் காணப்படுகின்றது. இந்நூலின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு எனக் கருதப்படுகின்றது.
பாடல் தொகுதிகளின் பட்டியல்
- முதல் பத்து - கிடைக்கவில்லை.
- இரண்டாம் பத்து - பாடியவர் குமட்டூர் கண்ணனார், பாடப்பெற்ற மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஆவார்.
- மூன்றாம் பத்து - பாடியவர் பாலைக் கௌதமனார், பாடப்பெற்ற மன்னன் பல்யானைச் செல்கெழு குட்டுவன் ஆவார்.
- நான்காம் பத்து - பாடியவர் காப்பியாற்றுக் காப்பியனார், பாடப்பெற்ற மன்னன் களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் ஆவார்.
- ஐந்தாம் பத்து - பாடியவர் பரணர், பாடப்பெற்ற மன்னன் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் ஆவார்.
- ஆறாம் பத்து - பாடியவர் காக்கைபாடினியார் (நச்செள்ளையார்), பாடப்பெற்ற மன்னன் ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் ஆவார்.
- ஏழாம் பத்து - பாடியவர் கபிலர், பாடப்பெற்ற மன்னன் செல்வக் கடுங்கோ வாழியாதன் ஆவார்.
- எட்டாம் பத்து - பாடியவர் அரிசில் கிழார், பாடப்பெற்ற மன்னன் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை ஆவார்.
- ஒன்பதாம் பத்து - பாடியவர் பெருங்குன்றூர் கிழார், பாடப்பெற்ற மன்னன் இளஞ் சேரல் இரும்பொறை ஆவார்.
- பத்தாம் பத்து - கிடைக்கவில்லை.
பதிற்றுப்பத்தை தொகுத்தவர் தொகுப்பித்தவர் யார் எனத் தெரியவில்லை.
புறநானூறு
புறத்திணை பற்றிப் பேசும் 400 பாடல்களின் தொகுப்பே புறநானூறு ஆகும். பண்டைய தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்கள், சிற்றரசர்கள், கடையெழு வள்ளல்கள், புலவர்கள், மற்றும் பண்டைய தமிழர்களின் வாழ்க்கை முறை, பழக்கவழக்கப் பண்பாடுகள் போன்றவற்றை எடுத்துக் கூறும் நூலாக புறநானூறு காணப்படுகிறது.
165 புலவர்களால் பாடப்பட்டதாகும். புறநானூறில் 4 அடி முதல் 40 அடி வரையிலான பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இந்நூலை தொகுத்தவர் தொகுப்பித்தவர் யார் என தெரியவில்லை. ஜி.யு. போப் அவர்கள் இந்நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
யாதும் ஊரே யாவரும் கேளிர்தீதும் நன்றும் பிறர் தர வாரா
போன்ற உயர்ந்த கருத்துக்களை கூறுவதாக இந்நூல் காணப்படுகிறது.
எட்டுத்தொகையில் அகம் புறம் சார்ந்த நூல்
எட்டுத்தொகை நூற்களில் அகக்கருத்துக்களையும் புற கருத்துக்களையும் ஒருங்கே கூறும் நூலாக பரிபாடல் காணப்படுகிறது.
பரிபாடல்
பா வகையால் பெயர் பெற்ற பரிபாடலில் 25 அடி முதல் 400 இடம் பெற்றுள்ளது. 22 பாடல்கள் மட்டுமே இந்நூலில் இருந்து கிடைத்துள்ளது. அவற்றில் குறிப்பாக, திருமாலை பற்றி ஆறு பாடல்களும், வைகை ஆற்றைப் பற்றி எட்டுப் பாடல்களும், செவ்வேள் எனப்படும் முருகனைப் பற்றி எட்டுப் பாடல்களும் இடம்பெற்றுள்ளது. இந்நூலைத் தொகுத்தவர், தொகுப்பித்தவர் யார் எனத் தெரியவில்லை. வைகை ஆற்றின் வளம், மதுரை நகரின் சிறப்பு போன்றவை இந்நூலில் இடம்பெற்றுள்ளது.
முடிவுரை
சங்க இலக்கியப் பிரிவுகளில் ஒன்றான எட்டுத் தொகையில், 8 தொகுக்கப்பட்ட நூல்கள் காணப்படுகின்றன. அவற்றில் 5 நூல்கள் அகம் சார்ந்தவையாகவும், இரண்டு நூல்கள் புறம் சார்ந்தவையாகவும், ஒரு நூல் அகம் புறம் சார்ந்த நூலாகவும் காணப்படுகின்றது. இவை எட்டும் பண்பட்ட பண்டையத் தமிழர்களின் வாழ்வியலை எடுத்துக்காட்டும் களஞ்சியங்களாக விளங்குகின்றது.
††††இராஜாலி††††
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக