எனது வலைப்பதிவு பட்டியல்

திங்கள், 25 டிசம்பர், 2023

தமிழ்விடு தூது - 1 முதல்10 கண்ணிகள்

நூல் குறிப்பு

 தமிழ் மொழியில் காணப்படும் 96 வகையான சிற்றிலக்கியங்களில் ஒன்று தூது இலக்கியமாகும். அகத்துறை சார்ந்த இவ்விலக்கியம். கலிவெண்பா என்னும் செய்யுளில் பாடப்படும். தலைவன் தலைவியர்கள் காதல் காரணமாகத் துன்புறும்போது, ஒருவர் மற்றொருவரிடம் தம் வருத்தத்தைத் தெரிவிக்கும் படி உயர்திணைப் பொருட்களையோ, அஃறினைப் பொருட்களையோ தூது அனுப்பும் நிலையில் பாடப்படுவது தூது இலக்கியம் ஆகும்.

தமிழ்விடு தூது

  மதுரைச் சொக்கநாதரிடம் காதல் கொண்ட தலைவி தன் காதலைத் தெரிவித்து அவர் இசைவறிந்து வருமாறு தமிழைத் தூதனுப்பி வைப்பதாகப் பாடப்பெற்றது தமிழ்விடு தூது என்னும் நூலாகும். 268 கண்ணிகளைக் கொண்ட இந்த நூலின் ஆசிரியர் யார் என தெரியவில்லை. இந்நூலில் தூது பொருளான தமிழ் மொழியின் சிறப்புகள் விரிவாகப் பேசப்பட்டுள்ளது. 

சான்றோர் வளர்த்த தமிழ் மொழி


தமிழ் மொழியின் சிறப்புகளை தமிழ்விடு தூது கூறும்போது,

   "புகழ்மிக்க தமிழே! நீ சிறப்புமிக்க கூடலென்றும், மதுரை என்றும் போற்றப்படுகின்ற சிவராசதானியைக் காத்து அழகு பொருந்திய தமிழ்ச் சங்கத்தில் 49 புலவர்களில் முதல் புலவராக அமர்ந்து கவி பாடிய சிவபெருமானாலும்; எட்டுத்திக்கும் புகழ் பரப்பிய தமிழரசி என போற்றப்படும் உமையவளாலும்; மனம் விரும்பி சிவன் ஞானத் தொகுதியுடைய ஏட்டுச்சுடிகளில் ஒரு சுவடியை   கையில் எடுத்த கணபதியாலும்; ஒரு காலத்தில் மதுரை நகரில்  அரசாட்சி செய்து, மதுரை தமிழ் சங்கத்து புலவர்களின் எதிரே அமர்ந்து தமிழ் பாடல்களின் சிறப்பை உணர்த்திய வேற்படையை உடைய முருகக்கடவுளாலும்; மூன்று வயதில் அன்னை உமையவளிடம் ஞானபால் உண்டு வடமொழி நூல்களையும், தென்மொழி நூல்களையும் கற்றறிந்து, நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய திருஞானசம்பந்தராலும்; முக்கண்ணனாகிய சிவபெருமானை வேண்டி முன்பு முதலையுண்ட பிள்ளையை உயிர் பெற்றுத் தரச் செய்த சுந்தராலும்; பிரம்மனும் திருமாலும் தேடியும் அறிய முடியாத  சிவபெருமானின் திருவடிகளைத் திருநல்லூரில் தமிழ்ச் செய்யுள் பாடி தன் தலை மேல் பெற்ற திருநாவுக்கராலும்; மணம் மிக்க தாழம் பூவை தலையில் சூடாத சிவபெருமான், காய்ந்த பனை ஓலையில் பாட்டெழுதி தரும்படி வேண்டிய மாணிக்கவாசகராலும்; சிறப்புமிக்க முத்தமிழை ஓதிய மாமுனி ஆகிய அகத்தியராலும்; தொல்காப்பியத்தை படைத்தருளிய தொல் முனியாகிய தொல்காப்பியராலும்; பதி எனப்படும் சிவபெருமானிடம் உயிர்கள் செல்வதற்கு 12 நூற்பாக்கள் பாடிய  மெய்க்கண்ட தேவராலும் போற்றி வளர்க்கப்பட்ட தமிழே!" எனத் தமிழ் மொழி சிவபெருமான், உமையவள், கணபதி, முருகப்பெருமான், திருஞானசம்பந்தர், சுந்தரர், திருநாவுக்கரசர், அகத்தியர், தொல்காப்பியர், மெய்க்கண்ட தேவர் போன்றோர்களால் வளர்க்கப்பட்டது எனத் தமிழ்விடு தூது கூறுகிறது.

**** இராஜாலி****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யுனிக்கோட் - பயன்பாடு

அறிமுகம்    ஆங்கில மொழியைத் தவிர பிறமொழிகளிலும் பலரும் பல்வேறு குறியேற்றங்களையும் எழுத்துருக்களையும் பயன்படுத்தி வந்தனர். இந்த முறையில் ஒரே ...