நூல் குறிப்பு
சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றான குறவஞ்சி இலக்கியம் பாட்டுடைத் தலைவனை அவனது வீதி உலாவின் போது கண்டு காதல் கொண்ட தலைவி காதல் நோயால் வாடி தவிப்பதை போக்கும் நிலையில் குறமகள் ஒருத்தி குறி கூறுவதாக அமைந்ததாகும்.
குறவஞ்சி இலக்கியங்களில் முதன்மையானதாகக் கருதப்படுவது திரிகூடராசப்பக் கவிராயரால் பாடப்பட்ட குற்றாலக் குறவஞ்சி ஆகும். இதில் குற்றாலநாதர் மீது காதல் கொண்ட வசந்த வல்லிக்கு குறமகள் குறி சொல்லுவதாக ஆசிரியர் படைத்துள்ளார்.
திரிகூட மலையெங்கள் மலையே!
தேவலோக வாத்தியங்கள் முழங்கும் அந்நகரில் கோயில் கொண்டுள்ள குற்றால நாதரின் சிறப்புகளைப் பாடிக் கொண்டே வந்த குறமகளைக் கண்டு வசந்தவல்லி மன மகிழ்ச்சி கொண்டாள். குற்றால நாதர் வீற்றிருக்கும் திரிகூட மலையின் சிறப்புகளை அறிய விரும்பி, "சந்தனம் பூசிய மார்பும், துவளும் இடையும், முத்துப் பற்களும், பவள இதழ்களும் உடைய குறப்பெண்ணே உன் சொந்த மலையின் வளத்தைப் பற்றி எனக்குக் கூறுவாயாக?" எனக் கேட்டாள்.
அதனைக் கேட்ட குறமகள், வசந்தவல்லியிடம் தங்கள் மலையின் வளத்தை பின்வருமாறு கூறினாள்.
"வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழியெறிந்து வானவரை அழைப்பார்
கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார்
தேனருவித் திரைஎழும்பி வானின்வழி ஒழுகும்
செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்
கூனல் இளம் பிறைமுடித்த வேணியலங் காரர்
குற்றாலத் திரிகூட மலைஎங்கள் மலையே" - என,
"எங்கள் திரிகூட மலையில், ஆண் குரங்குகள் பழங்களைப் பறித்துக் கொடுத்துத் தம் மந்திகளுடன் கொஞ்சிக் கொண்டிருக்கும். அம்மந்திகள் கீழே சிந்தும் கனிகளை எதிர்பார்த்துத் தேவர்கள் கெஞ்சிக் கொண்டிருப்பார்கள். வேடுவர்கள் தம் கண்களால் வானவர்களைக் கீழே வருமாறு அழைப்பர். சித்தர்கள் பலரும் வந்து காய சித்தி மூலிகைகளை வளர்த்துக் கொண்டிருப்பார்கள். தேன் அருவியின் அலைகள் மேலே எழும்பிச் சென்று வானின் வழியாக ஒழுகும். அதனால் சூரியனின் தேர்ச் சக்கரங்களும், குதிரைக் கால்களும் வழுக்கும். வளைந்த பிறையினைச் சடையில் சூடிய குற்றால நாதரின் வளமுடைய திரிகூட மலைதான் எங்கள் மலை" எனக் குறமகள் திரிகூட மலையின் சிறப்புகளை வசந்தவல்லிக்குக் கூறினாள்.
**** இராஜாலி ****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக