எனது வலைப்பதிவு பட்டியல்

செவ்வாய், 30 ஜனவரி, 2024

நாரை விடு தூது - சக்திமுத்தப் புலவர்

   நாரை விடு தூது என்ற இந்நூலின் ஆசிரியர் சத்திமுத்தப் புலவர். இவர் சத்திமுத்தம் என்னும் ஊரில் வாழ்ந்த காரணத்தினால் சத்திமுத்தப்புலவர் என்று அழைக்கப்பட்டுள்ளார். இவரின் இயற்பெயர் என்னவென்று அறியப்படவில்லை. சத்திமுத்தம் என்பது கும்பகோணம் அருகிலுள்ள தலமாகும்.

நாராய் நாராய் செங்கால் நாராய்

   சத்திமுத்தப் புலவர்,  வறுமையால் தளர்வுற்று தம் ஊர்விட்டு அயலூர் சென்று ஒரு குட்டிச் சுவரின் அருகில் குளிருக்கு ஒதுங்கியிருக்கும் போது நாரை ஒன்று மேலே பறக்கக் கண்டு, வறுமையிலும் தன் பிரிவாலும் வருந்திக் கொண்டிருக்கும் தன் மனைவிக்கு அதைத் தூதாக அனுப்புவது போல்,

நாராய் நாராய் செங்கால் நாராய்

பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன

பவளக் கூர்வாய் செங்கால் நாராய்

நீயுநின் பெடையும் தென்றிசைக் குமரியாடி

வடதிசைக்கேகுவீராயின்

எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி

நனைசுவர்க் கூரைக் கனைகுரற் பல்லி

பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு

"எங்கோன் மாறன்வழுதி கூடலில்

ஆடையின்றி வாடையின் மெலிந்து

கையது கொண்டு மெய்யது பொத்திக்

காலது கொண்டு மேலது தழீஇப்

பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்

ஏழையாளனைக் கண்டனம் எனுமே"

என்ற பாடலில் "நாரையே! நாரையே! சிவந்த கால்களை உடைய நாரையே! பனைமரத்து கிழங்கை பிளந்தது போன்ற கூர்மையான அலகை கொண்ட செங்கால் நாரையே! நீயும் உன் பெட்டையும் தென் திசையில் உள்ள கன்யாகுமரியில் நீராடிய பின் வட திசைக்கு திரும்புவீரானால் எங்கள் ஊரில் உள்ள சத்திமுத்த குளத்தில் தங்கி, நனைந்த சுவர்களையும் கூரையையும் கனைக்கும் பல்லிகளும் கொண்ட வீட்டில் என்னை எதிர்பார்த்திருக்கும் என் மனைவியிடம், எங்கள் அரசன் மாறன் வழுதி ஆளும் மதுரையில் குளிர்காலத்தில் சரியான ஆடையில்லாமல் உடல் மெலிந்துபோய் போர்வை இல்லாததால் கையைக் கொண்டு உடம்பை பொத்தி, காலைக் கொண்டு என் உடலை தழுவி, பெட்டிக்குள் பிடித்து வைத்திருக்கும் பாம்பை போல உயிரை பிடித்து வைத்திருக்கும் உன் ஏழைக் கணவனை கண்டோம் என்று சொல்லுங்கள்!" என்னும் பொருள் படும்படி பாடியுள்ளார்.

    அச்சமயம் அங்கு நகர சோதனைக்கு வந்த மாறான் வழுதி என்ற அரசன் இச்செய்யுளைக் கேட்டு தான் நாரையின் மூக்கிற்குப் பல அறிஞர்களிடமும், நூல்களிடமும் உவமை காணாது தேடிக்கொண்டிருந்த போது பனங்கிழங்கின் உவமையைக் கேட்டுக் களிப்புற்று, தன் மீது போர்த்தியிருந்த உத்தரீயம் என்ற மேலாடையினை அவர் மீது எறிந்தான். தன் சேவகரை விட்டு அவரைத் வருவித்து வேண்டியது வழங்கினான் என்பது செய்தி.

**** இராஜாலி**** 

திங்கள், 29 ஜனவரி, 2024

ஆமணக்குக்கும் யானையும் - காளமேகம்

     காளமேகம் 15 ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் புலவர் ஆவார். சமண சமயத்தில் பிறந்த இவர், தனது காதலி  மோகனாங்கி  என்பவருக்காக சைவ சமயத்திற்கு மாறினார்.  இவர் வசைப் பாடல்கள் பாடுவதில் வல்லவர் என்று கூறப்படுகின்றது. ஆனாலும் இவர் பல சிறந்த நயம் மிகுந்த பாடல்களையும் பாடியுள்ளார். இவர் பாடிய சிலேடைப் பாடல்களும், நகைச் சுவைப் பாடல்களும் பல உள்ளன. சமயம் சார்ந்த நூல்களையும் இவர் இயற்றியுள்ளார். திருவானைக்கா உலா, சரஸ்வதி மாலை, பரப்பிரம்ம விளக்கம், சித்திர மடல் முதலியவை இவர் இயற்றிய நூல்களாகும்.

ஆமணக்குக்கும் யானையும் 

  காளமேகப்புலவர் இரு பொருள்படும்படி சிலேடையாக  ஆமணக்கையும் யானையையும்  ஒரு தனிப்பாடலில்  பாடியுள்ளார்.

ஆமணக்குச் செடி 

     ஆமணக்குச் செடியில் அமணக்குக் கொட்டையில் வெண்ணிற முத்து இருக்கும்.  காற்றில் அதன் கொம்பை ( கிளை ) அசைக்கும். உள்ளே வெற்றிடமான துளையை உடைய தண்டுகளுடன் வளரும். கொத்தாக இருக்கும் ஆமணக்குக் குலையை நேரே உயர்த்தினால் தலையைச் சாய்க்கும் தன்மை கொண்டதாக காணப்படும்.

யானை

 யானை முத்துப்போன்ற தன் வெண்ணிறக் கொம்பை (தந்தத்தை) அசைக்கும். உள்ளே துளை உள்ள தன் துதிக்கைத் தண்டை ஏந்திக்கொண்டு வரும். கொத்தாகப் பழுத்திருக்கும் வாழைமரத்துக் குலையைச் சாய்க்கும் தன்மை கொண்டதாக காணப்படும். என்பதை,

முத்திருக்கும் கொம்பசைக்கும் மூரித்தண் டேந்திவரும்

கொத்திருக்கும் நேரே குலைசாய்க்கும் – ஏத்திசைக்கும்

தேமணக்கும் சோலைத் திருமலைரா யன்வரையில்

ஆமணக்கு மால்யானை யாம்.

என ஆமணக்குச் செடியின் தன்மையையும், யானையின் தன்மையையும் இந்தப் பாடலில் சிலேடையாகக் கூறியுள்ளார்.

**** இராஜாலி ****

என் கொணர்ந்தாய் பாணா நீ - வீரராகவ முதலியார்

      வீரராகவ முதலியார் செங்கல்பட்டுக்கு அருகிலுள்ள பூதூரில் வேளாண் குலத்தில் வடுகநாதர் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். பிறவியிலேயே பார்வையற்றவர். அந்தகக்கவி என அழைக்கப்பட்டார். சிலேடைச் சுவை நிறைந்த தனிப்பாடல்களுக்காகப் புகழ் பெற்றவர். சந்திரவாணன் கோவை, திருவாரூருலா, சேயூர்க்கலம்பகம், சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ் போன்ற நூல்களை இயற்றியுள்ளார். அவர் பாடிய தனி பாடல்களில் ஒன்று ' என் கொணர்ந்தாய் பாணா நீ' என்ற பாடலில் யானையின் பல்வேறு பெயர்களை நயம்பட எடுத்துக் கூறியுள்ளார். 

என் கொணர்ந்தாய் பாணா நீ

       இராமன் என்பவன் மழை போலக் கொடை வழங்கும் வள்ளல். புலவர்    ஒருவர் அவனைக் கண்டு பாடினார். அவன் புலவருக்கு யானை ஒன்றைப் பரிசாகத் தந்தான். புலவர் யானையுடன் வீடு திரும்பினார். அவரது மனைவி பாணி 'என்ன கொண்டுவந்தாய்' என வினவினாள். புலவர் யானையைக் குறிக்கும் சொற்களை ஒவ்வொன்றாகச் சொல்ல மனைவி அதனை வேறு வகையாகப் புரிந்துகொண்டு பேசுகிறாள். புலவர் களபம் (யானை, சந்தனம்) என்றார். மனைவி சந்தனம் என எண்ணி பூசிக்கொள் என்றாள். புலவர் மாதங்கம் (யானை, மா தங்கம்) என்றார். மனைவி பெரும் பொருள் எனக் கருதி, இனி நமக்குக் குறைவு ஒன்றும் இல்லை, வாழ்ந்தோம் என்றாள். புலவர் வேழம் (யானை, கரும்பு) என்றார். மனைவி கரும்பு எனக் கருதி,  தின்னும் என்றாள். புலவர் பகடு (யானை, எருது) என்றார். மனைவி மாடு என எண்ணி, ஏரில் பூட்டி உழவு செய்க என்றாள். புலவர், கம்பமா (யானை, கம்பு மாவு) என்றார். மனைவி கம்பு மாவு எனக் கருதி, களி கிண்டி உண்ண உதவும் என்றாள். புலவர் கைம்மா  என்றார். மனைவி நீண்ட தும்பிக்கையை உடைய  யானை என்பதை புரிந்துகொண்டு, நமக்கே உணவு இல்லாதபோது யானைக்கு உணவு வழங்குவது எப்படி என்று எண்ணிக் கலங்கினாள். என்பதை,

இம்பர்வான் எல்லை இராமனையே பாடி

என்கொணர்ந்தாய் பாணா நீ என்றாள் பாணி

வம்பதாம் களபமென்றேன் பூசுமென்றாள்

மாதங்க மென்றேன் யாம் வாழ்ந்தே மென்றாள்

பம்புசீர் வேழமென்றேன் தின்னும் என்றாள்

பகடென்றேன் உழும்என்றாள் பழனம் தன்னை

கம்பமா என்றேன் நல் களியாம் என்றாள்

கைம்மா என்றேன் சும்மா கலங்கினாளே.

   என்ற தனிப்பாடலில், களபம், மாதங்கம், வேழம், பகடு, கம்பமா, கைம்மா போன்ற பெயர்களில் யானை அழைக்கப்படுகிறது என்பதனை இப்பாடலில் எடுத்துக் கூறியுள்ளார்.

**** இராஜாலி****

சனி, 27 ஜனவரி, 2024

அவ்வையாரின் தனிப்பாடல் - எல்லாருக்கும் ஒவ்வொன்று எளிது

     தமிழ் புலவர்களில் அவ்வையார் என்ற பெயரில் பல புலவர்கள் காலம் காலமாக வாழ்ந்து வந்துள்ளார்கள். குறிப்பாக சங்ககாலத்து அவ்வையார், பிற்காலத்து அவ்வையார் என்பவர்கள் காலத்தால் அறியப்படக்கூடியவர்கள். அவர்களில் ஒருவர் பாடிய தனிப்பாடல் திரட்டில் இடம்பெற்றுள்ள பல பாடல்களில் எல்லாருக்கும் ஒவ்வொன்று எளிது என்னும் பாடல் குறிப்பிடத்தக்கதாகும்.

பாடலின் விளக்கம்

       இவ்வுலகத்தில் பிறந்த உயிர்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனித்திறமையைப் பெற்று காணப்படுகின்றன. திறமை உள்ளவர்கள் திறமையற்றவர்கள் என்று யாரையும் பழித்து பேச முடியாது குறிப்பாக, வான் குருவி எனப்படும் தூக்கணாங்குருவியின் கூட்டை போல் யாராலும் அமைக்க முடியாது. அரக்கு எனப்படும் பசையைக் கொண்டு கரையான் கட்டும் புற்றைப் போல் எந்த வல்லுனராலும் கட்ட முடியாது. தேனீக்கள் கட்டும் தேன் கூட்டினை எவராலும் உருவாக்க முடியாது. சிலந்தியின் வலையினை யாராலும் பின்ன முடியாது. எனவே இவ்வுலகில் நான்தான் அறிவு மிக்கவன் திறமையானவன் என்ற ஆணவம் கூடாது. உலகில் பிறந்த ஒவ்வொரு உயிர்களுக்கும் ஒவ்வொரு சிறப்பு பண்பு இருக்கிறது என்பதினை,

 வான்குருவியின் கூடு வல் அரக்கு தோல்கரையான் 

 தேன் சிலம்பி யாவருக்கும் செய் அரிதால்.... யாம் பெரிதும்

 வல்லோமே என்று வலிமை சொல வேண்டாம் காண்!

 யாவர்க்கும் ஒவ்வொன்று எளிது!

என அவ்வையார் பாடியுள்ளார். இப்பாடல், கவிச்சக்கரவர்த்தி கம்பனின்  கவித்துவ ஆணவத்தை போக்குவதற்காக அவ்வையாரால் பாடப்பட்டது எனக் கூறுவர்.

****இராஜாலி ****

யுனிக்கோட் - பயன்பாடு

அறிமுகம்    ஆங்கில மொழியைத் தவிர பிறமொழிகளிலும் பலரும் பல்வேறு குறியேற்றங்களையும் எழுத்துருக்களையும் பயன்படுத்தி வந்தனர். இந்த முறையில் ஒரே ...