காளமேகம் 15 ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் புலவர் ஆவார். சமண சமயத்தில் பிறந்த இவர், தனது காதலி மோகனாங்கி என்பவருக்காக சைவ சமயத்திற்கு மாறினார். இவர் வசைப் பாடல்கள் பாடுவதில் வல்லவர் என்று கூறப்படுகின்றது. ஆனாலும் இவர் பல சிறந்த நயம் மிகுந்த பாடல்களையும் பாடியுள்ளார். இவர் பாடிய சிலேடைப் பாடல்களும், நகைச் சுவைப் பாடல்களும் பல உள்ளன. சமயம் சார்ந்த நூல்களையும் இவர் இயற்றியுள்ளார். திருவானைக்கா உலா, சரஸ்வதி மாலை, பரப்பிரம்ம விளக்கம், சித்திர மடல் முதலியவை இவர் இயற்றிய நூல்களாகும்.
ஆமணக்குக்கும் யானையும்
காளமேகப்புலவர் இரு பொருள்படும்படி சிலேடையாக ஆமணக்கையும் யானையையும் ஒரு தனிப்பாடலில் பாடியுள்ளார்.
ஆமணக்குச் செடி
ஆமணக்குச் செடியில் அமணக்குக் கொட்டையில் வெண்ணிற முத்து இருக்கும். காற்றில் அதன் கொம்பை ( கிளை ) அசைக்கும். உள்ளே வெற்றிடமான துளையை உடைய தண்டுகளுடன் வளரும். கொத்தாக இருக்கும் ஆமணக்குக் குலையை நேரே உயர்த்தினால் தலையைச் சாய்க்கும் தன்மை கொண்டதாக காணப்படும்.
யானை
யானை முத்துப்போன்ற தன் வெண்ணிறக் கொம்பை (தந்தத்தை) அசைக்கும். உள்ளே துளை உள்ள தன் துதிக்கைத் தண்டை ஏந்திக்கொண்டு வரும். கொத்தாகப் பழுத்திருக்கும் வாழைமரத்துக் குலையைச் சாய்க்கும் தன்மை கொண்டதாக காணப்படும். என்பதை,
முத்திருக்கும் கொம்பசைக்கும் மூரித்தண் டேந்திவரும்
கொத்திருக்கும் நேரே குலைசாய்க்கும் – ஏத்திசைக்கும்
தேமணக்கும் சோலைத் திருமலைரா யன்வரையில்
ஆமணக்கு மால்யானை யாம்.
என ஆமணக்குச் செடியின் தன்மையையும், யானையின் தன்மையையும் இந்தப் பாடலில் சிலேடையாகக் கூறியுள்ளார்.
**** இராஜாலி ****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக