எனது வலைப்பதிவு பட்டியல்

திங்கள், 29 ஜனவரி, 2024

என் கொணர்ந்தாய் பாணா நீ - வீரராகவ முதலியார்

      வீரராகவ முதலியார் செங்கல்பட்டுக்கு அருகிலுள்ள பூதூரில் வேளாண் குலத்தில் வடுகநாதர் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். பிறவியிலேயே பார்வையற்றவர். அந்தகக்கவி என அழைக்கப்பட்டார். சிலேடைச் சுவை நிறைந்த தனிப்பாடல்களுக்காகப் புகழ் பெற்றவர். சந்திரவாணன் கோவை, திருவாரூருலா, சேயூர்க்கலம்பகம், சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ் போன்ற நூல்களை இயற்றியுள்ளார். அவர் பாடிய தனி பாடல்களில் ஒன்று ' என் கொணர்ந்தாய் பாணா நீ' என்ற பாடலில் யானையின் பல்வேறு பெயர்களை நயம்பட எடுத்துக் கூறியுள்ளார். 

என் கொணர்ந்தாய் பாணா நீ

       இராமன் என்பவன் மழை போலக் கொடை வழங்கும் வள்ளல். புலவர்    ஒருவர் அவனைக் கண்டு பாடினார். அவன் புலவருக்கு யானை ஒன்றைப் பரிசாகத் தந்தான். புலவர் யானையுடன் வீடு திரும்பினார். அவரது மனைவி பாணி 'என்ன கொண்டுவந்தாய்' என வினவினாள். புலவர் யானையைக் குறிக்கும் சொற்களை ஒவ்வொன்றாகச் சொல்ல மனைவி அதனை வேறு வகையாகப் புரிந்துகொண்டு பேசுகிறாள். புலவர் களபம் (யானை, சந்தனம்) என்றார். மனைவி சந்தனம் என எண்ணி பூசிக்கொள் என்றாள். புலவர் மாதங்கம் (யானை, மா தங்கம்) என்றார். மனைவி பெரும் பொருள் எனக் கருதி, இனி நமக்குக் குறைவு ஒன்றும் இல்லை, வாழ்ந்தோம் என்றாள். புலவர் வேழம் (யானை, கரும்பு) என்றார். மனைவி கரும்பு எனக் கருதி,  தின்னும் என்றாள். புலவர் பகடு (யானை, எருது) என்றார். மனைவி மாடு என எண்ணி, ஏரில் பூட்டி உழவு செய்க என்றாள். புலவர், கம்பமா (யானை, கம்பு மாவு) என்றார். மனைவி கம்பு மாவு எனக் கருதி, களி கிண்டி உண்ண உதவும் என்றாள். புலவர் கைம்மா  என்றார். மனைவி நீண்ட தும்பிக்கையை உடைய  யானை என்பதை புரிந்துகொண்டு, நமக்கே உணவு இல்லாதபோது யானைக்கு உணவு வழங்குவது எப்படி என்று எண்ணிக் கலங்கினாள். என்பதை,

இம்பர்வான் எல்லை இராமனையே பாடி

என்கொணர்ந்தாய் பாணா நீ என்றாள் பாணி

வம்பதாம் களபமென்றேன் பூசுமென்றாள்

மாதங்க மென்றேன் யாம் வாழ்ந்தே மென்றாள்

பம்புசீர் வேழமென்றேன் தின்னும் என்றாள்

பகடென்றேன் உழும்என்றாள் பழனம் தன்னை

கம்பமா என்றேன் நல் களியாம் என்றாள்

கைம்மா என்றேன் சும்மா கலங்கினாளே.

   என்ற தனிப்பாடலில், களபம், மாதங்கம், வேழம், பகடு, கம்பமா, கைம்மா போன்ற பெயர்களில் யானை அழைக்கப்படுகிறது என்பதனை இப்பாடலில் எடுத்துக் கூறியுள்ளார்.

**** இராஜாலி****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யுனிக்கோட் - பயன்பாடு

அறிமுகம்    ஆங்கில மொழியைத் தவிர பிறமொழிகளிலும் பலரும் பல்வேறு குறியேற்றங்களையும் எழுத்துருக்களையும் பயன்படுத்தி வந்தனர். இந்த முறையில் ஒரே ...