எனது வலைப்பதிவு பட்டியல்

வியாழன், 14 ஜூலை, 2022

ஐம்பெருங்காப்பியங்கள் - ஐஞ்சிறுங்காப்பியங்கள்

 


“தமிழில் காப்பிய இலக்கியங்கள்”


காப்பிய இலக்கணத்தைத் ‘தண்டியலங்காரம்’ விரிவாக எடுத்துரைக்கின்றது. காப்பியத்தைப் பெருங்காப்பியம், சிறுகாப்பியம் என்று இரு வகைப்படுத்தி, அவற்றின் இலக்கணத்தைத் தனித்தனியே எடுத்துச் சொல்கிறது.

பெருங்காப்பியம்

·         பெருங்காப்பியமாவது வாழ்த்துதல், தெய்வத்தை வணங்குதல், வருபொருள் உரைத்தல் என்ற மூன்றில் ஒன்றினைத் தொடக்கத்தில் பெற்று வரும்.

·         அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நாற்பொருளைப் பயனாகத் தருவதாக அமையும்.

·         தன்னிகர் இல்லாத தன்மை உடையவனைக் காப்பியத் தலைவனாகக் கொண்டிருத்தல் வேண்டும்.

·         மலை, கடல், நாடு, நகர், ஆறு பருவங்கள், கதிரவன் தோற்றம், சந்திரனின் தோற்றம் ஆகியவற்றைப் பற்றிய வருணனைகளைக் கொண்டிருக்க வேண்டும்.

·         திருமணம் புரிதல், முடிசூடல், சோலையில் இன்புறுதல், நீர் விளையாடல், மதுவுண்டு களித்தல், மக்களைப் பெற்றெடுத்தல், ஊடல் கொள்ளுதல், புணர்ச்சியில் மகிழ்தல் முதலிய நிகழ்வுகளைக் கொண்டிருக்க வேண்டும்.

·         அமைச்சர்களுடன் ஆலோசனை செய்தல், தூது செல்லல், போர் மேற்கொண்டு செல்லுதல், போர் நிகழ்ச்சி, வெற்றி பெறுதல் போன்ற நிகழ்வுகளும் இடம் பெறுதல் வேண்டும்.

·         அமைப்பு முறையில் பெருங்காப்பியம் உள் பிரிவுகளுக்குச் சருக்கம், இலம்பகம், பரிச்சேதம் என்ற பெயர்களில் ஒன்றைப் பெற்றிருத்தல் வேண்டும்.

·         எண்வகைச் சுவையும், மெய்ப்பாட்டுக் குறிப்புகளும் கேட்போர் விரும்பும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

மேற்கண்ட, பொதுப் பண்புகளை பெற்றுவரும் காப்பியங்கள், 'ஐம்பெருங் காப்பியங்கள்' என அழைக்கப்படுகின்றன.



ஐம்பெருங் காப்பியங்கள்

முன்னுரை

தண்டியலங்காரம் கூறும் காப்பிய பண்புகளை, முழுமையாகக் கொண்ட

·         சிலப்பதிகாரம்,

·         மணிமேகலை,

·         சீவக சிந்தாமணி,

·         வளையாபதி,

·         குண்டலகேசி

ஆகிய ஐந்தினையும் தமிழில் தோன்றிய ஐம்பெருங் காப்பியங்கள் என்பர்.

இவ் ஐந்தனுள் சிறப்புத் தகுதி வாய்ந்தவை சிலப்பதிகாரமும், மணிமேகலையும் ஆகும். இவை இரண்டையும் இரட்டைக் காப்பியங்கள் என்று குறிப்பிடுவார்கள். இவ்விரண்டும் கதை நிகழ்ச்சியில் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. மேலும் சமகாலத்தில் தோன்றியவை. ஏனையவை சோழர் காலத்தில் தோன்றியவையாகும்.

1. சிலப்பதிகாரம்

சிலம்பு +அதிகாரம் = சிலப்பதிகாரம், கண்ணகியின் சிலம்பால் விளைந்த கதையை முதன்மையாகக் கொண்டது. ஆதலின் சிலப்பதிகாரமாயிற்று. சிலப்பதிகாரம் எனும் செந்தமிழ்க் காப்பியம் புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் எனும் முப்பெருங்கண்டங்களையும், முப்பது காதைகளையும் உடையது. புகார்க்காண்டம் பத்து காதைகளையும், மதுரைக்  காண்டம் பதின்மூன்று காதைகளையும் வஞ்சிக் காண்டம் ஏழு காதைகளையும் கொண்டுள்ளது. “இது உரையிடப்பட்ட பாட்டுடைச் செய்யுள்” எனவும் வழங்கப்பெறும்.

தமிழிலுள்ள ஐம்பெருங்காப்பியங்களில் முதன்மை பெறுவது சிலப்பதிகாரம். நமக்குக் கிடைத்திருக்கும் காப்பியங்களில் பழமையானது இதுவே. காவிரிப்பூம்பட்டினத்தில் பெருங்குடி வணிகர் மரபில் உதித்த கண்ணகி, கோவலன் என்பவர்களுடைய வரலாற்றைக் கூறுவது. முத்தமிழ்ப் புலமையுடைய வித்தகப் பெருமானாகிய இளங்கோவடிகளால் இயற்றப்பட்ட இக்காப்பியம் ‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்று பாராட்டப்படுகிறது. சோழ, பாண்டிய, சேர மன்னர்களின் நாட்டில் கதையை நடத்திச் செல்கிறார் இளங்கோவடிகள். சிலப்பதிகாரத்தில்,

·         அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.

·         ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்.

·         உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்.

என்னும் முப்பெரும் உண்மைகள் பேசப்படுகின்றன.

இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழும் விரவப் பெற்றிருப்பதால் இது முத்தமிழ்க் காப்பியம் என்றும் வழங்கப்படுகிறது. உலகத்தின் பிறமொழிக் காப்பியங்களைப் போலவோ, வடமொழிக் காப்பியங்கள் போலவோ தெய்வங்களையோ மன்னர்களையோ காப்பியத்தலைவனாகக் கொள்ளாமல் மக்களையே கொண்டதால் இதைக் குடிமக்கள் காப்பியம் குறிப்பிடுவார். இத்தகைய சிறப்பு மிகுந்த காப்பியத்தை இயற்றிய இளங்கோவடிகள் சமண சமயத்தவர். இக்காப்பியத்தில் சமண சமயக் கருத்துக்கள் மிகுதியாக காணப்படுவதால், இது ஒரு சமண சமயக் காப்பியம் ஆகும்.

கோவலன் கண்ணகியுடன் பூம்புகார் நகரில் சிறப்போடு வாழ்ந்து வந்தார். செல்வ வளமிக்க கோவலனுக்கு மாதவி என்ற நாட்டிய மங்கையோடு காதல் தொடர்பு ஏற்படுகிறது. இதன்காரணமாக கோவலன், கண்ணகியை மறந்து மாதவியே கதி என இருக்கின்றார். இதன் விளைவாக தனது பெரும் செல்வத்தை எல்லாம் இழக்க நேரிடுகிறது. நாட்கள் செல்ல, ஒருநாள் இந்திர விழாவின்போது கோவலனும் மாதவியும் கடற்கரையில் மகிழ்ந்துகழித்துக் கொண்டிருக்கும்போது, கருத்து வேறுபாடு ஏற்பட்டு மாதவியை விட்டுப் பிரிந்து மீண்டும் கண்ணகியிடம் செல்கின்றான் கோவலன். செல்வம் இல்லாத ஏழையாக வரும் கோவலனை அன்போடு வரவேற்றார்கள் கண்ணகி இழந்த செல்வங்களை மீண்டும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பூம்புகாரை விட்டு மதுரைக்கு சென்று வணிகம் செய்ய கோவலனும் கண்ணகியும் முடிவு செய்து மதுரைக்கு செல்கிறார்கள். கோவலன் மதுரையில் கண்ணகியின் காற்சிலம்பை விற்க சென்ற நிலையில் அரண்மனைப் பொற்கொல்லன் ஒருவனின் சூழ்ச்சியால் கோவலன் கொலை செய்யப்படுகிறார். கோவலன், கொலை செய்யப்பட்ட செய்தியை கேள்விப்பட்ட கண்ணகி, பாண்டிய மன்னனிடம் சென்று தன் கணவன் குற்றமற்றவன் என்பதை மற்றொரு கால் சிலம்பை காட்டி நிறுவுகிறார். தவறை உணர்ந்த மன்னன் அரியணையில் இருந்து விழுந்து இறக்கிறான். மேலும், கண்ணகி தன் கோபம் தணியாத நிலையில், மதுரை மாநகரை தீக்கிரையாக்கி விட்டு, வஞ்சி நகரத்திற்குச் சென்று தன் கணவனோடு வானுலகம்  சென்றதாக, இளங்கோவடிகள் இக்காப்பியத்தில்  கூறுகிறார்.

2.மணிமேகலை

`           மணிமேகலையின் ஆசிரியர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இவர் தண்டமிழ்ச் சாத்தன், தண்டமிழ்ப் புலவன் எனவும் அழைக்கப்படுகிறார். காலம் 2 ஆம் நூற்றாண்டு. இந்நூலுக்கு மணிமேகலைத் துறவு என்ற பெயரும் உண்டு, மணிமேகலை ஒரு பௌத்த சமயக் காப்பியம் ஆகும். கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மணிமேகலை என்ற பெண்ணின் வரலாற்றைக் கூறுவதாக மணிமேகலை காணப்படுகிறது.

காப்பியத் தலைவி மணிமேகலை பெயரால் இக்காப்பியத் தலைப்பு அமைகின்றது. இந்த மணிமேகலை என்ற பெயர் கோவலனின் குல தெய்வமான மணிமேகலா தெய்வத்தின் பெயர் என்பது சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படுகிறது.

மணிமேகலைக் காப்பியத்தை இயற்றிய சீத்தலைச் சாத்தனார், சிலப்பதிகாரம் பாடிய இளங்கோவடிகள் காலத்தில் வாழ்ந்தவர். என்பது இவ்விரு காப்பியங்களின் பதிகம் வழி அறிய முடிகிறது. ‘‘இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் இயற்றச் சாத்தனார் கேட்டார்’’ என்றும், ‘‘சாத்தனார் மணிமேகலை பாட அடிகள் கேட்டார்’’ என்றும் இப்பதிகங்கள் குறிப்பிடுகின்றன. இக்காப்பியம் முப்பது காதைகளைக் கொண்டது.

கோவலன் கொலை செய்யப்பட்ட பின்னர், மாதவியும் அவள் மகள் மணிமேகலையும் துறவு  பூண்டனர். ஒருநாள், மணிமேகலை  புத்தபிரானை  வழிபட, மலர் பறிக்க  சென்றாள். அப்பொழுது, சோழ நாட்டு இளவரசன் உதயகுமரன்  மணிமேகலையை கண்டான். காதல் கொண்டான். இந்த நேரத்தில் மணிமேகலா தெய்வம் மணிமேகலையை மணிபல்லவத்தில் கொண்டுவிட்டது. அங்கு, அவள் ஆபுத்திரன்  அமுத சுரபியை பெற்றாள். பின்னர், புகார் நகரத்திற்கு  வந்தாள். உதயகுமார், வித்தியாதரன் என்பவரால் கொல்லப்பட்டார். அவரது இறப்பிற்கு காரணம் மணிமேகலை தானென எண்ணிய சோழ நாட்டு அரசி மணிமேகலையை சிறையில் வைத்தாள். பின் மனம் திருந்தி அவளை  விடுவித்தாள். மணிமேகலை, அறவண அடிகளிடம்  ஆசி பெற்று காஞ்சி நகர்  சென்றாள். இதுவே மணிமேகலையின் கதை.

இக்காப்பியத்தில், பெண் துறவு, தவம் இரண்டும் வலியுறுத்தப்படுகிறது. பசியின் கொடுமை  பேசப் படுவதோடு, "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என்ற உயர்ந்த கோட்பாட்டை வலியுறுத்துவதாக இக்காப்பியம் காணப்படுகிறது.

3.சீவக சிந்தாமணி

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணியை எழுதியவர் திருத்தக்கதேவர் ஆவார்.இக்காப்பியம், தமிழில் உள்ள காப்பியங்களில் முதல் முதலாக விருத்தப்பாவால் பாடப்பட்டது,  இக்காப்பியத்தின் தலைவனான சீவகன் எட்டு பேரை மணப்பதாக காட்டப்படுவதால் இதற்கு 'மணநூல்' என்ற பெயரும் உண்டு.இக்காப்பியம், நாமகள் இலம்பகம் முதல் முத்தி இலம்பகம் முடிய 13 இலம்பகங்களையும், 3145 பாடல்களையும் கொண்டது. இக்காப்பியம் கிபி 10ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. சமண கருத்துக்களை மிகுதியாக கூறுவதால் இக்காப்பியம் ஒரு சமண காப்பியமாக கருதப்படுகிறது.

ஏமாங்கத நாட்டு அரசன் சச்சந்தன், தன் மனைவி விசையையிடம் பெரும் காதல் கொண்டிருந்தார். இதை பயன்படுத்தி  சச்சந்தனை  வென்று நாட்டை கைப்பற்றினான் அமைச்சன் கட்டியங்காரன். கருவுற்றிருந்த விசையை மயில் பொறி வழியாக, தப்பிச் சென்று காட்டில் ஒரு குழந்தையை பெற்றெடுத்தார்.  அவனே கதையின் தலைவனான சீவகன், சீவகனை கந்துக்கடன் என்பவர் வளர்த்து வருகிறார். வாலிப பருவத்தை அடைந்த பிறகு தனது தாய் விசையை சந்தித்து, தனது நிலையை உணர்ந்துகொண்ட சீவகன், மாமன் கோவிந்தனின் உதவியோடு கட்டியங்காரன் வென்று நாட்டை கைப்பற்றுகிறார். சீவகன் எட்டு பெண்களை திருமணம் செய்கிறார், பின்னர், இந்த வாழ்க்கை  நிலையில்லாதது என்பதை உணர்ந்து துறவு மேற்கொள்கிறார் என்பதை இக்காப்பியம் கூறுகிறது.

4. வளையாபதி

ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றாக எண்ணப்படுவது வளையாபதி. 19ஆம் நூற்றாண்டு வரை வாழ்ந்த இவ்விலக்கியம் பின்னர் எப்படியோ அழிந்துவிட்டது. வளையாபதி காப்பிய ஆசிரியர் யார்? எப்போது இந்நூல் இயற்றப்பட்டது? காவியத் தலைவன் பெயர் என்ன? காவியத்தின் கதைதான் என்ன? இந்த வினாக்களுக்கு யாதொரு விடையும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. இக்காப்பியத்தின் 72 செய்யுள்கள் மட்டும் கிடைத்துள்ளன. கிடைத்துள்ள பாடல்களைக் கொண்டு நோக்குகிறபோது, இது ஒரு சமண சமய நூல் என்பது மட்டும் உறுதியாகிறது.

வளையாபதி கதை இன்னதுதான் என்பது அறியப்படாத ஒன்று. கிடைத்துள்ள பாடல்களைக் கொண்டும் கூட இதன் கதையை அறிய முடியவில்லை. வளையாபதி கதை என ஒரு கதை வழக்கில் உள்ளது. அக்கதை வருமாறு,

நவகோடி நாராயணன் ஒரு வைர வாணிகன். அவன் தன் குலத்தில் ஒரு பெண்ணையும், வேறு குலத்துப் பெண்ணையும் திருமணம் செய்ததால், அவனைக் குலத்தை விட்டுத் தள்ளி வைத்து விடுகின்றனர். இதனால் துன்பமுற்ற நாராயணன், வேறு வழியின்றி வேறு குலத்துப் பெண்ணைத் தள்ளி வைத்து விடுகிறான். அவளோ, தனக்கு மறுவாழ்வு அளிக்கும்படி காளியை வேண்டுகிறாள். காளியின் அருளால் அவளுக்கு ஓர் ஆண் குழந்தை பிறக்கிறது. அக்குழந்தை வளர்ந்து பெரியவனாகிப் புகார் நகர் வணிகர் அவையில் ‘தன் தந்தை நாராயணனேஎன்று நிறுவுகிறான். காளிதேவியும் சாட்சி கூறி அதனை மெய்ப்பிக்கிறது. இதனால் குடும்பம் ஒன்றுசேர, அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர், என்பதை இக்காப்பியம் கூறுகிறது.

 5.குண்டலகேசி

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான, குண்டலகேசி ஒரு பௌத்த சமய நூல். குண்டலகேசி விருத்தம் எனவும் இந்நூல் குறிப்பிடப்படுகிறது. குண்டலகேசி காவியத்தை இயற்றியவர் நாதகுத்தனார். இக்காப்பியம் கிபி 10ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. குண்டலகேசியின் பாடல்கள் முழுவதும் கிடைக்கவில்லை, புறத்திரட்டு, யாப்பருங்கல விருத்தி உரை, அடியார்க்கு நல்லார் உரை ஆகியவற்றில் மேற்கோள்களாக வரும் 25 பாடல்களை குண்டலகேசியின் பாடல்களாக தொகுத்துள்ளார்கள்.

இராச கிருக நாட்டு அமைச்சன் மகள் பத்திரை. அவள் தனது மாளிகையில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அரச சேவகர்கள் கள்வன் ஒருவனைக் கொலைக்களத்திற்கு அழைத்துச் சென்றதைக் கண்டாள். அவனுடைய இளமையும் அழகும் அவள் மனதைக் கவர்ந்தன. அவன்மேல் அவள் காதல் கொண்டாள். இதை அறிந்த தந்தை, கள்வனை விடுவித்துத் தன் மகளை அவனுக்குத் திருமணம் செய்து வைக்கிறான். இருவரின் அன்பு வாழ்க்கை, காதல் வாழ்க்கை இனிதே நடக்கிறது. ஒரு நாள் ஊடல் கொண்ட பத்திரை, ‘நீ கள்வன் மகன் அல்லனோஎன விளையாட்டாகச் சொல்ல, அது அவன் உள்ளத்தைப் பாதிக்கிறது. அவளைக் கொல்லக் கருதிய அவன், அவளை மலை உச்சிக்கு அழைத்துச் சென்று, அவளைக் கீழே தள்ளிக் கொல்லப் போவதாகக் கூறுகிறான். நிலைமையை உணர்ந்த பத்திரை, அவனுக்கு உடன்பட்டவள் போல் நடித்து, “நான் இறப்பதற்குமுன் உம்மை வலம் வரவேண்டும்என்கிறாள். பின் அவனை வலம் வருபவளைப் போல, பின் சென்று அவனைக் கீழே தள்ளிக் கொன்று விடுகிறாள்.

பிறகு, பத்திரை, வாழ்க்கையை வெறுத்தவளாய், பல இடங்களில் அலைந்து திரிந்து, சாரிபுத்தர் ஆணைப்படி பௌத்தத் துறவியாகிறாள். சாரிபுத்தர் குண்டலகேசியைப் (பத்திரை) பகவான் புத்தரிடம் அழைத்துச் செல்ல, அவர் முன்னிலையில் அவள் பௌத்தத் துறவியாகிறாள்.

முடிவுரை

கதை  பொதிந்த நீண்ட செய்யுள்களாக காணப்படும் காப்பியங்கள், அக்கால மக்களின் வாழ்வியல் கூறுகளை, வாழ்வியல் நெறிகளை எடுத்துக் கூறும் இலக்கியங்களாக விளங்குகின்றன. தமிழில், காணப்படும் ஐம்பெரும் காப்பியங்களில் சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, வளையாபதி ஆகிய மூன்றும் சமண சமய காப்பியங்கள்.  மணிமேகலை மற்றும் குண்டலகேசி ஆகிய இரண்டும் பௌத்த சமய காப்பியங்கள். மேலும் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என வழங்கப்படுகின்றது.

                            ***********************



ஐஞ்சிறு காப்பியங்கள்

முன்னுரை

தண்டியலங்காரம் என்ற இலக்கண நூல், காப்பியப் பாடுபொருளான அறம், பொருள், இன்பம், வீடுபேறு ஆகியவற்றில் ஒன்று குறைபடினும் அது சிறுகாப்பியம் என்று குறிப்பிடுகிறது. தமிழில் ஐஞ்சிறு காப்பியங்களாகச்  

·         சூளாமணி,

·         யசோதர காவியம்,

·         நீலகேசி,

·         உதயண குமார காவியம்,

·         நாக குமார காவியம்

ஆகிய ஐந்தினையும் தமிழில் தோன்றிய ஐஞ்சிறு காப்பியங்கள் என்பர். அந்த, சிறு காப்பியங்களை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

1.சூளாமணி

ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றான,சூளாமணி என்பது மகுடத்தின் முடிமணி. இதனைச் சூடாமணி என்றும் அழைப்பர். இதன் ஆசிரியர் தோலாமொழித் தேவர். இவர், ‘செங்கண் நெடியான் சரிதம்’ என்றுதான் தம் நூலைக் குறிப்பிடுகிறார்.  சூளாமணிக் காப்பியம், பாயிரமும், 12 சருக்கங்களும், 2131 விருத்தப் பாக்களும் கொண்டது. பாயிரப் பகுதி 6 பாடல்களைக் கொண்டது.

பரத கண்டத்தில் சுரமை நாட்டின் தலைநகர் போதன மாநகர். அதன் அரசன் பயாபதி. அவனுக்கு மிகாபதி, சசி என இரு மனைவியர். அவர்களுக்கு வெண்ணிறமான விசயன், கருநிறமான திவிட்டன்  ஆகிய இருவரும் பிறந்தனர். வித்தியாதரர் (வானவர்) உலகிலுள்ள இரத நூபுரம் என்ற நகரில் ஆட்சி புரியும் சுவலனசடி தன் மகளுக்குச் சுயம்வரம் நடத்த எண்ணுகிறான். சுவலனசடியின் மகள் சுயம்பிரபை. அவளைப் பூலோகத்தில் உள்ள திவிட்டனே மணப்பான் என்று நிமித்திகன் கூறுகிறான். தன் சோதிடக் குறிப்பிற்குச் சான்றாக, திவிட்டன் ஒரு மாதத்திற்குள் ஒரு சிங்கத்தை அடக்குவான் என்கிறான். சுவலனசடி திவிட்டனுக்குப் பெண் கொடுக்க இருப்பதை அறிந்த மற்றொரு வித்தியாதர அரசன் அச்சுவ கண்டன் பயாபதியைத் தனக்குத் திறை செலுத்த ஆணையிட்டுத் தூதனுப்புகிறான். அத்தூதுவனைத் திவிட்டன் விரட்டியடித்து விடுகிறான். விரட்டியடிக்கப்பட்ட தூதுவன், அச்சுவ கண்டனிடத்தே செல்வதற்கு அஞ்சி, அவனுடைய அமைச்சனாகிய அரிமஞ்சு என்பவனிடம் சென்று திவிட்டன் செயலைக் கூறினான். அதுகேட்ட அவ்வமைச்சன் மாயவித்தையில் வல்ல அரிகேது என்பவனை மாயச் சிங்க உருவில் பயாபதி நாட்டுக்கு அனுப்பி அச்சுறுத்துகிறான். வீரன் திவிட்டன் விட்டுவிடுவானா? அம்மாயச் சிங்கத்தைக் கொல்லும் பொருட்டுத் துரத்திச் செல்கிறான். மாயச்சிங்கமாகிய அரிகேதுவோ உயிருக்குப் பயந்து, உண்மைச் சிங்கம் உறங்கும் ஒரு குகைக்குள் புகுந்து மறைந்து விடுகிறான். உண்மையான சிங்கம் குகையை விட்டு வெளிவர, திவிட்டன் அதனோடு எதிர்த்துப் போரிட்டு, அதன் வாயைப் பிளந்து கொன்று விடுகிறான்.

நிமித்திகன் கூற்று மெய்யாகி விட்டதல்லவா? சுவலனசடிக்கு மிகுந்த மகிழ்ச்சி. தன் மகளைத் திவிட்டனுக்கு மணம் செய்து மகிழ்கிறான். திவிட்டன், விசயன் நாட்டை நன்முறையில் ஆளுகின்றனர். இத்துடன் இக்காப்பியக் கதை முற்றுப் பெறுகிறது.

சமயம், சமூகம், அரசியல் சார்பான உயர்ந்த கருத்துகளை வெளியிடுவதில் இக்காப்பியம் சிறந்து ஓங்குகிறது. மனித வாழ்க்கை என்பது என்ன? அது துன்பமா? இன்பமா? இரண்டும் கலந்ததே. அது ஒரு திரிசங்கு சொர்க்கம் போன்றது என்பதை ஓர் அருமையான பாடலால் விளக்கி விடுகிறார் ஆசிரியர். பாடல் இதோ:

யானை துரப்ப அரவுஉறை ஆழ்குழி

நால்நவிர் பற்றுபு நாலும் ஒருவன்ஓர்

தேனின் அழிதுளி நக்கும் திறத்தது

மானுடர் இன்பம் மதித்தனை கொள்நீ

மதயானை ஒருவனை விரட்டுகிறது; அதினின்று தப்பிக்க ஓடும்போது ஆழமான ஒரு குழியில் விழுகிறான். உள்ளே விழுந்துவிடாமல் இருக்க, அங்குத் தொங்கும் மெல்லிய கொடியைப் பற்றிக் கொண்டு தொங்குகிறான்; கீழே ஒரு பாம்பு படமெடுத்து ஆடுகிறது; கொடியை விட்டுக் கீழே விழுந்தால் பாம்பு கடித்து இறந்துவிடுவான்; மேலே சென்றால் யானை மிதித்துக் கொன்றுவிடும்; இவ்வாறு உயிருக்குப் போராடும் நிலையில் தேன் கூட்டிலிருந்து தேன் சொட்டுகிறது. அதனை நக்கிச் சுவைக்கிறான். மனிதர் துய்க்கும் இன்பம் இத்தகையதுதான்.

வாழ்க்கை துன்பங்களே நிறைந்தது. இதில் இடையிடையே கிடைக்கும் இன்பம் சிறிய அளவுடையதுதான். ஆயினும் அதைத் துய்க்க விரும்புவதே மனித இயற்கை. இந்த அரிய உண்மையை எவ்வளவு எளிமையாக, சுவையாகக் காட்டி விட்டார் தோலாமொழித் தேவர்.

2.யசோதர காவியம்

          ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றான யசோதர காவியம்.இந்நூல் யசோதரன் என்ற மன்னனின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கிறது. யசோதர காவியம்படைத்த ஆசிரியர் யார் என்பதில் கருத்து வேறுபாடு நிலவுகிறது.இக்காப்பியம் ஐந்து சருக்கங்களைக் கொண்டது. பாடல்கள் 330 மட்டுமே காணப்படுகின்றன. அபயருசி என்பான் ஔதய நாட்டு மன்னன் மாரி தத்தனுக்குத் தன் பழம்பிறப்பு வரலாறு உணர்த்திச் சைன நெறிப்படுத்தி நற்கதி பெறச் செய்ததே காப்பியக் கதை.

            மக்களுக்குத் தீவினை தொடரும் வழி இன்னதென உணர்த்தி, அவ்வழியில் செல்லாது தடுத்து, நல்வினை செய்யச் செய்து, அதனால் வரும் புண்ணியத்தையும் போகத்தையும் அடையச் செய்வதே சமணக் காப்பியங்களின் அடிப்படை நோக்கமாகும். வினைப்பயன் தொடரும் என்பதே இக்காப்பியம் நமக்குத் தரும் செய்தி. உயிர்க்கொலை பெரும்பாவம்; அது கீழான விலங்குப் பிறவிக்கு இட்டுச் செல்லும். மீளாத நரகத்தில் புகச் செய்யும். பலியிடுதலும், பாவனையால் பலியிடுதலும் கொலையே. அறியாமல் செய்தாலும் கொலை கொலையே. புலால் உண்ணுதல் கொடிய பாவம். இசை உலக இன்பத்தை மிகுவிக்கும். கூடா ஒழுக்கம் பஞ்சமா பாதகத்தைச் செய்யத் தூண்டும். பாவங்களைப் போக்கும் வழி அறவோர் அறவுரை கேட்டலே. இதுவே இக்காப்பியத் தத்துவம், சிந்தனை, நோக்கம்.

கொலை, பொய், களவு, பிறன்மனை நயத்தல், புலால் உண்ணல், கள் உண்ணல், தேன் உண்ணல் முதலான பாவச் செயல்களைச் செய்யாமையே அறம் ஆகும். அந்த அறங்களை இந்நூல் சொல்கிறது.

3.நீலகேசி

தமிழில் தோன்றிய முதல் தருக்க நூல் இதுவெனக் கூறலாம். இது குண்டலகேசிக்கு மறுப்பாக எழுந்த நூலாகும். நீலகேசி, குண்டலகேசியை வாதில் வென்று சமணமே உயர்ந்த சமயம் என நிறுவுகிறது நீலகேசிக் காவியம்.நீலகேசி 894 பாடல்களைக் கொண்டது; இவை விருத்தப்பாக்களில் அமைந்தவை. தரும உரைச் சருக்கம், குண்டலகேசி வாதச் சருக்கம், அருக்க சந்திர வாதச் சருக்கம், மொக்கல வாதச் சருக்கம், புத்தவாதச் சருக்கம், ஆசீவக வாதச் சருக்கம், சாங்கியவாதச் சருக்கம், வைசேடிக வாதச் சருக்கம், வேதவாதச் சருக்கம், பூதவாதச் சருக்கம் எனப் பத்துச் சருக்கங்களைக் கொண்டது. இந்நூல் நீலம், நீலகேசித் தெருட்டு, நீலகேசித்திரட்டு என்னும் வேறு பெயர்களாலும் வழங்கி வருகின்றது.நீலகேசிக் காப்பியம் முழுக்க முழுக்கப் பல சமயத் தத்துவங்களின் உண்மைத் தன்மையை விவாதிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது.  இதன் தத்துவம் பலருக்கும் விளங்காத ஒன்று என்பதாலே இக்காப்பியம் போற்றப்படவில்லை. ஆனால் இந்தியத் தத்துவம் படித்தோர் இதனைப் போற்றுவர். ஆசிரியர் தம் காலத்தில் நிலவியிருந்த அனைத்துச் சமயச் சிந்தனைகளையும் எடுத்துரைப்பதில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளார்.

தெய்வங்களுக்கு உயிர்ப்பலி இடுதல் தீமையே என்பதை எடுத்துரைக்கிறது. இறைவன் அருளிய அறநெறியில் ஐயுறல் கூடாது; பேராசை தவிர்க்க வேண்டும்; மெய்த்துறவோரை மதித்தல் வேண்டும்; நட்பு, புகழ் இவற்றால் மயங்குதல் கூடாது; பிறர் குற்றங்களை அகற்ற வேண்டும்; முறை தவறி நடப்பாரைத் திருத்த வேண்டும்; யாவரிடமும் மெய்யான அன்பு செலுத்த வேண்டும்; மாந்தர்தம் அறியாமை போக்க வேண்டும் என்று பல உலக நீதிகளை இந்த நூல் எடுத்துரைக்கிறது.

4.உதயண குமார காவியம்

கொங்குவேளிரின் பெருங்கதைக் காப்பியத்திற்குச் சுருக்க நூலாகப் பாடப்பட்டதே உதயணகுமார காவியம். இது சமண சமயப் பெண்பால் துறவியரில் ஒருவரான கந்தியர் என்பவரால் பாடப்பட்டிருக்க வேண்டும் எனக் கருதுவர். 369 பாடல்களைக் கொண்டது. பெருங்கதை அமைப்பையே கொண்டு இந்நூலும் உஞ்சை காண்டம், மகத காண்டம், இலாவண காண்டம், வத்தவ காண்டம், நரவாண காண்டம் என ஐந்து காண்டங்களுடன் அமைகிறது. கூடுதலாகத் துறவுக் காண்டம் ஒன்றும் இதில் இடம் பெறுகின்றது. உதயணகுமார காவியம் வத்தநாட்டு மன்னன் உதயணன் கதையைக் கூறுவதாக காணப்படுகிறது.

5.நாக குமார காவியம்

ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றான, நாககுமார காவியம் கி .பி 16 ஆம் நூற்றாண்டில் ஏற்றப்பட்டது. இதன் ஆசிரியர் யார் எனத் தெரியவில்லை. 170 விருத்தப்பாக்கள் கொண்ட இந்நூல், 5 சருக்கங்களை கொண்டதாகும். மகத நாட்டு மன்னன்  சயந்தனின் இரண்டாவது மகன் பிரதாபந்தன் இவனே நாககுமாரன் என அழைக்கப்படுகிறார். நாககுமாரன் மேற்கொண்ட பஞ்சமி  நோன்பின் சிறப்புகளையும், நாககுமாரனின் வீரச் செயல்களையும், முடி சூட்டு விழாவையும், துறவு பூணுதல் போன்ற கருத்துக்களையும் இந்நூல் பேசுவதாக உள்ளது.

முடிவுரை

காப்பிய பண்புகளில் ஒன்றான அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப் பொருட்களில், ஏதேனும் ஒன்று குறைந்து வந்தால் அது சிறு காப்பியம் ஆகும். அவ்வகையில், தமிழ்மொழியில் ஐந்து சிறு காப்பியங்கள் காணப்படுகின்றன.  சிறு காப்பியங்கள் ஐந்தும், சமண சமயக் கருத்துக்களை வலியுறுத்தும் சமண காப்பியங்கள் ஆக காணப்படுகின்றன. என்பதனை இக்கட்டுரையின் மூலம் அறிய முடிகிறது.

********* இராஜாலி  ********

வெள்ளி, 5 ஜூலை, 2019

புதுக்கவிதையின் - தோற்றமும் வளர்ச்சியும்

முன்னுரை

  காலம் காலமாக இலக்கியங்கள் பல மாற்றங்களைக் கண்டுள்ளது. அவ்வகையில் தமிழ் கவிதை இலக்கியமும் மரபுக்கவிதைகள் என்னும் வடிவத்தை கடந்து, புதுக்கவிதை என்னும் வடிவத்தினை 19 - ஆம் நூறாண்டின் துவக்கத்தில் அடைந்தது. இதற்கு மேற்க்கத்திய மொழிகளின் இலக்கிய தாக்கம் முக்கியமான காரணமாகும். பழந்தமிழர்கள், யாபிலக்கண கவிதைகளின் வகைகளான வெண்பா, ஆசிரியம், வஞ்சி, கலி, பரி என பல பாவடிவங்களைக் கையாண்டனர். அவை தற்போது புதுக்கவிதையாக வளர்ந்துள்ளது. இக்கட்டுரையில் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி ஆய்வு செய்யப்படுகிறது.

புதுக்கவிதைக்கான இலக்கணம்

    புதுக்கவிதையின் இலக்கணத்தை புதுக்கவிதையாளர்கள் பலர் வகுத்துள்ளார்கள். அவர்களில்,
           “சுவை புதிது, பொருள் புதிது,
          வளம் புதிது, சொல் புதித
          சோதி மிக்க நவகவிதை” -  
என பாரதியார் புதுக்கவிதைக்கு விளக்கம் தருகிறார். மேலும், கவிஞர் மு.மேத்தா அவர்கள்,
இலக்கணச் செங்கோல்
யாப்புச் சிம்மாசனம்
எதுகைப் பல்லக்கு
தனிமொழிச் சேனை
பண்டித பவனி
இவை எதுவுமில்லாத
கருத்துக்கள் தம்மைத் தாமே
ஆளக் கற்றுக்கொண்ட புதிய
மக்களாட்சி முறையே புதுக்கவிதை!  
எனப் புதுக்கவிதைக்கான இலக்கணத்தை எடுத்துரைக்கிறார்.

புதுக்கவிதையின் தோற்றம்

    புதுக்கவிதையின் தோற்றத்துக்கு உரைநடையின் செல்வாக்கு, மரபுக்கவிதையின் செறிவின்மை, அச்சு இயந்திரம் தோன்றியமை, மக்களின் மொழிநடையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியன அடிப்படைக் காரணங்களாகும்.
     ஆரம்பகாலத்தில் Free Verse, New Poetry என்ற கவிதை அமைப்பு ஆங்கிலத்தில் இருந்தது. அமெரிக்காவின் வால்ட் விட்மன், இங்கிலாந்தின் எஸ்ரா பவுண்டு, T.S. எலியட் போன்றோரின் முயற்சிகளால் புதுக்கவிதை பிறந்தது. தமிழில் இம்முயற்சிகள் தொடங்கப்பட்ட போது முதலில் ‘வசன கவிதை’ என்றும், பின்னர் ‘சுயேச்சா கவிதை’, ‘லகு கவிதை’, ‘விடுநிலைப்பா’ என்றும், “கட்டிலடங்காக் கவிதை“ என்றும் அதன் பின்னர்ப் புதுக்கவிதை என்றும் வழங்கப்பட்டன.

புதுக்கவிதையின் வளர்ச்சி

      1892 இல் வால்ட் விட்மனின் “புல்லின் இதழ்கள்” என்ற கவிதை தொகுப்பு யாப்பு மரபைப் புறக்கணித்து Free Verse என்ற வசனகவிதையாக அமைந்தது. அதனைப் படித்திருந்த பாரதி அதைப் போலத் தமிழிலும் புதுமை படைக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் ''காட்சிகள்'' என்ற தலைப்பில் புதுக்கவிதை எழுதினார். அதற்கு அவர் இட்ட பெயர் “வசன கவிதை“ என்பதாகும். எனவே பாரதியார் புதுக்கவிதைகளின் முன்னோடி என அழைக்கப்படுகிறார். தமிழில் பாரதியார் வழியில் ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராசகோபலன், வல்லிக்கண்ணன், புதுமைப்பித்தன், போன்றோர் புதுக்கவிதைகளைப் படைத்து தமிழ்ப் புதுக்கவிதைகளை வளர்த்தார்கள்.

புதுக்கவிதை வளர்ந்த மூன்று கால கட்டங்கள் 
 
    ஆரம்ப காலத்தில் புதுக்கவிதைகளை பல இதழ்கள் வெளியிட்டு புதுக்கவிதை வளர்ச்சிக்கு துணை நின்றன. அவ்விதழ்கள் தோன்றிய காலத்தினை மூன்றாகப் பிரிக்கலாம். அவை,
1. மணிக்கொடிக்காலம்
2. எழுத்துக்காலம்
3. வானம்பாடிக் காலம்  
 என்பனவாகும். இக்கால கட்டங்களில் புதுக்கவிதை இலக்கியம் வளர்ச்சி நிலையினை எட்டியது.

1.மணிக்கொடிக் காலம் (1930 – 1945 )

  மணிக் கொடிக் காலத்தில் மணிக்கொடி என்ற இதழ் மட்டுமன்றி, சூறாவளி, காலமோகினி, கிராமஊழியன், சிவாஜிமலர், நவசக்தி, ஜெயபாரதி ஆகிய இதழ்கள் புதுக்கவிதைகளை வெளியிட்டுவந்தன. இவற்றுள் மணிக்கொடி இதழ் முதலில் தோன்றியதால் இக்காலத்தை மணிக்கொடிக் காலம என்று அழைத்தனர். இக்காலத்தில், புதுக்கவிதை முன்னோடிகளான ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராசகோபாலன், க.நாசுப்பிரமணியன், புதுமைப்பித்தன் போன்றோர் அக்கால இதழ்களில் புதுக்கவிதைகளை எழுதி வெளியிட்டனர்.

 2. எழுத்துக் காலம் (1950 – 1970 )

      எழுத்து, சரஸ்வதி, இலக்கிய வட்டம், நடை, தாமரை, கசடதபற, போன்ற இதழ்கள் இக்காலகட்டத்தில் புதுக்கவிதையை வளர்த்தன. ந.பிச்சமூர்த்தி ஆரம்பித்துவைத்த புதுக்கவிதை இயக்கம், எழுத்து இதழில் தொடர்ந்தது. மயன், சிட்டி, வல்லிக்கண்ணன், ஆகியோர் ஒன்று சேர்ந்து சி.சு.செல்லப்பா, க.நாசுப்பிரமணியன் போன்றோர் இக்காலத்தில் புதுக்கவிதைக்கு சிறப்பு சேர்த்தனர்.

3.வானம்பாடிக் காலம் ( 1970 க்கு பிறகு )  

   வானம்பாடி, தீபம், கணையாழி, சதங்கை முதலிய இதழ்கள் இக்காலத்தில் புதுக்கவிதைக்கு முன்னுரிமை தந்து வெளியிட்டன. புவியரசு, ஞானி, முல்லைஆதவன், அக்கினிபுத்திரன், சிற்பி, கங்கை கொங்காண்டான், தமிழ்நாடன், சக்தி கனல், மு.மேத்தா, தமிழன்பன், ரவீந்திரன் முதலியோர் வானம்பாடிக் கவிஞர்களாவர்.

தற்கால புதுக்கவிதையாளர்கள் 

       தற்கால புதுக்கவிதையாளர்களில் குறிப்பிடத்தக்கவர்கள், நா. பிச்சை மூர்த்தி, புதுமைப்பித்தன், வல்லிக்கண்ணன், நா. காமராசன், அப்துல் ரகுமான், மு. மேத்தா, சிற்பி பாலசுப்பிரமணியன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்கள்.

நா. பிச்ச மூர்த்தி 

     தமிழ் புதுக்கவிதையின் தந்தை என அழைக்கப்படும் இவர், வேங்கட மகாலிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்டவர். மணிக்கொடிக் கால எழுத்தாளரான இவர் காட்டு வாத்து, வழித்துணை, குயிலின் சுருதி போன்ற புதுக்கவிதை தொகுப்புக்களை எழுதியுள்ளார்.

 புதுமைப்பித்தன் 

    விருத்தாச்சலம் என்னும் இயற்பெயரைக் கொண்ட இவர் மணிக்கொடி இதழின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவர் காதல் பாட்டு, இணையற்ற இந்தியா, தொழில் போன்ற புதுக்கவிதை தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.

 வல்லிக்கண்ணன்

    கிருஷ்ணசாமி என்னும் இயற்பெயரைக் கொண்ட இவர், எழுத்து என்னும் இதழில் புதுக்கவிதைகள் பல எழுதியுள்ளார். இவர் எழுதிய அமர வேதனை என்னும் கவிதை தொகுப்பு குறிப்பிடத்தக்கதாகும். மேலும், புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற இவரின் நூல் சாகித்திய அகடாமி விருது பெற்றுள்ளது.

 நா. காமராசன் 

     உருவகக் கவிஞர் என அழைக்கப்படும் நா. காமராசர், கருப்பு மலர்கள், சூரியகாந்தி, மகாகாவியம், கிறுக்கல்கள், பட்டத்து யானை போன்ற புதுக்கவிதை தொகுதிகளை வெளியிட்டுள்ளார். இவர் புதுக்கவிதை ஆசான் எனவும் அழைக்கப்படுகிறார்.

 அப்துல் ரகுமான் 

     வானம்பாடி இயக்க கவிஞரான இவர், பால்வீதி, நேயர் விருப்பம் போன்ற புதுக்கவிதை தொகுதிகளை வெளியிட்டுள்ளார். இவர் எழுதிய ஆலாபனை என்னும் கவிதை தொகுப்பு சாகித்திய அகடாமி விருது பெற்றது.

 மு.மேத்தா

     தமிழ் பேராசிரியராக விளங்கிய இவர், தேசப்பிதாவுக்கு ஒரு தெருப்பாடகனின் அஞ்சலி என்ற கவிதையின் மூலம் உயர்வடைந்தார். இவர் எழுதிய ஊர்வலம், சோழர் நிலா போன்ற புதுக்கவிதை தொகுப்புகள் குறிப்பிடத்தக்கவை. ஆகாயத்திற்கு அடுத்த வீடு என்ற இவரின் புதுக்கவிதை தொகுப்புக்கு சாகித்திய அகடாமி விருது கிடைத்தது.

 சிற்பி பாலசுப்பிரமணியன் 

     2022-ல் பத்மஸ்ரீ விருது பெற்ற இவர், புன்னகைக்கும் பூக்கள் என்ற கவிதை தொகுப்பும், சாகித்திய அகடாமி விருது பெற்ற ஒரு கிராமத்து நதி என்ற கவிதை தொகுப்பையும் எழுதியுள்ளார்.

புதுக்கவிதைகளின் பொருள் நயம்
       
         புதுக்கவிதைகளின் பாடுபொருள் இது என்று இல்லை. சமுதாயத்தில் காணப்படும் நிகழ்வுகள் அனைத்தும் புதுக்கவிதையின் பாடுபொருள்களாகும். குறிப்பாக சமுதாயதில் காணப்படும் மத வேறுபாடுகளைக் களைய புதுக்கவிதை ஆசிரியர் ஒருவர்,
பைபிள்லே நீ
கிறிஸ்தவனை படைப்பதை
நிறுத்து!
குரானே நீ
இஸ்லாமியரை படைப்பதை
நிறுத்து!
கீதையே நீ
இந்துக்களைப் படைப்பதை
நிறுத்து!
நீங்கள் மூவரும் சேர்ந்து
நல்ல மனிதரை படையுங்கள்...
- எனக் கூறுகின்றனர்.
      
       ஏழைகளுக்கு சேராத அரசின் நலத்திட்டங்களைக் கண்ட கவிஞ்ர் மு. மேத்தா அவர்கள்,

அணகட்டுகளில் திறக்கப்படும்
தண்ணீர்
பள்ளங்களை ஏமாத்திவிட்டு
மேட்டை நோக்கியே
பாய்கிறது.
- என ஆதங்கப்படுகிறார்.
         
     மகன் ஒருவன் தனது பெற்றோரை முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டு வந்த நிலையில் அந்த தாய் தன் மகனைப் பார்த்து,

மகனே நீ
இருக்க என்
கருவறை இருந்தது,
நானிருக்க ஒரு
அறைகூடவா இல்லை
உன் வீட்டில்.....
என்று கேட்பது குடும்ப சிக்கல்களை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.
         
முடிவுரை
           
                 ''பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே'' என்று நன்னூல் கூறுகிறது. அதற்கு இணங்க கவிதை இலக்கியமும் காலம் தோறும் பல வளர்ச்சியை கண்டுள்ளது. தமிழில் பாரதியாரால் தொடங்கி வைக்கப்பட்ட புதுக்கவிதை மரபு இன்று பல நிலைகளில் வளாச்சியடைந்து காணப்படுகிறது என்பதை இக்கட்டுரையில் காணலாம்.
......இராஜாலி......

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

சிவவாக்கியர் பாடல்

     சிவவாக்கியர் பாடல்
      சித்தர்  இலக்கியத்தில்  சிவவாக்கியர்  பாடலுக்குத்  தனி  மரியாதை தரப்படுவதுண்டுகாரணம்,   இவர்   பாடல்களில் வழக்கமான   சித்தர் கருத்துக்கான  யோகம்குண்டலினிநிலையாமை.  வாசி கருத்துக்களுடன் புரட்சிகரமான  கருத்துக்களையும்  கூறுவதால் இவர் புரட்சிச் சித்தர் என்றும் கூறப்படுகின்றார். சமுதாயப் புரட்சி செய்த இந்தச் சித்தர் ஆரம்ப காலங்களில் நாத்திகராக  இருந்து  ஆத்திகராக  மாறினார்  என்பதை  இவரின்  பாடல் கருத்துக்கள் புலப்படுத்துகின்றன. இதனையொட்டி  இவர் முதலில் நாத்திகராக  இருந்து பிறகு சைவராகி சிவவாக்கியரானார் என்றும்; பிறகு வீர வைணவராக  மாறி திருமழிசை ஆழ்வாரானார் என்றும் கூறுவதுண்டு.
சிவவாக்கியரின்  பாடல்களும்  திருமழிசை  ஆழ்வார்   பாடல்களும் சந்தத்தில்  மட்டுமே  ஓரளவு  ஒத்துப்  போவதாலும் இவர் பாடல் சாயலில் ஏனைய சித்தர்  பாடல்களும் இருப்பதால் இக்கருத்து ஏற்றுக்கொள்ளுமாறு இல்லை.
விக்கிரக ஆராதனை
     சிவவாக்கியர் பாடல்களில் விக்கிரக ஆராதனை வெகுவாகப் பழிக்கப் படுகின்றது.
நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுஷ்பந் சாத்தியே
சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதனுள் ளிருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ
     சுவை மிகுந்த உணவுப் பதார்த்தங்களைச் சமைத்த சட்டியானது. அந்த உணவின்  ருசியை  உணர்ந்து  கொள்ளாதது  போலவே மனக்கோயிலினுள் இறைவன்  இருப்பதை  அறியாமல்  வெறும் கல்லை  நட்டு வைத்து தெய்வ மென்று  பெயரிட்டு  பூக்களாலும்  மந்திரங்களாலும்   வழிபாடு   செய்வது அறியாமையே யாகும் என்கிறார்.
ஓசையுள்ள கல்லைநீ உடைத்திரண்டாய் செய்துமே
வாசலிற் பதித்தகல்லை மழுங்கவே மிதிக்கின்றீர்
பூசனைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாத்து கிறீர்
ஈசனுக்குகந்த கல்லெந்தக் கல்லு சொல்லுமே
     நட்டு  வைத்த கல்லை  தெய்வம் என்று  நினைத்து அக்கல்லின் மேல் மலர்களைச்  சாத்திவிட்டு அதைச் சுற்றிச் சுற்றி வருகிறீர்கள். மொண மொண  என்று ஏதோ மந்திரங்களையும்  சொல்லுகிறீர்கள். அந்த மந்திரத்தால் என்ன பயன் என்று யோசித்துப் பார்த்தீர்களா? அட  மூடர்களே, கடவுள் என்பவர் தனியாக வெளியில் இல்லை, உள்ளத்திலே இருக்கிறான். அப்படி இருக்கையில் நட்ட கல்லைச் சுற்றி வந்தால் அது பேசுமோ?
அடுப்பில் வைத்துச்  சுடப்பட்ட சட்டியும் அதனுள்ளே இருக்கும் அகப்பையும்   அதில்   சமைக்கும்  உணவின்  ருசியை   அறியாதது போலவே நீர் செய்யும் புற  வழிபாட்டினால் இறைவன் வெளித்தோன்ற மாட்டார்.  இறைவனை உள்ளத்தால் மட்டுமே காண இயலும். அவனை கல்லில்  காண  முடியும்   என்று   சொல்லுவது  வெறும்  பிதற்றலே என்கிறார்.
    கடவுளின் பெயரால் விக்கிரகங்கள் செய்து வைத்து வணங்குவதும், அவைகளுக்குத்  தினசரி பூசைகள், திருவிழாக்கள் செய்வதும் தொன்று தொட்டு  நடந்து  வருபவை.  இவைகளையெல்லாம்  மூடப்பழக்கங்கள் என்று  சாடுவதென்றால்  எவ்வளவு  துணிவு  வேண்டும்புனிதமான அடிப்படைக்  கொள்கையையே  ஆட்டிப்  பார்ப்பதென்றால் அதனை      அறிந்து சொல்லும் பக்குவமும் வேண்டுமல்லவா?
     இங்கு உருவ வழிபாடு தவறா என்ற வினாவுக்கும் ஒரு விளக்கம் தேவைப்படுகின்றது.
     ஆழ்ந்த அறிவில்லாத பாமர மக்களை ஒரு கட்டுக்கோப்பிற்குள் கொண்டுவரநல்வழிப்படுத்த  உருவ  வழிபாடு  தேவைப்படுகின்றது. சட்டத்துக்கும்சான்றோர்  உரைகளுக்கும்  கட்டுப்படாத   சிந்தைத் தெளிவில்லாத  மனிதர்களுக்குஒரு  வடிவத்தைக்  காட்டி இதுதான் கடவுள்இவர்  உனது பாவச் செயல்களைக் கண்காணித்து தண்டனை தரக்  காத்திருக்கின்றார். ஆகவே  தவறு  செய்யாதே என்று கண்டிப் போமானால்  அந்தக்  கட்டளைக்கு அவர்கள் பணிகிறார்கள். மனதில்  கடவுள்  கட்டளையை மீறி நடக்கக் கூடாது என்றும் நினைக்கிறார்கள்; கடவுளின் கட்டளை என்று  சொல்லப்படும் வார்த்தைகளுக்குக் கட்டுப்  படுகிறார்கள். அதனால் உருவ வழிபாடும் ஒரு வகையில்  பயனாகிறது.  பலரை  நல்வழிப்படுத்த  உதவுகிறது. இதனால் உருவ வழிபாடு  தவறல்ல என்று ஆத்திகர்கள் வாதிடுவர்.
     ஆனால், அறிவார்ந்த சித்தர்களோ இக்கருத்தை ஏற்றுக்கொள்வதில்லை. உருவ  வழிபாடு ஒரு  மூட நம்பிக்கை. அதனால் மக்களிடம் அறிவு மயக்கம் ஏற்படுகின்றது. எங்கும் நிறைந்த கடவுளைக் கல்லில் இருப்பதாகவும், செம்பில் இருப்பதாகவும்,   மண்ணில்  இருப்பதாகவும்,    மரத்தில்   இருப்பதாகவும், உருவமைத்துக்    காட்டுவது    கடவுளையே   அவமதிப்பதாகும்   என்று வாதிடுகின்றனர்.
     சித்தர்களின்  இந்தக்  கருத்தையொட்டியே சிவவாக்கியரும் மேற்கண்ட வாறு  உருவ வழிபாட்டை எள்ளி நகையாடினார். கல்லில் கடவுளின் வடிவம் செய்து  அதைப்  பல  பெயர்களால்  அழைப்பது  அறிவின்மைஅறிவற்ற மூடர்கள்தாம்  இவ்விதம்  செய்வார்கள்.   உலகைப்   படைத்துக்   காத்து, அழிக்கவும்  வல்ல  ஒரு  பொருள்  கல்லிலா  இருக்கிறது? இல்லை அந்தக் கடவுளின்  வடிவம்  உள்ளத்தில் மட்டுமே இருக்கிறது. அதனை உள்ளத்தால் அல்லவோ வழிபட வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார்.
     பண்ணிவைத்த கல்லையும் பழம் பொருளது என்றுநீர்
     எண்ணம் உற்றும் என்னபேர் உரைக்கின்றீர்கள் ஏழைகாள்
     பண்ணவும் படைக்கவும் படைத்துவைத்து அளிக்கவும்
     ஒண்ணும் ஆகி உலகு அளித்த ஒன்றை நெஞ்சில் உன்னுமே
     கல்லுருவம்  நம்மால்  செய்து  வைக்கப்பட்டது.  அதைப் பழமையான பொருள்அழியாத இறை என்று எண்ணுகிறீர்கள். அதற்கு என்னென்னமோ பேர் சொல்லுகிறீர்கள்.  உங்கள் மனதில்  தோன்றும்  பெயர்களையெல்லாம் இட்டு அழைக்கின்றீர்கள்.  உங்களின்  அறியாமை  காரணமாகத்தான் இப்படி யெல்லாம் கடவுளின் பெயரைக் கல்லுக்கு வைத்து அழைக்கின்றீர்கள். இந்த உலகைப் படைத்த ஒன்று எல்லாவற்றையும் செய்ய  வல்லதுஉலகையும்உலகப்  பொருள்களையும்  படைக்க  வல்லது. தாம்  படைத்த  பொருளை  அறியாமல்  வைத்திருக்கவும்  காப்பாற்றவும் வல்லது.  அதுமட்டுமல்ல; அவைகளைத் தேவைப்படாத பொழுது அழிக்கவும் வல்லது. இப்படி படைத்து, காத்து, அழிக்கும் பரம்பொருளை நீங்கள் கல்லிலே காண  இயலாது.  உங்கள் நெஞ்சினில் மட்டுமே உணர முடியும். மனதில் மட்டுமே  உணர முடியும் என்று உண்மையை உரைக்கின்றார் சிவவாக்கியர்.
     இதில்  எங்கும்  நிறைந்த  கடவுளை உருவ வழிபாட்டின் மூலம் வழி படுவது  தவறு  என்றும், அப்படி  வழிபடுபவர்கள்  அறியாமையை உடைய ஏழைகள் என்றும் சாடுகின்றார்.
     உருவ வழிபாட்டையே மறுக்கும் சிவவாக்கியர் அவ்வுருவ வழிபாட்டின் பெயரால் நடைபெறும் திருவிழாக்களை மட்டும் ஏற்றுக்கொள்வாரா என்ன?
                ஊரில் உள்ள மனிதர்காள் ஒருமனதாய்க் கூடியே
     தேரிலே வடத்தை விட்டு செம்பை வைத்து இழுக்கின்றீர்
     ஆரினாலும் அறியொணாத ஆதிசித்த நாதரை
     பேதையான மனிதர் பண்ணும் புரளி பாரும் பாருமே
     ஊரிலே  வாழும்  பெரிய  மனிதர்களே, நீங்கள் உங்களுக்குள் உள்ள கருத்து  வேற்றுமைகளைக்  களைந்து ஒரே மனதாக நின்று பெரிய தேரினை அலங்காரம் செய்து அதில் செப்புச் சிலையை வைத்து, அத்தேரின் வடத்தை இழுக்கிறீர்கள்.   ஒரு   சிறிய  உருவத்திற்கு  இவ்வளவு  பெரிய   தேரா? நூற்றுக்கணக்கான  மக்கள்  உடல் வியர்வை சிந்தி, உள்ளம் வருந்தி இப்படி இருப்பது  அறிவுடையமையாகுமாஇதனால்  எவ்வளவு பொருள் விரயம்? எவ்வளவு நேரம் வீணாகிறது?
யாருக்கும்   புலனாகாத   கடவுள்  அறிவின்  வடிவானவர்.  அவரே ஆதிசித்தநாதர்அவரை  சித்தத்தினால்  மட்டுமே அறிதல் கூடும். அப்படி யிருக்கையில்  அவரை  வழிபட என்னவெல்லாமோ செய்கிறீர்களே! தேராம், திருவிழாவாம்கொட்டாம்முழக்காம் -  இவையெல்லாம்  வெறும் புரளி. அறிவற்றவர்  செய்யும்   புரளி.  இதனை   அறிவுடைய  மக்களே  ஏற்றுக் கொள்ளுங்கள் என்று அழைக்கிறார்.
     ஆனால்   அவரது   கொள்கையை    இவ்வுலக   மக்கள்  ஏற்றுக் கொண்டார்களா என்பதுதான் விளங்காத புதிர்.
மூடப்பழக்கங்களைச் சாடுதல்
     சமுதாயத்தில்  புரையோடி விட்டிருக்கும்  மூடப் பழக்கங்களைச் சாடும் வித்தியாசமான   சித்தராக   சிவவாக்கியர்  காட்சி   தருகின்றார்.   ஆசார, அனுஷ்டானங்களைக்  கடைபிடிக்கிறேன்  பேர்வழி என்று தேவையற்ற மூடப்  பழக்கங்களில்  மூழ்கித்  தவிக்கும்   மூடர்களைக்   கரையேறி   உய்யுமாறு  சிவவாக்கியர் அறிவுறுத்துகின்றார்.

                பூசைபூசை யென்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள்
     பூசையுன்ன தன்னிலே பூசைகொண்ட தெவ்விடம்
     ஆதிபூசை கொண்டதோ வனாதிபூசை கொண்டதோ
     ஏதுபூசை கொண்டதோ வின்னதென் றியம்புமே” (37)
என்று உண்மை பூசை பற்றியும்,
                வாயிலே குடித்தநீரை எச்சிலென்று சொல்லுறீர்
     வாயிலே குதப்புவேத மெனப்படக் கடவதோ
     வாயிலெச்சில் போக வென்று நீர்தனைக் குடிப்பீர்காள்
     வாயிலெடச்சில் போனவண்ணம் வந்திருந்து சொல்லுமே
என்று  எச்சில்  படாமல்  பூசை  செய்ய வேண்டும் என்று மடிசாமிதனமாகப் பேசும் அறிவிலிக்கு எச்சிலைப் பற்றி விளக்கம் தருகின்றார்.
            வாயினால் ஓதப்படுவதால் வேதத்திலுள்ள  மந்திரங்களும் எச்சில், பசு மடியில் கன்று குடித்த  பால் எச்சில்மாதிருந்த விந்து எச்சில், மதியுமெச்சி லொளியுமெச்சில்  மோதகங்களான  தெச்சில் பூதலங்களேழும் எச்சில் எதில் எச்சிலில்லை? என்று கேள்வி எழுப்புகின்றார்.
     புலால்புலால் புலாலதென்று பேதமைகள் பேசுறீர்
     புலாலைவிட்டு மெம்பிரான் பிரிந்திருந்த தெங்ஙனே
     புலாலுமாய் பிதற்றுமாய் பேருலாவுந் தானுமாய்
     புலாலிலே முளைத் தெழுந்த பித்தர்காணு மத்தனே” (149)
என்று புலால் மறுத்தலை எள்ளி நகையாடுகின்றார். இன்னும்,
                 “மீனிறைச்சி தின்றதில்லை யன்றுமின்றும் வேதியர்
     மீனிருக்கு நீரலோ மூழ்வதுங் குடிப்பதும்
     மானிறைச்சி தின்றதில்லை யன்றுமின்றும் வேதியர்
     மானுரித்த தோலலோ மார்புநூல ணிவதும்” (159)
     “மாட்டிறைச்சி தின்றதில்லை யன்றுமின்றும் வேதியர்” (160)
என்ற  பாடலில்  மாட்டிறைச்சி   தின்பது  பாவம்   என்று  அருவறுக்கும் வேதியர்களே  மாட்டிறைச்சிதான்  உரமாக காய்கறிக்கிடுவதை அறிவீர்களா? ஆட்டிறைச்சி  தின்றதில்லை என்கிறீரே, உங்கள் யாக வேள்வியில் ஆகுதி செய்யப் படுவதும், நெய்யாய்  இடுவதும் எது  என்பதை யோசிப் பீர்களாக என்கிறார்.
சாதி வேற்றுமைகளைக் கடிதல்
     சிவவாக்கியர்   தம்   பாடல்களில்   சாதி  வேற்றுமைகளை  மிகவும் ஆணித்தரமாகக் கண்டிக்கிறார்.
                   சாதியாவ தேதடா சலந்திரண்ட நீரெலோ
     பூதவாச லொன்றலோ பூதமைந்து மொன்றலோ
            காதில்வாளி காரைக்கம்பி பாடகம்பொ னொன்றலோ
     சாதிபேத மோதுகின்ற தன்மையென்ன தன்மையே” (47)
என்று  சாதி  பேதம்  பார்க்கின்றவர்களைப்  பார்த்துக் கேட்கின்றார். அது மட்டுமல்லமணமுடிக்க  மணப்  பெண்ணை  குணம் பார்த்துதான் தேர்வு செய்ய  வேண்டுமே  தவிர  குலம்  பார்த்தல்ல  என்று இளைஞர்களையும் கேட்டுக் கொள்கிறார்.
     பறைச்சியாவ தேதடா பணத்தியாவ தேதடா
     இறைச்சிதோ லெலும்பினு மிலக்கமிட் டிருக்கிதோ
     பறைச்சி போகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ
     பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாடு மும்முளே” (40)
கீழ்  குலத்தைச்  சேர்ந்த   பறைச்சியும்  மேல்  குலத்தைச்  சேர்ந்த பார்ப்பனத்தியும் போகம் செய்யும்போது ஒரே சுகத்தைத்தான் அளிக்கிறார்கள்.இதில்  பறைச்சி என்ன? பாப்பாத்தி என்ன? இரண்டும் ஒன்றுதான். ஆகவே சாதிபேதம் பார்க்காமல் இல்லறத்திற்கேற்ற பெண்ணை என்று தேர்வு செய்து மணம்   முடிப்பதே   பெருமைக்குரியது   என்று  கூறியதுமல்லாது  தாமே இல்லறத்திற்கேற்ற குலப்பெண் ஒருத்தியை மணந்து வாழ்ந்து காட்டினார்.
     சிவவாக்கியரின் புரட்சிக் கருத்துக்கள் ஜாதி மதத்தில் காணப்படுவதற்கு இன்னுமொரு  சான்றாகஇவர்  சைவராயிருந்தும்   வைணவக்  கடவுளான ராமரையும்  தம்  பாடல்களிலே  புகழ்ந்து பாடியதுதுடன்  இராம நாமத்தின் பெருமையையும் பாங்குற எடுத்தியம்புகிறார்.
     ராம! ராம!  என்று  செபித்துக் கொண்டிருந்தால் போதும்; வேறு எந்த பூசையோசந்திஜெபதபங்களோ  செய்ய  வேண்டியதில்லை.  எல்லா நன்மைகளும், கிடைக்க வேண்டிய  எல்லாப்  பலன்களும்  இராம நாம உச்சரிப்பில் கிடைத்து விடும் என்று கூறுகின்றது சிவவாக்கியரின் பாடல்.
                 “அந்தி காலம் உச்சி மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
     சந்தி தர்ப் பணங்களும் தபங்களும், செபங்களும்
     சிந்தைமேவு ஞானமும் தினம் செபிக்கும் மந்திரம்
     சிந்தை ராம ! ராம ! ராம ! ராம என்னும் நாமமே
என்ற பாடலில் ராம நாமத்தின் பெருமையைச் சொல்லுகின்றார் சிவவாக்கியர்.
     அந்திகாலைநடுப்பகல்  ஆகிய  மூன்று  வேளைகளும் புண்ணிய தீர்த்தமாடுகின்ற பலன் இராம நாம உச்சரிப்பில் கிடைக்கும் என்கிறார்.
    சந்தியாவந்தனம்முன்னோரை நோக்கிச் செய்யும் தர்ப்பணம், தவங்கள், செபங்கள்   இவற்றால்   கிடைக்கும்  பயனும்இராம  நாம   உச்சரிப்பில் கிடைக்கும்.  உள்ளத்தில்  உருப்பெரும்  அறிவும் இராம நாமத்தால் மிகுந்த வளர்ச்சி    யடையும்.    இவ்வாறு   இராம    நாமத்தின்   பெருமையை எடுத்துரைக்கின்றார் சிவவாக்கியர்.
     நன்மையும் செல்வமும் நாலும் நல்குமே
     தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
     சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
     இம்மையே ராமவென்று இரண்டெழுத்தினால்

என்ற  கம்பரின்  தனிப்பாடல்  கருத்து  சிவவாக்கியரின் கருத்தோடு ஒத்து விளங்குவதைக் காணலாம்.
     வைணவத்   தெய்வமான   இராமனின்   பெருமைமிகு  மந்திரத்தைப் போலவே சைவர்களின் தெய்வமான  சிவபிரானின் சிவமந்திரமும் பெருமைக் குரியது என்று சிவநாமப் பெருமையையும் தம் பாடலில் பேசுகின்றார்.
சிவாய மென்ற அட்சரம் சிவனிருக்கு மட்சரம்
     உபாய மென்று நம்புவதற்கு உண்மையான அட்சரம்
     கபாடமுற்ற வாசலைக் கடந்துபோன வாயுவை
     உபாயம் இட்டு அழைக்குமே சிவாயம் அஞ்சு எழுத்துமே
என்றும்,
     அஞ்கோடி மந்திர முஞ்சுளே யடக்கினால்
     நெஞ்சுகூற வும்முளே நினைப்பதோ ரெழுத்துளே
     அஞ்சுநாலு மூன்றதாகி யும்முளே யடங்கினால்
     அஞ்சுமோ ரெழுத்ததா யமைந்ததே சிவாயமே
என்று  ஐந்து  கோடி  மந்திரங்களும்  சிவாய நம’  எனும் ஐந்து எழுத்தில் அடங்கி நன்மையளிக்கும் பெருமையைக் கூறுகின்றார்.
     திருமூலரின்  சில  கருத்துக்களையும்   சிவவாக்கியர்  தம்  பாடலில் எடுத்துரைக்கின்றார்.
     ‘உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
என்ற திருமூலர் கருத்தினை,
          கோயில்பள்ளி ஏதடா குறித்து நின்றது ஏதடா
     வாயினால் தொழுது நின்ற மந்திரங்கள் ஏதடா
     ஞானமான பள்ளியில் நன்மையில் வணங்கினால்
     காயமான பள்ளியில் காணலாம் இறையையே
என்ற சிவவாக்கியர் பாடலில் காணலாம்.
     இறைவனை  கோயில்பள்ளி இங்கெல்லாம் தேடி அலைய வேண்டிய தில்லை. நமது  உள்ளமே  இறைவன்  உறையும்  கோயில்  இந்த  உடம்பே அவன் ஆட்சி செய்யும் ஆலயம் என்று கூறுகின்றார் சிவவாக்கியர்.
     மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
என்ற திருவள்ளுவரின் கருத்தையும்
    “மனத்து அடுத்து அழுக்கு ஆறாத மவுனஞான யோகிகள்
என்ற தம் பாடலில் புலப்படுத்துகின்றார்.
     ஒருவர் பலரிடத்தும்  பேசாமலிருக்கலாம், மௌனமாகவும் இருக்கலாம், ஞானியாகவும்   இருக்கலாம்,   யோகம்  செய்து  கொண்டும்   இருக்கலாம், நாட்டைத்  துறந்து  காட்டிலே போய்க்கூட வாழலாம்.  ஆனால் உள்ளத்தில் தூய்மை யில்லாதவராய் இருந்தால் அதனால் எந்த பலன்களும் மேற்சொன்ன விரதங்கள்  யாவும்  பாழாய்  முடியும்.  உள்ளத்திலே குற்றங்களை வைத்துக் கொண்டு இருப்பவர்கள் உண்மையான கடவுளைக் காணமாட்டார்கள்.

     அப்படியானால்  உண்மையான  கடவுள்தான்  யார்? என்ற வினாவுக்கு அறிவுதான்  இறைவன்  என்று  விளக்கம் தருகின்றார் சிவவாக்கியர். அறிவு தான்  இறைவன் என்றால்  அறிவாளிகள் மட்டும்தான்  இறைவனைத் தொழ இயலுமோஎன்ற  வினாவும்  எழுகிறது.  இல்லை  பாமர  மக்களும்  தம் அன்பினால்  இறைவனைத்  தரிசிக்கலாம்   என்றும்   இறைவன்   எங்கும் நிறைந்திருக்கிறான்  என்ற  கருத்தையும்   சிவவாக்கியர்  தம்  பாடல்களில் நிறைத்துக் காட்டுகின்றார்.

யுனிக்கோட் - பயன்பாடு

அறிமுகம்    ஆங்கில மொழியைத் தவிர பிறமொழிகளிலும் பலரும் பல்வேறு குறியேற்றங்களையும் எழுத்துருக்களையும் பயன்படுத்தி வந்தனர். இந்த முறையில் ஒரே ...