எனது வலைப்பதிவு பட்டியல்

திங்கள், 25 டிசம்பர், 2023

தமிழ்விடு தூது - 1 முதல்10 கண்ணிகள்

நூல் குறிப்பு

 தமிழ் மொழியில் காணப்படும் 96 வகையான சிற்றிலக்கியங்களில் ஒன்று தூது இலக்கியமாகும். அகத்துறை சார்ந்த இவ்விலக்கியம். கலிவெண்பா என்னும் செய்யுளில் பாடப்படும். தலைவன் தலைவியர்கள் காதல் காரணமாகத் துன்புறும்போது, ஒருவர் மற்றொருவரிடம் தம் வருத்தத்தைத் தெரிவிக்கும் படி உயர்திணைப் பொருட்களையோ, அஃறினைப் பொருட்களையோ தூது அனுப்பும் நிலையில் பாடப்படுவது தூது இலக்கியம் ஆகும்.

தமிழ்விடு தூது

  மதுரைச் சொக்கநாதரிடம் காதல் கொண்ட தலைவி தன் காதலைத் தெரிவித்து அவர் இசைவறிந்து வருமாறு தமிழைத் தூதனுப்பி வைப்பதாகப் பாடப்பெற்றது தமிழ்விடு தூது என்னும் நூலாகும். 268 கண்ணிகளைக் கொண்ட இந்த நூலின் ஆசிரியர் யார் என தெரியவில்லை. இந்நூலில் தூது பொருளான தமிழ் மொழியின் சிறப்புகள் விரிவாகப் பேசப்பட்டுள்ளது. 

சான்றோர் வளர்த்த தமிழ் மொழி


தமிழ் மொழியின் சிறப்புகளை தமிழ்விடு தூது கூறும்போது,

   "புகழ்மிக்க தமிழே! நீ சிறப்புமிக்க கூடலென்றும், மதுரை என்றும் போற்றப்படுகின்ற சிவராசதானியைக் காத்து அழகு பொருந்திய தமிழ்ச் சங்கத்தில் 49 புலவர்களில் முதல் புலவராக அமர்ந்து கவி பாடிய சிவபெருமானாலும்; எட்டுத்திக்கும் புகழ் பரப்பிய தமிழரசி என போற்றப்படும் உமையவளாலும்; மனம் விரும்பி சிவன் ஞானத் தொகுதியுடைய ஏட்டுச்சுடிகளில் ஒரு சுவடியை   கையில் எடுத்த கணபதியாலும்; ஒரு காலத்தில் மதுரை நகரில்  அரசாட்சி செய்து, மதுரை தமிழ் சங்கத்து புலவர்களின் எதிரே அமர்ந்து தமிழ் பாடல்களின் சிறப்பை உணர்த்திய வேற்படையை உடைய முருகக்கடவுளாலும்; மூன்று வயதில் அன்னை உமையவளிடம் ஞானபால் உண்டு வடமொழி நூல்களையும், தென்மொழி நூல்களையும் கற்றறிந்து, நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய திருஞானசம்பந்தராலும்; முக்கண்ணனாகிய சிவபெருமானை வேண்டி முன்பு முதலையுண்ட பிள்ளையை உயிர் பெற்றுத் தரச் செய்த சுந்தராலும்; பிரம்மனும் திருமாலும் தேடியும் அறிய முடியாத  சிவபெருமானின் திருவடிகளைத் திருநல்லூரில் தமிழ்ச் செய்யுள் பாடி தன் தலை மேல் பெற்ற திருநாவுக்கராலும்; மணம் மிக்க தாழம் பூவை தலையில் சூடாத சிவபெருமான், காய்ந்த பனை ஓலையில் பாட்டெழுதி தரும்படி வேண்டிய மாணிக்கவாசகராலும்; சிறப்புமிக்க முத்தமிழை ஓதிய மாமுனி ஆகிய அகத்தியராலும்; தொல்காப்பியத்தை படைத்தருளிய தொல் முனியாகிய தொல்காப்பியராலும்; பதி எனப்படும் சிவபெருமானிடம் உயிர்கள் செல்வதற்கு 12 நூற்பாக்கள் பாடிய  மெய்க்கண்ட தேவராலும் போற்றி வளர்க்கப்பட்ட தமிழே!" எனத் தமிழ் மொழி சிவபெருமான், உமையவள், கணபதி, முருகப்பெருமான், திருஞானசம்பந்தர், சுந்தரர், திருநாவுக்கரசர், அகத்தியர், தொல்காப்பியர், மெய்க்கண்ட தேவர் போன்றோர்களால் வளர்க்கப்பட்டது எனத் தமிழ்விடு தூது கூறுகிறது.

**** இராஜாலி****

வெள்ளி, 22 டிசம்பர், 2023

கலிங்கத்துப்பரணி - களம்பாடியது

 நூல் குறிப்பு

     சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றான பரணி இலக்கியம், போர்க்களக் காட்சியையும் போரில் வெற்றி பெற்ற வீரரின் சிறப்புகளையும் எடுத்துக் கூறும் தன்மையில் பாடப்படுவதாகும்.

 ஆனை ஆயிரம் அமரிடை வென்ற

 மான வனுக்கு வகுப்பது பரணி 

எனப் பரணி இலக்கியத்திற்கு இலக்கணம் கூறுகிறது 'இலக்கண விளக்கம்' என்னும் நூல். பரணி நூல்களில் முதன்மையானது கலிங்கத்துப்பரணியாகும். இந்நூல், செயங்கொண்டார் என்பவரால் பாடப்பட்டதாகும். கி.பி 12-ஆம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழனின் அவை புலவராக இருந்த செயங்கொண்டார் கலிங்கத்துப்பரணியைப் பாடியதால் 'பரணிக்கோர் செயங்கொண்டார்' என அழைக்கப்படுகிறார். குலோத்துங்க சோழனின் தளபதி கருணாகரத் தொண்டைமானுக்கும்,  கலிங்க மன்னன்  அனந்தவர்மன்  என்ற மன்னனுக்கும் இடையில் கலிங்கத்தில் நடந்த போர் செய்தியையும் அதில் வெற்றி பெற்ற கருணாகரத் தொண்டைமானின் சிறப்புகளையும் கூறுவதாக இன்னூல் அமைந்துள்ளது.

களம் பாடியது

        கலிங்கத்துப்பரணியில் இறுதி உறுப்பாகக் காணப்படுவது 'களம் பாடியது' என்னும் உறுப்பாகும். இதில், போர் முடிந்த பின்னர் போர்க்களத்தில் காணப்படும் காயம்பட்ட வீரர்களின் நிலைகளும் போர்க்களத்தின் தன்மைகளும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, போர்க்கள தெய்வமாகிய காளி தேவியைப் பார்த்து போர்க்களத்துப் பேய்கள், 'போர்க்களத்தின் தன்மைகளை எங்களுக்கு கூறவேண்டும்' என வேண்டின. அவர்களின் வேண்டுகோளை ஏற்ற காளி தேவி, போர்க்களக் காட்சியினை பேய்களுக்கு பின்வருமாறு எடுத்துக்கூறுவதாக செயங்கொண்டார் பாடியுள்ளார்.

உயிர் துறந்த வீரர்களின் முகமலர்ச்சி

   "விருந்தினரும் வறியவரும் ஒன்றாக இணைந்து உணவு உண்பதைக் கண்டு மேன்மக்கள் முகமலர்ச்சி கொள்வதைப் போல, இறந்த வீரர்களின் உடலை பருந்துகளும் கழுகுகளும் ஒன்றாக இணைந்திருந்து உண்ணும் போது உயிர் துறந்த வீரனின் முகம் தாமரை பூ போல் மலர்ச்சியாகக் காணப்படுவதை காணுங்கள்"  எனக் காளிதேவி உயிர் துறந்த வீரர்களின் உடலை பேய்களுக்கு காட்டிக் கொடுத்தாள்.

    மேலும், போர்க்களத்தில் காயங்கள் பலப்பட்டு உயிர் போகாமல் துடித்துக் கொண்டிருக்கும் வீரர்களின் அருகே காத்திருக்கும் நரி கூட்டங்களைப் பார்த்து "உயிர் போகும் வரை பிறருக்கு எதுவும் உதவாமல் இருக்கும் உலோபிகள் போல, காயம் பட்டு  உயிர் போகும் நிலையில் துடித்துக் கொண்டிருக்கும் வீரர்களை காணுங்கள் " எனக் காளிதேவி, போர்க்களத்தில் உயிர் போகாமல்  துடிக்கும் வீரர்களை பேய்களுக்கு காட்டிக் கொடுத்தாள்.

வீழ்ந்த யானைகளை விட்டு  பறந்த  வண்டுகள்

           போர்க்களத்தில் அம்பு பட்டு மதநீர் ஒழுக  வீழ்ந்து கிடக்கும் யானைகளின் நிலையினை கூறும் போது, "செல்வம் வற்றியதும்  பிரிந்து செல்லும் விலைமாதரைப் போல, வண்டுகள் மதநீர் ஒழுகும் யானைகளின் மதநீரை உண்டு களித்தன, யானையின் ஆவி பிரிந்ததும், தேவர்கள் தூவும் மலர்களில் உள்ள தேனை உண்பதற்காகப்  பறந்து செல்கின்றன அந்தக் காட்சியைக் காணுங்கள்!" எனக் காளிதேவி யானைகளின் நிலைகளை காட்டிக் கொடுத்தாள்.    

     மேலும்,  போர்க்களத்தில் அம்புபட்டு குருதி ஒழுக,  கொடியோடு வீழுந்து கிடக்கும் யானைகளைக் கண்ட காளி,

 காந்தருடன் கனலமளி  யதன்மேல்  வைகுங்

 கற்புடைய  மாதரை ஒத்தல்  காண்மின் காண்மின்

எனக் "கற்புடைய பெண்கள் உயிர் பிரிந்த  தன் காதலனோடு சிவந்த நெருப்பு  படுக்கையில் படுத்திருப்பதைப் போல, யானைக் கூட்டங்கள் கொடிகளோடு வீழ்ந்து கிடப்பதை பாருங்கள்" எனப் பேய்களுக்கு காட்டி கொடுக்கிறாள்.

கணவரைத் தேடிய மனைவியர் செயல்


  போர்க்களம் வந்து மடிந்த வீரர்களைத் தேடி வந்த மனைவிமார்கள் அங்கு நிற்கும் சாதகரான காளியின் மெய்க்காப்பாளரிடம் " தன் கணவருடன் தாமும் போக வேண்டும்" என்று கேட்பார்கள். அவர் பதில் கூறாத நிலையில் கணவனின் உடலை தேடி, தடவி பார்ப்பார்கள். கிடைக்காத நிலையில் அங்கு நிற்கும் இடாகினியாகிய பிணம் தின்னும் பேயிடம் " என் கணவர் கிடந்த இடம் எங்கே?  என்று கேட்டு அலையும் பெண்களைப் பாருங்கள்!"

     எனக் காளிதேவி, போர்க்களத்தில் கணவன் உடலைத் தேடி அலையும் பெண்களின் நிலையினை, போர்க்கள பேய்களுக்கு கூறுவதாக செயங்கொண்டார் கலிங்கத்துப்பரணியில் கூறியுள்ளார்.

**** இராஜாலி ****

ஊழின் பெருவலி யாவுள? - வள்ளுவர்

முன்னுரை இலக்கியங்கள் பழக்கவழக்கங்களையும், நம்பிக்கைகளையும் மனிதனின் பண்பாட்டையும்,பிரதிபலிக்கும் களங்களாக விளங்குகின்றன. பேரிலக்கியங்கள் அற...