எனது வலைப்பதிவு பட்டியல்

செவ்வாய், 30 ஜனவரி, 2024

நாரை விடு தூது - சக்திமுத்தப் புலவர்

   நாரை விடு தூது என்ற இந்நூலின் ஆசிரியர் சத்திமுத்தப் புலவர். இவர் சத்திமுத்தம் என்னும் ஊரில் வாழ்ந்த காரணத்தினால் சத்திமுத்தப்புலவர் என்று அழைக்கப்பட்டுள்ளார். இவரின் இயற்பெயர் என்னவென்று அறியப்படவில்லை. சத்திமுத்தம் என்பது கும்பகோணம் அருகிலுள்ள தலமாகும்.

நாராய் நாராய் செங்கால் நாராய்

   சத்திமுத்தப் புலவர்,  வறுமையால் தளர்வுற்று தம் ஊர்விட்டு அயலூர் சென்று ஒரு குட்டிச் சுவரின் அருகில் குளிருக்கு ஒதுங்கியிருக்கும் போது நாரை ஒன்று மேலே பறக்கக் கண்டு, வறுமையிலும் தன் பிரிவாலும் வருந்திக் கொண்டிருக்கும் தன் மனைவிக்கு அதைத் தூதாக அனுப்புவது போல்,

நாராய் நாராய் செங்கால் நாராய்

பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன

பவளக் கூர்வாய் செங்கால் நாராய்

நீயுநின் பெடையும் தென்றிசைக் குமரியாடி

வடதிசைக்கேகுவீராயின்

எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி

நனைசுவர்க் கூரைக் கனைகுரற் பல்லி

பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு

"எங்கோன் மாறன்வழுதி கூடலில்

ஆடையின்றி வாடையின் மெலிந்து

கையது கொண்டு மெய்யது பொத்திக்

காலது கொண்டு மேலது தழீஇப்

பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்

ஏழையாளனைக் கண்டனம் எனுமே"

என்ற பாடலில் "நாரையே! நாரையே! சிவந்த கால்களை உடைய நாரையே! பனைமரத்து கிழங்கை பிளந்தது போன்ற கூர்மையான அலகை கொண்ட செங்கால் நாரையே! நீயும் உன் பெட்டையும் தென் திசையில் உள்ள கன்யாகுமரியில் நீராடிய பின் வட திசைக்கு திரும்புவீரானால் எங்கள் ஊரில் உள்ள சத்திமுத்த குளத்தில் தங்கி, நனைந்த சுவர்களையும் கூரையையும் கனைக்கும் பல்லிகளும் கொண்ட வீட்டில் என்னை எதிர்பார்த்திருக்கும் என் மனைவியிடம், எங்கள் அரசன் மாறன் வழுதி ஆளும் மதுரையில் குளிர்காலத்தில் சரியான ஆடையில்லாமல் உடல் மெலிந்துபோய் போர்வை இல்லாததால் கையைக் கொண்டு உடம்பை பொத்தி, காலைக் கொண்டு என் உடலை தழுவி, பெட்டிக்குள் பிடித்து வைத்திருக்கும் பாம்பை போல உயிரை பிடித்து வைத்திருக்கும் உன் ஏழைக் கணவனை கண்டோம் என்று சொல்லுங்கள்!" என்னும் பொருள் படும்படி பாடியுள்ளார்.

    அச்சமயம் அங்கு நகர சோதனைக்கு வந்த மாறான் வழுதி என்ற அரசன் இச்செய்யுளைக் கேட்டு தான் நாரையின் மூக்கிற்குப் பல அறிஞர்களிடமும், நூல்களிடமும் உவமை காணாது தேடிக்கொண்டிருந்த போது பனங்கிழங்கின் உவமையைக் கேட்டுக் களிப்புற்று, தன் மீது போர்த்தியிருந்த உத்தரீயம் என்ற மேலாடையினை அவர் மீது எறிந்தான். தன் சேவகரை விட்டு அவரைத் வருவித்து வேண்டியது வழங்கினான் என்பது செய்தி.

**** இராஜாலி**** 

திங்கள், 29 ஜனவரி, 2024

ஆமணக்குக்கும் யானையும் - காளமேகம்

     காளமேகம் 15 ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் புலவர் ஆவார். சமண சமயத்தில் பிறந்த இவர், தனது காதலி  மோகனாங்கி  என்பவருக்காக சைவ சமயத்திற்கு மாறினார்.  இவர் வசைப் பாடல்கள் பாடுவதில் வல்லவர் என்று கூறப்படுகின்றது. ஆனாலும் இவர் பல சிறந்த நயம் மிகுந்த பாடல்களையும் பாடியுள்ளார். இவர் பாடிய சிலேடைப் பாடல்களும், நகைச் சுவைப் பாடல்களும் பல உள்ளன. சமயம் சார்ந்த நூல்களையும் இவர் இயற்றியுள்ளார். திருவானைக்கா உலா, சரஸ்வதி மாலை, பரப்பிரம்ம விளக்கம், சித்திர மடல் முதலியவை இவர் இயற்றிய நூல்களாகும்.

ஆமணக்குக்கும் யானையும் 

  காளமேகப்புலவர் இரு பொருள்படும்படி சிலேடையாக  ஆமணக்கையும் யானையையும்  ஒரு தனிப்பாடலில்  பாடியுள்ளார்.

ஆமணக்குச் செடி 

     ஆமணக்குச் செடியில் அமணக்குக் கொட்டையில் வெண்ணிற முத்து இருக்கும்.  காற்றில் அதன் கொம்பை ( கிளை ) அசைக்கும். உள்ளே வெற்றிடமான துளையை உடைய தண்டுகளுடன் வளரும். கொத்தாக இருக்கும் ஆமணக்குக் குலையை நேரே உயர்த்தினால் தலையைச் சாய்க்கும் தன்மை கொண்டதாக காணப்படும்.

யானை

 யானை முத்துப்போன்ற தன் வெண்ணிறக் கொம்பை (தந்தத்தை) அசைக்கும். உள்ளே துளை உள்ள தன் துதிக்கைத் தண்டை ஏந்திக்கொண்டு வரும். கொத்தாகப் பழுத்திருக்கும் வாழைமரத்துக் குலையைச் சாய்க்கும் தன்மை கொண்டதாக காணப்படும். என்பதை,

முத்திருக்கும் கொம்பசைக்கும் மூரித்தண் டேந்திவரும்

கொத்திருக்கும் நேரே குலைசாய்க்கும் – ஏத்திசைக்கும்

தேமணக்கும் சோலைத் திருமலைரா யன்வரையில்

ஆமணக்கு மால்யானை யாம்.

என ஆமணக்குச் செடியின் தன்மையையும், யானையின் தன்மையையும் இந்தப் பாடலில் சிலேடையாகக் கூறியுள்ளார்.

**** இராஜாலி ****

ஊழின் பெருவலி யாவுள? - வள்ளுவர்

முன்னுரை இலக்கியங்கள் பழக்கவழக்கங்களையும், நம்பிக்கைகளையும் மனிதனின் பண்பாட்டையும்,பிரதிபலிக்கும் களங்களாக விளங்குகின்றன. பேரிலக்கியங்கள் அற...