எனது வலைப்பதிவு பட்டியல்

வெள்ளி, 10 ஜனவரி, 2025

அபிராமி அந்தாதி - கலையாத கல்வியும்...

நூல் குறிப்பு 


  கி.பி 18-ஆம் நூற்றாண்டில் அபிராமி பட்டர் என்பவரால் பாடப்பட்டது அபிராமி அந்தாதி ஆகும். அந்தாதி வகையைச் சார்ந்த 100 பாடல்களைக் கொண்டதாக இந்நூல் விளங்குகிறது. திருக்கடவூர் என்னும் ஊரில் எழுந்தருளியுள்ள அபிராமி அம்மன் மீது இப்பாடல் பாடப்பட்டுள்ளது.

 கலையாத கல்வியும் குறையாத வயதும்...

      அடியவர்களுக்கு அருள் செய்யும் அபிராமியின் இயல்பினை பற்றி அபிராமி பட்டர் கூறும் போது,

"ஆதிகடவூரில் அமிர்தகடேஸ்வரராகிய அமுதீஸ்ரின் இடது பக்கத்தில் அமர்ந்திருக்கும் அபிராமி அன்னை, திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் திருமாலின் தங்கை ஆவார். அந்த அபிராமியை உள்ளன்போடு வழிபடும் அன்பர்களுக்கு, என்றும் நீங்காத கல்வியும், நீண்ட ஆயுளும், நல்லோர் நட்பும், குறைவில்லாத செல்வமும், குன்றாத இளமையும், ஆரோக்கியமான உடலும், முயற்சியைக் கைவிடாத மனமும், எப்பொழுதும் அன்பு செலுத்தும் மனைவியும், அருமையான குழந்தைகளும், குறையாத புகழும், சொன்ன சொல் மாறாத பண்பும், இல்லை என்று வருபவருக்கு இல்லை என்று சொல்லாமல் அள்ளிக் கொடுக்கும் செல்வமும், துன்பமில்லாத வாழ்வும் என்றென்றும் அருளும் தன்மை கொண்டவளாகக் காணப்படுகிறாள்." என அபிராமியின் அருள் செல்வத்தைப் பற்றி அபிராமி பட்டர், அபிராமி அந்தாதியில் கூறுகின்றார்.

**** இராஜாலி ****

வியாழன், 9 ஜனவரி, 2025

மரபுக் கவிதையின் - தோற்றமும் வளர்ச்சியும்

      நமக்கு கிடைத்துள்ள நூல்களில் மிகவும் தொன்மையானதாக விளங்குவது தொல்காப்பியரால் பாடப்பட்ட தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலாகும். தொல்காப்பியம் கூறும் ஐந்து இலக்கணங்களில் ஒன்று யாப்பிலக்கணம் அது செய்யுள் இலக்கணம் அல்லது கவிதை இலக்கணம் என அழைக்கப்படுகிறது. அவ் யாப்பிலக்கண முறைப்படி வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, பரிபாடல் என்ற வகைமையில் பாடப்படுவது மரபுக் கவிதைகளாகும். இக்கவிதைகள் என்று பிறந்தது என்று உணர முடியாத இயல்பினைக் கொண்டதாக விளங்குகிறது. சங்க கால முதலாக இக்காலம் வரையில் மரபுக் கவிதைகள் பாடப்பட்டு வருகின்றன. இக்கட்டுரையில் இக்கால மரபுக்கவிதை முன்னோர்கள் சிலர் பற்றி காணலாம்.

இக்கால மரபுக் கவிதை முன்னோடிகள் 

   பதினெட்டாம் நூற்றாண்டு முதல் இக்காலம் வரை வாழ்ந்த கவிஞர்கள் பலர் மரபுக் கவிதைகளை எழுதியுள்ளார்கள் அவர்களில்,பாரதியார், கவிமணி, பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், சுரதா, முடியரசன், வாணிதாசன், கண்ணதாசன் - போன்றோர்களை குறிப்பிடலாம்.

பாரதியார்


   இருபதாம் நூற்றாண்டில் இணையற்ற கவிஞராக விளங்கியவர் மகாகவி பாரதியார். 1882 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 11 ஆம் நாள் நெல்லையில் உள்ள எட்டையாபுரத்தில் சின்னசாமி - இலக்குமி அம்மையாருக்கு மகனாகத் தோன்றினார். சுப்பிரமணியன் என்னும் இயற்பெயரைக் கொண்ட இவர், இளம் வயது முதலாக கவி பாடும் புலமை பெற்றிருந்ததால் எட்டையாபுரத்து மன்னர் இவரை 'பாரதி' என அழைத்தார்.

 தேச விடுதலை, சமூக விடுதலை, பெண் விடுதலைப் போன்றவற்றை வேண்டி நின்றார்.

"எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓரினம் 

எல்லோரும் இந்திய மக்கள் 

எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் ஓர் விலை, 

எல்லாரும் இந்நாட்டு மன்னர் "

 என சமூக ஒருமைப்பாட்டு உணர்வினை ஊட்டினார்.

    பாரதியார், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் போன்ற முப்பெரும் இலக்கியங்களைப் படைத்துள்ளார். மேலும் ஞானப் பாடல்கள், தேசிய கீதங்கள், வசன கவிதைகள் போன்ற தலைப்புகளில் இலக்கியங்களைப் படைத்துள்ளார். தமிழ் புதுக்கவிதையின் முன்னோடியாக விளங்கிய இவர், இந்தியா,சுதேசமித்திரன் ஆகிய பத்திரிகைகளில் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். 39 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த இவர் 1921 செப்டம்பர் மாதம் 11 ஆம் நாள் மறைந்தார்.

பாரதிதாசன்


    கனகசுப்புரத்தினம் என்னும் இயற்பெயரைக் கொண்ட இவர் 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 29 ஆம் நாள் கனகசபை லட்சுமி அம்மாள் ஆகியோருக்கு மகனாக புதுச்சேரியில் பிறந்தார். பாரதியார் மீது கொண்ட பற்றின் காரணமாக தனது பெயரை பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார்.

" எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் 

மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு " 

எனது தாய்மொழி பற்றினை வெளிப்படுத்தினார். பாரதியைப் போல தேச விடுதலையையும், பெண் விடுதலையும், மொழிப் பற்றியும் தனது பாடு பொருளாகக் கொண்டு, பாண்டியன் பரிசு, குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு, இருண்ட வீடு போன்ற இலக்கியங்களைப் படைத்துள்ளார்.

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை


    கவிமணி என அழைக்கப்படும் தேசிய விநாயகம் பிள்ளை அவர்கள், குமரி மாவட்டத்தில் உள்ள தேரூரில் சிவதான பிள்ளைக்கும் ஆதிலட்சுமி அம்மையாருக்கும் மகனாக 1876 ஆம் ஆண்டு பிறந்தார். எளிய நடையில் கவி பாடும் வல்லமை பெற்ற இவர், மலரும் மாலையும், ஆசிய ஜோதி போன்ற இலக்கியங்களைப் படைத்துள்ளார். இவரின் கவிதைகளின் சிறப்பு உணர்ந்த சென்னை மாநிலத் தமிழ்ச் சங்கம் 1940 இல் கவிமணி என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது.

நாமக்கல் கவிஞர்


    காந்தியக் கவிஞர் என அன்போடு அழைக்கப்படும் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை அவர்கள், 1888 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ஆம் தேதி மோகனூரில் உள்ள வேங்கட ராமருக்கும் அம்மணி அம்மையாருக்கு மகனாகப் பிறந்தார். 1930 ஆம் ஆண்டு காந்தியடிகளின் உப்பு சத்தியா கிரகத்தில் பங்கு கொண்டு,

    " கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது " 

என்ற பாடலை பாடி காந்தியக் கவிஞர் ஆனார். இவர் அவனும் அவளும், சங்கொலி, தமிழ் மனம் போன்ற கவிதைகளை எழுதியுள்ளார்.

சுரதா


      உவமைக் கவிஞர் என அழைக்கப்படும் கவிஞர் சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன் என்பதாகும். இவர் 1921 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் நாள் தஞ்சை மாவட்டம் பழையனூரில் திருவேங்கடம், செண்பகம் அம்மையாருக்கு மகனாகப் பிறந்தார். பாரதிதாசன் மீது கொண்ட பற்றின் காரணமாக தனது பெயரை சுப்புரத்தினதாசன் என மாற்றிக் கொண்டார். அதுவே சுரதா என ஆனது. கவிஞர் திலகம், கவி மன்னர் என அழைக்கப்படும் இவர் தேன் மழை, துறைமுகம், சிரிப்பின் நிழல் போன்ற கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

முடியரசன்


     துரைராசு என்னும் இயற்பெயரைக் கொண்ட இவர், மதுரையை அடுத்துள்ள பெரிய குளத்தில் 1920 அக்டோபர் 7ஆம் நாள் சுப்புராயலு, சீதா லட்சுமி அம்மையாருக்கு மகனாகப் பிறந்தார். திராவிட சித்தாந்த கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு பூங்கொடி, பாடும் பறவை, வீரகாவியம் போன்ற இலக்கியங்களைப் படைத்துள்ளார். இவர் வீறு கவியரசர் எனப் புகழப்பட்டார்.

வாணிதாசன்


   தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த் என அழைக்கப்படும் வாணிதாசன் அவர்கள், பாண்டிச்சேரி அருகே உள்ள வில்லியனூரில் 1915 ஜூலை 22 ஆம் நாள் அரங்க. திருக்காமு - துளசி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். அரங்கசாமி என்னும் இயற்பெயரைக் கொண்ட இவர், பிற்காலத்தில் வாணிதாசன் எனப் பெயரை மாற்றிக்கொண்டு தமிழச்சி, கொடி முல்லை, தொடு வானம் போன்ற கவிதை இலக்கியங்களைப் படைத்துள்ளார்.

கண்ணதாசன்


  கவியரசர் என போற்றப்படும் கண்ணதாசன் சாந்தப்பன் விசாலாட்சியின் மகனாக 1927 ஜூன் மாதம் 24 ஆம் நாள் பிறந்தார். முத்தையா என்னும் இயற்பெயரைக் கொண்ட இவர் சிறுவயது முதலாக கவி பாடும் வல்லமை பெற்றிருந்தார். கண்ணதாசன் என்ற சிறப்பு பெயரில் 5000-க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார். மேலும் இவர் மாங்கனி, ஆதிமந்தி, இயேசு காவியம் போன்ற இலக்கியங்களைப் படைத்ததோடு அர்த்தமுள்ள இந்து மதம் தத்துவ விளக்க நூலையும் படைத்துள்ளார்.

      இவர்களைப் போன்று 19 ஆம் 20 ஆம் நூற்றாண்டுகளில் தமிழ் மரபுக் கவிஞர்கள் பலர் தோன்றி மரபுக் கவிதை இலக்கியங்கள் பலவற்றைப் படைத்து தமிழ் மொழிக்கு சிறப்பு செய்து உள்ளார்கள்.

***** இராஜாலி *****

ஊழின் பெருவலி யாவுள? - வள்ளுவர்

முன்னுரை இலக்கியங்கள் பழக்கவழக்கங்களையும், நம்பிக்கைகளையும் மனிதனின் பண்பாட்டையும்,பிரதிபலிக்கும் களங்களாக விளங்குகின்றன. பேரிலக்கியங்கள் அற...