எனது வலைப்பதிவு பட்டியல்

சனி, 19 ஜூலை, 2025

புறநானூறு - இரண்டு பாடல்கள்


நூல் குறிப்பு

  எட்டுத்தொகை நூற்களில் புறக்கருத்துக்களைக் கூறும் 400 பாடல்களைக் கொண்டது புறநானூறாகும். இது 4 முதல் 40 அடி வரையிலான பாடல்களைக் கொண்டது. இந்நூல், 157 புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பாக காணப்படுகின்றது. இந்நூலைத் தொகுத்தவர் யார் என்று தெரியவில்லை. தொகுப்பித்தவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார்.

 1.செல்வத்துப் பயனே ஈதல்!

       புறநானூறில் 189 வது பாடலாக காணப்படுவது மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரன் பாடிய இப்பாடலாகும். 

    இப்பாடல் பொதுவியல் திணை சார்ந்தது. எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளை தொகுத்துக் கூறுவது பொதுவியல் திணையாகும். மேலும், பொருண்மொழிக்காஞ்சி என்னும் துறையில் பாடப்பட்டுள்ளது. பொருண்மொழிக்காஞ்சி என்பது உலகத்து உயிர்களுக்கு நலம் செய்யும் இன்மை மறுமைக் கடமைகளை எடுத்துக் கூறுவதாகும். 

பாடல் விளக்கம்

         "குளிர்ந்த கடல் நீரால் சூழப்பட்ட இவ்வுலகத்தை முழுவதுமாக ஒரே குடையின் கீழ் ஆட்சி செய்யும் மன்னனாக இருந்தாலும், தனது உணவுக்காக இரவும் பகலும் தூங்காமல் காட்டில் வேட்டையாடி அலையும் பாமர மக்களாக இருந்தாலும் இருவருக்கும் பொதுவானது உண்பது நாழி உணவு, உடுப்பது இரண்டு முழ ஆடை மட்டுமே. எனவே பெற்ற செல்வத்தினை பலருக்கு பகிர்ந்து ஈந்து மகிழ்வதே அச் செல்வத்தின் பயனாகும். அதுவே பேரின்பத்தைக் கொடுக்கும்." என ஈகையின் சிறப்பினை நக்கீரனார் இப்பாடலில் எடுத்துக் கூறியுள்ளார்.

---------------------

2.நாடா கொன்றோ! காடா கொன்றோ!

    புறநானூறில் 187 ஆவது பாடலாக அமைந்துள்ளது ஔவையார் பாடிய இப்பாடலாகும்.

     இப்பாடல் பொதுவியல் திணை சார்ந்தது. எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளை தொகுத்துக் கூறுவது பொதுவியல் திணையாகும். மேலும், பொருண்மொழிக்காஞ்சி என்னும் துறையில் பாடப்பட்டுள்ளது. பொருண்மொழிக்காஞ்சி என்பது உலகத்து உயிர்களுக்கு நலம் செய்யும் இன்மை மறுமைக் கடமைகளை எடுத்துக் கூறுவதாகும். 

பாடல் விளக்கம்

        "நாடு என்பது மருத நிலம், காடு என்பது முல்லை நிலம், அவல் என்பது நெய்தல் நிலம், மிசை என்பது குறிஞ்சி நிலம். ஆடவர் என்பது இருபால் மக்களைக் குறிக்கும். இந்த நான்கு வகையான நிலங்களில் வாழும் மக்கள் தீமையை விட்டு நல்வழியில் வாழ்ந்தால் அவர்கள் வாழும் நிலங்கள் சிறந்ததாக விளங்கும்" - என்றக் கருத்தினை இப்பாடலில் ஔவையார் எடுத்துக் கூறியுள்ளார்.

****** இராஜாலி******

ஐங்குறுநூறு - நெற் பல பொலிக


நூல் குறிப்பு

    எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான ஐங்குறுநூறு, ஐந்து திணைகளுக்கும் நூறு பாடல்கள் வீதம் 500 பாடல்களைக் கொண்டது. மூன்று முதல் ஆறு அடிவரையிலான பாடல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. ஐங்குறுநூறில் உள்ள குறிஞ்சித் திணை பாடலை கபிலரும், முல்லைத்திணை பாடலை பேயனாரும், மருத திணை  பாடலை ஓரம்போகியாரும், நெய்தல் திணை  பாடலை அம்மூவனாரும், பாலைத்திணை பாடலை ஓதலாந்தையாரும் பாடியுள்ளார்கள். இந்நூலைத் தொகுத்தவர் கூடலூர் கிழார், தொகுப்பித்தவர் பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் மன்னர் ஆவார். 

வேட்கைப் பத்து 

      ஐங்குறுநூறில் உள்ள மருதத் திணை பாடல்களை ஓரம் போகியார் பாடியுள்ளார். அதில் வேட்கைப்பத்தும் ஒன்று. வேட்கைப் பத்து என்பது 'விருப்பம்,' 'வேண்டுதல்' எனப் பொருள்படும். தலைவியும், தோழியும் தலைவன் நலம் கருதி வேண்டுவதாக பத்துப் பாடல்கள் இப்பகுதியில் அமைந்துள்ளது. 

நெற் பல பொலிக! பொன் பெரிது சிறக்க! 

      தோழியின் கூற்றாக அமைந்த இப்பாடலில் "தலைவி; அரசன் வாழ்க! அவன் ஆட்சி செய்யும் நாடும் வாழ்க! நாட்டில் நெல் வளம் பெருகுக! பொன் வளம் பெரிது சிறந்து விளங்குக!" என வேண்டி நின்றாள். ஆனால், நானோ; " காஞ்சி மரங்கள் செழித்து வளர்ந்திருக்கும் மருத நிலத்து வயல்களில் சிறு மீன்கள் துள்ளி விளையாடும் மருதநில தலைவனும், அவனுக்குத் துணையாக நிற்கும் பாணனும் நலமுடன் வாழ வேண்டும் என வேண்டி நின்றேன்." எனக் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

***** இராஜாலி *****

ஊழின் பெருவலி யாவுள? - வள்ளுவர்

முன்னுரை இலக்கியங்கள் பழக்கவழக்கங்களையும், நம்பிக்கைகளையும் மனிதனின் பண்பாட்டையும்,பிரதிபலிக்கும் களங்களாக விளங்குகின்றன. பேரிலக்கியங்கள் அற...