எனது வலைப்பதிவு பட்டியல்

சனி, 11 ஜனவரி, 2025

இணையத்தமிழ் - இணையத் தமிழ் பயன்பாடு

 அறிமுகம்

   இன்றைய அறிவியல் யுகத்தில் கணினித் தொழில்நுட்ப வளர்ச்சி மிக உயர்ந்த ஒரு கட்டத்தை எட்டியுள்ளது. அறிவியல் துறை மட்டுமல்லாமல் நமது அன்றாட பயன்பாடுகளிலும் கணினியின் பயன்பாடுகள் வியக்கத்தக்க வகையில் காணப்படுகின்றது. 

     மனிதர்களின் அதி தேவையாக மாறிவிட்ட கணினியில் தமிழ் மொழி நுழைந்து விட்டது. இணையம் வழியாக தமிழ் மொழி உலகில் அனைத்து இடங்களுக்கும் சென்று விட்டது. அத்தகைய இணையத் தமிழின் பயன்பாடு பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

இணையம் ஓர் அறிமுகம்

  இந்த நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்புகளில் கணிப்பொறி முதன்மை வகிக்கிறது. தொடக்கத்தில் ஆங்கில மொழியின் எழுத்துருக்களைப் பயன்படுத்தி கணிப்பொறியின் செயல்பாடுகள் உருவாக்கப்பட்டது. அதன் காரணமாக இன்றளவும் கணினியில் ஆங்கிலத்தின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது. 1969 இல் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல் நகரில் ஜான் பாஸ்டல் என்பவர் 500 க்கும் மேற்பட்ட கணினிகளை இணைத்து இணையம் என்ன வடிவத்திற்கு வித்திட்டார். 

    1980 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு பல தமிழ் அறிஞர்களின் முயற்சியின் காரணமாக, கணினியில் தமிழ் மொழியின் பயன்பாடுகள் பெருகி வருகின்றன.  

      இன்றைய நிலையில், ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக தமிழ் மொழிக்கு அதிக இணைய அமைப்புகள் உள்ளன. தமிழ் மொழியில் சுமார் 2000 இணைய அமைப்புகளும் ஒரு கோடிக்கு மேற்பட்ட இணையப் பக்கங்களும் காணப்படுகின்றன. 

    ஆரம்பகாலத்தில் தமிழ் இணைய பக்கங்களைப் படிப்பதற்காக அமுதம், லதா, பாமினி, மயிலை, பூபாளம், முரசு போன்ற மென்பொருட்களும் எழுத்துருக்களும் தோன்றிய பின்னர் தமிழ் இணையப் பயன்பாடு பல்வேறு தளங்களில் விரிவடைந்தது. 

இணையத்தின் பயன்பாடு 

 இணையத்தின் பயன்பாடு என்பது நாள்தோறும் பெருகிக்கொண்டே இருக்கின்றன. தேடுபொறிகள் (Search Engines) மின்னஞ்சல்(email), இணையதளங்கள்(websites), வலைப்பூக்கள்(Blogs), சமூக இணையதளங்கள் (Twitter, Face - book), மின் ஆளுகை (e-Governance), மின் வணிகம் (e-Commerce) போன்ற பல நிலைகளில் மனித பயன்பாட்டில் துணை நிற்கின்றது.

     இணையதளம் மூலமாக நமக்குத் தேவையான செய்திகளை பனுவல் (Text), படம் (Image), ஒலிக்கோப்பு (Audio), நிழல் படக் காட்சிகள் (Video) போன்ற பல்வேறு வடிவங்களில் பெறுகிறோம். மின்னஞ்சல் அனுப்புதல், கோப்புகளைப் பகிர்ந்து கொள்ளுதல், கலந்துரையாடல், இணைய வழி வகுப்புகள், தொலைக்காட்சிகளை காணுதல் போன்ற அனைத்து நிலைகளிலும் மனித வாழ்வில் ஒரு கூறாக இணையதளம் ஆகிவிட்டது.

இணையத் தொழில்நுட்பத்தின் அடிப்படை 

    இணையம் (Internet) என்பது உலக அளவில் பல கணினி வலை அமைப்புகளின்(Networks ) கூட்டிணைப்பான பெரும் வலையமைப்பைக் குறிக்கும் சொல்லாகும். உலகில் உள்ள கணினிகளை இணைத்து, தகவல் பெறவும் தகவல் அளிக்கவும் சேமிப்பதற்கும் பயன்படும் ஒரு வலை பின்னல் அமைப்பாகும். இத்தகைய தொழில்நுட்பத்தையே உலகளாவிய வலை (World Wide Web - www) என வழங்குகிறோம்.

     இணையத்தில் இருந்து இணையப் பக்கங்களைப் பார்வையிட உதவுவது http என்று சுருக்கமாக அழைக்கப்படும் hyper text transfer protocol என்பதாகும். இணையத்தில் உள்ள கோப்புகளைப் பார்வையிட உதவும் நெறிமுறை file transfer portocol என்பதாகும். இது FTP என அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு இணையதளமும் அதன் பயன்பாட்டைப் பொறுத்து, com, org, edu போன்ற எழுத்துக்களைக் கொண்டு முடிகின்றன. com என்பது commercial, edu என்பது education, org என்பது organization என்பவற்றைக் குறிக்கும் சுருக்கச் சொல்லாகும்.

     இன்றைய நிலையில், மேஜை கணினி, மடிக்கணினி, பலகைக் கணினி, செல்லிடம் பேசி போன்ற இணையதள பயன்பாட்டுக் கருவிகளில் ஏதாவது ஒன்று நம்மிடம் காணப்படுகின்றன.

இந்தியாவில் இணையத்தின் தோற்றம்

   உலக நாடுகள் பலவற்றிலும் இணையத்தின் சேவை பரவலாயின. இந்தியாவில் முதன்முதலில் பொது மக்களுக்காக இணையம் 1995-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தொடங்கி வைக்கப்பட்டது. முதலில் ஆறு நகரங்களில் தொடங்கி வைக்கப்பட்டது. 'விதேஷ் சஞ்சார் நிகம் லிமிடெட்' (Videsh Sanchar Nigam Limited - VSNL) இந்தியாவின் ஒரே இணைய -இணைப்பு வழங்கும் சேவையாளராக இருந்தது. பின்னர் 1998-இல் இருந்து தனியாருக்கும் உரிமம் வழங்கப்பட்டது. 1999-இல் வெப்துனியா (webdunia.com) இந்திய மொழிகளில் முதலில் இந்தி மொழியில் இணையத்தின் சேவையை அறிமுகம் செய்தது. இணையத்தின் பயன்பாடு மற்றும் வளர்ச்சிக்காக இந்தியப் பாராளுமன்றத்தில் தொலைத்தொடர்புக்கான வரைமுறைச் சட்டம் 2000-இல் இயற்றப்பட்டது.  2001-ஆம் ஆண்டு இந்திய இரயில்வே துறை (Indian Railway Catering and Tourism Centre - IRCTC) இணைய வழி பயணச்சீட்டுப் பதிவினை தொடங்கியது. பின்னர் படிப்படியாக வங்கி, விமானச் சேவைக்காகவும் இணையப் பயன்பாடு விரிவடைந்தன. இன்றைக்கு பல்வேறு நிறுவனத்தின் குறிப்பாகச் செல்போன் நிறுவனங்களும் இணையத்தின் சேவையை வழங்கி வருகின்றன. இன்று இந்தியாவில் இணையச் சேவை பெரும்பாலான இந்திய மொழிகள் அனைத்திலும் நடைபெறுகிறது.

தமிழ் இணையத்தின் பயன்பாடு 

  1996 ஆம் ஆண்டு தான் தமிழ் மொழி இணையத்தில் ஏற்றப்பட்டது. இந்திய மொழிகளில் இணையத்தில் ஏறிய முதல் மொழி தமிழ் மொழியாகும்.

    தமிழ் மொழியை இணையத்தில் ஏற்றுவதற்கு புலம்பெயர்ந்த தமிழர்களின் பங்கு இணையற்றதாகும். அவர்களின் கடின உழைப்பின் காரணமாக ஆங்கில மொழிக்கு நிகராக தமிழ் மொழி இணையப் பங்களிப்புகளை செய்து வருகிறது.

   தமிழ் இணையம் வழியாக, தகவல் பரிமாற்றம், கற்றல் கற்பித்தல், இணையதள வர்த்தகம், இணையதள முன்பதிவுகள், இணையதள பண பரிமாற்றம், மற்றும் பொழுதுபோக்கு கூறுகள் போன்றவை தமிழ் மக்களிடம் எளிதாக வந்து சேருகிறது.

    கணினியில் தமிழ்மொழியின் பயன்பாட்டிற்கு காரணம் நம் மொழியின் சிறப்பே ஆகும். ஏனெனில் தமிழ்மொழியில் எழுத்தமைப்பு, ஒலியமைப்பு, சொல்லமைப்பு, தொடரமைப்பு ஆகிய எல்லாவற்றிலும் ஒரு கட்டுக்கோப்பு இருக்கிறது. இத்தனை சிறப்பினை பெற்றிருப்பதால் கணினியில் தமிழ் மிகக் குறுகிய காலத்தில் நுழைந்தது.

    இதற்குப் பெருமளவில் துணை நிற்பவர்கள் புலம் பெயர்ந்த தமிழர்களேயாவர். நாடு, இனம், மொழி எனக் கடல் கடந்து சென்றாலும் நம் தமிழர்கள் பண்பாடு, மொழி, கலை போன்றவற்றால் தமக்கான அடையாளத்துடன் வாழ்ந்து வருகின்றனர். தமிழகத்தை விட்டுத் தொழில் காரணமாக அயல் நாடுகளுக்குச் சென்ற தமிழர்கள், தமிழைப் பேசவும், கேட்கவும் வழி இல்லாமல் இருந்த நிலையில் இணையம் மூலம் சந்தித்துக்கொள்ள தமிழில் மின்னஞ்சல்களையும், இணைய இதழ்களையும், இணையத் தளங்களையும் பயன்படுத்தினர். இதுபோன்ற ஆரம்பகட்ட முயற்சிகளே இன்று இணையத்தமிழ் என்ற துறையாக வளர்ந்தது.  கணிப்பொறியில் தமிழைக் கொண்டு வரும் முயற்சியினை புலம் பெயர் தமிழர்கள் மேற்கொண்டனர். “தமிழ் எழுத்துருக் குறியாக்க முயற்சிகள் 1980-இன் தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்டன.”

       உலகம் முழுவதிலும் பல்வேறு தமிழறிஞர்கள் 1984 முதல் 1995 வரை அவரவர்க்கென தனிகுறியீட்டு முறையை அமைத்து எழுத்துருக்கள், விசைப்பலகைகள் அமைத்து தமிழைக் கணினியிலும், இணைத்திலும் ஏற்றம் பெறச் செய்தனர். இணையத்தில் முதல் நிலையாகத் தாங்கள் கண்டுபிடித்த தமிழ் எழுத்துருக்கள் மூலமாக தமிழில் மின்னஞ்சல் அனுப்பினர். பின்னர் இணைய இதழ்களும், இணையத் தளங்களும் இணையத்தில் உருவாகின. 1995-ஆம் ஆண்டில் நா. கோவிந்தசாமி "கணியன்'' என்கிற பெயரில் நடத்தியதுதான் முதல் தமிழ் இணையத்தளம். இவ்விணையத்திற்கான தகவல்கள் சிங்கப்பூர் மற்றும் சென்னையிலிருந்து தொகுக்கப்பட்டன. இத்தளத்தினை படிக்க 'கணியன்' என்ற எழுத்துருவை பயன்படுத்த வேண்டும்.

       இன்று இணையத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் தளங்களும், இணைய இதழ்களும் வெளிவருகின்றன. இவற்றில் சங்க இலக்கியம், காப்பியங்கள், பக்தி இலக்கியம், சிறுகதைகள், புதினங்கள், கவிதைகள், திறனாய்வுக் கட்டுரைகள் நூலகம், இணையப் பல்கலைக்கழகம், அகராதிகள், சினிமா போன்ற ஏராளமான தகவல்கள் லட்சக்கணக்கான பக்கங்களைக் கொண்டுள்ளன.

    இணைய வளர்ச்சியால் தமிழ் மொழிபெயர்ப்பு புதிய வேகம் பெற்றுள்ளது. தமிழ் கல்வியை எளிமைப்படுத்தி வழங்கும் வகையில் பல இணையதளங்கள் உள்ளன. இணையதளங்கள் மூலம் உலக அளவில் காணப்படும் புத்தகங்களைத் தரவிறக்கம் செய்து pdf வடிவத்தில் சேமித்து வைத்துப் படித்து புதிய அறிவு தேடலுக்கு துணையாக இணையதளங்கள் விளங்குகின்றன. 

 

@ உதவி -கணினித் தமிழ் 

                                                **** இராஜாலி ****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யுனிக்கோட் - பயன்பாடு

அறிமுகம்    ஆங்கில மொழியைத் தவிர பிறமொழிகளிலும் பலரும் பல்வேறு குறியேற்றங்களையும் எழுத்துருக்களையும் பயன்படுத்தி வந்தனர். இந்த முறையில் ஒரே ...