தமிழ் நூல்கள் அறிமுகம் - தமிழ் இலக்கியங்கள் குறித்த அட்டவணை
எனது வலைப்பதிவு பட்டியல்
புதன், 23 ஜூலை, 2025
மின் நூல் - ஆழ்வார்கள் அறிமுகம்
ஆழ்வார்கள் அறிமுகம் - பன்னிரு ஆழ்வார்களைப் பற்றி சுஜாதா அவர்கள் எழுதிய எளிய அறிமுக உரை..
மின் நூல் - இலக்கியத்தில் மருத்துவ கருத்துக்கள்
இலக்கியத்தில் மருத்துவ கருத்துக்கள் - தமிழ் இலக்கியங்களில் காணப்படும் மருத்துவச் செய்திகள் குறித்த ஆய்வு...
செவ்வாய், 22 ஜூலை, 2025
மொழிப் போராட்டம் - இந்தி திணிப்பு
ஹிந்தி எதிர்ப்பு போராட்டம்
முதல் கட்ட இந்தி எதிர்ப்புப் போராட்டம்
சனி, 19 ஜூலை, 2025
புறநானூறு - இரண்டு பாடல்கள்
நூல் குறிப்பு
எட்டுத்தொகை நூற்களில் புறக்கருத்துக்களைக் கூறும் 400 பாடல்களைக் கொண்டது புறநானூறாகும். இது 4 முதல் 40 அடி வரையிலான பாடல்களைக் கொண்டது. இந்நூல், 157 புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பாக காணப்படுகின்றது. இந்நூலைத் தொகுத்தவர் யார் என்று தெரியவில்லை. தொகுப்பித்தவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார்.
1.செல்வத்துப் பயனே ஈதல்!
புறநானூறில் 189 வது பாடலாக காணப்படுவது மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரன் பாடிய இப்பாடலாகும்.
இப்பாடல் பொதுவியல் திணை சார்ந்தது. எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளை தொகுத்துக் கூறுவது பொதுவியல் திணையாகும். மேலும், பொருண்மொழிக்காஞ்சி என்னும் துறையில் பாடப்பட்டுள்ளது. பொருண்மொழிக்காஞ்சி என்பது உலகத்து உயிர்களுக்கு நலம் செய்யும் இன்மை மறுமைக் கடமைகளை எடுத்துக் கூறுவதாகும்.
பாடல் விளக்கம்
"குளிர்ந்த கடல் நீரால் சூழப்பட்ட இவ்வுலகத்தை முழுவதுமாக ஒரே குடையின் கீழ் ஆட்சி செய்யும் மன்னனாக இருந்தாலும், தனது உணவுக்காக இரவும் பகலும் தூங்காமல் காட்டில் வேட்டையாடி அலையும் பாமர மக்களாக இருந்தாலும் இருவருக்கும் பொதுவானது உண்பது நாழி உணவு, உடுப்பது இரண்டு முழ ஆடை மட்டுமே. எனவே பெற்ற செல்வத்தினை பலருக்கு பகிர்ந்து ஈந்து மகிழ்வதே அச் செல்வத்தின் பயனாகும். அதுவே பேரின்பத்தைக் கொடுக்கும்." என ஈகையின் சிறப்பினை நக்கீரனார் இப்பாடலில் எடுத்துக் கூறியுள்ளார்.
---------------------
2.நாடா கொன்றோ! காடா கொன்றோ!
புறநானூறில் 187 ஆவது பாடலாக அமைந்துள்ளது ஔவையார் பாடிய இப்பாடலாகும்.
இப்பாடல் பொதுவியல் திணை சார்ந்தது. எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளை தொகுத்துக் கூறுவது பொதுவியல் திணையாகும். மேலும், பொருண்மொழிக்காஞ்சி என்னும் துறையில் பாடப்பட்டுள்ளது. பொருண்மொழிக்காஞ்சி என்பது உலகத்து உயிர்களுக்கு நலம் செய்யும் இன்மை மறுமைக் கடமைகளை எடுத்துக் கூறுவதாகும்.
பாடல் விளக்கம்
"நாடு என்பது மருத நிலம், காடு என்பது முல்லை நிலம், அவல் என்பது நெய்தல் நிலம், மிசை என்பது குறிஞ்சி நிலம். ஆடவர் என்பது இருபால் மக்களைக் குறிக்கும். இந்த நான்கு வகையான நிலங்களில் வாழும் மக்கள் தீமையை விட்டு நல்வழியில் வாழ்ந்தால் அவர்கள் வாழும் நிலங்கள் சிறந்ததாக விளங்கும்" - என்றக் கருத்தினை இப்பாடலில் ஔவையார் எடுத்துக் கூறியுள்ளார்.
****** இராஜாலி******
ஐங்குறுநூறு - நெற் பல பொலிக
நூல் குறிப்பு
எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான ஐங்குறுநூறு, ஐந்து திணைகளுக்கும் நூறு பாடல்கள் வீதம் 500 பாடல்களைக் கொண்டது. மூன்று முதல் ஆறு அடிவரையிலான பாடல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. ஐங்குறுநூறில் உள்ள குறிஞ்சித் திணை பாடலை கபிலரும், முல்லைத்திணை பாடலை பேயனாரும், மருத திணை பாடலை ஓரம்போகியாரும், நெய்தல் திணை பாடலை அம்மூவனாரும், பாலைத்திணை பாடலை ஓதலாந்தையாரும் பாடியுள்ளார்கள். இந்நூலைத் தொகுத்தவர் கூடலூர் கிழார், தொகுப்பித்தவர் பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் மன்னர் ஆவார்.
வேட்கைப் பத்து
ஐங்குறுநூறில் உள்ள மருதத் திணை பாடல்களை ஓரம் போகியார் பாடியுள்ளார். அதில் வேட்கைப்பத்தும் ஒன்று. வேட்கைப் பத்து என்பது 'விருப்பம்,' 'வேண்டுதல்' எனப் பொருள்படும். தலைவியும், தோழியும் தலைவன் நலம் கருதி வேண்டுவதாக பத்துப் பாடல்கள் இப்பகுதியில் அமைந்துள்ளது.
நெற் பல பொலிக! பொன் பெரிது சிறக்க!
தோழியின் கூற்றாக அமைந்த இப்பாடலில் "தலைவி; அரசன் வாழ்க! அவன் ஆட்சி செய்யும் நாடும் வாழ்க! நாட்டில் நெல் வளம் பெருகுக! பொன் வளம் பெரிது சிறந்து விளங்குக!" என வேண்டி நின்றாள். ஆனால், நானோ; " காஞ்சி மரங்கள் செழித்து வளர்ந்திருக்கும் மருத நிலத்து வயல்களில் சிறு மீன்கள் துள்ளி விளையாடும் மருதநில தலைவனும், அவனுக்குத் துணையாக நிற்கும் பாணனும் நலமுடன் வாழ வேண்டும் என வேண்டி நின்றேன்." எனக் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
***** இராஜாலி *****
ஞாயிறு, 13 ஜூலை, 2025
திணை வாழ்வியல்
ஐந்திணைகள்
சங்க கால மக்கள் இயற்கையோடு இணைந்த வாழ்வியல் முறைகளை அமைத்துக் கொண்டார்கள். அவர்கள் வாழ்ந்த இயற்கை சூழ்நிலைக்கு ஏற்ப நிலங்களைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்தாக வகுத்துக் கொண்டார்கள். காலத்தை பெரும்பொழுது, சிறுபொழுது என இரண்டாகப் பகுத்துக் கொண்டனர். இவ் ஐந்து நிலங்களில் காணப்படும் இயற்கைச் சூழல், உயிரியல் நிலைப்பாடுகள், பயன்பாட்டுப் பொருட்கள் இவற்றை அடிப்படையாகக் கொண்டு கருப்பொருட்களை வகுத்துக் கொண்டனர்.
குறிஞ்சி என்பது மலையும் மலை சார்ந்த இடமும் ஆகும். இங்கு வாழ்ந்த மக்கள் குறவர், குறத்தியர். இவர்களின் தொழில் தேனெடுத்தல். தெய்வம் முருகன். புணர்தலும், புணர்தல் நிமித்தமும் இவர்களின் உரிப்பொருளாகும். குறிஞ்சி நிலத்தின் பெரும் பொழுதாகக் கூதிர் காலம் மற்றும் முன்பனிக் காலத்தைக் கொள்வர். சிறு பொழுதாக யாமம் காணப்படுகிறது.
முல்லை என்பது காடும், காடு சார்ந்த இடமும் ஆகும். இங்கு வாழ்ந்த மக்கள் ஆயர், ஆட்சியர் என அழைக்கப்பட்டனர். இவர்களின் தொழில் ஆடு, மாடு மேய்த்தல், தெய்வம் திருமால். இருத்தலும், இருத்தல் நிமித்தமும் இவர்களின் உரிப்பொருளாகும். முல்லை நிலத்தின் பெரும்பொழுது கார்காலம், சிறுபொழுது மாலை ஆகும்.
மருதம் என்பது வயலும் வயல் சார்ந்த இடமும் ஆகும். இங்கு வாழ்ந்த மக்கள் உழவர், உழத்தியர். இவர்கள் உழவுத் தொழில் செய்து வந்தனர். தெய்வம் இந்திரன். ஊடலும், ஊடல் நிமித்தமும் இவர்களின் உரிப்பொருள். ஆறு பெரும் பொழுதுகளும் இந்நிலத்திற்கு உரியது. சிறுபொழுது வைகறை ஆகும்.
நெய்தல் என்பது கடலும், கடல் சார்ந்த இடமும் ஆகும். இங்கு வாழ்ந்த மக்கள் பரவர், பரத்தியர். தொழில் மீன் பிடித்தல். தெய்வம் வருணன். இரங்கலும் இரங்கல் நிமித்தமும் இவர்களின் உரிப்பொருள் ஆகும். ஆறு பெரும்பொழுதுகளும் இந்நிலத்திற்கு உரியது. ஏற்பாடு இவர்களின் சிறு பொழுதாகும்.
பாலை என்பது மணலும், மணல் சார்ந்த இடமும். இங்கு வாழ்ந்த மக்கள் எயினர்கள். இவர்கள் வழிப்பறி செய்வதை தொழிலாகக் கொண்டிருந்தனர். இவர்களின் தெய்வம் கொற்றவை. உரிப்பொருள் பிரிதலும், பிரிதல் நிமித்தமும் ஆகும். பாலை நிலத்திற்கு வேனில் மற்றும் பின் பனி பெரும்பொழுதுகள் ஆகும். நண்பகல் சிறுபொழுதாகும்.
மேற்கண்ட நிலையில் முதல், கரு, உரிப்பொருளின் அடிப்படையில் வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டு ஐந்து நிலத்தில் வாழ்ந்த மக்களும் தங்கள் வாழ்க்கை கூறுகளைக் களவு நிலை, நின்ற கற்பு வாழ்வினை 'அகம் 'என்றும், வீரம், ஈகைப் போன்ற சிறப்பு வாழ்வினை 'புறம்' என்றும் இரண்டாகப் பகுத்து வாழ்ந்தனர்.
----------------------
அக வாழ்வியல்
பண்டையத் தமிழர்கள் தங்களின் அகம் சார்ந்த வாழ்வியலைக் களவு, கற்பு என இரண்டு நிலைகளாக வகுத்தனர்.
திருமணத்திற்கு முன்பு தலைவனும் தலைவியும் சந்தித்து, காதல் கொண்டு ஒழுகுவது களவு ஒழுக்கம் எனப்பட்டது.
திருமணத்திற்கு பின்பு கணவனும் மனைவியும் இணைந்து நடத்தும் இல்லறச் சிறப்பு கற்பொழுக்கம் ஆகும்.
களவு, கற்பு ஆகிய இரண்டும் சில ஒழுக்க நிலைகளை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளன.
களவு ஒழுக்க நிலைகள்
களவு ஒழுக்கம் பின்வரும் நான்கு நிலைகளில் அமைகின்றது. அவை,
1. இயற்கைப் புணர்ச்சி,
2. இடந்தலைப்பாடு,
3.பாங்க்ற் கூட்டம்,
4. பாங்கியிற் கூட்டம்.
என்பனவாகும்.
1. இயற்கைப் புணர்ச்சி
தலைவனும் தலைவியும் விதி வயத்தால் சந்திக்க நேரும். சந்தித்த இருவரும் ஒருவருக்கு ஒருவர் குறிப்பறிந்து உள்ளப் புணர்ச்சிக் கொள்வார்கள். இது இயற்கைப் புணர்ச்சி எனப்படும்.
2. இடந்தலைப்பாடு
இயற்கைப் புணர்ச்சியில் முதல் நாள் தலைவியைச் சந்தித்த தலைவன், மறுநாளும் அவ்விடத்திற்குச் சென்று தலைவியைச் சந்திக்கலாம் எனக் கருதி அவ்விடத்திற்குச் செல்ல, தலைவியும் அதே எண்ணத்தோடு அங்கு வந்து இருவருக்கிடையே சந்திப்பு நிகழும் இது இடந்தலைப்பாடாகும்.
3. பாங்கற் கூட்டம்
பாங்கன் என்பவன் தோழன். இடந்தலைப்பாட்டிற்குப் பின் தலைவியைச் சந்திக்க முடியாத தலைவன், தோழரின் உதவியை நாடுவான். தோழனும் அவர்கள் காதலுக்கு துணை நிற்பான். இது பாங்கற் கூட்டமாகும்.
4. பாங்கியிற் கூட்டம்
பாங்கி என்பவள் தலைவியின் தோழி. தோழனின் உதவியால் தலைவியைச் சந்திக்க முடியாதபோது, தலைவன் தலைவியைச் சந்திக்க தலைவியின் தோழியின் உதவியை நாடுவான். இதற்கு பாங்கியிற் கூட்டம் என்று பெயர். இது,
1. பாங்கி மதி உடன்பாடு,
2. சேட்படை
3. பகற்குறி,
4. இரவுக்குறி,
5. வரைவு கடாதல்,
6. ஒருவழித் தணத்தல்,
7. அறத்தோடு நிற்றல்,
8. உடன்போக்கு,
போன்ற பல நிலைகளில் பாங்கியிற் கூட்டம் அமையும்.
1. பாங்கி மதி உடன்பாடு
தலைவன் தலைவி மீது கொண்ட காதலை தோழியிடம் கூறி அவள் உதவியை நாடி நிற்பான். இது பாங்கி மதி உடன்பாடு எனப்படும்.
2. சேட்படை
உதவி கேட்டு நிற்கும் தலைவனுக்கு உடன்படாமல் தோழி அவனை அவ்விடத்தை விட்டு நீங்குமாறு சொல்வது சேட்படை என்பதாகும்.
3. பகற்குறி
தோழியின் உதவியுடன் தலைவனும் தலைவியும் மீண்டும் மீண்டும் பகற்பொழுதில் ஓர் இடத்தில் சந்தித்து அன்புக் கொள்வது பகற்குறியாகும்.
4. இரவுக்குறி
இரவு நேரத்தில், இல்ல வளாகத்திற்குள் தலைவனும் தலைவியும் சந்தித்து மகிழ்வது இரவுக்குறியாகும்.
5. வரைவு கடாதல்
பகற்குறியிலும் இரவுக்குறியிலும் தலைவியைச் சந்தித்து மகிழ்ந்த தலைவன் திருமணத்தில் நாட்டமின்றி இருப்பான். அப்பொழுது தோழி தலைவியை திருமணம் செய்து கொள்ளும்படித் தலைவனை வற்புறுத்துவது வரைவு கடாதல் ஆகும்.
6.ஒருவழித் தணத்தல்
தலைவனும் தலைவியும் இரவுக்குறியிலும் பகல் குறியிலும் பலமுறை சந்தித்து அன்புக் கொண்ட நிகழ்வினை பலரும் அறிந்து பலவாறு பேசுவர். அது அலர் எனப்படும். அந்த அலர் அடங்குவதற்காக தலைவன் சிறிது காலம் தலைவியைச் சந்திக்க வருவதைத் தவிர்ப்பான். இது ஒருவழித் தணத்தல் எனப்படும்.
7. அறத்தோடு நிற்றல்,
அறத்தோடு நிற்றல் என்பது, தலைவன், தலைவியின் காதலை தலைவியின் பெற்றோருக்கு தெரிவிக்க முயல்வதாகும். தோழி செவிலி தாயிடமும், செவிலித்தாய் நற்றாயிடமும், நற்றாய் தந்தையிடமும் கூறுவதாக அறத்தோடு நிற்றல் அமையும். மேலும் அறத்தோடு நிற்றல் இரண்டு சூழ்நிலைகளில் நிகழும். தலைவி வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டு, உடல் மெலிந்து, வெறியாட்டு நிகழ்த்தும் போதும், அல்லது தலைவிக்கு வேறொருவருடன் திருமணம் நிகழ்த்த முயலும் போதும் அறத்தோடு நிற்றல் நிகழும்.
8. உடன்போக்கு
களவு வாழ்க்கை மேற்கொண்டிருந்த தலைவன் அலர் போன்ற காரணங்களாலும், தலைவியின் அறிவுறுத்தலாலும் தலைவியைத் தன்னுடன் அழைத்துச் செல்ல முற்படுவான். இதற்கு உடன் போக்கு என்று பெயர். இதற்குரிய ஏற்பாடுகளைத் தோழியே செய்வாள்.
மேற்கண்ட நிலைகளில் களவு ஒழுக்கங்கள் அமையும்.
------------------
கற்பொழுக்க நிலைகள்
கற்பு வாழ்க்கை என்பது பொதுநிலையில் திருமணத்திற்குப் பின்பு அமையும் கணவன் மனைவி ஆகியோரின் குடும்ப வாழ்க்கை ஆகும்.
கற்பு என்பதை, திருமணத்திற்குப் பின் ஏற்படும் மகிழ்ச்சி, ஊடல், கூடல், ஊடல் உணர்த்தும் பிரிவு முதலானவை அமைந்த நிலை என நற்கவிராச நம்பி, நம்பியகப் பொருளில் கூறுகிறார்.
இல்லற மகிழ்ச்சி
இல்லற வாழ்க்கையில் தலைவன் தலைவியின் சிறப்பான செயல்பாடுகளைக் கண்டு தலைவன் மகிழ்ச்சி கொள்வதோடு, தலைவனின் அன்பை கண்டு தலைவியும் மகிழ்ச்சி கொள்வாள். தலைவன் தலைவியின் சிறப்பான வாழ்வைக் கண்டு தோழியும் மகிழ்ச்சி கொள்வாள். தலைவியின் பொறுப்பான இல்லற வாழ்க்கையைப் பார்த்து செவிலி தாயும் மகிழ்ச்சிக் கொள்வாள்.
பிரிவின் வகைகள்
இல்லறத்தில் பிரிவு என்பதும் நிகழும் குறிப்பாக,
சில நேரங்களில் தலைவன் பரத்தையர் பால் பற்றுக்கொண்டு தலைவி விட்டுப் பிரிந்து செல்வான். இது பரத்தையர் பிரிவாகும்.
சில நேரங்களில் தலைவியை விட்டுத் தலைவன் கல்விக்காக பிரிந்து செல்வான் இது ஓதல் பிரிவு ஆகும்.
போர் செய்வதற்காகத் தலைவியை விட்டு தலைவன் பிரிந்து செல்வான் இது காவல் பிரிவு ஆகும்.
பக்கத்து நாட்டு மன்னனுக்கு தூது செல்லும் நிலையில் தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்து செல்வான் இது தூதுப் பிரிவாகும்.
நண்பனுக்காகத் தலைவன் தலைவியை விட்டு சில நேரம் பிரிந்து செல்வான் இது துணைவையின் பிரிவு ஆகும்.
இல்லறம் இனிது நடத்த பொருளீட்ட வேண்டி தலைவியை விட்டுத் தலைவன் பிரிந்து செல்வான் இது பொருள்வயின் பிரிவு ஆகும்.
இவ்வாறு கற்பியலில் இல்லற மகிழ்ச்சியும், பிரிவு துன்பமும் இருக்கும்.
***** இராஜாலி *****
-
முன்னுரை காலம் காலமாக இலக்கியங்கள் பல மாற்றங்களைக் கண்டுள்ளது. அவ்வகையில் தமிழ் கவிதை இலக்கியமும் மரபுக்கவிதைகள் என்னும் வடிவத்தை கடந்து, ...
-
முன்னுரை தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க இலக்கியங்களுக்குப் பின்னர் இடம்பெறுவது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களாகும். இவற்றை சங்கமருவிய கால ...
-
நூல் குறிப்பு புலவர் குழந்தை அவர்களால் எழுதப்பட்ட இராவண காவியம் திராவிட இயக்கத்தின் பகுத்தறிவு சிந்தனைகளை மக்களிடம் பரப்பும் நோக்கத்தில் ...