எனது வலைப்பதிவு பட்டியல்

செவ்வாய், 22 ஜூலை, 2025

மொழிப் போராட்டம் - இந்தி திணிப்பு

 


   1910 ஆம் ஆண்டு இந்தி சாகித்திய சம்மேளனம் என்ற அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் தேசிய காங்கிரஸ் வலுவடையத்தொடங்கியது. தேசிய உணர்ச்சியோடு இந்தியாவின் அரசாங்க மொழியாக இந்தி வரவேண்டும் என்ற எண்ணமும் வளரத் தொடங்கியது. மகாத்மா காந்தி, ராஜேந்திர பிரசாத் போன்றவர்கள் இந்தி மொழியை அரசாங்க மொழியாக வேண்டுமென்ற இயக்கத்தை பரப்புவதில் ஈடுபட்டார்கள்.

    1931 இல்  கூடிய காங்கிரஸ் இந்துஸ்தானி இந்தியாவின் பொது மொழியாக வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது.   உண்மையில் இந்தி தான் கட்டாயப் பாடமாக்கப்பட்டது. இந்துஸ்தானி என்ற பெயருக்கு செல்வாக்கு ஏற்படவில்லை.

    பொதுமொழி தேவை என்பதற்கு இந்தி ஆதரிப்பாளர்கள் கூறிய காரணங்கள் விடுதலைப் போராட்டத்தில் மக்கள் அனைவரையும் ஒன்றுபடுத்த ஒரு தேசிய மொழி தேவை என்பதும், நாடு விடுதலை அடைந்ததும் சுதந்திர நாட்டு அரசியல் விவகாரத்திற்கு ஒரு பொது மொழி அவசியம் என்பதும் அவர்களின் கருத்தாக இருந்தது.

   இதன் காரணமாக தமிழகத்தை ஆட்சி புரிந்த காங்கிரஸ் பேரியக்கம் தனது அரசியல் பலத்தைத் துணை கொண்டு இந்தியை கட்டாயமாக திணிக்கும் நிலையில் ஈடுபட்டது.

     1937 இல் ராஜாஜி தலைமையில் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி சென்னை தியாகராய நகரில் உள்ள ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் ராஜாஜி " பள்ளிகளில் ஹிந்தியைக் கட்டாயப் பாடமாக்கப் போகிறேன்" என அறிவித்தார்.

    அரசாங்கம் இந்தியை இஷ்ட பாடம் என்று  உத்திரவிட்டதோடு, பள்ளிதோறும் இந்தி ஆசிரியர்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற மறைமுகமான உத்தரவையும் வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக தமிழக பள்ளிகளில் ஹிந்தி மொழி கட்டாயமாகத்  திணிக்கப்பட்டது.

ஹிந்தி எதிர்ப்பு போராட்டம்

தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.

முதல் கட்ட இந்தி எதிர்ப்புப் போராட்டம் 

       முதன் முதலில் இந்திய எதிர்ப்புக் கூட்டம் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில்  1937 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 இல் நடைபெற்றது. மறுநாள் ஆகஸ்ட் 28ஆம் தேதி திருவையாற்றில் மிகப்பெரிய ஹிந்தி எதிர்ப்பு ஊர்வலம் நடைபெற்றது இவ்விரு நிகழ்வுகளும் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு அடிப்படையாக அமைந்தது.

    1938 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி சென்னை மாகாண பள்ளிகளில் ஹிந்தியை கட்டாயப் பாடமாக அரசாங்கம் ஆணை பிறப்பித்தது.

   ராஜாஜியின் இந்த ஆணையை எதிர்த்து அவர் வீட்டின் முன்பு பல்லடம் பொன்னுசாமி என்கின்ற காங்கிரஸ்காரர் உண்ணாவிரதம் இருந்தார். அவர் கைது செய்யப்பட்டு ஆறு வாரம் கடுங்காவல் தண்டனையும் அடைந்தார். முதல் கட்ட இந்திய எதிர்ப்பு போராட்டத்தில் முதலில் கைதானவர் இவர் தான்.

     அதே ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி  பெண்கள் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டத்தில் உண்ணாமலை அம்மையார் தலைமையில் ஆறு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

    1939  இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைச்சென்ற  தாளமுத்து, நடராசன் ஆகிய இரு தமிழ் மறவர்களும் சிறைச்சாலையிலேயே மரணம் அடைந்தனர்.

    1939 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்புக் கூட்டத்தில் பேசிய அறிஞர் அண்ணா செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டு நான்கு மாதம் சிறை தண்டனை அடைந்தார். அதே ஆண்டு டிசம்பர் 8-ஆம் தேதி பெரியார் கைது செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டு சிறைத் தண்டனை அடைந்தார்.

    1939 இல் இரண்டாவது உலகப் போர் தொடங்கியது. அப்போரில் இங்கிலாந்தை ஆதரிக்க இயலாது என காங்கிரஸ் மகா சபை தீர்மானம் நிறைவேற்றியது. இதன் காரணமாக காங்கிரஸ் அமைச்சரவை பதவி விலகியது. முதலமைச்சர் ராஜாஜி பதவி துறந்தார். 1940 ஆண்டு பிப்ரவரி மாதம் ஹிந்தி கட்டாய பாடம் என்கின்ற தீர்மானத்தை அரசு ரத்து செய்தது.இதன் காரணமாக முதல் கட்ட இந்திய எதிர்ப்புப் போராட்டம் முடிவுக்கு வந்தது.

இரண்டாம் கட்ட ஹிந்தி எதிர்ப்பு போராட்டம்

   1965 ஆம் ஆண்டு தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் மிகவும் தீவிரம் அடைந்தது. ஜனவரி 26 குடியரசு தினத்தன்று நாடெங்கும் ஹிந்தி மொழியை கட்டாயப் பாடமாக அரசு அறிவிக்க இருந்த நிலையில், ஜனவரி 22 ஆம் நாள் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மாணவ அமைப்பினர் ஆலோசனை நடத்தினர். அதில் ரவிச்சந்திரன், இராமன் துரைப்பாண்டியன், வெற்றிவேல், துரைசாமி போன்றோர்கள் இணைந்து மாணவப் போராட்டக் குழுவினை அமைத்தனர்.

 ஜனவரி 23ஆம் நாள் மதுரையில் காளிமுத்து,காமராசர், ஜெயப்பிரகாசம், ராமசாமி,ராஜேந்திரன்,தனசேகரன், சுப்பிரமணியன் போன்றோர் தலைமையில் மாணவர் போராட்ட குழு அமைக்கப்பட்டது.

   அதேபோல கோயம்புத்தூரில் துரைக்கண்ணு தலைமையிலும், திருச்சியில் ரகுபதி தலைமையிலும் மாணவப் போராட்டக் குழுக்கள் அமைக்கப்பட்டன.

 மாணவர்களின் ஊர்வலம்

     1965  ஜனவரி 25ஆம் நாள் மதுரையில் காளிமுத்து காமராசு ஆகிய இரண்டு மாணவர் தலைவர்களும் அரசியல் அமைப்பின் 17 வது பிரிவினை தீயிட்டு கொளுத்தியதற்காக கைது செய்யப்பட்டனர்.பின்னர் நடந்த ஊர்வலத்தில் மாணவர்களை காங்கிரஸ் காரர்கள் தாக்கியதால் ஊர்வலம் போராட்டமாக மாறியது. தமிழகத்தின் பெருநகரங்கள் அனைத்திலும் கலவரமாக போராட்டம் மாறியது. மாணவர் தலைவர்கள் இந்தி நூலை தீ வைத்து கொளுத்தினர்.

    ஜனவரி 26 ஆம் நாள் சென்னையில் சிவலிங்கம் என்ற இளைஞர் இந்தி திணிப்பை எதிர்த்து தீக்குளித்தார். அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த போராட்டத்தில் அண்ணா, கருணாநிதி, அன்பழகன் போன்றோர் கைது செய்யப்பட்டார்கள். மேலும் 27 ஆம் தேதி இந்திய எதிர்ப்பை காட்டுவதற்காக அரங்கநாதன் என்னும் இளைஞர் தீக்குளித்து உயிர் விட்டார்.

    போராட்டத்தின் காரணமாக கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன. சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர் போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதன் காரணமாக ராஜேந்திரன் என்ற மாணவர் இறந்தார். பலர் காயமடைந்தனர். பலர் கைது செய்யப்பட்டனர்.

     திருச்சி கீரனூரில் முத்து என்ற இளைஞர் இந்திய எதிர்ப்பு காட்டுவதற்காக நஞ்சு உண்டு இறந்தார்.

   திருப்பூரில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது அதில் வெங்கடேசன் ராமசாமி என்ற இரண்டு காவல்துறை அதிகாரிகள் உயிரோடு தீ வைத்துக் கொளுத்தப்பட்டனர்.

   கோவை சத்தியமங்கலத்தில் முத்துவும், திருச்சி கே அய்யம்பாளையத்தில் வீரப்பனும் இந்திய எதிர்ப்பு போராட்டத்தின் காரணமாக தீக்குளித்து உயிரிட்டனர்.

    பொள்ளாச்சியில் நடந்த போராட்டத்தில் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் இறந்தனர். மதுரை கூடலூரில் போராட்டம் வன்முறையாக மாறியதால் இராமச்சந்திர சிங், தேவராசு ஆகிய காவலர்கள் உயிரோடு எரிக்கப்பட்டார்கள்.

   தமிழகத்தில் போராட்டம் தீவிரமடைந்து நிலைமை மோசமானதால் மத்திய அமைச்சர்களாக இருந்த சி. சுப்பிரமணியம்,அழகேசன் ஆகிய இருவரும் தங்கள் பதவியை ராஜினமாக செய்வதாக அறிவித்து பின்னர் ஐந்து நாட்களில் அந்த அறிவிப்பை திரும்பப் பெற்றுக் கொண்டனர்.

  மாணவர்களைப் போராட்டம் செய்யத் தூண்டியதாக கருணாநிதி கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.தஞ்சையில் சக்கரபாணி என்ற மாணவர் இந்தி திணிப்பை எதிர்த்து தீக்குளித்து உயிர் விட்டார்.

   மாணவர்களின் போராட்டத்தை அடக்குவதற்காக தமிழக அரசும் மத்திய அரசும் பலவிதமான அடக்குமுறைகளை மேற்கொண்டன.

    அரசு ஹிந்தி திணிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இதன் காரணமாக மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்து. 1965 மார்ச் 16ஆம் தேதி பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு தமிழகம் இயல்பு நிலைக்குத் திரும்பியது.

†††† நன்றி.... தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் ††††

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மின் நூல் - தமிழ் நூல்கள் அறிமுகம்

தமிழ் நூல்கள் அறிமுகம்  - தமிழ் இலக்கியங்கள் குறித்த அட்டவணை