ஐந்திணைகள்
சங்க கால மக்கள் இயற்கையோடு இணைந்த வாழ்வியல் முறைகளை அமைத்துக் கொண்டார்கள். அவர்கள் வாழ்ந்த இயற்கை சூழ்நிலைக்கு ஏற்ப நிலங்களைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்தாக வகுத்துக் கொண்டார்கள். காலத்தை பெரும்பொழுது, சிறுபொழுது என இரண்டாகப் பகுத்துக் கொண்டனர். இவ் ஐந்து நிலங்களில் காணப்படும் இயற்கைச் சூழல், உயிரியல் நிலைப்பாடுகள், பயன்பாட்டுப் பொருட்கள் இவற்றை அடிப்படையாகக் கொண்டு கருப்பொருட்களை வகுத்துக் கொண்டனர்.
குறிஞ்சி என்பது மலையும் மலை சார்ந்த இடமும் ஆகும். இங்கு வாழ்ந்த மக்கள் குறவர், குறத்தியர். இவர்களின் தொழில் தேனெடுத்தல். தெய்வம் முருகன். புணர்தலும், புணர்தல் நிமித்தமும் இவர்களின் உரிப்பொருளாகும். குறிஞ்சி நிலத்தின் பெரும் பொழுதாகக் கூதிர் காலம் மற்றும் முன்பனிக் காலத்தைக் கொள்வர். சிறு பொழுதாக யாமம் காணப்படுகிறது.
முல்லை என்பது காடும், காடு சார்ந்த இடமும் ஆகும். இங்கு வாழ்ந்த மக்கள் ஆயர், ஆட்சியர் என அழைக்கப்பட்டனர். இவர்களின் தொழில் ஆடு, மாடு மேய்த்தல், தெய்வம் திருமால். இருத்தலும், இருத்தல் நிமித்தமும் இவர்களின் உரிப்பொருளாகும். முல்லை நிலத்தின் பெரும்பொழுது கார்காலம், சிறுபொழுது மாலை ஆகும்.
மருதம் என்பது வயலும் வயல் சார்ந்த இடமும் ஆகும். இங்கு வாழ்ந்த மக்கள் உழவர், உழத்தியர். இவர்கள் உழவுத் தொழில் செய்து வந்தனர். தெய்வம் இந்திரன். ஊடலும், ஊடல் நிமித்தமும் இவர்களின் உரிப்பொருள். ஆறு பெரும் பொழுதுகளும் இந்நிலத்திற்கு உரியது. சிறுபொழுது வைகறை ஆகும்.
நெய்தல் என்பது கடலும், கடல் சார்ந்த இடமும் ஆகும். இங்கு வாழ்ந்த மக்கள் பரவர், பரத்தியர். தொழில் மீன் பிடித்தல். தெய்வம் வருணன். இரங்கலும் இரங்கல் நிமித்தமும் இவர்களின் உரிப்பொருள் ஆகும். ஆறு பெரும்பொழுதுகளும் இந்நிலத்திற்கு உரியது. ஏற்பாடு இவர்களின் சிறு பொழுதாகும்.
பாலை என்பது மணலும், மணல் சார்ந்த இடமும். இங்கு வாழ்ந்த மக்கள் எயினர்கள். இவர்கள் வழிப்பறி செய்வதை தொழிலாகக் கொண்டிருந்தனர். இவர்களின் தெய்வம் கொற்றவை. உரிப்பொருள் பிரிதலும், பிரிதல் நிமித்தமும் ஆகும். பாலை நிலத்திற்கு வேனில் மற்றும் பின் பனி பெரும்பொழுதுகள் ஆகும். நண்பகல் சிறுபொழுதாகும்.
மேற்கண்ட நிலையில் முதல், கரு, உரிப்பொருளின் அடிப்படையில் வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டு ஐந்து நிலத்தில் வாழ்ந்த மக்களும் தங்கள் வாழ்க்கை கூறுகளைக் களவு நிலை, நின்ற கற்பு வாழ்வினை 'அகம் 'என்றும், வீரம், ஈகைப் போன்ற சிறப்பு வாழ்வினை 'புறம்' என்றும் இரண்டாகப் பகுத்து வாழ்ந்தனர்.
----------------------
அக வாழ்வியல்
பண்டையத் தமிழர்கள் தங்களின் அகம் சார்ந்த வாழ்வியலைக் களவு, கற்பு என இரண்டு நிலைகளாக வகுத்தனர்.
திருமணத்திற்கு முன்பு தலைவனும் தலைவியும் சந்தித்து, காதல் கொண்டு ஒழுகுவது களவு ஒழுக்கம் எனப்பட்டது.
திருமணத்திற்கு பின்பு கணவனும் மனைவியும் இணைந்து நடத்தும் இல்லறச் சிறப்பு கற்பொழுக்கம் ஆகும்.
களவு, கற்பு ஆகிய இரண்டும் சில ஒழுக்க நிலைகளை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளன.
களவு ஒழுக்க நிலைகள்
களவு ஒழுக்கம் பின்வரும் நான்கு நிலைகளில் அமைகின்றது. அவை,
1. இயற்கைப் புணர்ச்சி,
2. இடந்தலைப்பாடு,
3.பாங்க்ற் கூட்டம்,
4. பாங்கியிற் கூட்டம்.
என்பனவாகும்.
1. இயற்கைப் புணர்ச்சி
தலைவனும் தலைவியும் விதி வயத்தால் சந்திக்க நேரும். சந்தித்த இருவரும் ஒருவருக்கு ஒருவர் குறிப்பறிந்து உள்ளப் புணர்ச்சிக் கொள்வார்கள். இது இயற்கைப் புணர்ச்சி எனப்படும்.
2. இடந்தலைப்பாடு
இயற்கைப் புணர்ச்சியில் முதல் நாள் தலைவியைச் சந்தித்த தலைவன், மறுநாளும் அவ்விடத்திற்குச் சென்று தலைவியைச் சந்திக்கலாம் எனக் கருதி அவ்விடத்திற்குச் செல்ல, தலைவியும் அதே எண்ணத்தோடு அங்கு வந்து இருவருக்கிடையே சந்திப்பு நிகழும் இது இடந்தலைப்பாடாகும்.
3. பாங்கற் கூட்டம்
பாங்கன் என்பவன் தோழன். இடந்தலைப்பாட்டிற்குப் பின் தலைவியைச் சந்திக்க முடியாத தலைவன், தோழரின் உதவியை நாடுவான். தோழனும் அவர்கள் காதலுக்கு துணை நிற்பான். இது பாங்கற் கூட்டமாகும்.
4. பாங்கியிற் கூட்டம்
பாங்கி என்பவள் தலைவியின் தோழி. தோழனின் உதவியால் தலைவியைச் சந்திக்க முடியாதபோது, தலைவன் தலைவியைச் சந்திக்க தலைவியின் தோழியின் உதவியை நாடுவான். இதற்கு பாங்கியிற் கூட்டம் என்று பெயர். இது,
1. பாங்கி மதி உடன்பாடு,
2. சேட்படை
3. பகற்குறி,
4. இரவுக்குறி,
5. வரைவு கடாதல்,
6. ஒருவழித் தணத்தல்,
7. அறத்தோடு நிற்றல்,
8. உடன்போக்கு,
போன்ற பல நிலைகளில் பாங்கியிற் கூட்டம் அமையும்.
1. பாங்கி மதி உடன்பாடு
தலைவன் தலைவி மீது கொண்ட காதலை தோழியிடம் கூறி அவள் உதவியை நாடி நிற்பான். இது பாங்கி மதி உடன்பாடு எனப்படும்.
2. சேட்படை
உதவி கேட்டு நிற்கும் தலைவனுக்கு உடன்படாமல் தோழி அவனை அவ்விடத்தை விட்டு நீங்குமாறு சொல்வது சேட்படை என்பதாகும்.
3. பகற்குறி
தோழியின் உதவியுடன் தலைவனும் தலைவியும் மீண்டும் மீண்டும் பகற்பொழுதில் ஓர் இடத்தில் சந்தித்து அன்புக் கொள்வது பகற்குறியாகும்.
4. இரவுக்குறி
இரவு நேரத்தில், இல்ல வளாகத்திற்குள் தலைவனும் தலைவியும் சந்தித்து மகிழ்வது இரவுக்குறியாகும்.
5. வரைவு கடாதல்
பகற்குறியிலும் இரவுக்குறியிலும் தலைவியைச் சந்தித்து மகிழ்ந்த தலைவன் திருமணத்தில் நாட்டமின்றி இருப்பான். அப்பொழுது தோழி தலைவியை திருமணம் செய்து கொள்ளும்படித் தலைவனை வற்புறுத்துவது வரைவு கடாதல் ஆகும்.
6.ஒருவழித் தணத்தல்
தலைவனும் தலைவியும் இரவுக்குறியிலும் பகல் குறியிலும் பலமுறை சந்தித்து அன்புக் கொண்ட நிகழ்வினை பலரும் அறிந்து பலவாறு பேசுவர். அது அலர் எனப்படும். அந்த அலர் அடங்குவதற்காக தலைவன் சிறிது காலம் தலைவியைச் சந்திக்க வருவதைத் தவிர்ப்பான். இது ஒருவழித் தணத்தல் எனப்படும்.
7. அறத்தோடு நிற்றல்,
அறத்தோடு நிற்றல் என்பது, தலைவன், தலைவியின் காதலை தலைவியின் பெற்றோருக்கு தெரிவிக்க முயல்வதாகும். தோழி செவிலி தாயிடமும், செவிலித்தாய் நற்றாயிடமும், நற்றாய் தந்தையிடமும் கூறுவதாக அறத்தோடு நிற்றல் அமையும். மேலும் அறத்தோடு நிற்றல் இரண்டு சூழ்நிலைகளில் நிகழும். தலைவி வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டு, உடல் மெலிந்து, வெறியாட்டு நிகழ்த்தும் போதும், அல்லது தலைவிக்கு வேறொருவருடன் திருமணம் நிகழ்த்த முயலும் போதும் அறத்தோடு நிற்றல் நிகழும்.
8. உடன்போக்கு
களவு வாழ்க்கை மேற்கொண்டிருந்த தலைவன் அலர் போன்ற காரணங்களாலும், தலைவியின் அறிவுறுத்தலாலும் தலைவியைத் தன்னுடன் அழைத்துச் செல்ல முற்படுவான். இதற்கு உடன் போக்கு என்று பெயர். இதற்குரிய ஏற்பாடுகளைத் தோழியே செய்வாள்.
மேற்கண்ட நிலைகளில் களவு ஒழுக்கங்கள் அமையும்.
------------------
கற்பொழுக்க நிலைகள்
கற்பு வாழ்க்கை என்பது பொதுநிலையில் திருமணத்திற்குப் பின்பு அமையும் கணவன் மனைவி ஆகியோரின் குடும்ப வாழ்க்கை ஆகும்.
கற்பு என்பதை, திருமணத்திற்குப் பின் ஏற்படும் மகிழ்ச்சி, ஊடல், கூடல், ஊடல் உணர்த்தும் பிரிவு முதலானவை அமைந்த நிலை என நற்கவிராச நம்பி, நம்பியகப் பொருளில் கூறுகிறார்.
இல்லற மகிழ்ச்சி
இல்லற வாழ்க்கையில் தலைவன் தலைவியின் சிறப்பான செயல்பாடுகளைக் கண்டு தலைவன் மகிழ்ச்சி கொள்வதோடு, தலைவனின் அன்பை கண்டு தலைவியும் மகிழ்ச்சி கொள்வாள். தலைவன் தலைவியின் சிறப்பான வாழ்வைக் கண்டு தோழியும் மகிழ்ச்சி கொள்வாள். தலைவியின் பொறுப்பான இல்லற வாழ்க்கையைப் பார்த்து செவிலி தாயும் மகிழ்ச்சிக் கொள்வாள்.
பிரிவின் வகைகள்
இல்லறத்தில் பிரிவு என்பதும் நிகழும் குறிப்பாக,
சில நேரங்களில் தலைவன் பரத்தையர் பால் பற்றுக்கொண்டு தலைவி விட்டுப் பிரிந்து செல்வான். இது பரத்தையர் பிரிவாகும்.
சில நேரங்களில் தலைவியை விட்டுத் தலைவன் கல்விக்காக பிரிந்து செல்வான் இது ஓதல் பிரிவு ஆகும்.
போர் செய்வதற்காகத் தலைவியை விட்டு தலைவன் பிரிந்து செல்வான் இது காவல் பிரிவு ஆகும்.
பக்கத்து நாட்டு மன்னனுக்கு தூது செல்லும் நிலையில் தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்து செல்வான் இது தூதுப் பிரிவாகும்.
நண்பனுக்காகத் தலைவன் தலைவியை விட்டு சில நேரம் பிரிந்து செல்வான் இது துணைவையின் பிரிவு ஆகும்.
இல்லறம் இனிது நடத்த பொருளீட்ட வேண்டி தலைவியை விட்டுத் தலைவன் பிரிந்து செல்வான் இது பொருள்வயின் பிரிவு ஆகும்.
இவ்வாறு கற்பியலில் இல்லற மகிழ்ச்சியும், பிரிவு துன்பமும் இருக்கும்.
***** இராஜாலி *****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக