எனது வலைப்பதிவு பட்டியல்

வியாழன், 18 ஆகஸ்ட், 2022

மணிமேகலை - பாத்திர மரபு கூறிய காதை


 முன்னுரை

          ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை கி.பி இரண்டாம் நூற்றாண்டில், சீத்தலைசாத்தனாரால் இயற்றப்பட்டதாகும். சிலப்பதிகாரத்தின்  தொடர்கதையாக அமையும் இக்காப்பியம் இரட்டைக் காப்பியங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. பௌத்த சமயக் கருத்துக்களைக் கூறும் இக்காப்பியம், முப்பது காதைகளையும் 4755 அடிகளையும் கொண்டதாகும். ‘மணிமேகலை துறவு’ எனவும் இக்காப்பியம் அழைக்கப்படுகிறது.

 பாத்திர மரபு கூறிய காதை

          மணிமேகலையில், பதினான்காவது காதையாக காணப்படுவது ‘பாத்திர மரபு கூறிய காதை’ ஆகும். இதில் அறவண அடிகள்; மணிமேகலை, மாதவி மற்றும்  சுதமதி  ஆகியோரிடம், ஆபுத்திரனுக்கு அமுதசுரபி கிடைத்த செய்தியையும், அமுதசுரபியின் தன்மையையும் கூறுவதாக இக்காதை அமைந்துள்ளது.

அறவண அடிகள் அமுதசுரபியின் தன்மையை கூறுதல்

தனக்கு முன்னால் அமர்ந்திருந்த மணிமேகலையை பார்த்து அறவண அடிகள், "பூங்கொடியை போன்ற அழகு பொருந்திய மணிமேகலையே கேட்பாயாக!" என ஆபுத்திரன் அமுதசுரபி பெற்ற செய்தியை பின்வருமாறு கூறினார்.

வழிப்போக்கர்கள் ஆபுத்திரன் இடம் உணவு வேண்டுதல்

மழை பெய்து கொண்டிருந்த ஒருநாள் இரவில் ஆபுத்திரன் தூங்கிக் கொண்டிருந்த சிந்தாதேவி ஆலயத்திற்குள் வந்த வழிப்போக்கர்கள், ஆபுத்திரனை எழுப்பி " வயிறு காய் பெரும் பசி மலைக்கும் "என தாங்கள் பசியால் வாடுவதைக் கூறினார்கள். அவர்களின் பசியைப் போக்க உணவு எதுவும் இல்லாத நிலையில் வருந்திய ஆபுத்திரன், சிந்தா தேவியின் முன் உள்ளம் உருகி வேண்டினான்.

சிந்தாதேவி அமுதசுரபியை கொடுத்தல்

          பிறர் துன்பம் கண்டு வருந்திய ஆபுத்திரன் முன்பு சிந்தாதேவி தோன்றி,

"நாடு வறம் கூறினும் இவ்   ஓடு வறம் கூறாது

 வாங்குநர் கைஅகம் வருத்துதல் அல்லது

 தான் தொலைவு இல்லாத் தகைமையது "

எனக்கூறி, தனது கையில் இருந்த அமுத சுரபியை ஆபுத்திரனிடம்  கொடுத்து மறைந்தது.

 சிந்தா தேவியைப் போற்றுதல்

          அமுத சுரபியை பெற்ற ஆபுத்திரன்,"சிந்தா தேவியே! அழகு பொருந்திய இக்கோயிலில் நந்தா விளக்காக விளங்குபவளே! புலவர்களின் நாவில் இசையாக இருப்பவளே! தேவர்களுக்குத் தலைவியாகவும் மண்ணில் உள்ளோருக்கு மூத்தவளாகவும்   இருந்து துன்பப்படுபவர்களின் துயரத்தை போக்குபவளே!" என தேவியை வணங்கி அப்பாத்திரத்தை கொண்டு அவர்களின் பசியைப் போக்கினான். வாங்குவோரின் கை வருந்தும் படியாக மன்னுயிர் அனைத்திற்கும் உணவளித்தான். பழுத்த மரத்தை நாடி பறவைகள் வருவதுபோல ஆபுத்திரனை நாடி வந்து பசியாறி சென்றனர் பலர். ஆபுத்திரனின் புகழ் இந்திரலோகம் வரை சென்றது.

ஆபுத்திரனை காண இந்திரன் வருதல்

          ஆபுத்திரனின் செயலைக் கேள்விப்பட்டு வியந்த இந்திரன் அதனை காண்பதற்காக,  மறையவன் போல கம்பு ஊன்றி தளர்ந்த நடையுடன் ஆபுத்திரன் முன்பு வந்து "உன் பெரும் தானத்து உறுபயன் கொள்க" எனக் கூறினான். அதனைக் கேட்ட ஆபுத்திரன்  "பசி நோயினால் வருந்தியவர்களுடைய பசியினை தீர்த்து அவர்களுடைய இனிய முகத்தை நான் காணும்படி செய்கின்ற எனது தெய்வத்தன்மை பொருந்திய பாத்திரம் ஒன்றே எனக்குப் போதும். வேறு ஒன்றும் எனக்கு வேண்டாம்" எனக்கூறி, இந்திரனை அவமதித்தான். இதனால் ஆத்திரமடைந்த இந்திரன், கோபப்பட்டு, ஆபுத்திரனின் செருக்கினை போக்க எண்ணி 'பசிப்பிணியால் வருந்துவோர் இல்லாத நிலையை உருவாக்க விரும்பி  மழையினை பெய்வித்து, வறுமையைப் போக்கி’ அனைவருக்கும் வளத்தை கொடுத்தான். இதன் காரணமாக பசியினால் வருந்துவோர் இல்லாத நிலை அவ்வூரில் ஏற்பட்டது. பாண்டியநாட்டில் பெருமழை பொழிந்து, வயல் வளம் பெருகியதால் மக்கள் பசியில் வருத்தம் தெரியாமல் வாழ்ந்தனர். உணவு வேண்டி யாரும் ஆபுத்திரன் இடம் செல்லும் நிலை ஏற்படவில்லை. எனவே, ஆபுத்திரன் அமுதசுரபியை கையில் எடுத்துக்கொண்டு, சிந்தாதேவியின் ஆலயத்தை விட்டு வெளியேறி  “ஊரூர்  தோறும் உண்போர் உண்டோ” என வினவ, அதுகேட்டு  செல்வத்தில் களித்த மக்கள் ‘யார் இவன்?’ என இகழ்ந்து பேசினர். இதனால் மனம் வருந்திய ஆபுத்திரன் அங்கிருந்து சென்றான்.

சாவக நாட்டை நோக்கி ஆபுத்திரன் செல்லுதல்

          உணவு வாங்குவதற்கு யாரும் இல்லாத நிலையை கண்டு வருந்திய ஆபுத்திரனை, கப்பலில் வந்து இறங்கிய வணிகர்கள் சிலர் கண்டு  வணங்கி,

 " சாவக நல் நாட்டு தன் பெயல் மறுத்தலின்

 உன் உயிர் மடிந்தது உரவோய் "

எனக் கூறினார்கள். அதனைக் கேட்ட ஆபுத்திரன், அமுத சுரபியை கையில் எடுத்துக்கொண்டு, சாவக நாட்டிற்கு செல்வது இறைவனின் சித்தம் என எண்ணி சாவகம் செல்லும் கப்பலில் ஏறிப் பயணித்தான். கப்பல் மணிபல்லவத்தீவில் அருகே செல்லும்போது, பெருங் காற்று வீசியதால் மணிபல்லவத்தீவில் ஒரு நாள் பயணிகள் அனைவரும் தங்கும் நிலை ஏற்பட்டது. மறுநாள், கப்பலில் இருந்து இறங்கியவர்கள் எல்லோரும் ஏறி விட்டார்கள் என எண்ணி மாலுமி கப்பலை ஓட்டிச் சென்றுவிட்டார். மனிதர்களில் யாரும் இல்லாத தீவில் தானும் அப்பாத்திரமும் தனித்து இருப்பதை எண்ணி வருந்தினான் ஆபுத்திரன்.

கோமுகிப் பொய்கையில் அமுதசுரபியை வீசுதல்

 மணிபல்லவத் தீவில் தனித்திருந்த ஆபுத்திரன்,

" மன் உயிர் ஓம்பும் இம் மா பெரும் பாத்திரம்

 என் உயிர் ஓம்புதல் யானோ பொறே என்

 தவம் தீர் மருங்கின் தனித் துயர் உழந்தேன்

 சுமந்து என் பாத்திரம்?"

என பாத்திரத்தை  தொழுது, எதிரே இருந்த கோமுகி என்னும் பொய்கையில்,

 " ஓர் ஆண்டு ஒருநாள் தோன்று"

எனக்கூறி வீசியது மட்டுமல்லாமல்,

" அருள் அறம் பூண்டு ஆங்கு ஆருயிர் ஓம்புநர்

 உளர் எனில் அவர் கைப் புகுவாய் "

என வேண்டியவாறு ஆபுத்திரன் உண்ணாநோன்பு இருந்தான்.

பசுவின் வயிற்றில் மீண்டும் பிறத்தல்

          அப்பொழுது, மணிபல்லவத்தீவுக்கு வந்த அறவணஅடிகள் ஆபுத்திரனிடம் 'என்ன நடந்தது?' என கேட்க, அவன் மேற்கண்ட செய்திகளைக் கூறிவிட்டு, கிழக்கில் தோன்றிய சூரியன் மேற்கே மறைவது போல மணிபல்லவத்தீவில் தன் உடம்பை விட்டுவிட்டு, உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தையும் காக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, சாவக நாட்டில் உள்ள ஒரு பசுவின் வயிற்றில் மீண்டும் பிறந்தான். என அறவண அடிகள் தானறிந்த செய்தியை மணிமேகலையிடம்  கூறினார்.

முடிவுரை

          மணிமேகலையில், பதினான்காவது காதையாக காணப்படும் ‘பாத்திர மரபு கூறிய காதையில்’, அறவணஅடிகள், மணிமேகலையிடம் ஆபுத்திரன் பெற்ற அமுதசுரபியின் தன்மையையும், பசித்தவர்களுக்கு உணவளித்த ஆபுத்திரனின் செயலையும் எடுத்துக்கூறுவதாக காணப்படுகிறது. என்பதனை இக்கட்டுரையின் மூலம் அறிய முடிகிறது.

                                                   ...........இராஜாலி............

யுனிக்கோட் - பயன்பாடு

அறிமுகம்    ஆங்கில மொழியைத் தவிர பிறமொழிகளிலும் பலரும் பல்வேறு குறியேற்றங்களையும் எழுத்துருக்களையும் பயன்படுத்தி வந்தனர். இந்த முறையில் ஒரே ...