நூல் குறிப்பு
எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான கலித்தொகை 'கற்றறிந்தார் ஏத்தும் கலி' என சிறப்பித்துக் கூறும் சிறப்பினை உடையது. அக கருத்துக்களை கூறும் 150 பாடல்களைக் கொண்டது. இதில் 11 அடி முதல் 80 அடி வரையிலான பாடல்கள் இடம் பெற்றுள்ளன. ஐந்து திணைகளுக்கும் உரிய பாடல்களை ஐந்து புலவர்கள் பாடியுள்ளார்கள். இந்நூலைத் தொகுத்தவர் நல்லந்துவனார் ஆவார்.
குறிஞ்சிக்கலி
கலித்தொகையின் குறிஞ்சிக்கலி பாடல்களைப் பாடியவர் கபிலர் ஆவார். குறிஞ்சிக் கலியில் 29 பாடல்கள் காணப்படுகின்றன.
அன்னாய்! இவனொருவன் செய்தது காண்
துறை விளக்கம்
தலைவன் உணவு வேளையில் தலைவியின் மனையில் புகுந்து 'உண்ணுநீர் வேட்டேன்' என வேண்ட தலைவி தலைவனுக்கு நீர் கொடுக்கிறாள். அந்த நிகழ்ச்சியினை தோழிக்கு கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
பாடல் விளக்கம்
தலைவி தோழியைப் பார்த்து "ஒளி வீசும் வளைகளை அணிந்தவளே! ஒரு செய்தி சொல்கிறேன், கேள். தெருவில் நாம் கட்டி விளையாடும் மணல் வீட்டைக் காலால் எற்றி அழித்து, தலையில் பொருந்திய பூமாலையை இழுத்து அறுத்து, சித்திரம் எழுதிய நமது பந்தைப் பறித்துக்கொண்டு ஓடி - இவ்வாறெல்லாம் நாம் வருந்தும்படி வன்மை செய்யும் அந்தச் சிறுபட்டி, அன்று ஒரு நாள் நானும் அன்னையும் வீட்டில் இருந்த பொழுது வந்து, வாயிலில் நின்று, “வீட்டினுள் இருப்போரே! நான் நீர்வேட்கை கொண்டேன்” என்று கூவினான். அன்னை பொற்செம்பில் நீர் ஊற்றி, "அவனுக்குக் கொடுத்துப் பருகச் செய்க” என்றாள். வந்தவன் அந்தப் பட்டிதான் என்று அறியாமல், தண்ணீர் கொண்டு சென்றேன். அவன் என்கையை, வளைகளோடு சேர்த்து இறுகப் பிடித்து இழுத்தான். யான் திடுக்குற்று அஞ்சி, “அம்மா! இவன் செய்த செயலைப் பார்” என்று கூவினேன். அன்னையும் அலறிக் கொண்டு ஓடிவர, யான் நடந்ததை மறைத்து, "தண்ணீர் பருகியபோது விக்கினான்” என்றேன். அன்னை அதை நம்பி, அவனை, "மெல்லவே பருகலாகாதா? என்று கோபித்துக் கொண்டு, அவனது தொண்டையைத் தடவி விட்டாள். (அவள் அறியாமல்) அந்தக் கள்ளன் கடைக்கண்ணாலேயே என்னைக் கொன்றுவிடுபவனைப் போலப் பார்த்தான். இத்தகைய அவனது குறும்பால் ஒரு மகிழ்ச்சி தரும் சந்திப்பு நடந்தது." எனக் கூறுவதாக குறிஞ்சிக் கலியில் கபிலர் பாடியுள்ளார்.
**** இராஜாலி ****