முன்னுரை
தமிழகத்தில் சித்தர்கள் பலர் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வாழ்ந்திருந்தாலும், கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமூலரே தமிழ் சித்தர் பரம்பரையின் முன்னவராக விளங்குகிறார். தமிழ் மரபில் பதினெண் சித்தர்கள் காணப்படுகின்றார்கள். அவர்களில் ஒருவர் கடுவெளிச் சித்தர் ஆவார். 'கடுவெளி என்பது வாக்கும் மனமும் கடந்த நிலையில் உள்ள பரவெளி'- இதனைப் பற்றி அதிகமாக இவர் பாடியுள்ளதால் கடுவெளிச் சித்தர் என அழைக்கப்பட்டார். இவர் பாடிய ஆனந்தக் களிப்பு 34 கண்ணிகளைக் கொண்டதாகும். இதில் மனிதர்கள் செய்யக்கூடாதவை எவை என்றும், செய்யக்கூடியவை எவை என்றும் விளக்கமாகக் கூறியுள்ளார்.
மனிதர்கள் செய்யக்கூடாதவை எவை?
கடுவெளிச் சித்தர் மனிதர்கள் செய்யக்கூடாதவை எவை எனப் பின் வருவனவற்றைக் கூறுகின்றார்.
கோபத்தைக் கட்டுப்படுத்து!
பாபம் செய்யாதே! மனிதனே உன்னுடைய வாழ்வில் யாருக்கும் சாபம் கொடுத்துவிடாதே; நடக்கும் ஒவ்வொரு செயலும் விதிப்படிதான் நடக்கும். விதியை நம்மால் எந்த வகையிலும் தடுத்து நிறுத்திவிட முடியுமா?. எமன் வந்து நம்மை எந்த நேரத்தில் கொண்டு செல்வான் என்று தெரியாது. எனவே கோபப்பட்டு பிறருக்கு சாபம் கொடுத்து பாவத்திற்கு மேல் பாவம் செய்யக்கூடாது எனக் கூறுகிறார்.
கோபத்தைக் கட்டுப்படுத்து!
பாபம் செய்யாதே! மனிதனே உன்னுடைய வாழ்வில் யாருக்கும் சாபம் கொடுத்துவிடாதே; நடக்கும் ஒவ்வொரு செயலும் விதிப்படிதான் நடக்கும். விதியை நம்மால் எந்த வகையிலும் தடுத்து நிறுத்திவிட முடியுமா?. எமன் வந்து நம்மை எந்த நேரத்தில் கொண்டு செல்வான் என்று தெரியாது. எனவே கோபப்பட்டு பிறருக்கு சாபம் கொடுத்து பாவத்திற்கு மேல் பாவம் செய்யக்கூடாது எனக் கூறுகிறார்.
சூதுசெய்யாதே!
சூது என்பது தன்னையும் அழித்துப் பிறரையும் அழிப்பதாகும். எனவே சூது என்ற வஞ்சகச் செயலை நீ செய்யாதே! அப்படி நீ சூது செய்தால் அது உன்னை மட்டுமல்ல உன்னைச் சுற்றியுள்ள சுற்றத்தாரையும் முழுமையாக நாசப்படுத்திவிடும். இதனை,
"சொல்லருஞ் சூதுபொய் மோசம் - செய்தால்சுற்றத்தை முற்றாய்த் துடைத்திடும் நாசம்
என்று பாடியுள்ளார்.
நல்லவர்களைத் தள்ளாதே!
உன்னோடு கூடவே இருக்கும் நல்லவர்களையெல்லாம் உன்னைவிட்டு ஒதுக்கித் தள்ளாதே! பொல்லாங்கு ஒன்றும் கொள்ளாதே. கெட்ட நடத்தையாகிய தீமையைத் தரக்கூடிய பொய்மை மொழி பேசி கோள்கள் பொருந்துமாறு நீ நடந்து கொள்ளாதே என்றும் கடுவெளிச்சித்தர் அறிவுரை கூறுகிறார்.
பெண்ணாசை கொள்ளாதே!
நீ பிறரிடத்தில் எதையும் யாசித்துப் பெற வேண்டும் என்று நினைக்காதே! மிகவும் அழகாக பெண்கள் இருக்கின்றார்கள் என்று பெண்கள்மீது ஆசைகொண்டு மகிழ்ந்து திரியாதே! இத்தகைய சிற்றின்பங்கள் உன்னை வாழ வைக்காது! என்பதை,
பிச்சை யென்றொன்றும் கேளாதே - எழில்பெண்ணாசை கொண்டு பெருக்க மாளாதே!
என அறிவுறுத்துகிறார்.
திட்டியவரைக்கூடத் திருப்பித் திட்டாதே!
உன்னைத் தவறாக பேசிய வரை கூட, நீ தவறாகப் பேசாதே! உலகத்தில் உள்ள அனைவரும் பொய் பேசி திரிந்தாலும் நீ பொய் பேசாதே! கொடிய பாவ வினைகளைச் செய்யாதே! பறவைகள் மீது கல்லெறியாதே! என்பதை,
வைதோரைக் கூட வையாதே! - இந்தவையம் முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே!
எனக் கூறுகிறார்.
கஞ்சாப் புகை பிடியாதே!
உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் கஞ்சாப் புகையிலையினைப் பிடிக்காதே! வெறியூட்டும் மனிதனை மயக்கும் கள்ளையும் குடிக்காதே! யாருக்கும் கிடைக்காத பெரும் பேறாகக் கிடைத்துள்ள இந்த உயிரை வீணாக மாய்த்துக் கொள்ளாதே! பக்தியில்லாத அஞ்ஞானத்தையுடைய நூல்களைப் படிக்காதே! என அறிவுறுத்துகிறார்.
கள்ளவேடம் புனையாதே!
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் கள்ளவேடம் புனைந்து திரியாதே! வெளியே பல தவறுகளைச் செய்துவிட்டு வெளிவேசத்தால் போல் நடிக்காதே! நீ செய்த பாவத்தைப் போக்க கங்கையிலே உன்னுடைய உடம்பை நனைத்துத் திரியாதே! பிறர் பொருளை அபகரிக்க நினைக்காதே! பிறரிடம் நட்பு பாராட்டி இருந்துவிட்டு அந்த நட்புக்குக் களங்கம் ஏற்படும் வகையில் பிரிந்து செல்ல எண்ணாதே எனக் கூறுகிறார்.
மேலும் செய்யக்கூடாதவை...
1. சிவமன்று வேறு வேண்டாதே!
2. யாருக்கும் தீங்கான சண்டையைச் சிறக்கத் தூண்டாதே!
3. தவநிலை விட்டுத் தாண்டாதே!
4. நல்ல சன்மார்க்க மில்லாத நூலை வேண்டாதே!
5. தேவையற்ற சடங்குமுறைகளைச் செய்யாதே!
6. உன்னைப் புகழ்ந்து பலரிடம் கூற வேண்டும் என்று எண்ணாதே!
7. பிறர் வெறுக்கும்படியான தாழ்ந்த நிலையை நீ உருவாக்காதே!
8. மெய்யான குருவின் சொல் தட்டாதே!
9. நன்மை மேன்மேலும் செய்வதை நிறுத்தாதே!
10.போலியான வாழ்க்கை வாழாதே!
11. நல்ல நல்ல அறிவை பொய்யான வழியில் செலுத்தாதே!
இவ்வாறு, கடுவெளிச் சித்தர் ஒரு மனிதனுக்குத் தீங்கு தருபவை எவை எனப் பட்டியலிட்டுக் கூறியுள்ளார். அந்த வகைத் தீங்குகளினால் ஏற்படும் தீமை பற்றியும் எச்சரித்துள்ளார்.
மனிதன் செய்யக்கூடியவை எவை?
உலக வாழ்க்கையைப் பாடியவர் கடுவெளிச்சித்தர். அவர்தம் ஆனந்தக் களிப்புப் பகுதியில், மனிதன் எவையெல்லாம் செய்ய வேண்டும் என்பதை பின் வருமாறு கூறுகிறார்.
நல்லவழிதணை நாடு!
மனிதனாகப் பிறந்தவன் தனக்கென ஒரு நல்ல வழியைப் பின்பற்ற வேண்டும். அது பிறருக்குத் தீங்கு செய்வதாக இருக்கக்கூடாது. எல்லா நாளும் பரமன் ஒருவனையே விரும்பித் தேட வேண்டும். என்பதை,
நல்ல வழிதனை நாடு - எந்தநாளும் பரமனை நத்தியே தேடு
எனக் கூறுகிறார். மேலும், வல்லவர்களாகிய நல்லவர்கள் கூட்டத்திலேயே சேர வேண்டும். தீயவர்ளோடு சேருவதை விடுக்க வேண்டும். அள்ளி அருளைத் தருகின்ற வள்ளலாகிய பரமனை மட்டுமே நெஞ்சில் நிறுத்தி வாழ்த்திக் கொண்டாட வேண்டும்" என்று கடுவெளிச் சித்தர் அறிவுறுத்துகிறார்.
வேதவிதிப்படி நில்லு!
வேதம் என்ன சொல்கின்றதோ அந்த விதிகளை நன்கு அறிந்து அவற்றையே ஏற்றுக்கொள்ள வேண்டும். நல்லவர்கள் நன்மை புரிபவர்கள் பின்பற்றுகின்ற வழியையே நீயும் வேண்டிச் சென்று பின்பற்ற வேண்டும். மனித குலத்திற்கு நன்மை செய்கின்ற சாதகமான நிலைமையை மட்டுமே நீயும் பின்பற்றி அதனையே பிறரையும் பின்பற்றும்படி சொல்லு எனக் கூறுகிறார.
மெய்ஞான மார்க்கத்தைக் கூறு!
நீ உண்மையான தவஅறிவு என்ன என்பதைப் புரிந்து தெரிந்து கொள். அந்தத் தவத்தின் ஞான அறிவைப் பெற்று அதன் வழியிலே செல்வதற்கு முயற்சிசெய். இந்த உலகில் வேதாந்த பிரமம் என்கிற இந்தப் பிரபஞ்சத்தின் வெளியாகக் கண்டு அந்த வெட்ட வெளியைத் தேடி அறிந்துகொள். அறிவற்ற அஞ்ஞான மார்க்கத்தை நீ அறவே விரட்டி ஒழித்துவிடு. அதுவே உனக்கும் உன்னைச் சார்ந்தவர்கள் அனைவருக்கும் ஆனந்த வழியாகும். அந்த மெய்ஞான மார்க்கத்தை அடையும் வழியை உன்னைச் சார்ந்தவர்களுக்கும் கூறு" எனக் கூறுகிறார்.
சாதியாவும் ஒன்றே எனப் போதி!
இவ்வுலகத்தில் சாதி என்பது கிடையாது. அனைவரும் ஒன்றே! அனைவருக்கும் சமமானதே நீதி என்று உணர்ந்து கொள்ள வேண்டும் எனக் கூறுவதோடு, நல்ல நீதிகள், நல்ல செயல்கள், நற்குணங்கள் எந்த வகை உருவில் இருந்தாலும் அவற்றை நீ நன்கு அறிந்து கற்று, அவற்றின் வழி நடந்து, பிறருக்கும் எடுத்துக் கூற வேண்டும் எனக் கூறுகிறார்.
மேலும் செய்ய வேண்டியவை சில...
1. நல்ல புத்தி விசுவாசம் வைக்க வேண்டும்.
2.உள்ளத்தில் எழும் நான்கு வகையான பகையினை நீக்கிவிட்டால் நாட்டை ஆளலாம்.
3. ஐம்புலங்களால் வரும் கள்ளத்தனத்தை எரித்துவிட்டால் சொர்க்கம் அடையலாம்.
4. அன்பு மலர்தூவி ஆனந்த பரம்பொருளின் திருவடிகளை வணங்கினால் உடலும் உயிரும் மகிழ்வடைய நல்ல இன்பம் கிடைக்கும்.
5. அடியவர்களைத் துதித்தால், ஏழைகளுக்கு இறங்கினால் அருளுவான் ஈசன்.
என ஒவ்வொரு மனிதனும் செய்ய வேண்டிய நற்செயல்கள் எவை என்பதை பற்றி கடுவெளிச் சித்தர் கூறியுள்ளார்.
முடிவுரை
மனித வாழ்க்கை நிலையற்றது. எப்போது வேண்டுமானாலும் எமன் நம்மை எடுத்துக் கொள்வான். எனவே இவ்வுலகியலின் உண்மை உணர்ந்து நல்லநெறிப்படி மனிதன் வாழ வேண்டும் என்றும் அப்படிப்பட்ட இந்த உலக வாழ்க்கையில் எவற்றையெல்லாம் மனிதன் விட்டொழிக்க வேண்டும், எவற்றையெல்லாம் மனிதன் பின்பற்ற வேண்டும் என்பதை கடுவெளிச்சித்தர் வலியுறுத்தியுள்ளார்.
**** இராஜாலி ****