எனது வலைப்பதிவு பட்டியல்

வெள்ளி, 23 பிப்ரவரி, 2024

ஜல்லிக்கட்டு காளை மல்லுக்கட்டும் காளையர்

கலித்தொகையில் ஏறுதழுவுதல்...

        சங்க காலத்தில் ஏறுதழுவுதல் என்பது ஆண்மகனின் வீரத்தை வெளிப்படுத்தும் வீர விளையாட்டாகக் கருதப்பட்டது. ஆண்களின் வீரத்தை விரும்பிய பெண்கள் தங்களோடு வளர்ந்த காளையை அடக்கும் வீரனையே கரம் பிடிப்பதாக உறுதியேற்று இருந்து, அவ் வீரன் வந்து காளையை  அடக்கி கைத்தலம் பற்றும் நிகழ்வு சங்க கால மக்களின் வாழ்வியலில் காணப்பட்டுள்ளது என்பதற்கு கலித்தொகை பாடல் 102 சான்றாக அமைகிறது.

     கலித்தொகையில், முல்லைக் கலி பாடல்களைப் பாடியவர் சோழன் நல்லுருத்திரன் என்ற மன்னர் ஆவார். அவர் சங்க கால தலைவியை தலைவன் ஏறு தழுவி மணமுடித்த செய்தியை பின்வருமாறு காட்சிப்படுத்துகிறார்.

     மழை பொழிந்து ஓய்ந்த அழகிய கார்கால  மாலைப் பொழுதில் தலைவன் தோழனோடு இயற்கை காட்சிகளை கண்ணுற்றவனாக அக்காட்டுப் பாதை வழியாக வந்து கொண்டிருக்கிறான். அவ்விடத்தில் துள்ளி விளையாடும் மான்களைப் போல தலைவி தன் தோழிகளோடு சேர்ந்து பிடவம், தளவம், தோன்றி, கொன்றை போன்ற பல வகையான மலர்களைப் பறித்து அவற்றை மாலையாகத் தொடுத்து கழுத்திலும், தலையிலும் அணிந்து மகிழ்ச்சி ததும்ப, தன் தோழிகளோடு விளையாடிக் கொண்டிருக்கிறாள். துள்ளி விளையாடும் தலைவியின் அழகில் மயங்கிய தலைவன் தோழனைப் பார்த்து,

"இவள் யார் உடம்போடு என் உயிர் புக்கவள்"

எனக் கேட்கிறான். தலைவன் காட்டிய தலைவியைப் பார்த்த தோழன், 'ஓஒ.. இவளா? தான் வளர்க்கும் காளையை  யார் அடக்குகிறார்களோ அவரே, என் மெய் தீண்ட  தகுதியானவர்கள். என்ற உறுதியோடு இருப்பவள்' எனக் கூறுகிறான். எத்தனைக் கேட்டு புன்முறுவல் செய்த தலைவன்,  " உடனே சென்று, அவள் சுற்றத்தாரை கண்டு, 'ஏறு தழுவும் விழாவிற்குப் பறை அறைக!' மேலும், திருமண நிகழ்வுக்கு ஆயத்தம் செய்ய சொல்" எனத் தோழனைப் பார்த்துக் கூறினான்.

  தலைவியின் பெற்றோரிடம் தலைவனின் கருத்தைக் கூறினான் தோழன். தலைவியின் பெற்றோர்களும், சுற்றத்தாரும் இணைந்து ஏறுதழுவதற்கு  தேவையான ஏற்பாடுகளை செய்தார்கள். அதன்படி, ஏறுதழுவும் இடத்தில்  பரண் அமைக்கப்பட்டது. ஏறு தழுவுதல் தொடங்கியது. தலைவி தனது சுற்றத்தாருடன் அதில் அமர்ந்து ஏறு தழுவுதலைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சீறிவரும் காளையினை காளையர்கள் பலர் எதிர்கொண்டு அடக்க முயன்றனர். அப்பொழுது,

எழுந்தது துகள்; ஏற்றனர் மார்பு

கவிழ்ந்தன மருப்பு; கலங்கினர் பலர்

அவர்களுள் தலைவன் மலர் மாலை அணிந்த மார்புடன் காளையின் முன் தோன்றி, சீறி வரும் காளையின் இமிலை  பிடித்து வளைத்து காளையினை அடக்கினான்.  இதனைப் பார்த்த தலைவியின் சுற்றத்தார் மகிழ்ந்து அதிசயத்து, " நேற்று நடந்த ஏறுதழுவுதலில் இந்தக் காளை ஒரு வீரனின் மார்பை குத்திப் பிளந்தது. அதனைத் தெரிந்திருந்தும் இக்காளையை அடக்கிய  இவனே உண்மையான வீரன்". என வீரனின் செயலை பாராட்டிக் கொண்டிருந்தார்கள். அதனைக் கண்டு,கேட்ட தலைவி நாணம் கலந்த புன்னகை  புரிந்தாள். தலைவனின் கண்ணில் நிறைந்தாள் தலைவி. அங்கு திருமண விழாவுக்கான  தண்ணுமை முரசு முழங்கியது.

     என ஏறு தழுவி தலைவியை தலைவன் அடைந்த செய்தியினை கலித்தொகையில்  சோழன் நல்லூருத்திரன் காட்சிப்படுத்தியுள்ளார்.

!!!! இராஜாலி!!!!


யுனிக்கோட் - பயன்பாடு

அறிமுகம்    ஆங்கில மொழியைத் தவிர பிறமொழிகளிலும் பலரும் பல்வேறு குறியேற்றங்களையும் எழுத்துருக்களையும் பயன்படுத்தி வந்தனர். இந்த முறையில் ஒரே ...