எனது வலைப்பதிவு பட்டியல்

ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

பத்துப்பாட்டு நூல்கள்

முன்னுரை

   சங்க இலக்கியங்களில் ஒரு பிரிவான பத்துப்பாட்டு, 10 தனி பாடல்களைக் கொண்டதாகும். பத்து புலவர்களால் பாடப்பட்ட நூல் தொகுப்பு. பண்டைய தமிழர்களின் வாழ்வியல் நெறியையும் அக, புற ஒழுக்கங்களை எடுத்துக் கூறுவதாக காணப்படுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பத்துப்பாட்டு இலக்கியங்களில்  சிறப்புகளைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பத்துப்பாட்டு நூல்கள்


      பத்துப்பாட்டு நூல்கள் எவை, என்பதைப் பற்றி பழம்பாடல் ஒன்று கூறும் போது,

        முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
        பெருகு வளமதுரைக் காஞ்சி - மருவினிய
        கோலநெடு நல் வாடை கோல் குறிஞ்சி பட்டினப்
        பாலை கடாத்தொடும் பத்து - எனக் குறிப்பிடுகிறது.

பத்துப்பாட்டில் ஆற்றுப்படை வகையை சார்ந்த இலக்கியங்கள் ஐந்து காணப்படுகின்றன. மேலும், அகம் சார்ந்த இலக்கியங்கள் மூன்றும், புறம் சார்ந்த இலக்கியம் ஒன்றும், அகப்புறம் சார்ந்த இலக்கியம்கள் ஒன்று என ஆக பத்து இலக்கியங்கள் இத்தொகுதியில் காணப்படுகின்றன.

பத்துப்பாட்டில் காணப்படும் ஆற்றுப்படை நூல்கள்.

       ஆற்றுப்படுத்துதல் என்பது 'வழிகாட்டுதல்' ஆகும். பரிசு பெற்று வரும் பாணன் அல்லது கூத்தன் தன் எதிரே வரும் இன்னொரு ஏழை பாணன் அல்லது கூத்தனை பார்த்து தனக்கு பரிசளித்த மன்னரின் சிறப்புகளை எடுத்துக் கூறி, அவரிடம் சென்று பரிசுகளை பெற்றுக் கொள்ளும் படி வழிகாட்டுவதாக அமைவது. ஆற்றுப்படை இலக்கியம் ஆகும். அவ்வகையில் பத்துப்பாட்டில்,

  • திருமுருகாற்றுப்படை,
  • பொருநராற்றுப்படை
  • சிறுபாணாற்றுப்படை
  • பெரும்பாணாற்றுப்படை
  • கூத்தராற்றுப்படை என்னும் மலைபடுகடாம்.

ஆகிய ஐந்து இலக்கியங்களும் ஆற்றுப்படை வகையை சார்ந்தவை ஆகும்.

திருமுருகாற்றுப்படை

    நக்கீரர் என்னும் புலவர் பாடியது திருமுருகாற்றுப்படை. இந்நூல், 317அடிகளைக் கொண்டது. இதனை 'முருகு' என்றும் 'புலவராற்றுப்படை' என்றும் கூறுவர். முருகப்பெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு. அவனின் அருள் பெற்ற அடியவர் ஒருவர், தன் எதிரே வரும் இன்னொரு அடியவரை பார்த்து முருகப்பெருமானின். அறுபடை வீடுகளில் சிறப்புகளையும், முருகப்பெருமானின் பெருமைகளையும், எடுத்துக் கூறி அவரிடம் ஆற்றுப்படுத்துவதாக. அமைந்தது திருமுருகாற்றுப்படை ஆகும். குறிப்பாக, திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளியுள்ள முருகனின் தோற்றப் பொலிவை சிறப்பித்து கூறுவதோடு, திருச்செந்தூரில் இருக்கும் முருகப்பெருமானின் ஆறு முகங்களையும் 12 கைகளையும் சிறப்பித்து கூறுகிறது. மேலும், திருவாவினன்குடி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்ச்சோலை போன்ற அறுபடை வீடுகளில் உள்ள முருகப்பெருமானின் சிறப்புகளை எடுத்துக் கூறுவதாக இந்நூல் காணப்படுகிறது.

பொருநராற்றுப்படை

 கரிகால் பெருவளத்தான் சிறப்புகளை, முடத்தாமக்கண்ணியார் என்னும் புலவர் பாடுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. குறிப்பாக, கரிகால் பெருவளத்தான் இடம் பரிசில் பெற்று வரும் பொருநர் ஒருவன் தன் எதிரே வரும் இன்னொரு பொருநரை, கரிகால் பெருவளத்தானிடம் ஆற்றுப்படுத்துவதாக, இந்நூல் காணப்படுகிறது. 384 அடிகளைக் கொண்ட இந்நூல், கரிகாலனின் சிறப்பை கூறுவதோடு. பொன்னி நதியின் சிறப்பையும். வெண்ணிப் பறந்தலையில் நடைபெற்ற போரையும் கூறுவதாகக் காணப்படுகிறது.

சிறுபாணாற்றுப்படை

  ஓய்மானாட்டு நல்லியக்கோடன் என்னும் மன்னனின் சிறப்புகளை. இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது, சிறுபானாற்றுப்படை ஆகும் 269 அடிகளைக் கொண்ட, ஆசிரியப்பாவால் அமைந்த இந்நூல், சிறுபாணன் ஒருவன் நல்லியக்கோடன் என்னும் மன்னனிடம் சென்று பரிசு பெற்று வரும் செய்தியையும், தன் எதிரே வரும் இன்னொரு பாணனை மன்னன் பால் ஆற்றுப் படுத்துவதாகவும் இந்நூல் காணப்படுகிறது.

பெரும்பாணாற்றுப்படை

  500 அடிகளைக் கொண்ட இந்நூல், தொண்டைமான் இளந்திரையன் என்னும் மன்னனின் சிறப்புகளை, அவரிடம் பரிசு பெற்றுத் திரும்பும் பெரும்பாணன் ஒருவன், மற்றொரு பெரும்பாணனை அம்மன்னனிடம் ஆற்றுப்படுத்துவதாக,  உருத்திரகண்ணனார் என்னும் புலவர் பாடியுள்ளார். யாழைப் பற்றிய வர்ணனை, ஐவகை நிலங்களில் வாழும் மக்களின் ஒழுக்கங்கள், தொண்டைமான் இளந்திரையனின் கொடைத்திறன், ஈகை பண்பு, வீரம் போன்றவற்றைக் கூறுவதாக இந்நூல் காணப்படுகிறது.

கூத்தராற்றுப்படை என்னும் மலைபடுகடாம்

   ஆற்றுப்படை நூல்களில் மிகப்பெரியதாக காணப்படும் இந்நூல் 583 அடிகளைக் கொண்டது. பரிசு பெற்றுத் திரும்பும் கூத்தன் ஒருவன், தன் எதிரே வரும் இன்னொரு கூத்தனை தனக்கு பரிசளித்த மன்னனிடம்  ஆற்றுப்படுத்துவதாக இந்நூல் காணப்படுகிறது. குறிப்பாக, நன்னன்சேய்நன்னன் என்னும் மன்னனிடம் பரிசுப் பெற்று திரும்பும் கூத்தன், தன் எதிர்வரும் கூத்தனிடம் மன்னனுடைய சிறப்புகளையும் அவனுடைய பண்புகளையும், வீரத்தையும் கூறுவதாக பெருங்கௌசிகனார் என்னும் புலவர்  பாடியுள்ளார். குறிப்பாக, நன்னன் நாட்டிற்குச் செல்லும் வழியில் தன்மை. நாட்டின் பெருமை மழைவளம், சோலை அழகு போன்றவையும், நவிர மலையின் சிறப்பு, சேயாறு போன்றவற்றின் வளம் ஆகியவற்றை கூறுவதாக இந்நூல் காணப்படுகிறது.

பத்துப்பாட்டில் அகம் சார்ந்த நூல்கள்

  பத்துப்பாட்டில் அகக்கருத்துக்களைக் கூறும் நூல்களாக முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை  ஆகிய மூன்று நூல்களும் காணப்படுகின்றன.

முல்லைப்பாட்டு

  பத்துப்பாட்டு நூல்களிலேயே, மிகவும் சிறிய நூலாக காணப்படுவது முல்லைப்பாட்டு ஆகும். இதில் 103 அடிகளில் காணப்படுகின்றன. ஆசிரியப்பாவால் ஆன இந்நூலைப் பாடியவர் நப்பூதனார். முல்லைத் திணைக்குரிய, உரிப்பொருளை அடிப்படையாகக் கொண்டு, பாடப்பட்டதாக்கும். போருக்குச் சென்ற தலைவன், கார் காலம் வந்த பின்பும் திரும்பாததை கண்டு வருந்திய தலைவியின் துயரத்தையும், போர்க்களத்தில் தலைவன், படைகளை ஆயத்தம் செய்த நிலையையும், பாசறையில் இருந்து சிந்தித்து நிலையையும் கூறுவதாக இந்நூல் காணப்படுகிறது.

குறிஞ்சிப்பாட்டு

  கபிலரால் பாடப்பட்ட குறிஞ்சிப்பாட்டு, 261 அடிகளைக் கொண்டது. ஆரிய மன்னன் 'பிரகதத்தன்' என்பவனுக்கு தமிழ் மொழியின் சிறப்புகளைக் கூறுவதற்காக, இந்நூல், பாடப்பட்டது. இந்நூலை, 'பெருங்குறிஞ்சி' என நச்சினார்கினியார் பாராட்டுகிறார். வரையாது வந்து ஒழுகும் தலைமகனின் வரவு ஒருநாள் தடைபட்டது. அது, தலைவிக்கு வருத்தத்தை கொடுத்தது. இது கண்ட செவிலி துன்புற்றார். இருவருக்குமிடையில் தோழி அறத்தொடு நின்றாள். தலைவி தோழிகளோடு புனலாட சென்று, பூக்களைக் கொய்து அவற்றை வைத்து விளையாடுகிறாள். குறிப்பாக 99 வகையான மலர்களை இந்நூல் சிறப்பித்துக் கூறுகிறது.

பட்டினப்பாலை

    301 அடிகளைக் கொண்ட பட்டிணப்பாலை. 'வஞ்சி நெடும்பாட்டு' எனவும் வழங்கப்படுகிறது. கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்னும் புலவர், சோழன் கரிகால் பெருவளத்தான் சிறப்புகளை பாடுவதாக இந்நூல் காணப்படுகிறது. காவிரி கடலோடு கவக்கும் காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பையும், கரிகால் பெருவளத்தான் பெருமையையும் கூறுவதோடு, காவிரிபூம்பட்டினம் கடற்கரையில் ஏற்றுமதி, இறக்குமதி ஆகும் பொருள்களைப் பற்றிய செய்தியும் இந்நூலில் விரிவாக பேசப்படுகிறது.

பத்துப்பாட்டில் புறம் சார்ந்த நூல்

 பத்துப்பாட்டில் புறம் சார்ந்த நூலாக மதுரைக்காஞ்சி விளங்குகிறது.

மதுரைக்காஞ்சி

   பத்துப்பாட்டில் மிகவும் பெரியதாக காணப்படும் மதுரைக்காஞ்சி 782 அடிகளைக் கொண்டது. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனின் சிறப்புகளையும், அவருடைய வீரத்தையும், கொடைப்பண்பையும் மாங்குடி மருதனார் என்னும் புலவர்  பாடியுள்ளார்.  இதனை 'பெருகு வளமதுரைக் காஞ்சி' என புகழ்வர். இதற்கு. 'கூடற்றமிழ்' என்ற பெயரும் உண்டு. மதுரை மாநகரத்தின் சிறப்பையும், அல்லங்காடி, நாளங்காடி என்ற வணிக ஸ்தலங்களின் பெருமையும் கூறுவதாக இந்நூல் காணப்படுகிறது. மேலும், வைகை ஆற்றில் சிறப்பு இந்நூலில் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது.

பத்துப்பாட்டில் அகம் புறம் சார்ந்த நூல்கள்

  பத்துப்பாட்டில் அகம் புறம் சார்ந்த நூலாக நெடுநல்வாடை காணப்படுகிறது.

நெடுநல்வாடை

 தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை நக்கீரர் பாடியது நெடுநல்வாடை. 188 அடிகளைக் கொண்ட இந்நூல், தலைவனைப் பிரிந்து வருந்தும் தலைவிக்கு வாடைக்காற்று துன்பத்தை கொடுத்த செய்தியையும், தலைவனாகிய பாண்டியன் நெடுஞ்செழியன் போர்க்களத்தில் மேற்கொண்ட உத்திகளைப் பற்றி  கூறுவதாக இந்நூல் காணப்படுகிறது.

முடிவுரை

 பத்துப்பாட்டு நூல்களில், பத்து தனிப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இவை சங்க கால மக்களின் வாழ்வியல் கூறுகளையும், பண்பாட்டுப் பழக்க வழக்கங்களையும்  அக்கால மன்னர்களின் ஈகை மற்றும் வீரத்தையும் கூறுவதாக காணப்படுகின்றன.

***** இராஜாலி*****

குறுந்தொகை - நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று

நூல் குறிப்பு

    'நல்ல குறுந்தொகை' என சிறப்பித்துக் கூறப்படும் குறுந்தொகை எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. இந்நூலில், ஐந்திணைகளுக்கும் உரிய 400 பாடல்கள் காணப்படுகின்றன. 4 முதல் 8 அடி வரையிலான பாடல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இந்நூலை தொகுத்தவர் பூரிக்கோ என்பவர் ஆவார். தொகுப்பித்தவர் யாரென தெரியாது. 

நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று


திணை – குறிஞ்சி

பாடியவர் – தேவகுலத்தார்

துறை - தலைமகன் சிறைப்புறமாக, அவன் வரைந்து கொள்வது வேண்டி, தோழி இயற்பழித்தவழி, தலைமகள் இயற்பட மொழிந்தது.

துறை விளக்கம் – தலைவன் தலைவி வீட்டின் அருகே வந்து நின்றான்.  தலைவியை அவன் மணந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவன் இயல்புகளை இகழ்ந்து கூறுகின்றாள் தோழி. அதைக் கேட்ட தலைவி, தலைவனின் இயல்புகளைப் புகழ்ந்து கூறுகின்றாள்.

பாடல்

         நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று;

         நீரினும் ஆர் அளவின்றே- சாரல்

         கருங் கோல் குறிஞ்சிப்பூக் கொண்டு,

         பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.

பாடல் விளக்கம்

    இயற்பழித்துக் கூறிய தோழியை பார்த்து தலைவி  “எம் தோழியே! கரிய கொம்புகளில்  பூத்துக் குலுங்குகின்ற குறிஞ்சிப் பூக்களில் உள்ள தேனை எடுத்து, மலையில் உள்ள உயர்ந்த மரங்களில் தேனடைகளைச் சேகரித்து வைக்கின்ற  மலைநாட்டில் வாழ்கின்றவன் எம் தலைவன்.  அவனோடு நான் கொண்ட நட்பு, நிலத்தை விடப் பெரியது, வானத்தை விட உயர்ந்தது. கடலைவிட ஆழமானது” என்று தோழிக்குத் தலைவி கூறுவதாக தேவ குலத்தார் பாடியுள்ளார்.

யுனிக்கோட் - பயன்பாடு

அறிமுகம்    ஆங்கில மொழியைத் தவிர பிறமொழிகளிலும் பலரும் பல்வேறு குறியேற்றங்களையும் எழுத்துருக்களையும் பயன்படுத்தி வந்தனர். இந்த முறையில் ஒரே ...