எனது வலைப்பதிவு பட்டியல்

ஞாயிறு, 2 அக்டோபர், 2022

பெரிய புராணம் - கலிய நாயனார் புராணம்

 முன்னுரை

          சைவத் திருமுறைகளில் பன்னிரண்டாவது திருமுறையாக விளங்குவது சேக்கிழார் பாடிய  பெரிய புராணமாகும். "திருத்தொண்டர் மாக்கதை" என்று வழங்கப்படும் பெரிய புராணம், சுந்தரர் பாடிய "திருத்தொண்டத் தொகை" என்னும் நூலின் வழி நூலாகக் கருதப்படுகிறது. பெரியபுராணம் 2 காண்டங்களையும், 13 சருக்கங்களையும், 4286 பாடல்களையும் கொண்டதாகும். இந்நூல், அறுபத்திமூன்று நாயன்மார்களின் வரலாற்றையும், 9 தொகையடியார்களின் வரலாற்றையும் தொகுத்துக் கூறும்  நூலாகக் காணப்படுகிறது.

 கலிய நாயனார் புராணம்

          பெரியபுராணத்தில் இரண்டாவது காண்டத்தில் காணப்படும் 'பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம்' என்னும் சருக்கத்தில் 52 வது புராணமாக காணப்படுவது கலிய நாயனார் புராணம் ஆகும். இப்புராணத்தில் 'தனது உதிரத்தைக் கொண்டு திருக்கோயில் விளக்கெரிக்க முற்பட்ட மெய்யடியாரான கலிய நாயனாரின் ' வரலாறு கூறப்பட்டுள்ளது.

திருவொற்றியூரின் சிறப்புகள்

          இவ்வுலகத்தில் புகழ்மிக்க தொண்டை நாட்டில், அழகிய சோலைகளால் சூழப்பட்ட, தேரோடும் அழகிய வீதியை கொண்ட திருவெற்றியூரில் கங்கையை தலையில் சூடிய, சடை முடியை உடைய  கூத்தப் பெருமான் எழுந்தருளியுள்ளான். அங்கு சமணர்களும் பௌத்தர்களும் கூறுவதைப் போன்று வான வளியே இல்லை என்று சொல்லும் அளவிற்கு வானுயர்ந்த மாளிகைகள் காணப்பட்டன.  கொடிகள் காற்றில் அசையும் போது கமுக மரச்சோலை போல் காணப்பட்டது. அத்தகைய நகரத்தை அடுத்து பரந்து விரிந்த கடல் காணப்பட்டது.

          எப்பொழுதும், இசைப் பாடல்கள் ஒலிக்கும் மண்டபங்களும், மக்கள் நிறைந்திருக்கும் வீதிகளும் அவற்றிலிருந்து எழும் ஒலியும், முறையாக நிகழும் திருவிழாக்களில் தோன்றும் ஒலியும் கலந்து காணப்பட்டது. அங்குள்ள திருமடங்களில், செந்நெல் அரிசியால் சமைக்கப்பட்ட உணவு நிரம்பி வழிந்தன.

          அங்குள்ள சோலைகளில்  மாதவி மலரும், புன்னை மலரும், குங்கும மரங்களின் மலரும், செண்பக மலர்களும், செருந்தி மலர்களும், தாழை மலர்களும் மலர்ந்து மணம் வீசின. நிலவைப் போன்று வெண்மை ஒளிவீசும் மணல் பரப்பும் காணப்பட்டது.

          மேகங்களின் முழக்கமும், கடல் அலையின் ஓசையும், இசை பழகும் இசைக்கருவிகளின் ஓசையும் இவை என பிரித்துக் கூற முடியாத அளவிற்கு அந்நகரில்  ஒலித்துக்கொண்டே இருந்தன. அந்த நகரத்தில் எண்ணெய் ஆட்டும் செக்குத் தொழிலை செய்யும் மக்கள் வாழ்கின்ற 'சக்கர பாடித் தெரு' என்னும் சிறந்த தெரு காணப்பட்டது.

 கலிய நாயனாரின் பிறப்பு

          சக்கர பாடித் தெருவில், எண்ணெய்  ஆட்டும் செக்கு தொழில் செய்யும் மரபில்  கலியநாயனார்  தோன்றினார். சைவ சமயம் சிறப்படைய, முக்கண்ணை உடைய சிவபெருமானுக்கு திருத் தொண்டு செய்வதில் சிறந்து விளங்கினார்.

 கலிய நாயனாரின் திருத்தொண்டு

          கலிய நாயனார்,  பலகோடி செல்வத்திற்கு தலைவனாக விளங்கியதால் திருவெற்றியூரில் வீற்றிருக்கும், காளை  வாகனத்தை உடைய சிவபெருமானின் ஆலயத்தில் உள்ளேயும் வெளியேயும் இரவும் பகலும் விளக்கேற்றி திருத்தொண்டு செய்தார்.

          பல ஆண்டு காலமாக எண்ணற்ற திருவிளக்குகளுக்கு நெய் ஊற்றப்பட்டு, ஏற்றப்பட்டு வழிபட்டு வந்த, கலிய நாயனாரின் இத்திரு தொண்டின் சிறப்பினை உலகறிய செய்ய விரும்பினார் இறைவன்.

 கலிய நாயனாரின் செல்வம் தேய்ந்து போதல்

          கலிய நாயனாரின் திரு தொண்டை உலகறிய செய்ய விரும்பிய இறைவனின் செயலால், கலியநாயனாரின் செல்வம் அனைத்தும் தேய்ந்து கரைந்தது. என்றாலும், தன் கொள்கையில் மாறுபடாதவராக காணப்பட்டார். செல்வம் உள்ளவர்களிடம் சென்று எண்ணெய் ஆட்டும் தொழிலை செய்து அவர் கொடுக்கும் கூலியைக் கொண்டு எண்ணெய் வாங்கி விளக்கேற்றி திருத்தொண்டு செய்தார்.

அத் தொழில் செய்வோர் பலர் இருப்பதால், அதனால் கிடைக்கும் கூலியும் தடைபட்டது. அதனால் மனம் வருந்தியவர் தனது உடமைகளை விற்று  கோயில் விளக்கேற்றினார். செல்வமும் கரைந்து போக, தனது வீட்டையும் விற்று அச் செல்வத்தைக் கொண்டு  திரு விளக்கேற்றினார்.

 மனைவியை விற்பதற்கு முயலுதல்

          வீட்டை விட்டு விளக்கேற்றிய கலியநாயனாருக்கு அச்செல்வமும் கரைந்து போனதால் மனம் வருந்தி தனது மனைவியை விற்று பொருள் சேர்த்து திருவிளக்கு ஏற்ற எண்ணினார். அந்நகரில் கலியநாயனாரின் மனைவியை பொருள் கொடுத்து வாங்குவார் இல்லாததால் மனம் வருந்தினார்.

கலியநாயனார் எண்ணைக்கு பதிலாக தன் உதிரத்தை கொடுக்க முயலுதல்

 கலியநாயனார்,

 'மணி வண்ணச் சுடர் விளக்கு மாளில்  யான் மாள்வன்' 

என படம் பக்கநாதரின் கோயிலில் விளக்கேற்றும் திருப்பணிக்கு தடை  வந்தால் தான் மாண்டு போவதாக உறுதியாகக் கூறினார்.

          கோயிலுக்குச் சென்ற கலியநாயனார், விளக்குகளை எல்லாம் முறையாக அடுக்கி வைத்தார், அவற்றிற்கு திரியினையிட்டார். அதற்கு எண்ணையாக  இரத்தத்தை கொடுப்பதற்காக தனது கழுத்தினை அரிவதற்கு முற்பட்டபோது, சிவபெருமான் நேரில் அங்கு தோன்றி அவர் கையைப் பிடித்து தடுத்தார். என்பதை,

"ஒருவிய எண்ணைக்கு ஈடா உடல் உதிரம் 

                                                   கொடு நிறைக்கக்

கருவியினால் மிடறு அரிய அக்கையைக் கண் நுதலார்

பெருகு திருக் கருணையுடன்  நேர் வந்து பிடித் தருளி "

எனப் பெரிய புராணம் கூறுகிறது.

மேலும், சிவபெருமானின் அருளால், கலியநாயனார் பொன் போல் ஒளி வீசும் சிவபுரியாகிய சிவலோகத்தில் விளக்கேற்றும் அருளினைப் பெற்றார்.

 முடிவுரை

          இவ்வாறு, சேக்கிழார் பெரிய புராணத்தில் 'தனது உதிரத்தை கொடுத்து இறைவனுக்கு விளக்கேற்ற துணிந்த' கலிய நாயனாரின் வரலாற்றைக் கூறி உள்ளார்.

********** இராஜாலி *******

யுனிக்கோட் - பயன்பாடு

அறிமுகம்    ஆங்கில மொழியைத் தவிர பிறமொழிகளிலும் பலரும் பல்வேறு குறியேற்றங்களையும் எழுத்துருக்களையும் பயன்படுத்தி வந்தனர். இந்த முறையில் ஒரே ...