எனது வலைப்பதிவு பட்டியல்

வெள்ளி, 28 அக்டோபர், 2011

தமிழர் வாழ தமிழ் போதுமா..?

தமிழர் வாழ தமிழ் போதுமா..?

Is tamil enough to make a Tamilian live? - Tamil Literature Ilakkiyam Papers

தமிழுக்கு மிகுந்த சோதனைகள் வாய்த்துள்ளதாகத் திரும்பத் திரும்பக் குரல் எழுப்பப்பட்டு வருகிற ஒரு காலகட்டத்தில் நாம் இருந்து கொண்டிருக்கிறோம். தமிழுக்கு அப்படி என்னதான் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன என்று பார்ப்போம். ஒரு வகையில் பார்த்தால் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் தமிழ் பல ஏற்றங்களைக் கண்டிருக்கிறது. உலகெங்கிலும் சுமார் எட்டு கோடித் தமிழர்கள் இன்று வாழ்கிறார்கள். இவர்கள் அனைவருமே தமிழ் பேசத் தெரிந்தவர்கள். பல தலைமுறைகளாக வெளிநாடுகளில் தங்கி அந்நாட்டு மொழியையும் வேறு மொழிகளையும் கற்றுக் கொண்டுவிட்டு, தமிழைப் பயன்படுத்தவே முடியாத சூழலில் தமிழ் பேசாத தமிழர்களும் இருக்கிறார்கள். அவர்களின் மொத்த எண்ணிக்கை சில ஆயிரங்களைத் தாண்டாது என்று கொள்ளலாம். இப்படியொரு அதிக அளவில் தமிழ் பேசத் தெரிந்தவர்கள் தமிழினம் தொடங்கிய காலம் முதல் இப்போதுதான் இருக்கிறார்கள். உலக மக்கள் தொகை பெருக்கத்தின் நேரடி விளைவாகவும் இதனைப் பார்த்தால் இதற்கு தனிச்சிறப்பு இருப்பதாகவும் கொள்ளமுடியாது. ஆனால் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கையும் இப்பொழுது உள்ள அளவிற்கு இதுநாள்வரை இருந்ததில்லை என்பதை ஒரு பலமாகவும் பார்க்கலாம். தமிழில் பத்திரிகைகள், புத்தகங்கள் எண்ணற்ற அளவில் ஆண்டுதோறும் பிரசுரமாகின்றன. தமிழ்புத்தகங்களின் மொத்த ஆண்டு விற்பனைத் தொகை ரூ.80 கோடியைத் தாண்டிவிட்டது. எட்டு கோடி தமிழர்களின் புத்தகச் செலவு இதுதான் என்று பார்க்கும் பொழுது இந்த தொகை அவ்வளவு பொருட்படுத்தத்தக்கதாக இல்லை என்று கூறலாம். ஆனால் இவர்களில் ஆறரை கோடித் தமிழகத் தமிழர்கள்தான் புத்தகங்களை அதிகம் வாங்கியவர்கள். அது சுலபமான யூகம்தான். தமிழகத் தமிழர்களிலும் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் இருபது சதவிகிதத்தினருக்கு மேற்பட்டவர்கள். எழுதப் படிக்கத் தெரிந்தவர்களில் பலரும் புத்தகம் வாங்கும் பழக்கத்தை இன்னமும் கைக் கொள்ளாதவர்கள் என்றெல்லாம் பார்க்கும் பொழுது புத்தக விற்பனையின் ஏறுமுகம் நம்பிக்கை அளிப்பதாகவே உள்ளது. நூலகங்கள் தவிர ஒரு சிறுபான்மையினரே புத்தகங்கள் வாங்குகின்றனர் என்றாலும் தமிழ்ப் புத்தகம் வாங்குபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் பெருகி வருவதைக் கண் கூடாகப் பார்க்கலாம். தமிழ் நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் வானொலி, தொலைக்காட்சி நிலையங்கள் அதிகரித்து வருகின்றன. தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் கிடைத்துள்ளது. கணினியிலும் தமிழ் காலந்தாழ்த்தாது நுழைந்து விட்டது.

ஆனால் தமிழைக் கல்வி நிலையங்களில் கற்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இளைஞர்கள் விருப்புடன் தமிழைக் கற்பதில்லை. மேடைகளில், தொலைக்காட்சிகளில் தமிழ் நிகழ்ச்சி நடத்துபவர்கள் தமிழ் சொற்களைச் சரியாக உச்சரிப்பதில்லை. ஆங்கிலத்தை விரும்பி உபயோகிக்கும் தமிழர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. இரண்டு தமிழர்கள் சந்தித்தால் அவர்கள் ஆங்கிலத்தில் உரையாடவே விரும்புகிறார்கள். தமிழ் மத்தியில் ஆட்சி மொழியாகவில்லை. தமிழ்நாட்டு பள்ளிக்கூடங்களில் தமிழ் போதிக்கப்படுவதில்லை. அவ்வாறே போதிக்கப்படும் இடங்களிலும் மேல்நிலை வகுப்புகளில் தமிழ் இடம்பெறுவதில்லை. அங்கெல்லாம் ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்துகிறது. குழந்தைகள் அப்பா அம்மா என்றெல்லாம் அழைக்காமல் டாடி, மம்மி என்று அழைக்கின்றனர். சுருங்கக் கூறினால் தமிழின் மிகப் பெரும் அச்சுறுத்தலாக ஆங்கிலம் கருதப்படுகிறது.

தனித்தமிழை வேண்டியவர்கள் வடமொழி மீதுதான் வெறுப்பு கொண்டிருந்தனர். ஆங்கிலத்தின் மீது அல்ல. இப்பொழுது குறைந்த அளவில் மட்டுமே வடமொழி தமிழுக்கு ஊறு விளைவிக்கும் மொழியாகக் கருதப்படுகிறது. வடமொழிச் சொற்களைத் தமிழில் கலக்கக்கூடாது என்பது பலரின் வேண்டுகோள். இந்த வேண்டுகோள் பெருமளவில் நிறைவேற்றப்பட்டதாகவே கொள்ளலாம். மணிப்பிரவாள நடை வழக்கொழிந்து போய்விட்டது. வட மொழிச் சொற்களுக்கு மாற்றான தமிழ்ச் சொற்களைப் பலரும் விருப்புடன் எடுத்தாளத் துவங்கிவிட்டனர். வட மொழியினால் தமிழுக்கு அபாயம் எதுவும் இல்லை. ஏனெனில் தமிழும் வடமொழியும் தனித்தனியேயான உள்ளார்ந்த குணங்கள் கொண்டவை. வடமொழியில் இதிகாசங்களும் வேதங்களும் வளர்ந்தன. தமிழில் இலக்கியங்களும் நீதி நூல்களும் படைக்கப்பட்டன. பக்தி இலக்கியங்கள் தோன்றும்வரை இந்த நடைமுறை இருந்திருக்கிறது. வட மொழி வழக்கொழிந்து போனதற்கும் தமிழ் இன்றளவும் மக்கள் மொழியாக இருப்பதற்கும் இவையும் கூட காரணங்கள் எனலாம்.

ஆனால் தமிழர்கள் தங்களுக்கு வைத்துள்ள பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக இருக்க வேண்டும் என்பதில் கருத்து வேற்றுமைகள் உள்ளன. இந்து சமயத்தைச் சேர்ந்த தமிழர்கள் இந்துக் கடவுள்களின் மற்றும் மகான்களின் பெயர்களைத் தங்களுக்கும் தங்கள் பிள்ளைகளுக்கும் வைப்பதால் அவை தமிழ்ச் சொற்களாக இருப்பதில்லை. பெரும்பாலும் அவை வடமொழி சார்ந்தவை. ஆனால் அப்பெயர்களை வைப்பவர்கள் சமய இறையுணர்வு காரணமாகச் செயல்படுகிறார்களேயன்றி அவர்கள் தமிழ் உணர்வற்றவர்கள் என்று கொள்வது தவறான கற்பிதம். தமிழர்களான இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சமணர்கள் போன்றோரும் தங்கள் இறைவழிபாட்டு பண்பினையொட்டி சமயப் பெயர்களைச் சூட்டுகிறார்கள். அப் பெயர்களும் அந்நிய மொழியிலிருந்து பெறப்பட்டவை. அவற்றுக்கும் மூலம் தமிழ் கிடையாது. கார்ல் மார்க்ஸ், சாக்ரடீஸ், இங்கர்சால் போன்ற அறிஞர்களின் பெயர்களை விரும்பி வைத்துக் கொள்பவர்களும் உள்ளனர். அப்பெயர்களும் தமிழ்ப் பெயர்கள் அல்ல. எனவே இந்துக்கள் மட்டும் தங்கள் இறை நம்பிக்கை அடிப்படையில் அமைந்த பெயர்களை அவை வடமொழி மூலம் கொண்டிருக்கின்றன என்கிற காரணத்தால் வைத்துக் கொள்ளக்கூடாது என்று கூறுவது எவ்வகையிலும் நியாயமானதல்ல.

அது போன்றே ஷ,ஜ,ஸ ஆகிய எழுத்துகள் வந்தால் அவற்றுக்குப் பதிலாக ச என்ற எழுத்தையும் ஹ வந்தால் அதற்குப் பதிலாக அ என்ற எழுத்தையும் போட்டு எழுதுகிற பழக்கம் தமிழ்ப் பற்றை நிரூபிப்பதாகக் கொள்வது. வடமொழியில் மட்டும் இன்றி இந்த எழுத்துகள் பாரசீகம், அரபு, ஆப்ரிக்க மற்றும் ஐரோப்பிய மொழிகளிலும் காணப்படுகின்றன. எனவே பிறமொழிச் சொற்கள் கொண்டுள்ள ஒலியினை வரி வடிவத்தில் தமிழில் தர வேண்டும் என்றால் இந்த எழுத்துகளைக் கட்டாயமாக நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும். இதை மொழி பெயர்ப்பு இலக்கியம் அசட்டை செய்ய இயலாது. ஷேக்ஸ்பியரை செகப்பிரியர் என்று எழுதுவதால் என்ன பயன்? இவரல்ல அவர் என்கிற முடிவிற்கு வருவதைத் தவிர? ஒருவரது பெயரையே ஒப்புக்கொள்ளாதவர்கள் அவருடைய படைப்புக்கு எத்தகைய நியாயத்தை வழங்கி விட முடியும்? நம் மொழிக்குப் பிறர் இத்தகைய சிதைவுகளைச் செய்தால் நாம் மனம் ஒப்புவோமா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். ஆங்கிலேயர்கள் நம் ஊர் பெயர்களைச் சிதைத்ததை நாம் மீட்டெடுக்க முயற்சிக்கிறோம். தனித்துவம் மிக்க ழ என்கிற தமிழ் எழுத்து ஆங்கிலத்தில் LA என்று எழுதப்படுவதைவிட zha என்று அதன் உச்சரிப்பு கெடாமல் வரவேண்டும் என்று நாம் விரும்புகிறோம். இதே ஆற்றலை நாம் மற்ற மொழிகளுக்கும் தர வேண்டுமல்லவா? வடமொழி உள்ளிட்டு எந்த மொழி மீதும் வெறுப்பினை வளர்த்துக் கொள்ளக் கூடாது. மொழிகள் பரஸ்பரம் கொள்கிற பாதிப்புகள் நாகரிகத்தின் அடையாளம். "பிற மொழிகள் மீது பகைமை கொள்ளாதே பாப்பா" என்கிற வரியையும் பாப்பா பாட்டில் சேர்த்துப் படிக்க வேண்டும்.

ஆங்கிலத்தைப் பொறுத்தவரை அதன் மீதான எதிர்கொளல் சிந்தித்துச் செயல்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. ஆங்கிலத்தை விரும்பிக் கற்பவர்களாயும் அதைப் பயன்படுத்துபவர்களாயும் உள்ள தமிழர்களை ஆங்கில மோகிகள் என்று வர்ணிப்பது பிழை. மோகம் என்பது பயனற்ற அர்த்தமற்ற விளைவுக்கு இட்டுச் செல்கிற மனோபாவத்தைக் குறிக்கும். தேர்ச்சி பெறுவதென்பது காலத்தின் இன்றியமையாமை ஆகும். ஆங்கிலத்தில் இரண்டு தமிழர்கள் ஒருவருக்கொருவர் ஆங்கிலத்தில் உரையாடுவது தவறு என்று பேசப்பட்டு வருகிற காலம் இது. ஆங்கிலத்தில் உரையாடினால் தமிழ் மெல்லச் சாகும் என்று சொல்லுமளவுக்குத் தமிழ் பலவீனமான மொழி அல்ல. தமிழர்களும் தமிழைத் தவிக்க விடுவதற்காக ஆங்கிலம் பேசுவதில்லை. தேவை கருதியும் தன்னம்பிக்கையின் அடையாளமுமாயும்தான் அவர்கள் ஆங்கிலம் பேசுகிறார்கள். அவர்கள் முழுதும் ஆங்கிலத்திலேயே பேசிக் கொண்டிருப்பதில்லை என்பதையும், அது இயலாத ஒன்று என்பதையும் கூட கவனிக்க வேண்டும். இன்று தமிழர்களின் சமூக, பொருளாதார நிலை உயர்ந்திருக்கிறதென்றால் அதற்கு மிக முக்கிய காரணம் ஆங்கிலக் கல்வி. தமிழர்களின் வாழ்வில் வளம் சேர்ப்பது ஆங்கிலம்தான். தமிழர்களாகிய நாம் நம்மிடையே உள்ள பிற வளங்கள் என்ன என்பதைப் பட்டியலிட்டுப் பார்க்க வேண்டும். நம்மிடம் இயற்கை வளங்கள் குறைவு. வற்றாத நதிகள் என்று எதுவும் இல்லை. குடிநீருக்கே பிற மாநிலங்களை யாசிக்க வேண்டிய நிலை. ஏற்றுமதி செய்யத்தக்க கனிமப் பொருட்களோ நுகர் பொருட்களோ கணிசமான அளவில் இங்கு கிடையாது.

நாடு என்ப நாடாவளத்தன நாடல்ல / நாட வளம் தரும்நாடு என்றார் வள்ளுவர். நமக்கே இயற்கையாக வாய்க்கப்பெற்ற வளம்தான் நம்முடையது என்னும் பட்சத்தில் நம்மிடம் இருப்பதெல்லாம் மனித வளம்தான். நாம் மற்றவரிடமிருந்து எதையாவது பெறவேண்டுமென்றால் நாம் எதையாவது அவர்களுக்குக் கொடுக்க வேண்டுமல்லவா? நம்மால் கொடுக்க முடிவது மனித வளத்தைத்தான். காலம் காலமாகத் தமிழர்களாகிய நாம் நம் உழைப்பைத்தான் மற்றவர்களுக்குக் கொடுத்து வந்திருக்கிறோம். பிஜி, ஆப்ரிக்கா, இலங்கை, மலேசியா போன்ற நாடுகளுக்குக் கூலி வேலை செய்பவர்களைத் தருபவர்களாக தமிழகம் இருந்திருக்கிறது. ஆனால் இன்று அந்த அவல நிலை மாறி பிற நாடுகளுக்கு நாம் அறிவு சார்ந்த துறைகளில் வேலை செய்வதற்காக தமிழர்களை அனுப்பிக் கொண்டிருக்கிறோம். இதற்கெல்லாம் காரணம் ஆங்கில அறிவுதான். ஆங்கிலத்தில் நம்மவர்கள் பேசவும் எழுதவும் பெற்ற தேர்ச்சியின் விளைவே இது.

இந்தத் தேர்ச்சியை நாம் எவ்வாறு பெற்றோம்?

பல வருடங்களாக ஆங்கிலம் கற்றுப் பேசி எழுதிப் பெற்ற தேர்ச்சி இது. எனவே ஆங்கிலத்தில் பேச தேர்ச்சி பெற வேண்டுமென்றால் தமிழர்கள் பிற தமிழர்களிடம்தான் பேச வேண்டும். தமிழ் தெரியாதவர்களிடம் மட்டுமே ஆங்கிலம் பேச வேண்டுமென்றால் இந்தத் தேர்ச்சி வந்திருக்காது. சிறு வயது முதல் ஆங்கிலம் படித்தாலும் ஆங்கிலமே பேசியிராதவர்கள் இருபது வயதுக்கு மேல் வேலை நிமித்தமாக திடீரென சரளமாக ஆங்கிலத்தில் உரையாட முடியுமா? மொழிப் பயிற்சி சிறு வயதிலிருந்தே வருவது நல்லது.

நான் மம்மி என்று கூப்பிடுகிறேன். அதனால் நீ கவுன் அணிந்து முள் கரண்டியால் எனக்கு ரொட்டியை ஊட்டு என்றெல்லாமா அக்குழந்தை தன் தாயிடம் கேட்கிறது? தமிழ் உணர்வுடன் பண்பாட்டுடன்தான் அக்குழந்தை பேசுகிறது. மம்மி என்பது அக்குழந்தையின் ஆங்கில மழலை. நீ எனக்கு அம்மா என்ற சொல்லைக் கற்றுக் கொடுத்தாய், நான் மம்மி என்ற சொல்லைக் கற்று வந்திருக்கிறேன் பார் என்று அது பெருமிதத்துடன் சொல்வதைத் தமிழுக்கு எதிரான செயலாகப் படம் பிடித்துக் காட்டுவதும் ஆங்கிலத்தை விட்டுத் தமிழில் பேசுகிற குழந்தைகளுக்கு அபராதம் போடுகிற ஆங்கில வழிக் கல்வி தரும் பள்ளி ஆசிரியர்களின் கொடூரமும் மொழி பற்றிய புரிதலின்மை என்கிற ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாகும். மம்மி, டாடி என்பதெல்லாம் சரி, நீ அம்மா அப்பா என்றுதான் கூப்பிட வேண்டும் என்று அன்பாகக் கூறினால் அக்குழந்தை ஒரே நொடியில் தன்னை மாற்றிக் கொள்ளும்.

ஆங்கிலம் தமிழ்ச் சமூகம் வளர்ந்துள்ளது. ஆங்கிலம் போன்ற ஒரு மொழியின் வளத்தையும் உபயோகத்தையும் அம்மொழி தரும் வாய்ப்புகளையும் தமிழ் தரவேண்டுமென விரும்பும் நாம் ஆங்கிலத்தை ஒதுக்கி வைப்பது கூடாது. இந்தியாவின் எதிர்காலத்தை தொலைநோக்குடன் பார்த்த காந்தி, நேரு, அம்பேத்கர், பெரியார் போன்றோர் நம்மை அடிமைப்படுத்தியவன் ஆங்கிலேயன் என்ற ஒரு காரணத்திற்காக ஆங்கிலத்தைப் பகைத்துக் கொள்ளுமாறு போதிக்கவில்லை. தலித் மக்களுக்கு ஆங்கிலக் கல்வி அவர்களது பின்தங்கிய நிலைகளிலிருந்து விடுதலையை அளிக்கும் என்று நம்பினார் அம்பேத்கர்.

இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவரான பாரதிக்கு மட்டும் ஏனோ அச்சிறப்பு மிக்க கண்ணோட்டம் வாய்க்கவில்லை. ஆங்கிலக் கல்வியையும் ஏன், தன்னிடம் ஆங்கிலம் பேச வந்த தமிழர்களையும் சினந்தார் பாரதி. ஆங்கிலத் தேர்ச்சி மற்றும் பெற்றிராவிடில் பாரதி நவயுகத்தின் மகாகவியாக ஆகியிருக்க முடியாது என்பது நிச்சயம். ஷெல்லி, வால்ட் விட்மன் ஆகியோரின் நேரிடையான பாதிப்புகளுக்கு மட்டுமின்றி அவரது கவிதைகளில் இடம்பெற்ற முன்னோடியான சிந்தனைகளுக்கும் அவரது ஆங்கில அறிவே காரணம். கவிஞராக மட்டுமல்ல, ஒரு பத்திரிகையாளராக பாரதி ஆங்கில அறிவினால் அடைந்த பயன்களும் ஏராளம். ஆனால் பாரதி உட்பட அனைத்துத் தமிழர்களும் புத்திசாலிகள். அவர்கள் ஒருபோதும் மெய்யாக ஆங்கிலத்தைப் பகைத்துக் கொள்வதில்லை. தலைவன் முதல் தொண்டன்வரை ஆங்கிலத்திற்கு எதிராகப் பொது வெளிகளில் பேசுகிற அனைவரும் ஆங்கிலம் மீது விருப்பு கொண்டவர்கள். தங்கள் பிள்ளைகள் நன்கு ஆங்கிலம் கற்க வேண்டும் என்பதில் உறுதியானவர்கள். ஒரு பக்கம் வாழ்க்கை வெற்றிக்குத் தேவையான ஆங்கில அறிவை அடையும் முயற்சி. இன்னொரு பக்கம் தமிழ் பின்தங்கிவிடக்கூடாது என்று எண்ணிச் செயல்படுகிற தவிப்பு. இவைதான் தமிழனின் இன்றைய நிலை.

தமிழ் அசாதாரணமானதும் அற்புதமானதுமான ஒரு மொழி என்பதில் சந்தேகம் இல்லை. இத்தனை ஆயிரம் வருடங்களாக அது எத்தனையோ இடர்களைக் கடந்து இன்றும் இளமையுடன் தோன்றுகிறது. உலக ஓட்டத்துடன் தமிழ் தன்னைச் சளைக்காமல் இணைத்துக் கொள்கிறது. எந்த மொழியில் புதிய சொல்லாக்கங்கள் ஏற்பட்டாலும் அதற்குத் தமிழில் தக்க ஒரு சொல்லை உருவாக்கிவிட முடிகிறது. ஆனால் இதனால் நாம் எதையோ இழக்கிறோமோ என்றும் தோன்றுகிறது. ஆங்கில வழியில் வரும் சொற்கள் தான் தமிழில் மிகுதியாக இவ்வாறு மறு ஆக்கம் செய்யப்படுகின்றன. ஆங்கிலப் பதங்களுக்கு தமிழ்ச் சொற்களை உருவாக்குவது என்றில்லாமல் சுயமாக ஒரு கருத்துக்குத் தமிழில் சொல்லாக்கம் செய்வது என்பது அரிதாக உள்ளது. அவ்வாறு சமீபத்தில் வெற்றிகரமாகப் பெறப்பட்ட ஒரு சொல் திருநங்கை. நேரிடையாக பல ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழில் சொற்கள் உருவாக்கப்படுகின்றன. குதிரை பேரம், பங்குச் சந்தை வார்த்தைகளான கரடி, காளை, தொங்கு பாராளுமன்றம், ஓடு தடம், மென்பொருள், அலை வரிசை, கறுப்பு ஆடு, நீர்வீழ்ச்சி, தொலைக்காட்சி இப்படி ஏராளமான சொற்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். அத்தனை நேரிடையாக இல்லாமல் பொருளை உள்வாங்கி உருவாக்கப்படும் சொற்களும் உள்ளன. நகை, முரண், புகைப்படம், பேருந்து, காசோலை, கணினி, வானொலி போன்ற பல சொற்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

அவ்வாறு இருவகையிலும் உருவாக்கப்பட்ட சொற்கள் கலைச் சொற்கள் போன்றவை. தமிழ் எழுத்து நடையில் இத்தகைய சொற்கள் நாளும் பெருகி வருவதைப் பார்க்க முடிகிறது. இன்னும் சில ஆண்டுகளில் இத்தகைய சொற்களின் வரத்து அதிகமாகி எழுத்து தமிழ் உருவாக்கப்பட்ட சொற்களின் கோவையாக விளங்கக்கூடும். பேச்சுத் தமிழுக்கும் எழுத்து தமிழுக்கும் மேலும் இடைவெளி இதனால் அதிகமாகும் என்பதோடு மட்டுமின்றி, இது நாள் வரை தமிழ் மொழி என்பது வாழ்விலிருந்து பெறப்பட்டது என்கிற வழக்கிலிருந்தும் மாறுபட்டதாகி தமிழுக்கு செயற்கைத் தன்மை வந்து சேரும். இது தமிழ் மட்டுமின்றி பிற இந்திய மொழிகளுக்கும்கூட பொருந்தும்.

இதற்கெல்லாம் காரணம் தமிழர்களாகிய நாம் உலகை ஆள்வதில் பங்கேற்பதில்லை என்பதுதான். பொருளாதாரம், அரசியல் ஆகியவற்றில் முன்னோடி அங்கம் ஏற்பதில்லை என்பதில் மட்டுமல்ல, அறிவு சார்ந்த இயக்கங்களையும் நாம் உருவாக்குவதில்லை. தமிழில் இலக்கியம் தவிர புதிதாக எதுவும் படைக்கப்படுவதில்லை. கண்டுபிடிப்புகள், கருத்தாக்கங்கள் அனைத்தும் நமக்கு மேற்கிலிருந்து வருகின்றன. நாம் அவற்றை நம் மொழியில் செவ்வனே பொருத்திக் கொள்கிறோம். அதற்கேற்ப மாற்றுச் சொற்களை உருவாக்கிக் கொள்கிறோம். சுயமாக கண்டுபிடிப்புகளும் கருத்தாக்கங்களும் தமிழர்களால் செய்யப்பட்டு அவை தமிழில் பதிக்கப்படும் வரை இந்த வறுமை நீடிக்கும். அதுவரை கோடிக்கணக்கானவர்களின் அன்றாட மொழியாகத் தொடர்ந்தாலும் தமிழ், மொழி சார்ந்த பெருமையில்தான் திளைக்க வேண்டியிருக்கும். நோபல் பரிசு பெற்ற தமிழ் விஞ்ஞானிகளான சி.வி.ராமன், எஸ்.சந்திரசேகர், வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் ஆகியோர் தங்கள் ஆய்வுகளைத் தமிழிலும் எழுதி வெளியிட்டிருந்தார்களேயானால் இந்த நிலைமை மாறியிருக்கும். இனிவரும் காலங்களில் பல்துறை சார்ந்த தமிழ் அறிஞர்கள் தங்கள் ஆய்வுகளை ஆங்கிலத்தில் வெளியிடுகிற அதே சமயத்தில் சற்றும் காலம் தாழ்த்தாது தமிழிலும் வெளியிட்டால் அது ஒரு முன் மாதிரியான முயற்சியாகத் தமிழை உலகத்திற்கு எடுத்துச் செல்கிற செயலாக இருக்கும். இவ்வாறு செய்பவர்களுக்கு ஊக்கத்தொகை, விருது என்றெல்லாம் எதுவும் தரப்பட வேண்டியதில்லை. இயல்பான தமிழ் உணர்வு எல்லா தமிழர்களிடமும் செயல்பட வேண்டும்.

தமிழை மற்ற மொழிகளுடன் குறிப்பாக, ஆங்கிலத்துடன் போட்டியிடும் மொழியாகப் பாவிப்பதனால் தான் பல பிரச்சினைகள் எழுகின்றன. வேலை வாய்ப்புக்கும் வெளி உலகத் தொடர்புக்கும் தமிழ் உபயோகமாக இருக்குமா என்ற கோணத்தில் தமிழைப் பார்க்கக்கூடாது. அவ்வாறு தமிழ் இல்லாத பட்சத்திலும் தமிழ் நம் மொழி, அதை நன்கு கற்பது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை உணர வேண்டும். தமிழ்நாட்டிற்குள் மட்டும் செயல்படுகிற நீதிமன்றங்கள், அரசு நிர்வாகங்கள் ஆகியன தமிழில் இருக்க வேண்டும்

வருங்கால சந்ததியினருக்கு தமிழின்பால் தன்னார்வத்தை தூண்டுமாறு இன்றைய தலைமுறையினர் செய்யவேண்டும். தமிழ் படிக்க வரும் மாணவர்களை வேதனைப்படுத்தக்கூடாது. கடினமான தமிழைப் படிப்பதைவிட பிரெஞ்சு, வடமொழி ஆகியவற்றைப் படித்தால் சுலபமாக மார்க் வாங்கிவிடலாம் என்ற யதார்த்தத்தை மாற்றும் வகையில் தமிழ் படிப்பும் சுலபமாக இருக்க வேண்டும். தமிழை வைத்து தமிழ் மாணவர்களையே மிரட்டினால் பின்னர் அதைப் படிக்க வேறுயார் வருவார்கள்? பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இன்று இருப்பது போல் வெறும் இலக்கிய, இலக்கணப் படிப்பாக மட்டும் தமிழ் இருக்கக் கூடாது.

தமிழ் அதிகாரப்பூர்வ செம்மொழியாகி விட்டபடியால் உலகெங்கிலுமுள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். இதை அரசாங்கம்தான் செய்ய வேண்டும் என்றில்லாது வசதி படைத்த தனியார்களும் செய்ய விரைந்து முன்வரலாம். தமிழைப் பரப்புவது என்பது தமிழைத் தமிழர்களின் எல்லைக்கு அப்பால் கொண்டு செல்வதாகும். தமிழைத் தமிழர் மட்டுமே படிப்பது, எழுதுவது என்றில்லாது தமிழைத் தமிழ் அல்லாதோரும் அறிந்து கொள்ளுமாறு செய்யவேண்டும். அதுவே தமிழருக்கும் தமிழுக்கும் பெருமை!.

தமிழ் இலக்கியத்தில் சில அதிசயச் செய்திகள்

தமிழ் இலக்கியத்தில் சில அதிசயச் செய்திகள்

Unbelivable news in tamil literature - Tamil Literature Ilakkiyam Papers

புறநானூற்றுப் பாடல் ஒன்று. காலையில் பாலில் அரிசிப் பொரியைச் சேர்த்து உண்பதாகக் குறிப்பிடுகிறது. இன்று பிரிட்டனிலும், ஐரோப்பிய நாடுகளிலும் வாழும் மக்கள் காலை உணவில் "கார்ன் ப்ளேக்ஸ்" (மக்காச் சோளம்), "ரைஸ் கிரிஸ்பிஸ்" (அரிசிப் பொறி) ஆகியவற்றைச் சாப்பிடுவதைக் காண்கிறோம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழன் கண்டு பிடித்த காலைத் தானிய உணவு (breakfast cereal) உலகெங்கிலும் பரவியதெப்படி? இதுவும் ஆராய்ச்சிக்குரிய பொருள்!

சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான கலித்தொகையில் ஒரு அதிசயச் செய்தி வருகிறது. பாலை பாடிய பெருங்கடுங்கோ இயற்றிய பாடலில், ஒரு மரத்தின் கீழ் பொய் சொல்பவன் நின்றால் அந்த மரம் வாடி விடும் என்று கூறுகிறார். தற்காலத்தில் அமெரிக்காவில் பொய் கண்டு பிடிக்கும் கருவியைப் (Lie detector) பயன்படுத்துகின்றனர். பொய் சொல்பவனின் நாடி, இருதயம், மூளை ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களைக் கணக்கிட்டு அவன் பொய்யன் என்பதைக் கண்டு பிடிக்கின்றனர். ஆனால் தமிழனோ இதற்கு ஒரு படி மேலாகச் சென்று ஒரு தாவரம் கூடப் பொய்யைக் கண்டு பிடிக்க உதவும் என்கிறான். ஆனால் அத்தகைய மரம் எது என்று தெரியவில்லை. வள்ளுவர் கூட "மோப்பக் குழையும் அனிச்சம் என்று அனிச்சம் பூ பற்றிக் கூறுகிறார். அதாவது முகர்ந்து பார்த்தாலேயே வாடி விடுமாம் அனிச்சம். தாவரங்களுக்கும் உயிருண்டு, உணர்ச்சியுண்டு என்பதை 2,000 ஆண்டுகளுக்கு முன்னரே கண்டு பிடித்தவன் தமிழன், இன்னொரு சங்கப் பாடலில் ஒரு செடியை நெய்யும் பாலும் ஊற்றி, பெற்ற மகளைப் போல அன்பாக வளர்த்த ஒரு பெண் பற்றி ஒரு கவிஞன் பாடுகிறான்.

விண் வெளியில் ஏராளமான கிரகங்கள் உள்ளன. அவைகளில் பூமியைப் போலக் காற்று மண்டலம் இருந்தால் தான் உயிரினங்கள் வாழ முடியும். பூமிக்கு மேலே - விண் வெளியில் - வளி (காற்று) மண்டலம் இல்லை. இதைப் பழந் தமிழர் அறிந்திருந்தனர் போலும்! வெள்ளக்குடி நாகனார் என்ற புறநானூற்றுப் புலவர் (புறம் 35) "வளியிட வழங்கா வானம்" என்று குறிப்பிடுகிறார். குறுங்கோழியூர்க் கிழார் (புறம் 20) "வறி நிலை இல் காயம்" என்றும் புலவர் மார்க்கண்டேயனார் (புறம் 365) "வளியிட வழங்கா வழக்கு அரு நீத்தம்" என்றும் வள்ளுவன் (குறள் 245) "வளி வழங்கு பூமி" என்றும் இதையே குறிப்பிடுகின்றனர்.

ஒலியும் ஒளியும் (Sound and light) மின் காந்தப் பட்டையின் (Electro Magnetic spectrum) ஒரே அங்கம் என்று தற்கால அறிவியல் கூறுகிறது. இதை அறிந்து தானோ என்னவோ தமிழ் மொழியில் மட்டும் ஒலி - ஒளி என்று ஏறத்தாழ ஒரே சப்தமுள்ள இரண்டு சொற்கள் இதைக் குறிக்கப் பயன் படுத்தப் படுகின்றன. சமஸ்கிருதம், ஆங்கிலம் உட்பட எல்லா மொழிகளிலும் இதற்கு வெவ்வேறு சப்தமுள்ள சொற்கள் உள்ளன.

தற்காலப் பறவையியல் அறிஞர்கள் பறவைகள் குடியேற்றம் (Bird migration) பற்றி விரிவாக ஆராய்ந்து வருகின்றனர். சில வகை பறவைகள் 12,000 மைல் பறந்து வட துருவத்திலிருந்து தென் துருவம் வரை சென்று திரும்புகின்றன. இதைக் கண்டு பிடிக்க நவீன உத்திகளைக் (Electronic Tagging or Ringing) கையாளுகின்றனர். பறவைகளின் காலில் தேதியும், ஊர்ப் பெயரும் பொறித்த ஒரு அலுமினிய வளையத்தையோ, மின்னணுக் கருவியையோ மாட்டி விடுவார்கள். வேறொரு நாட்டில் இத்தகைய பறவைகளைக் கண்டால் அந்த வளையத்திலுள்ள செய்திகளையும், அதைத் தாங்கள் பார்த்த தேதி, இடத்தின் பெயரையும் அந்த நாட்டுப் பறவையியல் அறிஞர்கள் உலக முழுவதுமுள்ள பறவையியல் ஆய்வுக் கூடங்களுக்கு அறிவிப்பார்கள். ஆனால் 2,000 ஆண்டுகளுக்கு முன்னரே தென் குமரியிலிருந்து வட இமயத்திற்கு அன்னப் பறவைகள் பறந்து செல்வதையும் இமய மலையிலிருந்து அவை தமிழ் நாட்டுக்கு வருவதையும் தமிழன் அறிந்து வந்துள்ளான். காலில் வளையம் மாட்டாமலும், மின்னணுக் கருவியைப் பயன் படுத்தாமலும் அன்னப் பறவையின் 3,000 மைல் பயணத்தை அறிந்து பாடியுள்ளான் தமிழன்.

(புறம் 67 - பிசிராந்தையார் நற்றிணை - 70 வெள்ளி வீதியார், நற்றிணை 356 - பாணர், அகம் 120 - நக்கீரனார், அகம் 273 - ஒளவையார் ஆகிய பாடல்களைக் காண்க).

பிராணிகளுக்கு அறிவு உண்டு என்றும் மனிதர்களைப் போலவே அவைகளுக்கு உணர்வுகள் உண்டு என்றும் தற்காலத்தில் ஏராளமான கட்டுரைகளும் புத்தகங்களும் வெளியாகி வருகின்றன. குரங்குகள் மனிதர்களைப் போலவே கருவிகளைப் பயன்படுத்துகின்றன என்று பிரபல வார இதழான "நியூஸ் வீக்"கில் அண்மைக் காலத்தில் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. ஆனால் 2,000 ஆண்டுகளுக்கு முன்பே எழுதி விட்டான் தமிழன். குரங்குகள் முரசு அடிப்பதை முட மோசியார் (புறம் 128) என்பவரும், குரங்குகள் குச்சிகளைப் பயன்படுத்துவதைக் கபிலர் என்பவரும் குறிப்பிடுகின்றனர். ஆடுகளைக் கொட்டகையில் அடைப்பதற்கு ஆட்டிடையர்கள் நாய்களைப் பயன் படுத்தும் காட்சியை பிபிசி டெலிவிஷனில் பலரும் பார்த்திருப்பீர்கள். தொலைவில் நின்றவாறே வாயின் மூலம் விசில் அடித்து ஆடுகளை அழைக்கும் காட்சியைக் கபிலர் (அகம் 318) பாடுகிறார். பாரியின் பறம்பு மலையை மூவேந்தரும் முற்றுகையிட்ட காலத்தில் கிளிகளின் மூலம் நெல் முதலிய தானியங்களைக் கொணர்ந்து பல மாதங்கள் உயிர் வாழ்ந்தனர் என்று (Survival techniques using animals at war times) ஒளவையாரும் (அகம் 303) நக்கீரரும் (அகம் 78) குறிப்பிடுகின்றனர். கிளிகளை இவ்வாறு பயன் படுத்தியவர் கபிலர் என்றும் கூறுகின்றனர்.

பருவக் காற்றின் பயனை ஹிப்பாலஸ் என்ற கிரேக்கர் தான் முதல் முதலில் கண்டு பிடித்தார் என்றும் இது கி.பி. முதல் நூற்றாண்டில் நிகழ்ந்தது என்றும் வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். இது சரியல்ல என்றே தோன்றுகிறது. ஏனெனில் கரிகால் பெரு வளத்தானைப் பாடிய வெண்ணிக் குயத்தியார் (புறம் 66) கரிகால் வளவனின் முன்னோர்கள் காற்றின் பயனை அறிந்து நாவாய் (கப்பல்) ஓட்டியதைத் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

நறி இரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளி தொழில் ஆண்ட உருவோன் மருக!
களி இயல் யானைக் கரிகால் வளவ. (புறம் 66)

மாங்குடி மருதனும் (புறம் 26), மருதன் இளநகனும் (கலி 82), வளி வழங்கு கலம் (பாய் மரக் கப்பல்), பருவக் காற்று ஆகியன பற்றிப் பாடுகின்றனர்.

சிலம்பில் உரைநடை

சிலம்பில் உரைநடை

முனைவர். மு. பழனியப்பன்

தமிழ் விரிவுரையாளர்

மன்னர் கல்லூரி புதுக்கோட்டை.

உரைநடை என்ற சொல் காலத்தால் பிந்தையது, ஆனால் உரைநடை என்பது பழமையானது. என்ற கருத்தைக் கொண்டு உரைநடை வடிவத்தின் பழமையை அறியலாம். செய்யுள் , கவிதை வகையினின்று, உரைநடை வடிவம்- மெல்லப் பிரிந்து, தனித்த வகையாகி, அதனுள் பல உரைநடை இலக்கிய வடிவங்கள் கிளைத்தெழுந்து, அதுமட்டுமில்லாது தற்காலத்தில் உரைநடை உதவியின்றி செய்யுளை உணரமுடியாது என்ற அளவிற்குப் பெருமதிப்பை அது பெற்றுள்ளது.

தமிழில், உரைநடையின் எழுச்சி உடனே ஏற்பட்டதல்ல. பல நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மெல்ல கருவாகி பின்வேரூன்றி வெடித்தெழுந்துள்ளது. இதற்கு பலவேறு சான்றுகள் கிடைக்கின்றன.

பாட்டிடை வைத்த குறிப்பினானும்

பாவிற் றெழுந்த கிளவியானும்

பொருளொடு புணராப் பொய்மொழியானும்

பொருளொடு புணர்ந்த நகைமொழியானும்

உரைவகை நடையே நான்கென மொழிப

(தொல்காப்பியம் செய்யுளியல் 171)

என்ற தொல்காப்பியரின் நூற்பா தமிழ் உரைநடைவகையின் வகைக்கு கருவாக அமைந்ததாகும். அடுத்ததாக தமிழ் உரைநடை சிலப்பதிகாரத்தில் சிற்றிலை விட்டு முகிழ்க்க ஆரம்பிக்கின்றது. இளங்கோவடிகள் சிலப்பதிகாரக் காப்பியத்தில் மற்றோர்க்கு, படிப்போர்க்கு உரைக்கும் முகமாக நாடகப்பாங்கின் கூற்று முறையில் சில உரைநடைப் பகுதிகளைப் படைத்துள்ளார்.

இதற்கு அடுத்த நிலையில் இறையனார் களவியல் உரை அமைகின்றது. இந்நூல் குறித்து ''இக்கவிதைத்தன்மை சிலப்பதிகார உரைப்பாட்டுமடை போன்றது. தமிழ் உரைநடையின் ஆரம்பகாலத்தை -கவிதை நிலையிலிருந்து உரைநடைக்குத் தமிழ் மாறுகிற ஒரு காலப்பகுதியைக் களவியல் உரைகாட்டுகிறது'' என்று கருத்துரைக்கின்றார் மு. வரதராசனார்.

உரையாசியர்களின் உரைப் பகுதிகளும் தமிழ் உரைநடையின் வளர்ச்சிக்குக் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியை தந்தன. காலப்போக்கில் உரைநடை என்ற வகையை வரையறைகளோடு வளர்த்த பெருமை, மேலைநாட்டாரைச் சேரும். இன்றுவரை வளர்ந்து வந்துள்ள உரைநடையின் வளர்ச்சியை உரசிப்பார்க்கும் போது சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் உரைநடைப்பகுதிகள் காலவகையாலும், அமைப்புமுறையாலும் மற்ற தமிழ் உரைநடைப் பகுதிகளைவிட முந்தைய ஒன்று என்பது உறுதியாகின்றது. தமிழ் உரைநடை வளர்ச்சியில் சிலப்பதிகார உரைநடையை விடுத்து விட்டுச் செல்ல இயலாது என்கிற நிலையில் சிலப்பதிகார உரைநடை சிறப்பிடம் பெறுகின்றது. அதன் பகுதிகளே தமிழில் மூத்த உரைநடை இலக்கியப் பகுதிகளாகக் கருதத்தக்கன.

சிலப்பதிகாரம்- உரைநடையை உள்ளடக்கிய நூல்

சிலப்பதிகாரம் உரைநடையை உள்ளடக்கிய நூல் என்பதைப் பதிகம் சுட்டுகின்றது. ''இவ்வாறு ஐந்தும் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் உரைசால் அடிகள் அருள''(பதிகம் 86-88) என்ற பதிகஅடிகள் இணு;கு நோக்கத்தக்கன. இவ்வடிகளுக்குச் சிலப்பதிகார உரையாசிரியர்கள் பின்வருமாறு பொருள் கொள்ளுகின்றனர்.

''அரும்பதவுரையாசிரியர் பாட்டும், உரையும் கலந்து வந்த காவியம்''

''அடியார்க்கு நல்லார்- உரையிடையிட்டனவும், பாட்டுடையனவுமாகிய செய்யுளை. . . ''

பெருமழைப்புலவர்''நாடக வழக்கத்தால் உரைச் செய்யுள்களை இடையிடையே கொண்டுள்ளதும் நாடகத்திற்கும் இசைக்கும் உரிய பாடல்களையும், இயற்றமிழக்கேயுரிய செய்யுள்களையுடைய இக்காப்பியத்தை என்க''

'' ஆர் கே. சண்முகம் செட்டியார் உரைச் செய்யுளை இடைஇடையே தொடுத்த பாட்டுடைச் செய்யுள்''

என்கின்றனர்.

மேற்கண்டவர்களின் கூற்றுள், சண்முகம் செட்டியாரின் கூற்று மற்றவர்களிடமிருந்து வேறுபாடுடையது. மற்றவர்கள் செய்யுள், இசைப்பாடல்கள், உரைப்பகுதிகள் கலந்த காப்பியமாகச் சிலப்பதிகாரத்தைக் காண, இவர் மட்டும் சிலப்பதிகாரத்தை உரைச் செய்யுளை இடையிடையே கொண்டுள்ள பாட்டுடைச் செய்யுள் என்று காட்டுகின்றார். இதன்மூலம் சிலப்பதிகாரத்தில் உரைநடை செய்யுள் வடிவில் இடம்பெற்றுள்ளது என்ற கருத்தைப் பெறமுடிகின்றது. தற்கால உரைநடையைச் சிலப்பதிகார உரையோடு ஒப்பிடும்போது இளங்கோவடிகள் பயன்படுத்திய உரைநடை- செய்யுள் சாயலுடையது என்ற கருத்து ஏற்புடையதே.

சிலபத்திகாரம் செய்யுள் அடியாக எழுந்துள்ள காப்பியம் என்பது உறுதி. அதனைச் செய்யுள் காப்பியம், பாடல் இணைந்த காப்பியம், உரை இயைந்த காப்பியம் என்னும் பொருள்பட ''உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்று பதிகத்தில் சுட்டுவதன் மூலம், பதிக ஆசிரியர் எதனைச் சிறப்பிக்க விரும்புகின்றார் என்பது குழப்பமாக உள்ளது. சிலப்பதிகாரம் காப்பியம் என்பதால் அதனைச் செய்யுளால் இயன்றது எனக் குறிப்பிட வேண்டியது தேவையற்றதாகிவிடுகின்றது. இவ்வளவில் பதிக அடிகள் ஏதேனும் ஒரு சிறப்பு கருதியே இவ்வடியினை எடுத்துக்காட்டியிருக்க வேண்டும் என்பது மட்டும் உறுதி. அதனை கட்டுரையின் பின்பகுதி விளக்கும். எதுஎவ்வாறு ஆயினும் சிலப்பதிகாரம் உரை இடைஇடையே அமைந்த காப்பியம் என்பதில் மாற்றமில்லை.

சிலம்பில் உரை என்னும் சொல்லும், உரை என்னும் வடிவமும்

சிலப்பதிகாரத்தில் உரை என்ற சொல் மற்றவர்க்கு உரைத்தல் என்ற பொருளில் பல இடங்களில் எடுத்தாளப் பெற்றுள்ளது. எடுத்துகாட்டாக வழக்குரைகாதை என்ற தலைப்பினைச் சுட்டலாம். கண்ணகி வழக்கினை உரைக்கும் பகுதிக்குத் தலைப்பிடப் பெறுகையில் அவளின் உரைக்கும் முறையை முன்னிறுத்தி வழக்குரைகாதை எனப்பட்டது.

கட்டுரைக்காதை என்ற பகுதியில் கட்டுரை என்ற சொல் இடம்பெற்றுள்ளது. மதுராபதி தெய்வம் முன்னை வினைகளைத் தொகுத்து உரைக்கும் காதை கட்டுரைக்காதை ஆகின்றது. இக்காதைக்கான தலைப்பு கூட்டி உரைக்கும் முறை கருதி வைக்கப்பட்டதே அன்றி உரை சார்ந்த நிலையில் வைக்கப்படவில்லை என்பதை அறிய வேண்டும். மேலும் கட்டுரைக்காதை சிலப்பதிகார உரை வகைகள் எதனையும் தன்னுள் கொண்டமையவில்லை. இப்பகுதி காப்பியத்தில் இடம்பெறும் செய்யுள் அமைதிக்கு ஏற்ப உள்ளது.

மனையறம் படுத்த காதையில் கோவலன் கண்ணகியைக் குறித்துக் கூறும் உலவாக் கட்டுரை கண்ணகியின் அழகு என்னும் ஒருபொருள் குறித்த கோவலனின் உரைக் கூற்றுத் தொகுப்பாக விளங்குகின்றது.

இளங்கோவடிகள் ஒருவர் மற்றவர்க்கு நேர்முகமாக கருத்துக்களைத் தொகுத்து உரைப்பதாக காப்பியத்தில் சூழல்கள் அமையும்போது, அவற்றைக் குறிக்க உரை என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். காப்பியச் செய்யுள் முறைமைக்கு மாறுபாடின்றி நிகழும் இவ்வுரைகளைக் கூற்றுக்கள் எனக் கொள்வது இங்கு ஒரு தௌ¤வினை ஏற்படுத்தும்.

மேலும் உரை என்ற போது கூறுவார் ஒருவரும் கேட்பார் ஒருவரும், அல்லது பலரும் சுட்டப்பட்டே உரைக்கப் பெற்றுள்ள பொதுமை இங்கு நோக்கத்தக்கது. சிலப்பதிகாரமே சீத்தலைச் சாத்தனார் கேட்க, இளங்கோவடிகள் கூறியது என்பதால் சிலப்பதிகாரம் உரைக்கும் நிலையினது என்பது கவனிக்கத்தக்கது.

காப்பியச் செய்யுள் நடையில் அமையாது, அதனினும் நீர்த்த நிலையில் கூற்றாக அமைக்கப்படுவனவே உரைநடை வகையின எனக் கொள்வது சிலம்பில் இடம்பெறும் உரைநடைகள் பற்றியதான சிந்தனையில் ஒரு தௌ¤வினை ஏற்படுத்தும். அவ்வகையில் உரை என்ற சொல்லிற்கும், உரை என்ற வடிவிற்கும் வேறுபாடு உண்டு என்பது தௌ¤வாகின்றது. செய்யுள் அடிப்படையில் அமைந்த கூற்று(உரை)ப் பகுதிகளை விடுத்துக் காணும்போது சிலப்பதிகாரத்தில் பின்வரும் இடங்களில் உரைநடைப் பகுதிகள் இடம்பெற்றுள்ளன.

சிலம்பில் இடம் பெறும் உரைநடைப்பகுதிகள்

1) பதிகத்திற்கு அடுத்து அமைந்துள்ள ளூஉரைபெறு கட்டுரைஸ்ரா

2) கானல்வரியின் கோவலன் பாடத்தொடணு;கும் நிகழ்வைக் கூறுவதற்கு முன்னதாக அமைந்துள்ள கட்டுரைப்பகுதி

3) கானல்வரியில் மாதவி பாடத்தொடணு;கும் நிகழ்வைக் கூறுவதற்கு முன்னதாக அமைந்துள்ள கட்டுரைப்பகுதி

4) புகார்க் காண்ட முடிவில் உள்ள கட்டுரைப்பகுதி

5) ஆய்ச்சியர் குரவையில் இடம்பெறும் உரைப்பாட்டுமடை

6) ஆய்ச்சியர் குரவையில் இடம்பெறும் கருப்பம்

7) வழக்குரை காதையில் வரும் கருப்பம்

8) மதுரைக்காண்ட முடிவில் உள்ளகட்டுரைப் பகுதி

9) குன்றக்குரவையில் இடம்பெறும் உரைப்பாட்டுமடை

10) வஹ்சிக்காண்ட முடிவில் காணப்பெறும் கட்டுரைப்பகுதி

11) நூலின் இறுதியில் இடம்பெறும் நூற்கட்டுரை

மேற்கண்ட உரைநடைப் பகுதிகள் அனைத்தும் இளங்கோவடிகளால் செய்யப் பெற்றனவா என்ற ஐயம் உரையாசிரியர்களிடத்தில் காணப்பெறுகின்றது. அடியார்க்கு நல்லார் அனைத்தும் இளங்கோவடிகளால் செய்யப்பட்டன என்று கருத்தினை முன்வைக்கிறார். பெருமழைப்புலவர் சில உரைப்பகுதிகள் மட்டுமே இளங்கோவடிகளால் படைக்கப்பெற்றன என முடிவு கொள்ளுகின்றார்.

உரைபெறுகட்டுரை-இளங்கோவடிகளால் படைக்கப்பட்டதா

உரைபெறு கட்டுரை என்ற தொடருக்கு உரைத்துப் போகிற கட்டுரை என்று அரும்பதவுரை பொருள் கொள்ளுகின்றது.

இவை முற்கூறிய கட்டுரைச் செய்யுள் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் உரைசாலடிகளருள (பதி 87-8) என்றமையால் காப்பியங்கட்குச் சிறுபான்மை இவ்வுறுப்புகளும் சில வருமெனக் கொள்க என்பது அடியார்க்குநல்லார் தரும் விளக்கம்.

இதனால் இவ்வுரைபெறு கட்டுரை என்னும் உறுப்பும் இளங்கோவடிகளாரே இயற்றியது என்பது அடியார்க்கு நல்லார் கருத்து என்பது அறியப்படும். இதன் கண் பொற்கொல்லர் ஆயிரவரைக் கொன்று கள வேள்வியால் சாந்தி செய்ய எனவரும் சொற்றொடரே அடிகளார் இதனைச் செய்திலர் என்பதற்குப் போதிய சான்றாம் என்பது பெருமழைப்புலவரின் மறுப்பு ஆகும்.

இவற்றின் மூலம் உரைபெறு கட்டுரை என்ற பகுதி இளங்கோவடிகளால் எழுதப்பெற்றதா என்ற விவாதம் முக்கியமானதாகின்றது. உரைபெறுகட்டுரை பெரும்பாலும் கல்வெட்டுக்களில் காணலாகும் ஓம்படைக் கிளவிகளை ஒத்துள்ளன. அவற்றில் கண்ணகி பாத்திரத்தின் பெருமைகள், அவளைக் காவல்தெய்வமாக்கும் முயற்சிகள் பேசப்பட்டுள்ளன. நூலுக்கு முன்னதான காப்புரையாகவே இது காணப்பெறுகின்றது. தவிர இது இளங்கோவடிகளின் படைப்புச்சாயலைச் சிறிதளவேனும் பெற்றிருக்கவில்லை என்பது கற்ற அளவிலேயே புலப்பட்டு விடுகின்றது. இவை போன்ற கருத்துக்களால் உரைபெறு கட்டுரை இளங்கோவடிகளால் படைக்கப் பெற்றதல்ல என்ற முடிவு உறுதியுடையதாகின்றது. இதனை இளங்கோவடிகள் படைத்தார் எனக் கொண்டால் உரை இடையிட்ட பாட்டுடைச்செய்யுள் என்ற முறைமைக்கு, மாறாக உரை முன்னும், இடையும், பின்னும் கொண்ட பாட்டுடைச்செய்யுள் என்று சிலப்பதிகாரக் காப்பியத்திற்கு புதிதான ஒரு முறைமையை வகுக்க வேண்டிவரும். இவற்றால் இப்பகுதி இளங்கோவடிகளால் எழுதப்படவில்லை என்பது பொருத்தமுடையதாகிறது.

காண்ட இறுதிக் கட்டுரைகள், நூற்கட்டுரை - இளங்கோவடிகளால் படைக்கப்பட்டனவா

ஒவ்வொரு காண்டத்தின் முடிவிலும் வரையப்பெற்றள்ள கட்டுரைப்பகுதிகள் இளங்கோவடிகளால் செய்யப்பட்டன அல்ல என்பது பெருமழைப்புலவரின் கருத்து.

இந்நூலின் பதிகத்தை அடுத்துள்ள உரைபெறுகட்டுரையும், ஈண்டு இக்காண்டத்திறுதியிலுள்ள இக்கட்டுரையும் இங்ஙனமே எஞ்சிய இரண்டு காண்டங்களின் இறுதியிலுள்ள கட்டுரையிரண்டும், நூலிறுதியிலமைந்த நூற்கட்டுரை என்பதும் இளங்கோவடிகளால் செய்யப்படாதன. பிற்காலத்தில் பிறராற் பாடிச் சேர்க்கப்பட்டன என்று கருதுதற்கிடனுளது. ... இக்கட்டுரையகத்தே அடிகளார் இந்நூலில் ஓரிடத்தேனும் கூறப்படாத சகோடம் என்னும் சொல் புணர்க்கப் பட்டிருத்தலும் இதுவும் அடிகளாராற் செய்யப்பட்டதில்லை என்பதற்கு ஓரகச் சான்றாகும். என்ற மேற்கண்ட உரையாசிரியரின் உரைப்பகுதி இளங்கோவடிகளால் எழுதப்படாத உரைநடைப்பகுதிகள் குறித்து தௌ¤வுபடுத்துகின்றது.

காண்டங்களின் பின்பகுதியல் அமைந்துள்ள கட்டுரைப்பகுதிகள் மூன்றும் தொடக்க வரிகளால் ஒப்புமையுடையினவாக உள்ளன. முடியுடை வேந்தர் மூவருள்ளும் (புகார், வஹ்சி) முடிகெழுவேந்தர் மூவருள்ளும் (மதுரை)- இவை அக்கட்டுரைப்பகுதிகளின் தொடக்க வரிகளாகும். மேலும் பதிகத்துள் காணப்படும். முடிகெழுவேந்தர் மூவர்க்கும் உரியது என்ற பதிகஅடிகளும் மேற்கண்டவையோடு ஒப்புநோக்கத்தக்கது. இவற்றுக்குள் காணப்படும் ஒற்றுமை பதிக காலத்தில், இவை தோற்றம் பெற்றிருக்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றன.

இத்தகைய ஐயப்பாடுகளுக்கிடையில் பெருமழைப்புலவரின் சந்தேகத்திற்கிடமான உரைநடைப் பகுதிகளை விடுத்து மற்றவையே இளங்கோவடிகளால் எழுதப்பட்டன என்று கொள்வது இங்கு பொருந்துவதாகின்றது.

மேற்கண்ட விவாதங்களின் அடிப்படையில் விலக்கப் பெற்ற பகுதிகள் தவிர மற்ற பகுதிகள் உரைநடை வகைச் சாயலுடையன என்பதில் ஐயமேதுமில்லை. கட்டுரை, உரைப்பாட்டுமடை, கருப்பம் ஆகியன சிலப்பதிகார உரைநடை வகைகளாகக் கொள்ளத்தக்கன. இவை குறித்த விளக்கங்கள் இவற்றின் பண்பை அறிய உதவும்.

கட்டுரை

இதற்கு அரும்பதவுரையிலும், அடியார்க்கு நல்லார் உரையிலும் விளக்கம் இடம்பெறவில்லை. பொருள் பொதிந்த உரைநடையால் இயன்ற செய்யுள் என்று பெருமழைப் புலவர் உரைகாணுகின்றார். பொருள் பொதிந்த, என்பதற்கு ஏதேனும் ஒரு பொருள் பற்றியதான ஒருவரின் கூற்று எனக் கொள்வது சிறப்பாகும். கானல்வரியில் இடம்பெறும் கட்டுரைப்பகுதிகள் ஆசிரியர் கூற்றின் பாற்பட்டதாக ஒரு பொருள் பற்றியதாக அமைந்துள்ளமை கருதத்தக்கது. இப்பகுதி செய்யுள் வடிவத்தினின்று சற்று தாழ்வான செறிவுடையது என்பது கவனிக்கத்தக்கது.

உரைப்பாட்டுமடை

உரை போன்ற நடையமைந்த பாட்டினை இடையிலே மடுத்தது, உரையாகிய பாட்டை இடையிலே மடுப்பது என்பது பெருமழைப்புலவரின் விளக்கமாகும். ஆய்ச்சியர் குரவையுள் மாதரி தன் மகளை அழைத்து உரைக்கும் பகுதியாக பாட்டுமடைகள் இடம்பெறுகின்றன. வரப்போகின்ற தீங்கு குறித்ததான முன் அறிவிப்பாக மூன்று நிமித்தங்களை இப்பகுதி விளக்குகின்றது. குன்றக்குரவையின் தொடக்கப் பகுதியிலும் உரைப்பாட்டுமடை இடம்பெறுகின்றது. குருவி யோப்பியும் எனத் தொடங்கும் இப்பகுதி கண்ணகியை குன்றத்தோர் வினவுவதாகவும், அதற்கு அவள் பதில் உரைப்பதாகவும் அமைந்துள்ளது. இவை இசைப்பாட்டு வடிவத்தினின்று சற்று தாழ்ந்து அமைந்தவை என்பது கவனிக்கத்தக்கது.

கருப்பம்

சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் கருப்பம் என்ற பகுதி உரைவகையின் பாற்பட்ட ஒன்றாகக் கருதத்தக்கது. இதற்கான விளக்கத்தை இவை எல்லாம் பின்வரும் கேட்டிற்கு முதலாம் , இத்தீநிமித்தமெல்லாம் இனிவரும் கேட்டிற்குக் கருக்கள் ஆம் என்று விளக்கம் தருகிறார் பெருமழைப்புலவர். கருப்பப்பகுதிகள் பெரும்பாலும் முன் உரைத்த பகுதியின் மறுபதிவாக, செய்யுள் நடைப்பட்ட உரைநடையாக இயற்றப்பட்டுள்ளன.

இவற்றின் மூலம் சிலப்பதிகாரத்தில் உரைப்பாட்டுமடை, கட்டுரை, கருப்பம் ஆகிய மூன்று உரைநடைப்பகுதிகள் எவ்விதமாறுபாடும் இன்றி உரையாசிரியர்கள் அனைவராலும் இளங்கோவடிகளால் செய்யப்பட்டன என்று ஏற்கப்பெற்றுள்ளமை தெரியவருகின்றது.

கட்டுரை என்பது செய்யுள் வடிவத்தில் ஒரு பொருள் குறித்து, தொகுத்து, ஒருவரால் மற்றொருவருக்கு உரைக்கப்பெறும் பகுதி என்ற கருத்தினைச் சிலப்பதிகார கட்டுரைப்பகுதிகளை ஒருங்கிணைத்துக் காணும்போது பெற முடிகின்றது.

உரைபாட்டுமடை என்பது பாட்டு வடிவில் ஒரு பொருள் குறித்து ஒருவரால் மற்றொருவருக்கு உரைக்கப் பெறும் பகுதி என்ற முடிவு உரைபாட்டுமடைப்பகுதிகளை ஒருங்கிணைத்துக் காணும் போது பெறமுடிகின்றது.

கருப்பம் என்பது முன்னர் கூறப்பட்ட ஒன்றின் மறுபதிப்பாக உரைநடை வயப்பட்டதாக அமைவது என்பது கருதத்தக்கது.

இக்கருத்துக்களை அடியொற்றி சிலப்பதிகார உரை என்பதை பின்வரும் நிலைகளில் பகுப்பாகப்பெறலாம். பதிக ஆசிரியர் குறிப்பிட்ட உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்ற அடியை உரையிடையிட்ட செய்யுள், உரையிடையிட்ட பாட்டு என இருவகைப்படுத்திப் பகுத்துக் கொள்ளவேண்டும்.

சிலப்பதிகார உரை வகையின் தகுதிகள்

காப்பியம் தொய்வின்றிச் செல்ல வடிவ அமைப்பின் செய்யுள் உத்திகள் உதவுகின்றவெனின், தொடர்புக் கண்ணிகளமைக்கவும், செய்திகள் வழங்கவும், கருத்தழுத்தம் தரவும் உரைநடை உதவுகின்றது என்று சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் உரைநடையை காப்பிய உத்தியின் ஒரு பகுதியாக ச. வே. சுப்பிரமணியம் கருதுகின்றார். இவ்வளவில் செய்யுள் நிலைக்கு அடுத்ததான இடத்தை சிலப்பதிகாரத்தில் உரைநடை பெறுகின்றது என்பது கருதத்தக்கது.

கட்டுரைப்பகுதியின் உரைநடைத்தகுதி

சித்திரப் படத்துட்புக்குச் செழுங்கோட்டின் மலர் புனைந்து

மைத்தடங்கண் மணமகளிர் கோலம் போல்வனப்பெய்திப்

பத்தரும் கோடும் ஆணியும் நரம்பு மென்று

இத்திறத்துக் குற்றம் நீங்கிய யாழ்கையில் தொழுதுவாங்கிப்

பண்ணல் பரிவட்டணை ஆராய்தல் தைவரல்

கண்ணிய செலவு விளையாட்டுக் கையூழ்

நண்ணிய குறும்போக்கு என்று நாட்டிய

எண்வகையால் இசையெழீஇப்

பண்வகையால் பரிவுதீர்த்து

மரகதமணித் தாள்செறிந்த மணிக்காந்தள் மெல்விரல்கள்

பயிர்வண்டின் கிளைபோலப் பன்னரம்பின் மிசைப்படர

வார்தல் வடித்தல் உந்தல் உறழ்தல்

சீருடன் உருட்டல் தெருட்டல் அள்ளல்

ஏருடைப் பட்டடை யென இசையோர் வகுத்த

பட்டவகைதன் செவியின் ஓர்த்து

எவலன்பின் பாணியாதெனக்

கோவலன் கையாழ் நீட்ட அவனும்

காவிரியை நோக்கினவும் கடற்கானல் வரிப்பாணியும்

மாதவிதன் மனமகிழ வாசித்தல் தொடங்குமன்

(கானல்வரி 1)

ஆங்குக் கானல்வரிப் பாடல்கேட்ட மான் நெடுங்கண் மாதவியும்

மன்னுமோர் குறிப்புண்டிவன் தன்னிலை மயங்கினானெனக்

கலவியால் மகிழ்ந்தாள் போல் புலவியால் யாழ் வாங்கித்

தானுமோர் குறிப்பினள் போல் கானல்வரிப்பாடல்பாணி

நிலத்தெய்வம் வியப்பெய்த நீணிலத்தோர் மனமகிழக்

கலத்தொடு புணர்ந்தமைந்த கண்டத்தால் பாடத் தொடங்குமன்

(கானல்வரி 24 )

இவ்விரு கட்டுரைப்பகுதிகளும் அமைப்புமுறையில் சிலம்புச் செய்யுள் வகைபோல அமையவில்லை. மாறாக அதனின்று அளவாலும், கட்டமைப்பாலும் இளகிய வடிவுடையனவாக உள்ளன. இவ்வுரைப்பகுதியில் எதுகை மோனை நடையைக் காணமுடிகின்றது. உவமைகள் இடம்பெறுகின்றன,; வகைமைகள் இடம்பெறுகின்றன,; செய்திகள் கோர்க்கப்பெற்று , அடுத்து நிகழ்வது யாதென அறியத் துண்டுவனவாக இக்கட்டுரைப்பகுதிக்ள உள்ளன.

டாக்டர் ஜான்சன் உரைநடைக்கான வரையறையை அது ஒரு மனதின் பேச்சு வடிவம், வடிவ ஒழுங்கு வரைமுறை அற்றது. செரித்து உணரத்தக்கதல்ல, இயல்பானதும் அல்ல. ஆனால் முறையான செய்கையுடையது என்று வரையறுக்கின்றார். இவரின் கருத்துக்கு ஏற்ப மேற்கண்ட உரைநடை அமைந்துள்ளது.

உரைப்பாட்டுமடையின் உரைநடைத்தகுதி

குடப்பால் உறையா குவியிமில் ஏற்றின்

மடக்கணீர் சோரும் வருவதொன்றுண்டு

உறிநறு வெண்ணெய் உருகா உருகும்

மறிதெறித்து ஆட வருவதொன் றுண்டு

நான்முலை ஆயம் நடுங்குபு நின்றரங்கும்

மான்மணி வீழும் வருவதொன்றுண்டு (ஆய்ச்சியர் குரவை-1,2,3 )

குருவிஒப்பியும் கிளிகடிந்தும்குன்றத்துச் சென்றுவைகி

அருவி ஆடியும் சுனைகுடைந்தும் அலவுற்று வருவேம்முன்

மலைவேங்கை நறுநிழலின் வள்ளிபோல்வீர் மனநடுங்க

முலையிழந்து வந்துநின்றீர் யாவிரோவென முனியாதே

மணமதுரையோடு அரசுகேடுற வல்வினைவந் துருத்தகாலைக்

கணவனையாங்கு இழந்துபோந்த கடுவினையேன் யானென்றாள்

என்றலும் இறைஞ்சி அஞ்¢சி இணைவளைக்கை எதிர்கூப்பி

நின்ற எல்லையுள் வானவரும் நெடுமாரி மலர்பொழிந்து

குன்றவரும் கண்டுநிற்பக் கொழுநனொடு கொண்டுபோயினர்

இவள்போலும் நம் குலக்கோர் இருந்தெய்வம் இல்லையாதலின்

சிறுகுடி யீரே சிறுகுடி யீரே

தெய்வங் கொளுமின் சிறுகுடியீரே

நிறங்கிளர் அருவிப் பறம்பின் தாழ்வரை

நறுஞ்சினை வேங்கை நன்னிழற் கீழோர்

தெய்வணுங் கொள்ளுமின் சிறுகுடியீரே

தொண்டகம் தொடுமின் சிறுபறை தொடுமின்

கோடுவாய் வைம்மின் கொடுமணி இயக்குமின்

குறிஞ்¢சி பாடுமின் நறும்புகை எடுமின்

பூப்பலி செய்ம்மின் காப்புக்கடை நிறுமின்

பரவலும் பரவுமின் விரவுமலர் தூவுமின்

ஒரு முலை யிழந்த நங்கைக்குப்

பெருமலை துஞ்சாது வளஞ்சுரக் கெனவே. (குன்றக்குரவை 1-22)

உரைப்பாட்டுமடையாக அமைந்த இப்பகுதிகள் ஆக்ஸ்போர்டு அகராதி வரையறுக்கும் உரைநடைக்கான இலக்கணத்துடன் அமைந்துள்ளமை கருதத்தக்கது. கட்டுரை என்பது ஒரு குறிப்பிட்ட பொருள் பற்றியதான அல்லது பொருளின் ஒரு கிளை பற்றியதான நீட்சி என்ற மேற்கண்ட அகராதியின் கருத்தினுக்கு ஏற்ப இவ்வுரைப்பகுதி ஒரு பொருளின் கிளைபற்றியதான நீட்சியாக உள்ளது. இப்பகுதியில் ஒன்றோடு ஒன்று தொடர்புடைய பல செயல்கள், கருத்துக்கள் திருப்பித் திருப்பி கோர்த்து உரைக்கப் பெற்றுள்ளன.

கருப்பப்பகுதிகள்

இவை உரையாசிரியர்களின் இயல்பைப்போல, மூலத்திற்கு மறுபடி உரையெழுதும் போக்கினதாக உள்ளது.

குடத்துப்பா லுறையாமையும் குவியிமி லேற்றின் மடக்கண்ணீர் சோர்தலும் உறியில் வெண்ணணெ யுருகாமையும் மறி முடங்கியாடாமையும் மான்மணி நிலத்தற்று வீழ்தலும் வருவதோர் துன்பமுண்டென மகளை நோக்கி மனமயங்காதே மண்ணின் மாதர்க்கணியாகிய கண்ணகியும் தான் காண ஆயர்பாடியில் எருமன்றத்து மாயவனுடன் தம்முன் ஆடிய வாலசரிதை நாடகங்களில் வேல் நெடுங்கண் பிஞ்ஞையோடாடிய குரவையாடுதும் யாம் என்றாள் கறவை கன்று துயர் நீங்குகவெனவே.(ஆய்ச்சியர் குரவை 1,2,3) இப்பகுதி மேற்கண்ட முன்னர் கூறப்பட்ட உரைப்பாட்டுமடையின் உரைவிளக்கமாக அமைந்துள்ளது.

செங்கோலும் வெண்குடையும் செறிநிலத்து மறித்துவீழ்தரும்

நங்கோன்தன் கொற்றவாயில் மணிநடுங்க நடுங்கும் உள்ளம்

இரவுவில்லிடும் பகல்மீன்விழும் இருநான்கு திசையும் அதிர்ந்திடும்

வருவதோர் துன்பமுண்டு மன்னவற்கியாம் உரைத்துமென

ஆடியேந்தினர் கலனேந்தினர் அவிர்ந்து விளங்கும் அணியிழையினர்

கோடியேந்தினர் பட்டேந்தினர் கொழுந்நிரையலின் செப்பேந்தினர்

வண்ணமேந்தினர் சுண்ணமேந்தினர் மானமதத்தின் சாந்தேந்தினர்

கண்ணிஏந்தினர் பிணையலேந்தினர் கவரி ஏந்தினர் தூபமேந்தினர்

கூனும் குறளும் ஊமும் கூடிய குறுந்தொழிலிளைஞர் செறித்துசூழ்தர

நரைவிரைஇய நறுங்கூந்தலர் உரை விரையஇய பலர்வாழ்த்திட

ஈண்டு நீர் வையம் காக்கும் பாண்டியன் பெருந்தேவிவாழ்கென

(வழக்குரைகாதை1-19)

இப்பகுதிகள் சிலப்பதிகார உரைநடைவகைகளுள் மிக இளகிய வடிவம் உடையன. கட்டுரையின் கரு என்பது மனித எண்ணங்கள் சார்ந்த எவ்வகைப்பட்ட துறை குறித்தும் இருக்கலாம் என்ற கருத்தினுக்கு ஏற்ப மனித அழிவின் அறிகுறியை முன்னுரைப்பதாக இப்பகுதிகள் அமைந்துள்ளன.

இம்மூன்று பகுதிகளும் சிலப்பதிகாரத்தில் உரைநடை உத்தி இடம்பெற்றுள்ளதை எடுத்துக்காட்டுவனவாக உள்ளன. இவற்றின் தகுதிகள் இக்கால உரைநடை வகைகளுக்கான இலக்கணத்துடன் ஒத்து அமைவது நோக்கத்தக்கது.

பாவாணர் உயர்ந்த கட்டுரைக்கான இலக்கணங்களாக கருத்து ஒருமைப்பாடு, பொருட்பொலிவு, ஒழுணு;கு, பாகியமைப்பு, நன்னடை ஆகியவற்றைக் காட்டுகின்றார் . இவையணைத்தும் சிலப்பதிகார உரைநடை வகைகளுள் அமைந்துள்ளன என்பதில் ஐயமில்லை. எனவே சிலப்பதிகார உரைநடைகள் அமைப்புமுறையாலும், தகுதியாலும் தமிழில் மூத்த உரைநடை இலக்கியமாக விளங்குகிறது என்பது உண்மை.


வேதநெறியும் தமிழ்சைவத்துறையும்

வேதநெறியும் தமிழ்சைவத்துறையும்

சிலப்பதிகாரத்தில் வேதநெறி

சங்ககாலத்தை மருவி எழுந்த காப்பியமாகிய சிலப்பதிகாரம் பண்டைத் தமிழ் மக்களின் கலை இலக்கியப் பண்பாட்டின் மேன்மையைப் பறைசாற்றும் பேரிலக்கியமாகப் போற்றப்படுகின்றது. இந்தச் சிறப்பான காப்பியத்தில் தமிழ் மக்கள் வேதநெறியைத் தழுவி நின்ற பல செய்திகள் அறியவருகின்றன.

காப்பியம் திங்கள், ஞாயிறு, மாமழை ஆகிய வேதக்கடவுளரின் வணக்கத்துடன் தொடங்குகின்றது. காப்பிய நாயகர்களாகிய கோவலனுக்கும் கண்ணகிக்கும் ‘மாமுதுபார்ப்பான் மறைவழி காட்டிட’ அக்கினி சாட்சியாகச் செய்யப்படும் பிரசாபத்தியத் திருமணம் நடைபெறுகின்றது. சந்திரன் உரோகிணியைச் சேர நல்லோரையில் ‘அருந்ததி’ யனையாளாகிய கண்ணகியைக் கோவலன் கைத்தலம் பற்றுகின்றான். மணமகள் கண்ணகி, ‘போதிலார் திருவினாள்’ என்றும், ‘தீதிலா வடமீனின் திறமிவள் திறம்’ என்றும் போற்றப்படுகின்றாள்.

கோவலன் தந்தை மாசாத்துவான் ‘இருநிதிக் கிழவ’னாகிய ‘குபேரன்’ எனப் போற்றப்படுகின்றான். கோவலன், ‘செவ்வேள்’ என மாதரால் பாராட்டப்படுகிறான். புகார் நகர் செல்வசிறப்பாலும் போகத்தாலும் ‘நாகநீ ணகரொடு நாகநா டதனொடு’ உவமிக்கப்படுகின்றது. ‘பொதியி லாயினு மிமய மாயினும்’ என்றும், ‘காவிரி நாடன் றிகிரிபோற் பொற்கோட்டு, மேரு வலந்திரிதலான்’ எனத் தமிழகத்து நிலக்குறிகளோடு இமயமலை, மேரு எனும் வேதஇலக்கிய நிலக்குறிகளும் (Landmarks) பேசப்படுகின்றன.

பாயிரம் கண்ணகியை, பலர்புகழ் ‘பத்தினி’ என்று கூறுகின்றது. பத்தினி என்பது வேத வழக்கு. மறையவர் மனைகளில் நித்திய வேள்வி செய்யும் பொழுது அதனை அணையாது ஓம்புதல் அவன் மனைவியின் செயலாகும். அவ்வாறு நித்தியாக்கினி யோம்பும் மறையவனுக்கு உதவும் மனைவிக்கு ‘பத்தினி’ என்று பெயர்.*

* திருமார்பன் முதலான தேவருக்கெல் லாமறையோன் சிவனே யாமென்
றொருவாய்மை மறைகரைந்த துண்மையெனத் தெளிந்துலக முய்ய முத்தீ
மருவாருங் குழலுமைபத் தினிவளர்ப்ப விடக்கரத்து வயங்க வேந்திப்
பெருவாழ்வு தரவரசம் பலத்தாடும் பேரொளியைப் பேணி வாழ்வாம்”

(பேருர்ப் புராணம்- கடவுள் வாழ்த்து -2)

இதில் கூத்தப்பெருமான் மறையவன் என்பதற் கேற்ப அம்மை இடப்பக்கத்தில் நின்று முத்தி வளர்க்கும் பத்தினியாகக் கூறப்படுகின்றாள்.

சிலப்பதிகாரம், இந்திரன் மகனாகிய சயந்தன் உருப்பசி என்ற கந்தருவப் பெண்ணை இந்திரனுடைய அவைக்களத்துக் கண்டு இருவரும் காமவயப்பட அகத்தியன் சாபத்தால் சயந்தன் பொதியமலையில் மூங்கிலாகப் பிறந்ததும், உருப்பசி புகார்நகரில் கணிகையர் குலத்து முன்னோளாகிய மாதவியாகப் பிறந்ததையும் கூறுகின்றது. உருப்பசி வந்து சாபத்தால் பிறக்கையால் அவள் வழியுள்ளாரையும் இளங்கோவடிகள் வானவர்மகளிர் என்றார்.

வேதக் கடவுளாகிய இந்திரனுக்கு விழா எடுத்தலை இந்திரவிழவூரெடுத்த காதை கூறுகின்றது. இந்த விழவினைப் பற்றிப் பவுத்த காப்பியம் எனப்படும் மணிமேகலையும் கூறுகின்றது.

சிலப்பதிகாரம் வடக்கு திசையைப் ‘புண்ணிய திசை’ என்றது.(5:94) அதற்குக் காரணம் ‘இமையவர் உறையும் சிமையம்’ அத்திக்கில் உள்ளமையாகும். (5:97) திருமாவளவன் என்னும் சோழமன்னன் வடநாடு சென்று வெற்றி கொண்டு இமயமலை மேற்செல்ல வொட்டாமல் தடுத்தமையால் அதன் உச்சியில் புலிச் சின்னம் பொறித்து மீண்டான். வச்சிரநாடு, மகத நாடு அவந்தி ஆகிய நாட்டு அரசர்கள் சோழனோடு நட்புக் கொண்டனர்.(5: 95- 110)

இந்திரவிழாவுக்கு முன்னர் புகார் நகரிலுள்ள திருக்கோவில்களில் வழிபாடுகள் நடைபெறுகின்றன. அப்பொழுது, ‘மிக்க முதுமையுடைய முதல்வனாகிய வேதாவினுடைய வாய்மையில் தப்பாத நான்கு வேதங்கள் சொன்ன நெறியில் ஓமங்கள் ஒருபக்கம் நடந்தன.’ (5:174- 5)

இந்திரவிழாவில், மாதவியுடைய ஆடலைக் கண்டு மகிழ்வதுடன் “அமரர் தலைவனை வணங்குதும் யாமென” கந்தருவன் ஒருவன் தன் காதலியுடன், தெய்வயாக்கையை மறைத்து மானுடயாக்கையுடன், புகார் நகர் நோக்கி வருகின்றான். அவன் தன்னுடைய காதலிக்கு, கொடுமுடியையுடைய இமயமலையயும் வளவிய நீரையுடைய கங்கையாற்றினையும் அவந்தியென்னும் பதியினையையும் விந்தமலையும் விந்தாடவி யென்னும் காட்டினையும் வேங்கடமலையையும் நிலம் பொறாத விளையுடைய காவிரிநாட்டினையும் தன் காதலிக்குக் காட்டி அங்கங்குள்ள பயன்களை நுகர்வதற்கு ஆங்காங்குத் தங்கி வருகின்றான். (5::25-34) இக்கூற்றினால் வடநாடும் தென்னாடும் சமயம் , கலைப் பண்பாடுகளில் ஒற்றுமைப் பட்டு ஒன்றையொன்று தழுவியிருந்தமை தெளிவாகின்றது.

மாதவியாடிய பதினொருவகை ஆடலிலும் பாடலிலும் கண்ணன் பாகவதம் , தேவி பாகவதம் ஆகியவற்றின் தாக்கம் இருந்தமை அறியத்தக்கது.(6: 35 -66)

“தூய, மறையோன்பின் மாணியாய் வான்பொருட் கேள்வித் , துறைபோய்” (9:29-31) எனும் அடிகளுக்கு அடியார்க்குநல்லார், “இருமரபுந் தூய மறையோனுக்குப் பின்செல்லும் பிள்ளையாய் மிக்க கல்விகளையும் அவற்றின் பொருட்கேள்விகளையும் கற்றும் தரித்தும் துறைபோய்த் தந்தைதாயர் இறந்த பின்னர் அவர்க்கு நீர்க்கடன் முதலியவுஞ் செய்து” என உரை வரைந்ததுடன், ‘வான்பொருட்கேள்வி – மறைநூலும் அங்கமும். துறைபோதல்- அதற்குத் தக நிற்றல்* (*குறள்,391). மாணியாயெனவே செளளமும் உபநயனமும், துறைபோயெனவே கல்வி கேள்வி முதலிய பிரமசரியங் காத்தலுங் கூறி, மேல் “தேவந்தி யென்பாண் மனைவி” என்பதனால் விவாகமும் காருகத்தமுங் கூறினமையு முணர்க. “ எனக் குறிப்புரையும் வரைந்துள்ளார்.(அடியார்க்கு நல்லார் ஒரு தமிழ் வைதிகர். அவரைச் சமணர் என்று சில தமிழாசிரியர்கள் கூறுவது தவறு)

இதனால் பார்ப்பனர்களின் வருண ஒழுக்கம் இரட்டைக் காப்பிய காலத்திலேயே தமிழ்சமுதாயத்தில் நிலை பெற்றிருந்தமை புலனாகின்றது.. அந்தணர் ஒழுக்கத்தைப் பார்ப்பன வாகை எனச் சங்கத்தமிழ் புகழ்கின்றது. அந்த ஒழுக்கம் எத்தகையது என்பதைச் சிலப்பதிகாரம் ஒரு நிகழ்ச்சியை வைத்துப் பதிவு செய்கின்றது.

மதுரையைக் கண்ணகி அழலூட்டியபின், எரியாமல் நின்ற வெள்ளியம்பலத்துள், ஆரஞர் உற்ற வீரபத்தினிமுன் மதுராபுரித் தெய்வம் தோன்றி, அவளுடைய சினந் தணியுமாறு பேசுகையில் பாண்டியமன்னர்களது செங்கோன்மையை எடுத்தியம்புகின்றது.

“சோழ நன்னாட்டுப் பார்ப்பான், பராசரன்* என்போன், வேதக்கல்வியில் வல்லமையுடையவன், சேரமன்னனின் கொடைத்திறங்கேட்டு வண்டமிழ் மறையோனுக்கு வானுறை கொடுத்த* அச்சேரனைக் காண்கென, காடும் நாடும் ஊரும் போகி, நீடுநில மலயம் பிற்படச் சேர நாடு அடைகின்றான்.

அங்கு,
“ஒன்றுபுரி கொள்கை யிருபிறப் பாளர்
முத்தீச் செல்வத்து நான்மறை முற்றி
ஐம்பெரு வேள்வியுஞ் செய்தொழி லோம்பும்
அறுதொழி லந்தணர்”

என இக்குடியினருக்கு வகுக்கப்பட்டபடி, பார்ப்பன வாகை சூடி, அரசனளித்த பரிசுகளாகிய நன்கலங் கொண்டு தன்பதிப் பெயர்வோன், ‘செங்கோற் தென்னன்’ ஆட்சிக்குட்பட்ட , ‘திருந்து தொழில்மறையவர்’ வாழும் திருத்தங்காலூர் என்னும் ஊரில், ஊர்ப்பொதுவில் இருந்த அரசமரத்து மேடையில் களைப்பாறி யிருந்தான். தன்னுடைய,

“தண்டே குண்டிகை வெண்குடை காட்டம்,
பண்டச் சிறுபொதி பாதக் காப்பொடு
களைந்து”

மூவேந்தர்களையும் வாழ்த்தி இருந்தனன். அப்பொழுது அங்கு விளையாடிக் கொண்டிருந்த அந்தணச் சிறார்கள் அவனைச் சூழ்ந்து கொள்கின்றனர். அக்குழந்தைகளைக் கண்டு மகிழ்ந்த பராசரன், “குண்டப் பார்ப்பீர்” என்னோடு சேர்ந்து மறையோதி, இப்பரிசுப் பொருள்கள் அனைத்தையும் கொண்டு செல்வீர்” என அழைத்தான். அப்பொழுது, வார்த்திகன் எனும் அந்தணனின் புதல்வன், ‘ஆலமர் செல்வன் பெயர்கொண்டு வளர்ந்தோன்’ (ஆலமர்செல்வன் பெயர் – தக்கிணாமூர்த்தி) மழலை மாறாத குழந்தையாயினும் பராசரன் சொன்ன மறைகளைச் சந்தம் பிழையாது கூறினான்.(“தளர்நா வாயினும் மறைவிளி வழாஅ, துளமலி யுவகையோ டொப்ப வோத, ‘தக்கிணன்’ றன்னைப் “) அதனால் முகமகிழ்ந்த பராசரன் தக்கிணாமூர்த்தியை மிகவும் பாராட்டித் தன்னிடம் இருந்த பரிசுப்பொருள்களான, “முத்தப் பூணூலதற்கொத்த புனைகலம், கடகம், தோடு முதலனைத்தையும் ஈந்து தன் பதிப்பெயர்ந்தான். ( சிலம்பு 23: 63-98)

தக்கிணாமூர்த்தி வழி வார்த்திகன் பெற்ற பெருஞ்செல்வத்தைக் கண்டு பொறாமை கொண்டோர், ‘படுபொருள் வெளவிய பார்ப்பான் இவனென, விடுசிறைக் கோட்டகத் திட்டனர்’. வார்த்திகன் மனைவி கார்த்திகை கலங்கிப் புலம்பினள். செங்கோன்மை பிறந்தமை கண்டு ஐயை கோயிற்கதவைடைத்துக் கொண்டனள். உண்மை அறிந்துகொண்ட பாண்டியன், வார்த்திகனுடைய பொருளை மீட்டுக் கொடுத்ததோடு அதனின் பெருவளம் நல்கி,

“கார்த்திகை கணவன் வார்த்திகன் முன்னர்
இருநில மடந்தைக்குத் திருமார்பு நல்கியவள்
தணியா வேட்கையுஞ் சிறிதுதணித் தனனே”(சிலம்பு 23:)

அரசன் பார்ப்பனன் முன்னர் வீழ்ந்து வணங்கினான் என்று கூறாமல், இருநிலமடந்தைக்குத் திருமார்பு நல்கினான் என்று உரைத்த நயம் அறியத் தக்கது. அரசரும் வணங்கும் உயர்ந்த நிலையில் பார்ப்பனர் மதிக்கப்பட்டனர் என இதனால் அறியலாம்.

பராசரன் என்னும் பெயர் இன்றும் தமிழ்ப் பார்ப்பனர்களிடையே வழங்கி வருகின்றது. அந்தணர்களின் கோத்திரப் பெயர்களில் ஒன்றாகவும் வழங்கி வருகின்றது. மறையவர்கள் முத்தியாகிய ஒன்றையே விரும்பும் கொள்கையராகையால், ‘ஒன்றுபுரி கொள்கை இருபிறப்பாளர்’ என்றார். ஆகவனீயம், காருகபத்தியம், தக்கிணாக்கினி எனும் முத்தீயோம்பும் செல்வமே அவர்கள் போற்றும் செல்வம்.

மறையோர் மெய்ஞ்ஞானக் கல்விச் செல்வத்தையே தேடிச் சேமிக்க வேண்டும்; உலகியல் போகத்தில் ஆழ்த்தும் பொருட் செல்வத்தைச் சேமித்தலாகாது. ஈதலும் அந்தணர் அறமாதலால் அதனைத் தக்காருக்கு உடனே ஈந்து விடல் வேண்டும். இந்த ஒழுக்கம் பராசரன் தான் பார்ப்பன வாகையில் ஈட்டிய செல்வத்தைத் தக்கிணாமூர்த்திக்கு ஈந்த செயலில் வெளிப்படுகின்றது.

அத்துடன், ‘பிரமவேள்வி, தேவவேள்வி, மனிதவேள்வி, உயிர்வேள்வி, பிதிர்வேள்வி’ ஆகியவற்றை வழுவாது ஓம்பும் ஒழுக்கமு உடையவர். (திருவள்ளுவர் இவ்வேள்விகளை,”தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்க றானென்றாங், கைம்புலத்தா றோம்ப றலை”(43) எனுங் திருக்குறளில் கூறியுள்ளார்.)

அந்தணன் கல்வியை விற்றலாகாது. கல்விக்குப் பரிசாகக் கிடைத்த பொருளைக்காக்கும் பிராமணன் பிரமராக்கதனாவான். இக்கருத்தைக் கச்சியப்பமுனிவர்* ( *இவர் காஞ்சிப்புராண ஆசிரியர் சிவஞான முனிவரின் மாணாக்கர். திருவானைக்காப்புராணம், பேரூர்ப் புராணம், திருத்தணிகைப்புராணம், பூவாளூர்ப் புராணம் முதலிய புராணங்களின் ஆசிரியர்) . பேருர்ப்புராணத்தில், திருநீற்றுமேட்டுப் படலத்தில் ஓரந்தணன் வரலாற்றில் வைத்து விளக்குகின்றார்.

கங்கைக் கரையில் தன் மறைக்கல்வியை வெளிப்படுத்திப் பெற்ற மிகுந்த செல்வத்துடன் தன் இருப்பிடத்திற்கு செல்பவனுக்குத் தான் வேதஒழுக்கத்தில் தவறியதாக மனத்தில் பட்டது. அவன் பின் வருமாறு நினைக்கின்றான்.

“ உயர்ந்த வருணத்திலே பிறந்து, வேதம் ஓதி, வேள்விகள் செய்தும் தெளிந்த அறிவைப் பெற்றும் குற்றமுடைய வினைகளினின்று நீங்கியும் , இந்த நன்மைகளையெல்லாம் சிறந்த முத்தியைப் பெறுதற்குக் காரணமாக்காமல், மயக்கந்தரும் பாவம் வளர்ச்சியுற்று அரிய நரகத்திலே வீழ்ந்து துன்புறும்படித் தானமாகச் செல்வத்தைப் பெற்று இவ்வுலகத்திலே வருந்துவதற்கு ஏதுவானவற்றைச் செய்துவிட்டேனே! கற்ற கல்வியும் உரிய காலத்தில் வந்து உதவவில்லையே’ என்று அந்த அந்தணன் நொந்து கொள்கின்றான்*.

*“உயர்முதல் வருண முதித்ததும் வேத மொழுக்கொடு பயின்றுதெள் ளியதுஞ்
செயிருறு வினையிற் றீர்ந்துநற் கதியிற் சேர்வதற் கேதுவாக் காது
மயர்தரு பாவம் தளர்ந்தரு நரகின் மறிதரத் தானமிக் கேற்றிங்
கயர்வதற் கேது வாக்கினேன் கற்ற வறிவும்வந் துதவிய தின்றே.” (பேரூர்ப். 35:10)

தன்னிடமிருந்த பொருள்களையெல்லாம் தானமாக்க நினைந்து அவ்வெண்ணத்தைச் செயல்படுத்துமுன் இறந்து விடுகின்றான். பொருளைப் பாதுகாப்பாக வைத்த இடத்திலேயே பொருள்மேல் வைத்த ஆசையின் காரணமாக அரக்கனாய்த் திரிகின்றான். (பேரூர்ப் 35:13,27) மறையோதும் அந்தணனுக்குப் பொருள் நசை கேடு விளைக்கும் என்பது இப்புராணக் கதையின் கருத்து. இதனால் அந்தணவொழுக்கம் பற்றிப் புராணங்களின் கருத்தும் தெளிவாம்.

நல்லொழுக்கமும் கல்வியும் பொருளாசையும் அற்ற பார்ப்பார் நல்ல துணைவராவர் எனும் கருத்தில் மகட்கொடை நேர்ந்த அரசர்கள் மகளுடன் பார்ப்பாரையும் உடன் தருதல் சேரன் செங்குட்டுவன் காலவழக்காக இருந்தது.*

(*புன்மயிர்ச் சடைமுடிப் புலரா வுடுக்கை
முந்நூன் மார்பின் முத்தீச் செல்வத்
திருபிறப் பாளரொடு பெருமலை யரசன்
மடவதின் மாண்ட மாபெரும் பத்தினிக்
கடவு ளெழுதவோர் கற்றா ரானெனின்” (25:126130)

எனும் இவ்வரிகளுக்கு,’பார்ப்பாருடனே மகட்டருதனோக்கி இருபிறப்பாளரொடு கல் தாரானாயினென்றான்’ என்றது பழையவுரை)

கங்கை முதலிய புனித நதிகளில் கிடைக்கும் கற்களால் பாணலிங்கம் அமைத்து வழிபடுதல் இன்றும் மரபாக உள்ளது. சிலப்பதிகாரம், ‘விற்றலைக் கொண்ட வியன்பே ரிமயத்துக், கற்கால் ‘ கொண்டு, கங்கைப் பேரியாற்றில் நீர்ப்படை செய்யும் வழக்கிருந்ததைக் கூறுகின்றது. (25:117-121)

கங்கையாற்றில் நீராடுவது புண்ணியச் செயலாகக் கருதப்பட்டமையும் சேரன் செங்குட்டுவன் தன் தாயாரைக் கங்கையில் புனிதநீராட்டினமையும் சிலப்பதிகாரம் கூறுகின்றது. (25:160-161)

நான்மறை வல்ல மறையோர் ,’மறைநா வுழுது, இறையோன் செவிசெறு வாக, வித்திப் பெரும் பயன் விளைத்தனர்..(28:186- 189)

இவ்வாறாகச் சிலப்பதிகாரம் வேத வழக்குத் தழுவிய நெஞ்சையள்ளும் காப்பியமாகத் திகழ்கின்றது.

மணிமேகலையும் வேதநெறியும்

இரட்டைக் காப்பியங்கள் என்று பேசப்படும் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் வேதவழக்கைக் குறித்த மட்டில் தம்முள் மாறுபட்டு நிற்கின்றன. சிலப்பதிகாரம் வேதநெறியை எவ்வளவு உயர்வாகப் பேசிற்றோ அதற்கு மாறான நிலையில் மணிமேகலை வேதநெறியையும் வேதநெறியில் நிற்போரையும் பழிப்பதில் தலைநிற்கின்றது.

மணிமேகலை பவுத்தமதப் பிரச்சார இலக்கியமாக இருப்பதே அதற்குக் காரணம்.

மணிமேகலை மறையைப் போற்றிக் காப்பாற்றும் கடப்பாடு உடைய மறையவர்களை ஒழுக்கங் கெட்டவர்களாகவும் கொலைவெறியர்களாகவும் மதுமாமிசம் விரும்புபவர்களாகவும் சித்திரிக்கின்றது. அவர்கள் மேல் எழுந்த வெறுப்பு அவர்கள் போற்றும் வேதத்தின்மீதும் வேதநெறியின் மீதும் விரியுமாறு பேசுகின்றது.

புறநானூறு பார்ப்பனர்கள் பிற உயிர்களுக்குச் சிறிதும் தீமை செயத்தகாத சாதியர் என்றும் பசுக்களொடு ஒத்த இயல்புடையவர்கள் என்றும் போர் நிகழும் காலத்தில் இரு அரசர்களாலும் காப்பாற்றப்படத் தக்கவர்கள் என்றும் பேசும்.

பார்ப்பனர்கள் புலவுத் துறந்த (உடலைப் பாதுகாத்தலை வெறுத்த) நோன்புடையர் என்றும் அவர்கள் மெய்யே பேசுவர் என்றும் அறங்கறைந்த நாவினர் மறையவர் என்றெல்லாம் சங்க இலக்கியங்கள் கூறும்.

சிலப்பதிகாரத்தில் அந்தணர்கள் நல்ல தோழர்களாகவும் அரசர்களால் கீழே விழுந்து வணங்கத் தக்கவர்களாகவும் காணப்படுகின்றனர்.

மணிமேகலையில் ஆபுத்திரன் என்பான் வரலாறு வேதியர் மீது வெறுப்பினைத் தோற்றுவிக்கவே படைக்கப்பட்டது. ஆபுத்திரன் கற்பொழுக்கத்தில் இழுக்கிய சாலி என்னும் பார்ப்பனி வயிற்றிற் பிறந்தவன். பார்ப்பனி சாலி என்பவள் காப்புக்கடை கழிந்து கொண்டோர்ப் பிழைத்த தண்டம் அஞ்சிச் சூன் முதிர்ந்த பருவத்துத் தான் செய்த தவற்றிற்குக் கழுவாயாகக் குமரியாடச் செல்கிறாள். அதாவது ஒழுக்கம் கெட்டவளாகி கருப்பமுற்றுத் தான் செய்த பாவத்துக்குப் பரிகாரமாகத் தீர்த்தநீராடச் செல்லுகின்றாள். *(கழுவாயாகத் தீர்த்தமாடச் செல்லுகின்றாள் என்பதிலும் புனிதநீராடல் என்னும் வைதிக நெறியை எள்ளல் தொனிக்கின்றது.) இருள்நெறியில் போகின்றவள், வழியிலே, தான் ஈன்ற குழவி என்றும் மனம் இரங்காதவளாகிப் பிறர்கண்ணுக்குத் தோன்றாத ஒரு தோட்டத்தில் அதனை வீசி எறிந்து விட்டுப்போகின்றாள்.

இப்படிக் கூறுவதன் மூலம் மேற்குலத்தவளாகிய பார்ப்பனி மகவிற்கும் இரங்காத வன்கண்மையுடையளாகக் காட்டி இதன் மூலம் பவுத்தப் புலவன் வைதிகத்தின் மீது தனக்குள்ள காழ்ப்பைக் காட்டிக் கொள்ளுகின்றான்.

தீவினைப் பாவத்திற்குக் கழுவாயாகப் புனித நீராடலை வைதிக மதம் கூறும். *(*சிலப்பதிகாரத்தில் மாங்காட்டுமறையவன், தேவந்தி, முதலியோர் வாயிலாகவும் சேரன் செங்குட்டுவன் தன் தாயாரை கங்கையாட்டியதன் வாயிலாகவும் புனித் நீராடுதலின் பெருமையைப் போற்றிய செய்திகளோடு இது மாறுபடுதலைக் காண்க)

சாலி வீசி எறிந்துவிட்டுச் சென்ற குழந்தையை ஒரு அந்தணன் எடுத்து வளர்க்கின்றான். அவனுடைய ஊரில் ஓரந்தணன் வீட்டில் வேள்வியிற் கொல்லப்படுவதற்கு என ஒரு பசு கட்டப்பட்டு நின்றது. அது கண்ணீர் உகுத்துக் கலங்குகின்றது. அதன் கலக்கத்தைச் சகியாத ஆபுத்திரன், அதனைக் காப்பாற்றத் துணிந்து அதனை அவிழ்த்துக் கொண்டுபோய்க் காட்டில் விட்டுவிடுகின்றான். அந்தணர்கள் பசுவினைக் காணாது அவ்வூரிலுள்ள ‘அடர்க்குறு மாக்கள்’ பலரைக் கூட்டிக்கொண்டு போய் ஆபுத்திரனைப் பற்றிஅடித்துத் துன்புறுத்துகின்றனர். வேள்விப் பசுவைத் திருடிய கள்வன் என ஆபுத்திரனை அந்தணர்கள் தூற்றியதோடு அமையாது அவனுடைய பிச்சைப் பாத்திரத்தில் சோறிடுதற்கு மாறாக அந்தணர் கல்லும் மண்ணும் இடுகின்றனர். பிச்சைப் பாத்திரத்தில் கல்லிடுதற்குக் கயவருந் துணியார். ஆனால் அவ்விழி செயலை மறையோராகிய வேதியர் செய்கின்றனர்.

சிலப்பதிகாரமும் சங்க இலக்கியங்களும் காட்டும் புலனழுக்கற்ற,, புலவுத் துறந்த அந்தணாளர்கள், ஆனியற் பார்ப்பனமாக்கள், தீங்கு செயத் தகாத சாதியினர் என்பனபோன்ற பண்புகளுக்கு மாறாக மணிமேகலை, பார்ப்பனர்கள் இரக்க குணம் சற்றும் அற்ற கொடூர குணமுடையவர்களாகவும் இழிபண்புடையோராகவும் பார்ப்பனியர் கற்பொழுக்கம் கெட்டோராகவும் தம் மகவெனவும் பாராத கருணையற்ற கொலைக் குணம் உடையோராகவும் கூறுகின்றது..

இந்த மாறுபாடு காப்பியத்தில் வரும் ஒரு தனிபாத்திரத்தின் பண்பாகவன்றி. பார்ப்பனக்குலத்தின் குடிவரவாக மணிமேகலை பேசுகின்றது. இது வேதநெறியின் மீது பவுத்தர்கள் கொண்டிருந்த பகையினால் கூறப்பட்ட வசைமொழியேயன்றி வேறன்று. இந்த மனப்பாங்கை இன்று நம் நாட்டில் வாழும் கிறித்துவர்களும் இசுலாமியர்களும் திராவிடக் கட்சியினரும் பவுத்தர்களிடமிருந்து சுவீகரித்துக் கொண்டுள்ளனர்.

குலவொழுக்கம் கெட்ட பார்ப்பனியரையும் பார்ப்பனர்களையும் பற்றிப் பிற்காலத் தெழுந்த சைவ தலபுராணங்களும் பேசுகின்றன. இவையனைத்தும் பார்ப்பன குடியில் தோன்றிய ஒருவரின் ஒழுக்கச் சிதைவையும் அதன் விளைவையும் பேசுகின்றன.

அவையெல்லாம், வைதிக ஒழுக்கத்தின் மேன்மையை வலியுறுத்த,

“மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்”(134)

எனும் திருக்குறளுக்கு இலக்கியமாகவே படைக்கப்பட்டன. அந்தப் புராணக்கதைகள் தனி ஒரு பார்ப்பனன் அல்லது பார்ப்பனியின் ஒழுக்கக் கேட்டால் வரும் இழுக்கினை உரைத்துக், கல்வியினும் பார்ப்பனனுக்கு ஒழுக்கமே மேலான செல்வம் என்பதனை வலியுறுத்துவனவாம். (பேரூர்ப் புராணம்: சுமதி கதிபெறு படலம், திருநீற்று மேட்டுப்படலம்)

உலகியல் நெறியும், வேதநெறியும்

வேதநெறி உலகியல் சமுதாய அமைப்புக்களுக்கு உரியமதிப்பைக் கொடுக்கின்றது. சமுதாய நிறுவனங்கள் (social Institutions) அவ்வக் காலத்துத் தாமே சமூக இயக்கத்தின் ஏதுவாக இயற்கையில் உருவாகும் அல்லது சான்றோர்களால் சமுதாய நலன் குறித்து உருவாக்குப்படுவதாகும். அவை எக்காலத்துக்கும் உரியதெனக் கூற முடியாது. இயங்கும் சமுதாயத்தில் ஒருகாலத்தில் பயன்பட்ட சமுதாய நிறுவனங்கள் பின்னொரு சமுதாயக் கட்டமைப்பில் அமைப்பில் பயன்படாமற் போகலாம். அந்த நிறுவனங்கள் உலகியல் பயன்கருதிப் படைத்துக் கொள்ளப்பட்டன. வைதிகநெறி எக்காலத்துக்கும் பயன்படும் ஆன்மிக நெறிகளாம். ஆன்ம முன்னேற்றங் கருதிக் காலங்காலமாக ஆன்றோர்களாற் கைக் கொண்டொழுகப்படும் ஒழுக்கமாகும்.

சிலப்பதிகாரம் வேட்டுவவரியில் சாலினி, மறவர்கள், மறக்குடித் தாயமாகிய வழிவளங் கரவாது, அதாவது வழிபோவாரை அடித்துப் பறியாது’, அறஞ்செயும் குடிகள்போல நிரைகோடலும் ஆறலைத்தலும் செய்யாமையால்‘, வல்விலெயினர் மன்றுபாழ் பட்டன என்றும் கல்லென் பேரூர்க் கணநிரை சிறந்தன என்றும் கூறி மறக்குடித் தாயமாகிய களவே செய்து உண்ண வற்புறுத்தி அழைக்கின்றாள்.; உயிர்ப்பலியும் உதிரப்பலியும் கொடுப்பவருக்கே ஐயை எனப் பெயரிய தங்கள் குலதெய்வம் வழிவளஞ் சுரக்கும் எனச் சாலினி வாக்களிக்கின்றாள்.

இந்தமறத்தன்மை அவர்களது குடிவரவாகிய குலதன்மம். அதனால்தான் சங்க கால மன்னர்கள் இக்குடியினரை நாட்டெல்லைக் காவலுக்கு நியமித்திருந்தனர்; பயிருக்கு முள்வேலி இடுதல் போல. வேலி பயிரை மேயாதவாறு காத்தல் அரசன் கடமையாயிற்று.

மணிமேகலையில், மாதவியின் அன்னை, சித்திராபதி, “நாடகக்கலை கற்றுத்துறை போகிய நீ நற்றவம் புரிந்தது நாணுத் தகவுடைத்து” எனக் கூறியது, குலதருமத்தை எடுத்தோதி உலகியலை நிலைநாட்ட முயன்றதாகும். அறம் உணர்ந்த மாதவி தனக்கும் தன் மகளுக்கும் எந்தவொழுக்கம் உயர்வளிக்கும் எனத் தேறி குலவொழுக்கத்தைக் கைவிட்டுத் துறவொழுக்கத்தைப் பேணியது வேதநெறி பற்றியதாகும்.

இந்த மாற்றத்தை மேற்கொள மிக்க துணிவும் தியாகமும் வேண்டப்படும். ஊரலர் தாங்கும் மனோதிடமும் வேண்டும். “நாடவர் நந்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப, நாமும் அவர்தம்மை யார்ப்ப வார்ப்ப” என்று மணிவாசகமும் இந்நிலையை வற்புறுத்திற்று.

உயிர்கள் தாம் பிறந்த சூழ்நிலைகளை யொட்டியே வாழுதல் இயலும். இவ்வாறு பிறந்த சூழ்நிலையை ஒட்டி வாழும்போது ‘நான் எனது’ என்னும் உணர்வோடு கூடியே தன்னலத்துடன் வாழும் உயிர், பிற உயிர்களுடன் ஒட்டி உறவாடும்போது தன்னலத்தைப் பிற உயிர்களுக்காகச் சிறிதுசிறிதாகக் குறைத்துக் கொள்ளும். இதுவும் தன்னைச் சேர்ந்த உயிர்களுக்காகவே நிகழும். இதனால் அன்பு எனும் உணர்வு பிறக்கின்றது. எல்லா உயிர்களையும் நோக்கிய தன்னல மறுப்பே ‘அருள்’ எனப்படுகின்றது.

இதன் உச்சநிலை, “சொல்லுதற்கரிய நித்தியமான ஆன்மவர்க்கத்துக்கு, ஞானமும் செல்வமும் மிகவும் பெரிதாகிய ரூப அழகும், பெறுதற்கரிய சுவர்க்க பலமும், தம்மினு மிகப் பெருக வுண்டாக வேண்டும் என்று நினைத்திருக்கும் “ எண்ணுதற்கரிய பெருங்குணமாம். (ஞானாமிர்தம் 24:12 -15)

இந்த ‘எண்ணரும் பெருங்குணம்’ தன்னலம் கருதும் இயற்கைக்கு மாறானது. இது உயிர்களின் இயற்கைக் குணமன்று.

சுயநலமாகிய தற்காப்புணர்வே (selfpreservation) இயற்கையான வாழ்வூக்கி. தன்னலமறுப்பு செயற்கையே. இயல்புணர்வை அரிதில் வென்றோருக்கே அது கைகூடும். அத்தகைய அருளாளர்களுக்கே இறைவனருள் கிட்டும் என்கிறார் திருஞான சம்பந்தர்.

“உலகினி லியற்கையை யொழித்திட், டற்றவர்க் கற்ற சிவனுறை கின்ற, ஆலவாயாவது மிதுவே”(3:120: 2)

இயற்கையோடு ஒட்டி அதற்கிணங்கி வாழ்வது உலகியல்நெறி. அதனை வென்று வாழ்வது வைதிகநெறி.

தொடர்புடைய பதிவுகள்

குறிச்சொற்கள்: , , , , ,, , ,

யுனிக்கோட் - பயன்பாடு

அறிமுகம்    ஆங்கில மொழியைத் தவிர பிறமொழிகளிலும் பலரும் பல்வேறு குறியேற்றங்களையும் எழுத்துருக்களையும் பயன்படுத்தி வந்தனர். இந்த முறையில் ஒரே ...