எனது வலைப்பதிவு பட்டியல்

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2022

சீவக சிந்தாமணி - விமலையார் இலம்பகம்

 


 திருத்தக்க தேவர்

முன்னுரை

          ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவரால் கிபி 9 ஆம் நூற்றாண்டில் பாடப்பட்டதாகும். சமண கருத்துக்களை கூறும் சமண காப்பியமாக இக்காப்பியம் விளங்குகிறது. சீவகசிந்தாமணி; நாமகள் இலம்பகம், முதலாக முத்தி இலம்பகம் ஈராக 13 இலம்பகங்களை  கொண்டுள்ளது. மணநூல் எனவும் அழைக்கபடும் இக்காப்பியத்தில் 3145 விருத்தப் பாடல்கள் காணப்படுகின்றன.

விமலையார் இலம்பகம்

          சீவகசிந்தாமணியில் எட்டாவது இலம்பகமாக காணப்படுவது, விமலையார் இலம்பகம் ஆகும். இதில் 106 பாடல்கள் காணப்படுகின்றன. இவ்இலம்பகத்தில் சீவகன், சோலையில் தங்கியிருந்த தனது தாயாகிய  விசயை சந்திக்கச் செல்கிறான். அவனைக் கண்ட விசயை, அரச நீதியையும் ஆட்சி முறையையும் அறிவுரையாக கூறுகிறாள். மேலும், தனது நாட்டைக் கைப்பற்றிய கட்டியங்காரனைக் கொல்ல தாய்மாமன் கோவிந்தனைத் துணையாக கொள்ளும்படி சீவகனுக்கு அறிவுரைகளை கூறுகிறாள். சீவகனும் தாய்க்கு ஆறுதல் கூறிக்கொண்டு கோவிந்தனைத் தேடி நண்பர்களோடு புறப்படுவதாக இவ்இலம்பகம் கூறுகிறது.

 

விசயை சீவகனுக்கு அறிவுரைகள் கூறுதல்

          விசயை; மரவ மரம், நாகமரம், மணம் வீசும் செண்பக மரமும், குரவ மரமும், கோங்க மரமும், குடம் போன்று காய்காய்க்கும் சுரபுன்னை மரமும் கலந்து காணப்பட்ட சோலையில் தனது மகனாகிய சீவகனை பார்த்து பின்வரும் நீதிக் கருத்துக்களை கூறினாள்.

"சீவகனே! அழிக்கமுடியாத மலையிலும் காட்டிலும் பெரும் செல்வத்தோடு வாழ்கின்ற குறுநில மன்னர்களின் மகளை மணமுடித்து கொள்ளுவதும், நாட்டை ஆளும் வலிமைமிக்க அரசர்களின் மகளை திருமணம் செய்து கொள்வதும் காலங்காலமாக மன்னர்களின் வழக்கமாக இருந்து வருகின்றது என்பதினை நூல்களைக் கற்றறிந்த சான்றோர்கள்  அறிந்துள்ளார்கள். என்பதை அறிவாயாக!"

"அரசியல் முறையால், ஆறில் ஒரு பகுதியை வரியாகப் பெற்று செல்வத்தை சேர்க்கவேண்டும், பழமையான பகையினை தன் மனதில் நிலையாக வைத்திருக்க வேண்டும். முள்ளைக் கொண்டு முள்ளை எடுப்பதுபோல  பகைவரின், பகைவரை நண்பராக்கி அவரைக் கொண்டு பகைவனை அழிக்க வேண்டும். இது அரச நீதி ஆகும்!"

"ஒற்றர்களை, ஒற்றர்களை கொண்டு ஆராய்ந்து அறிதல் வேண்டும். அற நூல்களைக் கற்றறிந்த அமைச்சர்களை கண்ணை போல் காப்பாற்ற வேண்டும். மந்திரிகளின் சுற்றத்தையும் தந்திரிகள் சுற்றத்தையும் சிறந்த வகையில் ஆராய்ந்து பெருக்க வேண்டும். இவை தான் வெற்றி பெறுவதற்கான அரச சூழ்ச்சியாகும்."

"பொன்னாபரணங்களால் அழகு செய்யும் மார்பை உடைய சீவகனே! பல வெற்றிகளைப் பெறுவதும், நாட்டை மேம்பாடு அடையச் செய்வதும், மட்டும் போதாது. கல்வி அழகை அனைவருக்கும் கொடுத்து, பொருளில் குன்றியவரை மலை போன்ற செல்வந்தராக மாற்றுவதும் அரச கடமையாகும் "

"பொன்  பொருளைச் செலவு செய்து நாட்டை காவல் செய்யும் பெரும் படையை உருவாக்கலாம், அப்படையால் பல நாடுகளை வெற்றி கொள்ளலாம். வெற்றிகள் மூலம் பெரும் செல்வத்தை குவிக்கலாம். செல்வத்தால் அடையமுடியாது பெரு வீடு கிடைக்கும்."

"காளை போன்ற வீரமிக்க சீவகனே! இப்பொழுது நாம் நிலத்தை இழந்து, செல்வத்தில் குறைந்து, நல்ல குலத்திலும் தாழ்ந்த நிலையில் காணப்படுகிறோம். மேலும், இப்பொழுது நம்மிடம் கலைக்கணாளரும், நல்ல அமைச்சர்களும் இல்லை. இந்த நிலையில் கட்டியங்காரன் அழிக்க நீ எவ்வாறு துணிந்தாய்?" என விசயை சீவகனைப் பார்த்து கேட்டாள்.

சீவகன் விசயைக்கு ஆறுதல் கூறுதல்

          விசயை கூறியதைக் கேட்ட சீவகன் தாயை பார்த்து " அன்னையே! தீயைப் போன்ற ஆற்றல் உடையவன் நான். இடியைப் போன்ற குரலை உடைய சிங்கம் ஒரு நரியுடன் போர் புரிவது என்றால், அதற்கு சூழ்ச்சிகள் எதுவும் தேவை இல்லை. என்னை எண்ணி நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். கட்டியங்காரன் பாம்பு என்றால், அழகிய மாலைகளை அணிந்த நந்தட்டன் கருடன் ஆவான். " எனக் கூறினான்.

 விசயை மேலும் அறிவுரை கூறுதல்

          அதனைக் கேட்ட விசயை மகிழ்ந்து, ஒளி பொருந்திய அழகுடைய நந்தட்டனைப் பார்த்து மனம் மகிழ்ந்து அவனை தன் கையால் தீண்டி, அன்பினால் கனிந்து பார்த்து அவனுடைய வயிரத் தூணைப் போன்ற தோள்களை பார்த்து  " கட்டியங்காரன், கவர்ந்த நிலத்தை இத்தோள்கள் மீட்காமல் போகுமோ? " எனக் கூறினாள்.

          மேலும், விசயை சீவகனை பார்த்து "பகல் பொழுதில், காட்டிலுள்ள ஒரு காக்கை, ஆயிரம் கூகைகள் குடியிருக்கும் இடத்திற்கு சென்று அவற்றைக் கொல்லும். அதுபோல, இடத்தையும் காலத்தையும் கருத்தில் கொண்டு எந்த செயலையும் செய்தால் அவர்களால் முடியாதது ஒன்றுமில்லை. சில நேரங்களில், குகையில் வாழும் சிங்கம் இடம் அறியாமல் நரிகள் வாழும் மூங்கில் காட்டில் சென்று நரி இடம் மாட்டிக் கொள்வதை போல ‘யாம் வீரம் உடையோம்’ என நினைத்து, காலம், இடம் உணராமல் எச் செயலையும் செய்யக்கூடாது  " என அறிவுரைகளைக் கூறினாள்.

முடிவுரை

இவ்வாறு விசயை, சீவகனிடம்  கட்டியங்காரனை வெல்வதற்கு வேண்டிய வழிகளையும், அரச நீதிகளையும் அறிவுரையாக கூறுவதாக விமலையார் இலம்பகம் கூறுகிறது.

......இராஜாலி......

வியாழன், 18 ஆகஸ்ட், 2022

மணிமேகலை - பாத்திர மரபு கூறிய காதை


 முன்னுரை

          ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை கி.பி இரண்டாம் நூற்றாண்டில், சீத்தலைசாத்தனாரால் இயற்றப்பட்டதாகும். சிலப்பதிகாரத்தின்  தொடர்கதையாக அமையும் இக்காப்பியம் இரட்டைக் காப்பியங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. பௌத்த சமயக் கருத்துக்களைக் கூறும் இக்காப்பியம், முப்பது காதைகளையும் 4755 அடிகளையும் கொண்டதாகும். ‘மணிமேகலை துறவு’ எனவும் இக்காப்பியம் அழைக்கப்படுகிறது.

 பாத்திர மரபு கூறிய காதை

          மணிமேகலையில், பதினான்காவது காதையாக காணப்படுவது ‘பாத்திர மரபு கூறிய காதை’ ஆகும். இதில் அறவண அடிகள்; மணிமேகலை, மாதவி மற்றும்  சுதமதி  ஆகியோரிடம், ஆபுத்திரனுக்கு அமுதசுரபி கிடைத்த செய்தியையும், அமுதசுரபியின் தன்மையையும் கூறுவதாக இக்காதை அமைந்துள்ளது.

அறவண அடிகள் அமுதசுரபியின் தன்மையை கூறுதல்

தனக்கு முன்னால் அமர்ந்திருந்த மணிமேகலையை பார்த்து அறவண அடிகள், "பூங்கொடியை போன்ற அழகு பொருந்திய மணிமேகலையே கேட்பாயாக!" என ஆபுத்திரன் அமுதசுரபி பெற்ற செய்தியை பின்வருமாறு கூறினார்.

வழிப்போக்கர்கள் ஆபுத்திரன் இடம் உணவு வேண்டுதல்

மழை பெய்து கொண்டிருந்த ஒருநாள் இரவில் ஆபுத்திரன் தூங்கிக் கொண்டிருந்த சிந்தாதேவி ஆலயத்திற்குள் வந்த வழிப்போக்கர்கள், ஆபுத்திரனை எழுப்பி " வயிறு காய் பெரும் பசி மலைக்கும் "என தாங்கள் பசியால் வாடுவதைக் கூறினார்கள். அவர்களின் பசியைப் போக்க உணவு எதுவும் இல்லாத நிலையில் வருந்திய ஆபுத்திரன், சிந்தா தேவியின் முன் உள்ளம் உருகி வேண்டினான்.

சிந்தாதேவி அமுதசுரபியை கொடுத்தல்

          பிறர் துன்பம் கண்டு வருந்திய ஆபுத்திரன் முன்பு சிந்தாதேவி தோன்றி,

"நாடு வறம் கூறினும் இவ்   ஓடு வறம் கூறாது

 வாங்குநர் கைஅகம் வருத்துதல் அல்லது

 தான் தொலைவு இல்லாத் தகைமையது "

எனக்கூறி, தனது கையில் இருந்த அமுத சுரபியை ஆபுத்திரனிடம்  கொடுத்து மறைந்தது.

 சிந்தா தேவியைப் போற்றுதல்

          அமுத சுரபியை பெற்ற ஆபுத்திரன்,"சிந்தா தேவியே! அழகு பொருந்திய இக்கோயிலில் நந்தா விளக்காக விளங்குபவளே! புலவர்களின் நாவில் இசையாக இருப்பவளே! தேவர்களுக்குத் தலைவியாகவும் மண்ணில் உள்ளோருக்கு மூத்தவளாகவும்   இருந்து துன்பப்படுபவர்களின் துயரத்தை போக்குபவளே!" என தேவியை வணங்கி அப்பாத்திரத்தை கொண்டு அவர்களின் பசியைப் போக்கினான். வாங்குவோரின் கை வருந்தும் படியாக மன்னுயிர் அனைத்திற்கும் உணவளித்தான். பழுத்த மரத்தை நாடி பறவைகள் வருவதுபோல ஆபுத்திரனை நாடி வந்து பசியாறி சென்றனர் பலர். ஆபுத்திரனின் புகழ் இந்திரலோகம் வரை சென்றது.

ஆபுத்திரனை காண இந்திரன் வருதல்

          ஆபுத்திரனின் செயலைக் கேள்விப்பட்டு வியந்த இந்திரன் அதனை காண்பதற்காக,  மறையவன் போல கம்பு ஊன்றி தளர்ந்த நடையுடன் ஆபுத்திரன் முன்பு வந்து "உன் பெரும் தானத்து உறுபயன் கொள்க" எனக் கூறினான். அதனைக் கேட்ட ஆபுத்திரன்  "பசி நோயினால் வருந்தியவர்களுடைய பசியினை தீர்த்து அவர்களுடைய இனிய முகத்தை நான் காணும்படி செய்கின்ற எனது தெய்வத்தன்மை பொருந்திய பாத்திரம் ஒன்றே எனக்குப் போதும். வேறு ஒன்றும் எனக்கு வேண்டாம்" எனக்கூறி, இந்திரனை அவமதித்தான். இதனால் ஆத்திரமடைந்த இந்திரன், கோபப்பட்டு, ஆபுத்திரனின் செருக்கினை போக்க எண்ணி 'பசிப்பிணியால் வருந்துவோர் இல்லாத நிலையை உருவாக்க விரும்பி  மழையினை பெய்வித்து, வறுமையைப் போக்கி’ அனைவருக்கும் வளத்தை கொடுத்தான். இதன் காரணமாக பசியினால் வருந்துவோர் இல்லாத நிலை அவ்வூரில் ஏற்பட்டது. பாண்டியநாட்டில் பெருமழை பொழிந்து, வயல் வளம் பெருகியதால் மக்கள் பசியில் வருத்தம் தெரியாமல் வாழ்ந்தனர். உணவு வேண்டி யாரும் ஆபுத்திரன் இடம் செல்லும் நிலை ஏற்படவில்லை. எனவே, ஆபுத்திரன் அமுதசுரபியை கையில் எடுத்துக்கொண்டு, சிந்தாதேவியின் ஆலயத்தை விட்டு வெளியேறி  “ஊரூர்  தோறும் உண்போர் உண்டோ” என வினவ, அதுகேட்டு  செல்வத்தில் களித்த மக்கள் ‘யார் இவன்?’ என இகழ்ந்து பேசினர். இதனால் மனம் வருந்திய ஆபுத்திரன் அங்கிருந்து சென்றான்.

சாவக நாட்டை நோக்கி ஆபுத்திரன் செல்லுதல்

          உணவு வாங்குவதற்கு யாரும் இல்லாத நிலையை கண்டு வருந்திய ஆபுத்திரனை, கப்பலில் வந்து இறங்கிய வணிகர்கள் சிலர் கண்டு  வணங்கி,

 " சாவக நல் நாட்டு தன் பெயல் மறுத்தலின்

 உன் உயிர் மடிந்தது உரவோய் "

எனக் கூறினார்கள். அதனைக் கேட்ட ஆபுத்திரன், அமுத சுரபியை கையில் எடுத்துக்கொண்டு, சாவக நாட்டிற்கு செல்வது இறைவனின் சித்தம் என எண்ணி சாவகம் செல்லும் கப்பலில் ஏறிப் பயணித்தான். கப்பல் மணிபல்லவத்தீவில் அருகே செல்லும்போது, பெருங் காற்று வீசியதால் மணிபல்லவத்தீவில் ஒரு நாள் பயணிகள் அனைவரும் தங்கும் நிலை ஏற்பட்டது. மறுநாள், கப்பலில் இருந்து இறங்கியவர்கள் எல்லோரும் ஏறி விட்டார்கள் என எண்ணி மாலுமி கப்பலை ஓட்டிச் சென்றுவிட்டார். மனிதர்களில் யாரும் இல்லாத தீவில் தானும் அப்பாத்திரமும் தனித்து இருப்பதை எண்ணி வருந்தினான் ஆபுத்திரன்.

கோமுகிப் பொய்கையில் அமுதசுரபியை வீசுதல்

 மணிபல்லவத் தீவில் தனித்திருந்த ஆபுத்திரன்,

" மன் உயிர் ஓம்பும் இம் மா பெரும் பாத்திரம்

 என் உயிர் ஓம்புதல் யானோ பொறே என்

 தவம் தீர் மருங்கின் தனித் துயர் உழந்தேன்

 சுமந்து என் பாத்திரம்?"

என பாத்திரத்தை  தொழுது, எதிரே இருந்த கோமுகி என்னும் பொய்கையில்,

 " ஓர் ஆண்டு ஒருநாள் தோன்று"

எனக்கூறி வீசியது மட்டுமல்லாமல்,

" அருள் அறம் பூண்டு ஆங்கு ஆருயிர் ஓம்புநர்

 உளர் எனில் அவர் கைப் புகுவாய் "

என வேண்டியவாறு ஆபுத்திரன் உண்ணாநோன்பு இருந்தான்.

பசுவின் வயிற்றில் மீண்டும் பிறத்தல்

          அப்பொழுது, மணிபல்லவத்தீவுக்கு வந்த அறவணஅடிகள் ஆபுத்திரனிடம் 'என்ன நடந்தது?' என கேட்க, அவன் மேற்கண்ட செய்திகளைக் கூறிவிட்டு, கிழக்கில் தோன்றிய சூரியன் மேற்கே மறைவது போல மணிபல்லவத்தீவில் தன் உடம்பை விட்டுவிட்டு, உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தையும் காக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, சாவக நாட்டில் உள்ள ஒரு பசுவின் வயிற்றில் மீண்டும் பிறந்தான். என அறவண அடிகள் தானறிந்த செய்தியை மணிமேகலையிடம்  கூறினார்.

முடிவுரை

          மணிமேகலையில், பதினான்காவது காதையாக காணப்படும் ‘பாத்திர மரபு கூறிய காதையில்’, அறவணஅடிகள், மணிமேகலையிடம் ஆபுத்திரன் பெற்ற அமுதசுரபியின் தன்மையையும், பசித்தவர்களுக்கு உணவளித்த ஆபுத்திரனின் செயலையும் எடுத்துக்கூறுவதாக காணப்படுகிறது. என்பதனை இக்கட்டுரையின் மூலம் அறிய முடிகிறது.

                                                   ...........இராஜாலி............

சனி, 23 ஜூலை, 2022

தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்

முன்னுரை

      தமிழர்கள் காலந்தோறும், இராமாயணம், மகாபாரதம், புராணக் கதைகள், கிராமியக் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், மரியாதைராமன் கதைகள், தெனாலிராமன் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள் என பல்வேறு கதைகளைக் கேட்டு வருகின்றனர். கதைகளின் வழியாக ஒழுக்கநெறிகள், வாழ்வியல் கூறுகள் அறிவுறுத்தப்படுகின்றன. மேலும், தமிழ் இலக்கிய வடிவத்தில் சிறுகதை இலக்கியம் பல தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளது. அத்தகைய தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும், வளர்ச்சியும் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

தொல்காப்பியர் கூறும் கதை மரபு

      கதை சொல்லும் மரபு தொன்றுதொட்டு இருந்து வந்த வழக்கம் என்பதைத் தொல்காப்பியர்,

'பொருள் மரபில்லாப் பொய்ம்மொழி யானும்

பொருளோடு புணர்ந்த நகைமொழியானும்' 

என்று உரைப்பார்.

சிறுகதைக்கான இலக்கணம்

   அரைமணி முதல் இரண்டு மணிநேரத்துக்குள் படித்து முடிக்கக்கூடியது சிறுகதை என்பார் எட்கர் ஆலன்போ. சுருங்கச் சொல்லுதலும், சுருக்கெனச் சொல்லுதலும் இதன் உத்திகளாகும். அதனால் நீண்ட வருணனைகளுக்கு இங்கு இடமில்லை. குதிரைப் பந்தையம் போலத் தொடக்கமும் முடிவும் இருத்தல் வேண்டும். சுவைமிக்கனவாக இருத்தல் வேண்டும் என்பர், செட்ஜ்விக். புதினம் புளியமரம் என்றால், சிறுகதை தென்னைமரம் என்பார் இராசாசி, செகாவிவ் என்பவர் தரமிக்க சிறுகதைகளைத் தந்து சிறுகதைப் படைப்புக்கான நோபல் பரிசைப் பெற்றார். இவரைச் சிறுகதை உலகின் தந்தை என அழைப்பர்.

சிறுகதை தோன்றிய சூழல்

   19ம் நூற்றாண்டில்  இலக்கியத்தின் மாற்றங்கள் ஏற்பட்டு இலக்கியப்  பரப்பிலும் வடிவத்திலும் பல்வேறு மாற்றங்கள் வந்துள்ளன. அச்சுப்பொறியின் வருகையால் தமிழ்ச் சிறுகதை வழக்கில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டது. வாய்மொழியாக வழங்கி வந்த கதைகள் பல நூல் வடிவில் அச்சுப் பெற்று வெளியிடப்பட்டன. இவ்வகையில் முதன்முதலில் அச்சில் வந்தது வீரமாமுனிவரின் 'பரமார்த்த குருவின் கதை' அதைத் தொடர்ந்து ஈசாப்பின் நீதிக்கதைகள், திராவிடபூர்வகாலக்கதைகள், தெனாலிராமன் கதைகள் போன்றவைத் தமிழில் அச்சாயின. இதனால் தமிழ்நாட்டில் கதை கேட்பது மட்டுமல்ல படிக்கும் வழக்கமும் அதிகமானது.

தமிழ்ச்சிறுகதையின் முன்னோடிகள்

· வீராசாமி செட்டியார் (1855) தாம் எழுதிய உரைநடைக் கட்டுரைகளைத் தொகுத்து 'வினோத ரசமஞ்சரி'என்று வெளியிட்டார்.

· வ. வே. சு.ஐயரின் 'குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதையை முதன்முதலில் அறிமுகப் படுத்தியது விவேக விவேக போதினி ஆகும். இவரே தமிழ்ச் சிறுகதையின் தந்தை என அழைக்கப்பட்டார். 'குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதை, மங்கையர்கரசியின் காதல் போன்ற கதைகளில் நிகழ்வு ஒருமை, கால ஒருமை, பாத்திர ஒருமை, உணர்வு ஒருமை சிறுகதைக்குரிய இலக்கணங்கள் அனைத்தும் ஒருங்கே அமைந்திருப்பதைக் காணலாம்.

· செல்வகேசவராய முதலியாரின் அபிநவக் கதைகள் என்ற  கதைகள்  தொகுப்பு பெரிதும் பாராட்டப் பட்டது.

· ஆரம்ப காலச் சிறுகதை ஆசிரியர்களுள் மாதவைய்யா குறிப்பிடத்தக்கவர். இவரது 'குசிகர் குட்டிக்கதைகள்' ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியானது. இவர் பிராமணச் சமூகத்தில் காணப்பட்ட குழந்தைத் திருமணம், விதவைகள் பட்ட துயர், வரதட்சனைக் கொடுமை முதலிய சீர்கேடுகளைப் பற்றித் தமது கதைகளின் மூலம் மிக வன்மையாகக் கண்டித்தவர்.

· மகாகவி சுப்பிரமணிய பாரதியார் வங்காள எழுத்தாளர் இரவீந்திரநாத்தாகூரின் 11 சிறுகதைகளை மொழிபெயர்த்து வெளியிட்டார்.

· கல்கி அவர்கள் சிறுகதைத் துறையில் கால்வைத்து, புதினங்களால் புகழடைந்து கல்கி இதழைத் தொடங்கினார். இவரது கதைகளில் கணையாழியின் கனவு, திருடன் மகன் திருடன், வீணை பவானி ஆகிய கதைகள் குறிப்பித்தக்கன.

· சொ.விருத்தாச்சலம் என்று அழைக்கப்பட்ட புதுமைப்பித்தன் அவர்கள் சிறுகதை மன்னன் என அழைக்கப்பட்டார். கேலியும்,கிண்டலும் கலந்த சமூகச் சாடல் இவரைத் தமிழுலகிற்கு அடையாளம் காட்டியது. சிறுகதைச் செல்வர் என்றும், தமிழ்நாட்டின் மாப்பசான் எனப் போற்றப்பட்டார். இவரது கதைகளில் கயிற்றரவு, சாபவிமோசனம், பொன்னகரம் ஆகியன காலத்தை வென்ற கதைகளாகும்.

· மௌனி என்ற புனைப் பெயரில் எழுதிய மணி அவர்களைப் புதுமைப்பித்தன் சிறுகதை உலகின் திருமூலர் என்று அழைப்பார்.

இதழ்களால் வளர்ந்த சிறுகதை

   தமிழ்ச்சிறுகதையில் மலர்ச்சிக்கு களம் அமைத்தது மணிக்கொடி சிற்றிதழாகும். இது டி. எஸ். சொக்கலிங்கம்,  சீனிவாசன் ஆகியோரால் நடத்தப்பட்டது. பின்னர் இதை முழுக்கமுழுக்க சிறுகதை இதழாக பி. எஸ். ராமையா வெளியிட்டார். இதில் புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், மௌனி போன்றவர்கள் சிறந்த சிறுகதைகளை எழுதினார்கள். இவர்கள் மணிக்கொடி தலைமுறை என்று சொல்லப்படுகிறார்கள். மேலும், மணிக்கொடி இதழில், சிறந்த சிறுகதைகளை எழுதியவர்களாக க.நா.சுப்ரமணியம், சி.சு.செல்லப்பா, ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், லா.ச.ராமாமிருதம், சுந்தரராமசாமி, கு.அகிரிசாமி, ந.பிச்சமூர்த்தி, கி.ராஜநாராயணன், மு.வ, அகிலன் போன்றவர்கள் குறிப்பிடப்படுகிறார்கள்.

சிறுகதை வளர்ச்சியில் பிற காரணிகள்

     இதழ்கள் பல்வேறு வகையான சிறுகதைப் போட்டிகளை உருவாக்கி சிறுகதை எழுத்தாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தின. அதைப் போலவே சிறுகதை தொகுப்பு முயற்சிகளாலும் அமைப்புகளின் பரிசுத் திட்டங்களாலும் சிறுகதை சிறப்பாக வளர்ச்சியடைந்து வந்துள்ளது.

அயல்நாடுகளில் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சி

    தமிழ்ச் சிறுகதை வளர்ச்சி என்பது தமிழக எல்லையோடு நின்றுவிடவில்லை. தமிழ் பேசும் பிற நாடுகளிலும் அதன் வளர்ச்சியைக் காண இயலும். தமிழர்கள் அதிகம் வாழும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர்களும் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிக்கு வளம் சேர்த்துள்ளனர்.

தொழில்நுட்பத்தில் சிறுகதை

   இதழ்களால் வளர்ந்த சிறுகதை, இணையத்தாலும் வளர்ச்சியினைப் பெற்றது. சிறுகதைக்கென பல இணையதளங்களும் வலைப்பூக்களும் காணப்படுகின்றன. மேலும், அலைபேசியிலும், பிரதிலிபி போன்ற செயலிகளும் சிறுகதைகளைப் பதிப்பித்து சிறுகதை தேயாது வளம் பெறும் பங்கினைச் செவ்வனே செய்கின்றன.

 முடிவுரை 

       காலத்துக்கு ஏற்ப வளர்ந்து வந்ததமிழ்ச்சிறுகதை இன்றைய அவரசகாலத்துக்கு ஏற்ப ஒருபக்கக் கதை, அரைப்பக்கக் கதை, கால்பக்கக் கதை, மைக்ரோக்கதை என தன் வடிவத்தை மாற்றிக் கொண்டுள்ளது. உலக சிறுகதைகளுக்கு இணையாக தமிழ்ச்சிறுகதை வளர்ச்சி அடைந்துள்ளது.

......இராஜாலி......

வியாழன், 14 ஜூலை, 2022

சிலப்பதிகாரம் - ஊர்காண் காதை

 

“சிலப்பதிகாரம்  -   ஊர்காண் காதை”

  

முன்னுரை

          ஐம்பெருங்காப்பியங்களில் முதன்மையானதாக கருதப்படும் சிலப்பதிகாரம் கி.பி இரண்டாம் நூற்றாண்டில் இளங்கோவடிகளால் எழுதப்பட்டதாகும். முதன்மைக் காப்பியம், முத்தமிழ் காப்பியம், குடிமக்கள் காப்பியம், புரட்சிக் காப்பியம் என அழைக்கப்படும், சிலப்பதிகாரம் கோவலன், கண்ணகி,மாதவி இவர்களில் வரலாற்றைக் கூறுவதாகும். இக்காப்பியம், புகார் காண்டம் , மதுரைக்காண்டம், வஞ்சிக் காண்டம் என்ற மூன்று காண்டங்களையும் முப்பது காதைகளையும்  கொண்டதாகும். தொடர்நிலைச் செய்யுளாக அமைந்த இக்காப்பியத்தில், 5001 பாடல்கள் காணப்படுகின்றன.

ஊர்காண் காதை

          மதுரைக் காண்டத்தில், நான்காவது காதையாக விளங்குவது ‘ஊர்காண் காதை’ ஆகும். இதில், மதுரையை நோக்கி வந்த, கோவலனும் கண்ணகியும் கவுந்திஅடிகளுடன் புறஞ்சேரியில் தங்கி இருந்தார்கள். பொழுது விடிந்ததும், கோவலன்  கவுந்திஅடிகளைத் தொழுது, தனது மனத் துயரங்களை எடுத்துக் கூறியதோடு, தன்னால் கண்ணகிக்கும் நேர்ந்த துன்பங்களை கூறி  வருந்தினான். கவுந்திஅடிகள்  கோவலனுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் கோவலன் கண்ணகியை கவுந்தியடிகளின் பாதுகாப்பில் விட்டுவிட்டு,  மதுரை நகருக்குள் சென்று பல்வேறு காட்சிகளைக் கண்டான். பல்வேறு கடைகளையும், தெருக்களையும் கண்டு மீண்டும் புறஞ்சேரிக்கு திரும்பி வந்தான். என்ற செய்தியை கூறுவதாக 'ஊர் காண் காதை' அமைந்துள்ளது.

பொழுது புலர்ந்தது

        புறஞ்சேரியில் காணப்பட்ட சோலைகளிலும், நீர் நிறைந்த பண்ணைகளிலும், கதிர் முற்றி வளைந்த வயல்களிலும் பறவைகள் துயிலெழுந்து ஒலி எழுப்பின. சூரியன் உதயம் ஆனதால் குளங்களில் உள்ள தாமரைகள் மலர்ந்தன. பகை அரசர்களுக்கு தலை நடுக்கத்தை கொடுக்கும் பாண்டிய மன்னனின் வாளில் இருந்து எழும் ஒளியைப் போல மதுரை முழுவதும் சூரிய ஒளி பரவி மக்களை துயில் எழுப்பியது.

சங்கும் முரசும் ஒலித்தன

        புறஞ்சேரியில், நெற்றிக் கண்களையுடைய சிவபெருமான் கோயிலும், கருடக் கொடியை உடைய திருமாலின் கோயிலும், வெற்றிதரும் கலப்பை படையினை ஏந்திய பலராமன் கோயிலும், சேவல் கொடியை உடைய முருகப் பெருமான் கோயிலும், அறத்தை போதிக்கும் அறவோன் பள்ளியும், வீரம் விளைந்த மன்னனின் கோயிலும் காணப்பட்டன. அங்கு,தூய வெண் சங்கும், காலை முரசும் முழங்கி காலைப் பொழுதை அறிவித்தன.

கோவலன் கவுந்தி அடிகளை வணங்கி தன் நிலையை கூறுதல்

        அப்பொழுது கோவலன், தியானத்தில் இருந்த கவுந்தி அடிகளைக் கண்டு கையால் தொழுது வணங்கி போற்றினான்.

 "நறுமலர் மேனி நடுங்குதுயர் எழுத

 அறியாத் தேயத்து ஆரிடை உழந்து

 சிறுமை உற்றேன் செய்தவத் தீர்யான்"

 

என கண்ணகிக்கு தான் இழைத்த தவறினை கூறினான். மேலும், சிறப்புமிக்க இம்மதுரையிலுள்ள பெரு வணிகர்களிடம் எனது நிலையினை கூறி திரும்ப வரும் வரைக்கும் கண்ணகியை கவுந்தியடிகளின்  பாதுகாப்பில் வைத்துக் கொள்ளும்படி  வேண்டிக் கேட்டுக் கொண்டான்.

கவுந்தியடிகளின் அறிவுரைகள்

கோவலனின் துயர மொழி கேட்ட கவுந்தியடிகள் அவனைப்பார்த்து "முற்பிறவியில் செய்த தீவினையின் காரணமாக காதலியுடன் பெரும் துயரம் அடைந்த கோவலனே! மனிதர்கள்,  'தீமையை விட்டு விலகுங்கள். விலக வில்லை எனில் தீய செயல் தன் பயனாகிய துன்பத்தை தருவிக்கும்' என அற நூல்களை கற்றறிந்த சான்றோர்கள் கூறிய கருத்துக்களை பொருட்படுத்தாமல்  செயல்பட்டு துன்பப்படுகிறார்கள். அவ்வாறு, அவர்கள் படும் துன்பத்தை கண்டு  ஞானிகள் யாரும் வருத்தப்பட மாட்டார்கள். பெண்களைப் பிரிந்தால் ஏற்படும் துன்பமும், பெண்களோடு புணர்ந்தால் ஏற்படும் துன்பமும் இல்லறத்தாருக்கு எப்பொழுதும் உண்டு. ஆனால் ஒப்பற்ற தவ வாழ்க்கை மேற்கொள்ளும் ஞானிகளுக்கு அத்துன்பம் கிடையாது. இவ்வுலகில், பெண்டிரும் உணவுமே இன்பம் தரும் பொருட்கள்  எனக் கருதி வாழ்வோர் முடிவில் அளவற்ற துன்பத்தை அடைவார்கள் என்பதைத் துறவிகள் உணர்ந்து, காமத்தை விலக்கினார்கள். அவ்வாறு ஞானிகள் விலக்கிய காமத்தின் மீது பற்றுக் கொண்டு பலர் துன்பத்தையே அனுபவித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

இவ்வாறு  காதல் துன்பத்தில் விழுந்தவர்கள் காலங்காலமாக இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். தந்தையின் ஏவலால் தன் மனைவியுடன் கானகம் சென்று,அவளைப் பிரிந்து கடும் துயருற்ற வேதத்தின் நாயகனாகிய இராமனின் துன்பத்தை நீ அறிவாயா? அது இராமனின் வினைப்பயன் அன்றோ?. சூதாட்டத்தில் தோற்று,மனைவி தமயந்தியுடன் காட்டிற்குச் சென்று அவளைப் பிரிந்த நளனின் கதையை அறிவாயோ? அதுவும் வினைப் பயனே!

 நீ அவர்களைப்போல துன்பம் அடையவில்லை. மனைவியை பிரியாத வாழ்க்கையை பெற்றிருக்கிறாய். எனவே, வருத்தம் கொள்ளாமல் மதுரைக்குச் சென்று தங்குவதற்கு ஏற்ற இடம் ஒன்றை அறிந்து வருவாயாக" எனக் கோவலனுக்கு அறிவுரை கூறி அனுப்பினார்.

கோவலன் மதுரை நகரை அடைதல்

          கோவலன் மதுரையை நோக்கி சென்றான். கடுமையான காவல் நிறைந்த கோட்டை மதிலைச் சுற்றி  அகழி எனப்படும் நீர்ப்பரப்பு காணப்பட்டது. அதில் யானைகள் செல்வதற்காக  குறுகிய பாதை ஒன்று காணப்பட்டது. அப்பாதையில் பகைவர்களுக்கு அச்சத்தைக் கொடுக்கும் வகையில் ஒளி பொருந்திய வாள்களை கையில் ஏந்திய யவனர்கள் காவல் புரிந்து கொண்டிருந்தார்கள்.  அவர்களுக்கு ஐயம் தோன்றாத வகையில் கோட்டைக்குள் புகுந்த கோவலன், ஆயிரம் கண்களையுடைய தேவேந்திரனின் அணிகலன்கள் சேர்த்து வைத்திருக்கும் அணிகலப் பெட்டியின் வாயைத் திறந்தது வைத்திருந்தது போல காணப்பட்ட கோட்டை வாயிலைக் கடந்து  நகருக்குள் சென்றான்.

அங்காடி வீதி

          மதுரை நகருக்குள் புகுந்த கோவலன் அங்காடி வீதியை கண்டான்.  அங்கு விற்கப்பட்ட பண்டங்களில் குறிப்பாக,

மூடாக்கு வண்டியும், பல்லாக்கும், தேரில் வைக்கப்படும்  கொடுஞ்சி  என்னும் இருக்கையும், மார்புக் கவசமும், மணி பதித்தத்  தோலாலான உடம்புக் கவசமும், தவம் புரிய உதவும் புலியின்  தோலும், வளைந்திருக்கும் குழியம் என்னும் படைக்கருவியும்,  விசிறும் வெண் கவரியும், அன்னப் பறவை போன்ற  துணிப் பொம்மையும், கேடயங்கள் போன்ற பொம்மைகளும், காடுகள் போன்று ஓவியம் வரையப்பட்ட  திரைத்துணிகளும், வயிர மாலையும், செம்பில் செய்த பொருள்களும்,  வெண்கலத்தில் செய்த பொருட்களும்,  முடிச்சுப் போட்டுச் செய்யப்பட்ட பொருள்களும், மாலையில் செய்யப்பட்ட பொருள்களும், பவளத்தால் கோக்கப்பட்ட பொருள்களும், சங்கினைக் கடைந்து செய்யப்பட்ட பொருள்களும், நறுமணப் புகைகளும், சந்தனப் பொருள்களும், பூ வேலைப்பாடுகள்  நிறைந்த பொருட்களும், அங்கு குவிந்து கிடந்தன. அரசனும் விரும்பும் கடைத்தெரு வாக அது காணப்பட்டது.  கோவலன் அந்தக் கடைத்தெரு வழியாகச் சென்றான்.

நகைக்கடையும், துணிக்கடையும்

          அங்கு, நகைக்கடைகள் மிகுதியாகக் காணப்பட்டன அவற்றில், சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூநதம்  என்ற நான்கு வகையான பொன் நகைகளை பகுத்து அறியும் வணிகர்களும், வாங்குபவர்களும் நிரம்ப காணப்பட்டார்கள். 'இது எங்கே இருக்கிறது' என அறிவிப்பதற்காக கொடிகள் கட்டப்பட்டிருந்த பொன் கடை வீதிகளை கடந்து கோவலன் சென்றான்.

 மேலும், பருத்தி, மயிர், பட்டுப்போன்ற நூல் இழைகளைக் கொண்டு மிகவும் நேர்த்தியாக நெய்யப்பட்ட புடவைகள், பலநூறு அடுக்குகளாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த துணிக்கடை வீதிகளையும் கோவலன் கடந்து சென்றான்.

கூல வீதிகள்

          மதுரை நகரில் கோவலன் கூல வீதியை கண்டான் அங்கு நிறுக்கும் துலாக்கோலை கையில் வைத்திருக்கும் வணிகர்களும், பறை என்னும் அளவு கருவியை கையில் வைத்திருக்கும் வணிகர்களும், நெல் அளக்கும் கருவியான மரக்காலை கையில் வைத்திருக்கும் வணிகர்களும், தரகு செய்யும் தரகர்களும் நிரம்ப காணப்பட்டார்கள். மேலும் அங்கு பெரிய மிளகு மூட்டைகளுடன் பல வகையான தானியங்களும் குவித்து வைத்திருப்பதை கோவலன் பார்த்துச் சென்றான்.

 கோவலன் மதிற்புறம் திரும்புதல்

அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் நான்கு வகையினர் வாழும் தெருக்களையும், முச்சந்தியிலும்,நாற்சந்தியிலும், குறுக்கு தெருக்களிலும் சூரிய ஒளியே நுழையாதவாறு சிறிய, பெரிய கொடிகள் நெருக்கமாக கட்டப்பட்டிருந்தது. கொடிகளின் நிழலிலேயே நடந்து சென்று மதுரை நகர் வளத்தைக் கண்டு மகிழ்ந்த கோவலன், கொடிகள் பறக்கும் மதில் புறத்தே வந்து சேர்ந்தான்.

 முடிவுரை

 மதுரைக் காண்டத்தில், காணப்படும், ஊர்காண் காதையில் மதுரை நகருக்குள் சென்ற கோவலன்; அங்காடி வீதியின் அழகையும், துணிக்கடைகளின் சிறப்பையும், கூல வீதியின் அழகையும் கண்டு களித்த வனாக மீண்டும் புறஞ்சேரி அடைந்த செய்தியை கூறுவதாக  இக்காதை காணப்படுகின்றது.

********* இராஜாலி  **********

ஐம்பெருங்காப்பியங்கள் - ஐஞ்சிறுங்காப்பியங்கள்

 


“தமிழில் காப்பிய இலக்கியங்கள்”


காப்பிய இலக்கணத்தைத் ‘தண்டியலங்காரம்’ விரிவாக எடுத்துரைக்கின்றது. காப்பியத்தைப் பெருங்காப்பியம், சிறுகாப்பியம் என்று இரு வகைப்படுத்தி, அவற்றின் இலக்கணத்தைத் தனித்தனியே எடுத்துச் சொல்கிறது.

பெருங்காப்பியம்

·         பெருங்காப்பியமாவது வாழ்த்துதல், தெய்வத்தை வணங்குதல், வருபொருள் உரைத்தல் என்ற மூன்றில் ஒன்றினைத் தொடக்கத்தில் பெற்று வரும்.

·         அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நாற்பொருளைப் பயனாகத் தருவதாக அமையும்.

·         தன்னிகர் இல்லாத தன்மை உடையவனைக் காப்பியத் தலைவனாகக் கொண்டிருத்தல் வேண்டும்.

·         மலை, கடல், நாடு, நகர், ஆறு பருவங்கள், கதிரவன் தோற்றம், சந்திரனின் தோற்றம் ஆகியவற்றைப் பற்றிய வருணனைகளைக் கொண்டிருக்க வேண்டும்.

·         திருமணம் புரிதல், முடிசூடல், சோலையில் இன்புறுதல், நீர் விளையாடல், மதுவுண்டு களித்தல், மக்களைப் பெற்றெடுத்தல், ஊடல் கொள்ளுதல், புணர்ச்சியில் மகிழ்தல் முதலிய நிகழ்வுகளைக் கொண்டிருக்க வேண்டும்.

·         அமைச்சர்களுடன் ஆலோசனை செய்தல், தூது செல்லல், போர் மேற்கொண்டு செல்லுதல், போர் நிகழ்ச்சி, வெற்றி பெறுதல் போன்ற நிகழ்வுகளும் இடம் பெறுதல் வேண்டும்.

·         அமைப்பு முறையில் பெருங்காப்பியம் உள் பிரிவுகளுக்குச் சருக்கம், இலம்பகம், பரிச்சேதம் என்ற பெயர்களில் ஒன்றைப் பெற்றிருத்தல் வேண்டும்.

·         எண்வகைச் சுவையும், மெய்ப்பாட்டுக் குறிப்புகளும் கேட்போர் விரும்பும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

மேற்கண்ட, பொதுப் பண்புகளை பெற்றுவரும் காப்பியங்கள், 'ஐம்பெருங் காப்பியங்கள்' என அழைக்கப்படுகின்றன.



ஐம்பெருங் காப்பியங்கள்

முன்னுரை

தண்டியலங்காரம் கூறும் காப்பிய பண்புகளை, முழுமையாகக் கொண்ட

·         சிலப்பதிகாரம்,

·         மணிமேகலை,

·         சீவக சிந்தாமணி,

·         வளையாபதி,

·         குண்டலகேசி

ஆகிய ஐந்தினையும் தமிழில் தோன்றிய ஐம்பெருங் காப்பியங்கள் என்பர்.

இவ் ஐந்தனுள் சிறப்புத் தகுதி வாய்ந்தவை சிலப்பதிகாரமும், மணிமேகலையும் ஆகும். இவை இரண்டையும் இரட்டைக் காப்பியங்கள் என்று குறிப்பிடுவார்கள். இவ்விரண்டும் கதை நிகழ்ச்சியில் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. மேலும் சமகாலத்தில் தோன்றியவை. ஏனையவை சோழர் காலத்தில் தோன்றியவையாகும்.

1. சிலப்பதிகாரம்

சிலம்பு +அதிகாரம் = சிலப்பதிகாரம், கண்ணகியின் சிலம்பால் விளைந்த கதையை முதன்மையாகக் கொண்டது. ஆதலின் சிலப்பதிகாரமாயிற்று. சிலப்பதிகாரம் எனும் செந்தமிழ்க் காப்பியம் புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் எனும் முப்பெருங்கண்டங்களையும், முப்பது காதைகளையும் உடையது. புகார்க்காண்டம் பத்து காதைகளையும், மதுரைக்  காண்டம் பதின்மூன்று காதைகளையும் வஞ்சிக் காண்டம் ஏழு காதைகளையும் கொண்டுள்ளது. “இது உரையிடப்பட்ட பாட்டுடைச் செய்யுள்” எனவும் வழங்கப்பெறும்.

தமிழிலுள்ள ஐம்பெருங்காப்பியங்களில் முதன்மை பெறுவது சிலப்பதிகாரம். நமக்குக் கிடைத்திருக்கும் காப்பியங்களில் பழமையானது இதுவே. காவிரிப்பூம்பட்டினத்தில் பெருங்குடி வணிகர் மரபில் உதித்த கண்ணகி, கோவலன் என்பவர்களுடைய வரலாற்றைக் கூறுவது. முத்தமிழ்ப் புலமையுடைய வித்தகப் பெருமானாகிய இளங்கோவடிகளால் இயற்றப்பட்ட இக்காப்பியம் ‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்று பாராட்டப்படுகிறது. சோழ, பாண்டிய, சேர மன்னர்களின் நாட்டில் கதையை நடத்திச் செல்கிறார் இளங்கோவடிகள். சிலப்பதிகாரத்தில்,

·         அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.

·         ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்.

·         உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்.

என்னும் முப்பெரும் உண்மைகள் பேசப்படுகின்றன.

இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழும் விரவப் பெற்றிருப்பதால் இது முத்தமிழ்க் காப்பியம் என்றும் வழங்கப்படுகிறது. உலகத்தின் பிறமொழிக் காப்பியங்களைப் போலவோ, வடமொழிக் காப்பியங்கள் போலவோ தெய்வங்களையோ மன்னர்களையோ காப்பியத்தலைவனாகக் கொள்ளாமல் மக்களையே கொண்டதால் இதைக் குடிமக்கள் காப்பியம் குறிப்பிடுவார். இத்தகைய சிறப்பு மிகுந்த காப்பியத்தை இயற்றிய இளங்கோவடிகள் சமண சமயத்தவர். இக்காப்பியத்தில் சமண சமயக் கருத்துக்கள் மிகுதியாக காணப்படுவதால், இது ஒரு சமண சமயக் காப்பியம் ஆகும்.

கோவலன் கண்ணகியுடன் பூம்புகார் நகரில் சிறப்போடு வாழ்ந்து வந்தார். செல்வ வளமிக்க கோவலனுக்கு மாதவி என்ற நாட்டிய மங்கையோடு காதல் தொடர்பு ஏற்படுகிறது. இதன்காரணமாக கோவலன், கண்ணகியை மறந்து மாதவியே கதி என இருக்கின்றார். இதன் விளைவாக தனது பெரும் செல்வத்தை எல்லாம் இழக்க நேரிடுகிறது. நாட்கள் செல்ல, ஒருநாள் இந்திர விழாவின்போது கோவலனும் மாதவியும் கடற்கரையில் மகிழ்ந்துகழித்துக் கொண்டிருக்கும்போது, கருத்து வேறுபாடு ஏற்பட்டு மாதவியை விட்டுப் பிரிந்து மீண்டும் கண்ணகியிடம் செல்கின்றான் கோவலன். செல்வம் இல்லாத ஏழையாக வரும் கோவலனை அன்போடு வரவேற்றார்கள் கண்ணகி இழந்த செல்வங்களை மீண்டும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பூம்புகாரை விட்டு மதுரைக்கு சென்று வணிகம் செய்ய கோவலனும் கண்ணகியும் முடிவு செய்து மதுரைக்கு செல்கிறார்கள். கோவலன் மதுரையில் கண்ணகியின் காற்சிலம்பை விற்க சென்ற நிலையில் அரண்மனைப் பொற்கொல்லன் ஒருவனின் சூழ்ச்சியால் கோவலன் கொலை செய்யப்படுகிறார். கோவலன், கொலை செய்யப்பட்ட செய்தியை கேள்விப்பட்ட கண்ணகி, பாண்டிய மன்னனிடம் சென்று தன் கணவன் குற்றமற்றவன் என்பதை மற்றொரு கால் சிலம்பை காட்டி நிறுவுகிறார். தவறை உணர்ந்த மன்னன் அரியணையில் இருந்து விழுந்து இறக்கிறான். மேலும், கண்ணகி தன் கோபம் தணியாத நிலையில், மதுரை மாநகரை தீக்கிரையாக்கி விட்டு, வஞ்சி நகரத்திற்குச் சென்று தன் கணவனோடு வானுலகம்  சென்றதாக, இளங்கோவடிகள் இக்காப்பியத்தில்  கூறுகிறார்.

2.மணிமேகலை

`           மணிமேகலையின் ஆசிரியர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இவர் தண்டமிழ்ச் சாத்தன், தண்டமிழ்ப் புலவன் எனவும் அழைக்கப்படுகிறார். காலம் 2 ஆம் நூற்றாண்டு. இந்நூலுக்கு மணிமேகலைத் துறவு என்ற பெயரும் உண்டு, மணிமேகலை ஒரு பௌத்த சமயக் காப்பியம் ஆகும். கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மணிமேகலை என்ற பெண்ணின் வரலாற்றைக் கூறுவதாக மணிமேகலை காணப்படுகிறது.

காப்பியத் தலைவி மணிமேகலை பெயரால் இக்காப்பியத் தலைப்பு அமைகின்றது. இந்த மணிமேகலை என்ற பெயர் கோவலனின் குல தெய்வமான மணிமேகலா தெய்வத்தின் பெயர் என்பது சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படுகிறது.

மணிமேகலைக் காப்பியத்தை இயற்றிய சீத்தலைச் சாத்தனார், சிலப்பதிகாரம் பாடிய இளங்கோவடிகள் காலத்தில் வாழ்ந்தவர். என்பது இவ்விரு காப்பியங்களின் பதிகம் வழி அறிய முடிகிறது. ‘‘இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் இயற்றச் சாத்தனார் கேட்டார்’’ என்றும், ‘‘சாத்தனார் மணிமேகலை பாட அடிகள் கேட்டார்’’ என்றும் இப்பதிகங்கள் குறிப்பிடுகின்றன. இக்காப்பியம் முப்பது காதைகளைக் கொண்டது.

கோவலன் கொலை செய்யப்பட்ட பின்னர், மாதவியும் அவள் மகள் மணிமேகலையும் துறவு  பூண்டனர். ஒருநாள், மணிமேகலை  புத்தபிரானை  வழிபட, மலர் பறிக்க  சென்றாள். அப்பொழுது, சோழ நாட்டு இளவரசன் உதயகுமரன்  மணிமேகலையை கண்டான். காதல் கொண்டான். இந்த நேரத்தில் மணிமேகலா தெய்வம் மணிமேகலையை மணிபல்லவத்தில் கொண்டுவிட்டது. அங்கு, அவள் ஆபுத்திரன்  அமுத சுரபியை பெற்றாள். பின்னர், புகார் நகரத்திற்கு  வந்தாள். உதயகுமார், வித்தியாதரன் என்பவரால் கொல்லப்பட்டார். அவரது இறப்பிற்கு காரணம் மணிமேகலை தானென எண்ணிய சோழ நாட்டு அரசி மணிமேகலையை சிறையில் வைத்தாள். பின் மனம் திருந்தி அவளை  விடுவித்தாள். மணிமேகலை, அறவண அடிகளிடம்  ஆசி பெற்று காஞ்சி நகர்  சென்றாள். இதுவே மணிமேகலையின் கதை.

இக்காப்பியத்தில், பெண் துறவு, தவம் இரண்டும் வலியுறுத்தப்படுகிறது. பசியின் கொடுமை  பேசப் படுவதோடு, "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என்ற உயர்ந்த கோட்பாட்டை வலியுறுத்துவதாக இக்காப்பியம் காணப்படுகிறது.

3.சீவக சிந்தாமணி

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணியை எழுதியவர் திருத்தக்கதேவர் ஆவார்.இக்காப்பியம், தமிழில் உள்ள காப்பியங்களில் முதல் முதலாக விருத்தப்பாவால் பாடப்பட்டது,  இக்காப்பியத்தின் தலைவனான சீவகன் எட்டு பேரை மணப்பதாக காட்டப்படுவதால் இதற்கு 'மணநூல்' என்ற பெயரும் உண்டு.இக்காப்பியம், நாமகள் இலம்பகம் முதல் முத்தி இலம்பகம் முடிய 13 இலம்பகங்களையும், 3145 பாடல்களையும் கொண்டது. இக்காப்பியம் கிபி 10ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. சமண கருத்துக்களை மிகுதியாக கூறுவதால் இக்காப்பியம் ஒரு சமண காப்பியமாக கருதப்படுகிறது.

ஏமாங்கத நாட்டு அரசன் சச்சந்தன், தன் மனைவி விசையையிடம் பெரும் காதல் கொண்டிருந்தார். இதை பயன்படுத்தி  சச்சந்தனை  வென்று நாட்டை கைப்பற்றினான் அமைச்சன் கட்டியங்காரன். கருவுற்றிருந்த விசையை மயில் பொறி வழியாக, தப்பிச் சென்று காட்டில் ஒரு குழந்தையை பெற்றெடுத்தார்.  அவனே கதையின் தலைவனான சீவகன், சீவகனை கந்துக்கடன் என்பவர் வளர்த்து வருகிறார். வாலிப பருவத்தை அடைந்த பிறகு தனது தாய் விசையை சந்தித்து, தனது நிலையை உணர்ந்துகொண்ட சீவகன், மாமன் கோவிந்தனின் உதவியோடு கட்டியங்காரன் வென்று நாட்டை கைப்பற்றுகிறார். சீவகன் எட்டு பெண்களை திருமணம் செய்கிறார், பின்னர், இந்த வாழ்க்கை  நிலையில்லாதது என்பதை உணர்ந்து துறவு மேற்கொள்கிறார் என்பதை இக்காப்பியம் கூறுகிறது.

4. வளையாபதி

ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றாக எண்ணப்படுவது வளையாபதி. 19ஆம் நூற்றாண்டு வரை வாழ்ந்த இவ்விலக்கியம் பின்னர் எப்படியோ அழிந்துவிட்டது. வளையாபதி காப்பிய ஆசிரியர் யார்? எப்போது இந்நூல் இயற்றப்பட்டது? காவியத் தலைவன் பெயர் என்ன? காவியத்தின் கதைதான் என்ன? இந்த வினாக்களுக்கு யாதொரு விடையும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. இக்காப்பியத்தின் 72 செய்யுள்கள் மட்டும் கிடைத்துள்ளன. கிடைத்துள்ள பாடல்களைக் கொண்டு நோக்குகிறபோது, இது ஒரு சமண சமய நூல் என்பது மட்டும் உறுதியாகிறது.

வளையாபதி கதை இன்னதுதான் என்பது அறியப்படாத ஒன்று. கிடைத்துள்ள பாடல்களைக் கொண்டும் கூட இதன் கதையை அறிய முடியவில்லை. வளையாபதி கதை என ஒரு கதை வழக்கில் உள்ளது. அக்கதை வருமாறு,

நவகோடி நாராயணன் ஒரு வைர வாணிகன். அவன் தன் குலத்தில் ஒரு பெண்ணையும், வேறு குலத்துப் பெண்ணையும் திருமணம் செய்ததால், அவனைக் குலத்தை விட்டுத் தள்ளி வைத்து விடுகின்றனர். இதனால் துன்பமுற்ற நாராயணன், வேறு வழியின்றி வேறு குலத்துப் பெண்ணைத் தள்ளி வைத்து விடுகிறான். அவளோ, தனக்கு மறுவாழ்வு அளிக்கும்படி காளியை வேண்டுகிறாள். காளியின் அருளால் அவளுக்கு ஓர் ஆண் குழந்தை பிறக்கிறது. அக்குழந்தை வளர்ந்து பெரியவனாகிப் புகார் நகர் வணிகர் அவையில் ‘தன் தந்தை நாராயணனேஎன்று நிறுவுகிறான். காளிதேவியும் சாட்சி கூறி அதனை மெய்ப்பிக்கிறது. இதனால் குடும்பம் ஒன்றுசேர, அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர், என்பதை இக்காப்பியம் கூறுகிறது.

 5.குண்டலகேசி

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான, குண்டலகேசி ஒரு பௌத்த சமய நூல். குண்டலகேசி விருத்தம் எனவும் இந்நூல் குறிப்பிடப்படுகிறது. குண்டலகேசி காவியத்தை இயற்றியவர் நாதகுத்தனார். இக்காப்பியம் கிபி 10ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. குண்டலகேசியின் பாடல்கள் முழுவதும் கிடைக்கவில்லை, புறத்திரட்டு, யாப்பருங்கல விருத்தி உரை, அடியார்க்கு நல்லார் உரை ஆகியவற்றில் மேற்கோள்களாக வரும் 25 பாடல்களை குண்டலகேசியின் பாடல்களாக தொகுத்துள்ளார்கள்.

இராச கிருக நாட்டு அமைச்சன் மகள் பத்திரை. அவள் தனது மாளிகையில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அரச சேவகர்கள் கள்வன் ஒருவனைக் கொலைக்களத்திற்கு அழைத்துச் சென்றதைக் கண்டாள். அவனுடைய இளமையும் அழகும் அவள் மனதைக் கவர்ந்தன. அவன்மேல் அவள் காதல் கொண்டாள். இதை அறிந்த தந்தை, கள்வனை விடுவித்துத் தன் மகளை அவனுக்குத் திருமணம் செய்து வைக்கிறான். இருவரின் அன்பு வாழ்க்கை, காதல் வாழ்க்கை இனிதே நடக்கிறது. ஒரு நாள் ஊடல் கொண்ட பத்திரை, ‘நீ கள்வன் மகன் அல்லனோஎன விளையாட்டாகச் சொல்ல, அது அவன் உள்ளத்தைப் பாதிக்கிறது. அவளைக் கொல்லக் கருதிய அவன், அவளை மலை உச்சிக்கு அழைத்துச் சென்று, அவளைக் கீழே தள்ளிக் கொல்லப் போவதாகக் கூறுகிறான். நிலைமையை உணர்ந்த பத்திரை, அவனுக்கு உடன்பட்டவள் போல் நடித்து, “நான் இறப்பதற்குமுன் உம்மை வலம் வரவேண்டும்என்கிறாள். பின் அவனை வலம் வருபவளைப் போல, பின் சென்று அவனைக் கீழே தள்ளிக் கொன்று விடுகிறாள்.

பிறகு, பத்திரை, வாழ்க்கையை வெறுத்தவளாய், பல இடங்களில் அலைந்து திரிந்து, சாரிபுத்தர் ஆணைப்படி பௌத்தத் துறவியாகிறாள். சாரிபுத்தர் குண்டலகேசியைப் (பத்திரை) பகவான் புத்தரிடம் அழைத்துச் செல்ல, அவர் முன்னிலையில் அவள் பௌத்தத் துறவியாகிறாள்.

முடிவுரை

கதை  பொதிந்த நீண்ட செய்யுள்களாக காணப்படும் காப்பியங்கள், அக்கால மக்களின் வாழ்வியல் கூறுகளை, வாழ்வியல் நெறிகளை எடுத்துக் கூறும் இலக்கியங்களாக விளங்குகின்றன. தமிழில், காணப்படும் ஐம்பெரும் காப்பியங்களில் சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, வளையாபதி ஆகிய மூன்றும் சமண சமய காப்பியங்கள்.  மணிமேகலை மற்றும் குண்டலகேசி ஆகிய இரண்டும் பௌத்த சமய காப்பியங்கள். மேலும் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என வழங்கப்படுகின்றது.

                            ***********************



ஐஞ்சிறு காப்பியங்கள்

முன்னுரை

தண்டியலங்காரம் என்ற இலக்கண நூல், காப்பியப் பாடுபொருளான அறம், பொருள், இன்பம், வீடுபேறு ஆகியவற்றில் ஒன்று குறைபடினும் அது சிறுகாப்பியம் என்று குறிப்பிடுகிறது. தமிழில் ஐஞ்சிறு காப்பியங்களாகச்  

·         சூளாமணி,

·         யசோதர காவியம்,

·         நீலகேசி,

·         உதயண குமார காவியம்,

·         நாக குமார காவியம்

ஆகிய ஐந்தினையும் தமிழில் தோன்றிய ஐஞ்சிறு காப்பியங்கள் என்பர். அந்த, சிறு காப்பியங்களை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

1.சூளாமணி

ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றான,சூளாமணி என்பது மகுடத்தின் முடிமணி. இதனைச் சூடாமணி என்றும் அழைப்பர். இதன் ஆசிரியர் தோலாமொழித் தேவர். இவர், ‘செங்கண் நெடியான் சரிதம்’ என்றுதான் தம் நூலைக் குறிப்பிடுகிறார்.  சூளாமணிக் காப்பியம், பாயிரமும், 12 சருக்கங்களும், 2131 விருத்தப் பாக்களும் கொண்டது. பாயிரப் பகுதி 6 பாடல்களைக் கொண்டது.

பரத கண்டத்தில் சுரமை நாட்டின் தலைநகர் போதன மாநகர். அதன் அரசன் பயாபதி. அவனுக்கு மிகாபதி, சசி என இரு மனைவியர். அவர்களுக்கு வெண்ணிறமான விசயன், கருநிறமான திவிட்டன்  ஆகிய இருவரும் பிறந்தனர். வித்தியாதரர் (வானவர்) உலகிலுள்ள இரத நூபுரம் என்ற நகரில் ஆட்சி புரியும் சுவலனசடி தன் மகளுக்குச் சுயம்வரம் நடத்த எண்ணுகிறான். சுவலனசடியின் மகள் சுயம்பிரபை. அவளைப் பூலோகத்தில் உள்ள திவிட்டனே மணப்பான் என்று நிமித்திகன் கூறுகிறான். தன் சோதிடக் குறிப்பிற்குச் சான்றாக, திவிட்டன் ஒரு மாதத்திற்குள் ஒரு சிங்கத்தை அடக்குவான் என்கிறான். சுவலனசடி திவிட்டனுக்குப் பெண் கொடுக்க இருப்பதை அறிந்த மற்றொரு வித்தியாதர அரசன் அச்சுவ கண்டன் பயாபதியைத் தனக்குத் திறை செலுத்த ஆணையிட்டுத் தூதனுப்புகிறான். அத்தூதுவனைத் திவிட்டன் விரட்டியடித்து விடுகிறான். விரட்டியடிக்கப்பட்ட தூதுவன், அச்சுவ கண்டனிடத்தே செல்வதற்கு அஞ்சி, அவனுடைய அமைச்சனாகிய அரிமஞ்சு என்பவனிடம் சென்று திவிட்டன் செயலைக் கூறினான். அதுகேட்ட அவ்வமைச்சன் மாயவித்தையில் வல்ல அரிகேது என்பவனை மாயச் சிங்க உருவில் பயாபதி நாட்டுக்கு அனுப்பி அச்சுறுத்துகிறான். வீரன் திவிட்டன் விட்டுவிடுவானா? அம்மாயச் சிங்கத்தைக் கொல்லும் பொருட்டுத் துரத்திச் செல்கிறான். மாயச்சிங்கமாகிய அரிகேதுவோ உயிருக்குப் பயந்து, உண்மைச் சிங்கம் உறங்கும் ஒரு குகைக்குள் புகுந்து மறைந்து விடுகிறான். உண்மையான சிங்கம் குகையை விட்டு வெளிவர, திவிட்டன் அதனோடு எதிர்த்துப் போரிட்டு, அதன் வாயைப் பிளந்து கொன்று விடுகிறான்.

நிமித்திகன் கூற்று மெய்யாகி விட்டதல்லவா? சுவலனசடிக்கு மிகுந்த மகிழ்ச்சி. தன் மகளைத் திவிட்டனுக்கு மணம் செய்து மகிழ்கிறான். திவிட்டன், விசயன் நாட்டை நன்முறையில் ஆளுகின்றனர். இத்துடன் இக்காப்பியக் கதை முற்றுப் பெறுகிறது.

சமயம், சமூகம், அரசியல் சார்பான உயர்ந்த கருத்துகளை வெளியிடுவதில் இக்காப்பியம் சிறந்து ஓங்குகிறது. மனித வாழ்க்கை என்பது என்ன? அது துன்பமா? இன்பமா? இரண்டும் கலந்ததே. அது ஒரு திரிசங்கு சொர்க்கம் போன்றது என்பதை ஓர் அருமையான பாடலால் விளக்கி விடுகிறார் ஆசிரியர். பாடல் இதோ:

யானை துரப்ப அரவுஉறை ஆழ்குழி

நால்நவிர் பற்றுபு நாலும் ஒருவன்ஓர்

தேனின் அழிதுளி நக்கும் திறத்தது

மானுடர் இன்பம் மதித்தனை கொள்நீ

மதயானை ஒருவனை விரட்டுகிறது; அதினின்று தப்பிக்க ஓடும்போது ஆழமான ஒரு குழியில் விழுகிறான். உள்ளே விழுந்துவிடாமல் இருக்க, அங்குத் தொங்கும் மெல்லிய கொடியைப் பற்றிக் கொண்டு தொங்குகிறான்; கீழே ஒரு பாம்பு படமெடுத்து ஆடுகிறது; கொடியை விட்டுக் கீழே விழுந்தால் பாம்பு கடித்து இறந்துவிடுவான்; மேலே சென்றால் யானை மிதித்துக் கொன்றுவிடும்; இவ்வாறு உயிருக்குப் போராடும் நிலையில் தேன் கூட்டிலிருந்து தேன் சொட்டுகிறது. அதனை நக்கிச் சுவைக்கிறான். மனிதர் துய்க்கும் இன்பம் இத்தகையதுதான்.

வாழ்க்கை துன்பங்களே நிறைந்தது. இதில் இடையிடையே கிடைக்கும் இன்பம் சிறிய அளவுடையதுதான். ஆயினும் அதைத் துய்க்க விரும்புவதே மனித இயற்கை. இந்த அரிய உண்மையை எவ்வளவு எளிமையாக, சுவையாகக் காட்டி விட்டார் தோலாமொழித் தேவர்.

2.யசோதர காவியம்

          ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றான யசோதர காவியம்.இந்நூல் யசோதரன் என்ற மன்னனின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கிறது. யசோதர காவியம்படைத்த ஆசிரியர் யார் என்பதில் கருத்து வேறுபாடு நிலவுகிறது.இக்காப்பியம் ஐந்து சருக்கங்களைக் கொண்டது. பாடல்கள் 330 மட்டுமே காணப்படுகின்றன. அபயருசி என்பான் ஔதய நாட்டு மன்னன் மாரி தத்தனுக்குத் தன் பழம்பிறப்பு வரலாறு உணர்த்திச் சைன நெறிப்படுத்தி நற்கதி பெறச் செய்ததே காப்பியக் கதை.

            மக்களுக்குத் தீவினை தொடரும் வழி இன்னதென உணர்த்தி, அவ்வழியில் செல்லாது தடுத்து, நல்வினை செய்யச் செய்து, அதனால் வரும் புண்ணியத்தையும் போகத்தையும் அடையச் செய்வதே சமணக் காப்பியங்களின் அடிப்படை நோக்கமாகும். வினைப்பயன் தொடரும் என்பதே இக்காப்பியம் நமக்குத் தரும் செய்தி. உயிர்க்கொலை பெரும்பாவம்; அது கீழான விலங்குப் பிறவிக்கு இட்டுச் செல்லும். மீளாத நரகத்தில் புகச் செய்யும். பலியிடுதலும், பாவனையால் பலியிடுதலும் கொலையே. அறியாமல் செய்தாலும் கொலை கொலையே. புலால் உண்ணுதல் கொடிய பாவம். இசை உலக இன்பத்தை மிகுவிக்கும். கூடா ஒழுக்கம் பஞ்சமா பாதகத்தைச் செய்யத் தூண்டும். பாவங்களைப் போக்கும் வழி அறவோர் அறவுரை கேட்டலே. இதுவே இக்காப்பியத் தத்துவம், சிந்தனை, நோக்கம்.

கொலை, பொய், களவு, பிறன்மனை நயத்தல், புலால் உண்ணல், கள் உண்ணல், தேன் உண்ணல் முதலான பாவச் செயல்களைச் செய்யாமையே அறம் ஆகும். அந்த அறங்களை இந்நூல் சொல்கிறது.

3.நீலகேசி

தமிழில் தோன்றிய முதல் தருக்க நூல் இதுவெனக் கூறலாம். இது குண்டலகேசிக்கு மறுப்பாக எழுந்த நூலாகும். நீலகேசி, குண்டலகேசியை வாதில் வென்று சமணமே உயர்ந்த சமயம் என நிறுவுகிறது நீலகேசிக் காவியம்.நீலகேசி 894 பாடல்களைக் கொண்டது; இவை விருத்தப்பாக்களில் அமைந்தவை. தரும உரைச் சருக்கம், குண்டலகேசி வாதச் சருக்கம், அருக்க சந்திர வாதச் சருக்கம், மொக்கல வாதச் சருக்கம், புத்தவாதச் சருக்கம், ஆசீவக வாதச் சருக்கம், சாங்கியவாதச் சருக்கம், வைசேடிக வாதச் சருக்கம், வேதவாதச் சருக்கம், பூதவாதச் சருக்கம் எனப் பத்துச் சருக்கங்களைக் கொண்டது. இந்நூல் நீலம், நீலகேசித் தெருட்டு, நீலகேசித்திரட்டு என்னும் வேறு பெயர்களாலும் வழங்கி வருகின்றது.நீலகேசிக் காப்பியம் முழுக்க முழுக்கப் பல சமயத் தத்துவங்களின் உண்மைத் தன்மையை விவாதிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது.  இதன் தத்துவம் பலருக்கும் விளங்காத ஒன்று என்பதாலே இக்காப்பியம் போற்றப்படவில்லை. ஆனால் இந்தியத் தத்துவம் படித்தோர் இதனைப் போற்றுவர். ஆசிரியர் தம் காலத்தில் நிலவியிருந்த அனைத்துச் சமயச் சிந்தனைகளையும் எடுத்துரைப்பதில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளார்.

தெய்வங்களுக்கு உயிர்ப்பலி இடுதல் தீமையே என்பதை எடுத்துரைக்கிறது. இறைவன் அருளிய அறநெறியில் ஐயுறல் கூடாது; பேராசை தவிர்க்க வேண்டும்; மெய்த்துறவோரை மதித்தல் வேண்டும்; நட்பு, புகழ் இவற்றால் மயங்குதல் கூடாது; பிறர் குற்றங்களை அகற்ற வேண்டும்; முறை தவறி நடப்பாரைத் திருத்த வேண்டும்; யாவரிடமும் மெய்யான அன்பு செலுத்த வேண்டும்; மாந்தர்தம் அறியாமை போக்க வேண்டும் என்று பல உலக நீதிகளை இந்த நூல் எடுத்துரைக்கிறது.

4.உதயண குமார காவியம்

கொங்குவேளிரின் பெருங்கதைக் காப்பியத்திற்குச் சுருக்க நூலாகப் பாடப்பட்டதே உதயணகுமார காவியம். இது சமண சமயப் பெண்பால் துறவியரில் ஒருவரான கந்தியர் என்பவரால் பாடப்பட்டிருக்க வேண்டும் எனக் கருதுவர். 369 பாடல்களைக் கொண்டது. பெருங்கதை அமைப்பையே கொண்டு இந்நூலும் உஞ்சை காண்டம், மகத காண்டம், இலாவண காண்டம், வத்தவ காண்டம், நரவாண காண்டம் என ஐந்து காண்டங்களுடன் அமைகிறது. கூடுதலாகத் துறவுக் காண்டம் ஒன்றும் இதில் இடம் பெறுகின்றது. உதயணகுமார காவியம் வத்தநாட்டு மன்னன் உதயணன் கதையைக் கூறுவதாக காணப்படுகிறது.

5.நாக குமார காவியம்

ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றான, நாககுமார காவியம் கி .பி 16 ஆம் நூற்றாண்டில் ஏற்றப்பட்டது. இதன் ஆசிரியர் யார் எனத் தெரியவில்லை. 170 விருத்தப்பாக்கள் கொண்ட இந்நூல், 5 சருக்கங்களை கொண்டதாகும். மகத நாட்டு மன்னன்  சயந்தனின் இரண்டாவது மகன் பிரதாபந்தன் இவனே நாககுமாரன் என அழைக்கப்படுகிறார். நாககுமாரன் மேற்கொண்ட பஞ்சமி  நோன்பின் சிறப்புகளையும், நாககுமாரனின் வீரச் செயல்களையும், முடி சூட்டு விழாவையும், துறவு பூணுதல் போன்ற கருத்துக்களையும் இந்நூல் பேசுவதாக உள்ளது.

முடிவுரை

காப்பிய பண்புகளில் ஒன்றான அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப் பொருட்களில், ஏதேனும் ஒன்று குறைந்து வந்தால் அது சிறு காப்பியம் ஆகும். அவ்வகையில், தமிழ்மொழியில் ஐந்து சிறு காப்பியங்கள் காணப்படுகின்றன.  சிறு காப்பியங்கள் ஐந்தும், சமண சமயக் கருத்துக்களை வலியுறுத்தும் சமண காப்பியங்கள் ஆக காணப்படுகின்றன. என்பதனை இக்கட்டுரையின் மூலம் அறிய முடிகிறது.

********* இராஜாலி  ********

வெள்ளி, 5 ஜூலை, 2019

புதுக்கவிதையின் - தோற்றமும் வளர்ச்சியும்

முன்னுரை

  காலம் காலமாக இலக்கியங்கள் பல மாற்றங்களைக் கண்டுள்ளது. அவ்வகையில் தமிழ் கவிதை இலக்கியமும் மரபுக்கவிதைகள் என்னும் வடிவத்தை கடந்து, புதுக்கவிதை என்னும் வடிவத்தினை 19 - ஆம் நூறாண்டின் துவக்கத்தில் அடைந்தது. இதற்கு மேற்க்கத்திய மொழிகளின் இலக்கிய தாக்கம் முக்கியமான காரணமாகும். பழந்தமிழர்கள், யாபிலக்கண கவிதைகளின் வகைகளான வெண்பா, ஆசிரியம், வஞ்சி, கலி, பரி என பல பாவடிவங்களைக் கையாண்டனர். அவை தற்போது புதுக்கவிதையாக வளர்ந்துள்ளது. இக்கட்டுரையில் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி ஆய்வு செய்யப்படுகிறது.

புதுக்கவிதைக்கான இலக்கணம்

    புதுக்கவிதையின் இலக்கணத்தை புதுக்கவிதையாளர்கள் பலர் வகுத்துள்ளார்கள். அவர்களில்,
           “சுவை புதிது, பொருள் புதிது,
          வளம் புதிது, சொல் புதித
          சோதி மிக்க நவகவிதை” -  
என பாரதியார் புதுக்கவிதைக்கு விளக்கம் தருகிறார். மேலும், கவிஞர் மு.மேத்தா அவர்கள்,
இலக்கணச் செங்கோல்
யாப்புச் சிம்மாசனம்
எதுகைப் பல்லக்கு
தனிமொழிச் சேனை
பண்டித பவனி
இவை எதுவுமில்லாத
கருத்துக்கள் தம்மைத் தாமே
ஆளக் கற்றுக்கொண்ட புதிய
மக்களாட்சி முறையே புதுக்கவிதை!  
எனப் புதுக்கவிதைக்கான இலக்கணத்தை எடுத்துரைக்கிறார்.

புதுக்கவிதையின் தோற்றம்

    புதுக்கவிதையின் தோற்றத்துக்கு உரைநடையின் செல்வாக்கு, மரபுக்கவிதையின் செறிவின்மை, அச்சு இயந்திரம் தோன்றியமை, மக்களின் மொழிநடையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியன அடிப்படைக் காரணங்களாகும்.
     ஆரம்பகாலத்தில் Free Verse, New Poetry என்ற கவிதை அமைப்பு ஆங்கிலத்தில் இருந்தது. அமெரிக்காவின் வால்ட் விட்மன், இங்கிலாந்தின் எஸ்ரா பவுண்டு, T.S. எலியட் போன்றோரின் முயற்சிகளால் புதுக்கவிதை பிறந்தது. தமிழில் இம்முயற்சிகள் தொடங்கப்பட்ட போது முதலில் ‘வசன கவிதை’ என்றும், பின்னர் ‘சுயேச்சா கவிதை’, ‘லகு கவிதை’, ‘விடுநிலைப்பா’ என்றும், “கட்டிலடங்காக் கவிதை“ என்றும் அதன் பின்னர்ப் புதுக்கவிதை என்றும் வழங்கப்பட்டன.

புதுக்கவிதையின் வளர்ச்சி

      1892 இல் வால்ட் விட்மனின் “புல்லின் இதழ்கள்” என்ற கவிதை தொகுப்பு யாப்பு மரபைப் புறக்கணித்து Free Verse என்ற வசனகவிதையாக அமைந்தது. அதனைப் படித்திருந்த பாரதி அதைப் போலத் தமிழிலும் புதுமை படைக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் ''காட்சிகள்'' என்ற தலைப்பில் புதுக்கவிதை எழுதினார். அதற்கு அவர் இட்ட பெயர் “வசன கவிதை“ என்பதாகும். எனவே பாரதியார் புதுக்கவிதைகளின் முன்னோடி என அழைக்கப்படுகிறார். தமிழில் பாரதியார் வழியில் ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராசகோபலன், வல்லிக்கண்ணன், புதுமைப்பித்தன், போன்றோர் புதுக்கவிதைகளைப் படைத்து தமிழ்ப் புதுக்கவிதைகளை வளர்த்தார்கள்.

புதுக்கவிதை வளர்ந்த மூன்று கால கட்டங்கள் 
 
    ஆரம்ப காலத்தில் புதுக்கவிதைகளை பல இதழ்கள் வெளியிட்டு புதுக்கவிதை வளர்ச்சிக்கு துணை நின்றன. அவ்விதழ்கள் தோன்றிய காலத்தினை மூன்றாகப் பிரிக்கலாம். அவை,
1. மணிக்கொடிக்காலம்
2. எழுத்துக்காலம்
3. வானம்பாடிக் காலம்  
 என்பனவாகும். இக்கால கட்டங்களில் புதுக்கவிதை இலக்கியம் வளர்ச்சி நிலையினை எட்டியது.

1.மணிக்கொடிக் காலம் (1930 – 1945 )

  மணிக் கொடிக் காலத்தில் மணிக்கொடி என்ற இதழ் மட்டுமன்றி, சூறாவளி, காலமோகினி, கிராமஊழியன், சிவாஜிமலர், நவசக்தி, ஜெயபாரதி ஆகிய இதழ்கள் புதுக்கவிதைகளை வெளியிட்டுவந்தன. இவற்றுள் மணிக்கொடி இதழ் முதலில் தோன்றியதால் இக்காலத்தை மணிக்கொடிக் காலம என்று அழைத்தனர். இக்காலத்தில், புதுக்கவிதை முன்னோடிகளான ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராசகோபாலன், க.நாசுப்பிரமணியன், புதுமைப்பித்தன் போன்றோர் அக்கால இதழ்களில் புதுக்கவிதைகளை எழுதி வெளியிட்டனர்.

 2. எழுத்துக் காலம் (1950 – 1970 )

      எழுத்து, சரஸ்வதி, இலக்கிய வட்டம், நடை, தாமரை, கசடதபற, போன்ற இதழ்கள் இக்காலகட்டத்தில் புதுக்கவிதையை வளர்த்தன. ந.பிச்சமூர்த்தி ஆரம்பித்துவைத்த புதுக்கவிதை இயக்கம், எழுத்து இதழில் தொடர்ந்தது. மயன், சிட்டி, வல்லிக்கண்ணன், ஆகியோர் ஒன்று சேர்ந்து சி.சு.செல்லப்பா, க.நாசுப்பிரமணியன் போன்றோர் இக்காலத்தில் புதுக்கவிதைக்கு சிறப்பு சேர்த்தனர்.

3.வானம்பாடிக் காலம் ( 1970 க்கு பிறகு )  

   வானம்பாடி, தீபம், கணையாழி, சதங்கை முதலிய இதழ்கள் இக்காலத்தில் புதுக்கவிதைக்கு முன்னுரிமை தந்து வெளியிட்டன. புவியரசு, ஞானி, முல்லைஆதவன், அக்கினிபுத்திரன், சிற்பி, கங்கை கொங்காண்டான், தமிழ்நாடன், சக்தி கனல், மு.மேத்தா, தமிழன்பன், ரவீந்திரன் முதலியோர் வானம்பாடிக் கவிஞர்களாவர்.

தற்கால புதுக்கவிதையாளர்கள் 

       தற்கால புதுக்கவிதையாளர்களில் குறிப்பிடத்தக்கவர்கள், நா. பிச்சை மூர்த்தி, புதுமைப்பித்தன், வல்லிக்கண்ணன், நா. காமராசன், அப்துல் ரகுமான், மு. மேத்தா, சிற்பி பாலசுப்பிரமணியன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்கள்.

நா. பிச்ச மூர்த்தி 

     தமிழ் புதுக்கவிதையின் தந்தை என அழைக்கப்படும் இவர், வேங்கட மகாலிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்டவர். மணிக்கொடிக் கால எழுத்தாளரான இவர் காட்டு வாத்து, வழித்துணை, குயிலின் சுருதி போன்ற புதுக்கவிதை தொகுப்புக்களை எழுதியுள்ளார்.

 புதுமைப்பித்தன் 

    விருத்தாச்சலம் என்னும் இயற்பெயரைக் கொண்ட இவர் மணிக்கொடி இதழின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவர் காதல் பாட்டு, இணையற்ற இந்தியா, தொழில் போன்ற புதுக்கவிதை தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.

 வல்லிக்கண்ணன்

    கிருஷ்ணசாமி என்னும் இயற்பெயரைக் கொண்ட இவர், எழுத்து என்னும் இதழில் புதுக்கவிதைகள் பல எழுதியுள்ளார். இவர் எழுதிய அமர வேதனை என்னும் கவிதை தொகுப்பு குறிப்பிடத்தக்கதாகும். மேலும், புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற இவரின் நூல் சாகித்திய அகடாமி விருது பெற்றுள்ளது.

 நா. காமராசன் 

     உருவகக் கவிஞர் என அழைக்கப்படும் நா. காமராசர், கருப்பு மலர்கள், சூரியகாந்தி, மகாகாவியம், கிறுக்கல்கள், பட்டத்து யானை போன்ற புதுக்கவிதை தொகுதிகளை வெளியிட்டுள்ளார். இவர் புதுக்கவிதை ஆசான் எனவும் அழைக்கப்படுகிறார்.

 அப்துல் ரகுமான் 

     வானம்பாடி இயக்க கவிஞரான இவர், பால்வீதி, நேயர் விருப்பம் போன்ற புதுக்கவிதை தொகுதிகளை வெளியிட்டுள்ளார். இவர் எழுதிய ஆலாபனை என்னும் கவிதை தொகுப்பு சாகித்திய அகடாமி விருது பெற்றது.

 மு.மேத்தா

     தமிழ் பேராசிரியராக விளங்கிய இவர், தேசப்பிதாவுக்கு ஒரு தெருப்பாடகனின் அஞ்சலி என்ற கவிதையின் மூலம் உயர்வடைந்தார். இவர் எழுதிய ஊர்வலம், சோழர் நிலா போன்ற புதுக்கவிதை தொகுப்புகள் குறிப்பிடத்தக்கவை. ஆகாயத்திற்கு அடுத்த வீடு என்ற இவரின் புதுக்கவிதை தொகுப்புக்கு சாகித்திய அகடாமி விருது கிடைத்தது.

 சிற்பி பாலசுப்பிரமணியன் 

     2022-ல் பத்மஸ்ரீ விருது பெற்ற இவர், புன்னகைக்கும் பூக்கள் என்ற கவிதை தொகுப்பும், சாகித்திய அகடாமி விருது பெற்ற ஒரு கிராமத்து நதி என்ற கவிதை தொகுப்பையும் எழுதியுள்ளார்.

புதுக்கவிதைகளின் பொருள் நயம்
       
         புதுக்கவிதைகளின் பாடுபொருள் இது என்று இல்லை. சமுதாயத்தில் காணப்படும் நிகழ்வுகள் அனைத்தும் புதுக்கவிதையின் பாடுபொருள்களாகும். குறிப்பாக சமுதாயதில் காணப்படும் மத வேறுபாடுகளைக் களைய புதுக்கவிதை ஆசிரியர் ஒருவர்,
பைபிள்லே நீ
கிறிஸ்தவனை படைப்பதை
நிறுத்து!
குரானே நீ
இஸ்லாமியரை படைப்பதை
நிறுத்து!
கீதையே நீ
இந்துக்களைப் படைப்பதை
நிறுத்து!
நீங்கள் மூவரும் சேர்ந்து
நல்ல மனிதரை படையுங்கள்...
- எனக் கூறுகின்றனர்.
      
       ஏழைகளுக்கு சேராத அரசின் நலத்திட்டங்களைக் கண்ட கவிஞ்ர் மு. மேத்தா அவர்கள்,

அணகட்டுகளில் திறக்கப்படும்
தண்ணீர்
பள்ளங்களை ஏமாத்திவிட்டு
மேட்டை நோக்கியே
பாய்கிறது.
- என ஆதங்கப்படுகிறார்.
         
     மகன் ஒருவன் தனது பெற்றோரை முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டு வந்த நிலையில் அந்த தாய் தன் மகனைப் பார்த்து,

மகனே நீ
இருக்க என்
கருவறை இருந்தது,
நானிருக்க ஒரு
அறைகூடவா இல்லை
உன் வீட்டில்.....
என்று கேட்பது குடும்ப சிக்கல்களை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.
         
முடிவுரை
           
                 ''பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே'' என்று நன்னூல் கூறுகிறது. அதற்கு இணங்க கவிதை இலக்கியமும் காலம் தோறும் பல வளர்ச்சியை கண்டுள்ளது. தமிழில் பாரதியாரால் தொடங்கி வைக்கப்பட்ட புதுக்கவிதை மரபு இன்று பல நிலைகளில் வளாச்சியடைந்து காணப்படுகிறது என்பதை இக்கட்டுரையில் காணலாம்.
......இராஜாலி......

யுனிக்கோட் - பயன்பாடு

அறிமுகம்    ஆங்கில மொழியைத் தவிர பிறமொழிகளிலும் பலரும் பல்வேறு குறியேற்றங்களையும் எழுத்துருக்களையும் பயன்படுத்தி வந்தனர். இந்த முறையில் ஒரே ...