எனது வலைப்பதிவு பட்டியல்

சனி, 2 செப்டம்பர், 2023

சீறாப்புராணம் - மானுக்குப் பிணை நின்ற படலம்

நூல் குறிப்பு

         இஸ்லாமிய பேரிலக்கியங்களில் ஒன்று சீறாப்புராணம் ஆகும்.   இக்காப்பியம்  வள்ளல்  முகமது  நபி  அவர்களின் வரலாற்றை  கூறுவதாக அமைந்துள்ளது. இதனை உமறுப்புலவர் பாடியுள்ளார். கி.பி  17ஆம் நூற்றாண்டை  சார்ந்த இக்காப்பியத்தில்    விலாதத்துக் காண்டம்,  நுபுவத்துக் காண்டம், ஹிஜ்ரத்துக் காண்டம்  என மூன்று காண்டங்களும், 92 படலங்களும்,  5027  பாடல்களும் காணப்படுகின்றன.

மானுக்குப் பிணை நின்ற படலம் 

  நுபுவத்துக் காண்டம் என்னும்  இரண்டாவது காண்டத்தில் மானுக்குப் பிணை நின்ற படலம் இடம்பெற்றுள்ளது.  இப்படலம். நபிகள் நாயகம் வேடனிடம் சிக்கிய ஒரு பெண்மானுக்காகத் தாமே பிணையாக நின்று, அம்மானை அவனிடமிருந்து மீட்ட பெருங்கருணைத் திறத்தை எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது.

 முகமது நபி மானை காணுதல் 

     முகமது நபி ஒருநாள், நகர்ப் புறத்தினை நீங்கிச் செழுமையான மேகங்களைத் தனது முடியினில் தாங்கியதும், மணமிக்க மலர் வனங்களைக் கொண்ட ஒரு மலையினை அடைந்தார்.

         அங்கு, காட்டில் திரியும் விலங்குகளைக் கொன்று அவற்றின் தசைகளை அறுத்துப் பக்குவமாகச் சுட்டுத் தன்னந்தனியே அவற்றை உண்டு, தனது ஊனைப் பெருக்கி வரும் வேடன் ஒருவன், பெண் மான் ஒன்றை வலையில் பிடித்துக் கட்டி வைத்திருப்பதனை முகமது கண்டார்.

  முகமது நபிகள் மானைக் கண்டபின், அரும்புகளும் தளிரும்மிக்க சோலையையும் காணார்; அருவியையும் காணவில்லை. அருகில் உள்ள நிழலையும் நோக்கார்; தம் மீது ஈச்சங்காயங்கள் மழை போலச் சொரிவதையும் நோக்காராகி மானையே நோக்கிச் சென்றார்.

மானின் நிலை

         தரையில் வெள்ளியை உருக்கிவிட்டது போல மானின் மடியில் இருந்து பால் சிந்தியது. கண்களில் நீர் பொழிய உடல் பெருமூச்சு விட்டது. திரும்ப முடியாமல் காலில் கட்டுண்டு நிலத்தில் கிடந்தது. வேடுவனின் வலைக்குள் சுருங்கி வேதனைப்பட்டுக் கிடந்த மானின் உடல் பதைக்கின்ற நிலையை நபிகள் கண்டார்.

             அக்காட்டில் உள்ள மரங்களில் பூத்துக் குலுங்கிய  மலர்கள் செந்தேனைப் பொழிந்தன. அக்காட்சி மானின் துயரத்தைக் காண முடியாமல் கண்ணீர் சிந்துவதைப் போலிருந்தது. 

      மானைக் கட்டி வைத்திருந்த வேடனைக் கண்ணால் காண்பதும் பாவம் என்பது போல பறவைகள் தனது இனத்தோடு கூட்டுக்குள் புகுந்தன.

           அப்போது பூக்களில் உள்ள தேனை உண்ட வண்டுகள் இசை பாடின. அந்த இசை முகமது நபிகள் வருவார். வருத்தப்படும் மானை மீட்பார் என்று கூறுவது போலிருந்தது.

நபிகளிடம் பெண்மான் முறையிடல் 

        முகமது நபி அவர்கள் மானின் அருகில் வந்து நின்றார். தன்னருகே வந்து நின்ற நபியை நோக்கி, தனது குட்டையான வாலை அசைத்து, நெடுங்கழுத்தை நீட்டிக் "கறையற்ற நிலவுபோன்றவரே! வள்ளல் முகமதே!" என விளித்துப் போற்றித் தடையின்றி எவர்க்கும் கேட்கும்படியாக, வணங்கிச் சலாமிட்டுப் பின் கூறலாயிற்று.

  “வல்லவனாகிய இறைவனது உண்மைத் தூதரே! விரைந்து எனது சொற்களை  கேட்டு உமது அருளைத் தருவீராக!” எங்களுக்கு ஒரு இளங்கன்று வேண்டுமென ஆசைப்பட்டு நானும் என் கலைமானும் இருக்க, நான் கருவுறாததால் வருத்தத்துடன் வாழந்தோம். அப்போது முகமதாகிய உங்கள் பெயரைப் போற்றினேன். எனக்கு இளஞ்சூல் உருவாகிக் கரு வளர்ந்தது.”

            "யானும் எனது துணையும் சேர்ந்து ஒன்றானதைப் போன்ற உருவோடு ஓர் இளங்கன்று பிறந்தது. இன்பக் கடலில் ஆழ்ந்து இம்மலையிடத்தைச் சார்ந்து துன்பம் அகன்றிருந்தேன். ஆனால் என் முன்வினையினை நான் அறியவில்லை. எனது உயிர் போன்ற கன்றும் ஆண்மானும் நானும் எங்கள் சுற்றமும் மலைச்சாரலில் ஓரிடத்தில் வயிராறத் தழையுண்டு, பசி தீர்ந்து பின் நீர் அருந்தி எள்ளளவு அச்சமும் இன்றி நின்று உலவிய நேரம்! நாங்கள் நின்றிருந்த திசையின் எதிரிலிருந்து ஒரு மலைக் முகத்தில் இருந்து, மத யானையும் அஞ்சி நடுங்கும்படியாக  இடிமுழக்கம் போன்று ஒரு வரிப்புலியின் முழக்கம் கேட்டது. அதைக் கேட்டு நாங்கள் ஒவ்வொரு திசையிலும் தனித் தனியாகச் சிதறி  ஓடினோம்."

             "நானும் எனது கன்றைக் காணாது வாடிய மனத்தோடும் உடம்பானது ஆடிக்காற்றில் துரும்பு போல் ஆட, வேறோர் கானகம் புகுந்தேன். அக்காட்டினை அடைந்த போது, அங்கு மறைந்திருந்த இவ்வேடன், வலையில் மாட்டிக் கொண்டேன். புலி வாயிலிருந்து தப்பிச் சிங்கத்தினிடம் சிக்கினாற் போல, என் உடல் பதை பதைக்க நடுங்கி நிற்கின்றேன்." எனக் கூறியது. 

மானின் மனநிலை

   மேலும், மான் முகமது நபி அவர்களை பார்த்து,     "நான் பிடிபடுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு தான்  என் கன்று பிறந்தது; இன்னும் புல்லை மேய்ந்தறியாது; நீரும் பருகாது;  என் கன்று பூமியில் கிடந்து என்ன பாடுபடுகின்றதோ? அறியேன். எனது கன்று தனது தந்தையாகிய கலைமானிடம் சோ்ந்ததோ? அல்லது வேறொரு புறமாக ஓடிச் சென்றதோ, தன் இனத்தைச் சேர்ந்து பெற்றோருக்காக ஏங்கியதோ? அல்லது புலியின் வாயில் அடிபட்டு இறந்ததோ? என்னைத் தேடி இங்குமங்குமாக ஓடி அலைகின்றதோ ? நான் அறியேன்." எனக் கூறி கண்ணீர் வடித்தது. மேலும் நபிகளை பார்த்து 

    "மாந்தர் எவரும் சொர்க்கத்தில் புகச்செய்யும் புண்ணியனே! நான் இவ்வேடனின் பசியைத் தீர்க்கச் சித்தமாக உள்ளேன். அதற்கு முன் என் கால்களைப் பிணித்துள்ள பிணைப்பை நீக்கி என்னைத் தாங்கள் பிணையாக நின்று விடுவித்தல் வேண்டும். என்னைத் தாங்கள் விடுவித்தால், என்னுடைய கலை மானைச் சேர்ந்து, அதன் கவலையை மாற்றி எனது நிலையை என் இனத்திற்குத் தெரிவித்து எனது கன்றினுக்கு இனிய தீம்பால் ஊட்டி, எனது குலத்தோடு சேர்ந்து இருந்து விட்டுச் சில நாழிகைப் போதில் திரும்புவேன்" என்று அப்பெண்மான் நபியிடம் முறையிட்டது.

மானுக்குப் பிணையாக நபிகள் நாயகம் நிற்றல் 

    மான் இவ்வாறு உரைக்கக் கேட்ட நபி, மனத்தில் கருணை பொங்க, வேடனை நோக்கி, “இந்த மான் தனது கன்றின் துயர் தீர்த்து வரும்வரை நான், இதற்குப் பிணை; எனவே இதனை விடுக” என்றார். 

          அதைக் கேட்ட வேடன் சினத்துடன் சிரித்து "முட்கள் நிரம்பிய காட்டில் உச்சந்தலையில் உள்ள வியர்வை உள்ளங்கால் வரை நனைக்கும்படி ஓடி எந்த வேட்டையும் கிடைக்காத நிலையில் இந்த மானைப் பிடித்து வந்தேன். இந்த மானின் தசையால் என் பெரும்பசி நீங்கியது என மகிழ்வோடு இருந்தேன். முகமது அவர்களே! நான் வருத்தப்படும்படி பேசி விட்டீர்கள். மேலும், காட்டில் பிடித்த மானை விட்டு விட்டால் அது மீண்டும் மனிதரிடம் திரும்பும் செயல் முன் எப்போதும் நிகழ்ந்ததில்லை. எனவே நீங்கள் கேட்பது சரியல்ல" என வேடன் மறுத்துக் கூறினான். 

     அதனைக் கேட்ட  முகமது நபிகள், வேடனை பார்த்து  "என்னைப் பிணையாகக் கொண்டு இந்தப் பெண்மான் விடுவிக்கவும். மான்  ஒரு நாழிகைப் போதில் வராவிட்டால், நான் உனது பசியைத் தீர்ப்பதற்காக ஒன்றிற்கு இரண்டாக அன்புடன் தருவேன்! கவலைப் படாதே!" என்று இனிமையுடன் நபிகள் உரைத்தார். 'ஒன்றுக்கு இரண்டு மான்கள் கிடைக்கும்' என்பதை எண்ணி வேடனும் சம்மதித்தான். மானை விடுவித்தான்.

வேடனின் செயலை மான் தன் கூட்டத்திற்கு உரைத்தல்         

     அப்பெண்மான், தன் இனத்தினுள் சென்று சேர்ந்து கவலை நீங்கியது. தனது கலையின் வருத்தத்தையும் போக்கித் தனது கன்றுக்குப் பாலூட்டி, மென்மையான முதுகையும் வாலினையும் நாவினால் நக்கிக் கொடுத்துக் கழுத்தை வளைத்து மோந்து அதன் வேட்கையையும் போக்கியது.

            கன்றிற்கு அமுதம் ஊட்டிய பின்னர்க் காட்டகத்தில் ஓடிச் சென்று, தனது இனத்திற்கெல்லாம் தான் வேடன் கைப்பட்ட வரலாறும், நபிகள் அதை மீட்டு வர விட்டதும் எடுத்துரைத்தது. 'பிணையாக நபிகள் இருந்தனர்' என்ற மொழியைக் கேட்டுப் மானினம்  அனைத்தும் உள்ளப் பதைப்படைந்து துன்பம் எய்தின. துணையாகிய ஆண்மானும் உடல் சோர்ந்து பெருமூச்சு எய்தி நின்றது. ’பெண் மானை மீண்டும் வேடனிடம் செல்ல வேண்டாம்' என ஆண் மான் கூறியது. 

பெண்மான் எடுத்த முடிவு 

         அதனைக் கேட்ட பெண் மான் ஆண் மானிடம் "முகமது நபி அவர்கள், வேடனுடன்  பேசி,  தானே பிணையாக நின்றார். பெரியவன் தூதராகிய நபிகள், இவ்வுலகத்தில் எல்லா உயிர்களையும் அணைத்துக் காப்பதற்கு அவரல்லது வேறு ஒருவர் இல்லையல்லவா? எனது உயிரை வேடனது பசிக்காக ஈந்து, நபியினது பிணையை மீட்க நான் செல்லவில்லை என்றால் சொர்க்கத்தை இழந்து நரகத்தில் வீழ்வேன். எனவே நான் மீண்டும் முகமது நபிகளிடம் சென்று வேடுவனின் பசியாற்ற போகிறேன்" என ஆன்மானிடம் கூறிவிட்டு முகமது நபி இருக்கும் இடத்தை நோக்கிச் சென்றது.  

வேடனின் மனமாற்றம்

      மானும் அதன் கன்றும் சேர்ந்து வருவதனை நபிகள் பெருமான் கண்டு மகிழ்ந்து, வேடனை பார்த்து  "ஒரு பிணைக்கு இரண்டாக உன்னிடம் வருகின்றன பார்" என்றுரைத்தார். அதனைக் கண்ட வேடன் அதிசயத்தான். மானின் செயலால் மனம் மாறிய வேடன், முகமது நபியின் கால்களில் விழுந்து வணங்கினான். பெண் மானும் அதன் கன்றும் வள்ளல் முகமதுவை வணங்கியது. மீண்டும் காட்டிற்குச் சென்று தன் இனத்தோடு வாழ்ந்தது.

    இவ்வாறு வள்ளல் முகமது நபிகள் மானுக்கு பிணையாக நின்று மானை விடுவித்ததோடு வேடனை மன மாற்றம் அடைய செய்தார் என்ற செய்தியை மானுக்கு பிணை நின்ற படலத்தில் உமறுப்புலவர் பாடியுள்ளார்.

***** இராஜாலி ******

வெள்ளி, 1 செப்டம்பர், 2023

முல்லைப்பாட்டு - நப்பூதனார்

 நூல் குறிப்பு

       சங்க இலக்கிய நூல் தொகுதிகளில் ஒன்றான பத்துப்பாட்டில், அகப்பொருள் நூலாக விளங்குவது முல்லைப்பாட்டு. பத்துப்பாட்டு நூல்களில் மிகவும் சிறியதாக,103 அடிகளைக் கொண்டதாக முல்லைப்பாட்டு காணப்படுகிறது. இதனைப் பாடியவர், காவிரிப்பூபட்டிணத்து  பொன் வணிகர் மகன் நப்பூதனார் ஆவார். முல்லை நிலத்திற்குரிய ஒழுக்கமான, "இருத்தலும் இருத்தல் நிமித்தமும்" என்ற ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இந்நூல் பாடப்பட்டுள்ளது.

கார்கால மாலைப் பொழுது


    முல்லைப்பாட்டில் துவக்கமாக நப்பூதனார் கார்கால வரவையும், தலைவியின்மாலைப் பொழுதில் நிலையினையும் பற்றி பின்வருமாறு விவரித்துள்ளார்.சங்கு சக்கரத்தை கையில் ஏந்திய திருமால், வாமன அவதாரம் எடுத்த போது மகாபலிச் சக்கரவர்த்தி நீர் வார்த்துக் கொடுக்க, நெடிய உருவம் எடுத்து, இவ்வுலகத்தை அளந்தது போல, மலையில் இருந்து வந்த மேகக்கூட்டங்கள், குளிர்ந்த கடல் நீரைப் பருகி, வலப்பக்கமாக எழுந்து, மலையில் மோதி, மழையாகப் பொழிந்த மாலைப் பொழுது வந்தது.

நல்லோர் விரிச்சி கேட்டல்

       மழைபெய்த அம் மாலைப்பொழுதில், தலைவியின் துயரைக் கண்டு வருந்திய பெருமுது பெண்டி, காவல் நிறைந்த அவ்வூர் எல்லையைக் கடந்து, நாழியில் கொண்டு சென்ற நெல்லையும்,  புத்தம் புது முல்லைப் பூவையும் இறைவனுக்குத் தூவி, விரிச்சிக்காகக் காத்திருந்தனர். அப்பொழுது சிறு கயிறால் கட்டப்பட்ட பசுக்கன்று ஒன்று தன் தாய் பசுவைத் தேடி தவித்துக்கொண்டிருந்தது. அப்போது,ஆயர்குலப் பெண் ஒருத்தி குளிரில் நடுங்கியவாறு வெளியே வந்து, கோவலர் ஆடுகள், மாடுகள் ஒட்டி வரும் சத்தத்தைக் கேட்டு "இன்னே வருகுவர் தாயர்”எனக் கூறினாள். இதனைக் கேட்ட முது பெண்கள் 'நல்ல வார்த்தையைக் கேட்டோம் அதனால் தலைவன் விரைவாக வினைமுடித்து விரைந்து வந்து சேருவான். எனவே,நீ கவலையை விடுவாயாக' எனத் தலைவியிடம் சென்று ஆறுதல் மொழி கூறினார்கள். ஆனால், தலைவியோ மனம் வருந்திய படி கண்களில் நீர் வடிந்த நிலையில் காணப்பட்டாள். என மாலைப்பொழுதில் தலைவியின் துன்பத்தை முல்லைப்பாட்டு கூறுகிறது.

பாசறையின் இயல்பு


    'கார்காலம் வந்ததும் வருவேன்' எனத் தலைவியிடம் கூறிவிட்டு, தலைவியை பிரிந்து போருக்குச் சென்ற தலைவன், போர்க்களத்தில்,  காட்டாறுகள் பாயும் பரந்துவிரிந்த மணற்பரப்பில், காணப்பட்ட பிடவம் போன்ற செடி, கொடிகளை வெட்டி சுத்தம் செய்து, அங்கே கடல் அலைகளை போன்று பரந்து விரிந்த பாடி வீடுகளை அமைத்து அதில், மன்னனும் படைவீரர்களும் தங்கியிருந்தார்கள்.

யானைப்பாகன் செயல்

   வரிசை வரிசையாக அமைக்கப்பட்டிருந்த பாடி வீடுகளின் முற்றத்தில், சிறு கண்களை உடைய யானைகள் காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்தது. அந்த யானைகள் உண்பதற்காக, ஓங்கி வளர்ந்த கரும்புகளையும், நெற்கதிர்களையும், இன்குளகு எனப்படும் அதிமதுரத் தளைகளையும் போடப்பட்டிருந்தது. யானைகள் அவற்றை உண்ணாது தனது தும்பிக்கையில் அதிமதுரத் தளைகளை எடுத்து தனது நெற்றியை துடைத்தவாறு நின்று கொண்டிருந்தது. அப்போது அங்குசம் எனப்படும் கருவியை கையில் கொண்ட, கல்வி அறிவு அற்ற யானைப் பாகர்கள், வடமொழியில் சில வார்த்தைகளை கூறி யானைக்கு கவளம், கவளமாக உணவுகளை ஊட்டிக் கொண்டிருந்தார்கள்.

வீரர்கள் தங்கும் படைவீடுகள்

 படை வீரர்கள் தங்குவதற்காக தனியாக வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன. முனிவர்கள் கையில் வைத்திருக்கும் முக்கோல் போன்ற கம்புகளை நாட்டி, அவற்றில் கயிறுகளை இறுகக் கட்டி, துணியினால் கூரை அமைத்து, கிடுகு எனப்படும் கேடயங்களை பக்கச் சுவற்றுக்கு பதிலாக நாட்டி, வரிசை, வரிசையாக படைவீடுகளை அமைத்திருந்தார்கள்.

அரசனுக்கு அமைத்த பாசறை

  அரசன் ஓய்வெடுப்பதற்காக தனியாக பாசறைகள் அமைக்கப்பட்டிருந்தது. அப்பாசறையில் மாலை நேரத்தில் அழகிய வளையல் அணிந்து, ஒளிவீசும் வாளேந்திய பெண்கள், சுரைக் குடுவையில் நெய்யைக் கொண்டு வந்து பாசறையில் இருக்கும் விளக்குகளில் நெய்யையும், திரியையும் வைத்து விளக்குகளை ஏற்றி விட்டு சென்றனர்.

மெய்க்காப்பாளர்கள் காவல் புரிதல்

      இந்நிலையில், இரவு மணி அடித்து ஓய்ந்து பின்னர், அதிரல் பூத்துக்குலுங்கும் நேரத்தில், குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருக்கும் போது, நேரத்தை கணக்கிட்டு சொல்லும் நாளிகை கணக்கர்கள் மன்னனைப் பார்த்து "பரந்து விரிந்த கடலை கடந்து சென்று வெற்றிவாகை சூடும் மன்னனே!இப்பொழுது நேரம் இன்னது" என வாழ்த்தி, கூறிச் சென்றனர்.

அரசன் படுக்கையில் தூங்காமல் சிந்தித்து இருத்தல்

       அந்த இரவுப் பொழுதில் மன்னன், தூக்கம் கொள்ளாதவனாக காணப்பட்டான். மன்னனுடைய பள்ளியறை இரண்டு அறைகளாக  காணப்பட்டது. அங்கு அழகான விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன. வலிமையான உடலை உடைய யவனர்களும், வாய் பேச முடியாத ஊமை மிலேச்சர்களும் அங்கு காவல் புரிந்து கொண்டிருந்தார்கள். அப்போது மன்னன் ஒரு கையை படுக்கையில் ஊன்றியவாறு, மற்றொரு கையை தலையில் வைத்தவாறு, தூக்கம் இல்லாதவனாய் இன்றைய நாள் நடந்த போரைப் பற்றி சிந்தித்துக் கொண்டு படுக்கையில் படுத்திருந்தான்.மறுநாள் பகைவர்களை வென்ற வெற்றி ஆரவாரமும், வெற்றி முரசு முழங்கும் ஒலியும் பாசறையில் கேட்டுக்கொண்டிருந்தது.

தலைவனது பிரிவினால் தலைவி பெற்ற துயரம்

    தலைவனைப் பிரிந்த தலைவி கார்காலம் வந்த பின்பும் தலைவன் திரும்பாததால், துயரம் அடைந்து, நீண்ட நேரம் தூக்கம் இல்லாதவராக காணப்பட்டாள். பசலை நோயால் உடல் நலிவுற்று கையிலிருந்த வளையல்கள் கழன்று விழுந்த நிலையில் காணப்பட்டாள். பெருமூச்சு விட்டவளாய், பாவை விளக்கு எரியும் ஏழு அடுக்கு மாளிகையில் தலைவி தூங்காமல் விழித்திருந்தாள் அப்பொழுது மழை நீர் அருவி போல் பாயும் ஓசை காதில் கேட்டது. மறுநாள் காலை அரசனும், படைகளும் எதிரியை வென்றுbஅவருடைய நிலத்தை கைப்பற்றிக்கொண்டு, வெற்றிக் கொடியை ஏந்தியவாறு ஊருக்குள் வந்து கொண்டிருந்தனர்.

மழையில் செழித்த முல்லை நிலம்


    வெற்றி பெற்று வரும் மன்னன், இரண்டு குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் வந்து கொண்டிருந்தான், அப்பொழுது, முல்லை நிலத்தில் காயா மலர்கள் பூத்துக் காணப்பட்டன. பொன் போன்ற கொன்றை மலர்கள் பூத்துக் குலுங்கின, முல்லை அரும்புகள் மலர்ந்து காணப்பட்டன. செல்லும் வழி எங்கும் தோன்றி மலர்கள் சிவப்பு நிறத்தில் காணப்பட்டது. அங்கு வளர்ந்திருந்த வரகு செடியில் கதிர்களை பெண் மானும், ஆண் மானும் இணைந்து மகிழ்ச்சியுடன் மேய்ந்து கொண்டிருந்தன. மன்னனை வரவேற்கும் நிலையில்  சிறுதூறல் பெய்து கொண்டே இருந்தது.

    என முல்லைப்பாட்டில் தலைவனைப் பிரிந்த தலைவியின் நிலையையும், கார்கால சூழலையும், மன்னன் அமைத்திருந்த பாசறையின் தன்மையினையும், மழையால் முல்லை நிலம் செழித்த காட்சியையும் முல்லைப்பாட்டில் நப்பூதனார் அழகாக விவரித்துள்ளார்.

******* இராஜாலி******

வியாழன், 31 ஆகஸ்ட், 2023

பெரியபுராணம் - பூசலார் நாயனார் புராணம்

முன்னுரை

     தனியடியார்கள் அறுபத்து மூவரும், மற்றும் தொகையடியார் ஒன்பது பேரும் சேர்த்து எழுபத்திரண்டு சிவனடியார்களின் வரலாற்றை எடுத்துரைக்கும் பெருமை பெற்ற நூல் பெரியபுராணம் ஆகும். இந்நூலை இயற்றிய சேக்கிழார், இந்நூலிற்குத் திருத்தொண்டர் புராணம் எனப் பெயரிட்டார். இந்நூல் பன்னிரெண்டாம் திருமுறையாகப் போற்றப்படுகிறது. இதில் இரண்டு காண்டங்கள், 13 சருக்கங்கள், 4286 விருதப்பாக்கள் காணப்படுகின்றன.

பூசலார் நாயனார் புராணம்

     தொண்டை நாட்டில் திருநின்றவூரில் மறையவர் குலத்தில் தோன்றியவர் பூசலார். இவர் சிவனடியாராகிய அன்பர்களுக்கு ஏற்றபணி செய்தலே பிறவிப்பயன் என்றெண்ணி, பொருள்தேடி அடியவர்களுக்கு அளித்து  வந்தார். சிவபெருமானுக்குக் கோயில் அமைக்க எண்ணி, பொருளுதவி கிடைக்கப் பெறாமையால் மனதிலே கோயில் எழுப்பிய பூசலாரின் பக்திச் சிறப்பினைப் பூசலார் நாயனார் புராணம் எடுத்துரைக்கின்றது.

பூசலார்

 திருநின்றவூரில் வைதீக மரபினில் அவதரித்தவர் பூசலார். உடலாலும் உணர்வாலும் சிவபெருமானை முப்பொழுதும் நினைக்கின்ற அறநெறியாளராகத் திகழ்ந்தவர். உண்மைப் பொருளைப் பெறுதற்கு ஏதுவாகிய வேத நீதிக் கலைகள் அனைத்தையும் தெளிவு பெற்று உணர்ந்தவராகப் பூசலார் விளங்கினார்.

கோயில் கட்ட நினைத்தல்

  சிவபெருமானுக்கும், சிவனடியார்களுக்கும் தொண்டு செய்வதே தம் பணியாக பூசலார் கருதினார், சிவபெருமானுக்குக் கோயில் கட்டுவதற்குப் பெருஞ்செல்வம் தம்மிடம் இல்லாமையைக் கண்டு மனம் வருந்தினார். சிவபெருமானுக்கு ஒரு கோயிலைக் கட்ட மனதில் எண்ணினார். கோயில் கட்டுவதற்குப் பொருள் எவ்வகையிலும் கிட்டாமையால், மனதில் கோவில் கட்ட எண்ணி,

"நினைப்பினால் எடுக்க நேர்ந்து நிகழ்வுறு நிதியமெல்லாம்
தினைத்துணை முதலாத் தேடிச் சிந்தையால் திரட்டிக் கொண்டு"
கோவில் காட்டும் பணியை மேற்கொண்டார்.

கோயில் கட்டி முடித்தல்

    கோயில் கட்டுவதற்குரிய சாதனங்களோடு தச்சர்களையும் மனதினால் தேடிக் கொண்டு, கோயில் கட்டுவதற்கு நல்ல நாளும், வேளையும், பார்த்து ஆகம விதிப்படி அடிநிலை (அஸ்திவாரம்) அமைக்கக் கருதினார். இரவு முழுவதும் உறங்காமல் கோயில் எடுக்கலானார். அடிநிலை வரி முதலாக வரும் அடுக்குகள் அனைத்தையும் முடித்து, சித்திர வேலைப்பாடுகள் மனதிலே அமைத்து சுண்ணச்சாந்து பூசி, மேல் சிற்ப அலங்கார வகைகளையும் செய்தார். தீர்த்தக் கிணறு அமைத்து, கோயிலைச் சுற்றிலும் மதிற் சுவர் எழுப்பினார். தடாகம் அகழ்ந்ததோடு, கோயிலுக்கு வேண்டிய அனைத்தையும் வகைபட செய்து, சிவபெருமானுக்குரிய நன்னாளில் தாபரம் (பிரதிட்டை ) செய்ய பூசலார் விரும்பினார்.

பல்லவ அரசன் கனவில் இறைவன்

    காடவர் பெருமானாகிய இராசசிங்கன் என்னும் பல்லவ அரசன் கச்சியம் (காஞ்சி) பதியில் சிவபெருமானுக்குத் திருக்கோவில் அமைத்து, வேண்டிய பணிகளை விரைந்து மேற்கொண்டு வந்தான். பெரும் பொருட் செலவில் கட்டப்பட்ட இவ்வாலயத்திற்குக் குடமுழுக்குச் செய்தும் பிரதிட்டை செய்தும், சிவபெருமானை எழுந்தருளச் செய்ய பூசலார் குறித்த அந்நன்நாளைக் குறித்தான். அன்நாளுக்கு முந்தைய நாள் கொன்றைமலர்ச் சூடிய சிவபெருமான் அரசனின் கனவில் தோன்றினார்.

"பல்லவ மன்னனே!

"நின்ற ஊர்ப் பூசல் அன்பன் நெடிதுநாள் நினைந்து செய்த
'நன்றுநீ பால யத்து நாளை நாம் புகுவோம்”

என தொண்டராகிய பூசலாரை உலகறியச் செய்யவேண்டும் என்னும் நோக்கில் சிவபெருமான், பல்லவ மன்னனின் கனவில் தோன்றி அக்கோயிலிலே 'நாளை நாம் புகுவோம்' என்றுரைத்து, உன் ஆலயப்பணி செய்கையை நாளைக்கழித்து வைத்துக் கொள்வாயாக!" என்று இறைவன் அருளினார். இறைவன் உரைத்த அத்தொண்டரின் திருப்பணியைக் கண்டு வணங்கிவர வேண்டும் என மன்னன் திருநின்றவூர் வந்து சேர்ந்தான்.

கோயில் எங்கே உள்ளது

    திருநின்றவூர் வந்து சேர்ந்த அரசன், 'பூசலார் என்னும் அன்பர் கட்டியக் கோயில் எப்பக்கத்தில் உள்ளது'? என்று அங்குள்ளோரிடம் வினவினான். 'பூசலார் கோயில் ஒன்றும் எழுப்பவில்லை' என்று அனைவரும் கூறவே, உண்மை நெறியினில் நிற்கும் மறையவர்கள் எல்லோரும் வருக என்று ஆணையிட்டான். வேதியர்கள் அனைவரும் அரசனைக் கண்டனர். மன்னன், பூசலார் யார்? என்று வினவியபோது, மறையோர்கள் எல்லோரும் அவர் குற்றமற்ற வேதியர் என்று பதிலுரைத்தனர். அரசன் பூசலாரை காண அவரது இல்லம் நோக்கி விரைந்தான். பூசலாரைக் கண்டு தொழுதான் அரசன். ‘பூசலாரே! இவ்வூரில் நீவிர் கட்டிய கோயில் எங்கே உள்ளது? சிவபெருமான் அத்திருக்கோயிலில் தாபித்தருளும் நாள் இன்றென தெரிவித்தார். ஆகையால் உங்கள் திருவடி கண்டு தொழுதற்கு வந்ததாக' அரசன் கூறினான்.

பூசலார் நிகழ்வினை விளக்குதல்

   பல்லவ அரசன் கூறியதைக் கேட்ட பூசலார் மருட்சியடைந்து,  எம்பெருமான் தன்னையும் ஒரு பொருளாகக் கொண்டு அருளினமையைக் கண்டு வியப்படைந்தார். கோயில் அமைக்க வேண்டிய பொருள் கிடைக்காமையால் மனத்தினாலே முயன்று நினைத்து, நினைத்து செய்த கோயில் இதுவாகும் என்று சிந்தனையினால் செய்தக் கோயிலை பூசலார் அரசனிடம் எடுத்துரைத்தார்.

நிலமிசை வீழ்ந்து வணங்குதல்

  பூசலார் உரைத்ததைக் கேட்ட அரசன் அதிசயம் அடைந்து, குற்றமற்ற சிந்தையினையுடைய அன்பரின் பெருமையைத் துதித்து, மணமிக்க மாலை கீழே படியும்படி நிலத்தில் வீழ்ந்து வணங்கினான். முரசுகள் ஒலிக்க சேனைகளுடன் மீண்டும் அரசன் தன் ஊரினையடைந்தான்.

நிறைவுரை

 அன்பராகிய பூசலாரும் தாம் மனத்தினால் அமைத்த ஆலயத்திற்கு, பல நாள் அகம் குளிர, முகம் மலர பூஜைகள் செய்து துதித்து பொன்னம்பல நாதன் ஆகிய சிவபெருமானின் இணையடி நிழலில் இளைப்பாறினார். என்று சேக்கிழார், பூசலாரின் வரலாற்றைக் கூறுகிறார்.

 ******இராஜாலி ******

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2023

மணிமேகலை - பாத்திரம் பெற்ற காதை

முன்னுரை

        ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை கி.பி இரண்டாம் நூற்றாண்டில் சீத்தலைச் சாத்தனாரால் பாடப்பட்டது. இரட்டைக் காப்பியங்களில் ஒன்றான இக்காப்பியம், கோவலன் கண்ணகிக்கு பிறந்த மணிமேகலையின் வாழ்க்கை வரலாற்றை கூறுவதாக காணப்படுகிறது. 30 காதைகளையும் 4755 பாடல்களையும் கொண்டதாக இக்காப்பியம் விளங்குகிறது. பௌத்த சமயத்தைச் சார்ந்த இக்காப்பியம், மணிமேகலைத் துறவு, புரட்சிக் காப்பியம், சீர்திருத்தக் காப்பியம், கதைக்களஞ்சியக் காப்பியம், பசிப்பிணி மருத்துவக் காப்பியம் எனவும்  அழைக்கப்படுகிறது. 

பாத்திரம் பெற்ற காதை

       மணிமேகலா தெய்வம், மணிமேகலையை மணிபல்லவ தீவில் விட்டுச் சென்ற பின்னர், அத்தீவை காவல் காக்கும் தீவத்திலகை என்னும் பெண் தெய்வம் மணிமேகலை முன் தோன்றியது. மணிமேகலை தனது முற்பிறவியினை  அறிந்ததை தெரிந்த பின்னர்,  புத்த பீடிகைக்கு முன் உள்ள கோமுகி பொய்கையில் காணப்படும் ஆபுத்திரனின் கையில் இருந்த அமுத சுரபியினை பெறுவதற்கான வழிகளை மணிமேகலையிடம் கூறியது. அதன் பின்னர் மணிமேகலை புத்த தேவனை வணங்கி அமுதசுரபியினை பெற்ற செய்தியை கூறுவதாக இக்காதை அமைந்துள்ளது.

மணிபல்லவத் தீவில் மணிமேகலை

       மணிபல்லவத் தீவிற்கு வந்த மணிமேகலை, மணிமேகலா தெய்வம் கூறியதன் படி புத்தரின் ஆலயத்தை வணங்கி தனது முற்பிறவியினை அறிந்து கொண்டாள்.

தீவத்திலகை வருதல் 

       மணிமேகலா தெய்வம் மந்திரம் சொல்லித் தந்து சென்ற பின்னர் மணிமேகலை மணிபல்லவத் தீவைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டாள். வெள்ளை மணல் குன்றுகளையும், அழகிய பூங்காக்களையும், குளிர்ச்சியான மலர்கள் பூத்திருக்கும் குளங்களையும் சுற்றிப் பார்த்துக் கொண்டே பத்து மைல் தூரம் சென்றாள். அப்போது தெய்வத் திருக்கோலத்துடன் தீவதிலகை என்பவள் எதிரே தோன்றினாள். “படகு கவிழ்ந்து தப்பி வந்தவளைப் போல இங்கு வந்துள்ள தூயவளே நீ யார்?” என்று மணிமேகலையைப் பார்த்துக் கேட்டாள்.

மணிமேலை பதில் கூறல்

          மணிமேகைலை தீவதிலகையிடம், “யார் நீ என்று என்னைக் கேட்டாய்? எந்தப் பிறப்பைப் பற்றிய கேள்வி இது? தங்கக் கொடி போன்றவளே! நான் சொல்லப் போவதைப் பொறுமையாகக் கேட்பாயாக! முற்பிறப்பில் நில உலகை ஆட்சி செய்த அரசனான இராகுலன் மனைவி நான். என் பெயர் இலக்குமி. இந்தப் பிறவியில் நாட்டியக் கலைச்செல்வி மாதவியின் மகள். என் பெயர் மணிமேகலை. மணிமேகலா தெய்வம் என்னைக் கொண்டு வந்து இங்கு சேர்த்தது. புகழ் பெற்ற இந்தப் பீடிகையால் என் பழைய பிறப்பைப் பற்றித் தெரிந்து கொண்டேன். இது நான் அடைந்த பயன். பூங்கொடியே நீ யார் என்பதைத் தெரிந்து கொள்ளலாமா?” என மணிமேலை கேட்டாள்

தீவதிலகை மறுமொழிக் கூறுதல்

       மணிமேகலை தனது முற்பிற்பினை அறிந்ததை தீவதிலகை அறிந்தாள். அவளுக்கு தன்னைப் பற்றி சில செய்திகளைக் கூறலானாள். “இந்த மணிபல்லவத் தீவின் அருகில் இரத்தினத் தீவகம் உள்ளது. அதில் உள்ள சமந்தகம் என்ற மலை உச்சியின் மேல், தன்னைச் சேர்ந்தவர்களைப் பிறவிக் கடலில் இருந்து கரை சேர்க்கும் புத்தரின் பாத பீடிகை உள்ளது. அதனை வலம் செய்து வணங்க இங்கு வந்தேன். குற்றமின்றிக் காட்சி தரும் இந்தப் பாத பீடத்தை இந்திரனின் ஆணையால் இப்பொழுது காவல் செய்து வருகிறேன். என் பெயர் தீவதிலகை” என்று கூறினாள்.

தீவதிலகை அமுதசுரபியைப் பற்றி கூறுதல் 

      அறநெறிகளின் தலைவன் புத்தபகவான். அவர் கூறிய புகழ் நிறைந்த நல்லறத்தில் தவறாக நோன்பு உடையவரே, இந்தத் திருவடித்தாமரைப் பீடிகையைப் பார்ப்பதற்கும், வணங்குவதற்கும் உரியவர் ஆவர். அவ்வாறு வணங்கிய பின்னர் அவர்கள் தம்முடைய பழம்பிறப்பை உணர்வார்கள். அத்தகைய சிறப்புக்கு உரியவர்கள் இவ்வுலகில் குறைவு. அத்தகையவரே தருமநெறிகளைக் கேட்பதற்கும் உரியர். புத்தரின் அருள் பெற்ற உயர்ந்தவளே! நான் கூறுவதைக் கேட்பாயாக!

“மிக்க புகழுடைய இந்தப் பீடிகையின் முன்பு தெரிவது கோமுகி என்ற பொய்கையாகும். நீர் நிறைந்துள்ள இந்தப் பொய்கையில் பெரிய குவளை மலர்களும் நெய்தல் மலர்களும் அழகாகப் பூத்துக் கலந்து பொலிவுடன் திகழ்கின்றன.வைகாசி மாதத்தில், விசாக நட்சத்திரத்தன்று (பௌர்ணமி நாள்) புத்தர்பிரான் தோன்றிய அந்த நாளில் ஆபுத்திரன் கையிலிருந்த அமுதசுரபி என்ற பேரும் புகழும் மிக்க பாத்திரம் வெளிப்பட்டுத் தோன்றும். அந்த நல்ல நாளான வைகாசிப் பௌர்ணமி இன்றுதான். அந்த அரிய அமுதசுரபி பாத்திரம் தோன்றும் நேரமும் இதுதான். நேரிழையே! அதோ அது உன்னிடம் வருவது போலத் தெரிகிறது.

           'ஆங்கு அதின் பெய்த ஆர் உயிர் மருந்து

           வாங்குநர் கையகம் வருத்துதல் அல்லது

           தான் தொலைவு இல்லாத் தகைமையது ஆகும்'

எனக் கூறியதோடு மேலும், இப்பாத்திரத்தின் சிறப்பினை அறவண அடிகளிடம் இப்பாத்திரத்தின் வரலாற்றைத் தெரிந்து கொள்வாய்” என்று தீவதிலகை கூறினாள்.

அமுதசுரபி கிடைத்தது

         தீவதிலகை கூறியது கேட்ட மணிமேகலை, அதனை அடைய விரும்பி அந்த புகழ் மிக்க பீடத்தை தீவதிலகையுடன் வலம் வந்து வணங்கினாள். பீடிகையின் எதிரே நின்றாள். அப்பது எல்லோரும் வணங்கத்தக்க மரபினை உடைய அமுதசுரபி பாத்திரம் அந்தப் பொய்கையில் இருந்து எழுந்து வந்து, மணிமேலை கைகளில் சென்று சேர்ந்தது. அமுத சுரபியைப் பெற்ற மணிமேகலை பெரிதும் மகிழ்ந்தாள்.

புத்த பகவானை வணங்கினாள்

      மகிழ்ந்த மணிமேகலை,“மாறனை வெற்றி கொள்ளும் வீரனே! தீய வழிகளான வாழ்வின் பகைகளை நீக்கியவனே! மற்றவர்களுக்குத் தரும வழி வாய்ப்பதற்கு முயலும் பெரியோனே! சுவர்க்க வாழ்வினை அடைய விரும்பாத பழையோனே! மக்களது எண்ணங்கள் பின்னடைய எட்டாத மேல்நிலை அடைந்து இருப்பவனே! உயிர்களுக்கு அறிவுக் கண்களை அளித்த மெய் உணர்வு உடையோனே! தீமை தரும் சொற்களைக் கேட்க மறுக்கும் காதுகளை உடையவனே! உண்மை மட்டுமே பேசும் நாவினை உடையவனே! நரகர் துன்பத்தைப் போக்க உடனே அங்கு சென்றவனே! உனது மலர்ப் பாதங்களை வணங்குவேன் அல்லாமல் வாழ்த்துவது என் நாவில் அடங்காத செயலாகும்” என்று கூறி புத்த பகவானைப் போற்றி வணங்கினாள் மணிமேகலை.

பசிப் பிணி மருத்துவம் 

      புத்த பகவானை மணிமேகலை வணங்கிப் போற்றியதைக் கண்ட தீவதிலகையும் போதிமரத்தின் அடியில் அமைந்துள்ள தேவனின் திருவடிகளை வணங்கினாள். பின் மணிமேகலையைப் பார்த்து,

            'குடிப்பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும்

            பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்

            நாண்அணி களையும் மாண்எழில் சிதைக்கும்

           பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்

           பசிப்பிணி என்னும் பாவி அது'

எனப் பசியின் கொடுமைகளை எடுத்துக் கூறி, 'இப்படியான பசி என்ற நோயினை நீக்க வேண்டும். அது ஒரு பாவி. அதனை விரட்டி அடிக்க வேண்டும். அப்படி நீக்கியவர்களின் புகழை அளவிட முடியாது'  எனக் கூறினாள். 

நாய்யை தின்ற விசுவாமித்திரன் 

           தீவத் திலகை மேலும் மணிமேகலையை பார்த்து,"முன்பு ஒரு நாள், புல்லும் மரங்களும் வெம்மையாலே கருகிப் புகைந்து பொங்கின. அனல் கொதித்தது. பசியினாலே உயிரினங்கள் அழியுமாறு மழை வளம் குன்றிப் போனது. அரச பதவியை விட்டு மறைகளை ஓதி துறவு மேற்கொண்ட அந்தண விசுவாமித்திர முனிவன், பசியால் எல்லா இடங்களும் சுற்றித் திரிந்தான். கொடிதான இந்தப் பசியைப் போக்க ஏதும் கிடைக்காமல் நாயின் சதையைத் தின்றான் என்றால் பசியின் கொடுமையை என்னவென்று சொல்வது? தின்பதற்கு முன் தேவபலி செய்ததாலே இந்திரன் தோன்றி மழைவளம் பெருகச் செய்தான். விளை பொருள்கள் மலிந்தன. மண் உயிர்களும் பெருகின. எனவே,கைம்மாறு செய்யும் தகுதி உள்ளவர்களுக்கு ஒரு பொருளைக் கொடுப்பவர், அறத்தை விலைக்கு விற்பவர்கள் ஆவர்.

           'மண் திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்

           உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே'

எனவே நீயும் அறநெறி வாழ்க்கையை மேற்கொண்டு, பசிப்பிணியைப் போக்கி மண்ணுயிர் வாழ வழி செய்வாயாக " என அறிவுரைகளைக் கூறினாள்.

மணிமேகலை மறுமொழிக் கூறுதல் 

     இதைக் கேட்ட மணிமேகலை,“முன்பிறப்பிலே என் கணவனான இராகுலன் திட்டிவிடம் என்ற பாம்பு தீண்ட உயிர் விட்டான். அப்போது நானும் அவனோடு சேர்ந்து தீக்குளிக்க உடல் வெந்தது. உணர்வுகள் நீங்கினேன். அப்போது வெயில் மிகுந்த உச்சிவேளையில் வந்து தோன்றிய சாது சக்கரமுனிவனுக்கு முன்னர் உணவு தந்ததுபோல கனவு மயக்கம் அடைந்தேன். என் உயிரும் பிரிந்தது. அந்தக் கனவின் காட்சியே நினைவின் பயனாய் ஆருயிர்களைக் காக்கும் மருந்தாக அமுதசுரபி எனக்குக் கிடைத்தது. மேலும், பெற்ற குழந்தையைப் பார்த்ததும் தாயின் மார்பகம் பால் சுரப்பது போல, பசியால் வாடுபவரை கண்டதும் இப்ப பாத்திரம் உணவை சுரந்தளிக்கும். அதனைக் கொண்டு பசித்தவர் பிணி களைவேன்" எனக் கூறினாள்.

வானத்தில் பறந்தாள்

         அதன் பின்னர் மணிமேகலை தீவத்திலகையின் கால்களில் விழுந்து வணங்கி, அமுத சுரபியைக் கையில் ஏந்தியவளாக புத்த பீடிகையை வலம் வந்து வணங்கி, மணிமேகலா தெய்வம் சொல்லித்தந்த மந்திரத்தைக் கூறி வானத்தில் பறந்து தனக்காக காத்திருக்கும் மாதவியின் முன்வந்து இறங்கினாள்.

பழைய பிறப்பைக் கூறினாள்

     மணிமேகலையைக் கண்டதும், மாதவி சுதமதி ஆகியோர் கவலை நீங்கினர். மணிமேகலை, அவர்களிடம் அரிய செய்தியைக் கூறினாள். “இரவிவன்மனின் பெருமை மிக்க புதல்வியே! குதிரைப் படைகளை உடைய துச்சயன் மனைவியே! அமுதபதியின் வயிற்றில் பிறந்து அப்போது எனக்குத் தமக்கையராக இருந்த தாரையும் வீரையும் ஆகிய நீங்கள் இப்பிறப்பில் எனக்குத் தாயார்களாக ஆனீர்கள்! உமது திருவடிகளை வணங்குகிறேன்” என்று கூறிய மணிமேலை, மாதவி சுதமதி இருவரையும் வணங்கினாள்.

       பின்னர், 'அமுதசுரபியின் தன்மையினை அறவண அடிகளிடம் கேட்டு தெரிந்து கொள்வோம்' என இருவரையும் அழைத்துக் கொண்டு அறவண அடிகளை காண்பதற்காக மணிமேகலைச் சென்றாள்.

முடிவுரை

        இவ்வாறு பாத்திரம் பெற்ற காதையில் மணிமேகலை அமுத சுரபியை மணிபல்லவத் தீவில் இருந்து பெற்று வந்த செய்தியை சீத்தலைச் சாத்தனார் கூறியுள்ளார்.

************ இராஜாலி ********



வியாழன், 10 ஆகஸ்ட், 2023

கம்பராமாயணம் - குகப் படலம்

 அறிமுகம்

           இராமபிரானின் வரலாற்றைக்கூறும் நூல் இராமாயணம் எனப்பட்டது. வால்மீகி முனிவர் வடமொழியில் எழுதிய இராம காதையைத் தழுவி, கம்பர் இதனைத் தமிழில் இயற்றினார். கம்பர் இயற்றிய இராமாயணம் கம்ப இராமாயணம் எனப்பட்டது. கம்பர் தாம் இயற்றிய நூலுக்கு 'இராமாவதாரம்' எனப் பெயரிட்டார். கம்பராமாயணத்தில் ஆறு காண்டங்கள் உள்ளன. அயோத்தியா காண்டம் இரண்டாம் காண்டமாகும். இவற்றில் பதின்மூன்று படலங்கள் உள்ளன. குகப்படலம் ஏழாம் படலமாகும். இப்படலத்தினைக் 'கங்கைப்படலம்' எனவும் கூறுவர். வனம் புகுந்த இராமன், குகனோடு தோழமை கொண்ட செய்தியை உணர்த்தும் பகுதியாதலின் குகப்படலம் எனப் பெயர் பெற்றது.

குகன் இராமனைக் காண வருதல்

     அலைகளையுடைய கங்கைக்கரையின் பக்கத்திலுள்ள சிருங்கி என்னும் நகரில் வாழும் வேடுவக் குலத் தலைவன் குகன். இவன் முனிவர் தவச்சாலையில் தங்கியிருந்த  வள்ளல் இராமனைக் காணத் 'தேனும் மீனும்' கொண்டு சென்றான். நெஞ்சமதில் இராமனின் மீது அளப்பரிய அன்பினைக் கொண்டு, இன்றே நின்பணி செய்திட வந்துள்ளதாக குகன் தெரிவித்தான்.

          இளையவனாகிய இலக்குவன் அவனை நெருங்கி யார் நீ? என வினவியபோது, குகன் அன்போடு வணங்கி,

"தேவா! நின்கழல் சேவிக்க வந்தனன்

நாவாய் வேட்டுவன் நாய்அடி யேன்

என "தேவா, கங்கையாற்றில் நாவாய்களை இயக்குகின்றவனும் நாயினும் அடியவனாகிய வேட்டுவன் நான், தங்களின் திருவடிகளை வணங்க வந்துள்ளேன்” என்று கூறினான்.

இராமன் குகனைப் பாராட்டுதல்

       இலக்குவன், இராமனைத் தொழுது, "வெற்றிப் பொருந்திய தலைவனே! தூய உள்ளம் உடையவன், தாயினும் சிறந்த அன்பினன், கங்கையாற்றில் செல்லும் நாவாய்களுக்குத் தலைவன், குகன் என்னும் பெயரினன், தன் உறவினருடன் தங்களைக் காண வந்துள்ளான்") என இலக்குவன் இராமனிடம் கூறினான். இராமன் குகனை, 'அழைத்து வருக' என்று இலக்குவனிடம் மொழிந்ததும், குகன் விரைந்து வந்து இராமனைத் தன் கண்களால் கண்டுகளித்தான். இருள் போன்ற நீண்ட முடியை உடைய தலை, மண்ணில் படியக் கீழே விழுந்து வணங்கினான். பின் எழுந்து வாயைக் கையால் பொத்தி உடலை வளைத்து அடக்கமாக நின்றான்.

        உள்ளத்து அன்பு முதிர்வினால் எழுந்த பரிவின் காரணமாகக் குகன் கொண்டு வந்த இப்பொருள்களை (தேன், 'மீன்) அடைத்தற்கரியன என்றும் அமுதத்தை விடச் சிறந்தன என்று இராமன் கூறினான். இவை எத்தகையனவாய் இருப்பினும் அன்பு கலந்ததெனில் தூய்மையானவையே இப்பொருட்கள் நாங்கள் விரும்பி உண்டதற்குச் சமம் என்று கூறினான்.

குகனின் வேண்டுகோளும், உணர்வு நிலையும்

      ஆண் சிங்கத்திற்கு நிகரான இராமன் குகனிடம், "நாங்கள் இத்தவச் சாலையில் தங்கியிருந்து அலைவீசும் கங்கையாற்றைக் கடந்து செல்ல எண்ணியுள்ளோம். ஆதலால் உன் நகர் சென்று மகிழ்வுடன் இனிமையாகத் தங்கியிருந்து நாளை விடியலில் நாவாயோடு (மரக்கலங்கள்) வருவாயாக" என்றுரைத்தான்.

       கருமுகில் வண்ணனாகிய இராமன் கூறியதைக் கேட்ட குகன், "இவ்வுலகு அனைத்திற்கும் செல்வம் போன்றவனே! தங்களை இத்தவக் கோலத்தில் பார்த்த என்னிரு கண்களை எடுக்க முடியாத நிலையில் உள்ளேன். இம்மனத் துயரோடு என்னிருப்பிடம் செல்லத் துணியேன், ஐயனே! தங்களுக்கு வேண்டிய தொண்டு செய்வேன்” என்றான்.

        இராமன் இன்று எம்மோடு தங்குக எனக் குகனிடம் கூறியதும், திருவடிகளை வணங்கினான். கடலையொத்த துடிப்பறையோடு கூடிய தனது சேனைப்படைகளை அழைத்து இராமன் தங்கியுள்ள தவச்சாலைக்கு விலங்குகளால் ஏதேனும் 'துன்பம் நேரிடாதவாறு பாதுகாப்பு வழங்கிடுமாறு கட்டளையிட்டான். இடியோடு கூடிய மழை மேகம்போல உரத்த சத்தமிட்டு இராமன், சீதை, இலக்குவன் மூவரையும் காவல் செய்து நின்றான். அரச குமாரனாகிய இராமன் தரையில் உறங்கும் காட்சியைக்கண்டு மலையிலிருந்து விழும் அருவிபோல கண்ணீர் சொரிந்து நின்றான்.

நாவாய் கொண்டு வருக

   வைகறை காலத்தில் செய்ய வேண்டிய கடமைகள் யாவற்றையும் விரும்பிச் செய்து, அச்சம் தரும் வில்லை ஏந்திய இராமன் அன்புள்ளம் கொண்ட குகனைப் பார்த்து, ஐயனே! இவ்விடத்திலிருந்து செல்வத்திற்குரிய தரம்வாய்ந்த மரக்கலங்களை (நாவாய்) விரைவாகக் கொண்டு வருவாயாக என்று கட்டளையிட்டான்.

குகனின் வேண்டுதல்

          "மாலையை அணிந்தவனே! எம் மக்கள் வஞ்சகம் அறியாது இக்காட்டில் வசித்து வருகின்றனர். எவ்வித குறைவுமின்றி, பகைவரை அழிக்கும் ஆற்றல் மிகுந்துள்ள நாங்கள் முறைப்படி உனக்குச் செய்ய வேண்டிய தொண்டுகளைத் தொண்டர்களாக இருந்து முறைப்படி செய்வோம். எங்களை உம்முடைய முறையான உறவினர்கள் எனக்கருதி எங்களுடைய இவ்வூரிலே நீண்டகாலம் இனிமையாக இருப்பாயாக!" என்று குகன் இராமனிடம் வேண்டினான்.

         தேவர்கள் தூய்மையானது எனக்கருதும் தேனும், திணையும் இங்கு கிடைப்பதோடு, உண்ணுதற்குரிய புலால் (ஊன்) இங்குண்டு. எங்களுடைய உயிர் உங்களுக்குத் தொண்டு செய்யவே உள்ளன. சீதா தேவியோடு விளையாடிப் பொழுதுபோக்க காடும், நீரிலே முழுகி விளையாட கங்கையாறும் இருக்கின்றன. நான் உடன் உள்ளவரையும் நீ எம்மிடத்தில் இனிதிருப்பாயாக” என இராமனிடம் குகன் வேண்டினான்.

   "நூலாடைகள் போல உள்ள மென்மையான தோல்கள், சுவையுடைய இனிமையான பல பொருள்கள், தூங்குவதற்குக் கயிற்றால் பிணித்த தொட்டிற் கட்டில் போல பரண்கள், தங்குவதற்குக் குடில்கள் மட்டுமல்லாது, விரைந்து சென்று எதையும் கொண்டுவந்து தரவல்ல எனது கால்கள், தடுப்பாரை அழிக்கவல்ல, வில்லை ஏந்திய கைகள் எம்மிடம் உள்ளன. ஆகாயத்தின் மேலே உள்ள பொருளாக இருந்தாலும் அதனையும் விரைந்து கொண்டு வருவோம்" என்றும் குகன் வேண்டினான்.

    "தேவர்களை விட வலிமை படைத்த வில்லேந்திய ஐந்து இலட்சம் வீரர்கள் நான் இட்ட கட்டளையை நிறைவேற்ற காத்துக் கொண்டிருக்கின்றனர். இராமபிரானே! நீ எம் குடிசையிடத்து ஒருநாள் தங்குவாயானால் இதனைக்காட்டிலும் மேலானதொரு வாழ்க்கை இல்லை" என்று குகன் இறுதியாக வேண்டினான்.

மீண்டும் வரும்போது வருகிறேன்

   குகனின், வேண்டுதலைக் கேட்ட இராமன், கருணை மிகுந்தவனாய், வெளிப்படையாக புன்முறுவல் செய்து,

"புண்ணிய நதியாடிப் புனிதரை வழிபாடுற்று

எண்ணிய சிலநாளில் குறுகுதும் இனிதென்றான்"

குகனே! நாங்கள் புண்ணிய நதிகளில் நீராடி, அங்குள்ள முனிவர்களை வழிபாடு செய்துவிட்டு, வனவாசத்துக்குக் குறித்த சில நாள்களில், உன்னிடத்துக்கு இனிமையாக வந்து சேர்வோம்” என்று கூறினான்.

      இராமனின் மனக்குறிப்பை அறிந்த குகன் மிக விரைவாகச் சென்றான். பெரியதோர் படகினைக் கொண்டு வந்தான். தாமரை மலர் போன்ற கண்களை உடைய இராமன் அந்தணர்களிடம் விடைபெற்று, பிறைநிலவு போன்ற நெற்றியை உடைய சீதையுடனும் தம்பி இலக்குவனுடனும் படகில் இனிதாக ஏறினான்.

நிறைவுரை

      விரைந்து படகினைச் செலுத்துமாறு குகனுக்கு இராமன் கட்டளையிட்டான். உயிரின் ஏவலுக்கு மெய் செயல்படுவதுபோலக் குகனும் படகினை விரைவாகச் செலுத்தினான். மடங்கி வீழும் அலைகளை உடைய கங்கையாற்றில் இளம் அன்னம் விரைந்து செல்வதினைப் போன்று படகு சென்றது. அவர்களின் பிரிவால் அனலில் பட்ட மெழுகைப்போல துன்பமுற்று அந்தணர்கள் மனமுருகி நின்றனர்.

********* இராஜாலி **********

சிலப்பதிகாரம் - வழக்குரை காதை


முன்னுரை

        தமிழின் முதற்காப்பியம் சிலப்பதிகாரம். இந்நூலை இயற்றியவர் இளங்கோஅடிகள் ஆவார். இந்நூல், புகார் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என மூன்று காண்டங்களையும், மங்கல வாழ்த்துக் காதை முதலாக, வரந்தரு காதை ஈரக 30 காதைகளைக் கொண்டது. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்ராவதும், உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர், ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் எனும் மூன்று உண்மைகளை மையமாகக் கொண்டது. இதில் மதுரைக் காண்டத்தில் வழக்கரை காதையில் இடம் பெறும் நீதி கேட்க வந்த, கண்ணகியின் கேள்வியும் மன்னனின் நிலைமையும் பற்றிக் காண்போம்.

வழக்குரை காதை 

     கண்ணகி தன் கணவன் கள்வன் அல்ல என்பதை மன்னனுக்கும், உலகுக்கும் உணர்த்த எண்ணி மன்னனிடம் சென்று முறையிட்டதைக் வழக்குரை காதை கூறுகிறது.

கண்ணகியின் வருகை

         கோவலன் கொலை செய்யப் பட்டுவிட்டான் என்பதை அறிந்த காண்ணகி, இணை அரி சிலம்பு ஒன்றை கையில் ஏந்தியவாறு பாண்டிய மன்னனின் அரண்மனை வாயிலை அடைந்தாள்.

கண்ணகி வாயிற் காவலனிடம் கூறியது

           கண்ணகி அக்காவலனை நோக்கி "வாயில் காவலனே! வாயின் காவலனே!அறிவு அற்றுப் போன, புலனடக்கம் இல்லாத, அரச நீதியை தவறிய மன்னனின் வாயில் காவலனே! பரல்களை உடைய இணைச் சிலம்புகளுள் ஒரு சிலம்பை கையில் ஏந்தியவாறு, கணவனை இழந்த பெண் ஒருத்தி அரண்மனை வாசலின் முன் வந்துள்ளாள் என்பதை மன்னரிடம் சென்று கூறுவாயாக"எனக் கூறினாள்.

காவலன் மன்னனிடம் சென்று  கூறுதல்

   வாயிற்காலன் கண்ணகியின் தோற்றம் கண்டு பயந்து,மன்னனிடம் சென்று மன்னனை வாழ்த்தி எம் கொற்கை நாட்டு மன்னனே வாழ்க! தெற்கிலுள்ள பொதிகை மலைக்குத் தலைவனே வாழ்க! செழியனே வாழ்க! தென்னனே வாழ்க ! பழி தரும் வழில் நடவாத பஞ்சவனே வாழ்க! என மன்னனைப் புகழ்ந்து வாழ்த்தினான். " பின்னர்  கண்ணகியின் தோற்றம் பற்றி  மன்னனிடம் பின் வருமாறு கூறினான்.

"இரத்தம் பீறிட்டு எழும் மகிடா சுரனுடைய பிடர்த்தலை பீடத்தின் மேல் நின்ற கொற்றவை என்றால் அவளும் அல்ல. சப்த மாதர் ஏழு பேருள் இளையவளான பிடாரியோ என்றால் அவளும் அல்ல. இறைவனை நடனம் ஆடச்செய்த  பத்திரகாளியோ என்றால்  அவளும் அல்ல.. பாலை நிலக் கடவுளாகிய கொற்றவையோ என்றால் அவளும் அல்ல. தாருகன் என்ற அசுரனின் மார்பைப் பிளந்த துர்க்கையோ என்றால் அவளும் அல்ல.. உள்ளத்தில் மிகுந்த கோபம் உடையவளாக காணப்படுகிறாள். கணவனை இழந்த நிலையில் கையில் சிலம்பு ஒன்று ஏந்தி அரண்மனை வாசலில் வந்து நிற்கிறாள்" என கண்ணகியின் நிலையினைக் கூறினான்.

பாண்டிய மன்னனின் கேள்வியும் கண்ணகியின் பதிலும்

      வாயிற்காவலன் கூறியதைக் கேட்ட மன்னன், அவளை அழைத்து வரும்படி கூறினார். வாயில் காவலன், கண்ணகியிடம் சென்று மன்னன் அழைக்கும் செய்தி கூறி அவளை உள்ளே அழைத்து வந்தான். கண்களில் நீர் வழிய நின்ற கண்ணகியை பார்த்த மன்னன்,

"நீர்வார்க் கண்ணை எம்முன் வந்தோய்

யாரையோ நீ மடக்கொடி யோய்"

என கண்ணகியைப் பார்த்து கேட்டார்.     

அதற்குக் கண்ணகி,"ஆராயாமல் செயல்படும் மன்னனே நீ கேட்பாயாக! வானில் உள்ள தேவர்களும் மகிழும்படி, ஒரு புறாவுக்காக தன் தசையை அரிந்து கொடுத்த சிபிச் சக்கரவர்த்தியும், பசுவின் துன்பத்தைப் போக்க தன் ஒரே மகனை தேர்க்காலில் கொன்ற மனுநீதிச் சோழனும் வாழ்ந்த புகழுடைய புகார் நகரமே என்னுடைய ஊராகும். அப்படிப்பட்ட புகழுடைய ஊரில் மிகுந்த சிறப்புடன் விளங்கும், பெருங்குடியில் மாசாத்துவான் என்ற வணிகன் மகனாகப் பிறந்து, வாழ்வதற்கு வேண்டி, முற்பிறவியின் வினை துரத்த, என் கால் சிலம்பை விற்க உன் மதுரை மாநகருக்குள் வந்து உன்னால் கொலை செய்யப்பட்ட கோவலனின் மனைவி நான், என்னுடைய பெயர் கண்ணகி என்பதாகும். எனக் கூறினாள்.

பாண்டிய மன்னனின் மறுமொழி

        தெய்வப் பெண் போல் காட்சி அளிப்பவரே "கள்வனைக் கோறல் கொடுங்கோலன்று இதுவே அரசு நீதியாகும்” என மன்னன் கண்ணகியைப் பார்த்து கூறினார்.

கண்ணகிக்கு கிடைத்தது வெற்றி

            மன்னனின்  மொழி கேட்ட கண்ணகி ஆத்திரம் கொண்டு மன்னனைப் பார்த்து, "நல்ல நெறியில் செல்லாத கொற்கை மன்னனே! என் கால் சிலம்பு மாணிக்கப் பரல்கள் உடையது”, என்றாள், இது கெட்ட மன்னவன். "நீ நல்லதை கூறினாய் என் தேவியின் காலில் உள்ள சிலம்பு முத்துப் பரல்களை உடையது”. என்று கூறினான், மேலும் கோவலனிடமிருந்து கைப்பற்றப்பட்ட சிலம்பினை கண்ணகி முன் கொண்டு வந்து வைக்க ஆணையிட்டான். உடனே கண்ணகி விரைந்து அந்த சிலம்பினை கையில் எடுத்து உடைத்தாள். உடைத்து அதிலிருந்து மாணிக்கப் பரல்கள் சிதறி கீழே விழுந்தது, ஒரு பரல் மன்னனின் நெற்றியில் பட்டு தெரித்தது.

பாண்டிய மன்னனின் நிலை

              மாணிக்கப் பரல்களைக் கண்ட மன்னன், பதறினான். தான் நீதி தவறியதை உணர்ந்து, “பொற்கொல்லன் சொற்கேட்ட, யானோ அரசன்! யானே கள்வன்" எனக் கூறியதோடு அரியணையில் இருந்து விழுந்து உயிரை விட்டான்.

கோப்பெருந்தேவியின் நிலை

   மன்னன் இறந்ததைக் கண்ட கோப்பெருந்தேவி நிலைகுலைந்தாள் "கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்" எனக்கூறி மன்னன் மீது விழுந்து தன் உயிரை துறந்தாள்.

முடிவுரை

     கோவலன் கண்ணகியின் வாழ்க்கை வரலாறு மூலம் "ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும், என்பதும், அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும், உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்” என்ற நீதி கருத்துக்கள் புறப்படுவதாக காணப்படுகிறது.


********* இராஜாலி ********

வியாழன், 13 அக்டோபர், 2022

சீறாப்புராணம் - நுபுவத்துக் காண்டம்

புத்து பேசிய படலம்

முன்னுரை

          இஸ்லாமிய இலக்கியங்களில் சிறந்த இலக்கியமாக கருதப்படுவது சீறாப்புராணம் ஆகும். கிபி பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் என்பவரால்  எழுதப்பட்ட இக்காப்பியம் இறைதூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றைக் கூறுவதாக அமைந்துள்ளது.

சீறாப்புராணம், விலாதத்து காண்டம், நுபுவ்வத்து காண்டம், ஹிஜ்ரத்து காண்டம் என மூன்று காண்டங்களையும் 92 படலங்களையும் 5027 பாடல்களையும் கொண்டதாகும்.

புத்து பேசிய படலம்

 சீறாப்புராணத்தில் காணப்படும் இரண்டாவது காண்டமான, நுபுவ்வத்து காண்டத்தில் உள்ள  புத்து பேசிய படலம்; முகமது நபி அவர்கள்,குசைன் என்ற அறபிக்கு  புறுக்கான் என்னும் வேத நெறியின் சிறப்பை உணர வைத்து, 65 ஆண்டுகளாக பேசாமல் இருந்த புத்தை  பேச வைத்து அற்புதம் நிகழ்த்திய செய்தியினை கூறுவதாக அமைந்துள்ளது.

மக்காவில் முகமது நபிகள் வீற்றிருத்தல்

நிலம்மாகிய அரசனின்  தலையில் சூடப்பட்டிருக்கும் கிரீடத்தைப் போன்ற சிறப்பு வாய்ந்த மக்கா நகரத்தில், எட்டு திசைகளிலும் கலிமா ஒலிக்கும் அந்நகரத்தில் வில்லை கையில் ஏந்திய பல மன்னர்கள் சூழ்ந்திருக்க அவர்களில் நடு நாயகமாக முகமது நபி அவர்கள் வீற்றிருந்தார்கள். அப்போது, மலை போன்ற உறுதியான தோள்களை உடைய குசைன் என்னும் அறபி  மகிழ்வோடு முகமது நபிகளை காண வந்தான்.

குசைனை கண்ட முகமது நபி அவர்கள் அன்பு உள்ளத்தோடு அவனைப் பார்த்து புன்னகைத்து தனது கைகளை அசைத்து அவனை அருகில் வரவழைத்து தன் அருகில் அமர வைத்தார். மூன்று வேதங்களையும் கற்றுணர்ந்த முகமது நபி அவர்கள் குசைனிடம் "அனுதினமும் நற்கதி தரும் புறுக்கான் என்னும் வேத மார்க்கத்தை பின்பற்றி நடவாமல் இருப்பதற்கு காரணம் என்ன? " எனக் கேட்டார்.

குசைனின் மறுமொழி

முகமது நபி அவர்கள் கேட்டதற்கு மறுமொழியாக" தீன் மார்க்கத்தின் சிறப்பை உணர்ந்த  ஹபீபு என்னும் அரசனின் அவயங்கள் அற்ற மாமிசத்தடியை அழகிய பெண் உருவமாக ஆக்கிய முகமது நபி அவர்களே! உங்களிடம் மான் வந்து பேசியதையும், உடும்பு வந்து பேசியதையும், அம்மாவாசை நாளில் முழு நிலவு வந்து பேசியதையும் நான் அறிவேன். உங்களது வழியைப் பின்பற்றுபவர்கள் கூறும் கருத்துக்களையும் நான் அறிவேன். ஆயினும் உங்கள் கலிமாவைக் கூறுவதற்கு எனது மனம் இசையவில்லை " எனக் குசைன் கூறினான்.

அதற்கு முகமது நபி அவர்கள் குசைனைப் பார்த்து "நீ கலிமாவை கூறாமல் இருப்பதற்கு இது காரணம் அல்ல. உனது வீட்டில் வைத்து நீ வழிபடும் சொரூபமான புத்துதான் காரணம். இதுவரைக்கும் பேசாமல் இருக்கும் அப்புத்து தனது வாயை திறந்து வார்த்தைக்கு வார்த்தை உறுதியாக பேசுமானால் நீ கலிமாவை ஓதுவாயா? " எனக் கேட்டார்.

நபிகள் நாயகத்தின் வார்த்தையை கேட்ட குசைன் மெல்ல புன்னகைத்து "என்னிடம் 65 ஆண்டுகளாக இருக்கும் அப்புத்து இதுவரைக்கும் தனது வாயை திறந்து பேசியதே இல்லை. உம்முடைய ஒரு வார்த்தையால் அது பேசும் என்பதை என்னால் உறுதியாக ஏற்றுக்கொள்ள  முடியாது " என மறுத்துக் கூறினான்.

மேலும் குசைன் முகமது நபியை பார்த்து " பொன் ஆபரணங்களாலும் அழகிய வஸ்திரங்களாலும் பரிமள தைலத்தாலும் வாசனை வீசும் மலர்களால் பூசை செய்யும் என்னிடம் பேசாத தெய்வத்தன்மை பொருந்திய அப்புற்று  உம்முடைய வார்த்தையால் பேசும் என்றால் நீங்கள் கூறுகின்ற புறுக்கானுல் அலீம்  என்னும் வேத மார்க்கத்தை ஏற்றுக் கொண்டு, பூமியை தொடாத தாமரைப் போன்ற உன் திருவடிகளை தொழுது தீன் என்னும்  இஸ்லாம் மார்க்கம் நிலைத்து நிற்கும்படி செய்வேன் " என உறுதியாகக் கூறினான்.

குசைன் புத்தை முகமது நபியிடம் கொண்டு வருதல்

எட்டு திசைகளையும் ஆட்சி செய்யும் இறைவனின் ஆசியோடு முகமது நபி அவர்கள் குசைன் கூறிய வார்த்தையை கேட்டு மகிழ்ந்து " அப்புற்றை இவ்விடத்தில் கொண்டு வரும்படி கூறினார். உடனே குசைன், நபிகளை வணங்கி வீட்டிற்குச் சென்று அப்புத்துக்கானுக்கு  ரத்தின ஆபரணங்களையும், அழகிய வஸ்திரங்களையும் தரித்து அலங்காரம் செய்தான். மேலும் மலர்களை சூட்டி, நறும்புகைகளை காட்டி அப்புத்தை தனது கைகளில் சுமந்தவாறு மூன்று வேதங்களையும் அறிந்த முகமது நபிக்கு முன் கொண்டு வைத்தான்.

புத்து பேசியது

          மேன்மை தாங்கிய சிறப்புமிக்க நபிகள் நாயகம் தனது அமுத மலர் போன்ற வாயினை திறந்து புத்தத்தை பார்த்து "குசைனின் மன இருள் நீங்கும் படி, விண்ணும் மண்ணும் உணரும்படி மெய் வேதத்தின் சிறப்புகளையும், தீன்  மார்க்கத்தின் பெருமையினையும் கூறுவாயாக" என ஓதினார்.

இதனைக் கேட்ட புத்து, வெண்ணிலவு போன்று ஒளி வீசும் முகமது நபியின் திருமுகத்தை பார்த்து, "பெரியவரான அல்லாவின் அருளால் தெய்வீகத் தன்மையுடன் வந்த அரசனே! இரக்கத்தைக் கூறும் அரு மறையான தீன்  மார்க்கத்தின்  முகமது நபியே! தேவர்கள் அனைவரும் மலர் கொண்டு பூஜிக்கும் பொன் போன்ற திருவடிகளை பெற்று பூமிக்கு வந்த தலைவரே! நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு சூரியனைப் போன்று  பிரகாசமாக ஒளிவிடும்  ராஜாவே! உங்களது தெய்வீக புறுக்கானுல் வேத நெறியினை மனதில் ஏற்றுக் கொள்ளாதவர்கள் பொல்லாத நரகத்தில் சேர்வார்கள். உங்களது பாதங்களைப் பணிந்து  கலிமாவை ஓதுபவர்கள் சொர்க்கத்தில் நிலைத்திருப்பார்கள் " என எல்லோரும் அறியும்படி கூறியது. இந்த வார்த்தையினை கேட்டு உள்ளம் மகிழ்ந்த குசைன் முகமது நபியை போற்றி வணங்கினான்.

முடிவுரை

சீறாப்புராணத்தில், முகமது நபி அவர்கள்,குசைன் என்ற அறபிக்கு  புறுக்கான் என்னும் வேத நெறியின் சிறப்பை உணர வைத்து, 65 ஆண்டுகளாக பேசாமல் இருந்த புத்தை  பேச வைத்து அற்புதம் நிகழ்த்திய செய்தியினை கூறுவதாக, உமறுப்புலவர் பாடியுள்ளார்.

********* இராஜாலி *********

 

தேம்பாவணி - வேதக் கெழுமைப் படலம

நபூக்கன் நலிவு

முன்னுரை

          கிறிஸ்தவ பேரிலக்கியங்களில் மிகவும் போற்றுதலுக்கு உரியது  தேம்பாவணி ஆகும். இந்நூல் 1726 ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் வீரமாமுனிவரால் அரங்கேற்றப்பட்டது. தேன் + பா + அணி எனப் பிரித்துத் “தேன் போன்ற இனிய பாடல்களின் மாலை” எனக் கூறுவர். இயேசு நாதரின் வளர்ப்பு தந்தையான ‘புனித சூசையப்பரின்’ சிறப்புகளை கூறுவதாக இந்நூல் அமைந்துள்ளது.

தேம்பாவணி மூன்று காண்டங்களைக் கொண்டது. ஒவ்வொரு காண்டங்களுக்கும் 12 படலங்கள் வீதம் 36 படலங்களைக் கொண்டுள்ளது. இதில் 3615 பாடல்கள் காணப்படுகின்றன.

வேதக் கெழுமைப் படலம்

தேம்பாவணியில் மூன்றாவது காண்டத்தில் 29-வது படலமாக விளங்குவது வேதக் கெழுமைப் படலம் ஆகும். இதில் சபை மூத்தோர்,  வேதத்தின் சிறப்புகளையும், நபூக்கன் மற்றும்  எல்லியோதூரனின் செயல்களை இளைஞர்களுக்கு எடுத்துக் கூறுவதாக வீரமாமுனிவர் பாடியுள்ளார்.

அசீரியா நாட்டின் சிறப்பும் - நாபூக்கனின் ஆணவமும்

மேகங்கள் தவழும் மலையினின்று இறங்கிய தெளிந்த நீர் எங்கும் கிடைக்கும் அசீரிய நாட்டில், பிற்காலத்தில், நஞ்சு தவழும் சினத்தால் காய்ந்து கொண்டிருந்த நபூக்கன் என்னும் அரசன் ஆண்டான். அவன் தன் நெஞ்சில் தவழ்ந்த அகந்தையினால் தன் செங்கோல் கொடுங்கோலாய் வளையுமாறு, பரந்து கிடந்த தன் நாட்டில் எங்குமுள்ள யூதர்கள் ஆண்டவனைத் தொழும் செயலை கண்டு மிகவும் கோபப்பட்டு, அவர்கள் இறைவனை வணங்குவதை தடுத்தான்.

          அவன்; அகந்தையினாலும், ஆணவத்தாலும் தன்னைப் போன்ற ஓர் உருவத்தைப் பொன்னால் செய்து. உயர்ந்த சிறப்போடு அணிகலன்களால் அழகு செய்தான்; அந்நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் அவ்வுருவத்தையே வணங்க வேண்டும் என கட்டளையிட்டான்.

     அங்கு இருந்த மூன்று யூதர்கள் "சிறப்புப் பொருந்திய எம் ஆண்டவனை அல்லாமல், அழகு பொருந்திய உருவமாய்ச் செய்த யாரையும் யாம் வணங்கமாட்டோம்" என்றனர். அதனைக் கேட்டு, கருமேகத்தில் தங்கும் இடி போலச் சினந்த நபூக்கன், "இந்த யூதர்களை நெருப்புச் சூளையில் தள்ளுங்கள்!" எனக் கட்டளையிட்டான்.

யூதர்களை அக்கினி சூளையில் தள்ளுதல்

அரசனின் கட்டளைக்கு கீழ்படிந்த சேவகர்கள், யூதர்கள் மூவரையும் அழைத்துக் கொண்டு அக்கினி சூளைக்குள் தள்ளினார்கள். அப்பொழுது நெருப்பானது சேவர்களை அழித்தது. நெருப்புக்குள் தள்ளப்பட்ட மூன்று பேரும் மகிழ்ச்சியோடு காணப்பட்டார்கள். அவர்களை நெருப்பு ஒன்றும் செய்யவில்லை. அவர்களின் கைகளில்  கட்டப்பட்டிருந்த கயிறு மட்டும் எரிந்தது. அவர்கள் பசுமையான பூஞ்சோலையில் அமர்ந்திருப்பது போல அச்சு சூளைக்குள் அமர்ந்திருந்தார்கள். இதனைப் பார்த்து மற்ற சேவகர்கள் மன்னனிடம் விரைந்து சென்று தாம் கண்ட செய்தியினை கூறினார்கள்.

அந்நிலைமையைக் கேட்டறிந்த மன்னன் வியந்து அருகில் வந்து உள்ளே பார்த்தான்; வெப்பமான சூளையில் நாலுபேர் மகிழ்ந்திருக்கக் கண்டான்; இந்நிலைமையால் மேலும் வியப்பு மிக "இப்பொழுதே இங்கு வாருங்கள்!" என்றான். மூவர் மட்டுமே குளிர்ந்த முகத்தோடு அவன் பக்கம் வந்து நின்றனர். அவர்களைப் பார்த்து நபூக்கன், "நாலு பேரை அங்குக் கண்டேனே; மற்றும் அந்தப் புதியவன் எங்கே?" என்றான். அவர்கள், "எவரினும் மேம்பட்ட வல்லமையுள்ள எம் ஆண்டவன் அனுப்பி வைத்த வானவன்தான் அவன்" என்றனர். அதனைக் கேட்ட பிறகும் நபூக்கன் ஆணவம் குறையாதவனாக, தானே கடவுள் என்ற ஆணவம் மிக்கவனாக காணப்பட்டான். இதன் காரணமாக இறைவன் அவன் மீது கடும் கோபம் கொண்டார்.

நபூக்கன் விலங்காக மாறுதல்

நபூக்கன், தானே தெய்வமென்று கருதிய தன்மையால்,  ஆண்டவன் தன் பெருஞ்சினத்தால்,  அவனது உயிர் நீங்காமல், விலங்கு உருவம் கொள்ளச் செய்தான். அதனால், நபூக்கன் நாட்டினின்று தள்ளப்பட்டு, தன் வீணான திறமையில் குறைந்து, காட்டில் குனிந்து புல் மேய்த்து நின்றான். நபூக்கன் ஏழு வருட காலமாய் இவ்வாறு இழிவு பட்டான்; பின்னர் தன் தவறை உணர்ந்து இறைவனிடம் பாவ மன்னிப்பு கேட்டு மீண்டும் மனித உரு பெற்று மனிதர்களுக்கு முன்மாதிரியாக விளங்கினான்.

எல்லியோதுரன் இன்னல்

அவ்யூதர் வணங்கும் கோவிலில் அரிய செல்வம் மிகுதியாக உண்டு என்று அந்நாட்டு அரசன் கேள்விப்பட்டு, எல்லியோதுரன் என்பவனை ஏவினான். எல்லியோதுரன் அந்நாட்டு மக்கள் அஞ்சி வருந்துமாறு, கொல்லும் வேங்கைக் கூட்டம் போன்று எண்ணில்லாத வீரர் புடைசூழ விரைந்து கோவிலுக்குள் புகுந்தான்.

எல்லியோதுரன் கோவிலுக்குள் புகுந்த அளவில், வானத்தில் பொற்கவசம் அணிந்த ஒருவன் ஏறி வந்த குதிரை, எல்லியோதுரனது பரந்த மார்பில் உதைத்து அவனை வீழ்த்தியது. அது கண்டு கூட்டமாய் வந்த வீரர் யாவரும் ஓடிப்போயினர். அப்பொழுது இரண்டு வானவர் அவனை அணுகி, குதிரையை அடிக்கும் மத்திகை  என்னும் சவுக்கால் அவனை பலமாக அடித்தார்கள்.

ஆபத்தில் இருக்கும் எல்லியோதூரனை கண்ட அச்சபை மூப்பர் அவனைக் காப்பாற்றும் பொருட்டு இறைவனிடம் மனம் வருந்தி வேண்டினார். அப்பொழுது இரண்டு இறைத்தூதர்கள் வந்து எல்லியோதூரனை தேற்றி, " இங்கு நடந்தவற்றைத் திசையெல்லாம் அறியச் செய்வாய்" என்றனர். அவனும், தன் உயிருக்கு வந்த ஆபத்தினின்று தப்பி, தன் வாழ்நாள் உள்ள அளவும் இறைவனைப் போற்றினான்.

முடிவுரை

இவ்வாறு சபை மூத்தோர், நபூக்கன் மற்றும்  எல்லியோதூரனின் செயல்களை இளைஞர்களுக்கு எடுத்துக் கூறுவதாக வேதக் கெழுமைப் படலம் அமைந்துள்ளது.

********** இராஜாலி *******

 

    

 

 

ஞாயிறு, 2 அக்டோபர், 2022

பெரிய புராணம் - கலிய நாயனார் புராணம்

 முன்னுரை

          சைவத் திருமுறைகளில் பன்னிரண்டாவது திருமுறையாக விளங்குவது சேக்கிழார் பாடிய  பெரிய புராணமாகும். "திருத்தொண்டர் மாக்கதை" என்று வழங்கப்படும் பெரிய புராணம், சுந்தரர் பாடிய "திருத்தொண்டத் தொகை" என்னும் நூலின் வழி நூலாகக் கருதப்படுகிறது. பெரியபுராணம் 2 காண்டங்களையும், 13 சருக்கங்களையும், 4286 பாடல்களையும் கொண்டதாகும். இந்நூல், அறுபத்திமூன்று நாயன்மார்களின் வரலாற்றையும், 9 தொகையடியார்களின் வரலாற்றையும் தொகுத்துக் கூறும்  நூலாகக் காணப்படுகிறது.

 கலிய நாயனார் புராணம்

          பெரியபுராணத்தில் இரண்டாவது காண்டத்தில் காணப்படும் 'பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம்' என்னும் சருக்கத்தில் 52 வது புராணமாக காணப்படுவது கலிய நாயனார் புராணம் ஆகும். இப்புராணத்தில் 'தனது உதிரத்தைக் கொண்டு திருக்கோயில் விளக்கெரிக்க முற்பட்ட மெய்யடியாரான கலிய நாயனாரின் ' வரலாறு கூறப்பட்டுள்ளது.

திருவொற்றியூரின் சிறப்புகள்

          இவ்வுலகத்தில் புகழ்மிக்க தொண்டை நாட்டில், அழகிய சோலைகளால் சூழப்பட்ட, தேரோடும் அழகிய வீதியை கொண்ட திருவெற்றியூரில் கங்கையை தலையில் சூடிய, சடை முடியை உடைய  கூத்தப் பெருமான் எழுந்தருளியுள்ளான். அங்கு சமணர்களும் பௌத்தர்களும் கூறுவதைப் போன்று வான வளியே இல்லை என்று சொல்லும் அளவிற்கு வானுயர்ந்த மாளிகைகள் காணப்பட்டன.  கொடிகள் காற்றில் அசையும் போது கமுக மரச்சோலை போல் காணப்பட்டது. அத்தகைய நகரத்தை அடுத்து பரந்து விரிந்த கடல் காணப்பட்டது.

          எப்பொழுதும், இசைப் பாடல்கள் ஒலிக்கும் மண்டபங்களும், மக்கள் நிறைந்திருக்கும் வீதிகளும் அவற்றிலிருந்து எழும் ஒலியும், முறையாக நிகழும் திருவிழாக்களில் தோன்றும் ஒலியும் கலந்து காணப்பட்டது. அங்குள்ள திருமடங்களில், செந்நெல் அரிசியால் சமைக்கப்பட்ட உணவு நிரம்பி வழிந்தன.

          அங்குள்ள சோலைகளில்  மாதவி மலரும், புன்னை மலரும், குங்கும மரங்களின் மலரும், செண்பக மலர்களும், செருந்தி மலர்களும், தாழை மலர்களும் மலர்ந்து மணம் வீசின. நிலவைப் போன்று வெண்மை ஒளிவீசும் மணல் பரப்பும் காணப்பட்டது.

          மேகங்களின் முழக்கமும், கடல் அலையின் ஓசையும், இசை பழகும் இசைக்கருவிகளின் ஓசையும் இவை என பிரித்துக் கூற முடியாத அளவிற்கு அந்நகரில்  ஒலித்துக்கொண்டே இருந்தன. அந்த நகரத்தில் எண்ணெய் ஆட்டும் செக்குத் தொழிலை செய்யும் மக்கள் வாழ்கின்ற 'சக்கர பாடித் தெரு' என்னும் சிறந்த தெரு காணப்பட்டது.

 கலிய நாயனாரின் பிறப்பு

          சக்கர பாடித் தெருவில், எண்ணெய்  ஆட்டும் செக்கு தொழில் செய்யும் மரபில்  கலியநாயனார்  தோன்றினார். சைவ சமயம் சிறப்படைய, முக்கண்ணை உடைய சிவபெருமானுக்கு திருத் தொண்டு செய்வதில் சிறந்து விளங்கினார்.

 கலிய நாயனாரின் திருத்தொண்டு

          கலிய நாயனார்,  பலகோடி செல்வத்திற்கு தலைவனாக விளங்கியதால் திருவெற்றியூரில் வீற்றிருக்கும், காளை  வாகனத்தை உடைய சிவபெருமானின் ஆலயத்தில் உள்ளேயும் வெளியேயும் இரவும் பகலும் விளக்கேற்றி திருத்தொண்டு செய்தார்.

          பல ஆண்டு காலமாக எண்ணற்ற திருவிளக்குகளுக்கு நெய் ஊற்றப்பட்டு, ஏற்றப்பட்டு வழிபட்டு வந்த, கலிய நாயனாரின் இத்திரு தொண்டின் சிறப்பினை உலகறிய செய்ய விரும்பினார் இறைவன்.

 கலிய நாயனாரின் செல்வம் தேய்ந்து போதல்

          கலிய நாயனாரின் திரு தொண்டை உலகறிய செய்ய விரும்பிய இறைவனின் செயலால், கலியநாயனாரின் செல்வம் அனைத்தும் தேய்ந்து கரைந்தது. என்றாலும், தன் கொள்கையில் மாறுபடாதவராக காணப்பட்டார். செல்வம் உள்ளவர்களிடம் சென்று எண்ணெய் ஆட்டும் தொழிலை செய்து அவர் கொடுக்கும் கூலியைக் கொண்டு எண்ணெய் வாங்கி விளக்கேற்றி திருத்தொண்டு செய்தார்.

அத் தொழில் செய்வோர் பலர் இருப்பதால், அதனால் கிடைக்கும் கூலியும் தடைபட்டது. அதனால் மனம் வருந்தியவர் தனது உடமைகளை விற்று  கோயில் விளக்கேற்றினார். செல்வமும் கரைந்து போக, தனது வீட்டையும் விற்று அச் செல்வத்தைக் கொண்டு  திரு விளக்கேற்றினார்.

 மனைவியை விற்பதற்கு முயலுதல்

          வீட்டை விட்டு விளக்கேற்றிய கலியநாயனாருக்கு அச்செல்வமும் கரைந்து போனதால் மனம் வருந்தி தனது மனைவியை விற்று பொருள் சேர்த்து திருவிளக்கு ஏற்ற எண்ணினார். அந்நகரில் கலியநாயனாரின் மனைவியை பொருள் கொடுத்து வாங்குவார் இல்லாததால் மனம் வருந்தினார்.

கலியநாயனார் எண்ணைக்கு பதிலாக தன் உதிரத்தை கொடுக்க முயலுதல்

 கலியநாயனார்,

 'மணி வண்ணச் சுடர் விளக்கு மாளில்  யான் மாள்வன்' 

என படம் பக்கநாதரின் கோயிலில் விளக்கேற்றும் திருப்பணிக்கு தடை  வந்தால் தான் மாண்டு போவதாக உறுதியாகக் கூறினார்.

          கோயிலுக்குச் சென்ற கலியநாயனார், விளக்குகளை எல்லாம் முறையாக அடுக்கி வைத்தார், அவற்றிற்கு திரியினையிட்டார். அதற்கு எண்ணையாக  இரத்தத்தை கொடுப்பதற்காக தனது கழுத்தினை அரிவதற்கு முற்பட்டபோது, சிவபெருமான் நேரில் அங்கு தோன்றி அவர் கையைப் பிடித்து தடுத்தார். என்பதை,

"ஒருவிய எண்ணைக்கு ஈடா உடல் உதிரம் 

                                                   கொடு நிறைக்கக்

கருவியினால் மிடறு அரிய அக்கையைக் கண் நுதலார்

பெருகு திருக் கருணையுடன்  நேர் வந்து பிடித் தருளி "

எனப் பெரிய புராணம் கூறுகிறது.

மேலும், சிவபெருமானின் அருளால், கலியநாயனார் பொன் போல் ஒளி வீசும் சிவபுரியாகிய சிவலோகத்தில் விளக்கேற்றும் அருளினைப் பெற்றார்.

 முடிவுரை

          இவ்வாறு, சேக்கிழார் பெரிய புராணத்தில் 'தனது உதிரத்தை கொடுத்து இறைவனுக்கு விளக்கேற்ற துணிந்த' கலிய நாயனாரின் வரலாற்றைக் கூறி உள்ளார்.

********** இராஜாலி *******

யுனிக்கோட் - பயன்பாடு

அறிமுகம்    ஆங்கில மொழியைத் தவிர பிறமொழிகளிலும் பலரும் பல்வேறு குறியேற்றங்களையும் எழுத்துருக்களையும் பயன்படுத்தி வந்தனர். இந்த முறையில் ஒரே ...