அறிமுகம்
இராமபிரானின் வரலாற்றைக்கூறும் நூல் இராமாயணம் எனப்பட்டது. வால்மீகி முனிவர் வடமொழியில் எழுதிய இராம காதையைத் தழுவி, கம்பர் இதனைத் தமிழில் இயற்றினார். கம்பர் இயற்றிய இராமாயணம் கம்ப இராமாயணம் எனப்பட்டது. கம்பர் தாம் இயற்றிய நூலுக்கு 'இராமாவதாரம்' எனப் பெயரிட்டார். கம்பராமாயணத்தில் ஆறு காண்டங்கள் உள்ளன. அயோத்தியா காண்டம் இரண்டாம் காண்டமாகும். இவற்றில் பதின்மூன்று படலங்கள் உள்ளன. குகப்படலம் ஏழாம் படலமாகும். இப்படலத்தினைக் 'கங்கைப்படலம்' எனவும் கூறுவர். வனம் புகுந்த இராமன், குகனோடு தோழமை கொண்ட செய்தியை உணர்த்தும் பகுதியாதலின் குகப்படலம் எனப் பெயர் பெற்றது.
குகன் இராமனைக் காண வருதல்
அலைகளையுடைய கங்கைக்கரையின் பக்கத்திலுள்ள சிருங்கி என்னும் நகரில் வாழும் வேடுவக் குலத் தலைவன் குகன். இவன் முனிவர் தவச்சாலையில் தங்கியிருந்த வள்ளல் இராமனைக் காணத் 'தேனும் மீனும்' கொண்டு சென்றான். நெஞ்சமதில் இராமனின் மீது அளப்பரிய அன்பினைக் கொண்டு, இன்றே நின்பணி செய்திட வந்துள்ளதாக குகன் தெரிவித்தான்.
இளையவனாகிய இலக்குவன் அவனை நெருங்கி யார் நீ? என வினவியபோது, குகன் அன்போடு வணங்கி,
"தேவா! நின்கழல் சேவிக்க வந்தனன்
நாவாய் வேட்டுவன் நாய்அடி யேன்
என "தேவா, கங்கையாற்றில் நாவாய்களை இயக்குகின்றவனும் நாயினும் அடியவனாகிய வேட்டுவன் நான், தங்களின் திருவடிகளை வணங்க வந்துள்ளேன்” என்று கூறினான்.
இராமன் குகனைப் பாராட்டுதல்
இலக்குவன், இராமனைத் தொழுது, "வெற்றிப் பொருந்திய தலைவனே! தூய உள்ளம் உடையவன், தாயினும் சிறந்த அன்பினன், கங்கையாற்றில் செல்லும் நாவாய்களுக்குத் தலைவன், குகன் என்னும் பெயரினன், தன் உறவினருடன் தங்களைக் காண வந்துள்ளான்") என இலக்குவன் இராமனிடம் கூறினான். இராமன் குகனை, 'அழைத்து வருக' என்று இலக்குவனிடம் மொழிந்ததும், குகன் விரைந்து வந்து இராமனைத் தன் கண்களால் கண்டுகளித்தான். இருள் போன்ற நீண்ட முடியை உடைய தலை, மண்ணில் படியக் கீழே விழுந்து வணங்கினான். பின் எழுந்து வாயைக் கையால் பொத்தி உடலை வளைத்து அடக்கமாக நின்றான்.
உள்ளத்து அன்பு முதிர்வினால் எழுந்த பரிவின் காரணமாகக் குகன் கொண்டு வந்த இப்பொருள்களை (தேன், 'மீன்) அடைத்தற்கரியன என்றும் அமுதத்தை விடச் சிறந்தன என்று இராமன் கூறினான். இவை எத்தகையனவாய் இருப்பினும் அன்பு கலந்ததெனில் தூய்மையானவையே இப்பொருட்கள் நாங்கள் விரும்பி உண்டதற்குச் சமம் என்று கூறினான்.
குகனின் வேண்டுகோளும், உணர்வு நிலையும்
ஆண் சிங்கத்திற்கு நிகரான இராமன் குகனிடம், "நாங்கள் இத்தவச் சாலையில் தங்கியிருந்து அலைவீசும் கங்கையாற்றைக் கடந்து செல்ல எண்ணியுள்ளோம். ஆதலால் உன் நகர் சென்று மகிழ்வுடன் இனிமையாகத் தங்கியிருந்து நாளை விடியலில் நாவாயோடு (மரக்கலங்கள்) வருவாயாக" என்றுரைத்தான்.
கருமுகில் வண்ணனாகிய இராமன் கூறியதைக் கேட்ட குகன், "இவ்வுலகு அனைத்திற்கும் செல்வம் போன்றவனே! தங்களை இத்தவக் கோலத்தில் பார்த்த என்னிரு கண்களை எடுக்க முடியாத நிலையில் உள்ளேன். இம்மனத் துயரோடு என்னிருப்பிடம் செல்லத் துணியேன், ஐயனே! தங்களுக்கு வேண்டிய தொண்டு செய்வேன்” என்றான்.
இராமன் இன்று எம்மோடு தங்குக எனக் குகனிடம் கூறியதும், திருவடிகளை வணங்கினான். கடலையொத்த துடிப்பறையோடு கூடிய தனது சேனைப்படைகளை அழைத்து இராமன் தங்கியுள்ள தவச்சாலைக்கு விலங்குகளால் ஏதேனும் 'துன்பம் நேரிடாதவாறு பாதுகாப்பு வழங்கிடுமாறு கட்டளையிட்டான். இடியோடு கூடிய மழை மேகம்போல உரத்த சத்தமிட்டு இராமன், சீதை, இலக்குவன் மூவரையும் காவல் செய்து நின்றான். அரச குமாரனாகிய இராமன் தரையில் உறங்கும் காட்சியைக்கண்டு மலையிலிருந்து விழும் அருவிபோல கண்ணீர் சொரிந்து நின்றான்.
நாவாய் கொண்டு வருக
வைகறை காலத்தில் செய்ய வேண்டிய கடமைகள் யாவற்றையும் விரும்பிச் செய்து, அச்சம் தரும் வில்லை ஏந்திய இராமன் அன்புள்ளம் கொண்ட குகனைப் பார்த்து, ஐயனே! இவ்விடத்திலிருந்து செல்வத்திற்குரிய தரம்வாய்ந்த மரக்கலங்களை (நாவாய்) விரைவாகக் கொண்டு வருவாயாக என்று கட்டளையிட்டான்.
குகனின் வேண்டுதல்
"மாலையை அணிந்தவனே! எம் மக்கள் வஞ்சகம் அறியாது இக்காட்டில் வசித்து வருகின்றனர். எவ்வித குறைவுமின்றி, பகைவரை அழிக்கும் ஆற்றல் மிகுந்துள்ள நாங்கள் முறைப்படி உனக்குச் செய்ய வேண்டிய தொண்டுகளைத் தொண்டர்களாக இருந்து முறைப்படி செய்வோம். எங்களை உம்முடைய முறையான உறவினர்கள் எனக்கருதி எங்களுடைய இவ்வூரிலே நீண்டகாலம் இனிமையாக இருப்பாயாக!" என்று குகன் இராமனிடம் வேண்டினான்.
தேவர்கள் தூய்மையானது எனக்கருதும் தேனும், திணையும் இங்கு கிடைப்பதோடு, உண்ணுதற்குரிய புலால் (ஊன்) இங்குண்டு. எங்களுடைய உயிர் உங்களுக்குத் தொண்டு செய்யவே உள்ளன. சீதா தேவியோடு விளையாடிப் பொழுதுபோக்க காடும், நீரிலே முழுகி விளையாட கங்கையாறும் இருக்கின்றன. நான் உடன் உள்ளவரையும் நீ எம்மிடத்தில் இனிதிருப்பாயாக” என இராமனிடம் குகன் வேண்டினான்.
"நூலாடைகள் போல உள்ள மென்மையான தோல்கள், சுவையுடைய இனிமையான பல பொருள்கள், தூங்குவதற்குக் கயிற்றால் பிணித்த தொட்டிற் கட்டில் போல பரண்கள், தங்குவதற்குக் குடில்கள் மட்டுமல்லாது, விரைந்து சென்று எதையும் கொண்டுவந்து தரவல்ல எனது கால்கள், தடுப்பாரை அழிக்கவல்ல, வில்லை ஏந்திய கைகள் எம்மிடம் உள்ளன. ஆகாயத்தின் மேலே உள்ள பொருளாக இருந்தாலும் அதனையும் விரைந்து கொண்டு வருவோம்" என்றும் குகன் வேண்டினான்.
"தேவர்களை விட வலிமை படைத்த வில்லேந்திய ஐந்து இலட்சம் வீரர்கள் நான் இட்ட கட்டளையை நிறைவேற்ற காத்துக் கொண்டிருக்கின்றனர். இராமபிரானே! நீ எம் குடிசையிடத்து ஒருநாள் தங்குவாயானால் இதனைக்காட்டிலும் மேலானதொரு வாழ்க்கை இல்லை" என்று குகன் இறுதியாக வேண்டினான்.
மீண்டும் வரும்போது வருகிறேன்
குகனின், வேண்டுதலைக் கேட்ட இராமன், கருணை மிகுந்தவனாய், வெளிப்படையாக புன்முறுவல் செய்து,
"புண்ணிய நதியாடிப் புனிதரை வழிபாடுற்று
எண்ணிய சிலநாளில் குறுகுதும் இனிதென்றான்"
குகனே! நாங்கள் புண்ணிய நதிகளில் நீராடி, அங்குள்ள முனிவர்களை வழிபாடு செய்துவிட்டு, வனவாசத்துக்குக் குறித்த சில நாள்களில், உன்னிடத்துக்கு இனிமையாக வந்து சேர்வோம்” என்று கூறினான்.
இராமனின் மனக்குறிப்பை அறிந்த குகன் மிக விரைவாகச் சென்றான். பெரியதோர் படகினைக் கொண்டு வந்தான். தாமரை மலர் போன்ற கண்களை உடைய இராமன் அந்தணர்களிடம் விடைபெற்று, பிறைநிலவு போன்ற நெற்றியை உடைய சீதையுடனும் தம்பி இலக்குவனுடனும் படகில் இனிதாக ஏறினான்.
நிறைவுரை
விரைந்து படகினைச் செலுத்துமாறு குகனுக்கு இராமன் கட்டளையிட்டான். உயிரின் ஏவலுக்கு மெய் செயல்படுவதுபோலக் குகனும் படகினை விரைவாகச் செலுத்தினான். மடங்கி வீழும் அலைகளை உடைய கங்கையாற்றில் இளம் அன்னம் விரைந்து செல்வதினைப் போன்று படகு சென்றது. அவர்களின் பிரிவால் அனலில் பட்ட மெழுகைப்போல துன்பமுற்று அந்தணர்கள் மனமுருகி நின்றனர்.
********* இராஜாலி **********