எனது வலைப்பதிவு பட்டியல்

செவ்வாய், 5 செப்டம்பர், 2023

திருக்குறள் - அறன் வலியுறுத்தல்

 நூல் குறிப்பு

       உலகப் பொதுமறை எனப் போற்றப்படும் திருக்குறள் முதலாம் நூற்றாண்டில் தெய்வப்புலவர் திருவள்ளுவரால் இயற்றப்பட்டதாகும். அறத்துப்பால் பொருட்பால் இன்பத்துப்பால் என்ற மூன்று பிரிவுகளைக் கொண்ட இந்நூல் 133 அதிகாரங்களையும் அதிகாரங்களுக்கு பத்து பாடல் வீதம் 1330 பாடல்களையும் கொண்டதாகும். முப்பால், உத்தர வேதம், தெய்வ நூல், பொய்யா மொழி  என பலவாறு அழைக்கப்படும் திருக்குறள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

அறன் வலியுறுத்துதல்

    அறத்துப்பாலில் நான்காவது அதிகாரமாக விளங்குவது அறன் வலியுறுத்துதல் என்னும் அதிகாரமாகும். இதில் வாழ்வியல் அறங்கள் எவை என்பதையும் அவற்றின் பயன்களையும் வள்ளுவர் வகைப்படுத்தி பின்வருமாறு  கூறியுள்ளார்.
  • அறம் என்னும் நற்பண்பு ஒருவருக்கு சிறப்பையும் கொடுக்கும். செல்வத்தையும் கொடுக்கும். அத்தகைய உயர்ந்த அறத்தை விட நன்மை தருவது இவ்வுலகத்தில் வேறு ஒன்றும் கிடையாது.
  • ஒருவருடைய வாழ்க்கைக்கு அறத்தை போன்று நன்மை விளைவிக்கும் செயல்கள் வேறு இல்லை. அத்தகைய அறத்தை போற்றி காக்காமல் மறந்து போவதை போல தீமையான செயல் வேறொன்றும் இல்லை.
  • ஒருவர் தம்மால் முடிந்தவரை இடைவிடாமல் எல்லா இடங்களிலும் அறச்செயல்களை செய்வதற்கு முற்பட வேண்டும்.
  • ஒருவர் மனதளவில் குற்றமற்றவராக இருந்தால் அதுவே அறமாகக் கருதப்படும். மற்றவை எல்லாம் வெற்று ஆரவாரமாக கொள்ளப்படும்.என்பதை,
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற. - என வள்ளுவர் கூறுகிறார்.
  • பொதுவாக, பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொற்கள் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடம் கொடுக்காமல் வாழ்வதே உயர்ந்த அறமாகக் கருதப்படும்.என்பதை,
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். 
- என அறம் என்பது எது என விவரித்துக் கூறியுள்ளார்.
  • அறச்செயல்களை செய்வதற்கு நாட்களைக் கடத்த கூடாது. முதுமையில் அறங்களை செய்யலாம் என  எண்ணாமல் இப்பொழுது அறத்தை மேற்கொள்ள வேண்டும். அதுவே முதுமையில் நமக்கு துணையாக நிற்கும்.
  • அறச்செயலை மேற்கொள்பவர்கள் பல்லாக்கின் மேலிருந்து பயணிப்பவர்கள் போன்றவர்கள். மற்றவர்கள் பல்லாக்கை தூக்கிச் செல்பவர்கள்  போன்றவர்கள். அறச்செயலை செய்பவர்கள் எப்பொழுதும் அமைதியான நிலையில் காணப்படுவார்கள். மற்றவர்கள் மன அமைதியற்ற நிலையில் இருப்பார்கள்.
  • ஒருவன் நாள் தவறாமல் நற்செயல்களைப் புரிவான் எனில் அச்செயல்கள் அவனுக்கு மறுபிறவி கொடுக்கும் பாதையை அடைக்கும் கல்லாக இருந்து மறுபிறவி இல்லாமல் காக்கும்.
  • அறத்தின் வழியில் வாழ்வதால் கிடைப்பது இன்பமாகும். மற்றவை இன்பமாகாது.என்பதை,
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல. - என உறுதியாகக் கூறுகிறார்.
  • ஒருவன் தன் வாழ்நாளில் முயற்சி செய்து செய்ய வேண்டியது அறச்செயல்களே ஆகும். விட்டுவிட வேண்டியது தீய செயல்களே.

என அறன்வலியுறுத்துதல் என்னும் அதிகாரத்தில் அறத்தின் மேன்மைகளை  திருவள்ளுவர் எடுத்துக்கூறியுள்ளார்.

**** இராஜாலி****

இயேசு காவியம் - ஊதாரி மைந்தன் கதை

 நூல் குறிப்பு

  1981.ஆம் ஆண்டு வெளிவந்த இயேசு காவியம், கவிஞர் கண்ணதாசனால் இயற்றப்பட்டதாகும். இயேசு கிறிஸ்துவின் வரலாற்றை கதை வடிவில் கூறும், இக்காவியம் கண்ணதாசனின் 'இறவாக் காவியம்' என அழைக்கப்படுகிறது. 149 தலைப்புகளில், 5 பாகங்களாக இக்காப்பியம் காணப்படுகிறது.

ஊதாரி மைந்தன் கதை

 இயேசு கிறிஸ்து பாவிகளை நேசித்து, அவர்களோடு விருந்துண்டு மகிழ்வதைக் கண்ட சீடர்கள், இயேசு நாதரிடம் அதற்கான காரணம் கேட்க, அதற்கு இயேசுநாதர் இறைவன் எனும் அன்புத் தந்தையின் இதயம் எத்தகையது என்பதை அவர்களுக்கு எடுத்துக் கூற 'ஊதாரி மைந்தன் கதையினை' பின்வருமாறு கூறுகிறார்.

தந்தைக்கு இரு மைந்தர்கள்

    ஒரு தந்தைக்கு இரண்டு மைந்தர்கள் இருந்தார்கள். அதில் மூத்தவன் தந்தை சொல் கேட்டு நடப்பவன்.  இளையவன் ஊதாரியாக திரிந்தவன். ஒருநாள், இளையவன் தந்தையிடம் வந்து 'தன்பாக சொத்துகளை பிரித்து தர வேண்டும்'  எனக் கேட்டான். வருந்திய தந்தை வேறு வழியில்லாது சரிபாதி சொத்தை பகிர்ந்து அளித்தார். தன் மகன் விருப்பப்படி வாழட்டும் என தந்தை கொடுத்ததை பார்த்து அண்ணன் வருந்தினான்.

இளைய மகன் செல்வத்தை இழத்தல்

     தனது பாகத்தைப் பெற்ற இளைய மகன், அவற்றைக் குறைந்த விலைக்கு விற்று வெளி நாட்டிற்குச் சென்று நண்பர்களோடு சேர்ந்து மதுவோடும் மாதுவோடும் இணைந்து மனம் போன போக்கில் செலவுகளை செய்து சிறிது நாளிலே செல்வத்தை இழந்து தெருவில் நின்றான்.

பன்றிகளின் உணவை உண்ணுதல்

     அப்பொழுது அந்நாட்டில் பெரும் பஞ்சம் சூழ்ந்தது. வாழ வழி தெரியாமல் இளைய மகன் அங்குமிங்கும் அலைந்தான். ஒரு செல்வந்தரின் பன்றிகளை மேய்க்கும் வேலையினைப் பார்த்தான். பன்றிக்கும் அவனுக்கும் ஒரே உணவு கொடுக்கப்பட்டது. வேறு வழி இன்றி அதனை உண்டு காலத்தைக் கழித்தான்.

இளைய மகன் சிந்தை தெளிதல்

   தந்தையை விட்டு வந்து பல துன்பங்களை அனுபவித்த இளைய மகன் சிந்தை தெளிந்தான். தன் தந்தையை நாடிச் செல்ல வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான். தன் வீட்டை நோக்கிச் சென்றான். இவனுக்காகவே காத்திருந்த தந்தையை கண்டான். அவர் காலில் விழுந்து, 

 உன் வீட்டுக் கூலிகளில் ஒருவனென ஏற்பாய் 
 உன் பிள்ளை என்று சொலத் தகுதியில்லை காப்பாய் 

 எனக் கண்ணீர் விட்டு அழுதான்.

தந்தையின் செயல்

      தந்தையும் உடனே 'அப்பா என் மகனே' என அன்போடு தழுவி வீட்டு பணியாளர்களை அழைத்து

 யாரங்கே பணியாள்வா பட்டாடை நகைகள்
 அத்தனையும் அணியுங்கள் அலங்கார வகைகள்
 பேர் சொல்லும் மகனுக்குப் பெருங்கன்றின் கறிகள்
 பிழையாமல் செய்யுங்கள் விரைவில்

 எனக் கட்டளையிட்டார்.

மூத்த மகனின் செயல்

     மாலையில் மூத்த மகன் வீட்டிற்கு வந்தான். வீட்டில் ஆடல் பாடல் கொண்டாட்டம் நிகழ்வதைக் கண்டான். வீதியில் நின்றபடியே 'என்ன சத்தம்?' எனக் கேட்டான். பணியாளர் ஒருவர்' உங்கள் தம்பி வந்துள்ளார்.' எனக் கூறவே ஆத்திரத்தில் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தான்.

   இதனைக் கண்ட தந்தை அவனை வீட்டிற்குள் அழைத்துச் செல்ல வந்தான். மூத்த மகன் ஆத்திரத்தில் தந்தையிடம்

 உங்களுடன் இருந்தவரை நானென்ன கண்டேன்
 ஒரு நாளும் எனக்கென்று விருந்து வகை உண்டா? 

என வருத்தத்தோடு கேட்டான்.

 தந்தையின் ஆறுதல் வார்த்தைகள்

    மூத்த மகனின் வருத்தமான வார்த்தைகளைக் கேட்ட தந்தை,

 என்னோடு என்றும் நீ இருப்பவனே யன்றோ!
 என் செல்வம் எந்நாளும் உன்னுடைய தன்றோ!
 உன் தம்பி இறந்தபின் உயிர்பெற்று வந்தான்!
 உண்மையிலே மறுபிறவி அதற்காகச் செய்தேன்!

எனக்கனிவுடன் கூறினார். அதனைக் கேட்டு மூத்த மகன் சமாதானமடைந்து வீட்டுக்குள் சென்றான்.

 முடிவுரை

       என்ற கதையினை இயேசு நாதர் சீடர்களுக்கு கூறி பாவிகளை நேசிக்க வேண்டும் என அறிவுரை கூறியதாக இயேசு காவியத்தில் கண்ணதாசன் கூறியுள்ளார்.

**** இராஜாலி****

ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

பத்துப்பாட்டு நூல்கள்

முன்னுரை

   சங்க இலக்கியங்களில் ஒரு பிரிவான பத்துப்பாட்டு, 10 தனி பாடல்களைக் கொண்டதாகும். பத்து புலவர்களால் பாடப்பட்ட நூல் தொகுப்பு. பண்டைய தமிழர்களின் வாழ்வியல் நெறியையும் அக, புற ஒழுக்கங்களை எடுத்துக் கூறுவதாக காணப்படுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பத்துப்பாட்டு இலக்கியங்களில்  சிறப்புகளைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பத்துப்பாட்டு நூல்கள்


      பத்துப்பாட்டு நூல்கள் எவை, என்பதைப் பற்றி பழம்பாடல் ஒன்று கூறும் போது,

        முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
        பெருகு வளமதுரைக் காஞ்சி - மருவினிய
        கோலநெடு நல் வாடை கோல் குறிஞ்சி பட்டினப்
        பாலை கடாத்தொடும் பத்து - எனக் குறிப்பிடுகிறது.

பத்துப்பாட்டில் ஆற்றுப்படை வகையை சார்ந்த இலக்கியங்கள் ஐந்து காணப்படுகின்றன. மேலும், அகம் சார்ந்த இலக்கியங்கள் மூன்றும், புறம் சார்ந்த இலக்கியம் ஒன்றும், அகப்புறம் சார்ந்த இலக்கியம்கள் ஒன்று என ஆக பத்து இலக்கியங்கள் இத்தொகுதியில் காணப்படுகின்றன.

பத்துப்பாட்டில் காணப்படும் ஆற்றுப்படை நூல்கள்.

       ஆற்றுப்படுத்துதல் என்பது 'வழிகாட்டுதல்' ஆகும். பரிசு பெற்று வரும் பாணன் அல்லது கூத்தன் தன் எதிரே வரும் இன்னொரு ஏழை பாணன் அல்லது கூத்தனை பார்த்து தனக்கு பரிசளித்த மன்னரின் சிறப்புகளை எடுத்துக் கூறி, அவரிடம் சென்று பரிசுகளை பெற்றுக் கொள்ளும் படி வழிகாட்டுவதாக அமைவது. ஆற்றுப்படை இலக்கியம் ஆகும். அவ்வகையில் பத்துப்பாட்டில்,

  • திருமுருகாற்றுப்படை,
  • பொருநராற்றுப்படை
  • சிறுபாணாற்றுப்படை
  • பெரும்பாணாற்றுப்படை
  • கூத்தராற்றுப்படை என்னும் மலைபடுகடாம்.

ஆகிய ஐந்து இலக்கியங்களும் ஆற்றுப்படை வகையை சார்ந்தவை ஆகும்.

திருமுருகாற்றுப்படை

    நக்கீரர் என்னும் புலவர் பாடியது திருமுருகாற்றுப்படை. இந்நூல், 317அடிகளைக் கொண்டது. இதனை 'முருகு' என்றும் 'புலவராற்றுப்படை' என்றும் கூறுவர். முருகப்பெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு. அவனின் அருள் பெற்ற அடியவர் ஒருவர், தன் எதிரே வரும் இன்னொரு அடியவரை பார்த்து முருகப்பெருமானின். அறுபடை வீடுகளில் சிறப்புகளையும், முருகப்பெருமானின் பெருமைகளையும், எடுத்துக் கூறி அவரிடம் ஆற்றுப்படுத்துவதாக. அமைந்தது திருமுருகாற்றுப்படை ஆகும். குறிப்பாக, திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளியுள்ள முருகனின் தோற்றப் பொலிவை சிறப்பித்து கூறுவதோடு, திருச்செந்தூரில் இருக்கும் முருகப்பெருமானின் ஆறு முகங்களையும் 12 கைகளையும் சிறப்பித்து கூறுகிறது. மேலும், திருவாவினன்குடி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்ச்சோலை போன்ற அறுபடை வீடுகளில் உள்ள முருகப்பெருமானின் சிறப்புகளை எடுத்துக் கூறுவதாக இந்நூல் காணப்படுகிறது.

பொருநராற்றுப்படை

 கரிகால் பெருவளத்தான் சிறப்புகளை, முடத்தாமக்கண்ணியார் என்னும் புலவர் பாடுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. குறிப்பாக, கரிகால் பெருவளத்தான் இடம் பரிசில் பெற்று வரும் பொருநர் ஒருவன் தன் எதிரே வரும் இன்னொரு பொருநரை, கரிகால் பெருவளத்தானிடம் ஆற்றுப்படுத்துவதாக, இந்நூல் காணப்படுகிறது. 384 அடிகளைக் கொண்ட இந்நூல், கரிகாலனின் சிறப்பை கூறுவதோடு. பொன்னி நதியின் சிறப்பையும். வெண்ணிப் பறந்தலையில் நடைபெற்ற போரையும் கூறுவதாகக் காணப்படுகிறது.

சிறுபாணாற்றுப்படை

  ஓய்மானாட்டு நல்லியக்கோடன் என்னும் மன்னனின் சிறப்புகளை. இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது, சிறுபானாற்றுப்படை ஆகும் 269 அடிகளைக் கொண்ட, ஆசிரியப்பாவால் அமைந்த இந்நூல், சிறுபாணன் ஒருவன் நல்லியக்கோடன் என்னும் மன்னனிடம் சென்று பரிசு பெற்று வரும் செய்தியையும், தன் எதிரே வரும் இன்னொரு பாணனை மன்னன் பால் ஆற்றுப் படுத்துவதாகவும் இந்நூல் காணப்படுகிறது.

பெரும்பாணாற்றுப்படை

  500 அடிகளைக் கொண்ட இந்நூல், தொண்டைமான் இளந்திரையன் என்னும் மன்னனின் சிறப்புகளை, அவரிடம் பரிசு பெற்றுத் திரும்பும் பெரும்பாணன் ஒருவன், மற்றொரு பெரும்பாணனை அம்மன்னனிடம் ஆற்றுப்படுத்துவதாக,  உருத்திரகண்ணனார் என்னும் புலவர் பாடியுள்ளார். யாழைப் பற்றிய வர்ணனை, ஐவகை நிலங்களில் வாழும் மக்களின் ஒழுக்கங்கள், தொண்டைமான் இளந்திரையனின் கொடைத்திறன், ஈகை பண்பு, வீரம் போன்றவற்றைக் கூறுவதாக இந்நூல் காணப்படுகிறது.

கூத்தராற்றுப்படை என்னும் மலைபடுகடாம்

   ஆற்றுப்படை நூல்களில் மிகப்பெரியதாக காணப்படும் இந்நூல் 583 அடிகளைக் கொண்டது. பரிசு பெற்றுத் திரும்பும் கூத்தன் ஒருவன், தன் எதிரே வரும் இன்னொரு கூத்தனை தனக்கு பரிசளித்த மன்னனிடம்  ஆற்றுப்படுத்துவதாக இந்நூல் காணப்படுகிறது. குறிப்பாக, நன்னன்சேய்நன்னன் என்னும் மன்னனிடம் பரிசுப் பெற்று திரும்பும் கூத்தன், தன் எதிர்வரும் கூத்தனிடம் மன்னனுடைய சிறப்புகளையும் அவனுடைய பண்புகளையும், வீரத்தையும் கூறுவதாக பெருங்கௌசிகனார் என்னும் புலவர்  பாடியுள்ளார். குறிப்பாக, நன்னன் நாட்டிற்குச் செல்லும் வழியில் தன்மை. நாட்டின் பெருமை மழைவளம், சோலை அழகு போன்றவையும், நவிர மலையின் சிறப்பு, சேயாறு போன்றவற்றின் வளம் ஆகியவற்றை கூறுவதாக இந்நூல் காணப்படுகிறது.

பத்துப்பாட்டில் அகம் சார்ந்த நூல்கள்

  பத்துப்பாட்டில் அகக்கருத்துக்களைக் கூறும் நூல்களாக முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை  ஆகிய மூன்று நூல்களும் காணப்படுகின்றன.

முல்லைப்பாட்டு

  பத்துப்பாட்டு நூல்களிலேயே, மிகவும் சிறிய நூலாக காணப்படுவது முல்லைப்பாட்டு ஆகும். இதில் 103 அடிகளில் காணப்படுகின்றன. ஆசிரியப்பாவால் ஆன இந்நூலைப் பாடியவர் நப்பூதனார். முல்லைத் திணைக்குரிய, உரிப்பொருளை அடிப்படையாகக் கொண்டு, பாடப்பட்டதாக்கும். போருக்குச் சென்ற தலைவன், கார் காலம் வந்த பின்பும் திரும்பாததை கண்டு வருந்திய தலைவியின் துயரத்தையும், போர்க்களத்தில் தலைவன், படைகளை ஆயத்தம் செய்த நிலையையும், பாசறையில் இருந்து சிந்தித்து நிலையையும் கூறுவதாக இந்நூல் காணப்படுகிறது.

குறிஞ்சிப்பாட்டு

  கபிலரால் பாடப்பட்ட குறிஞ்சிப்பாட்டு, 261 அடிகளைக் கொண்டது. ஆரிய மன்னன் 'பிரகதத்தன்' என்பவனுக்கு தமிழ் மொழியின் சிறப்புகளைக் கூறுவதற்காக, இந்நூல், பாடப்பட்டது. இந்நூலை, 'பெருங்குறிஞ்சி' என நச்சினார்கினியார் பாராட்டுகிறார். வரையாது வந்து ஒழுகும் தலைமகனின் வரவு ஒருநாள் தடைபட்டது. அது, தலைவிக்கு வருத்தத்தை கொடுத்தது. இது கண்ட செவிலி துன்புற்றார். இருவருக்குமிடையில் தோழி அறத்தொடு நின்றாள். தலைவி தோழிகளோடு புனலாட சென்று, பூக்களைக் கொய்து அவற்றை வைத்து விளையாடுகிறாள். குறிப்பாக 99 வகையான மலர்களை இந்நூல் சிறப்பித்துக் கூறுகிறது.

பட்டினப்பாலை

    301 அடிகளைக் கொண்ட பட்டிணப்பாலை. 'வஞ்சி நெடும்பாட்டு' எனவும் வழங்கப்படுகிறது. கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்னும் புலவர், சோழன் கரிகால் பெருவளத்தான் சிறப்புகளை பாடுவதாக இந்நூல் காணப்படுகிறது. காவிரி கடலோடு கவக்கும் காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பையும், கரிகால் பெருவளத்தான் பெருமையையும் கூறுவதோடு, காவிரிபூம்பட்டினம் கடற்கரையில் ஏற்றுமதி, இறக்குமதி ஆகும் பொருள்களைப் பற்றிய செய்தியும் இந்நூலில் விரிவாக பேசப்படுகிறது.

பத்துப்பாட்டில் புறம் சார்ந்த நூல்

 பத்துப்பாட்டில் புறம் சார்ந்த நூலாக மதுரைக்காஞ்சி விளங்குகிறது.

மதுரைக்காஞ்சி

   பத்துப்பாட்டில் மிகவும் பெரியதாக காணப்படும் மதுரைக்காஞ்சி 782 அடிகளைக் கொண்டது. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனின் சிறப்புகளையும், அவருடைய வீரத்தையும், கொடைப்பண்பையும் மாங்குடி மருதனார் என்னும் புலவர்  பாடியுள்ளார்.  இதனை 'பெருகு வளமதுரைக் காஞ்சி' என புகழ்வர். இதற்கு. 'கூடற்றமிழ்' என்ற பெயரும் உண்டு. மதுரை மாநகரத்தின் சிறப்பையும், அல்லங்காடி, நாளங்காடி என்ற வணிக ஸ்தலங்களின் பெருமையும் கூறுவதாக இந்நூல் காணப்படுகிறது. மேலும், வைகை ஆற்றில் சிறப்பு இந்நூலில் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது.

பத்துப்பாட்டில் அகம் புறம் சார்ந்த நூல்கள்

  பத்துப்பாட்டில் அகம் புறம் சார்ந்த நூலாக நெடுநல்வாடை காணப்படுகிறது.

நெடுநல்வாடை

 தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை நக்கீரர் பாடியது நெடுநல்வாடை. 188 அடிகளைக் கொண்ட இந்நூல், தலைவனைப் பிரிந்து வருந்தும் தலைவிக்கு வாடைக்காற்று துன்பத்தை கொடுத்த செய்தியையும், தலைவனாகிய பாண்டியன் நெடுஞ்செழியன் போர்க்களத்தில் மேற்கொண்ட உத்திகளைப் பற்றி  கூறுவதாக இந்நூல் காணப்படுகிறது.

முடிவுரை

 பத்துப்பாட்டு நூல்களில், பத்து தனிப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இவை சங்க கால மக்களின் வாழ்வியல் கூறுகளையும், பண்பாட்டுப் பழக்க வழக்கங்களையும்  அக்கால மன்னர்களின் ஈகை மற்றும் வீரத்தையும் கூறுவதாக காணப்படுகின்றன.

***** இராஜாலி*****

குறுந்தொகை - நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று

நூல் குறிப்பு

    'நல்ல குறுந்தொகை' என சிறப்பித்துக் கூறப்படும் குறுந்தொகை எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. இந்நூலில், ஐந்திணைகளுக்கும் உரிய 400 பாடல்கள் காணப்படுகின்றன. 4 முதல் 8 அடி வரையிலான பாடல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இந்நூலை தொகுத்தவர் பூரிக்கோ என்பவர் ஆவார். தொகுப்பித்தவர் யாரென தெரியாது. 

நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று


திணை – குறிஞ்சி

பாடியவர் – தேவகுலத்தார்

துறை - தலைமகன் சிறைப்புறமாக, அவன் வரைந்து கொள்வது வேண்டி, தோழி இயற்பழித்தவழி, தலைமகள் இயற்பட மொழிந்தது.

துறை விளக்கம் – தலைவன் தலைவி வீட்டின் அருகே வந்து நின்றான்.  தலைவியை அவன் மணந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவன் இயல்புகளை இகழ்ந்து கூறுகின்றாள் தோழி. அதைக் கேட்ட தலைவி, தலைவனின் இயல்புகளைப் புகழ்ந்து கூறுகின்றாள்.

பாடல்

         நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று;

         நீரினும் ஆர் அளவின்றே- சாரல்

         கருங் கோல் குறிஞ்சிப்பூக் கொண்டு,

         பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.

பாடல் விளக்கம்

    இயற்பழித்துக் கூறிய தோழியை பார்த்து தலைவி  “எம் தோழியே! கரிய கொம்புகளில்  பூத்துக் குலுங்குகின்ற குறிஞ்சிப் பூக்களில் உள்ள தேனை எடுத்து, மலையில் உள்ள உயர்ந்த மரங்களில் தேனடைகளைச் சேகரித்து வைக்கின்ற  மலைநாட்டில் வாழ்கின்றவன் எம் தலைவன்.  அவனோடு நான் கொண்ட நட்பு, நிலத்தை விடப் பெரியது, வானத்தை விட உயர்ந்தது. கடலைவிட ஆழமானது” என்று தோழிக்குத் தலைவி கூறுவதாக தேவ குலத்தார் பாடியுள்ளார்.

சனி, 2 செப்டம்பர், 2023

நற்றிணை - நின்ற சொல்லர்; நீடுதோன்று இனியர்

  நூல் குறிப்பு 

   எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான நற்றிணை ஐந்திணைகளுக்கும் உரிய அகக்கருத்துகளைக் கூறும் 400 பாடல்களைக் கொண்டதாகும். இந்நூலில் 9 அடி முதல் 12 அடி வரையிலான பாடல்கள் இடம்  பெற்றுள்ளன. இந்நூலை தொகுத்தவர் யார் என தெரியவில்லை. தொகுப்பித்தவர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி என்பவராவார். இந்நூலை நற்றிணை நானூறு எனவும் வழங்குவர்.

நின்ற சொல்லர்; நீடுதோன்று இனியர்


 
திணை - குறிஞ்சி
      
பாடியவர் – கபிலர்

கூற்று - பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைவி சொல்லியது.

கூற்று விளக்கம் – பொருள் ஈட்டுதற் கரணமாகத் தலைவன் தலைவியை விட்டுப் பிரிய எண்ணியதைத் தோழி அறிந்து, தலைவியிடம் கூற, தலைவி “தலைவ ன் அங்ஙனம் என்னை விட்டுப் பிரிய மாட்டார்” எனத் தலைவனைப் புகழ்ந்து கூறுகின்றார்.

பாடலின் விளக்கம்

         தலைவனின் பிரிவை உணர்த்திய தோழியை பார்த்து தலைவி,  “தோழி என் காதலர் சொன்ன சொல்லைத் தவறாமல் காப்பாற்றக் கூடிய வாய்மையுடையவர். நீண்ட காலம் பழகுவதற்கு மிக இனிமையானவர். எப்போதும் என் தோள்களைப் பிரியும் எண்ணம் இல்லாதவர். அத்தகையவருடைய நட்பு, தேனீக்கள் தாமரையின் குளிர்ந்த மகரந்தங்களை ஊதி, உயர்ந்து நிற்கும் சந்தன மரத்தின் தாதினையும் ஊதி, சந்தன மரத்தின் உச்சியில் கொண்டு சென்று சேர்த்து வைத்த தேனைப் போல உறுதியாக உயர்ந்தது. தண்ணீர் இல்லாமல் இவ்வுலகம் இயங்காதது போல, அவர் இல்லாமல் நான் வாழ மாட்டேன் என்பதை நன்கு உணர்ந்தவர். என் மீது மிகுந்த விருப்பம் கொண்டவர். என்னைப் பிரிந்து சென்றால் என் நெற்றியில் பசலை நோய் படரும் என்று அஞ்சி தடுமாற்றம் அடைந்து என்னை விட்டு நீங்கிச் செல்ல மாட்டார்” என்று தலைவி கூறுவதாக கபிலர் பாடியுள்ளார்.

**** இராஜாலி****

சீறாப்புராணம் - மானுக்குப் பிணை நின்ற படலம்

நூல் குறிப்பு

         இஸ்லாமிய பேரிலக்கியங்களில் ஒன்று சீறாப்புராணம் ஆகும்.   இக்காப்பியம்  வள்ளல்  முகமது  நபி  அவர்களின் வரலாற்றை  கூறுவதாக அமைந்துள்ளது. இதனை உமறுப்புலவர் பாடியுள்ளார். கி.பி  17ஆம் நூற்றாண்டை  சார்ந்த இக்காப்பியத்தில்    விலாதத்துக் காண்டம்,  நுபுவத்துக் காண்டம், ஹிஜ்ரத்துக் காண்டம்  என மூன்று காண்டங்களும், 92 படலங்களும்,  5027  பாடல்களும் காணப்படுகின்றன.

மானுக்குப் பிணை நின்ற படலம் 

  நுபுவத்துக் காண்டம் என்னும்  இரண்டாவது காண்டத்தில் மானுக்குப் பிணை நின்ற படலம் இடம்பெற்றுள்ளது.  இப்படலம். நபிகள் நாயகம் வேடனிடம் சிக்கிய ஒரு பெண்மானுக்காகத் தாமே பிணையாக நின்று, அம்மானை அவனிடமிருந்து மீட்ட பெருங்கருணைத் திறத்தை எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது.

 முகமது நபி மானை காணுதல் 

     முகமது நபி ஒருநாள், நகர்ப் புறத்தினை நீங்கிச் செழுமையான மேகங்களைத் தனது முடியினில் தாங்கியதும், மணமிக்க மலர் வனங்களைக் கொண்ட ஒரு மலையினை அடைந்தார்.

         அங்கு, காட்டில் திரியும் விலங்குகளைக் கொன்று அவற்றின் தசைகளை அறுத்துப் பக்குவமாகச் சுட்டுத் தன்னந்தனியே அவற்றை உண்டு, தனது ஊனைப் பெருக்கி வரும் வேடன் ஒருவன், பெண் மான் ஒன்றை வலையில் பிடித்துக் கட்டி வைத்திருப்பதனை முகமது கண்டார்.

  முகமது நபிகள் மானைக் கண்டபின், அரும்புகளும் தளிரும்மிக்க சோலையையும் காணார்; அருவியையும் காணவில்லை. அருகில் உள்ள நிழலையும் நோக்கார்; தம் மீது ஈச்சங்காயங்கள் மழை போலச் சொரிவதையும் நோக்காராகி மானையே நோக்கிச் சென்றார்.

மானின் நிலை

         தரையில் வெள்ளியை உருக்கிவிட்டது போல மானின் மடியில் இருந்து பால் சிந்தியது. கண்களில் நீர் பொழிய உடல் பெருமூச்சு விட்டது. திரும்ப முடியாமல் காலில் கட்டுண்டு நிலத்தில் கிடந்தது. வேடுவனின் வலைக்குள் சுருங்கி வேதனைப்பட்டுக் கிடந்த மானின் உடல் பதைக்கின்ற நிலையை நபிகள் கண்டார்.

             அக்காட்டில் உள்ள மரங்களில் பூத்துக் குலுங்கிய  மலர்கள் செந்தேனைப் பொழிந்தன. அக்காட்சி மானின் துயரத்தைக் காண முடியாமல் கண்ணீர் சிந்துவதைப் போலிருந்தது. 

      மானைக் கட்டி வைத்திருந்த வேடனைக் கண்ணால் காண்பதும் பாவம் என்பது போல பறவைகள் தனது இனத்தோடு கூட்டுக்குள் புகுந்தன.

           அப்போது பூக்களில் உள்ள தேனை உண்ட வண்டுகள் இசை பாடின. அந்த இசை முகமது நபிகள் வருவார். வருத்தப்படும் மானை மீட்பார் என்று கூறுவது போலிருந்தது.

நபிகளிடம் பெண்மான் முறையிடல் 

        முகமது நபி அவர்கள் மானின் அருகில் வந்து நின்றார். தன்னருகே வந்து நின்ற நபியை நோக்கி, தனது குட்டையான வாலை அசைத்து, நெடுங்கழுத்தை நீட்டிக் "கறையற்ற நிலவுபோன்றவரே! வள்ளல் முகமதே!" என விளித்துப் போற்றித் தடையின்றி எவர்க்கும் கேட்கும்படியாக, வணங்கிச் சலாமிட்டுப் பின் கூறலாயிற்று.

  “வல்லவனாகிய இறைவனது உண்மைத் தூதரே! விரைந்து எனது சொற்களை  கேட்டு உமது அருளைத் தருவீராக!” எங்களுக்கு ஒரு இளங்கன்று வேண்டுமென ஆசைப்பட்டு நானும் என் கலைமானும் இருக்க, நான் கருவுறாததால் வருத்தத்துடன் வாழந்தோம். அப்போது முகமதாகிய உங்கள் பெயரைப் போற்றினேன். எனக்கு இளஞ்சூல் உருவாகிக் கரு வளர்ந்தது.”

            "யானும் எனது துணையும் சேர்ந்து ஒன்றானதைப் போன்ற உருவோடு ஓர் இளங்கன்று பிறந்தது. இன்பக் கடலில் ஆழ்ந்து இம்மலையிடத்தைச் சார்ந்து துன்பம் அகன்றிருந்தேன். ஆனால் என் முன்வினையினை நான் அறியவில்லை. எனது உயிர் போன்ற கன்றும் ஆண்மானும் நானும் எங்கள் சுற்றமும் மலைச்சாரலில் ஓரிடத்தில் வயிராறத் தழையுண்டு, பசி தீர்ந்து பின் நீர் அருந்தி எள்ளளவு அச்சமும் இன்றி நின்று உலவிய நேரம்! நாங்கள் நின்றிருந்த திசையின் எதிரிலிருந்து ஒரு மலைக் முகத்தில் இருந்து, மத யானையும் அஞ்சி நடுங்கும்படியாக  இடிமுழக்கம் போன்று ஒரு வரிப்புலியின் முழக்கம் கேட்டது. அதைக் கேட்டு நாங்கள் ஒவ்வொரு திசையிலும் தனித் தனியாகச் சிதறி  ஓடினோம்."

             "நானும் எனது கன்றைக் காணாது வாடிய மனத்தோடும் உடம்பானது ஆடிக்காற்றில் துரும்பு போல் ஆட, வேறோர் கானகம் புகுந்தேன். அக்காட்டினை அடைந்த போது, அங்கு மறைந்திருந்த இவ்வேடன், வலையில் மாட்டிக் கொண்டேன். புலி வாயிலிருந்து தப்பிச் சிங்கத்தினிடம் சிக்கினாற் போல, என் உடல் பதை பதைக்க நடுங்கி நிற்கின்றேன்." எனக் கூறியது. 

மானின் மனநிலை

   மேலும், மான் முகமது நபி அவர்களை பார்த்து,     "நான் பிடிபடுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு தான்  என் கன்று பிறந்தது; இன்னும் புல்லை மேய்ந்தறியாது; நீரும் பருகாது;  என் கன்று பூமியில் கிடந்து என்ன பாடுபடுகின்றதோ? அறியேன். எனது கன்று தனது தந்தையாகிய கலைமானிடம் சோ்ந்ததோ? அல்லது வேறொரு புறமாக ஓடிச் சென்றதோ, தன் இனத்தைச் சேர்ந்து பெற்றோருக்காக ஏங்கியதோ? அல்லது புலியின் வாயில் அடிபட்டு இறந்ததோ? என்னைத் தேடி இங்குமங்குமாக ஓடி அலைகின்றதோ ? நான் அறியேன்." எனக் கூறி கண்ணீர் வடித்தது. மேலும் நபிகளை பார்த்து 

    "மாந்தர் எவரும் சொர்க்கத்தில் புகச்செய்யும் புண்ணியனே! நான் இவ்வேடனின் பசியைத் தீர்க்கச் சித்தமாக உள்ளேன். அதற்கு முன் என் கால்களைப் பிணித்துள்ள பிணைப்பை நீக்கி என்னைத் தாங்கள் பிணையாக நின்று விடுவித்தல் வேண்டும். என்னைத் தாங்கள் விடுவித்தால், என்னுடைய கலை மானைச் சேர்ந்து, அதன் கவலையை மாற்றி எனது நிலையை என் இனத்திற்குத் தெரிவித்து எனது கன்றினுக்கு இனிய தீம்பால் ஊட்டி, எனது குலத்தோடு சேர்ந்து இருந்து விட்டுச் சில நாழிகைப் போதில் திரும்புவேன்" என்று அப்பெண்மான் நபியிடம் முறையிட்டது.

மானுக்குப் பிணையாக நபிகள் நாயகம் நிற்றல் 

    மான் இவ்வாறு உரைக்கக் கேட்ட நபி, மனத்தில் கருணை பொங்க, வேடனை நோக்கி, “இந்த மான் தனது கன்றின் துயர் தீர்த்து வரும்வரை நான், இதற்குப் பிணை; எனவே இதனை விடுக” என்றார். 

          அதைக் கேட்ட வேடன் சினத்துடன் சிரித்து "முட்கள் நிரம்பிய காட்டில் உச்சந்தலையில் உள்ள வியர்வை உள்ளங்கால் வரை நனைக்கும்படி ஓடி எந்த வேட்டையும் கிடைக்காத நிலையில் இந்த மானைப் பிடித்து வந்தேன். இந்த மானின் தசையால் என் பெரும்பசி நீங்கியது என மகிழ்வோடு இருந்தேன். முகமது அவர்களே! நான் வருத்தப்படும்படி பேசி விட்டீர்கள். மேலும், காட்டில் பிடித்த மானை விட்டு விட்டால் அது மீண்டும் மனிதரிடம் திரும்பும் செயல் முன் எப்போதும் நிகழ்ந்ததில்லை. எனவே நீங்கள் கேட்பது சரியல்ல" என வேடன் மறுத்துக் கூறினான். 

     அதனைக் கேட்ட  முகமது நபிகள், வேடனை பார்த்து  "என்னைப் பிணையாகக் கொண்டு இந்தப் பெண்மான் விடுவிக்கவும். மான்  ஒரு நாழிகைப் போதில் வராவிட்டால், நான் உனது பசியைத் தீர்ப்பதற்காக ஒன்றிற்கு இரண்டாக அன்புடன் தருவேன்! கவலைப் படாதே!" என்று இனிமையுடன் நபிகள் உரைத்தார். 'ஒன்றுக்கு இரண்டு மான்கள் கிடைக்கும்' என்பதை எண்ணி வேடனும் சம்மதித்தான். மானை விடுவித்தான்.

வேடனின் செயலை மான் தன் கூட்டத்திற்கு உரைத்தல்         

     அப்பெண்மான், தன் இனத்தினுள் சென்று சேர்ந்து கவலை நீங்கியது. தனது கலையின் வருத்தத்தையும் போக்கித் தனது கன்றுக்குப் பாலூட்டி, மென்மையான முதுகையும் வாலினையும் நாவினால் நக்கிக் கொடுத்துக் கழுத்தை வளைத்து மோந்து அதன் வேட்கையையும் போக்கியது.

            கன்றிற்கு அமுதம் ஊட்டிய பின்னர்க் காட்டகத்தில் ஓடிச் சென்று, தனது இனத்திற்கெல்லாம் தான் வேடன் கைப்பட்ட வரலாறும், நபிகள் அதை மீட்டு வர விட்டதும் எடுத்துரைத்தது. 'பிணையாக நபிகள் இருந்தனர்' என்ற மொழியைக் கேட்டுப் மானினம்  அனைத்தும் உள்ளப் பதைப்படைந்து துன்பம் எய்தின. துணையாகிய ஆண்மானும் உடல் சோர்ந்து பெருமூச்சு எய்தி நின்றது. ’பெண் மானை மீண்டும் வேடனிடம் செல்ல வேண்டாம்' என ஆண் மான் கூறியது. 

பெண்மான் எடுத்த முடிவு 

         அதனைக் கேட்ட பெண் மான் ஆண் மானிடம் "முகமது நபி அவர்கள், வேடனுடன்  பேசி,  தானே பிணையாக நின்றார். பெரியவன் தூதராகிய நபிகள், இவ்வுலகத்தில் எல்லா உயிர்களையும் அணைத்துக் காப்பதற்கு அவரல்லது வேறு ஒருவர் இல்லையல்லவா? எனது உயிரை வேடனது பசிக்காக ஈந்து, நபியினது பிணையை மீட்க நான் செல்லவில்லை என்றால் சொர்க்கத்தை இழந்து நரகத்தில் வீழ்வேன். எனவே நான் மீண்டும் முகமது நபிகளிடம் சென்று வேடுவனின் பசியாற்ற போகிறேன்" என ஆன்மானிடம் கூறிவிட்டு முகமது நபி இருக்கும் இடத்தை நோக்கிச் சென்றது.  

வேடனின் மனமாற்றம்

      மானும் அதன் கன்றும் சேர்ந்து வருவதனை நபிகள் பெருமான் கண்டு மகிழ்ந்து, வேடனை பார்த்து  "ஒரு பிணைக்கு இரண்டாக உன்னிடம் வருகின்றன பார்" என்றுரைத்தார். அதனைக் கண்ட வேடன் அதிசயத்தான். மானின் செயலால் மனம் மாறிய வேடன், முகமது நபியின் கால்களில் விழுந்து வணங்கினான். பெண் மானும் அதன் கன்றும் வள்ளல் முகமதுவை வணங்கியது. மீண்டும் காட்டிற்குச் சென்று தன் இனத்தோடு வாழ்ந்தது.

    இவ்வாறு வள்ளல் முகமது நபிகள் மானுக்கு பிணையாக நின்று மானை விடுவித்ததோடு வேடனை மன மாற்றம் அடைய செய்தார் என்ற செய்தியை மானுக்கு பிணை நின்ற படலத்தில் உமறுப்புலவர் பாடியுள்ளார்.

***** இராஜாலி ******

வெள்ளி, 1 செப்டம்பர், 2023

முல்லைப்பாட்டு - நப்பூதனார்

 நூல் குறிப்பு

       சங்க இலக்கிய நூல் தொகுதிகளில் ஒன்றான பத்துப்பாட்டில், அகப்பொருள் நூலாக விளங்குவது முல்லைப்பாட்டு. பத்துப்பாட்டு நூல்களில் மிகவும் சிறியதாக,103 அடிகளைக் கொண்டதாக முல்லைப்பாட்டு காணப்படுகிறது. இதனைப் பாடியவர், காவிரிப்பூபட்டிணத்து  பொன் வணிகர் மகன் நப்பூதனார் ஆவார். முல்லை நிலத்திற்குரிய ஒழுக்கமான, "இருத்தலும் இருத்தல் நிமித்தமும்" என்ற ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இந்நூல் பாடப்பட்டுள்ளது.

கார்கால மாலைப் பொழுது


    முல்லைப்பாட்டில் துவக்கமாக நப்பூதனார் கார்கால வரவையும், தலைவியின்மாலைப் பொழுதில் நிலையினையும் பற்றி பின்வருமாறு விவரித்துள்ளார்.சங்கு சக்கரத்தை கையில் ஏந்திய திருமால், வாமன அவதாரம் எடுத்த போது மகாபலிச் சக்கரவர்த்தி நீர் வார்த்துக் கொடுக்க, நெடிய உருவம் எடுத்து, இவ்வுலகத்தை அளந்தது போல, மலையில் இருந்து வந்த மேகக்கூட்டங்கள், குளிர்ந்த கடல் நீரைப் பருகி, வலப்பக்கமாக எழுந்து, மலையில் மோதி, மழையாகப் பொழிந்த மாலைப் பொழுது வந்தது.

நல்லோர் விரிச்சி கேட்டல்

       மழைபெய்த அம் மாலைப்பொழுதில், தலைவியின் துயரைக் கண்டு வருந்திய பெருமுது பெண்டி, காவல் நிறைந்த அவ்வூர் எல்லையைக் கடந்து, நாழியில் கொண்டு சென்ற நெல்லையும்,  புத்தம் புது முல்லைப் பூவையும் இறைவனுக்குத் தூவி, விரிச்சிக்காகக் காத்திருந்தனர். அப்பொழுது சிறு கயிறால் கட்டப்பட்ட பசுக்கன்று ஒன்று தன் தாய் பசுவைத் தேடி தவித்துக்கொண்டிருந்தது. அப்போது,ஆயர்குலப் பெண் ஒருத்தி குளிரில் நடுங்கியவாறு வெளியே வந்து, கோவலர் ஆடுகள், மாடுகள் ஒட்டி வரும் சத்தத்தைக் கேட்டு "இன்னே வருகுவர் தாயர்”எனக் கூறினாள். இதனைக் கேட்ட முது பெண்கள் 'நல்ல வார்த்தையைக் கேட்டோம் அதனால் தலைவன் விரைவாக வினைமுடித்து விரைந்து வந்து சேருவான். எனவே,நீ கவலையை விடுவாயாக' எனத் தலைவியிடம் சென்று ஆறுதல் மொழி கூறினார்கள். ஆனால், தலைவியோ மனம் வருந்திய படி கண்களில் நீர் வடிந்த நிலையில் காணப்பட்டாள். என மாலைப்பொழுதில் தலைவியின் துன்பத்தை முல்லைப்பாட்டு கூறுகிறது.

பாசறையின் இயல்பு


    'கார்காலம் வந்ததும் வருவேன்' எனத் தலைவியிடம் கூறிவிட்டு, தலைவியை பிரிந்து போருக்குச் சென்ற தலைவன், போர்க்களத்தில்,  காட்டாறுகள் பாயும் பரந்துவிரிந்த மணற்பரப்பில், காணப்பட்ட பிடவம் போன்ற செடி, கொடிகளை வெட்டி சுத்தம் செய்து, அங்கே கடல் அலைகளை போன்று பரந்து விரிந்த பாடி வீடுகளை அமைத்து அதில், மன்னனும் படைவீரர்களும் தங்கியிருந்தார்கள்.

யானைப்பாகன் செயல்

   வரிசை வரிசையாக அமைக்கப்பட்டிருந்த பாடி வீடுகளின் முற்றத்தில், சிறு கண்களை உடைய யானைகள் காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்தது. அந்த யானைகள் உண்பதற்காக, ஓங்கி வளர்ந்த கரும்புகளையும், நெற்கதிர்களையும், இன்குளகு எனப்படும் அதிமதுரத் தளைகளையும் போடப்பட்டிருந்தது. யானைகள் அவற்றை உண்ணாது தனது தும்பிக்கையில் அதிமதுரத் தளைகளை எடுத்து தனது நெற்றியை துடைத்தவாறு நின்று கொண்டிருந்தது. அப்போது அங்குசம் எனப்படும் கருவியை கையில் கொண்ட, கல்வி அறிவு அற்ற யானைப் பாகர்கள், வடமொழியில் சில வார்த்தைகளை கூறி யானைக்கு கவளம், கவளமாக உணவுகளை ஊட்டிக் கொண்டிருந்தார்கள்.

வீரர்கள் தங்கும் படைவீடுகள்

 படை வீரர்கள் தங்குவதற்காக தனியாக வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன. முனிவர்கள் கையில் வைத்திருக்கும் முக்கோல் போன்ற கம்புகளை நாட்டி, அவற்றில் கயிறுகளை இறுகக் கட்டி, துணியினால் கூரை அமைத்து, கிடுகு எனப்படும் கேடயங்களை பக்கச் சுவற்றுக்கு பதிலாக நாட்டி, வரிசை, வரிசையாக படைவீடுகளை அமைத்திருந்தார்கள்.

அரசனுக்கு அமைத்த பாசறை

  அரசன் ஓய்வெடுப்பதற்காக தனியாக பாசறைகள் அமைக்கப்பட்டிருந்தது. அப்பாசறையில் மாலை நேரத்தில் அழகிய வளையல் அணிந்து, ஒளிவீசும் வாளேந்திய பெண்கள், சுரைக் குடுவையில் நெய்யைக் கொண்டு வந்து பாசறையில் இருக்கும் விளக்குகளில் நெய்யையும், திரியையும் வைத்து விளக்குகளை ஏற்றி விட்டு சென்றனர்.

மெய்க்காப்பாளர்கள் காவல் புரிதல்

      இந்நிலையில், இரவு மணி அடித்து ஓய்ந்து பின்னர், அதிரல் பூத்துக்குலுங்கும் நேரத்தில், குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருக்கும் போது, நேரத்தை கணக்கிட்டு சொல்லும் நாளிகை கணக்கர்கள் மன்னனைப் பார்த்து "பரந்து விரிந்த கடலை கடந்து சென்று வெற்றிவாகை சூடும் மன்னனே!இப்பொழுது நேரம் இன்னது" என வாழ்த்தி, கூறிச் சென்றனர்.

அரசன் படுக்கையில் தூங்காமல் சிந்தித்து இருத்தல்

       அந்த இரவுப் பொழுதில் மன்னன், தூக்கம் கொள்ளாதவனாக காணப்பட்டான். மன்னனுடைய பள்ளியறை இரண்டு அறைகளாக  காணப்பட்டது. அங்கு அழகான விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன. வலிமையான உடலை உடைய யவனர்களும், வாய் பேச முடியாத ஊமை மிலேச்சர்களும் அங்கு காவல் புரிந்து கொண்டிருந்தார்கள். அப்போது மன்னன் ஒரு கையை படுக்கையில் ஊன்றியவாறு, மற்றொரு கையை தலையில் வைத்தவாறு, தூக்கம் இல்லாதவனாய் இன்றைய நாள் நடந்த போரைப் பற்றி சிந்தித்துக் கொண்டு படுக்கையில் படுத்திருந்தான்.மறுநாள் பகைவர்களை வென்ற வெற்றி ஆரவாரமும், வெற்றி முரசு முழங்கும் ஒலியும் பாசறையில் கேட்டுக்கொண்டிருந்தது.

தலைவனது பிரிவினால் தலைவி பெற்ற துயரம்

    தலைவனைப் பிரிந்த தலைவி கார்காலம் வந்த பின்பும் தலைவன் திரும்பாததால், துயரம் அடைந்து, நீண்ட நேரம் தூக்கம் இல்லாதவராக காணப்பட்டாள். பசலை நோயால் உடல் நலிவுற்று கையிலிருந்த வளையல்கள் கழன்று விழுந்த நிலையில் காணப்பட்டாள். பெருமூச்சு விட்டவளாய், பாவை விளக்கு எரியும் ஏழு அடுக்கு மாளிகையில் தலைவி தூங்காமல் விழித்திருந்தாள் அப்பொழுது மழை நீர் அருவி போல் பாயும் ஓசை காதில் கேட்டது. மறுநாள் காலை அரசனும், படைகளும் எதிரியை வென்றுbஅவருடைய நிலத்தை கைப்பற்றிக்கொண்டு, வெற்றிக் கொடியை ஏந்தியவாறு ஊருக்குள் வந்து கொண்டிருந்தனர்.

மழையில் செழித்த முல்லை நிலம்


    வெற்றி பெற்று வரும் மன்னன், இரண்டு குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் வந்து கொண்டிருந்தான், அப்பொழுது, முல்லை நிலத்தில் காயா மலர்கள் பூத்துக் காணப்பட்டன. பொன் போன்ற கொன்றை மலர்கள் பூத்துக் குலுங்கின, முல்லை அரும்புகள் மலர்ந்து காணப்பட்டன. செல்லும் வழி எங்கும் தோன்றி மலர்கள் சிவப்பு நிறத்தில் காணப்பட்டது. அங்கு வளர்ந்திருந்த வரகு செடியில் கதிர்களை பெண் மானும், ஆண் மானும் இணைந்து மகிழ்ச்சியுடன் மேய்ந்து கொண்டிருந்தன. மன்னனை வரவேற்கும் நிலையில்  சிறுதூறல் பெய்து கொண்டே இருந்தது.

    என முல்லைப்பாட்டில் தலைவனைப் பிரிந்த தலைவியின் நிலையையும், கார்கால சூழலையும், மன்னன் அமைத்திருந்த பாசறையின் தன்மையினையும், மழையால் முல்லை நிலம் செழித்த காட்சியையும் முல்லைப்பாட்டில் நப்பூதனார் அழகாக விவரித்துள்ளார்.

******* இராஜாலி******

வியாழன், 31 ஆகஸ்ட், 2023

பெரியபுராணம் - பூசலார் நாயனார் புராணம்

முன்னுரை

     தனியடியார்கள் அறுபத்து மூவரும், மற்றும் தொகையடியார் ஒன்பது பேரும் சேர்த்து எழுபத்திரண்டு சிவனடியார்களின் வரலாற்றை எடுத்துரைக்கும் பெருமை பெற்ற நூல் பெரியபுராணம் ஆகும். இந்நூலை இயற்றிய சேக்கிழார், இந்நூலிற்குத் திருத்தொண்டர் புராணம் எனப் பெயரிட்டார். இந்நூல் பன்னிரெண்டாம் திருமுறையாகப் போற்றப்படுகிறது. இதில் இரண்டு காண்டங்கள், 13 சருக்கங்கள், 4286 விருதப்பாக்கள் காணப்படுகின்றன.

பூசலார் நாயனார் புராணம்

     தொண்டை நாட்டில் திருநின்றவூரில் மறையவர் குலத்தில் தோன்றியவர் பூசலார். இவர் சிவனடியாராகிய அன்பர்களுக்கு ஏற்றபணி செய்தலே பிறவிப்பயன் என்றெண்ணி, பொருள்தேடி அடியவர்களுக்கு அளித்து  வந்தார். சிவபெருமானுக்குக் கோயில் அமைக்க எண்ணி, பொருளுதவி கிடைக்கப் பெறாமையால் மனதிலே கோயில் எழுப்பிய பூசலாரின் பக்திச் சிறப்பினைப் பூசலார் நாயனார் புராணம் எடுத்துரைக்கின்றது.

பூசலார்

 திருநின்றவூரில் வைதீக மரபினில் அவதரித்தவர் பூசலார். உடலாலும் உணர்வாலும் சிவபெருமானை முப்பொழுதும் நினைக்கின்ற அறநெறியாளராகத் திகழ்ந்தவர். உண்மைப் பொருளைப் பெறுதற்கு ஏதுவாகிய வேத நீதிக் கலைகள் அனைத்தையும் தெளிவு பெற்று உணர்ந்தவராகப் பூசலார் விளங்கினார்.

கோயில் கட்ட நினைத்தல்

  சிவபெருமானுக்கும், சிவனடியார்களுக்கும் தொண்டு செய்வதே தம் பணியாக பூசலார் கருதினார், சிவபெருமானுக்குக் கோயில் கட்டுவதற்குப் பெருஞ்செல்வம் தம்மிடம் இல்லாமையைக் கண்டு மனம் வருந்தினார். சிவபெருமானுக்கு ஒரு கோயிலைக் கட்ட மனதில் எண்ணினார். கோயில் கட்டுவதற்குப் பொருள் எவ்வகையிலும் கிட்டாமையால், மனதில் கோவில் கட்ட எண்ணி,

"நினைப்பினால் எடுக்க நேர்ந்து நிகழ்வுறு நிதியமெல்லாம்
தினைத்துணை முதலாத் தேடிச் சிந்தையால் திரட்டிக் கொண்டு"
கோவில் காட்டும் பணியை மேற்கொண்டார்.

கோயில் கட்டி முடித்தல்

    கோயில் கட்டுவதற்குரிய சாதனங்களோடு தச்சர்களையும் மனதினால் தேடிக் கொண்டு, கோயில் கட்டுவதற்கு நல்ல நாளும், வேளையும், பார்த்து ஆகம விதிப்படி அடிநிலை (அஸ்திவாரம்) அமைக்கக் கருதினார். இரவு முழுவதும் உறங்காமல் கோயில் எடுக்கலானார். அடிநிலை வரி முதலாக வரும் அடுக்குகள் அனைத்தையும் முடித்து, சித்திர வேலைப்பாடுகள் மனதிலே அமைத்து சுண்ணச்சாந்து பூசி, மேல் சிற்ப அலங்கார வகைகளையும் செய்தார். தீர்த்தக் கிணறு அமைத்து, கோயிலைச் சுற்றிலும் மதிற் சுவர் எழுப்பினார். தடாகம் அகழ்ந்ததோடு, கோயிலுக்கு வேண்டிய அனைத்தையும் வகைபட செய்து, சிவபெருமானுக்குரிய நன்னாளில் தாபரம் (பிரதிட்டை ) செய்ய பூசலார் விரும்பினார்.

பல்லவ அரசன் கனவில் இறைவன்

    காடவர் பெருமானாகிய இராசசிங்கன் என்னும் பல்லவ அரசன் கச்சியம் (காஞ்சி) பதியில் சிவபெருமானுக்குத் திருக்கோவில் அமைத்து, வேண்டிய பணிகளை விரைந்து மேற்கொண்டு வந்தான். பெரும் பொருட் செலவில் கட்டப்பட்ட இவ்வாலயத்திற்குக் குடமுழுக்குச் செய்தும் பிரதிட்டை செய்தும், சிவபெருமானை எழுந்தருளச் செய்ய பூசலார் குறித்த அந்நன்நாளைக் குறித்தான். அன்நாளுக்கு முந்தைய நாள் கொன்றைமலர்ச் சூடிய சிவபெருமான் அரசனின் கனவில் தோன்றினார்.

"பல்லவ மன்னனே!

"நின்ற ஊர்ப் பூசல் அன்பன் நெடிதுநாள் நினைந்து செய்த
'நன்றுநீ பால யத்து நாளை நாம் புகுவோம்”

என தொண்டராகிய பூசலாரை உலகறியச் செய்யவேண்டும் என்னும் நோக்கில் சிவபெருமான், பல்லவ மன்னனின் கனவில் தோன்றி அக்கோயிலிலே 'நாளை நாம் புகுவோம்' என்றுரைத்து, உன் ஆலயப்பணி செய்கையை நாளைக்கழித்து வைத்துக் கொள்வாயாக!" என்று இறைவன் அருளினார். இறைவன் உரைத்த அத்தொண்டரின் திருப்பணியைக் கண்டு வணங்கிவர வேண்டும் என மன்னன் திருநின்றவூர் வந்து சேர்ந்தான்.

கோயில் எங்கே உள்ளது

    திருநின்றவூர் வந்து சேர்ந்த அரசன், 'பூசலார் என்னும் அன்பர் கட்டியக் கோயில் எப்பக்கத்தில் உள்ளது'? என்று அங்குள்ளோரிடம் வினவினான். 'பூசலார் கோயில் ஒன்றும் எழுப்பவில்லை' என்று அனைவரும் கூறவே, உண்மை நெறியினில் நிற்கும் மறையவர்கள் எல்லோரும் வருக என்று ஆணையிட்டான். வேதியர்கள் அனைவரும் அரசனைக் கண்டனர். மன்னன், பூசலார் யார்? என்று வினவியபோது, மறையோர்கள் எல்லோரும் அவர் குற்றமற்ற வேதியர் என்று பதிலுரைத்தனர். அரசன் பூசலாரை காண அவரது இல்லம் நோக்கி விரைந்தான். பூசலாரைக் கண்டு தொழுதான் அரசன். ‘பூசலாரே! இவ்வூரில் நீவிர் கட்டிய கோயில் எங்கே உள்ளது? சிவபெருமான் அத்திருக்கோயிலில் தாபித்தருளும் நாள் இன்றென தெரிவித்தார். ஆகையால் உங்கள் திருவடி கண்டு தொழுதற்கு வந்ததாக' அரசன் கூறினான்.

பூசலார் நிகழ்வினை விளக்குதல்

   பல்லவ அரசன் கூறியதைக் கேட்ட பூசலார் மருட்சியடைந்து,  எம்பெருமான் தன்னையும் ஒரு பொருளாகக் கொண்டு அருளினமையைக் கண்டு வியப்படைந்தார். கோயில் அமைக்க வேண்டிய பொருள் கிடைக்காமையால் மனத்தினாலே முயன்று நினைத்து, நினைத்து செய்த கோயில் இதுவாகும் என்று சிந்தனையினால் செய்தக் கோயிலை பூசலார் அரசனிடம் எடுத்துரைத்தார்.

நிலமிசை வீழ்ந்து வணங்குதல்

  பூசலார் உரைத்ததைக் கேட்ட அரசன் அதிசயம் அடைந்து, குற்றமற்ற சிந்தையினையுடைய அன்பரின் பெருமையைத் துதித்து, மணமிக்க மாலை கீழே படியும்படி நிலத்தில் வீழ்ந்து வணங்கினான். முரசுகள் ஒலிக்க சேனைகளுடன் மீண்டும் அரசன் தன் ஊரினையடைந்தான்.

நிறைவுரை

 அன்பராகிய பூசலாரும் தாம் மனத்தினால் அமைத்த ஆலயத்திற்கு, பல நாள் அகம் குளிர, முகம் மலர பூஜைகள் செய்து துதித்து பொன்னம்பல நாதன் ஆகிய சிவபெருமானின் இணையடி நிழலில் இளைப்பாறினார். என்று சேக்கிழார், பூசலாரின் வரலாற்றைக் கூறுகிறார்.

 ******இராஜாலி ******

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2023

மணிமேகலை - பாத்திரம் பெற்ற காதை

முன்னுரை

        ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை கி.பி இரண்டாம் நூற்றாண்டில் சீத்தலைச் சாத்தனாரால் பாடப்பட்டது. இரட்டைக் காப்பியங்களில் ஒன்றான இக்காப்பியம், கோவலன் கண்ணகிக்கு பிறந்த மணிமேகலையின் வாழ்க்கை வரலாற்றை கூறுவதாக காணப்படுகிறது. 30 காதைகளையும் 4755 பாடல்களையும் கொண்டதாக இக்காப்பியம் விளங்குகிறது. பௌத்த சமயத்தைச் சார்ந்த இக்காப்பியம், மணிமேகலைத் துறவு, புரட்சிக் காப்பியம், சீர்திருத்தக் காப்பியம், கதைக்களஞ்சியக் காப்பியம், பசிப்பிணி மருத்துவக் காப்பியம் எனவும்  அழைக்கப்படுகிறது. 

பாத்திரம் பெற்ற காதை

       மணிமேகலா தெய்வம், மணிமேகலையை மணிபல்லவ தீவில் விட்டுச் சென்ற பின்னர், அத்தீவை காவல் காக்கும் தீவத்திலகை என்னும் பெண் தெய்வம் மணிமேகலை முன் தோன்றியது. மணிமேகலை தனது முற்பிறவியினை  அறிந்ததை தெரிந்த பின்னர்,  புத்த பீடிகைக்கு முன் உள்ள கோமுகி பொய்கையில் காணப்படும் ஆபுத்திரனின் கையில் இருந்த அமுத சுரபியினை பெறுவதற்கான வழிகளை மணிமேகலையிடம் கூறியது. அதன் பின்னர் மணிமேகலை புத்த தேவனை வணங்கி அமுதசுரபியினை பெற்ற செய்தியை கூறுவதாக இக்காதை அமைந்துள்ளது.

மணிபல்லவத் தீவில் மணிமேகலை

       மணிபல்லவத் தீவிற்கு வந்த மணிமேகலை, மணிமேகலா தெய்வம் கூறியதன் படி புத்தரின் ஆலயத்தை வணங்கி தனது முற்பிறவியினை அறிந்து கொண்டாள்.

தீவத்திலகை வருதல் 

       மணிமேகலா தெய்வம் மந்திரம் சொல்லித் தந்து சென்ற பின்னர் மணிமேகலை மணிபல்லவத் தீவைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டாள். வெள்ளை மணல் குன்றுகளையும், அழகிய பூங்காக்களையும், குளிர்ச்சியான மலர்கள் பூத்திருக்கும் குளங்களையும் சுற்றிப் பார்த்துக் கொண்டே பத்து மைல் தூரம் சென்றாள். அப்போது தெய்வத் திருக்கோலத்துடன் தீவதிலகை என்பவள் எதிரே தோன்றினாள். “படகு கவிழ்ந்து தப்பி வந்தவளைப் போல இங்கு வந்துள்ள தூயவளே நீ யார்?” என்று மணிமேகலையைப் பார்த்துக் கேட்டாள்.

மணிமேலை பதில் கூறல்

          மணிமேகைலை தீவதிலகையிடம், “யார் நீ என்று என்னைக் கேட்டாய்? எந்தப் பிறப்பைப் பற்றிய கேள்வி இது? தங்கக் கொடி போன்றவளே! நான் சொல்லப் போவதைப் பொறுமையாகக் கேட்பாயாக! முற்பிறப்பில் நில உலகை ஆட்சி செய்த அரசனான இராகுலன் மனைவி நான். என் பெயர் இலக்குமி. இந்தப் பிறவியில் நாட்டியக் கலைச்செல்வி மாதவியின் மகள். என் பெயர் மணிமேகலை. மணிமேகலா தெய்வம் என்னைக் கொண்டு வந்து இங்கு சேர்த்தது. புகழ் பெற்ற இந்தப் பீடிகையால் என் பழைய பிறப்பைப் பற்றித் தெரிந்து கொண்டேன். இது நான் அடைந்த பயன். பூங்கொடியே நீ யார் என்பதைத் தெரிந்து கொள்ளலாமா?” என மணிமேலை கேட்டாள்

தீவதிலகை மறுமொழிக் கூறுதல்

       மணிமேகலை தனது முற்பிற்பினை அறிந்ததை தீவதிலகை அறிந்தாள். அவளுக்கு தன்னைப் பற்றி சில செய்திகளைக் கூறலானாள். “இந்த மணிபல்லவத் தீவின் அருகில் இரத்தினத் தீவகம் உள்ளது. அதில் உள்ள சமந்தகம் என்ற மலை உச்சியின் மேல், தன்னைச் சேர்ந்தவர்களைப் பிறவிக் கடலில் இருந்து கரை சேர்க்கும் புத்தரின் பாத பீடிகை உள்ளது. அதனை வலம் செய்து வணங்க இங்கு வந்தேன். குற்றமின்றிக் காட்சி தரும் இந்தப் பாத பீடத்தை இந்திரனின் ஆணையால் இப்பொழுது காவல் செய்து வருகிறேன். என் பெயர் தீவதிலகை” என்று கூறினாள்.

தீவதிலகை அமுதசுரபியைப் பற்றி கூறுதல் 

      அறநெறிகளின் தலைவன் புத்தபகவான். அவர் கூறிய புகழ் நிறைந்த நல்லறத்தில் தவறாக நோன்பு உடையவரே, இந்தத் திருவடித்தாமரைப் பீடிகையைப் பார்ப்பதற்கும், வணங்குவதற்கும் உரியவர் ஆவர். அவ்வாறு வணங்கிய பின்னர் அவர்கள் தம்முடைய பழம்பிறப்பை உணர்வார்கள். அத்தகைய சிறப்புக்கு உரியவர்கள் இவ்வுலகில் குறைவு. அத்தகையவரே தருமநெறிகளைக் கேட்பதற்கும் உரியர். புத்தரின் அருள் பெற்ற உயர்ந்தவளே! நான் கூறுவதைக் கேட்பாயாக!

“மிக்க புகழுடைய இந்தப் பீடிகையின் முன்பு தெரிவது கோமுகி என்ற பொய்கையாகும். நீர் நிறைந்துள்ள இந்தப் பொய்கையில் பெரிய குவளை மலர்களும் நெய்தல் மலர்களும் அழகாகப் பூத்துக் கலந்து பொலிவுடன் திகழ்கின்றன.வைகாசி மாதத்தில், விசாக நட்சத்திரத்தன்று (பௌர்ணமி நாள்) புத்தர்பிரான் தோன்றிய அந்த நாளில் ஆபுத்திரன் கையிலிருந்த அமுதசுரபி என்ற பேரும் புகழும் மிக்க பாத்திரம் வெளிப்பட்டுத் தோன்றும். அந்த நல்ல நாளான வைகாசிப் பௌர்ணமி இன்றுதான். அந்த அரிய அமுதசுரபி பாத்திரம் தோன்றும் நேரமும் இதுதான். நேரிழையே! அதோ அது உன்னிடம் வருவது போலத் தெரிகிறது.

           'ஆங்கு அதின் பெய்த ஆர் உயிர் மருந்து

           வாங்குநர் கையகம் வருத்துதல் அல்லது

           தான் தொலைவு இல்லாத் தகைமையது ஆகும்'

எனக் கூறியதோடு மேலும், இப்பாத்திரத்தின் சிறப்பினை அறவண அடிகளிடம் இப்பாத்திரத்தின் வரலாற்றைத் தெரிந்து கொள்வாய்” என்று தீவதிலகை கூறினாள்.

அமுதசுரபி கிடைத்தது

         தீவதிலகை கூறியது கேட்ட மணிமேகலை, அதனை அடைய விரும்பி அந்த புகழ் மிக்க பீடத்தை தீவதிலகையுடன் வலம் வந்து வணங்கினாள். பீடிகையின் எதிரே நின்றாள். அப்பது எல்லோரும் வணங்கத்தக்க மரபினை உடைய அமுதசுரபி பாத்திரம் அந்தப் பொய்கையில் இருந்து எழுந்து வந்து, மணிமேலை கைகளில் சென்று சேர்ந்தது. அமுத சுரபியைப் பெற்ற மணிமேகலை பெரிதும் மகிழ்ந்தாள்.

புத்த பகவானை வணங்கினாள்

      மகிழ்ந்த மணிமேகலை,“மாறனை வெற்றி கொள்ளும் வீரனே! தீய வழிகளான வாழ்வின் பகைகளை நீக்கியவனே! மற்றவர்களுக்குத் தரும வழி வாய்ப்பதற்கு முயலும் பெரியோனே! சுவர்க்க வாழ்வினை அடைய விரும்பாத பழையோனே! மக்களது எண்ணங்கள் பின்னடைய எட்டாத மேல்நிலை அடைந்து இருப்பவனே! உயிர்களுக்கு அறிவுக் கண்களை அளித்த மெய் உணர்வு உடையோனே! தீமை தரும் சொற்களைக் கேட்க மறுக்கும் காதுகளை உடையவனே! உண்மை மட்டுமே பேசும் நாவினை உடையவனே! நரகர் துன்பத்தைப் போக்க உடனே அங்கு சென்றவனே! உனது மலர்ப் பாதங்களை வணங்குவேன் அல்லாமல் வாழ்த்துவது என் நாவில் அடங்காத செயலாகும்” என்று கூறி புத்த பகவானைப் போற்றி வணங்கினாள் மணிமேகலை.

பசிப் பிணி மருத்துவம் 

      புத்த பகவானை மணிமேகலை வணங்கிப் போற்றியதைக் கண்ட தீவதிலகையும் போதிமரத்தின் அடியில் அமைந்துள்ள தேவனின் திருவடிகளை வணங்கினாள். பின் மணிமேகலையைப் பார்த்து,

            'குடிப்பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும்

            பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்

            நாண்அணி களையும் மாண்எழில் சிதைக்கும்

           பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்

           பசிப்பிணி என்னும் பாவி அது'

எனப் பசியின் கொடுமைகளை எடுத்துக் கூறி, 'இப்படியான பசி என்ற நோயினை நீக்க வேண்டும். அது ஒரு பாவி. அதனை விரட்டி அடிக்க வேண்டும். அப்படி நீக்கியவர்களின் புகழை அளவிட முடியாது'  எனக் கூறினாள். 

நாய்யை தின்ற விசுவாமித்திரன் 

           தீவத் திலகை மேலும் மணிமேகலையை பார்த்து,"முன்பு ஒரு நாள், புல்லும் மரங்களும் வெம்மையாலே கருகிப் புகைந்து பொங்கின. அனல் கொதித்தது. பசியினாலே உயிரினங்கள் அழியுமாறு மழை வளம் குன்றிப் போனது. அரச பதவியை விட்டு மறைகளை ஓதி துறவு மேற்கொண்ட அந்தண விசுவாமித்திர முனிவன், பசியால் எல்லா இடங்களும் சுற்றித் திரிந்தான். கொடிதான இந்தப் பசியைப் போக்க ஏதும் கிடைக்காமல் நாயின் சதையைத் தின்றான் என்றால் பசியின் கொடுமையை என்னவென்று சொல்வது? தின்பதற்கு முன் தேவபலி செய்ததாலே இந்திரன் தோன்றி மழைவளம் பெருகச் செய்தான். விளை பொருள்கள் மலிந்தன. மண் உயிர்களும் பெருகின. எனவே,கைம்மாறு செய்யும் தகுதி உள்ளவர்களுக்கு ஒரு பொருளைக் கொடுப்பவர், அறத்தை விலைக்கு விற்பவர்கள் ஆவர்.

           'மண் திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்

           உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே'

எனவே நீயும் அறநெறி வாழ்க்கையை மேற்கொண்டு, பசிப்பிணியைப் போக்கி மண்ணுயிர் வாழ வழி செய்வாயாக " என அறிவுரைகளைக் கூறினாள்.

மணிமேகலை மறுமொழிக் கூறுதல் 

     இதைக் கேட்ட மணிமேகலை,“முன்பிறப்பிலே என் கணவனான இராகுலன் திட்டிவிடம் என்ற பாம்பு தீண்ட உயிர் விட்டான். அப்போது நானும் அவனோடு சேர்ந்து தீக்குளிக்க உடல் வெந்தது. உணர்வுகள் நீங்கினேன். அப்போது வெயில் மிகுந்த உச்சிவேளையில் வந்து தோன்றிய சாது சக்கரமுனிவனுக்கு முன்னர் உணவு தந்ததுபோல கனவு மயக்கம் அடைந்தேன். என் உயிரும் பிரிந்தது. அந்தக் கனவின் காட்சியே நினைவின் பயனாய் ஆருயிர்களைக் காக்கும் மருந்தாக அமுதசுரபி எனக்குக் கிடைத்தது. மேலும், பெற்ற குழந்தையைப் பார்த்ததும் தாயின் மார்பகம் பால் சுரப்பது போல, பசியால் வாடுபவரை கண்டதும் இப்ப பாத்திரம் உணவை சுரந்தளிக்கும். அதனைக் கொண்டு பசித்தவர் பிணி களைவேன்" எனக் கூறினாள்.

வானத்தில் பறந்தாள்

         அதன் பின்னர் மணிமேகலை தீவத்திலகையின் கால்களில் விழுந்து வணங்கி, அமுத சுரபியைக் கையில் ஏந்தியவளாக புத்த பீடிகையை வலம் வந்து வணங்கி, மணிமேகலா தெய்வம் சொல்லித்தந்த மந்திரத்தைக் கூறி வானத்தில் பறந்து தனக்காக காத்திருக்கும் மாதவியின் முன்வந்து இறங்கினாள்.

பழைய பிறப்பைக் கூறினாள்

     மணிமேகலையைக் கண்டதும், மாதவி சுதமதி ஆகியோர் கவலை நீங்கினர். மணிமேகலை, அவர்களிடம் அரிய செய்தியைக் கூறினாள். “இரவிவன்மனின் பெருமை மிக்க புதல்வியே! குதிரைப் படைகளை உடைய துச்சயன் மனைவியே! அமுதபதியின் வயிற்றில் பிறந்து அப்போது எனக்குத் தமக்கையராக இருந்த தாரையும் வீரையும் ஆகிய நீங்கள் இப்பிறப்பில் எனக்குத் தாயார்களாக ஆனீர்கள்! உமது திருவடிகளை வணங்குகிறேன்” என்று கூறிய மணிமேலை, மாதவி சுதமதி இருவரையும் வணங்கினாள்.

       பின்னர், 'அமுதசுரபியின் தன்மையினை அறவண அடிகளிடம் கேட்டு தெரிந்து கொள்வோம்' என இருவரையும் அழைத்துக் கொண்டு அறவண அடிகளை காண்பதற்காக மணிமேகலைச் சென்றாள்.

முடிவுரை

        இவ்வாறு பாத்திரம் பெற்ற காதையில் மணிமேகலை அமுத சுரபியை மணிபல்லவத் தீவில் இருந்து பெற்று வந்த செய்தியை சீத்தலைச் சாத்தனார் கூறியுள்ளார்.

************ இராஜாலி ********



வியாழன், 10 ஆகஸ்ட், 2023

கம்பராமாயணம் - குகப் படலம்

 அறிமுகம்

           இராமபிரானின் வரலாற்றைக்கூறும் நூல் இராமாயணம் எனப்பட்டது. வால்மீகி முனிவர் வடமொழியில் எழுதிய இராம காதையைத் தழுவி, கம்பர் இதனைத் தமிழில் இயற்றினார். கம்பர் இயற்றிய இராமாயணம் கம்ப இராமாயணம் எனப்பட்டது. கம்பர் தாம் இயற்றிய நூலுக்கு 'இராமாவதாரம்' எனப் பெயரிட்டார். கம்பராமாயணத்தில் ஆறு காண்டங்கள் உள்ளன. அயோத்தியா காண்டம் இரண்டாம் காண்டமாகும். இவற்றில் பதின்மூன்று படலங்கள் உள்ளன. குகப்படலம் ஏழாம் படலமாகும். இப்படலத்தினைக் 'கங்கைப்படலம்' எனவும் கூறுவர். வனம் புகுந்த இராமன், குகனோடு தோழமை கொண்ட செய்தியை உணர்த்தும் பகுதியாதலின் குகப்படலம் எனப் பெயர் பெற்றது.

குகன் இராமனைக் காண வருதல்

     அலைகளையுடைய கங்கைக்கரையின் பக்கத்திலுள்ள சிருங்கி என்னும் நகரில் வாழும் வேடுவக் குலத் தலைவன் குகன். இவன் முனிவர் தவச்சாலையில் தங்கியிருந்த  வள்ளல் இராமனைக் காணத் 'தேனும் மீனும்' கொண்டு சென்றான். நெஞ்சமதில் இராமனின் மீது அளப்பரிய அன்பினைக் கொண்டு, இன்றே நின்பணி செய்திட வந்துள்ளதாக குகன் தெரிவித்தான்.

          இளையவனாகிய இலக்குவன் அவனை நெருங்கி யார் நீ? என வினவியபோது, குகன் அன்போடு வணங்கி,

"தேவா! நின்கழல் சேவிக்க வந்தனன்

நாவாய் வேட்டுவன் நாய்அடி யேன்

என "தேவா, கங்கையாற்றில் நாவாய்களை இயக்குகின்றவனும் நாயினும் அடியவனாகிய வேட்டுவன் நான், தங்களின் திருவடிகளை வணங்க வந்துள்ளேன்” என்று கூறினான்.

இராமன் குகனைப் பாராட்டுதல்

       இலக்குவன், இராமனைத் தொழுது, "வெற்றிப் பொருந்திய தலைவனே! தூய உள்ளம் உடையவன், தாயினும் சிறந்த அன்பினன், கங்கையாற்றில் செல்லும் நாவாய்களுக்குத் தலைவன், குகன் என்னும் பெயரினன், தன் உறவினருடன் தங்களைக் காண வந்துள்ளான்") என இலக்குவன் இராமனிடம் கூறினான். இராமன் குகனை, 'அழைத்து வருக' என்று இலக்குவனிடம் மொழிந்ததும், குகன் விரைந்து வந்து இராமனைத் தன் கண்களால் கண்டுகளித்தான். இருள் போன்ற நீண்ட முடியை உடைய தலை, மண்ணில் படியக் கீழே விழுந்து வணங்கினான். பின் எழுந்து வாயைக் கையால் பொத்தி உடலை வளைத்து அடக்கமாக நின்றான்.

        உள்ளத்து அன்பு முதிர்வினால் எழுந்த பரிவின் காரணமாகக் குகன் கொண்டு வந்த இப்பொருள்களை (தேன், 'மீன்) அடைத்தற்கரியன என்றும் அமுதத்தை விடச் சிறந்தன என்று இராமன் கூறினான். இவை எத்தகையனவாய் இருப்பினும் அன்பு கலந்ததெனில் தூய்மையானவையே இப்பொருட்கள் நாங்கள் விரும்பி உண்டதற்குச் சமம் என்று கூறினான்.

குகனின் வேண்டுகோளும், உணர்வு நிலையும்

      ஆண் சிங்கத்திற்கு நிகரான இராமன் குகனிடம், "நாங்கள் இத்தவச் சாலையில் தங்கியிருந்து அலைவீசும் கங்கையாற்றைக் கடந்து செல்ல எண்ணியுள்ளோம். ஆதலால் உன் நகர் சென்று மகிழ்வுடன் இனிமையாகத் தங்கியிருந்து நாளை விடியலில் நாவாயோடு (மரக்கலங்கள்) வருவாயாக" என்றுரைத்தான்.

       கருமுகில் வண்ணனாகிய இராமன் கூறியதைக் கேட்ட குகன், "இவ்வுலகு அனைத்திற்கும் செல்வம் போன்றவனே! தங்களை இத்தவக் கோலத்தில் பார்த்த என்னிரு கண்களை எடுக்க முடியாத நிலையில் உள்ளேன். இம்மனத் துயரோடு என்னிருப்பிடம் செல்லத் துணியேன், ஐயனே! தங்களுக்கு வேண்டிய தொண்டு செய்வேன்” என்றான்.

        இராமன் இன்று எம்மோடு தங்குக எனக் குகனிடம் கூறியதும், திருவடிகளை வணங்கினான். கடலையொத்த துடிப்பறையோடு கூடிய தனது சேனைப்படைகளை அழைத்து இராமன் தங்கியுள்ள தவச்சாலைக்கு விலங்குகளால் ஏதேனும் 'துன்பம் நேரிடாதவாறு பாதுகாப்பு வழங்கிடுமாறு கட்டளையிட்டான். இடியோடு கூடிய மழை மேகம்போல உரத்த சத்தமிட்டு இராமன், சீதை, இலக்குவன் மூவரையும் காவல் செய்து நின்றான். அரச குமாரனாகிய இராமன் தரையில் உறங்கும் காட்சியைக்கண்டு மலையிலிருந்து விழும் அருவிபோல கண்ணீர் சொரிந்து நின்றான்.

நாவாய் கொண்டு வருக

   வைகறை காலத்தில் செய்ய வேண்டிய கடமைகள் யாவற்றையும் விரும்பிச் செய்து, அச்சம் தரும் வில்லை ஏந்திய இராமன் அன்புள்ளம் கொண்ட குகனைப் பார்த்து, ஐயனே! இவ்விடத்திலிருந்து செல்வத்திற்குரிய தரம்வாய்ந்த மரக்கலங்களை (நாவாய்) விரைவாகக் கொண்டு வருவாயாக என்று கட்டளையிட்டான்.

குகனின் வேண்டுதல்

          "மாலையை அணிந்தவனே! எம் மக்கள் வஞ்சகம் அறியாது இக்காட்டில் வசித்து வருகின்றனர். எவ்வித குறைவுமின்றி, பகைவரை அழிக்கும் ஆற்றல் மிகுந்துள்ள நாங்கள் முறைப்படி உனக்குச் செய்ய வேண்டிய தொண்டுகளைத் தொண்டர்களாக இருந்து முறைப்படி செய்வோம். எங்களை உம்முடைய முறையான உறவினர்கள் எனக்கருதி எங்களுடைய இவ்வூரிலே நீண்டகாலம் இனிமையாக இருப்பாயாக!" என்று குகன் இராமனிடம் வேண்டினான்.

         தேவர்கள் தூய்மையானது எனக்கருதும் தேனும், திணையும் இங்கு கிடைப்பதோடு, உண்ணுதற்குரிய புலால் (ஊன்) இங்குண்டு. எங்களுடைய உயிர் உங்களுக்குத் தொண்டு செய்யவே உள்ளன. சீதா தேவியோடு விளையாடிப் பொழுதுபோக்க காடும், நீரிலே முழுகி விளையாட கங்கையாறும் இருக்கின்றன. நான் உடன் உள்ளவரையும் நீ எம்மிடத்தில் இனிதிருப்பாயாக” என இராமனிடம் குகன் வேண்டினான்.

   "நூலாடைகள் போல உள்ள மென்மையான தோல்கள், சுவையுடைய இனிமையான பல பொருள்கள், தூங்குவதற்குக் கயிற்றால் பிணித்த தொட்டிற் கட்டில் போல பரண்கள், தங்குவதற்குக் குடில்கள் மட்டுமல்லாது, விரைந்து சென்று எதையும் கொண்டுவந்து தரவல்ல எனது கால்கள், தடுப்பாரை அழிக்கவல்ல, வில்லை ஏந்திய கைகள் எம்மிடம் உள்ளன. ஆகாயத்தின் மேலே உள்ள பொருளாக இருந்தாலும் அதனையும் விரைந்து கொண்டு வருவோம்" என்றும் குகன் வேண்டினான்.

    "தேவர்களை விட வலிமை படைத்த வில்லேந்திய ஐந்து இலட்சம் வீரர்கள் நான் இட்ட கட்டளையை நிறைவேற்ற காத்துக் கொண்டிருக்கின்றனர். இராமபிரானே! நீ எம் குடிசையிடத்து ஒருநாள் தங்குவாயானால் இதனைக்காட்டிலும் மேலானதொரு வாழ்க்கை இல்லை" என்று குகன் இறுதியாக வேண்டினான்.

மீண்டும் வரும்போது வருகிறேன்

   குகனின், வேண்டுதலைக் கேட்ட இராமன், கருணை மிகுந்தவனாய், வெளிப்படையாக புன்முறுவல் செய்து,

"புண்ணிய நதியாடிப் புனிதரை வழிபாடுற்று

எண்ணிய சிலநாளில் குறுகுதும் இனிதென்றான்"

குகனே! நாங்கள் புண்ணிய நதிகளில் நீராடி, அங்குள்ள முனிவர்களை வழிபாடு செய்துவிட்டு, வனவாசத்துக்குக் குறித்த சில நாள்களில், உன்னிடத்துக்கு இனிமையாக வந்து சேர்வோம்” என்று கூறினான்.

      இராமனின் மனக்குறிப்பை அறிந்த குகன் மிக விரைவாகச் சென்றான். பெரியதோர் படகினைக் கொண்டு வந்தான். தாமரை மலர் போன்ற கண்களை உடைய இராமன் அந்தணர்களிடம் விடைபெற்று, பிறைநிலவு போன்ற நெற்றியை உடைய சீதையுடனும் தம்பி இலக்குவனுடனும் படகில் இனிதாக ஏறினான்.

நிறைவுரை

      விரைந்து படகினைச் செலுத்துமாறு குகனுக்கு இராமன் கட்டளையிட்டான். உயிரின் ஏவலுக்கு மெய் செயல்படுவதுபோலக் குகனும் படகினை விரைவாகச் செலுத்தினான். மடங்கி வீழும் அலைகளை உடைய கங்கையாற்றில் இளம் அன்னம் விரைந்து செல்வதினைப் போன்று படகு சென்றது. அவர்களின் பிரிவால் அனலில் பட்ட மெழுகைப்போல துன்பமுற்று அந்தணர்கள் மனமுருகி நின்றனர்.

********* இராஜாலி **********

யுனிக்கோட் - பயன்பாடு

அறிமுகம்    ஆங்கில மொழியைத் தவிர பிறமொழிகளிலும் பலரும் பல்வேறு குறியேற்றங்களையும் எழுத்துருக்களையும் பயன்படுத்தி வந்தனர். இந்த முறையில் ஒரே ...