முன்னுரை
தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க இலக்கியங்களுக்குப் பின்னர் இடம்பெறுவது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களாகும். இவற்றை சங்கமருவிய கால இலக்கியங்கள் எனவும் வழங்குவர். கி.பி 470 இல் வச்சிர நந்தி என்னும் சமண முனிவர் 'திராவிட சங்கம்' என்ற ஒன்றை நிறுவினார். இச்சங்கத்து நூற்களே பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அவ்விலக்கியங்கள் எவை என்பதை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
கணக்கு என்பது நூலைக் குறிக்கும் சொல்லாகும். அடிவரையறையை கருதி மேற்கணக்கு எனவும் கீழ்க்கணக்கு எனவும் வகைப்படுத்தினர். மேற்கணக்கு என்பது சங்க இலக்கியங்களையும், கீழ்க்கணக்கு என்பது சங்கம் மருவிய காலத்து இலக்கியங்களையும் குறிப்பதாகும்.
சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் 18.அவை பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகிறது. அவ்விலக்கியங்கள் எவை என்பதை,
"நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப்
பால்கடுகம் கோவை பழமொழி - மாமூலம்
இன்னிலைசொல் காஞ்சியோடு ஏலாதி என்பவே
கைநிலைய வாம்கீழ்க் கணக்கு"
என பழைய வெண்பா கூறுகின்றது. குறிப்பாக, திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி, ஆசாரக்கோவை, முதுமொழிக்காஞ்சி, பழமொழி, கார் நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, தினை மாலை நூற்றைம்பது, திணைமொழி ஐம்பது, கைநிலை, களவழி நாற்பது ஆகிய 18 நூல்களும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களாகும்.
இவற்றில் அறம் சார்ந்த நூல்கள் பதினொன்றும், அகம் சார்ந்த நூல்கள் ஆறும், புறம் சார்ந்த நூல் ஒன்றும் காணப்படுகின்றது.
அறம் சார்ந்த நூல்கள் - அற இலக்கியங்கள்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அறக்கருத்துகளை கூறும் நூல்களாக பதினோரு நூல்கள் காணப்படுகின்றன. அவை,
1. திருக்குறள், 2. நாலடியார், 3. நான்மணிக்கடிகை
4. இன்னா நாற்பது, 5. இனியவை நாற்பது, 6. திரிகடுகம்
7. சிறுபஞ்சமூலம், 8. ஏலாதி, 9. ஆசாரக்கோவை,
10. முதுமொழிக்காஞ்சி, 11. பழமொழி
என்பனவாகும்.
1. திருக்குறள்
முப்பால், உத்தர வேதம், தெய்வ நூல், பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ்மறை, பொதுமறை என்றெல்லாம் சான்றோர்களால் புகழப்படும் திருக்குறள், தெய்வப்புலவர் திருவள்ளுவரால் இயற்றப்பட்டதாகும்.
அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று பால்களும்,133 அதிகாரங்களும், அதிகாரங்களுக்கு பத்து பாடல்கள் வீதம் 1330 குறட்பாக்களைக் கொண்டது. அறத்துப்பாலில் 38 அதிகாரங்களும், பொருட்பாலில் 70 அதிகாரங்களும், இன்பத்துப்பாலில் 25 அதிகாரங்களும் காணப்படுகின்றன.
திருவள்ளுவர், கி.மு முதல் நூற்றாண்டினர் எனவும், கிறிஸ்துவுக்கு முப்பது வருடங்களுக்கு முற்பட்டவர் எனவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். உலக மொழிகளில் பைபிளுக்கு அடுத்தபடியாக அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள் ஆகும். இந்நூல், எச்சமயத்தார்க்கும், எந்நாட்டவர்க்கும், எக்காலத்தவர்க்கும் பொதுவான பொது மறையாகும். அற வாழ்வியல் இன்பத்தை பொருள்படக் கூறும் இந்நூல் தமிழர்களின் அறக்கடலாக விளங்குகிறது.
திருக்குறளின் சிறப்பை எடுத்தோத "திருவள்ளுவ மாலை" எனும் தனிநூலே எழுந்தது போல் வேறு எந்த நூலுக்கும் எழுந்தது இல்லை. பத்துக்கும் மேற்பட்டோர் உரை எழுதிய சிறப்பு திருக்குறளைத் தவிர்த்து வேறு எந்த நூலுக்கும் இல்லை. திருக்குறளின் சிறப்பினை மனோன்மணியம் சுந்தரனார்,
"வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளுவாரோ மனுவாதி ஒரு குலத்துக்கு ஒரு நீதி "
எனக் கூறுவதில் இருந்து திருக்குறள் சமுதாய நலனில் அக்கறை கொண்ட தமிழ்மறை என வரையறுத்துக் கூறலாம்.
2. நாலடியார்
திருக்குறளைப் போன்றே நாலடியாரும் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பகுப்புகளைக் கொண்டது. 400 பாடல்கள் கொண்ட இந்நூல் 'நாலடி நானூறு' எனவும் வழங்கப்படுகிறது. நானூறு சமண முனிவர்கள் பாடிய பாடலின் தொகுப்பாக இந்நூல் காணப்படுகிறது. இந்நூலைத் தொகுத்தவர் பதுமனார் என்னும் சமணத் துறவி ஆவார். இது கி. பி எட்டாம் நூற்றாண்டு இலக்கியம் என அறிஞர்கள் கருதுகின்றார்கள்.
'வேளாண் வேதம்' எனச் சான்றோர்களால் அழைக்கப்படும் இந்நூலில் பெருமையை உணர்ந்து ஜி. யு. போப் அவர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். 'நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி' எனத் திருக்குறளோடு இணைத்துக் கூறுவதன் மூலம் திருக்குறளுக்கு இணையான சிறப்புக் கொண்டதாக நாலடியார் விளங்குகிறது என்பதனை அறியலாம்.
3. நான்மணிக் கடிகை
நான்மணிக்கடிகையை இயற்றியவர் விளம்பி நாகனார் ஆவார். 101 வெண்பாக்களைக் கொண்ட இந்நூல், ஒவ்வொரு பாடலிலும் மணி போன்ற நான்கு நீதி கருத்துக்கள் காணப்படுவதால் இப்பெயர் பெற்றது.
4. இன்னா நாற்பது
இவ்வுலகில் துன்பம் தருவன இவை இவை என ஒவ்வொரு பாடலுக்கும் நான்கு இன்னாதவைகளை கூறுவதாக 40 பாடல்களைக் கொண்டது இன்னா நாற்பதாகும். இதனை இயற்றியவர் கபிலர் ஆவார்.
5. இனியவை நாற்பது
பூதஞ்சேந்தனார் என்பவரால் பாடப்பட்ட இந்நூலில் 41 பாடல்கள் காணப்படுகின்றன. இவ்வுலகில் இன்பம் தருவன எவை என்பதை பற்றி எடுத்துக் கூறியுள்ளார்.
6. திரிகடுகம்
சுக்கு,மிளகு,திப்பிலி என்னும் மூன்று மருந்துகளால் ஆனது திரிகடுகம் எனப்படும். அதுபோல் ஒவ்வொரு பாடலிலும் மூன்று உறுதிப் பொருட்களைக் கொண்டுள்ளதால் இந்நூல் திரிகடுகம் என அழைக்கப்படுகிறது.101 பாடல்களைக் கொண்ட இன்நூலை நல்லாதனார் பாடியுள்ளார்.
7. சிறுபஞ்சமூலம்
கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறு மல்லி, பெருமல்லி, நெருஞ்சில் ஆகிய ஐந்து வேர்கள் சிறுபஞ்சமூலம் எனப்படும். இது நோய்க்கு மருந்தாவது போல மனிதர்களின் அக நோயினைப் போக்கும் ஐந்து ஐந்து கருத்துகளைக் கூறுவதாக ஒவ்வொரு பாடலும் காணப்படுவதால் சிறுபஞ்சமூலம் எனப்பட்டது. இதன் ஆசிரியர் காரியாசான் என்பவர் ஆவார். இதில் 102 பாடல்கள் காணப்படுகின்றன.
8. ஏலாதி
கணிமேதாவியார் என்பவரால் எழுதப்பட்ட ஏலாதி 80 பாடல்களைக் கொண்டதாகும். ஏலம், இலவங்கப்பட்டை, சிறு நாவற்பூ, மிளகு, சுக்கு, திப்பிலி ஆகிய ஆறும் கலந்த மருந்து ஏலாதி எனப்படும். இது நோய்க்கு மருந்தாவது போல மனிதர்களின் அக நோயினைப் போக்கும் ஆறு ஆறு கருத்துகளைக் கூறுவதாக ஒவ்வொரு பாடலும் காணப்படுவதால் இது ஏலாதி எனப்பட்டது.
9. ஆசாரக்கோவை
ஆசாரம் என்றால் நல்ல முறையில் நடத்தல் என்று பொருள். உள்ளும் புறமும் தூய்மையுடமையே ஆசாரமாகும். அவ்வகை ஆசாரத்தைப் பற்றி கூறுவது ஆசாரக்கோவை ஆகும்.100 பாடல்களைக் கொண்ட இந்நூலை பெருவாயின் முள்ளியார் பாடியுள்ளார்.
10. முதுமொழிக்காஞ்சி
முதுமொழிக்காஞ்சியின் ஆசிரியர் மதுரைக் கூடலூர்கிழார் ஆவார். இந்நூல், பத்துப்பாக்களால் ஆகிய 10 அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரமும் 'ஆர்கலியுலகத்து' எனத் தொடங்கும். நீதி நூல்களில் இஃதொன்றே சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் தன்மை கொண்டதாக காணப்படுகிறது.
11. பழமொழி
தொல்காப்பியர் கூறும் 'முதுசொல்' என்பது பழமொழியைக் குறிக்கும். 400 பாடல்களைக் கொண்ட பழமொழி நானூறு எனவும் கூறுவர். முன்றுரை அரையனாரால் பாடப்பட்ட ஒவ்வொரு பாடலிலும் ஒரு பழமொழி பயின்று வருகிறது. இந்நூல், திருக்குறள் நாலடியார் போன்று அறம் கூறும் நூலாக விளங்குகிறது.
மேற்கண்ட பதினோரு நூல்களும் அறக்கருத்துக்களைக் கூறும் நூல்களாக பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் காணப்படுகின்றது.
அகம் சார்ந்த நூல்கள் - அக நூல்கள்
பதினெண் கீழ்க்கணக்கு நூற்களில் அகக் கருத்துக்களைக் கூறும் நூல்களாக ஆறு நூல்கள் காணப்படுகின்றன. அவை,
1. கார் நாற்பது, 2. ஐந்திணை ஐம்பது, 3. ஐந்திணை எழுபது,
4.திணைமாலை 150, 5. திணைமொழி ஐம்பது, 6. கைந்நிலை
என்பனவாகும்.
12. கார் நாற்பது
மதுரை கண்ணன் கூத்தனார் என்பவரால் பாடப்பட்ட, கார் நாற்பது என்னும் இந்நூல், முல்லைத் திணையின் பெரும்பொழுதான கார்காலத்தில், முல்லை நிலத் தலைவியின் ஒழுக்கத்தினை கூறுவதாக அமைந்துள்ளது. இதில் அகக்கருத்துக்களைக் கூறும் 40 பாடல்கள் காணப்படுகின்றன.
13. ஐந்திணை ஐம்பது
மாறன் பொறையனார் என்பவரால் பாடப்பட்ட ஐந்திணை ஐம்பது, ஐந்து திணைகளுக்கும் திணைகளுக்கு பத்து பாடல்கள் வீதம் 50 பாடல்களைக் கொண்டதாகும்.
14. ஐந்திணை எழுபது
மூவாதியார் என்னும் புலவரால் பாடப்பட்ட ஐந்திணை எழுபது, ஐந்து திணைகளுக்கும் திணைகளுக்கு 14 பாடல்கள் வீதம் 70 பாடல்களைக் கொண்டதாகும்.
15. திணை மாலை 150
திணை மாலை நூற்றிறைம்பதை பாடியவர் கணிமேதாவியா ராவார். ஐந்து திணைகளுக்கும் உரிய 153 பாடல்கள் இதில் காணப்படுகின்றன.
16. திணைமொழி ஐம்பது
கண்ணன் சேந்தனார் என்பவரால் பாடப்பட்ட திணைமொழி ஐம்பதில் 50 அகப்பொருள் பாடல்கள் காணப்படுகின்றன.
17. கைந்நிலை
புல்லங்காடனார் என்பவரால் பாடப்பட்டது கைந்நிலையாகும். இதில் ஐந்து திணைகளுக்கும் பாடல்கள் காணப்படுகின்றன. திணைக்கு 12 பாடல்கள் வீதம் 60 பாடல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
மேற்கண்ட ஆறு நூல்களும் அகத்திணை சார்ந்த நூல்களாக பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் இடம்பெற்றுள்ளது.
புறம் சார்ந்த நூல்
பதினெண்கீழ்க்கணக்கு நூற்களில் புறப்பொருளைக் கூறும் புறம் சார்ந்த நூலாக களவழி நாற்பது என்ற நூல் மட்டும் காணப்படுகின்றது.
18. களவழி நாற்பது
களவழி நாற்பதில் புறக்கருத்துகளை கூறும் 40 பாடல்கள் காணப்படுகின்றன. இதன் ஆசிரியர் பொய்கையார் ஆவார். இந்நூல் சோழன் செங்கணான் என்னும் மன்னன், கழுமலம் என்னும் இடத்தில் சேரமான் கணைக்கால் இரும்பொறை என்னும் மன்னனை போரிட்டு வென்ற செய்தியைக் கூறுவதாக அமைந்துள்ளது.
முடிவுரை
சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் 11 அற நூல்களும், 6 அகநூல்களும், ஒரு புறநூலும் காணப்படுகின்றது. இவை அனைத்தும் அக்கால மக்களின் வாழ்வியல் அற அக ஒழுக்கங்களை எடுத்துக் கூறுவனவாக விளங்குகின்றன.
!!!! இராஜாலி!!!!