எனது வலைப்பதிவு பட்டியல்

வெள்ளி, 20 அக்டோபர், 2023

இராவண காவியம் - தாய்மொழிப் படலம்

நூல் குறிப்பு


   புலவர் குழந்தை அவர்களால் எழுதப்பட்ட இராவண காவியம் திராவிட இயக்கத்தின் பகுத்தறிவு சிந்தனைகளை மக்களிடம் பரப்பும் நோக்கத்தில் படைக்கப்பட்டதாகும். இதில் 5 காண்டங்களும், 57 படலங்களும், 3100 பாடல்களும் காணப்படுகின்றன. இக்காப்பியம் இராமாயண காவியத்திற்கு எதிர்மறையான சிந்தனை கொண்டதாகும்.

தாய்மொழிப் படலம்

   இராவண காவியத்தில் முதல் காண்டமான தமிழ்க் காண்டத்தில் இடம்பெற்றுள்ளது தாய்மொழிப் படலம் ஆகும். இதில் தமிழ் மொழியின் சிறப்புகளும், தமிழ் மொழி வளர்ச்சியின் அவசியங்களும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

நாடெல்லாம் புலவர் கூட்டம் நகரம் எல்லாம் பள்ளி ஈட்டம்

  புலவர் குழந்தை அவர்கள் இராவண காவியத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சியையும் தமிழ் பற்றாளர்களின் சீரிய முயற்சியின் காரணமாக தமிழ் மொழி வளர்ச்சி அடைந்துள்ள நிலையினை பற்றி கூறும்போது,  "நற்றமிழாகிய தமிழ் மொழி வளர்ச்சி அடைந்துள்ளதால், இங்குள்ள மக்களின் கைகளில் ஏடுகள் ஆகிய புத்தகங்கள் இல்லாமல் இல்லை. இங்கு இயல் இசை கல்லாதவர்கள் இல்லை. பாடும் புலமைப் பெறாதவர்கள் இல்லை. பள்ளிக்குச் சென்று நல்லறிவு பெறாதவர்கள் இல்லை" எனக் கூறுகிறார்.

  மேலும் தமிழ் மொழியை வளர்த்த சான்றோர்கள், தமிழ் மொழியைத் தங்கள் இருவிழிகளாகப் போற்றினர். அவர்கள் பார்வைக்குத் தெரிந்தது அனைத்தும் தமிழ் உருவங்களாக விளங்கின. அவர்களுக்கு தமிழ் மொழியே காப்பாக அமைந்தது. அவர்கள் தமிழ் மொழியை தனது உரிமையாக கருதி வாழ்ந்தார்கள். அதன் காரணமாக,

நாடெல்லாம் புலவர் கூட்டம்
நகரெல்லாம் பள்ளி ஈட்டம்
வீடெல்லாம் தமிழ்த்தாய்க் கோட்டம்
விழாவெல்லாம் தமிழ் கொண்டாட்டம்

என்ற நிலையில் தமிழ் மக்களின் வாழ்வோடு தமிழ் மொழி இணைந்து சிறப்படைந்தது.

தமிழ் மொழி பயிலாக்காலே

  தமிழகத்தில் வாழ்ந்த மக்கள் தமிழ் மொழி மீது மிகுந்த பற்று கொண்டவர்கள். அவர்களுக்கு தமிழ் மொழியை கற்கும் நிலை கிடைக்கவில்லை என்றால் அவர்கள் " உணவினைப் பெரிதாக எண்ண மாட்டார்கள். பொன்னாளாகிய பட்டாடைகளை விரும்ப மாட்டார்கள். பொன் நகைகளை விரும்பி அணிய மாட்டார்கள். மலர் மாலைகளைச் சூட மாட்டார்கள். இனிமையான இசையினை கொடுக்கும் யாழை மீட்ட மாட்டார்கள். " என புலவர் குழந்தை கூறுகிறார்.

  மேலும், தமிழறிந்த சான்றோர்கள் பலர், பாடல்கள் ஏற்றியும் சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் உரைகளை எழுதியும் தமிழ் மொழியினை வளர்த்தார்கள். அவ்வாறு வளர்க்கப்பட்ட செந்தமிழே நம் தாய்மொழி. எனப் புலவர் குழந்தை அவர்கள் தாய்மொழிப் படலத்தில் தமிழ் மொழியின் சிறப்புகளைக் கூறியுள்ளார்.

****இராnஜாலி ****

வெள்ளி, 13 அக்டோபர், 2023

எட்டுத்தொகை நூல்கள்

முன்னுரை

 தமிழ் இலக்கியங்களில் பழமை வாய்ந்தது, சங்க இலக்கியங்கள் ஆகும். ஏறத்தாழ கி.மு 200 முதல் கி.பி 200 வரையில் வாழ்ந்த சங்கப் புலவர்களால் ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடப்பட்டன. அப்பாடல்கள் முழுவதும் கிடைக்கவில்லை. பல பாடல்கள் அழிந்துபோயின, நல்லறிஞரகள் எஞ்சியிருந்த பாடல்களைத் திரட்டி, சிறந்த பாடல்களை மட்டும் பொருள் அடிப்படையிலும், செய்யுள் அடிப்படையிலும், அடி வரை அடிப்படையிலும், வகுத்து அவற்றை எட்டுத்தொகை நூல்களாக தொகுத்தனர். இத்தொகுப்பை பழைய உரையாசிரியர்கள் 'தொகை' என்றும், 'எண் பெரும் தொகை' என்றும் குறிப்பிடுகின்றனர். இத்தகைய பழமை வாய்ந்த எட்டுத்தொகை நூல்களைப் பற்றி, இக்கட்டுரையில் காணலாம்.

எட்டுத்தொகை நூல்கள்

  நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு, என்ற எட்டு நூல்களும் எட்டுத்தொகை நூல்கள் ஆகும். இதனை,

            நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
            ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
            கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
            இத்திறத்த எட்டுத்தொகை

எனப் பழைய வெண்பா குறிப்பிடுகிறது.இவ்வெட்டு நூல்களுள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு, ஆகிய ஐந்து நூல்களும் அகப்பொருள் பற்றியன. பதிற்றுப்பத்தும், புறநானூறும் புறப்பொருள் பற்றியன. பரிபாடல் என்பது அகப்பொருள் புறப்பொருள் இரண்டும் கலந்து வரும் நூலாகும். எட்டுத்தொகை நூல்களில் காணப்படும் பாடல்கள், 400க்கும் மேற்பட்ட புலவர்கள் பாடியுள்ளனர். பெண்பாற் புலவர்களும், அரச குடும்பத்தவரும் பல பாடல்களை இயற்றியுள்ளனர்.

எட்டுத்தொகையில் அகநூல்கள்

  எட்டுத்தொகை நூல்களுள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு, ஆகிய ஐந்து நூல்களும் அகப்பொருள் பற்றியன.

நற்றிணை

     இந்நூலில் 9 முதல் 12 அடி வரையில் உள்ள 400 பாடல்களின் தொகுப்பு ஆகும். நற்றிணை என்பது நல்ல திணை எனப் பொருள்படும். இந்நூல் ஐந்து திணைகளுக்கும் உரிய நானூறு பாடல்களைக் கொண்டமையால் இதனை, நற்றிணை நானூறு எனவும் வழங்குவர். இந்நூல் 193 புலவர்களால் பாடப்பெற்ற, இந்நூல் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி என்பவரால் தொகுப்பிக்கப்பட்டது. இந்நூலை, தொகுத்தவர் யார் என தெரியவில்லை. 
     தமிழ் மக்களின் அகவாழ்வு, அறவாழ்வு, மன்னர்களின் ஆட்சிச் சிறப்பு, ஒருமைப்பாட்டு நற்றிணையில், சங்கத் தமிழ் மக்களின் உணர்வு,பழந்தமிழ் மக்களின் பழக்க வழக்கங்கள் போன்றவை சிறப்பித்து கூறப்பட்டுள்ளன. திருக்குறளின் கருத்துக்கள் பல இந்நூலில் ஆங்காங்கே எடுத்தாளப்பட்டுள்ளது.

குறுந்தொகை

     நல்ல குறுந்தொகை என்ற அடைமொழியோடு அழைக்கப்படும் அதன் மூலம் இந்நூலின் சிறப்பை உணரலாம். இந்நூல் 4 முதல் 8 அடி வரையில் உள்ள ஐந்து திணைகளுக்கும் உரிய 400 பாடல்களின் தொகுப்பு ஆகும். 206  புலவர்களால் பாடப்பட்ட இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ என்பவராவார். இந்நூலைத்  தொகுப்பித்தவர் யார் என தெரியாது.

   முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூல் குறுந்தொகை. உரையாசிரியர்களும், ஆய்வாளர்களும் இந்நூலை மிகுதியாக மேற்கோள் காட்டியுள்ளது மூலம் இந்நூலின் சிறப்பை உணர முடிகிறது. குறுந்தொகையில் பரணர் பாடிய பாடல்கள் பல வரலாற்றுக் குறிப்புகளை தெரிவிக்கின்றன. சங்கத் தமிழ் மக்களின் அகவாழ்வு, அறவாழ்வு, மன்னர்களின் ஆட்சிச் சிறப்பு, ஒருமைப்பாட்டு உணர்வு, பழந்தமிழ் மக்களின் பழக்க வழக்கங்கள் போன்றவை சிறப்பித்து கூறப்பட்டுள்ளன.  

ஐங்குறுநூறு

    ஐந்து திணைகளுக்கும், திணைக்கு 100 பாடல்கள் வீதம் 500 பாடல்கள் கொண்டது ஐங்குறுநூறாகும். இந்நூலில் 3 அடி முதல் 5 அடிவரையுள்ள பாடல்கள் காணப்படுகின்றன. இந்நூலைத் தொகுத்தவர் கூடலூர்கிழார்.  தொகுப்பித்தவர் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்னும் மன்னர். இந்நூலில் காணப்படும் குறிஞ்சித்திணை பாடல்களைப் பாடியவர் கபிலர். முல்லைத் திணைப் பாடல்களைப் பாடியவர் பேயனார். மருதத்திணைப் பாடல்களைப் பாடியவர் ஓரம்போகியார். நெய்தல் திணைப் பாடல்களைப் பாடியவர் அம்மூவனார். பாலைத் திணைப் பாடல்களைப் பாடியவர் ஓதலாந்தையார் ஆவார்.

கலித்தொகை

எட்டுத்தொகை நூல்களில் கலிவெண்பாவால் பாடப்பட்ட நூல் கலித்தொகை ஆகும் 'கற்றறிந்தார் ஏத்தும் கலி' என சிறப்பித்துக் கூறுவதன் மூலம் கலித்தொகையின் சிறப்பினை உணரலாம். 150 பாடல்களைக் கொண்ட இந்நூல், 11 அடி முதல் 80 அடி வரையிலான பாடல்களைக் கொண்டது. இதனை தொகுத்தவர் நல்லந்துவனார். Jjதொகுப்பித்தவர் யார் என தெரியாது. கலித்தொகையில் 29 பாடல்களை கொண்ட குறிஞ்சித் திணைப் பாடல்களை கபிலரும், 17 பாடல்களைக் கொண்ட முல்லைத் திணைப் பாடல்களை சோழன் நல்லுருத்திரனரும், 35 பாடல்களைக் கொண்ட மருதத்திணைப் பாடல்களை மருதனிளநாகனாரும், 33 பாடல்களைக் கொண்ட நெய்தல் திணைப் பாடல்களை நல்லந்துவனாரும், 36 பாடல்களை கொண்ட பாலைத்திணை பாடல்களை பாலை பாடிய பெருங்கடுங்கோவும் பாடியுள்ளார்கள்.

   கலித்தொகை பாடல்கள் பெரும்பாலும் நாடகப் பாங்கினை கொண்டதாக காணப்படுகின்றன. மேலும், சங்கத் தமிழர்களின் வாழ்க்கை முறையினையும், பழக்கவழக்கங்களையும் இந்நூல் விரிவாக எடுத்துக் கூறுவதாக காணப்படுகிறது

அகநானூறு

    அகநானூறு, இது ஓர் அகத்திணை சார்ந்த நூல். இதனை, 'நெடுந்தொகை' என்றும் கூறுவர். இந்நூலில் அடங்கியுள்ள பாடல்கள் மிகக் குறைந்த அளவாகப் 13 அடிகளையும், கூடிய அளவு 31 அடிகளையும் கொண்டு அமைந்துள்ளன. கடவுள் வாழ்த்துச் செய்யுளைத் தவிர்த்து இந்நூலில் 400 பாடல்கள் உள்ளன. இவை களிற்றியானை நிரை(1-120), மணி மிடை பவளம் (121-300), நித்திலக் கோவை (301-400) என மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

1,3.5,7,9,11 ஒற்றைப்பட எண்ணாலான பாடல்கள் 200-ம் பாலைத் திணையைச் சேர்ந்தவை.

2,8,12,18..என்ற எண்ணாலான பாடல்கள் 80-ம் குறிஞ்சித் திணையைச் சேர்ந்தவை.

4,14,24.. என்ற எனப்படுபவை 40-ம் முல்லைத் திணையைச் சேர்ந்தவை. 

6,16.26.. என்ற எனப்படுபவை 40-ம் மருதத் திணையைச் சேர்ந்தவை.

10,20,30.. என்ற எனப்படுபவை 40-ம் நெய்தல் திணையைச் சேர்ந்தவை.

 இந்நூலைத்  தொகையைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடி கிழார் மகனார் உருத்திரசன்மர். இதனைத் தொகுப்பித்த மன்னன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியார். அகநானூற்றுப் புலவர்கள் 146 பேர். மூன்று பாடல்களின் (114, 117, 165) ஆசிரியர் பெயர் காணப் பெறவில்லை.

● களிற்றியானைநிரை

1 முதல் 120 வரையில் உள்ள 120 பாடல்கள் இத் தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் யானைக்களிறு யானைக்களிறு போல் பெருமித நடை கொண்டவை. யானைகளின் அணிவகுப்பைப் போன்று ஓரினப் பாடல்களின் அணிவகுப்பாக அவை அமைந்துள்ளன.

● மணிமிடை பவளம் 

121 முதல் 300 வரை உள்ள 180 பாடல்கள் இத் தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் நீலநிற மணிகள் போலவும், செந்நிறப் பவளம் போலவும் பெருமதிப்பு உடையனவாகஅமைந்து ஈரினப் பாடல்களின் தொகுப்பாக அமைந்துள்ளன. மணியும் பவளமும் கோத்த ஆரம் போன்று இத்தொகுப்பு அமைந்துள்ளது.
  • நித்திலக் கோவை
301 முதல் 400 வரை உள்ள 100 பாடல்கள் இத் தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் நித்தில முத்துக்கள் போலப் பெருமதிப்பு கொண்டவையாக அமைந்து ஒரினக் கோவை போல அமைந்துள்ளன. இத்தொகுப்பு முத்தாரம் போல் அமைந்துள்ளது.

எட்டுத்தொகை நூல்களில் நற்றினை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு ஆகிய ஐந்து நூல்களில் அகம் சார்ந்த நூல்கள் ஆகும். இவை, பண்டையகால மக்களின் அகம் கருத்துக்களையும், வாழ்வியல் சார்ந்த ஒழுக்கங்களையும் எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது.

எட்டுத்தொகை நூல்களில் புறம் சார்ந்த நூல்கள்

  எட்டுத்தொகையில் புறக்கருத்துக்களை கூறும் நூல்களாக பதிற்றுப்பத்தும், புறநானூறும் காணப்படுகின்றது. 

பதிற்றுப்பத்து

     (பத்து + பத்து = பதிற்றுப்பத்து) இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். சேர மன்னர்களைப் பற்றி பத்துப் புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பே பதிற்றுப்பத்தாகும். இந்த நூலில் முதற் பத்தும், இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை. ஏனைய எட்டுப் பத்துகளே கிடைத்துள்ளன. கிடைத்துள்ள 80 பாடல்கள் எட்டுச் சேர மன்னர்களின் வரலாற்றை எடுத்துரைக்கின்றன.  இது சேரமன்னர்களின் மனத் திண்மை, புகழ் நோக்கு, ஈகைத் திறம் ஆகிய பண்புகளையும் படை வன்மை,போர்த்திறம், குடியோம்பல் முறை ஆகிய ஆட்சித் திறன்களையும் எடுத்துக்கூறுவதாகக் காணப்படுகின்றது. இந்நூலின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு எனக் கருதப்படுகின்றது.

பாடல் தொகுதிகளின் பட்டியல்
  • முதல் பத்து - கிடைக்கவில்லை.
  • இரண்டாம் பத்து - பாடியவர் குமட்டூர் கண்ணனார், பாடப்பெற்ற மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஆவார்.
  • மூன்றாம் பத்து - பாடியவர் பாலைக் கௌதமனார், பாடப்பெற்ற மன்னன் பல்யானைச் செல்கெழு குட்டுவன்  ஆவார்.
  • நான்காம் பத்து - பாடியவர் காப்பியாற்றுக் காப்பியனார், பாடப்பெற்ற மன்னன் களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் ஆவார்.
  • ஐந்தாம் பத்து - பாடியவர்  பரணர், பாடப்பெற்ற மன்னன் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் ஆவார்.
  • ஆறாம் பத்து  - பாடியவர் காக்கைபாடினியார் (நச்செள்ளையார்), பாடப்பெற்ற மன்னன் ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் ஆவார்.
  • ஏழாம் பத்து  - பாடியவர்  கபிலர், பாடப்பெற்ற மன்னன் செல்வக் கடுங்கோ வாழியாதன் ஆவார்.
  • எட்டாம் பத்து  - பாடியவர்  அரிசில் கிழார், பாடப்பெற்ற மன்னன் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை ஆவார்.
  • ஒன்பதாம் பத்து - பாடியவர்  பெருங்குன்றூர் கிழார், பாடப்பெற்ற மன்னன் இளஞ் சேரல் இரும்பொறை ஆவார்.
  • பத்தாம் பத்து - கிடைக்கவில்லை.
 பதிற்றுப்பத்தை தொகுத்தவர் தொகுப்பித்தவர் யார் எனத் தெரியவில்லை.

புறநானூறு

   புறத்திணை பற்றிப் பேசும் 400 பாடல்களின் தொகுப்பே புறநானூறு ஆகும். பண்டைய தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்கள், சிற்றரசர்கள், கடையெழு வள்ளல்கள், புலவர்கள், மற்றும் பண்டைய தமிழர்களின்  வாழ்க்கை முறை, பழக்கவழக்கப் பண்பாடுகள் போன்றவற்றை எடுத்துக் கூறும் நூலாக  புறநானூறு காணப்படுகிறது.
      165 புலவர்களால் பாடப்பட்டதாகும். புறநானூறில் 4 அடி முதல் 40 அடி வரையிலான பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இந்நூலை தொகுத்தவர் தொகுப்பித்தவர் யார் என தெரியவில்லை. ஜி.யு. போப் அவர்கள் இந்நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
போன்ற உயர்ந்த கருத்துக்களை கூறுவதாக இந்நூல் காணப்படுகிறது.

எட்டுத்தொகையில் அகம் புறம் சார்ந்த நூல்

 எட்டுத்தொகை நூற்களில் அகக்கருத்துக்களையும் புற கருத்துக்களையும் ஒருங்கே கூறும் நூலாக பரிபாடல் காணப்படுகிறது.

பரிபாடல்

     பா வகையால் பெயர் பெற்ற பரிபாடலில் 25 அடி முதல் 400 இடம் பெற்றுள்ளது.  22 பாடல்கள் மட்டுமே இந்நூலில்  இருந்து கிடைத்துள்ளது. அவற்றில் குறிப்பாக, திருமாலை பற்றி ஆறு பாடல்களும், வைகை ஆற்றைப் பற்றி எட்டுப் பாடல்களும், செவ்வேள் எனப்படும் முருகனைப் பற்றி எட்டுப் பாடல்களும் இடம்பெற்றுள்ளது. இந்நூலைத் தொகுத்தவர், தொகுப்பித்தவர் யார் எனத் தெரியவில்லை. வைகை ஆற்றின் வளம், மதுரை நகரின் சிறப்பு போன்றவை இந்நூலில் இடம்பெற்றுள்ளது.

முடிவுரை

     சங்க இலக்கியப் பிரிவுகளில் ஒன்றான எட்டுத் தொகையில், 8 தொகுக்கப்பட்ட நூல்கள் காணப்படுகின்றன. அவற்றில் 5 நூல்கள் அகம் சார்ந்தவையாகவும், இரண்டு நூல்கள் புறம் சார்ந்தவையாகவும், ஒரு நூல் அகம் புறம் சார்ந்த நூலாகவும் காணப்படுகின்றது. இவை எட்டும் பண்பட்ட பண்டையத் தமிழர்களின் வாழ்வியலை எடுத்துக்காட்டும் களஞ்சியங்களாக விளங்குகின்றது.

††††இராஜாலி††††

சனி, 7 அக்டோபர், 2023

கடுவெளிச் சித்தரின் - ஆனந்தக் களிப்பு

முன்னுரை

தமிழகத்தில் சித்தர்கள் பலர் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வாழ்ந்திருந்தாலும், கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமூலரே தமிழ் சித்தர் பரம்பரையின் முன்னவராக விளங்குகிறார். தமிழ் மரபில் பதினெண் சித்தர்கள் காணப்படுகின்றார்கள். அவர்களில் ஒருவர் கடுவெளிச் சித்தர் ஆவார். 'கடுவெளி என்பது வாக்கும் மனமும் கடந்த நிலையில் உள்ள பரவெளி'- இதனைப் பற்றி அதிகமாக இவர் பாடியுள்ளதால் கடுவெளிச் சித்தர் என அழைக்கப்பட்டார். இவர் பாடிய ஆனந்தக் களிப்பு 34 கண்ணிகளைக் கொண்டதாகும். இதில் மனிதர்கள் செய்யக்கூடாதவை எவை என்றும், செய்யக்கூடியவை எவை என்றும் விளக்கமாகக் கூறியுள்ளார்.

மனிதர்கள் செய்யக்கூடாதவை எவை?

கடுவெளிச் சித்தர் மனிதர்கள்  செய்யக்கூடாதவை எவை எனப் பின் வருவனவற்றைக் கூறுகின்றார். 

கோபத்தைக் கட்டுப்படுத்து!

பாபம் செய்யாதே! மனிதனே உன்னுடைய வாழ்வில் யாருக்கும் சாபம் கொடுத்துவிடாதே; நடக்கும் ஒவ்வொரு செயலும் விதிப்படிதான் நடக்கும். விதியை நம்மால் எந்த வகையிலும் தடுத்து நிறுத்திவிட முடியுமா?. எமன் வந்து நம்மை எந்த நேரத்தில் கொண்டு செல்வான் என்று தெரியாது. எனவே கோபப்பட்டு பிறருக்கு சாபம் கொடுத்து பாவத்திற்கு மேல் பாவம் செய்யக்கூடாது எனக் கூறுகிறார்.

சூதுசெய்யாதே!

சூது என்பது தன்னையும் அழித்துப் பிறரையும் அழிப்பதாகும். எனவே சூது என்ற வஞ்சகச் செயலை நீ செய்யாதே! அப்படி நீ சூது செய்தால் அது உன்னை மட்டுமல்ல உன்னைச் சுற்றியுள்ள சுற்றத்தாரையும் முழுமையாக நாசப்படுத்திவிடும். இதனை,

"சொல்லருஞ் சூதுபொய் மோசம் - செய்தால்
சுற்றத்தை முற்றாய்த் துடைத்திடும் நாசம்

என்று பாடியுள்ளார்.

நல்லவர்களைத் தள்ளாதே!

உன்னோடு கூடவே இருக்கும் நல்லவர்களையெல்லாம் உன்னைவிட்டு ஒதுக்கித் தள்ளாதே! பொல்லாங்கு ஒன்றும் கொள்ளாதே. கெட்ட நடத்தையாகிய தீமையைத் தரக்கூடிய பொய்மை மொழி பேசி கோள்கள் பொருந்துமாறு நீ நடந்து கொள்ளாதே என்றும் கடுவெளிச்சித்தர் அறிவுரை கூறுகிறார்.

பெண்ணாசை கொள்ளாதே!

நீ பிறரிடத்தில் எதையும் யாசித்துப் பெற வேண்டும் என்று நினைக்காதே! மிகவும் அழகாக பெண்கள் இருக்கின்றார்கள் என்று பெண்கள்மீது ஆசைகொண்டு  மகிழ்ந்து திரியாதே! இத்தகைய சிற்றின்பங்கள் உன்னை வாழ வைக்காது! என்பதை, 

பிச்சை யென்றொன்றும் கேளாதே - எழில்
பெண்ணாசை கொண்டு பெருக்க மாளாதே!

 என அறிவுறுத்துகிறார்.

திட்டியவரைக்கூடத் திருப்பித் திட்டாதே!

உன்னைத் தவறாக பேசிய வரை கூட, நீ தவறாகப் பேசாதே! உலகத்தில் உள்ள அனைவரும் பொய் பேசி திரிந்தாலும் நீ பொய் பேசாதே! கொடிய பாவ வினைகளைச் செய்யாதே! பறவைகள் மீது கல்லெறியாதே! என்பதை,

வைதோரைக் கூட வையாதே! - இந்த
வையம் முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே!

எனக் கூறுகிறார்.

கஞ்சாப் புகை பிடியாதே!

உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் கஞ்சாப் புகையிலையினைப் பிடிக்காதே! வெறியூட்டும் மனிதனை மயக்கும் கள்ளையும் குடிக்காதே! யாருக்கும் கிடைக்காத பெரும் பேறாகக் கிடைத்துள்ள இந்த உயிரை வீணாக மாய்த்துக் கொள்ளாதே! பக்தியில்லாத அஞ்ஞானத்தையுடைய நூல்களைப் படிக்காதே! என அறிவுறுத்துகிறார்.

கள்ளவேடம் புனையாதே!

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் கள்ளவேடம் புனைந்து திரியாதே! வெளியே பல தவறுகளைச் செய்துவிட்டு வெளிவேசத்தால் போல் நடிக்காதே! நீ செய்த பாவத்தைப் போக்க  கங்கையிலே உன்னுடைய உடம்பை நனைத்துத் திரியாதே! பிறர் பொருளை அபகரிக்க நினைக்காதே! பிறரிடம் நட்பு பாராட்டி இருந்துவிட்டு அந்த நட்புக்குக் களங்கம் ஏற்படும் வகையில் பிரிந்து செல்ல எண்ணாதே எனக் கூறுகிறார். 

மேலும் செய்யக்கூடாதவை...

1. சிவமன்று வேறு வேண்டாதே!

2. யாருக்கும் தீங்கான சண்டையைச் சிறக்கத் தூண்டாதே!

3. தவநிலை விட்டுத் தாண்டாதே!

4. நல்ல சன்மார்க்க மில்லாத நூலை வேண்டாதே!

5. தேவையற்ற சடங்குமுறைகளைச் செய்யாதே!

6. உன்னைப் புகழ்ந்து பலரிடம் கூற வேண்டும் என்று எண்ணாதே!

7. பிறர் வெறுக்கும்படியான  தாழ்ந்த நிலையை நீ உருவாக்காதே!

8. மெய்யான குருவின் சொல் தட்டாதே! 

9. நன்மை மேன்மேலும் செய்வதை நிறுத்தாதே!

10.போலியான வாழ்க்கை வாழாதே!

11. நல்ல நல்ல அறிவை பொய்யான வழியில் செலுத்தாதே!

இவ்வாறு, கடுவெளிச் சித்தர் ஒரு மனிதனுக்குத் தீங்கு தருபவை எவை எனப் பட்டியலிட்டுக் கூறியுள்ளார். அந்த வகைத் தீங்குகளினால் ஏற்படும் தீமை பற்றியும்  எச்சரித்துள்ளார்.

மனிதன் செய்யக்கூடியவை எவை? 

உலக வாழ்க்கையைப் பாடியவர் கடுவெளிச்சித்தர். அவர்தம் ஆனந்தக் களிப்புப் பகுதியில்,  மனிதன் எவையெல்லாம் செய்ய வேண்டும் என்பதை பின் வருமாறு கூறுகிறார். 

நல்லவழிதணை நாடு!

மனிதனாகப் பிறந்தவன் தனக்கென ஒரு நல்ல வழியைப் பின்பற்ற வேண்டும். அது பிறருக்குத் தீங்கு செய்வதாக இருக்கக்கூடாது.  எல்லா நாளும் பரமன் ஒருவனையே விரும்பித் தேட வேண்டும். என்பதை,

நல்ல வழிதனை நாடு - எந்த
நாளும் பரமனை நத்தியே தேடு

எனக்  கூறுகிறார். மேலும்,  வல்லவர்களாகிய நல்லவர்கள் கூட்டத்திலேயே சேர வேண்டும். தீயவர்ளோடு சேருவதை விடுக்க வேண்டும். அள்ளி அருளைத் தருகின்ற வள்ளலாகிய பரமனை மட்டுமே நெஞ்சில் நிறுத்தி வாழ்த்திக் கொண்டாட வேண்டும்" என்று கடுவெளிச் சித்தர் அறிவுறுத்துகிறார்.

வேதவிதிப்படி நில்லு!

வேதம் என்ன சொல்கின்றதோ அந்த விதிகளை நன்கு அறிந்து அவற்றையே ஏற்றுக்கொள்ள வேண்டும். நல்லவர்கள் நன்மை புரிபவர்கள் பின்பற்றுகின்ற வழியையே நீயும் வேண்டிச் சென்று பின்பற்ற வேண்டும். மனித குலத்திற்கு நன்மை செய்கின்ற சாதகமான நிலைமையை மட்டுமே நீயும் பின்பற்றி அதனையே பிறரையும் பின்பற்றும்படி சொல்லு எனக் கூறுகிறார.

மெய்ஞான  மார்க்கத்தைக் கூறு!

நீ உண்மையான தவஅறிவு என்ன என்பதைப் புரிந்து தெரிந்து கொள். அந்தத் தவத்தின் ஞான அறிவைப் பெற்று அதன் வழியிலே செல்வதற்கு முயற்சிசெய். இந்த உலகில் வேதாந்த பிரமம் என்கிற இந்தப் பிரபஞ்சத்தின் வெளியாகக் கண்டு அந்த வெட்ட வெளியைத் தேடி அறிந்துகொள். அறிவற்ற அஞ்ஞான மார்க்கத்தை நீ அறவே விரட்டி ஒழித்துவிடு. அதுவே உனக்கும் உன்னைச் சார்ந்தவர்கள் அனைவருக்கும் ஆனந்த  வழியாகும்.  அந்த மெய்ஞான மார்க்கத்தை அடையும் வழியை உன்னைச் சார்ந்தவர்களுக்கும் கூறு" எனக் கூறுகிறார்.

சாதியாவும் ஒன்றே எனப் போதி!

இவ்வுலகத்தில் சாதி என்பது கிடையாது. அனைவரும் ஒன்றே! அனைவருக்கும் சமமானதே நீதி என்று உணர்ந்து கொள்ள வேண்டும் எனக் கூறுவதோடு, நல்ல நீதிகள், நல்ல செயல்கள், நற்குணங்கள் எந்த வகை உருவில் இருந்தாலும் அவற்றை நீ நன்கு அறிந்து கற்று, அவற்றின் வழி நடந்து, பிறருக்கும் எடுத்துக் கூற வேண்டும் எனக் கூறுகிறார்.

மேலும் செய்ய வேண்டியவை  சில...

1. நல்ல புத்தி விசுவாசம் வைக்க வேண்டும்.

2.உள்ளத்தில் எழும் நான்கு வகையான பகையினை நீக்கிவிட்டால் நாட்டை ஆளலாம்.

3. ஐம்புலங்களால் வரும் கள்ளத்தனத்தை எரித்துவிட்டால் சொர்க்கம் அடையலாம்.

4. அன்பு மலர்தூவி  ஆனந்த பரம்பொருளின் திருவடிகளை வணங்கினால் உடலும் உயிரும் மகிழ்வடைய நல்ல இன்பம் கிடைக்கும்.   
5. அடியவர்களைத் துதித்தால், ஏழைகளுக்கு இறங்கினால் அருளுவான் ஈசன்.
என ஒவ்வொரு மனிதனும் செய்ய வேண்டிய நற்செயல்கள்  எவை என்பதை பற்றி கடுவெளிச் சித்தர் கூறியுள்ளார்.

முடிவுரை

மனித வாழ்க்கை நிலையற்றது. எப்போது வேண்டுமானாலும் எமன் நம்மை எடுத்துக் கொள்வான். எனவே இவ்வுலகியலின் உண்மை உணர்ந்து நல்லநெறிப்படி மனிதன் வாழ வேண்டும் என்றும் அப்படிப்பட்ட இந்த உலக வாழ்க்கையில் எவற்றையெல்லாம் மனிதன் விட்டொழிக்க வேண்டும், எவற்றையெல்லாம் மனிதன் பின்பற்ற வேண்டும் என்பதை கடுவெளிச்சித்தர் வலியுறுத்தியுள்ளார்.

**** இராஜாலி ****


திங்கள், 11 செப்டம்பர், 2023

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்

முன்னுரை

       விஷ்ணுவை (திருமால்) முழுமுதல் கடவுளாகக் கொண்ட சமய நெறி வைஷ்ணவம். இதனைத் தமிழில் வைணவம் என்பர். முழுமையாக வைஷ்ணவத்தை வளர்த்துத் தமிழையும் வளர்த்தவர்கள் பன்னிரு ஆழ்வார்களே ஆவர். இவர்கள் இயற்றிய நூல்களின் தொகுப்பு நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் ஆகும். திவ்வியப் பிரபந்தம் என்பதற்குத் தெய்வீக எழில் நிறைந்த சிற்றிலக்கியம் என்பது பொருள். திவ்வியப் பிரபந்தம் ஆழ்வார்களின் இனிய பாசுரங்களின் தொகுப்பு. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தைத் தொகுத்தவர் நாதமுனிகள் என்பவர் ஆவார். அத்தகைய நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தினை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

 நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் பாடல் வைப்பு முறை 


நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்   பாடிய ஆழ்வார்கள்

    நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தைப் பாடியவர்கள் பன்னிரு ஆழ்வார்கள் ஆவார்கள்.

முதல் ஆழ்வார்கள் 

  பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவரும் முதலாழ்வார்கள் எனப்படுகின்றனர்.

1. பொய்கையாழ்வார்

  காஞ்சிபுரத்தில், தாமரைப் பொய்கையில் தோன்றியதால் பொய்கையாழ்வார் எனும் பெயர் பெற்றார். இவரது பாடல்கள் முதல் திருவந்தாதி எனப்படுகின்றன. இதில் 100 பாடல்கள் காணப்படுகின்றன.இப்பாடல்கள் அந்தாதித் தொடையிலும் நேரிசை வெண்பா யாப்பிலும் அமைந்தவை. இவை மூன்றாவது ஆயிரத்தில் இடம்பெற்றுள்ளன. 

2. பூதத்தாழ்வார்

   மாமல்லபுரத்தில் பிறந்தவர். பூதம் என்னும் சொல்லைக் கையாண்டு கவிபாடியதால் பூதத்தாழ்வார் எனும் பெயர் பெற்றார். இவரது பாடல்கள் 2ஆம்திருவந்தாதி ஆகும். இதில் 100 பாடல்கள் காணப்படுகின்றன. இவை ஞானத்தமிழ்ப் பாடல்கள். அந்தாதித் தொடையிலும் வெண்பா யாப்பிலும் அமைந்தவை. இது மூன்றாவது ஆயிரத்தில் இடம் பெற்றுள்ளது.  

3. பேயாழ்வார்

  இவர் மயிலாப்பூரில் பிறந்தவர். இறைவன்மீது பேய் கொண்டாற் போல அன்பு பூண்டு பாடல்களைப் பாடியதால், பேயாழ்வார் என்று பெயர் பெற்றவர். இவரது பாடல்கள் மூன்றாம் திருவந்தாதி எனப்படுகின்றன. இதில் 100 பாடல்கள் காணப்படுகின்றன. இது மூன்றாவது ஆயிரத்தில் இடம் பெற்றுள்ளது. 

 இம்மூவரும் முதல் ஆழ்வார்கள் என்று வைணவ சமயத்தவர்களால் அழைக்கப்படுகின்றனர். இவர்களின் காலம் கி.பி ஆறாம் நூற்றாண்டு ஆகும்.

4. திருமழிசை ஆழ்வார்

 இவர் திருமழிசைப் பிரான். பக்திசாரர் என்றும் அழைக்கப்படுகிறார். திருமழிசையில் பிறந்தவர். திருமாலின் சுதர்சன சக்கர அம்சமாகப் பிறந்தவர் என்பர். இவர் பாடிய திருச்சந்த விருத்தம் முதல் ஆயிரத்தில் இடம் பெற்றுள்ளது. மேலும் இவர் பாடிய, திரு விருத்தம், திருவாசியகம், நான்முகன் திருவந்தாதி போன்றவை மூன்றாவது ஆயிரத்தில் இடம் பெற்றுள்ளது. சைவத்திற்குத் திருமூலர் போன்று வைணவத்திற்குத் திருமழிசையாழ்வார் திகழ்ந்தார். இவரது காலம் கி.பி. 7ஆம் நூற்றாண்டு ஆகும்.

5.பெரியாழ்வார்

 திருவில்லிபுத்தூரில் தோன்றிய அந்தண மரபினர். கருடனின்அம்சமாகப் பிறந்தவர். விஷ்ணுசித்தன் என்பது இயற்பெயர். பட்டர்பிரான் என்று வைணவர்கள் போற்றுவர். ஆண்டாளின் வளர்ப்புத் தந்தை. ஆழ்வார்களுள் பெரியவர் என்னும் கருத்தில் பெரியாழ்வார் எனப்படுகிறார். இவரது காலம் கி.பி. 9ஆம் நூற்றாண்டு ஆகும். இவர் பாடிய திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி ஆகிய இரண்டும் முதலாவது ஆயிரத்தில் இடம் பெற்றுள்ளது. பிற்காலத்திய பிள்ளைத்தமிழ் இலக்கிய வகைக்கு முன்மாதிரியாக இவருடைய பாடல்கள் அமைந்துள்ளன.

6.ஆண்டாள்

 இவரது காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு திருவில்லிபுத்தூரில் துளசிச்செடியின் அடியில் கண்டெடுக்கப்பட்டவர். பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள். நிலமகளின் அம்சம். சூடிக்கொடுத்த சுடர்க்கொடி, சூடிக்கொடுத்த நாச்சியார், ஆண்டாள் என அழைக்கப்படுகிறார். தந்தை பெரியாழ்வார் திருமாலுக்குத் தொடுத்து வைத்த மாலையைத் தம் சூடி மகிழ்ந்தவர், ஆண்டவனையே கணவனாகப் பெற்று ஆண்டாள் ஆனார் ஆண்டாளின் பாசுரங்கள் திருப்பாவை, நாச்சியார் திருமொழி எனப்படுகின்றன. இவை முதலாம் ஆயிரத்தில் இடம் பெற்றுள்ளன. திருப்பாவை 30 பாசுரங்களை உடையது.

7.திருமங்கையாழ்வார்

    இவர் சோழநாட்டுத் திருக்குறையூரில் திருமாலின் வில்லின் அம்சமாகப் பிறந்தவர். இயற்பெயர் நீலன். சோழனின் தளபதியாக. பல வெற்றி கண்டு. பரகாலன் என்னும் பட்டம் பெற்றவர். சோழன் இவரைத் 'திருமங்கை' என்னும் நாட்டுக்கு அரசனாக்கினான். அதனால் இவர் மங்கை வேந்தன் என்றும் கலியன் என்றும் அழைக்கப்படுகிறார். இவரது காலம் கி.பி. 9ஆம் நூற்றாண்டு ஆகும். இவர் 1253 பாசுரங்களைப் பாடியுள்ளார். அவை பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழு கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல் எனப்படுகின்றன. இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் இரண்டாம் ஆயிரத்தில் இடம் பெற்றுள்ளது.

8.குலசேகராழ்வார்

   இவர் சேர மன்னர். திருவஞ்சைக்களத்தில் பிறந்தவர். திருமாலின் கௌத்துவ மணியின் அம்சமாகப் போற்றப்படுகிறார். இவரது காலம் கி.பி.9-ஆம் நூற்றாண்டு. குலசேகரர் இராம பக்தியில் திளைத்தவர். குலசேகராழ்வார் தமிழிலும் வடமொழியிலும் தேர்ந்த புலமை வாய்ந்தவர். இவரது 105 தமிழ்ப் பாசுரங்களும் 'பெருமாள் திருமொழி' என்று கூறப்படுகின்றன. இது முதல் ஆயிரத்தில் இடம்பெற்றுள்ளது.

9.தொண்டரடிப்பொடியாழ்வார்

   இவர் கி.பி.9-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். திருமாலின் வனமாலை அம்சமாகத் தோன்றியவர். இவரது இயற்பெயர் விப்ரநாராயணன். தொண்டரடிப் பொடி ஆழ்வார் என்று போற்றப்படுகிறார். இவர் 55 பாசுரங்களைப் பாடியுள்ளார். அவை திருமாலை, திருப்பள்ளி எழுச்சி என்னும் இரு சிற்றிலக்கியங்களாக உள்ளன. இவை முதல் ஆயிரத்தில் இடம்பெற்றுள்ளது.

10.திருப்பாணாழ்வார்

      இவர் உறையூரில் பிறந்தவர். திருமாலின் ஸ்ரீவத்சம் என்னும் மச்சத்தின் அம்சமாகப் பிறந்தவர். தாழ்ந்த இனத்தில் பிறந்தமையால் திருவரங்கக் கோயிலுள் செல்லாது, காவிரி ஆற்றின் தென்கரையில் நின்று பெருமானைப் புகழ்ந்து பாடிவழிபட்டார். திருப்பாணாழ்வாரைத் தோளில் சுமந்து தம் சந்நிதிக்கு அழைத்து வருமாறு பணித்தார். பெருமான் மீது 'அமலாதிபிரான்' எனத் தொடங்கும் 10 பாசுரங்களைப் பாடினார். இது முதல் ஆயிரத்தில் இடம் பெற்றுள்ளது.

11.நம்மாழ்வார்

  திருவரங்கப்பெருமானால் 'நம் சடகோபன்' என்று அழைக்கப்பட்டவர்.எனவே வைணவர்கள் இவரை நம்மாழ்வார் என்று உரிமையுடன் போற்றுகின்றனர். இவர் மாறன், பராங்குசன், காரிமாறன், தமிழ்மாறன்,வகுளாபரணன் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறார். இவர் கி.பி.9ஆம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டிலுள்ள ஆழ்வார்திருநகரி என்னும் திருக்குருகூரில் பிறந்தவர். இவர் திருமாலின் அம்சமாகக் கருதப்படுகிறார். ஆழ்வார்களுள் இவரே முதன்மையானவர். நம்மாழ்வாரை 'வேதம் தமிழ் செய்த மாறன்' என்று போற்றுகின்றனர். நம்மாழ்வார் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்னும் 4 பிரபந்தங்களைப் பாடியுள்ளார். இவற்றில் 1298 பாசுரங்கள் உள்ளன. ஆழ்வார்களுள் இவரே மிகுதியான பாசுரங்களைப் பாடியுள்ளார். நான்காம் ஆயிரத்தில் இடம்பெற்றுள்ளது.

12. மதுரகவியாழ்வார்

  இவர் கி.பி.9-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். ஆழ்வார் திருநகரியை அடுத்த திருக்கோளூரில் கருடன் அம்சமாகப் பிறந்தவர். செவிக்கு இனிமையாக. மதுரமாகப் பாட வல்லவர் என்பதால் மதுரகவி ஆழ்வார் எனப்பட்டார். நம்மாழ்வாரின் மாணவர். இவர் நம்மாழ்வாரைத் தெய்வமாகக் கருதிப் போற்றியவர். அவரைப் புகழ்ந்து 14 பாசுரங்களைப் பாடினார். அவை 'கண்ணி நுண் சிறுத்தாம்பு' என்று கூறப்படுகின்றன. இது முதலாம் ஆயிரத்தில் இடம்பெற்றுள்ளது. 

முடிவுரை 

  இவ்வாறு பன்னிரு ஆழ்வார்கள் திருமால் மீது பக்தி பாசுரங்களை பாடி பரவசப்படுத்தியதோடு, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பேருதவிபுரிந்தனர். என்பதை இக்கட்டுரையின் மூலம் அறியலாம்.

***** இராஜாலி *****

செவ்வாய், 5 செப்டம்பர், 2023

திருக்குறள் - அறன் வலியுறுத்தல்

 நூல் குறிப்பு

       உலகப் பொதுமறை எனப் போற்றப்படும் திருக்குறள் முதலாம் நூற்றாண்டில் தெய்வப்புலவர் திருவள்ளுவரால் இயற்றப்பட்டதாகும். அறத்துப்பால் பொருட்பால் இன்பத்துப்பால் என்ற மூன்று பிரிவுகளைக் கொண்ட இந்நூல் 133 அதிகாரங்களையும் அதிகாரங்களுக்கு பத்து பாடல் வீதம் 1330 பாடல்களையும் கொண்டதாகும். முப்பால், உத்தர வேதம், தெய்வ நூல், பொய்யா மொழி  என பலவாறு அழைக்கப்படும் திருக்குறள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

அறன் வலியுறுத்துதல்

    அறத்துப்பாலில் நான்காவது அதிகாரமாக விளங்குவது அறன் வலியுறுத்துதல் என்னும் அதிகாரமாகும். இதில் வாழ்வியல் அறங்கள் எவை என்பதையும் அவற்றின் பயன்களையும் வள்ளுவர் வகைப்படுத்தி பின்வருமாறு  கூறியுள்ளார்.
  • அறம் என்னும் நற்பண்பு ஒருவருக்கு சிறப்பையும் கொடுக்கும். செல்வத்தையும் கொடுக்கும். அத்தகைய உயர்ந்த அறத்தை விட நன்மை தருவது இவ்வுலகத்தில் வேறு ஒன்றும் கிடையாது.
  • ஒருவருடைய வாழ்க்கைக்கு அறத்தை போன்று நன்மை விளைவிக்கும் செயல்கள் வேறு இல்லை. அத்தகைய அறத்தை போற்றி காக்காமல் மறந்து போவதை போல தீமையான செயல் வேறொன்றும் இல்லை.
  • ஒருவர் தம்மால் முடிந்தவரை இடைவிடாமல் எல்லா இடங்களிலும் அறச்செயல்களை செய்வதற்கு முற்பட வேண்டும்.
  • ஒருவர் மனதளவில் குற்றமற்றவராக இருந்தால் அதுவே அறமாகக் கருதப்படும். மற்றவை எல்லாம் வெற்று ஆரவாரமாக கொள்ளப்படும்.என்பதை,
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற. - என வள்ளுவர் கூறுகிறார்.
  • பொதுவாக, பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொற்கள் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடம் கொடுக்காமல் வாழ்வதே உயர்ந்த அறமாகக் கருதப்படும்.என்பதை,
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். 
- என அறம் என்பது எது என விவரித்துக் கூறியுள்ளார்.
  • அறச்செயல்களை செய்வதற்கு நாட்களைக் கடத்த கூடாது. முதுமையில் அறங்களை செய்யலாம் என  எண்ணாமல் இப்பொழுது அறத்தை மேற்கொள்ள வேண்டும். அதுவே முதுமையில் நமக்கு துணையாக நிற்கும்.
  • அறச்செயலை மேற்கொள்பவர்கள் பல்லாக்கின் மேலிருந்து பயணிப்பவர்கள் போன்றவர்கள். மற்றவர்கள் பல்லாக்கை தூக்கிச் செல்பவர்கள்  போன்றவர்கள். அறச்செயலை செய்பவர்கள் எப்பொழுதும் அமைதியான நிலையில் காணப்படுவார்கள். மற்றவர்கள் மன அமைதியற்ற நிலையில் இருப்பார்கள்.
  • ஒருவன் நாள் தவறாமல் நற்செயல்களைப் புரிவான் எனில் அச்செயல்கள் அவனுக்கு மறுபிறவி கொடுக்கும் பாதையை அடைக்கும் கல்லாக இருந்து மறுபிறவி இல்லாமல் காக்கும்.
  • அறத்தின் வழியில் வாழ்வதால் கிடைப்பது இன்பமாகும். மற்றவை இன்பமாகாது.என்பதை,
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல. - என உறுதியாகக் கூறுகிறார்.
  • ஒருவன் தன் வாழ்நாளில் முயற்சி செய்து செய்ய வேண்டியது அறச்செயல்களே ஆகும். விட்டுவிட வேண்டியது தீய செயல்களே.

என அறன்வலியுறுத்துதல் என்னும் அதிகாரத்தில் அறத்தின் மேன்மைகளை  திருவள்ளுவர் எடுத்துக்கூறியுள்ளார்.

**** இராஜாலி****

இயேசு காவியம் - ஊதாரி மைந்தன் கதை

 நூல் குறிப்பு

  1981.ஆம் ஆண்டு வெளிவந்த இயேசு காவியம், கவிஞர் கண்ணதாசனால் இயற்றப்பட்டதாகும். இயேசு கிறிஸ்துவின் வரலாற்றை கதை வடிவில் கூறும், இக்காவியம் கண்ணதாசனின் 'இறவாக் காவியம்' என அழைக்கப்படுகிறது. 149 தலைப்புகளில், 5 பாகங்களாக இக்காப்பியம் காணப்படுகிறது.

ஊதாரி மைந்தன் கதை

 இயேசு கிறிஸ்து பாவிகளை நேசித்து, அவர்களோடு விருந்துண்டு மகிழ்வதைக் கண்ட சீடர்கள், இயேசு நாதரிடம் அதற்கான காரணம் கேட்க, அதற்கு இயேசுநாதர் இறைவன் எனும் அன்புத் தந்தையின் இதயம் எத்தகையது என்பதை அவர்களுக்கு எடுத்துக் கூற 'ஊதாரி மைந்தன் கதையினை' பின்வருமாறு கூறுகிறார்.

தந்தைக்கு இரு மைந்தர்கள்

    ஒரு தந்தைக்கு இரண்டு மைந்தர்கள் இருந்தார்கள். அதில் மூத்தவன் தந்தை சொல் கேட்டு நடப்பவன்.  இளையவன் ஊதாரியாக திரிந்தவன். ஒருநாள், இளையவன் தந்தையிடம் வந்து 'தன்பாக சொத்துகளை பிரித்து தர வேண்டும்'  எனக் கேட்டான். வருந்திய தந்தை வேறு வழியில்லாது சரிபாதி சொத்தை பகிர்ந்து அளித்தார். தன் மகன் விருப்பப்படி வாழட்டும் என தந்தை கொடுத்ததை பார்த்து அண்ணன் வருந்தினான்.

இளைய மகன் செல்வத்தை இழத்தல்

     தனது பாகத்தைப் பெற்ற இளைய மகன், அவற்றைக் குறைந்த விலைக்கு விற்று வெளி நாட்டிற்குச் சென்று நண்பர்களோடு சேர்ந்து மதுவோடும் மாதுவோடும் இணைந்து மனம் போன போக்கில் செலவுகளை செய்து சிறிது நாளிலே செல்வத்தை இழந்து தெருவில் நின்றான்.

பன்றிகளின் உணவை உண்ணுதல்

     அப்பொழுது அந்நாட்டில் பெரும் பஞ்சம் சூழ்ந்தது. வாழ வழி தெரியாமல் இளைய மகன் அங்குமிங்கும் அலைந்தான். ஒரு செல்வந்தரின் பன்றிகளை மேய்க்கும் வேலையினைப் பார்த்தான். பன்றிக்கும் அவனுக்கும் ஒரே உணவு கொடுக்கப்பட்டது. வேறு வழி இன்றி அதனை உண்டு காலத்தைக் கழித்தான்.

இளைய மகன் சிந்தை தெளிதல்

   தந்தையை விட்டு வந்து பல துன்பங்களை அனுபவித்த இளைய மகன் சிந்தை தெளிந்தான். தன் தந்தையை நாடிச் செல்ல வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான். தன் வீட்டை நோக்கிச் சென்றான். இவனுக்காகவே காத்திருந்த தந்தையை கண்டான். அவர் காலில் விழுந்து, 

 உன் வீட்டுக் கூலிகளில் ஒருவனென ஏற்பாய் 
 உன் பிள்ளை என்று சொலத் தகுதியில்லை காப்பாய் 

 எனக் கண்ணீர் விட்டு அழுதான்.

தந்தையின் செயல்

      தந்தையும் உடனே 'அப்பா என் மகனே' என அன்போடு தழுவி வீட்டு பணியாளர்களை அழைத்து

 யாரங்கே பணியாள்வா பட்டாடை நகைகள்
 அத்தனையும் அணியுங்கள் அலங்கார வகைகள்
 பேர் சொல்லும் மகனுக்குப் பெருங்கன்றின் கறிகள்
 பிழையாமல் செய்யுங்கள் விரைவில்

 எனக் கட்டளையிட்டார்.

மூத்த மகனின் செயல்

     மாலையில் மூத்த மகன் வீட்டிற்கு வந்தான். வீட்டில் ஆடல் பாடல் கொண்டாட்டம் நிகழ்வதைக் கண்டான். வீதியில் நின்றபடியே 'என்ன சத்தம்?' எனக் கேட்டான். பணியாளர் ஒருவர்' உங்கள் தம்பி வந்துள்ளார்.' எனக் கூறவே ஆத்திரத்தில் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தான்.

   இதனைக் கண்ட தந்தை அவனை வீட்டிற்குள் அழைத்துச் செல்ல வந்தான். மூத்த மகன் ஆத்திரத்தில் தந்தையிடம்

 உங்களுடன் இருந்தவரை நானென்ன கண்டேன்
 ஒரு நாளும் எனக்கென்று விருந்து வகை உண்டா? 

என வருத்தத்தோடு கேட்டான்.

 தந்தையின் ஆறுதல் வார்த்தைகள்

    மூத்த மகனின் வருத்தமான வார்த்தைகளைக் கேட்ட தந்தை,

 என்னோடு என்றும் நீ இருப்பவனே யன்றோ!
 என் செல்வம் எந்நாளும் உன்னுடைய தன்றோ!
 உன் தம்பி இறந்தபின் உயிர்பெற்று வந்தான்!
 உண்மையிலே மறுபிறவி அதற்காகச் செய்தேன்!

எனக்கனிவுடன் கூறினார். அதனைக் கேட்டு மூத்த மகன் சமாதானமடைந்து வீட்டுக்குள் சென்றான்.

 முடிவுரை

       என்ற கதையினை இயேசு நாதர் சீடர்களுக்கு கூறி பாவிகளை நேசிக்க வேண்டும் என அறிவுரை கூறியதாக இயேசு காவியத்தில் கண்ணதாசன் கூறியுள்ளார்.

**** இராஜாலி****

ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

பத்துப்பாட்டு நூல்கள்

முன்னுரை

   சங்க இலக்கியங்களில் ஒரு பிரிவான பத்துப்பாட்டு, 10 தனி பாடல்களைக் கொண்டதாகும். பத்து புலவர்களால் பாடப்பட்ட நூல் தொகுப்பு. பண்டைய தமிழர்களின் வாழ்வியல் நெறியையும் அக, புற ஒழுக்கங்களை எடுத்துக் கூறுவதாக காணப்படுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பத்துப்பாட்டு இலக்கியங்களில்  சிறப்புகளைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பத்துப்பாட்டு நூல்கள்


      பத்துப்பாட்டு நூல்கள் எவை, என்பதைப் பற்றி பழம்பாடல் ஒன்று கூறும் போது,

        முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
        பெருகு வளமதுரைக் காஞ்சி - மருவினிய
        கோலநெடு நல் வாடை கோல் குறிஞ்சி பட்டினப்
        பாலை கடாத்தொடும் பத்து - எனக் குறிப்பிடுகிறது.

பத்துப்பாட்டில் ஆற்றுப்படை வகையை சார்ந்த இலக்கியங்கள் ஐந்து காணப்படுகின்றன. மேலும், அகம் சார்ந்த இலக்கியங்கள் மூன்றும், புறம் சார்ந்த இலக்கியம் ஒன்றும், அகப்புறம் சார்ந்த இலக்கியம்கள் ஒன்று என ஆக பத்து இலக்கியங்கள் இத்தொகுதியில் காணப்படுகின்றன.

பத்துப்பாட்டில் காணப்படும் ஆற்றுப்படை நூல்கள்.

       ஆற்றுப்படுத்துதல் என்பது 'வழிகாட்டுதல்' ஆகும். பரிசு பெற்று வரும் பாணன் அல்லது கூத்தன் தன் எதிரே வரும் இன்னொரு ஏழை பாணன் அல்லது கூத்தனை பார்த்து தனக்கு பரிசளித்த மன்னரின் சிறப்புகளை எடுத்துக் கூறி, அவரிடம் சென்று பரிசுகளை பெற்றுக் கொள்ளும் படி வழிகாட்டுவதாக அமைவது. ஆற்றுப்படை இலக்கியம் ஆகும். அவ்வகையில் பத்துப்பாட்டில்,

  • திருமுருகாற்றுப்படை,
  • பொருநராற்றுப்படை
  • சிறுபாணாற்றுப்படை
  • பெரும்பாணாற்றுப்படை
  • கூத்தராற்றுப்படை என்னும் மலைபடுகடாம்.

ஆகிய ஐந்து இலக்கியங்களும் ஆற்றுப்படை வகையை சார்ந்தவை ஆகும்.

திருமுருகாற்றுப்படை

    நக்கீரர் என்னும் புலவர் பாடியது திருமுருகாற்றுப்படை. இந்நூல், 317அடிகளைக் கொண்டது. இதனை 'முருகு' என்றும் 'புலவராற்றுப்படை' என்றும் கூறுவர். முருகப்பெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு. அவனின் அருள் பெற்ற அடியவர் ஒருவர், தன் எதிரே வரும் இன்னொரு அடியவரை பார்த்து முருகப்பெருமானின். அறுபடை வீடுகளில் சிறப்புகளையும், முருகப்பெருமானின் பெருமைகளையும், எடுத்துக் கூறி அவரிடம் ஆற்றுப்படுத்துவதாக. அமைந்தது திருமுருகாற்றுப்படை ஆகும். குறிப்பாக, திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளியுள்ள முருகனின் தோற்றப் பொலிவை சிறப்பித்து கூறுவதோடு, திருச்செந்தூரில் இருக்கும் முருகப்பெருமானின் ஆறு முகங்களையும் 12 கைகளையும் சிறப்பித்து கூறுகிறது. மேலும், திருவாவினன்குடி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்ச்சோலை போன்ற அறுபடை வீடுகளில் உள்ள முருகப்பெருமானின் சிறப்புகளை எடுத்துக் கூறுவதாக இந்நூல் காணப்படுகிறது.

பொருநராற்றுப்படை

 கரிகால் பெருவளத்தான் சிறப்புகளை, முடத்தாமக்கண்ணியார் என்னும் புலவர் பாடுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. குறிப்பாக, கரிகால் பெருவளத்தான் இடம் பரிசில் பெற்று வரும் பொருநர் ஒருவன் தன் எதிரே வரும் இன்னொரு பொருநரை, கரிகால் பெருவளத்தானிடம் ஆற்றுப்படுத்துவதாக, இந்நூல் காணப்படுகிறது. 384 அடிகளைக் கொண்ட இந்நூல், கரிகாலனின் சிறப்பை கூறுவதோடு. பொன்னி நதியின் சிறப்பையும். வெண்ணிப் பறந்தலையில் நடைபெற்ற போரையும் கூறுவதாகக் காணப்படுகிறது.

சிறுபாணாற்றுப்படை

  ஓய்மானாட்டு நல்லியக்கோடன் என்னும் மன்னனின் சிறப்புகளை. இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது, சிறுபானாற்றுப்படை ஆகும் 269 அடிகளைக் கொண்ட, ஆசிரியப்பாவால் அமைந்த இந்நூல், சிறுபாணன் ஒருவன் நல்லியக்கோடன் என்னும் மன்னனிடம் சென்று பரிசு பெற்று வரும் செய்தியையும், தன் எதிரே வரும் இன்னொரு பாணனை மன்னன் பால் ஆற்றுப் படுத்துவதாகவும் இந்நூல் காணப்படுகிறது.

பெரும்பாணாற்றுப்படை

  500 அடிகளைக் கொண்ட இந்நூல், தொண்டைமான் இளந்திரையன் என்னும் மன்னனின் சிறப்புகளை, அவரிடம் பரிசு பெற்றுத் திரும்பும் பெரும்பாணன் ஒருவன், மற்றொரு பெரும்பாணனை அம்மன்னனிடம் ஆற்றுப்படுத்துவதாக,  உருத்திரகண்ணனார் என்னும் புலவர் பாடியுள்ளார். யாழைப் பற்றிய வர்ணனை, ஐவகை நிலங்களில் வாழும் மக்களின் ஒழுக்கங்கள், தொண்டைமான் இளந்திரையனின் கொடைத்திறன், ஈகை பண்பு, வீரம் போன்றவற்றைக் கூறுவதாக இந்நூல் காணப்படுகிறது.

கூத்தராற்றுப்படை என்னும் மலைபடுகடாம்

   ஆற்றுப்படை நூல்களில் மிகப்பெரியதாக காணப்படும் இந்நூல் 583 அடிகளைக் கொண்டது. பரிசு பெற்றுத் திரும்பும் கூத்தன் ஒருவன், தன் எதிரே வரும் இன்னொரு கூத்தனை தனக்கு பரிசளித்த மன்னனிடம்  ஆற்றுப்படுத்துவதாக இந்நூல் காணப்படுகிறது. குறிப்பாக, நன்னன்சேய்நன்னன் என்னும் மன்னனிடம் பரிசுப் பெற்று திரும்பும் கூத்தன், தன் எதிர்வரும் கூத்தனிடம் மன்னனுடைய சிறப்புகளையும் அவனுடைய பண்புகளையும், வீரத்தையும் கூறுவதாக பெருங்கௌசிகனார் என்னும் புலவர்  பாடியுள்ளார். குறிப்பாக, நன்னன் நாட்டிற்குச் செல்லும் வழியில் தன்மை. நாட்டின் பெருமை மழைவளம், சோலை அழகு போன்றவையும், நவிர மலையின் சிறப்பு, சேயாறு போன்றவற்றின் வளம் ஆகியவற்றை கூறுவதாக இந்நூல் காணப்படுகிறது.

பத்துப்பாட்டில் அகம் சார்ந்த நூல்கள்

  பத்துப்பாட்டில் அகக்கருத்துக்களைக் கூறும் நூல்களாக முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை  ஆகிய மூன்று நூல்களும் காணப்படுகின்றன.

முல்லைப்பாட்டு

  பத்துப்பாட்டு நூல்களிலேயே, மிகவும் சிறிய நூலாக காணப்படுவது முல்லைப்பாட்டு ஆகும். இதில் 103 அடிகளில் காணப்படுகின்றன. ஆசிரியப்பாவால் ஆன இந்நூலைப் பாடியவர் நப்பூதனார். முல்லைத் திணைக்குரிய, உரிப்பொருளை அடிப்படையாகக் கொண்டு, பாடப்பட்டதாக்கும். போருக்குச் சென்ற தலைவன், கார் காலம் வந்த பின்பும் திரும்பாததை கண்டு வருந்திய தலைவியின் துயரத்தையும், போர்க்களத்தில் தலைவன், படைகளை ஆயத்தம் செய்த நிலையையும், பாசறையில் இருந்து சிந்தித்து நிலையையும் கூறுவதாக இந்நூல் காணப்படுகிறது.

குறிஞ்சிப்பாட்டு

  கபிலரால் பாடப்பட்ட குறிஞ்சிப்பாட்டு, 261 அடிகளைக் கொண்டது. ஆரிய மன்னன் 'பிரகதத்தன்' என்பவனுக்கு தமிழ் மொழியின் சிறப்புகளைக் கூறுவதற்காக, இந்நூல், பாடப்பட்டது. இந்நூலை, 'பெருங்குறிஞ்சி' என நச்சினார்கினியார் பாராட்டுகிறார். வரையாது வந்து ஒழுகும் தலைமகனின் வரவு ஒருநாள் தடைபட்டது. அது, தலைவிக்கு வருத்தத்தை கொடுத்தது. இது கண்ட செவிலி துன்புற்றார். இருவருக்குமிடையில் தோழி அறத்தொடு நின்றாள். தலைவி தோழிகளோடு புனலாட சென்று, பூக்களைக் கொய்து அவற்றை வைத்து விளையாடுகிறாள். குறிப்பாக 99 வகையான மலர்களை இந்நூல் சிறப்பித்துக் கூறுகிறது.

பட்டினப்பாலை

    301 அடிகளைக் கொண்ட பட்டிணப்பாலை. 'வஞ்சி நெடும்பாட்டு' எனவும் வழங்கப்படுகிறது. கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்னும் புலவர், சோழன் கரிகால் பெருவளத்தான் சிறப்புகளை பாடுவதாக இந்நூல் காணப்படுகிறது. காவிரி கடலோடு கவக்கும் காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பையும், கரிகால் பெருவளத்தான் பெருமையையும் கூறுவதோடு, காவிரிபூம்பட்டினம் கடற்கரையில் ஏற்றுமதி, இறக்குமதி ஆகும் பொருள்களைப் பற்றிய செய்தியும் இந்நூலில் விரிவாக பேசப்படுகிறது.

பத்துப்பாட்டில் புறம் சார்ந்த நூல்

 பத்துப்பாட்டில் புறம் சார்ந்த நூலாக மதுரைக்காஞ்சி விளங்குகிறது.

மதுரைக்காஞ்சி

   பத்துப்பாட்டில் மிகவும் பெரியதாக காணப்படும் மதுரைக்காஞ்சி 782 அடிகளைக் கொண்டது. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனின் சிறப்புகளையும், அவருடைய வீரத்தையும், கொடைப்பண்பையும் மாங்குடி மருதனார் என்னும் புலவர்  பாடியுள்ளார்.  இதனை 'பெருகு வளமதுரைக் காஞ்சி' என புகழ்வர். இதற்கு. 'கூடற்றமிழ்' என்ற பெயரும் உண்டு. மதுரை மாநகரத்தின் சிறப்பையும், அல்லங்காடி, நாளங்காடி என்ற வணிக ஸ்தலங்களின் பெருமையும் கூறுவதாக இந்நூல் காணப்படுகிறது. மேலும், வைகை ஆற்றில் சிறப்பு இந்நூலில் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது.

பத்துப்பாட்டில் அகம் புறம் சார்ந்த நூல்கள்

  பத்துப்பாட்டில் அகம் புறம் சார்ந்த நூலாக நெடுநல்வாடை காணப்படுகிறது.

நெடுநல்வாடை

 தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை நக்கீரர் பாடியது நெடுநல்வாடை. 188 அடிகளைக் கொண்ட இந்நூல், தலைவனைப் பிரிந்து வருந்தும் தலைவிக்கு வாடைக்காற்று துன்பத்தை கொடுத்த செய்தியையும், தலைவனாகிய பாண்டியன் நெடுஞ்செழியன் போர்க்களத்தில் மேற்கொண்ட உத்திகளைப் பற்றி  கூறுவதாக இந்நூல் காணப்படுகிறது.

முடிவுரை

 பத்துப்பாட்டு நூல்களில், பத்து தனிப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இவை சங்க கால மக்களின் வாழ்வியல் கூறுகளையும், பண்பாட்டுப் பழக்க வழக்கங்களையும்  அக்கால மன்னர்களின் ஈகை மற்றும் வீரத்தையும் கூறுவதாக காணப்படுகின்றன.

***** இராஜாலி*****

குறுந்தொகை - நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று

நூல் குறிப்பு

    'நல்ல குறுந்தொகை' என சிறப்பித்துக் கூறப்படும் குறுந்தொகை எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. இந்நூலில், ஐந்திணைகளுக்கும் உரிய 400 பாடல்கள் காணப்படுகின்றன. 4 முதல் 8 அடி வரையிலான பாடல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இந்நூலை தொகுத்தவர் பூரிக்கோ என்பவர் ஆவார். தொகுப்பித்தவர் யாரென தெரியாது. 

நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று


திணை – குறிஞ்சி

பாடியவர் – தேவகுலத்தார்

துறை - தலைமகன் சிறைப்புறமாக, அவன் வரைந்து கொள்வது வேண்டி, தோழி இயற்பழித்தவழி, தலைமகள் இயற்பட மொழிந்தது.

துறை விளக்கம் – தலைவன் தலைவி வீட்டின் அருகே வந்து நின்றான்.  தலைவியை அவன் மணந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவன் இயல்புகளை இகழ்ந்து கூறுகின்றாள் தோழி. அதைக் கேட்ட தலைவி, தலைவனின் இயல்புகளைப் புகழ்ந்து கூறுகின்றாள்.

பாடல்

         நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று;

         நீரினும் ஆர் அளவின்றே- சாரல்

         கருங் கோல் குறிஞ்சிப்பூக் கொண்டு,

         பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.

பாடல் விளக்கம்

    இயற்பழித்துக் கூறிய தோழியை பார்த்து தலைவி  “எம் தோழியே! கரிய கொம்புகளில்  பூத்துக் குலுங்குகின்ற குறிஞ்சிப் பூக்களில் உள்ள தேனை எடுத்து, மலையில் உள்ள உயர்ந்த மரங்களில் தேனடைகளைச் சேகரித்து வைக்கின்ற  மலைநாட்டில் வாழ்கின்றவன் எம் தலைவன்.  அவனோடு நான் கொண்ட நட்பு, நிலத்தை விடப் பெரியது, வானத்தை விட உயர்ந்தது. கடலைவிட ஆழமானது” என்று தோழிக்குத் தலைவி கூறுவதாக தேவ குலத்தார் பாடியுள்ளார்.

சனி, 2 செப்டம்பர், 2023

நற்றிணை - நின்ற சொல்லர்; நீடுதோன்று இனியர்

  நூல் குறிப்பு 

   எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான நற்றிணை ஐந்திணைகளுக்கும் உரிய அகக்கருத்துகளைக் கூறும் 400 பாடல்களைக் கொண்டதாகும். இந்நூலில் 9 அடி முதல் 12 அடி வரையிலான பாடல்கள் இடம்  பெற்றுள்ளன. இந்நூலை தொகுத்தவர் யார் என தெரியவில்லை. தொகுப்பித்தவர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி என்பவராவார். இந்நூலை நற்றிணை நானூறு எனவும் வழங்குவர்.

நின்ற சொல்லர்; நீடுதோன்று இனியர்


 
திணை - குறிஞ்சி
      
பாடியவர் – கபிலர்

கூற்று - பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைவி சொல்லியது.

கூற்று விளக்கம் – பொருள் ஈட்டுதற் கரணமாகத் தலைவன் தலைவியை விட்டுப் பிரிய எண்ணியதைத் தோழி அறிந்து, தலைவியிடம் கூற, தலைவி “தலைவ ன் அங்ஙனம் என்னை விட்டுப் பிரிய மாட்டார்” எனத் தலைவனைப் புகழ்ந்து கூறுகின்றார்.

பாடலின் விளக்கம்

         தலைவனின் பிரிவை உணர்த்திய தோழியை பார்த்து தலைவி,  “தோழி என் காதலர் சொன்ன சொல்லைத் தவறாமல் காப்பாற்றக் கூடிய வாய்மையுடையவர். நீண்ட காலம் பழகுவதற்கு மிக இனிமையானவர். எப்போதும் என் தோள்களைப் பிரியும் எண்ணம் இல்லாதவர். அத்தகையவருடைய நட்பு, தேனீக்கள் தாமரையின் குளிர்ந்த மகரந்தங்களை ஊதி, உயர்ந்து நிற்கும் சந்தன மரத்தின் தாதினையும் ஊதி, சந்தன மரத்தின் உச்சியில் கொண்டு சென்று சேர்த்து வைத்த தேனைப் போல உறுதியாக உயர்ந்தது. தண்ணீர் இல்லாமல் இவ்வுலகம் இயங்காதது போல, அவர் இல்லாமல் நான் வாழ மாட்டேன் என்பதை நன்கு உணர்ந்தவர். என் மீது மிகுந்த விருப்பம் கொண்டவர். என்னைப் பிரிந்து சென்றால் என் நெற்றியில் பசலை நோய் படரும் என்று அஞ்சி தடுமாற்றம் அடைந்து என்னை விட்டு நீங்கிச் செல்ல மாட்டார்” என்று தலைவி கூறுவதாக கபிலர் பாடியுள்ளார்.

**** இராஜாலி****

யுனிக்கோட் - பயன்பாடு

அறிமுகம்    ஆங்கில மொழியைத் தவிர பிறமொழிகளிலும் பலரும் பல்வேறு குறியேற்றங்களையும் எழுத்துருக்களையும் பயன்படுத்தி வந்தனர். இந்த முறையில் ஒரே ...